வியாழன், 10 டிசம்பர், 2009

ஆய்வு நோக்கில் குறுந்தொகை- பகுதி ௩, தொகுப்பும் உரைகளும்

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

தொகுப்பு வரலாறு:

"இத்தொகை முடித்தான் பூரிக்கோ. இத்தொகை பாடிய கவிகள் இருநூற்றைவர்" என்பது பழங்குறிப்பு. இந்நூலைத் தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை. 10 பாடல்களில் ஆசிரியர் பெயர் காணப்படவில்லை. (ஆசிரியர் பெயர் காணப்படாத பாடல்களின் எண்கள்: 191, 201, 256, 313, 321, 326, 375, 379, 381, 395) எஞ்சிய பாடல்களைப் பாடியவர்களின் தொகை இருநூற்றைந்து.

குறுந்தொகையும் அகநானூறும் முறையே தந்தையும் மகனாரும் தொகுத்தனராதல் வேண்டும் என்று கருதுகிறார் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை. அவர் தரும் விளக்கம் வருமாறு,

"பிரதிகளின் இறுதியில், இத்தொகை முடித்தான் பூரிக்கோ, 'இத்தொகை பாடிய கவிகள் இருநூற்றைவர், இத்தொகை நாலடிச் சிற்றெல்லையாகவும் எட்டடிப் பேரெல்லையாகவும் தொகுக்கப்பட்டது' என்று காணப்படுகிறது. அகநானூறு என்ற தொகை நூல் பிரதிகளின் இறுதியில், 'தொகுத்தான் உப்பூரிக்குடி கிழார் மகனாவான் உருத்திரசன்மன், தொகுப்பித்தான் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி' எனக் காணப்படுகின்றது. நற்றிணைப் பிரதிகளின் இறுதியில், 'இத்தொகை தொகுப்பித்தான் பன்னாடு தந்த மாறன் வழுதி' எனக் காணப்படுகின்றது. குறுந்தொகைப் பிரதியின் இறுதியிலுள்ள முடித்தான் என்பது தொகுத்தான் என்று பொருள்படும் எனக் கோடலே நேரிது. இஃது உண்மையொடு பட்டதாயின் பூரிக்கோவும், உப்பூரிகுடி கிழாரும் ஒருவரேயாதல் சாலும். ஆகவே குறுந்தொகையும் அகநானூறும் முறையே தந்தையும் மகனாரும் தொகுத்தனராதல் வேண்டும்".
(வையாபுரிப் பிள்ளை, இலக்கிய தீபம், பக். 95-96)

வையாபுரிப் பிள்ளையின் விளக்கத்தின் படி பூரிக்கோ எனவரும் கோவும், உப்பூரிகுடி கிழார் எனவரும் கிழாரும் ஒரே இனத்தைச் சார்ந்தவராய் இருத்தல் வேண்டும். ஆயின் கோவும் கிழாரும் ஒரே இனத்தைச் சுட்டுவன அல்ல என்று கூறி இக்கருத்தை மறுக்கிறார் மு.சண்முகம் பிள்ளை. (குறுந்தொகை, பதிப்பாசிரியர்- மு.சண்முகம் பிள்ளை, ப.கக)

உரையாசிரியர்களும் குறுந்தொகையும்:

தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்களின் உரைகளிலும் சிலப்பதிகாரம் முதலிய இலக்கிய நூல்களின் உரைகளிலும் இளம்பூரணர் முதலான உரையாசிரியர்கள் சங்க இலக்கியத் தொகை நூல்கள் பலவற்றிலிருந்தும் பல பாடல் அடிகளை மேற்கோளாகக் காட்டுகின்றனர். அப்படிக் காட்டும் நூல்களுள் ஏனைய தொகை நூல்களைக் காட்டிலும் குறுந்தொகையே மிகுதியாக எடுத்தாளப்படுகின்றது. இதனால் குறுந்தொகைப் பாடல்கள் இலக்கிய வரலாற்றின் எல்லாக் காலங்களிலும் எவ்வாறு கற்றவர்கள் கருத்தைக் கவர்ந்து பலராலும் பயிலப்பட்டு வந்தன என்பது தெற்றென விளங்கும்.

இக் குறுந்தொகையுள் இப்பொழுது தெரிந்தவரையில் 165 செய்யுட்களே பிறநூலுரைகளில் மேற்கோளாகக் காட்டப்பெறாதவை என்கிறார் உ.வே.சா. தம் குறுந்தொகைப் பதிப்பு முகவுரையில். இந்நூலை மேற்கோளாக எடுத்தாண்ட உரையாசிரியர்கள் பட்டியலையும் அவர் தருகின்றார்.

அவை வருமாறு,
1. அகப்பொருள் விளக்க உரையாசிரியர்
2. அடியார்க்கு நல்லார்
3. அழகிய மணவாள ஜீயர்
4. இளம்பூரணர்
5. இறையனார் அகப்பொருள் உரையாசிரியர்
6. கல்லாடர்
7. களவியல் காரிகை உரையாசிரியர்
8. காரிரத்ந கவிராயர்
9. குணசாகரர்
10. சங்கரநமச்சிவாயர்
11. சாமிநாத தேசிகர்
12. சிவஞான முனிவர்
13. சேனாவரையர்
14. சொக்கப்ப நாவலர்
15. தக்கயாகப் பரணி உரையாசிரியர்
16. தண்டியலங்கார உரையாசிரியர்
17. தமிழ்நெறி விளக்க உரையாசிரியர்
18. திருமயிலை யமகவந்தாதி உரையாசிரியர்
19. திவ்யப் பிரபந்த ஈட்டு வியாக்யானக்காரராகிய நம்பிள்ளை
20. தெய்வச்சிலையார்
21. நச்சினார்க்கினியர்
22. பரிமேலழகர்
23. புறநானூற்று உரையாசிரியர்
24. பெருந்தேவனார்
25. பேராசிரியர்
26. மயிலேறும் பெருமாள் பிள்ளை
27. மயிலைநாதர்
28. யாப்பருங்கல விருத்தி உரையாசிரியர்
29. வைத்தியநாத தேசிகர்
மேலே சுட்டப்பட்ட அத்துணை உரையாசிரியர்களும் குறுந்தொகையைத் தம் உரையில் மேற்கோளாகக் காட்டிச் சிறப்பித்துள்ளார்கள்.

தொல்காப்பியப் பொருளதிகார உரையில் இளம்பூரணர் குறுந்தொகையை 126 இடங்களில் எடுத்தாளுகின்றார். பேராசிரியர் 103 இடங்களில் குறுந்தொகைப் பாடல்களை மேற்கோள் காட்டுகின்றார். நச்சினார்க்கினியர் மிக அதிகமாக 223 இடங்களில் குறுந்தொகைக் காட்டுகளோடு தம் உரையை எழுதியுள்ளார். வேறு எந்த நூலும் இத்துணை மிகுதியாக உரையாசிரியர்களின் கருத்தை ஈர்க்கவில்லை. குறுந்தொகையின் சிறப்பிற்கு உரையாசிரியர் களின் மேற்கோளாட்சியே மிகச்சிறந்த சான்று.

குறுந்தொகைக்குப் பழைய உரை:

குறுந்தொகைக்கான பழைய உரைகள் இருபெரும் உரையாசிரியர்களால் எழுதப்பட்டன என்பதற்கான சான்றுகள் உள்ளன. ஒன்று பேராசிரியரின் உரை, மற்றொன்று நச்சினார்க்கினியர் உரை. பேராசிரியர் இருபது பாடல் தவிர்த்த பிற பாடல்களுக்கு உரை கண்டார் என்றும், அவர் விடுத்த இருபது பாடல்களுக்கு நச்சினார்க்கினியர் பின்னாளில் உரை கண்டார் என்றும் தெரிய வருகின்றது.

நல்லறி வுடைய தொல்பே ராசான்
கல்வியும் காட்சியும் காசினி அறிய
பொருள்தெரி குறுந்தொகை இருபது பாட்டிற்கு
இதுபொருள் என்றுஅவன் எழுதா தொழிய
இதுபொருள் என்றதற்கு ஏற்ப உரைத்தும்


எனவரும் நச்சினார்க்கினியரின் உரைப்பாயிரப் பகுதி முன் சொல்லப்பட்டதற்குச் சான்றாகும்.

இச்செய்தியை,
பாரத்தொல் காப்பியமும் பத்துப்பாட் டுங்கலியும்
ஆரக் குறுந்தொகையுள் ஐஞ்ஞான்கும் - சாரத்
திருத்தகு மாமுனிசெய் சிந்தா மணியும்
விருத்திநச்சி னார்க்கினிய மே


எனவரும் நச்சினார்க்கினியர் செய்த உரைகளைத் தொகுத்து வழங்கும் வெண்பாவும் தெரிவிக்கின்றது. பேராசிரியர் குறுந்தொகைக்கு உரை செய்தார் என்பதற்கு நச்சினார்கினியரின் தொல்காப்பிய உரையிலேயே அகச்சான்று உள்ளது. தொல்காப்பிய அகத்திணையியல்,

உள்ளுறை உவமம் ஏனை உவமம் எனத்
தள்ளா தாகும் திணையுணர் வகையே


என்னும் 46ஆம் நூற்பா உரையில், 'யானே ஈண்டை யேனே' (குறுந். 54) என்பதனை எடுத்துக் காட்டி, "பேராசிரியரும் இப்பாட்டில் மீனெறி தூண்டில் என்பதனை ஏனை உவமம் என்றார்" எனக் குறிப்பிட்டுள்ளார். ஆகவே குறுந்தொகைக்குப் பேராசிரியர் உரை கண்டிருந்தார் என்பது தெளிவாகும். இவ்விரண்டு உரைகளும் இன்று கிடைக்கவில்லை.

புதன், 2 டிசம்பர், 2009

ஆய்வு நோக்கில் குறுந்தொகை -பகுதி-௨ -குறுந்தொகையின் காலம்

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

குறுந்தொகையின் காலம்:

சங்கத் தொகை நூல்களில் பாடல்களில் பயின்றுவரும் சிறப்புத் தொடர்களால் பெயர் பெற்ற புலவர்கள் இருபத்தேழு பேர். இவருள் பத்தொன்பது புலவர் பெயர்களுக்குரிய சிறப்புத் தொடர்களைக் கொண்ட பாடல்கள் குறுந்தொகையுள் உள்ளன. பிற நூல்களிலும் குறுந்தொகைத் தொடரால் பெயர்பெற்ற புலவர்கள் வருகின்றனர். எனவே, புலவர்களின் பெயரிடுதலுக்குக் காரணமான பாடல்களைக் கொண்ட குறுந்தொகை ஏனைய தொகைநூல்களினும் முற்பட்டது எனக் கருத இடமுண்டு.

பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை அவர்களின் கருத்தும் இதற்கு அரணாயுள்ளது. அவர்தம் ஆய்வுரை வருமாறு,
"ஓரேருழவன், கயமனார், காக்கைப் பாடினியார் நச்சள்ளையார், தும்பிசேர் கீரனார் என்ற புலவர் பெயர்கள் குறுந்தொகையில் (131, 9, 210, 392) வந்துள்ளன. இந்நூலில் இப்புலவர்களின் பெயர்கள் காரணம் பற்றி அமைந்துள்ளன என்பது விளங்குகிறது. எனவே இந்நூலிலேயே இப்புலவர்களின் பாடல்கள் முதலில் தொகுக்கப்பட்டன என்று கொள்ளுதல் வேண்டும்". (வையாபுரிப் பிள்ளை, இலக்கிய தீபம், பக். 75-76)

மாங்குடி மருதனாரைப் புறப்பாட்டு ஒன்று ஏனைய புலவர்களுக்குத் தலைவராகக் கொண்டு போற்றுகிறது.
மாங்குடி மருதன் தலைவ னாக
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைகஎன் நிலவரை (புறம்., 72)

என்று தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் சூள் உரைக்கின்றான். இவன் தலைமைப் புலவராகக் குறிப்பிடும் மாங்குடி கிழாரின் பாடல் குறுந்தொகையுள் இடம் பெற்றிருத்தலால் இந்நூல் முதன்மை பெற்ற நூல் எனக் கருத இடமுள்ளது. சங்கப் பாடல்கள் பலவற்றின் ஆசிரியர்களாகத் திகழும் கபிலர், பரணர், ஒளவையார், நக்கீரர் முதலியோர் பாடல்கள் இக் குறுந்தொகையுள் அமைந்திருத்தலும் இந்நூலின் காலப்பழமைக்கு ஒரு சான்று எனக் கொள்ளலாம்.

குறுந்தொகையின் காலம் பற்றிய பல்வேறு ஆய்வுக் கருத்துக்களைத் தம் இலக்கிய தீபம் என்ற நூலில் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை அவர்கள் தெரிவித்துள்ளார்கள். அவர்தம் ஆய்வுக் கருத்துக்களில் சில பின்வருமாறு,

குறுந்தொகைப் பாடல்களைப் பாடிய புலவர்கள் வேறு வேறு காலத்தினர். புறநானூற்று முதற்பதிப்பு முகவுரையில் காணும், "இந்நூற் செய்யுட்களால் பாடப்பட்டவர்கள் ஒருகாலத்தாரல்லர், ஒரு சாதியாரல்லர், ஓரிடத்தாருமல்லர், பாடியவர்களும் இத்தன்மையரே", என்னும் குறிப்பு தொகை நூற் பாடல்கள் பற்றிய சரியான கணிப்புரையாகும்.

தொல்காப்பிய உரைகாரராகிய பேராசிரியர் குறுந்தொகைக்கு உரை வரைந்துள்ளமையால் அவர் காலமாகிய 14 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே இது தொகுக்கப்பெற்றது என்பது தெளிவு. இளம்பூரணரும் குறுந்தொகைப் பாடல்களை மேற்கோளாக எடுத்தாளுதலின் அவர் காலமாகிய 12 ஆம் நூற்றாண்டிற்கும் முற்பட்டது இத்தொகை என்பது துணிவு.

வீரசோழியவுரையில், 'அளவடியால் தொக்கது குறுந்தொகை' (அலங். 36, உரை) என்று கூறப்பட்டுள்ளது. எனவே, இந்நூல் எழுதப்பட்ட கி.பி. 1062-இல் பட்டமெய்திய வீர ராசேந்திரன் காலத்திற்கு முன்னரே இக் குறுந்தொகை கோக்கப் பெற்றமை விளங்கும்.

"உருத்திரசன்மன் அகநானூறு தொகுத்தவன் என்பது தெரிகிறது. சங்கப் புலவர்களின் இறுதிக்காலம் கி..பி. 3ஆம் நூற்றாண்டின் இறுதி எனத் துணியலாம். இவர்களது செய்யுட்களைத் தொகுக்கும் கருத்து எழுவதற்கும் செயலாக முற்றுதற்கும் ஒன்றிரண்டு நூற்றாண்டுகள் சென்றிருக்கலாம். எனவே, அகநானூறு தொகுக்கப்பட்ட காலம் 5ஆம் நூற்றாண்டின் முற்பகுதி என்பது ஒரு வகையாற் புலனாகின்றது. குறுந்தொகை நூலினைத் தொகுத்தவன் பூரிக்கோ ஆதலானும் இப் பூரிக்கோ என்பான் உப்பூரிகுடி கிழானாக இருத்தல் கூடுமாதலானும் இத்தொகை நூல் உருத்திரசன்மனது தந்தையால் நான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொகுக்கப் பெற்றது எனக் கொள்ளுதல் தக்கதாகின்றது" (வையாபுரிப் பிள்ளை, இலக்கிய தீபம், பக். 102-103)

குறுந்தொகையிலுள்ள செய்யுள் ஒவ்வொன்றும் தோன்றிய காலத்தை வரையறுத்தலும் இயலாததொரு காரியமே. சில செய்யுட்களை இயற்றிய ஆசிரியர் பெயர்களே மறைந்துவிட்டன. 19 செய்யுட்களை இயற்றியோர்க்கு அவரவரது செய்யுட்களில் வந்துள்ள அருந்தொடர்களே பெயராக அமைந்துள்ளன. எஞ்சிய செய்யுட்களிலும் காலவரையறை செய்வதற்குப் பயன்படும் ஆதாரங்கள் சிலவேயாம்.

வெண்கோட்டு யானை சோணை படியும்
பொன்மலி பாடலி பெறீஇயர்
யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே (குறுந். 75)

என்னும் குறுந்தொகைப் பாடலில் வரலாற்றுச் செய்தி இடம்பெற்றுள்ளது. 'சோணைநதிக் கரையிலே பொன் மிகுதியால் சிறப்புற்று விளங்கும் பாடலி என்னும் வளநகரத்தை நீ பெறுவாயாக' என்று தலைமகனது வரவுணர்த்திய பாணனை நோக்கித் தலைவி கூறுகிறாள். எனவே இச்செய்யுள் இயற்றப் பெற்ற காலத்தே பாடலிபுத்திரம் வளஞ்சிறந்த பெருநகரமாக விளங்கியது என்பது புலனாகும்.

பாடலிபுத்திர நகரின் வரலாறு கி.மு. 5-இல் இருந்தே தொடங்குகிறது. கி.பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளில் பாடலிபுத்திரம் சிறப்புற்று விளங்கியிருத்தல் கூடும். எனவே குறுந்தொகைச் செய்யுட்கள் இயற்றப் பெற்ற காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என்னும் முடிவுக்கு வருகிறார் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை. எனவே குறுந்தொகைப் பாடல்கள் கி.பி. 3 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் பாடப்பெற்றிருத்தல் வேண்டும்.

செவ்வாய், 17 நவம்பர், 2009

பாலியல் அறமும் பரத்தையரும் பகுதி-1, சங்க இலக்கியக் காட்சிகள்

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
பட்டமேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8

சங்க இலக்கியக் காட்சிகள்

சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு காட்சி வருணனைகளோடு இக்கட்டுரையைத் தொடங்குகின்றேன்.

காட்சி ஒன்று : மதுரைக் காஞ்சி

மாங்குடி மருதனார் மதுரைக் காஞ்சி பாடலில் மதுரை நகரை வருணிக்கும்போது நகர வீதிகளில் வலம்வரும் விலைமாதர்களை வருணிக்கும் பகுதி.

நுண்பூண் ஆகம் வடுக்கொள முயங்கி
மாயப் பொய்பல கூட்டிக் கவவுக்கரந்து
சேயரும் நணியரும் நலன்நயந்து வந்த
இளம்பல் செல்வர் வளம்தப வாங்கி
நுண்தாது உண்டு வறும்பூத் துறக்கும்
மென்சிறை வண்டினம் மாணப் புணர்ந்தோர்
நெஞ்சு ஏமாப்ப இன்துயில் துறந்து
பழம்தேர் வாழ்க்கைப் பறவை போல
(மதுரைக் காஞ்சி 569 -576)

மதுரை நகர வீதிகளில் கைவீசி நடந்துவரும் விலைமாதர்கள், பிற நாட்டினின்றும் தங்கள் ஊரிலிருந்தும் வந்த இளைய செல்வர்களை வஞ்சனை நிறைந்த பொய்ம்மொழிகளினாலே கூட்டிக்கொண்டு சென்று அணைகின்றனர். அவர்களுடைய செல்வத்தையெல்லாம் வாங்கிக்கொள்ளும் வரையில் அன்புடையார் போல் நடிக்கின்றனர். தேனை உண்டு பின் வண்டு மலர்களைத் துறப்பது போல இவர்களும் தங்களை விரும்பி வந்தவர்களது செல்வத்தை வாங்கியபின் அவர்களைக் கைவிட்டு விடுகிறார்கள். பழமுள்ள மலர்களைத் தேடிச்செல்லும் பறவைபோல வாழ்கிறார்கள்.

காட்சி இரண்டு : பரிபாடல்

நல்லந்துவனார் பாடிய பரிபாடல் 20 ஆம் பாடலில் இடம்பெற்றுள்ள பரத்தைக்கும் தலைவியின் ஆயத்தாருக்குமான உரையாடலின் ஒரு பகுதி.
தலைவன் தலைவியரோடு வையை ஆற்றில் புனலாட வந்த தோழியர், தலைவியிடமிருந்து காணாமல் போனதாகக் கருதப்பட்ட வளையும் ஆரமும் கூட்டத்திலிருந்த பரத்தையொருத்தி அணிந்திருத்தலைக் கண்டனர். அதனால் இப்பரத்தை நம்தலைவியின் மாற்றாள் என எண்ணினர். தலைவன் நாணினான். இதனை அறிந்த பரத்தை மகளிர் கூட்டத்தில் புகுந்து மறைந்தாள். தோழியர் அவளைப் பின்தொடர்ந்தனர். அதுகண்ட பரத்தை என்னை ஏன் பின்தொடர்கின்றீர்? என்று சினந்தாள். அப்போது தோழியர் பரத்தைக்குக் கூறும் மறுமொழி,
.......... ......... அமர் காமம்
மாயப்பொய் கூட்டி மயக்கும் விலைக்கணிகை
பெண்மைப் பொதுமைப் பிணையிலி ஐம்புலத்தைத்
துற்றுவ துற்றும் துணைஇதழ் வாய்த்தொட்டி

முற்றா நறுநறா மொய்புனல் அட்டிக்
காரிகை நீர்ஏர் வயல் காமக்களி நாஞ்சில்
மூரி தவிர முடுக்கு முதுசாடி

மடமதர் உண்கண் கயிறாக வைத்துத்
தடமென் தோள் தொட்டுத் தகைத்து மடவிரலால்
இட்டார்க்கு யாழ்ஆர்த்தும் பாணியில் எம்இழையைத்
தொட்டு ஆர்த்தும் இன்பத்துறைப் பொதுவி
-(20, 48-58)

இந்த வசைமொழிகளின் பொருள்,
''காமத்தைப் பொய்யோடு கலந்து விற்கும் கணிகையே! பொதுமகளே! காமுகப் பன்றிகள் நுகரும் தொட்டியே! வனப்பாகிய வயலில் கள்ளாகிய நீரைவிட்டுக் காமமாகிய கலப்பையாலே எம்முடைய எருது உழுகின்ற பழைய சாலே! பொருள் வழங்குவோரைக் கண்ணாகிய கயிற்றாலே தோளாகிய தறியில் கட்டி காமவின்பம் மிகும்பொருட்டு இசையினையும் எம்பால் களவுகொண்ட அணிகளை அணிந்துகொண்ட அவ்வழகையும் ஊட்டுகின்ற பொதுமகளே!"" என்பதாகும்.

மேலே காட்டப்பட்ட இரண்டு காட்சிகளும் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளவை. முதல் காட்சி புறப்பாடல் காட்சி, இரண்டாம் காட்சி அகப்பாடல் காட்சி. தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் இரண்டுமே இலக்கண வகையாலும் இலக்கிய வகையாலும் பரத்தையர் குறித்த பல்வேறு தகவல்களைப் பதிவு செய்துள்ளன. தொல்காப்பியர் காமக்கிழத்தி, பரத்தை இரண்டு சொற்களைக் கையாண்டுள்ளார்.

சங்க இலக்கியங்களில் பரத்தை என்ற சொல் பயின்று வந்தாலும் காமக்கிழத்தி, காதல் பரத்தை, சேரிப் பரத்தை, நயப்புப் பரத்தை, இல் பரத்தை முதலான பெயர்கள் சங்க இலக்கியப் பாடல்களுக்கு தொகுப்பாளர் அல்லது உரையாசிரியர்களால் இடப்பெற்றுள்ள துறைக் குறிப்புகளிலேயே இடம்பெற்றுள்ளன. மூல நூலில் இத்தகு ஆட்சிகள் இல்லை. திணை, துறை வகுத்தோர் காலத்து வழக்காறுகளே இப்பெயர்களால் சுட்டப்படுகின்றன.

பாலியல் அறமும் பரத்தையரும் பகுதி-2, பரத்தையரும் விலைமகளிரும்

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

பரத்தையரும் விலைமகளிரும்:

தமிழிலக்கிய நெடும்பரப்பில் பரத்தை, காமக்கிழத்தி, கொண்டி மகளிர், பொதுமகள், பொருட்பெண்டிர், வரைவின் மகளிர், விலைமகள், கணிகை, சலதி, வேசி, தாசி, தேவரடியாள் (தேவிடியாள்) முதலான பெயர்களால் சுட்டப்படும் பெண்கள் ஒரு சமூக நிறுவனத் தன்மையோடு இயங்கிவந்தமை பதிவாகியுள்ளன. சுட்டப்படும் பெயர்கள் பலவாயினும், பொதுப்பார்வையில் இவர்கள் அனைவரும் விலைமகளிர் என்றே கருதப்படுகின்றனர். ஆனால் நுணுகிப் பார்த்தால் இவர்களை இரண்டு பிரிவுகளுக்குள் அடக்கலாம் என்று தோன்றுகிறது.

1. பரத்தை, காமக்கிழத்தி முதலான பெயர்களால் அகப்பொருள் இலக்கியங்களில் இடம்பெறும் புலனெறிப் பாத்திரங்கள்.

2. வரைவின் மகளிர், பொருட்பெண்டிர், கணிகை, கொண்டி மகளிர், தாசி, வேசி முதலான பெயர்களால் சுட்டப்படும் நடைமுறை வாழ்க்கைப் பாத்திரங்களாக இடம்பெறும் பெண்கள்.
முதல் வகையில் இடம்பெறும் பரத்தை என்ற புலனெறிப் பாத்திரப் படைப்புப் பெண்களையும் இரண்டாம் வகையில் இடம்பெறும், விலைமகளிர் எனப் பொது நிலையில் சுட்டப்படும் நடைமுறை வாழ்க்கைப் பெண்களையும் வேறுபடுத்தி அடையாளம் காண இயலாமல் தமிழகப் பரத்தையர் குறித்த ஆய்வில் இடர்ப்படுவோர் பலருண்டு.

முதல் பிரிவில் இடம்பெறும் அகப்பொருள் பரத்தையர் விலைமகளோ, பொருட்பெண்டிரோ அல்லர். அவர்கள் அகப்பொருள் தலைவனின் மனைவியர் பலருள் ஒருவர். இவ்வகைப் பரத்தையர் குறித்து விரிவாக ஆய்ந்து சிலம்பு நா.செல்வராசு அவர்கள் தரும் முடிபுகள் வருமாறு,

“அ. பரத்தையர், பரத்தை என்ற சொற்கள் தலைமகளின் வேறானவர், அல்லது அயலவர் என்ற பொருளிலேயே குறிக்கப் பெற்றுள்ளன. பரத்தை என்பதற்குப் பொதுப்பெண்டிர், விலைமகளிர் என்று பொருள் கொள்வதற்குத் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் சான்றுகளில்லை.

ஆ. சேரிப்பரத்தை முதலான வகைப்பாடுகள் உரையாசிரியர் காலத்தவை.

இ. இளம்பூரணர் கூறிய ‘ஒருவர் மாட்டும் தங்காதவர்’ என்ற கொள்கையை விளக்கச் சங்க இலக்கியங்களில் சான்றுகள் இல்லை. அவ்வாறே ஆடவர் பலரோடு பரத்தையர் தொடர்பு கொண்டமைக்கும் சான்றுகளில்லை.” (வள்ளுவப் பெண்ணியம், பக் 102-103)

சங்க இலக்கிய மருதப்பாடல்கள் பலவற்றில் பரத்தையைத் தலைவிக்குச் சகோதரியாகவும் தலைவி பெற்றெடுத்த புதல்வனுக்குத் தாயாகவும் சித்தரித்துள்ளனர். தலைவியைப் போலவே பரத்தையையும் வதுவை அயர்ந்து (திருமணத்தின் வழி) பெற்றான் என்று சில பாடல்கள் பதிவுசெய்துள்ளன. (அகநானூறு, 36, 46, 206) தலைவியருக்கும் பரத்தையருக்கும் உள்ள மிக முக்கியமான வேறுபாடு குழந்தை பெற்றுக் கொள்ளும் உரிமை பற்றியது. பரத்தைக்குக் குழந்தை பெற்றுக் கொள்ளும் உரிமை கிடையாது என்பதுதான். (நற்றிணை, 330)

இவ்வகைப் பரத்தையர், புலவர் மரபில் புலனெறி வழக்காகப் படைத்துக் கொள்ளப்பட்டவர்களே அன்றி நடைமுறைப் பாத்திரங்களாகார். சங்க அக இலக்கியங்கள் தொடங்கி, கீழ்க்கணக்கு அகநூல்கள், திருக்குறள் காமத்துப்பால், கோவை இலக்கியங்கள் வரை புலனெறியாகப் படைக்கப்படும் அத்துணை அக இலக்கியங்களிலும் இவ்வகைப் பரத்தையர் அச்சுப்புள்ளி மாறாமல் ஒரே வார்ப்பாகப் படைக்கப்படுவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இரண்டாம் பிரிவில் இடம்பெறும் நடைமுறை வாழ்க்கைப் பாத்திரங்களான வரைவின் மகளிர், பொருட்பெண்டிர், கணிகை, கொண்டி மகளிர், தாசி, வேசி முதலான பெயர்களால் சுட்டப்படும் பெண்கள் குறித்து விரிவாகப் பேசுவதற்கு இடமிருக்கின்றது. பொதுவில் இவர்களைப் பதியிலார் என்று குறித்தல் பொருந்தும். மதுரைக் காஞ்சி கொண்டி மகளிர் என்ற அடையாளத்தோடு வருணிக்கும் மதுரை நகர விலைமாதர்கள் இவ்வகைப் பதியிலார்களே.

நுண்பூண் ஆகம் வடுக்கொள முயங்கி
மாயப் பொய்பல கூட்டிக் கவவுக்கரந்து
சேயரும் நணியரும் நலன்நயந்து வந்த
இளம்பல் செல்வர் வளம்தப வாங்கி
நுண்தாது உண்டு வறும்பூத் துறக்கும்
மென்சிறை வண்டினம் மாணப் புணர்ந்தோர்
நெஞ்சு ஏமாப்ப இன்துயில் துறந்து
பழம்தேர் வாழ்க்கைப் பறவை போல
(மதுரைக் காஞ்சி 569 -576)

தமிழ் இலக்கியப் பரப்பில் சங்க காலம் தொடங்கி நேற்றைய இலக்கியங்கள் வரை இவ்வகைப் பெண்கள் குறித்த பதிவுகள் முற்ற முழுதாக ஆணின் பார்வையிலேயே பதிவாகியுள்ளன. மாயப் பொய்பல கூட்டிக் கவவுக் கரந்து, நுண்தாது உண்டு வறும்பூத் துறக்கும் மென்சிறை வண்டினம் மாண, பழம்தேர் வாழ்க்கைப் பறவை போல முதலான வசைகளின் வழி மாங்குடி மருதனார் முன்வைக்கும் (பொருட்)பெண்டிர் குறித்த மதிப்பீடுகளை ஆழ்ந்து நோக்குதல் வேண்டும். இவ்வகை மதிப்பீடுகளே பதினெண் கீழ்க்கணக்கின் அறநூல்களிலும் நீட்சி பெற்றுள்ளன. திருக்குறளும் இதற்கு விதிவிலக்கில்லை.

பாலியல் அறமும் பரத்தையரும் பகுதி-3, திருக்குறளில் பரத்தையரும் விலைமகளிரும்

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

திருக்குறளில் பரத்தையரும் விலைமகளிரும்:

திருக்குறள் காமத்துப்பாலில் இடம்பெறும் ஊடல் தொடர்பான அதிகாரங்களில் தலைவிக்கு ஊடல் தோன்ற பரத்தையே காரணமாகிறாள் என்பதைத் திருவள்ளுவர் மிக நுட்பமாகப் பதிவு செய்கிறார்.

நண்ணேன் பரத்த நின் மார்பு (குறள்: 1311)

ஒருத்தியைக் காட்டிய சூடினீர் (குறள்: 1313)

யாரினும் யாரினும் என்று (குறள்: 1314)

யார் உள்ளித் தும்மினீர் என்று (குறள்: 1317)

நுமர் உள்ளல் எம்மை மறைத்திரோ (குறள்: 1318)

பிறர்க்கு நீர் இந்நீரர் ஆகுதிர் (குறள்: 1319)

யார் உள்ளி நோக்கினீர் (குறள்: 1320)


புலவி நுணுக்கம் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள மேலே சான்று காட்டப்பட்டுள்ள அனைத்து குறட்பாக்களிலும் தலைவியின் ஊடலுக்குக் காரணமாகத் தலைவனின் பரத்தமை ஒழுக்கம் பேசப்படுகிறது. இக்குறட்பாக்களில் இடம்பெறும் பரத்தையர் அகப்பாடல்களில் இடம்பெறும் புலனெறி வழக்குப் பரத்தையர்.

திருவள்ளுவர் தம் பொருட்பால் வரைவின் மகளிர் அதிகாரத்தில் கடிந்து சாடும் பரத்தையர்கள் அகப்பொருள் பரத்தையர்கள் அல்லர். அவர்கள் நடைமுறை வாழ்க்கைப் பாத்திரங்களான விலைமகளிர்.

பொருள் விழையும் ஆய்தொடியார் (குறள்: 911)

பண்புஇல் மகளிர் (குறள்: 912)

பொருட்பெண்டிர் (குறள்: 913)

பொதுநலத்தார் (குறள்: 915)

மாய மகளிர் (குறள்: 918)

வரைவுஇலா மாண் இழையார் (குறள்: 919)

இருமனப் பெண்டிர் (குறள்: 920)


பொருட்பெண்டிர், மாய மகளிர், வரைவுஇலா மாண்இழையார், இருமனப் பெண்டிர் முதலான அடை மொழிகளோடும் பிணம், அளறு முதலான வசவுகளோடும் திருவள்ளுவர் குறிப்பிடும் பெண்கள் விலைமகளிரே என்பதில் இருவேறு கருத்திருக்க வாய்ப்பில்லை.

திருக்குறள் காமத்துப்பாலில் ஊடலுக்குக் காரணமாகச் சுட்டும் பரத்தையர், பொருட்பாலில் கடிந்துரைக்கும் பொருட்பெண்டிர் ஆகிய இரண்டு வகையினரையும் பிரித்துணராமல் குழப்பங்களுக்கு ஆட்படுவோர் இரண்டு பிரிவினர்.

1. வரைவின் மகளிர் அதிகாரத்தில் பொருட்பெண்டிரைச் சாடும் குறள் கருத்தை ஒப்புக் கொண்டு, காமத்துப்பாலில் திருவள்ளுவர் பரத்தையர்களைப் பற்றிக் குறிப்பிடவே இல்லை என்று வாதிடுவோர் ஒரு பிரிவினர்.

2. காத்துப்பாலில் இடம்பெறும் பரத்தையர்கள் பற்றிய செய்திகளை ஒப்புக்கொண்டு, பொருட்பால் வரைவின் மகளிர் அதிகாரத்தில் இடம்பெறும் பொருட்பெண்டிர் விலைமகளிர் அல்லர், அவர்கள் ஆண்களால் பொருள் கொடுத்து பெறப்பட்ட பரத்தையர்களே. அவர்கள் பொதுமகளிர் அல்லர். பொருள் கொடுத்த ஆடவனுக்கு மட்டுமே இன்பம் நல்கும் வரைவு - இல் - மகளிர். அதாவது திருமணம் செய்துகொள்ளாத மனைவியர் என்று வாதிடுவோர் சிலர் (சிலம்பு நா.செல்வராசு, வள்ளுவப் பெண்ணியம், பக். 68)

திருக்குறள் காமத்துப்பாலில் ஊடலுக்குக் காரணமாகச் சுட்டும் பரத்தையர், பொருட்பாலில் கடிந்துரைக்கும் பொருட்பெண்டிர் ஆகிய இரண்டு வகையினரையும் பிரித்துணர்ந்து, காமத்துப்பால் பரத்தையர் புலனெறி வழக்கு என்றும் பொருட்பால் பொருட்பெண்டிர் உலகியல் நடைமுறைச் சித்தரிப்பு என்றும் பொருள்கொள்ளுதல் சிக்கலைத் தீர்க்க உதவும்.

பதினெண் கீழ்க்கணக்கில் இடம்பெற்றுள்ள அறநூல்கள் பலவும் திருக்குறளை அடியொட்டியே பொதுமகளிர் குறித்த வசவு மற்றும் சாடல்களைத் தொடர்கின்றன.

ஆமாபோல் நக்கி அவர் கைப்பொருள் கொண்டு
சேமாபோல் குப்புறூஉம் சில்லைக்கண் அன்பினை
ஏமாந்து எமதுஎன்று இருந்தார் பெறுபவே
தாமாம் பலரால் நகை
(நாலடியார்: 38, பொதுமகளிர்: 7)

காட்டுப் பசுபோல் நக்கிச் சுகமளித்துக் கைப்பொருளைக் கவர்ந்து கொள்ளும் கணிகை, எல்லாம் கவர்ந்தபின் காட்டு எருது போலப் பாய்ந்து விலகி பிறரிடம் சென்றுவிடுவாள். அவளது இந்த அற்ப அன்பினை உண்மை என நம்பி ஏமாறுகிறவர்களது வாழ்க்கை பிறரால் நகைக்கக் கூடியதாய் இழிவுறும்

நாலடியாரில் இடம்பெறும் பொதுமகளிர் என்ற அதிகாரம் முழுவதும் விலைமகளிர் குறித்த சாடல்களே. பழமொழி நானூறு, திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஆசாரக்கோவை போன்ற அறநூல்களிலும் இதேநிலைதான்.

பாலியல் அறமும் பரத்தையரும் - பகுதி 4 -கற்பு ஒரு கற்பிதம்

முனைவர் நா.இளங்கோ
இணைப்பேராசிரியர்,
புதுச்சேரி-8

கற்பு ஒரு கற்பிதம் :

சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்ற அல்லது அக இலக்கிய மரபுகள் குறிப்பிடுகின்ற காதல், கற்பு, ஒருதாரமணம் இவைகள் எல்லாமே பழைய தாய்வழிச் சமூகம் மாறித் தந்தைவழிச் சமூகம் உருவானபோது உடைமைச் சமூகத்தால் உருவாக்கப்பட்ட கோட்பாடுகளே. தந்தைவழிச் சமூகத்தின் போது உருவான தனியுடைமைச் சமூகத்தில்தான் சொத்துரிமையைப் பாதுகாக்க ஒருதாரமணம் தேவைப்பட்டது.

தந்தைவழிச் சமூகத்தில் தன்னுடைய உடைமையை நேரடியாகத் தன் வாரிசே பெற பெண் ஒருதாரமணத்தைக் கைக்கொள்ள வேண்டியதாயிற்று. (இங்கே ஒருதாரமணம் என்று குறிப்பிடப்படுவது உண்மையில் ஒருகணவமணமே) ஏனெனில் ஒருபெண் ஒருவனோடு மட்டுமே உறவு உடையவளாக இருந்தால் மட்டுமே தந்தைவழிச் சமூகம் நிலைக்கமுடியும். இத்தகைய சூழ்நிலையில்தான் ஒருதாரமணக் கோட்பாட்டைக் கட்டிக்காப்பதற்காகக் (பெண்களுக்கு மட்டும்) காதலும் கற்பும் கோட்பாடுகளாக ஆக்கம் பெற்றன.

எல்லாக் காலங்களிலும் காதலும் கற்பும் பெண்களுக்கு வலியுறுத்தப் பட்டனவே அல்லாமல் ஆண்களுக்கு அவை வலியுறுத்தப்படவில்லை. பெண்களுக்குக் காதலும் கற்பும் ஒருதாரமணமும் வலியுறுத்தப்பட்ட அதே சமூகத்தில்தான் ஆண்களுக்குப் பரத்தையர் ஒழுக்கம் கற்பிக்கப்பட்டது.

தனியுடைமை, ஆணாதிக்கம் இவைகளைக் கட்டிக்காக்கவே காதல், கற்புக் கோட்பாடுகள் காலந்தோறும் மக்களாலும் இலக்கியவாதிகளாலும் மிக உயரியதாகவும் புனிதமானதாகவும் கருதப்பட்டும் கற்பிக்கப்பட்டும் வந்தன. கற்பு ஒரு கற்பிதம். அதன் நோக்கமும் தேவையும் பெண்ணடிமையே. காதல் புனிதமானது என்று பெண்ணை நம்பச்செய்த ஆண்கள் காதலை ஒருபோதும் புனிதமாகக் கருதவில்லை.

குலமகள் - பரத்தை:

ஆடவரே உயிர் என்று போற்றி ஒழுகும் பெண்கள் கற்பிற் சிறந்தவர்களாகப் போற்றப்பட்டனர். அவர்களின் ‘செயிர்தீர் கற்பு கடவுள் கற்பு’ என்பது ஆடவனுக்கு உடலாலும் உள்ளத்தாலும் உண்மையாய் இருத்தல் என்று கற்பிக்கப்பட்டது.

கற்புடைய பெண்களின் மேன்மைக்காக எதிர்நிலையில் பரத்தையர்கள் பற்றிய புலனெறி வழக்கு (இற்பரத்தை, காமக்கிழத்தி, காதற்பரத்தை, சேரிப்பரத்தை எனப் பலநிலைகளில்) உருவாக்கப்பட்டது. கற்பைப் போற்றிக் காக்கும் தலைவியின் பெருமையை மிகுவிக்கவே அல்லது வலிமைப்படுத்தவே பரத்தையர்கள், பரத்தையர் ஒழுக்கம், ஊடல், ஊடல் தணிக்கும் வாயில்கள் படைத்துக் கொள்ளப்பட்டன. மருதத்திணையின் முழுநேர வேலையே பரத்தையர் காரணமான ஊடலும் ஊடல் நிமித்தங்களுமாயின.

பரத்தையர்களே சங்க காலத்தில் இல்லையா? இவை முழுக்க முழுக்கக் கற்பிதங்களா? என்றால், பரத்தையர்களே கற்பனை என்று பொருள் கொள்ளத் தேவையில்லை. பரத்தமை ஒழுக்கம் பற்றிய புலனெறி வழக்குகள், மருத உரிப்பொருள் தொடர்பான செய்திகள் இவைகளே கற்பிதங்கள்.

“நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்”


என்பார் தொல்காப்பியர். அகப்பொருளின் புலனெறி வழக்குகள் புனைவியல் தன்மையோடு எதார்த்தத்திலிருந்து புனைந்து கொள்ளப்பட்டவையே. இவை உள்ளதும், இல்லதும் ஆகிய இரண்டின் கூட்டால் உண்டான புனைவு. பரத்தையர்கள் குறித்த சங்க இலக்கியப் பதிவுகள் அனைத்தும் நாடக வழக்கும் உலகியல் வழக்கும் கலந்த புலனெறி வழக்கே என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

பாலியல் அறமும் விலைமகளும்:

நமது பொதுச்சிந்தனையில், சமூக ஒழுங்கைக் கட்டிக்காக்க, சமுதாயம் கெட்டுப் போய்விடாமல் பாதுகாக்க அறங்கள் தோற்றுவிக்கப்பட்டன என்ற கருத்து பதிந்துள்ளது. உண்மையில் அறங்கள் அதிகாரத்தைக் கட்டுபவை. ஆதிக்க சக்திகளின் நலன்களைப் பாதுகாப்பவை.

“அறங்கள் வெற்று விதிகள் அல்ல. இவை, மேலாதிக்க சமூக ஒழுங்கை அல்லது நடப்பில் நிலவுகின்ற ஆதிக்க -ஆட்பட்ட உறவுகளைச் சாசுவதமாக்குகின்றன. ஒரு சாராரின் நலனே ஒட்டுமொத்தச் சமூக நலன் என்று அறங்கள் நியாயப் படுத்தவல்லவை. இவ்வாறு இவை நியாயப் படுத்துவதன் மூலமாக, நடப்பிலுள்ள சமூக ஒழுங்கும், உறவுகளும் இயல்பானவை, மாறாதவை, மாற்றக் கூடாதவை என்று ஆக்குகின்றன. அறங்கள் இயற்கைச் சட்டம் என்கிற அரணைப் பெறுகின்றன. நடப்பவற்றைக் கேள்விக்கு அப்பாற் பட்டவையாக, இதிலே கேட்பதற்கு என்ன இருக்கிறது என்பதாக அறங்கள் ஆக்குகின்றன.”
என்பார் ராஜ் கௌதமன். (தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும், பக். 8-9)

அறங்கள் ஆதிக்க சக்திகளின் நலன் காப்பவை எனும்போது உடைமைச் சமூகத்தில் ஆதிக்கச் சக்தியாய் விளங்கும் ஆண்களின் நலன் பேணுவதும், ஒடுக்கப்படும் பெண்களுக்கு எதிரான கருத்தியல் வன்முறையாகவும் அவை விளங்குகின்றன. விலைமகளிர் குறித்த அறச்சொல்லாடல்களும் பெண்களுக்கு எதிரான கருத்தியல் வன்முறையே என்பதை அறநூல்கள் திரும்பத் திரும்பப் பதிவு செய்கின்றன.

பெண்களின் பாலியல் வேட்கையைக் கற்பு என்ற சங்கிலியால் பிணைத்துவிட்டு ஆண்கள் பாலியல் சுதந்திரத்தோடு கட்டுப்பாடற்று இயங்கும் சமூகத்தில் பொதுமகள் தவிர்க்க முடியாத பாத்திரமாகிறாள். இப்பொதுமகள் குறித்த வசவுகளாக மதுரைக்காஞ்சியில் கேட்ட அதேகுரல்தான் திருக்குறளிலும் நாலடியாரிலும் பழமொழி நானூற்றிலும் திரிகடுகத்திலும் ஆசாரக் கோவையிலும் மீண்டும் மீண்டும் ஒலிக்கிறது.

சனி, 7 நவம்பர், 2009

கட்டுரைகள் இலக்கியம் ஆகுமா?

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுவை-8

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பல படைப்புகள் எழுதப்பெறாத மனப் பிரதிகளாக உள்ளுறைகின்றன. சிலர் அவற்றுக்கு எழுத்து வடிவம் தந்து வெளியே உலவ விடுகின்றனர். பலர் அந்த முயற்சியில் இறங்குவதே இல்லை. ஒவ்வொரு மனிதனின் மறைவின் போதும் எழுதப்படாத பல பிரதிகள் அவனோடேயே மறைந்து விடுகின்றன.

கவிதைகளும் உரைநடைப் புனைகதைகளும் மட்டுமே படைப்புகள் இல்லை. அவைகளுக்கும் அப்பால் கட்டுரைகள் என்ற படைப்பு இலக்கியங்கள் உண்டு. ஏனோ தெரியவில்லை தமிழில் கட்டுரைகள் பெரிதும் படைப்பிலக்கிய அந்தஸ்தைப் பெறுவதில்லை. தமிழர்களின் நீண்ட நெடிய கவிதை மரபுகளே அதற்குக் காரணமாயிருக்கலாம்.

தமிழ்மொழியைப் பொறுத்தவரை கிடைக்கின்ற பழந்தமிழ் முதல் நூலாம் தொல்காப்பியத்திலேயே உரை என்ற இலக்கியவகை பற்றிய குறிப்பு கிடைக்கின்றது. இறையனார் களவியல் உரை தொடங்கித் தமிழிலக்கிய நெடும்பரப்பு தோறும் எழுதப்பட்ட இலக்கிய, இலக்கண, சமய உரைகள் தமிழின் தற்கால உரைநடைக்குக் கொஞ்சமும் குறைவின்றி ஈடுகொடுக்கின்றன.

ஐரோப்பியர் வருகைக்குப் பின்னர் தமிழகத்திற்குக் கிடைத்திட்ட தாள், மை, அச்சு இயந்திரம், ஆங்கிலக் கல்வி போன்ற வசதி வாய்ப்புகள் தமிழின் உரைநடை வளர்ச்சிக்குப் பெரிதும் ஆக்கமும் ஊக்கமும் அளித்தன. வீரமாமுனிவரின் பரமார்த்த குருகதையே தமிழின் முதல் உரைநடை இலக்கியம் என்பாருண்டு. தமிழின் உரைநடைக்கு அணிசேர்த்த தலைமைப் படைப்பை வழங்கிய பெருமை புதுச்சேரிக்கு உண்டு. ஆனந்தரங்கம் பிள்ளை (1709-1761) அவர்களால் எழுதியளிக்கப்பெற்ற நாட்குறிப்பு இலக்கியம், தொடக்காலத் தமிழ் உரைநடைக்குக் கிடைத்த தனிமகுடம்.

கட்டுரை இலக்கியம், உரைநடை இலக்கிய வடிவங்களில் தனித்தன்மை மிக்கது. ஒரு பொருள் பற்றிச் சிந்தித்தவற்றை ஒழுங்குபடுத்தி எழுதுவதே கட்டுரை என்பர். ‘விவாதித்து விவரிப்பதே’ கட்டுரையின் பண்பு என்பார் கா.சிவத்தம்பி. இந்த விளக்கங்கள் எல்லாம் செய்திக் கட்டுரைகளுக்குப் பொருந்தும்.

கட்டுரைகளில் படைப்பிலக்கிய அந்தஸ்தைப் பெறுவதும் தனித்தன்மை மிக்க இலக்கியமாக மதிக்கத் தக்கதுமான கட்டுரைகள் தன்னுணர்ச்சிக் கட்டுரைகளே. ஆங்கிலத்தில் இவ்வகைக் கட்டுரைகள் மிகுதி. ESSAYS என்று குறிப்பிடத்தக்கன இவைகளே. தமிழில் இவ்வகைக் கட்டுரைகள் அதிகமில்லை. அண்மைக் காலமாகத் தமிழிலும் இவ்வகைக் கட்டுரைகள் எழுதப்படுகின்றன.

புதன், 4 நவம்பர், 2009

இசைக்கும் கவிதைக்கும் என்ன உறவு?

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

உலகக் கலைகளுக்கெல்லாம் தாய் இசைக்கலையே. புவிக்கோளத்தைச் சூழ்ந்துள்ள வளிமண்டலமே உலக உயிரினங்களுக்கெல்லாம் ஆதாரம் ஆனதுபோல், இந்த இயற்கையின் கொடையாகிய வளிமண்டலமே இசைக்கும் ஆதாரம். இயற்கையின் இசை அலாதியானது பாரதி இதனைப் பதிவு செய்கின்றான்.

கானப் பறவை கலகலெனும் ஓசையிலும்
காற்று மரங்களிடைக் காட்டும் இசையினிலும்
ஆற்று நீரோசை அருவி ஒலியினிலும்
நீலப் பெருங்கடல் எந்நேரமும் தானிசைக்கும்
ஓலத்திடையே உதிக்கும் இசையினிலும்


நெஞ்சைப் பறிகொடுத்ததாகப் பாரதி பாடுவதில் இயற்கைக்கும் இசைக்கும் உள்ள நுட்பமான உறவு சொல்லப்படுகிறது.

இசையும் மொழியும் இணைந்தபோதுதான் கவிதை பிறந்தது. ஓசையை ஓர் ஒழுங்குக்கு உட்படுத்தி அதில் சொற்களை இட்டுநிரப்பி மனிதன் கவிதையைக் கற்றுக்கொண்டான்.

ஆதியில் கவிதை என்பது பாட்டுதான். எழுத்துக்களைப் படைத்துக்கொள்வதற்கு முன்பே மனிதன் பாட்டைப் படைத்துவிட்டான். பாட்டில் இசையே முதன்மை பெற்றது, சொல்லும் பொருளும் அடுத்த இடத்தில்தான். இப்படித் தொடங்கிய பாட்டு, வாய்மொழிக் கவிதையாய் வளர்ந்து ஏட்டில் குடியேறி கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை தனக்கும் இசைக்குமான தொடர்பை விட்டுவிடாமல் பற்றித் தொடர்ந்தது. பின்னர், கவிதை அச்சு ஊடகத்திற்கு இடம் பெயர்ந்தது.

இருபதாம் நூற்றாண்டு, கவிதையை இசையிலிருந்து பிரித்தது. பறக்கக் கற்றுக்கொண்ட குஞ்சுப் பறவைக்கு இனி தாய்ப்பறவையின் துணை தேவையில்லை. இனியும் தாய்ப்பறவை ஊட்டிக் கொண்டிருந்தால் குஞ்சுப்பறவை செயலற்றுப் போகும். கவிதைகளுக்கும் இதே விதிதான். கவிதைகள் வாய்க்கும் செவிக்குமாக ஊடாடும்வரைதான் இசை அல்லது ஓசை ஒழுங்கு தேவைப்பட்டது.

கவிதைகள் அச்சு வாகனமேறி கண்ணுக்கும் கருத்துக்குமாக ஊடாடத் தொடங்கிய பின்னர், கவிதை தன் எல்லாக் கட்டுகளையும் உடைத்துக் கொண்டு, விட்டு விடுதலையாகி நிற்க வேண்டும். இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதைகள் அதைத்தான் செய்தன/செய்கின்றன. நவீன கவிதைகள், புதுக்கவிதைகள், ஹைக்கூ என்ற இத்தகு புதிய வடிவங்களின் வரவுகளுக்குக் காரணங்கள் இவைதாம்.

பாட்டரங்கங்கள் கவிதையைச் செவிக்குப் படைப்பன. அங்கே கவிதை பாட்டாயிருக்க வேண்டும். அதைவிடுத்துத் தமிழின் நவீன கவிதைகளைப் பாட்டரங்கங்களில் வாசிப்பது பாட்டி மஞ்சள் தேய்த்துக் குளித்த கதைதான்.

கவிதைகள் வாய்மொழியில், ஏட்டில், அச்சில் குடியிருந்த தலைமுறைகளைக் கடந்து நான்காவது தலைமுறையாக கணிப்பொறி வழி இணையத்தில் குடியேறத் தொடங்கிவிட்டன. இவை ஊடக மாற்றங்கள். ஒவ்வொரு ஊடக மாற்றத்திற்கும் ஏற்ப, கவிதைகள் தம்மைத் தாமே புதுப்பித்துக் கொள்கின்றன.

வெள்ளி, 30 அக்டோபர், 2009

தமிழ் ஆய்வா? தமிழியல் ஆய்வா?

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

தமிழ் ஆய்வுப்புலம் இன்றைக்குத் தமிழ் இலக்கியம் தமிழ் மொழி என்பனவற்றை எல்லாம் கடந்து தமிழியல் ஆய்வுப்புலமாகப் பேருரு எடுக்கத் தொடங்கிவிட்டது. தமிழியல் என்பது தமிழ் இலக்கிய இலக்கண இயல் என்பதானதன்று. அது தமிழ்மொழி, தமிழர் பண்பாடு, தமிழ்- தமிழர் வரலாறு, தமிழர் கலை, தமிழர் அறிவியல் போன்ற பல துறைகளையும் உள்ளடக்கியது. அண்மைக் காலங்களில் தமிழர் கல்விப் புலங்களில் தமிழியல் என்ற சொல்லாடல் பெருகிவிட்டது.

தொடக்கக் காலங்களில் தமிழியல் என்பது மேற்கத்திய இன மொழி ஆய்வுத்துறையின் ஒரு பகுதியாகத்தான் தோற்றம் பெற்றது. மேற்கத்திய ஆய்வாளர்களின் கீழ்த்திசை ஆய்வு மற்றும் இந்தியவியல் ஆய்வுகளின் பின்புலத்திலேயே தமிழியல் ஆய்வுகள் வளரத் தொடங்கின. அந்த வகையில் காலனித்துவம் சார்ந்த கல்வி மற்றும் ஆய்வாகவே தமிழியல் இருந்துவந்தது.

மேற்கத்திய ஆய்வாளர்களின் இத்தகு தமிழியல் ஆய்வுகளில் தமிழ், தமிழர் முதலான உள்ளடக்கங்கள் பெரிதும் கீழ்நோக்கிய பார்வையிலேயே பதிவுசெய்யப்பட்டன.

இருபதாம் நூற்றாண்டின் பின்பாதியில் தமிழ்ப் பண்டிதர்களிடமிருந்து தமிழாய்வு மெல்ல மெல்லத் தமிழ்க் கல்வியாளர்களிடம் இடம் பெயர்ந்தபோது மேற்கத்திய தமிழியல் ஆய்வுகளே நம்மவர்களுக்குப் பெரிதும் முன்னுதாரண ஆய்வுகளாக அமைந்தன.

தமிழியல் ஆய்வுகளில் அவர்களின் பதிவுகளே நமக்கு வழிகாட்டக் கூடியனவாக அமைந்தன. தமிழ், தமிழர் குறித்த தங்கள் அடையாளங்களை அவ்வகை ஆய்வுகளிலேயே நம்மவர்கள் கண்டெடுத்தார்கள். பெரும்பாலான தமிழியல் ஆய்வுக் கட்டுரைகள் ஆங்கிலத்தில் அமைந்து விடுவதும் இக்காரணம் பற்றியே.

இன்றைக்குத் தமிழ் ஆய்வாளர்களுக்குத் தமிழியல் குறித்த பார்வையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. காலனித்துவ ஆதிக்க மனோபாவத்திலிருந்து விடுபட்டு புதிய தமிழியலை நாம் கட்டமைத்துள்ளோம். நமக்கான வரலாற்றை, பண்பாட்டை, கலையை, அறிவியலை மீட்டெடுக்கும் புதிய தமிழியல் ஆய்வுகள் பெருகத் தொடங்கியுள்ளன.

ஞாயிறு, 25 அக்டோபர், 2009

வாசகர்களை ஆற்றில் முக்கி எடுக்கும் சிறுகதை ஆசிரியன்

வாசகர்களை ஆற்றில் முக்கி எடுக்கும் சிறுகதை ஆசிரியன்

முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி-8

இலக்கிய வடிவங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது சிறுகதைதான். கவிதைகளை நேசிப்பது வாசிப்பது என்பதைவிட ஒருபிடி கூடுதலாகத்தான் நான் சிறுகதைகளை நேசிக்கிறேன், வாசிக்கிறேன். புதுமைப்பித்தனை, அழகிரிசாமியை, மெளினியை, ஜெயகாந்தனை, பிரபஞ்சனை வாசிப்பது போலவே இன்றைய புதிய சிறுகதை ஆசிரியர்களையும் நான் வாசிக்கிறேன். செய்நேர்த்தியில் வேறுபாடுகள் தெரிந்தாலும் வாழ்க்கையின் சகல பரிமாணங்களையும் படைப்புக்குள் கொண்டு வருவதில் புதியவர்கள் ஒன்றும் சளைத்தவர்களில்லை.

சிறுகதைகளில் மட்டும் அப்படி என்ன ஈர்ப்பு? தேனீக்கள் எல்லைகள் கடந்து மலர்க் கூட்டங்களைத் தேடி, நாடி துளித்துளிகளாய் மலர்களில் உள்ள இனிப்புச் சுரப்பை உறிஞ்சி வயிற்றில் சுமந்து கூட்டுக்கு வந்ததும் ஆறஅமர வயிற்றிலேயே சிலபல வேதி மாற்றங்களைச் செய்து அந்த இனிப்பைத் தேனாக்கிச் சேமித்துத் தருகிறதே, அப்படித்தான் சிறுகதை ஆசிரியர்களும். வாழ்க்கை அவர்களின் படைப்பில், படைப்பாற்றலில் வேதிமாற்றமடைந்து அழியாத கலையாகிறது! இலக்கியமாகிறது.

சிறுகதை என்பது சிறிய கதை இல்லை. சின்னதாய்க் கதைசொல்வதால் அது சிறுகதை ஆவதில்லை, இது வேறு. வாழ்க்கையின் ஒரு பகுதி, உணர்வோட்டத்தின் ஒரு துணுக்கு, கதா பாத்திரங்களினுடனான கண நேரத் தீண்டலின் சிலிர்ப்பு இவற்றில் ஏதோவொன்றோ அல்லது இதுபோன்ற பிறிதொன்றோ படைப்பாளியின் எழுத்தாற்றலால் நம் மனமேடையில் நடத்தும் நாடகமே சிறுகதை.

சிறுகதை ஆசிரியன் பேராற்றலோடு சுழித்தோடும் வாழ்க்கை என்ற ஆற்றின் ஓரு கரையில் இறங்கி வாசகர்களின் கழுத்தைப் பிடித்து ஓடும் ஆற்றுநீரில் சிலகணங்கள் முக்கி எடுத்துவிடுகிறான். முங்கி எழுந்த வாசகர்களாகிய நமக்கோ அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே கொஞ்ச நேரம் பிடிக்கிறது. உள்ளே முங்கியிருந்த கணத்தில் வந்துமோதிய ஆற்றுநீரின் வேகம், குளிர்ச்சி, வாசம், சுவை இவைகளெல்லாம் நம்நினைவில் மீண்டும் மீண்டும் அலைகளாய் வந்து மோதி பரவசப்படுத்துகின்றன.

ஆறு எங்கே தொடங்கியது? எங்கே முடியப் போகிறது? எதுவும் நமக்குத் தெரியாது, நமக்கு அதைப்பற்றிக் கவலையுமில்லை. நீரில் முங்கிய நேரத்தில் கடந்துபோன ஆற்றுப்பெருக்கைத்தான் நமக்குத் தெரியும். நம் உறவு அதனோடுதான். அது தந்த அதிர்ச்சி, சிலிர்ப்பு, மகிழ்ச்சி, பரவசம் இவைகள்தாம் நமக்கு முக்கியம். சிறுகதைகளும் அப்படித்தான்.

வியாழன், 22 அக்டோபர், 2009

காதலியின் பேச்சு போல் ஹைக்கூ

காதலியின் பேச்சு போல் ஹைக்கூ

முனைவர் நா.இளங்கோ
இணைப்பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8.

ஹைக்கூ ஒரு விந்தையான கவிதை வடிவம். உருவத்தில் சிறிய கவிதை வடிவங்கள் தமிழின் மரபிலும் உண்டு. குறள் வெண்பா, மூன்றடி அகவல், வஞ்சி விருத்தம் என்றெல்லாம். ஆனால் அந்தக் கவிதை வடிவங்களில் இருந்தெல்லாம் மாறுபட்டது. ஹைக்கூ. ஜப்பான்தான் ஹைக்கூவின் தாயகம். பிறந்தகத்திலிருந்து புகுந்தகம் வந்தபிறகு ஹைக்கூ விடம் எத்தனையோ மாற்றங்கள். ஜப்பான் ஹைக்கூ க்குக் கன்னிப் பெண்ணின் அழகு. தமிழ் ஹைக்கூ வுக்கு தாய்மையின் அழகு. துளிப்பா, குறும்பா, சிந்தர், ஹொக்கு என்றெல்லாம் தமிழில் ஹைக்கூ வுக்கு எத்தனை செல்லப்பெயர்கள். மூன்றடிக் கவிதை ஹைக்கூ.. வாமனனை ஞாபகப்படுத்தும் வடிவம். கவிதை அளவில் சிறியதென்றாலும் அது எடுக்கும், விஸ்வரூபம்.

கவிதை வாசகனிடம் வெளிப்படையாகப் பேசுகிற விஷயங்களை விடப் பேசாமல் விடுகிற விஷயங்கள் ஏராளம். கவிதை பேசாமல் விட்டனவற்றைக் கவிதைக்குள்ளே தேடி வாசிப்பதில்தான் வாசகனின் வெற்றியும் கவிதையின் வெற்றியும் அடங்கியுள்ளது. தமிழின் மரபுக் கவிதைகளுக்கும் புதுக் கவிதைகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளைப் போலவே, புதுக் கவிதைகளுக்கும் ஹைக்கூ கவிதைகளுக்கும் இடையே வேறுபாடுகள் உண்டு. புதுக் கவிதையை மூன்றடியில் எழுதிவிட்டால் அது ஹைக்கூ. ஆகிவிடாது.

காதலியின் பேச்சு போல் ஹைக்கூ நம்மிடம் பேசும். காதலி பேசுகிற ஒன்றிரண்டு வார்த்தைகளே ஒருவனுக்குக் காவியமாய் விரிவடையும். சொல்லிய வார்த்தைகளிலிருந்து சொல்லாதவற்றை எல்லாம் கற்பனை செய்துகொள்ளும் பித்துற்ற காதலனைப் போல் நம்மை கணப்பொழுதில் மாற்றிவிடும் ஆற்றல் நல்ல ஹைக்கூ வுக்கு உண்டு. நல்ல ஹைக்கூ.! அதில்தான் கவிஞனின் செய்நேர்த்தியே இருக்கிறது.

தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் எல்லோருமே கவிஞர்கள்தாம். பலர் இன்னும் எழுதவில்லை என்பதால் அவர்கள் கவிஞர்கள் இல்லை என்று சொல்லமுடியாது. இன்னும் எரியவில்லை என்பதால் விறகுக்குள் நெருப்பில்லை என்று சொல்லமுடியுமா?. எழுதும் கவிதைக்கு உயிர் வேண்டுமே! உயிருள்ள கவிதைகள் தாமே வாழும். உயிருள்ள கவிதையை யார் எழுதமுடியும்? எப்படி எழுத முடியும்? நன்னூல் ஆசிரியன் பவணந்தி விடை சொல்கிறான்,

பல்வகைத் தாதுவின் உயிர்க்குஉடல் போல்பல
சொல்லால் பொருட்கு இடனாக உணர்வினின்
வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள்.


கவிதையில் உள்ள சொற்கள் உடல் என்றால், கவிதையின் பொருள்தான் உயிர். வெறும் சொற்கள் கவிதையாகாது! அது வெறும் பிணம். கருத்து மட்டுமே கவிதையாகுமா? அதுவும் ஆகாது. உணர்வினின் வல்லோர் சொல்லும் கருத்தே கவிதையாகும். அதையே அணிகளால் அழகூட்டினால் கவிதை சிறக்கும் இதுவே நன்னூலார் கருத்து. பவணந்தியார் சொல்லும் இலக்கணம் எல்லா கவிதைகளுக்கும் பொதுவானது. ஹைக்கூ.வுக்குச் சிறப்பானது.

சென்ற நூற்றாண்டின் 80 களுக்குப் பிறகுதான் தமிழில் ஹைக்கூ தொகுதிகள் வெளிவரத் தொடங்கின. தமிழில் ஹைக்கூவுக்கு 25 ஆண்டுக் கால வரலாறுதான். ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழில் வெளிவந்த ஹைக்கூ நூல்கள் நூற்றுக்கணக்கில் இருக்கும். பெருகும் ஹைக்கூ நூல்களின் /ஹைக்கூ கவிதைகளின் வளர்ச்சி ஒரு வகையில் அச்சத்தை உண்டாக்குகிறது. என்றாலும் அச்சப்பட நாம் யார்? நமக்கென்ன தகுதி? அதைக் காலம் பார்த்துக் கொள்ளும் என்ற மெல்லிய ஆறுதல் நம்மைத் தேற்றுகிறது.

செவ்வாய், 20 அக்டோபர், 2009

கவிதை செய்யும் கலை.

கவிதை செய்யும் கலை.

முனைவர் நா.இளங்கோ
இணைப்பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8.

கவிதை… தமிழில் கவிதைகளுக்குப் பஞ்சமே இல்லை. கடந்த இருபத்தைந்து நூற்றாண்டுகளுக்கு முந்தைய கவிதை தொடங்கி நேற்றைய.. இன்றைய கவிதைகள் வரை பல்லாயிரம் தமிழ்க் கவிதைகளைப் பார்த்து.. படித்து.. பழகி விட்டோம். இன்னும் பிடிபடாத ஒரு விஷயம். கவிதை செய்யும் கலை.

கவிஞர்களுக்கு உள்ளேயிருந்து கவிதை பிறக்கிறது. மற்றவர்களுக்கு? எழுத்தும் சொல்லும் அடம் பிடிக்கின்றன, கவிதையாக மாட்டேன் போ.. என்று!. பிறவிக் கவிஞர்கள் என்று கேள்விப்பட்டிருப்போம். அதென்ன பிறவிக் கவிஞன்? கருவிலே திருவுடையான். அப்படியெல்லாம் யாரும் பிறப்பதில்லை. கவிஞர்கள் கவிஞர்களாகப் பிறப்பதில்லை. அவர்கள் கவிஞர்களாகிறார்கள் அல்லது ஆக்கப்படுகிறார்கள்.

நல்ல கவிதை எழுதுவது என்பது செய்நேர்த்தி. "சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்" என்று ஒளவையார் சொன்னதைப் போல், கவிதை பழகுவதால் வருவது. பழகுவது என்றால் எழுதிப் பழகுவது மாத்திரமில்லை. மனத்தால் பழகுவது.. பழக்குவது. அதனால்தான், "உள்ளத்து உள்ளது கவிதை" என்று கவிமணி சொன்னார். கவிதை எழுதப் படிப்பறிவு கட்டாயத் தேவையில்லை. இதற்கு நாட்டுப்புறக் கவிதைகளே சாட்சி.

சங்க இலக்கியங்கள் தொடங்கி இன்றைய ஹைக்கூ வரை தமிழ்க் கவிதைகளின் பயணம் நெடியது. உள்ளடக்கங்கள், வடிவங்கள், உத்திகள் இவைகளில் தமிழ்க் கவிதைகள் சந்தித்த மாற்றங்கள் எத்தனை எத்தனையோ? ஆனாலும் மாற்றங்களின் ஊடாக இழையோடும் ஒருவகை மரபுத் தொடர்ச்சி தமிழ்க் கவிதைகளுக்கு உண்டு. இந்த மரபுத் தொடர்ச்சிதான் தமிழ்க் கவிதைகளின் ஜீவ சக்தி. உள்ளார்ந்த ஆற்றல். இந்த ஜீவ சக்தியற்ற படைப்புகள் குறைப் பிரசவங்கள், சவங்கள்.

வெள்ளி, 16 அக்டோபர், 2009

சிங்கப்பூரில் அசைவ தாவரம்

சிங்கப்பூரில் அசைவ தாவரம்

பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி.

தாவரவகைகளின் வழக்கமான உணவு ஸ்டார்ச். இந்த உணவைத் தாவரங்கள் சூரியஒளி, கார்பன் டை ஆக்ஸைடு, தண்ணீர் இவைகளைக் கொண்டு தாமே தயாரித்துக்கொள்ளும். எனவே பொதுவில் தாவரங்கள் சைவ உணவுப் பழக்கமுள்ளவை. இவை அனைவருக்கும் தெரிந்த தகவல்கள். ஆனால் தாவரங்களில் அசைவ உணவு உண்ணும் தாவரங்களும் உண்டு. அதில் ஒருவகைதான் நெபந்தஸ். (நெபந்தஸ் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு இந்த http://en.wikipedia.org/wiki/Nepenthes விக்கிப்பீடியா பக்கத்தைப் பார்க்கவும்)

இது ஒரு விசித்திரமான செடி. நெபந்தஸிலும் பல இனங்களும் பல வகைகளும் உண்டு. இந்த நெபந்தஸ் தாவரத்தின் இலைகளின் ஒருபகுதி குவளைகள் போன்ற வடிவில் அமைந்திருக்கும். அதற்கு ஒரு மூடியும் இருக்கும். இந்தக் குவளை வடிவம் பல வண்ணங்களில் பல டிசைன்களோடும் பலவித வாசனைகளோடும் பூச்சிகளை ஈர்க்கும் விதத்தில் இருக்கும். குவளைகளின் அழகு மற்றும் வாசனைகளில் மயங்கிப் பூச்சிகள் குவளையின் உள்ளே நுழைந்ததும் குவளை மூடிக்கொள்ளும். அப்புறம் அந்தக் குவளைகள் நமது வயிறுபோலச் செயல்பட ஆரம்பிக்கும். செரிமானத்திற்கான சில எனசைம்களைச் சுரந்து பூச்சியை முழுசாக உறிஞ்சி சக்கையை விட்டுடும்.

ஆச்சரியமா இருக்கு இல்லையா? நான் எனது பள்ளி நாட்களில் படித்த தகவல்கள் இவை. அன்று முதல் நெபந்தஸ் வகைச் செடிகளைப் பார்ப்பதில் மிகுந்த ஆர்வமுண்டு. நான் மிகவும் ரசித்துப் பார்த்துப் படமெடுத்த சிலவகை நெபந்தஸ் குவளைகள் மற்றும் செடிகளை எங்கள் பார்வைக்கும் விருந்தாக்குகிறேன்.















இந்தப் படங்கள் சென்ற மாதம் 2009 செப்டம்பர் 14 ஆம் நாள் சிங்கப்பூர் ஆர்கிட் தோட்டத்தில் என்னால் படம்பிடிக்கப்பட்டவை.

வியாழன், 8 அக்டோபர், 2009

ஆய்வு நோக்கில் குறுந்தொகை - பதிப்பு வரலாறு

ஆய்வு நோக்கில் குறுந்தொகை - பதிப்பு வரலாறு

முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி - 8.



குறுந்தொகைப் பதிப்பு வரலாறு

சங்க நூல்களைப் பதிப்பிக்கும் முயற்சி 19 ஆம் நூற்றாண்டில் 1887 முதற் கொண்டுதான் தொடங்கியுள்ளது. 20 ஆம் நூற்றாண்டில் 1920 ஆம் ஆண்டிற்குள் சங்க இலக்கியப் பாட்டும் தொகையும் அச்சுருப் பெற்றுவிட்டன. குறுந்தொகைச் சுவடிகளைப் பொறுத்த மட்டில் நாட்டின் பல இடங்களிலும் பரவலாகக் கற்றவர்களிடையே இருந்து வந்துள்ளன.

முதல் பதிப்பு:

முதன் முதலாகக் குறுந்தொகையைப் பதிப்பித்தவர் திருக்கண்ணபுரத் தலத்தான் சௌரிப் பெருமாள் அரங்கன் என்பவராவர். 1915 இல் அரங்கனார் உரையெழுதி இந்நூலை வெளியிட்டார். நூலின் முன்னுரையில், "இத்தொகை நூல் மூலப்பகுதியை யேனும் நந்தமிழர்களில் எவரும் இதுகாறும் வெளிப்படுத்தாதிருந்தது அவர்கட்கு ஒரு குறையென்றே எண்ணலாம்" என்று குறிப்பிட்டிருப்பதால் இதுவே குறுந்தொகையின் முதல்பதிப்பு என்பதை உணரலாம். தம் ஆசிரியப் பணிகளுக்கிடையே எங்கு எங்கெலாம் சென்று எவ்வெவ் வகையில் சுவடிகளைப் பெற்று ஆராய்ந்தார் என்பதனை அவர்தம் பதிப்பு முன்னுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரங்கனார் திணைக் குறிப்பின்றி இருந்த இந்நூற் பாடல்களுக்குத் திணைக் குறிப்புகளை ஆராய்ந்து குறித்துள்ளார். இந்நூலுக்குப் பழைய உரை கிட்டாத நிலையில் தாமே அரிதின் முயன்று உரையும் எழுதிச் சேர்த்துள்ளார்.

"இதனைப் பலகால் முயன்று தமது கூரிய சீரிய நுட்பமதியுடன் எனது ஆருயிர் அன்பர்களாகிய ஸ்ரீமத் பண்டிதர் டி.எஸ். அரங்கசாமி அய்யங்கார் அவர்கள் தாம் இயற்றிய திணை, உள்ளுறை, இறைச்சி, மேற்கோள், இலக்கணக் குறிப்பு முதலியவற்றைக் காட்டிச் சுருங்கச் சொல்லி வியங்க வைத்தலாகிய புத்துரையுடன் ஆராய்ச்சித் திறன் கொண்ட அரும்பெரும் குறிப்புகள் பலவற்றைச் சேர்த்து அழகிய புத்தகமாகப் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார்கள்."
எனக் குறுந்தொகை முதல் பதிப்பின் முகவுரையில் மணக்கால் அய்யம் பேட்டை எஸ். முத்து ரத்திந முதலியார் அவர்கள் குறிப்பிட்டுள்ளமை பதிப்பாசிரியர் சௌரி அரங்கனாரின் பேருழைப்பையும் புலமையையும் வெளிப்படுத்திக் காட்டவல்லது. குறுந்தொகைப் பாடல்களுக்கு முதன்முதலில் திணை வகுத்துக் காட்டி, உள்ளுறை, இறைச்சி ஆகியவற்றைப் பகுத்து விளக்கிய பெருமை சௌரி அரங்கனாருக்கே உரியது.

1920 இல் கா.நமச்சிவாய முதலியார் குறுந்தொகை மூலத்தைப் பதிப்பிக்கத் தொடங்கினார் ஆனால் அம்மூலப் பதிப்பு வெளிவந்ததாகத் தெரியவில்லை.
1930 இல் டி.என்.சேஷாசல ஐயர் தாம் வெளியிட்டுவந்த 'கலாநிலையம்' வார இதழில் திரு இராமரத்தின ஐயர் எழுதிய உரையுடன் குறுந்தொகையை வெளியிட்டுவந்தார் 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் தொடங்கி வாராவாரம் வெளிவந்த இவ்வுரை அந்த ஆண்டு டிசம்பர்த் திங்களில் முற்றுப் பெற்றது. இவ்வுரை தனி நூலாக வெளிவரவில்லை. இராம ரத்தின ஐயருக்குப் பின் சாம்பசிவ சர்மா என்பவரும் ஒரு திங்களிதழில் உரை எழுதினார் அதுவும் தனிநூலாக வெளிவரவில்லை. இன்னார் உரை என்று பெயர் சுட்டாமல் இவ்விரு உரைகள் வெளிவந்ததைக் குறிப்பிடுகிறார் உ.வே.சா. தம் குறுந்தொகைப் பதிப்பு முன்னுரையில்.

1933 இல் அருணாசல தேசிகர் குறுந்தொகை மூலம் மாத்திரம் கொண்ட பதிப்பு ஒன்றை வெளியிட்டார். சென்னை பி.என். அச்சகத்தில் அச்சிடப்பட்ட அந்நூல் விலை ரூ.1.00 க்கு விற்கப்பட்டுள்ளது. இப்பதிப்பில் சுவடிகள் ஒப்பிட்டு மூலபாடம் செம்மை செய்யப் பெற்றுள்ளது.

உ.வே.சாமிநாதய்யர் பதிப்பு:

1937 இல் உ.வே.சாமிநாதய்யரின் விளக்கவுரையுடன் கூடிய குறுந்தொகை ஆராய்ச்சிப் பதிப்பு வெளிவந்தது. குறுந்தொகையின் பெருமையை உலகுக்குப் பறைசாற்றிய பெருமை இப்பதிப்பிற்கே உரியது. இப்பதிப்பில் உ.வே.சா அவர்கள் கூற்று, கூற்று விளக்கம், மூலம், பிரதிபேதம், பழைய கருத்து. ஆசிரியர் பெயர், பதவுரை, முடிபு, கருத்து, விசேடவுரை, மேற்கோளாட்சி, ஒப்புமைப் பகுதி எனப் பன்னிரண்டு கூறாகப் பகுத்துக் கொண்டு ஒவ்வொரு பாடலுக்கும் விளக்கமான உரை எழுதியுள்ளார்கள்.

சங்கநூல் வெளியீட்டில் உ.வே.சா அவர்களால் இறுதியாக வெளியிடப் பெற்றது இக் குறுந்தொகை உரைநூல். தாம்பெற்ற பெரும் பயிற்சியால் சுவடிகளை ஆராய்ந்து ஒப்புமைப் பகுதிகள், மேற்கோளாட்சிகள், என்று இன்னோரன்னவற்றைத் தொகுத்து ஒப்புநோக்கி உரை வரைந்துள்ளமை இப்பதிப்பின் தனிச்சிறப்பாகும். நூலின் முகப்பில் விரிவான முகவுரை அமைந்திருப்பதோடு நூலாராய்ச்சி என்னும் ஆய்வுப் பகுதி ஒன்றும் இதில் உள்ளது. பாடினோர், பாடப்பட்டோர் அகரவரிசை, அரும்பதம் முதலியவற்றின் அகராதி முதலியனவும் இதன் சிறப்பு அங்கங்களாகும். பதிப்பு, உரை வரலாற்றில் இக் குறுந்தொகை பதிப்பு ஒரு திருப்புமுனையாகும்.

ஒவ்வொரு செய்யுளுக்குமான உயிர்நிலைப் பொருளைத் தெரிவிக்கும் சிறுகுறிப்புகள் சங்க இலக்கிய ஏடுகளில் இடம்பெறும். இதனைப் பழங்குறிப்பு என்று குறிப்பிடுவர். பழங்குறிப்புகளைப் பாடலை அடுத்துத் தந்து, பாடிய புலவர் பெயரைத் தருவது ஏடுகளில் காணப்படும் முறையாகும். இம்முறை சோ.அருணாசல தேசிகர் பதிப்பு, உ.வே.சா. பதிப்பு ஆகியவற்றில் இடம்பெறுகின்றது.

பிற பதிப்புகள்:

1940 இல் சங்க இலக்கிய மூலங்களைத் தொகுத்துப் புலவர் பெயரடைவு அடிப்படையில் சைவசித்தாந்த சமாஜப் பதிப்பாக வெளியிட்டார் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை. சங்க இலக்கியப் பதிப்பு வரலாற்றில் இடம்பெற்ற இப்பதிப்பு, மூல பாடத்தில் மேலும் சில திருத்தங்களைக் கொண்டமைந்த செம்பதிப்பாகும். இப்பதிப்பு உ.வே.சா. பதிப்பிலிருந்து மாறுபட்டு 234 புதிய பாடங்களைக் கொண்டுள்ளது எனக் கணக்கிட்டுள்ளார் மு.சண்முகம் பிள்ளை.

1946 இல் குறுந்தொகை விளக்கம் என்ற பெயரில் கடவுள் வாழ்த்து முதல் 111 ஆம் பாடல் வரையிலான ரா.இராகவய்யங்கார் உரையை அவருடைய மறைவுக்குப் பின் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டது. 1993 இல் குறுந்தொகை முழுவதற்குமான ரா.இராகவய்யங்கார் உரையை அவருடைய பெயரர் விசயராகவனிடமிருந்து பெற்று அப்பல்கலைக் கழகமே வெளியிட்டது. மூலபாட ஆய்வு, சொற்பொருள் காணல் ஆகிய நிலைகளில் முற்பதிப்புகளை விடவும் சீரிய திறனாய்வுப் பதிப்பாக அது விளங்குகிறது. அதனுள்ளும் 346 முதல் 351 வரையுள்ள பாடல்கள் மற்றும் 353 ஆம் பாடல் ஆகிய ஏழு பாடல்களுக்கு அவரது உரை கிடைக்காமையால் உ.வே.சா. உரை இட்டு நிரப்பப்பட்டுள்ளது.

1955 இல் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் பொ.வே. சோமசுந்தரனாரின் குறுந்தொகை உரையை வெளியிட்டது. இப்பதிப்பில் உ.வே.சா. உரையை ஒட்டியே உரை எழுதப்பட்டுள்ளது.

1957 இல் மர்ரே எஸ்.இராஜம் குறுந்தொகை மூலத்தைப் பதிப்பித்தார். யாவரும் எளிதில் படித்துணரும் வகையில் பாடல்களைச் சந்தி பிரித்துத் தந்திருப்பது இதன் சிறப்பாகும். அரங்கனாரைப் பின்பற்றித் திணையைப் பாடல் தலைப்பாகத் தந்துள்ளார். இதன் மறுபதிப்பை 1983 இல் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் வெளியிட்டது.

சக்திதாசன் சுப்பிரமணியன் எழுதிய உரையைக் குறுந்தொகைக் காட்சிகள் என்ற பெயரில் 1958 இல் முல்லை முத்தையா வெளியிட்டார், அதன் இரண்டாம் பதிப்பை 1967 இல் பாரதி பதிப்பகம் வெளியிட்டது. 1965 இல் புலியூர் கேசிகனின் எளிய தெளிவுரையைக் கொண்ட குறுந்தொகைப் பதிப்பு வெளிவந்தது. அதனுள் பாட்டின் நறுந்தொடர் தலைப்பாக இடப்பெற்றுள்ளது.

1955 முதல் 1958 வரை சிங்கப்பூர் தமிழ்முரசு இதழில் வெளிவந்த சாமி. சிதம்பரனாரின் உரையை, அவருடைய துணைவியார் குறுந்தொகைப் பெருஞ்செல்வம் என்ற பெயரில் இலக்கிய நிலையப் பதிப்பாக வெளியிட்டார். இப்பதிப்பில் 41 பாடல்களுக்கான உரை இடம்பெறவில்லை.

1985 இல் மு.சண்முகம் பிள்ளை எழுதிய குறுந்தொகை உரை தமிழ்ப் பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்டது. பாடலின் திணையையும் இன்னார் கூற்று என்பதனையும் இணைத்துப் பாடல்களுக்குத் தலைப்பிட்டிருப்பதும் புதிய பாடம் கொள்ளுமிடத்து அதற்கான காரணங்களை விளக்கியிருப்பதும் பாடவேறுபாடு ஒப்பு நோக்கு அட்டவணை, குறுந்தொகைத் தொடரடைவு ஆகியவற்றைப் பின்னிணைப்பாகத் தந்திருப்பதும் இப்பதிப்பின் தனிச்சிறப்புகளாகும்.

1986 இல் மணிமேகலைப் பிரசுர ஆசிரியர் குழு செய்த எளிய தெளிவுரையோடு குறுந்தொகையை லேனா.தமிழ்வாணன் பதிப்பித்துள்ளார். 1999இல் வர்த்தமானன் பதிப்பகம் சங்க இலக்கியங்களை உரையுடன் மலிவுப் பதிப்பாக வெளியிட்டது. அவற்றுள் குறுந்தொகை இரா. பிரேமா அவர்களின் தெளிவுரையோடு பதிப்பிக்கக் பட்டிருந்தது.

முழுமை நிலையில் அமைந்த இப்பதிப்புகளைத் தவிர தேர்ந்தெடுத்த பாடல்களுக்கு மு.வ.வின் 'குறுந்தொகை விருந்து', 'குறுந்தொகைச் செல்வம்', 'கொங்குதேர் வாழ்க்கை', சுருளியாண்டிப் பாவலர் எழுதிய 'குறுந்தொகை விருந்து', மு.ரா.பெருமாளின் 'எளிய சொற்களில் இனிய குறுந்தொகை' போன்ற நூல்களும் வெளிவந்துள்ளன.

பதிப்புப் பார்வை:

திணை பற்றிய பாகுபாட்டுக் குறிப்பு அகநானூறு, ஐங்குறுநூறு முதலியவற்றில் இடம்பெற்றுள்ளமை போலக் குறுந்தொகை, நற்றிணை நூல்களுக்குப் பழமையானதாக இல்லை. இவ்விரு நூல்களையும் முதன்முதலில் பதிப்பித்த பதிப்பாசிரியர்கள்தாம் பாடலின்கண் அமைந்த முதல், கரு, உரிப்பொருள்களைக் கருத்தில் கொண்டு திணைப் பாகுபாட்டுக் குறிப்புகளைத் தந்துள்ளார்கள். உ.வே.சாமிநாதய்யர் அவர்கள் இப்பாகுபாட்டைக் கொள்ளாது கூற்றுவகைப் பெயர்களைத் தலைப்பாகத் தந்து பதிப்பித்துள்ளார். உ.வே.சா. கூற்றுவகையில் பாடல்களுக்குத் தலைப்பிட்டுப் பதிப்பித்தமை ஒரு புதிய முயற்சியே. மு.சண்முகம் பிள்ளை அவர்கள் தம் பதிப்பில் |அகப்பாடல்கள் ஐந்திணைக் கூறுபாடு உடையவாதலின் திணைக்குறிப்பும் ஐயரவர்கள் சுட்டுவதுபோலக் கூற்றுவகைக் குறிப்பும் இப்பதிப்பில் தரப்பட்டுள்ளன| என்று தம் முகவுரையில் குறிப்பிடுவார். திணையும் கூற்றும் தலைப்பில் இடம்பெறும் வகையில் அமைந்த மு.சண்முகம் பிள்ளை பதிப்பு மிகுந்த பயனுடையதாய் அமைந்துள்ளது.

தி.சௌரிப்பெருமாள் அரங்கனாரே குறுந்தொகையின் முதல் பதிப்பாசிரியரும் முதல் உரைகாரரும் ஆவார். குறுந்தொகைப் பதிப்பு வரலாற்றில் தனியிடம் பெறத்தக்க செம்பதிப்பு என்று குறிப்பிடத்தக்க பெருமைக்குரிய பதிப்பு உ.வே.சாமிநாதய்யரின் பதிப்பே ஆகும். உ.வே.சா. பதிப்பிற்குப் பின்னர் வந்த பதிப்பு மற்றும் உரைகளில் குறிப்பிடத்தக்கன ரா.இராகவய்யங்காரின் பதிப்பும், மு.சண்முகம் பிள்ளை அவர்களின் பதிப்பும் ஆகும். அண்மைக்காலம்வரை தொடர்ந்து வரும் குறுந்தொகைப் பதிப்புகள் எளிமை நோக்கிய முயற்சிகளாக அமைகின்றனவே அன்றிக் குறிப்பிடத்தக்க சிறப்பொன்றுமில்லை.

ஞாயிறு, 27 செப்டம்பர், 2009

மனிதநேயக் கவிஞர் தமிழ்ஒளி - முனைவர் நா.இளங்கோ

மனிதநேயக் கவிஞர் தமிழ்ஒளி

முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி - 8.

1947 நவம்பர் 15 அன்று கவிஞர் தமிழ்ஒளி வீராயி என்ற காவியத்திற்கு எழுதிய முன்னுரையில் பின்வருமாறு எழுதுகின்றார்.
“நம் கண்ணெதிரே நம் உடன் பிறந்தவன் மாடாக உழைத்து ஓடாகத் தேய்ந்து போகிறான், அவன் குடும்பம் வறுமைப் படுகுழியில் வீழ்ந்து கதறுகிறது. இதைக்கண்டு மனமிரங்காமல் மரத்துப் போன நெஞ்சுடன் உலாவும் மானிடப் பிண்டங்களின் உடலில் சுரீர் சுரீர் என்று தைக்கும்படி எழுதுவதுதான் உண்மை எழுத்தாளனின் கடமையும் நோக்கமும் ஆகும்.
எழுத்தாள நண்பர்களே! கற்பனையுலகைப் படைக்கும் கவிஞர்களே! நான் வீராயி மூலம் விடுக்கும் வேண்டுகோள் இதுதான், மக்களுக்காக மக்கள் உயர மக்கள் காலத்துக் கதைகளை எழுதுங்கள்"

(கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி காவியங்கள் தொகுதி ஒன்று, பக். 129-130)

கவிஞர் தமிழ்ஒளி எழுத்தாள நண்பர்களுக்கு விடுத்த வேண்டுகோளுக்குத் தாமே ஒரு முன்னுதாரணமாகத் தம் படைப்புகளைப் படைத்துக் காட்டினார். தமிழ்க் கவிதையுலகில் தமிழ்ஒளி போல் மனித நேய மிக்க படைப்பாளிகள் தோன்றுவது அபூர்வம். கவிஞரின் மனித நேயம் ஒடுக்கப்பட்டவர்கள் மீதான நேயமாக உருவம் கொண்டது. சமூகத்தில் பொதுவான மனித நேயம் பேசும் படைப்பாளிகள் பலருண்டு. ஆனால் சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழ்ந்து கொண்டு அன்றாட வயிற்றுப் பாட்டுக்கே அல்லல்படும் ஏழை எளிய மக்களின் வாழ்வைக் கூர்ந்து நோக்கித் தம் எழுத்துக்களால் அவர்கள் படும் துயரங்களைப் படம் பிடித்ததோடு மட்டுமில்லாமல் அவர்களின் துயர் நீக்கும் வழிகளையும் தெளிவுபடுத்திப் படைப்புலகில் தமக்கென ஒரு தனியிடம் பெற்றவர் கவிஞர் தமிழ்ஒளியே.

தமிழ்ஒளி இந்தியச் சமுதாயத்தைக் கட்டிப் போட்டிருக்கும் சாதி மதக் கோட்பாடுகளையும் சுரண்டல் கொள்கைகளையும் ஆணி வேரோடு பிடுங்கி எறியும் வல்லமை தொழிலாளி வர்க்கத்துக்கே உண்டு என்பதை உணர்ந்தார். அதனால்தான் தொழிலாளி வர்க்கத்தின் பல்வேறு பிரிவினரையும் வர்க்க அமைப்புகளில் ஒன்று திரட்டும் பணியைத் தம் கவிதைகளில் பாராட்டினார். துணைநின்றார். தொழிலாளர் சங்கங்களையும், துறைமுகத் தொழிலாளி, டிராம்வேத் தொழிலாளி, சலவைத் தொழிலாளி, நகர சுத்தித் தொழிலாளி எனச் சங்கம் வைத்துப் போராடத்தொடங்கிய அனைத்து உழைக்கம் மக்களையும் பாராட்டிக் கவிதை புனைந்தார். சென்னைத் துறைமுகத் தொழிலாளர் சங்கத்தோடு நேரடியாகத் தொடர்பு கொண்டிருந்தார்.
உலகத் தொழலாளர்களின் உரிமைத் தினமான மே தினத்தைப் பற்றி முதன் முதல் தமிழில் பாடிய கவிஞன் தமிழ்ஒளியே ஆவார்.

தமிழ்ஒளியின் மனித நேயம் எப்படிப்பட்டது?

எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துவது ஒருவகை மனித நேயம். சமூகத்தின் விளிம்பு நிலையில், வாழ்க்கையே போராட்டமாய்ச் சமூக ரீதியாகச் சாதிஎ ன்ற பேரிலும் வர்க்க ரீதியாக தொழிலாளி என்ற நிலையிலும் சுரண்டப்படும் உழைக்கும் மக்கள் மீதான மனித நேயம் மற்றொரு வகை. எல்லா மனிதர்களிடத்தும் பேசும் அன்பும் மனித நேயமும் சமூகத்தின் கடைசிச் குடிமகன் வரைத் தன் கரங்களை நீட்டுவதில்லை. உயர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரோடு அந்த வகை மனித நேயம் நின்று விடுகிறது.

தமிழ்ஒளிக்குமுன் கவிதை படைத்த எத்தனையோ கவிஞர்கள் அன்பையும் அருளையும் பேசியிருக்கிறார்கள். சாக்கடை சுத்தம் செய்யும் தொழிலாளியின் அவலம், கழைக்கூத்தாடியின் துயரம் மற்றும் இன்னபிற கடைக்கோடி மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டங்கள் அவர்களைப் பாதித்திருக்கின்றனவா? இல்லையே, அதனால்தான் கவிஞர் தே.ப.பெருமாள் தமிழ்ஒளியைப் புகழ்ந்து கவிதை பாடும்பொழுது,

“ஏழை நெடுந்துயரை ஏய்ப்பவரின் சூழ்ச்சியினை
ஊழல் சமுதாய ஊனத்தைப் பாழாக்கும்
கீழ்மேல் பிரிவினையைக் கேடளிக்கும் பேதத்தை
வீழ்த்தக் கவிசெய்தான் வேந்து”

(கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி கவிதைகள், தொகுதி 1,ப.154)

என்று அவரின் உண்மையான மனித நேயப் பண்பினை விதந்து பேசுகின்றார்.
எல்லாக் கவிஞர்களும் பூத்துக் காய்த்துக் குலுங்கும் மரத்தை, அதன் அழகை வியந்து பாடுவார்கள். தமிழ்ஒளி,

“குந்த நிழல்தரக் கந்த மலர்தரக் கூரை விரித்தஇலை!
வெந்து கருகிட இந்த நிறம்வர வெம்பிக் குமைந்தனையோ?
கட்டை எனும்பெயர் உற்றுக் கொடுந்துயர் பட்டுக் கருகினையே!
பட்டை எனும்உடை இற்றுக் கிழிந்தெழில் முற்றும் இழந்தனையே!”

(கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி கவிதைகள், தொகுதி 1,ப.57)

என்று வெந்து கருகிப் பட்டைகள் உரிந்து பட்டுப்போய் நிற்கும் மரத்தைப் பரிவோடு பாடும் தமிழ்ஒளியின் கவிதையில் தெரியும் மனித நேயம் வியப்புக் குரியதல்லவா?

இயற்கையைப் பாடும் கவிஞர்கள்

இயற்கையைப் பாடாத கவிஞர்களே இல்லை. இயற்கையைப் பாடும்போது உழைக்கும் மக்களை நினைக்கும் கவிஞர்கள் மிகச் சிலரே. இந்த மிகச் சிலரிலும் கவிஞர் தமிழ்ஒளி எப்படி வேறுபட்டுத் தம் மனித நேயத்தை வெளிப்படுத்துகின்றார் என்பதைக் காணலாம்.

“கருணையில்லார்-மிதிக்கின்றார் ஏழைகளை
இரவெனும் தாய்
மீட்சி தந்தாள் ஏழை மக்களுக்கே!
தூக்கம் என்னும் -புத்தமுதப் பால் சுரந்து பருக வைத்தாள்"

(கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி கவிதைகள், தொகுதி 1,ப.15)

இரவையும் இருட்டையும் பாடும் போதெல்லாம் கவிஞர்களுக்கு வேறு ஏதேதோ நினைவுக்கு வரும். ஆனால் கவிஞர் தமிழ்ஒளிக்கு, உழைப்பவர்களின் உழைத்த உடல்வலி நீங்க இரவு என்னும் தாய் தூக்கம் என்னும் புத்தமுதப்பால் கொடுத்து உறங்க வைப்பதாகத் தோன்றுகிறது.

“நெடுந்தறியோடு ஆலையிலே உழன்றோர் தாமும்
நெருப்புருவாய் உலையருகே- இருந்தோர் தாமும்
கொடுந்துன்பச் சேற்றினிலே உழன்றோர் தாமும்
கொளுத்தும் வெயிலில் வாடிக் கிடந்தோர் தாமும்
படுந்துயரம் போதும் எனக் கதறும் போதில்
பறந்தோடி வந்தாய் நீ இரவே"

(கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி கவிதைகள், தொகுதி 1,ப.15)

என்று இரவை மனித நேயத்தோடு இணைத்துப் பாடுகிறார்.

தொழிலாளியின் மாளிகை

துறைமுகத் தொழிலாளர்களின் அவலம் மிக்க வாழ்க்கையைப் படம் பிடிக்கும் கவிஞர் தமிழ்ஒளி, அவர்களின் குடும்பம் வாழ்ந்து வரும் இருப்பிடத்தை வருணிக்கும் பாடலில்,

“இநத்ப் பெரும்குடும்பம் என்றும் வசித்துவர
கந்தல் படுதாவில் கட்டியதோர் மாளிகையாம்
கோணி அதன்மேலே கூரை பழந்தகரம்
தூணோ சிறுகொம்பு தொட்டில் பழங்கந்தை"

(கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி கவிதைகள், தொகுதி 1,ப.27)

‘கந்தல் படுதாவில் கட்டிய மாளிகை’ என அவர்களின் வீட்டைக் குறிப்பிடும் பகுதி சோக உணர்வின் படப்பிடிப்பாக இருப்பதை உணரமுடியும். இப்படித் தெருவோர, சாக்கடையோரப் பகுதிகளில் குடியிருக்கும் இலட்சக் கணக்கான இந்தியக் குடிமக்களைப் பற்றி நினைத்துப் பார்த்து அவர்களின் வேதனைகளைப் பதிவும் செய்யும் படைப்பாளிகள் தமிழ்ஒளியைப் போன்ற ஒரு சிலரே என்பதை உணர்தல்வேண்டும்.

பேதைச் சமூகம்

கழைக் கூத்தாடிகளின் சோகம் மிகுந்த வாழ்க்கையைப் பாடும் கவிஞர் தமிழ்ஒளி அவர்களின் குழந்தைகள் செய்யும் ஆபத்து மிக்க வித்தைகளைக் கணகலங்கிப் பாடுகின்றார்.

“உச்சியில ஒரு சின்னக்கம்பி-அதில்
ஒட்டிய வட்டத் தகரத்திலே
குச்சி உடலொன்று சுற்றுதையா-விசை
கொஞ்சம் தவறிடில் மிஞ்சிடுமோ?"

(கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி கவிதைகள், தொகுதி 1,ப.23)

பேதைச் சுமூகம், அறிவற்ற சமூகம், இரக்கமற்ற சமூகம் என்றெல்லாம் இந்தச் சமூகத்தைச் சாடுவதன் வழியாகத் தம் மனித நேயத்தை வெளிப்படுத்துகின்றார் கவிஞர்.

அறிவியலின் மேன்மை

கவிஞர் தமிழ்ஒளி விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை அவலங்களை மனித நேய உணர்வோடு பாடித் தம் மனித நேயத்தைக் கட்டமைக்கின்றார். அவலங்களைப் பாடுவதும் கண்ணீர் விடுவதும் மட்டுமே மனித நேயமாகுமா? ஆகாது. அவர்கள் துயர் நீக்க என்ன வழி என்று இனங்காட்டுவதே உண்மையான மனித நேயமாகும். எனவேதான் கவிஞர் தமிழ்ஒளி அணுவின் ஆற்றலை வியந்து பாடும் சூழலில் அறிவியல் வளர்ச்சியால், அறிவியலின் ஆற்றலால், உலகில் ‘யந்திரம் கொக்கரிக்க ஆலைகள் தாம் சிரிக்க எந்திரத்தாலே உலாம் நடக்கும் எங்கெங்கும்’ என்று மகிழ்வதோடு,

“கையுழைப்பும் கால் உழைப்பும் காட்டடிமை போல் உழைத்த
மேய்யுழைப்பும் போயொழிய விஞ்ஞானப் பேரொளியால்
வேலைகுறைய விருப்பம் நிறைவெய்த
ஆணும் பேண்ணும் அன்றே சமத்துவமாய்....
விஞ்ஞானப் பூங்கா விரித்த மலர்களாய்
அஞ்ஞானம் நீக்கி அடிமைத்தளை போக்கி....
சூரிய நன்மை சுடர்க பொதுவுடைமை
வாழிய வையம் வளர்க அணுவாற்றல்"

(கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி கவிதைகள், தொகுதி 1,ப.94)

என்றெல்லாம் அறிவியல் யுகத்தில் ஏற்படப் போகும் மாற்றங்களைப் பட்டியல் இடுவதோடு, அறிவியலை அணுவாற்றலை வாழ்த்தவும் செய்கின்றார்.
அறிவியல் வளர்ச்சியால் அறியாமை நீங்கும், அறியாமை நீங்கினால் அறிவு ஓங்கும், அறிவு ஓங்கப் பொதுவுடைமை மலரும், பொதுவுடைமைச் சமூகத்தில் வறுமை ஒழியும், சமத்துவச் சமூகத்தில்,

“உழுபவனே நிலத்திற்குச் சொந்தக்காரன்!
உழைப்பவனே தேசத்தின் உரிமையாளன்!"


(கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி கவிதைகள், தொகுதி 2,ப.37)
என்ற விபரம் பிறக்கும் இது கவிஞர் தமிழ்ஒளி அவர்களின் நம்பிக்கை.

வியாழன், 24 செப்டம்பர், 2009

சிங்கப்பூர் ஆர்கிட் மலர்களின் காதலன் - முனைவர் நா.இளங்கோ

சிங்கப்பூர் ஆர்கிட் மலர்களின் காதலன் - முனைவர் நா.இளங்கோ

சிங்கப்பூருக்கு அழகே அதன் நெடிதுயர்ந்த கட்டிடங்கள்தான் என்று சொல்லுவார் உண்டு. சிங்கையில் எனக்கு மிகவும் பிடித்த இடங்கள் இரண்டு. 1. சிங்கப்பூர் தேசிய தாவரவியல் பூங்காவில் ஆர்கிட் தோட்டம். 2.ஜ+ராங் பறவைகள் சரணாலயம்.

ஆர்கிட் மலர்களுக்கு இணை ஆர்கிட் மலர்கள்தான். எத்துணை வண்ணங்கள், எத்துணை வடிவங்கள். பாவேந்தர் சொன்ன அழகின் சிரிப்பை ஆர்கிட் மலர்களில்தான் நான் காணுகிறேன். உலகின் சிறந்த ஆர்கிட் தோட்டம் சிங்கப்பூர் தேசிய பூங்காவில் அமைந்துள்ளது. கடந்த 2009 செப்டம்பர் 14 ஆம் தேதி ஆர்கிட் தோட்டத்தின் அழகில் மயங்கி நான் எடுத்த புகைப்படங்கில் சிலவற்றை உங்கள் பார்வைக்கும் தருகிறேன்.


















சிங்கப்பூர் பாரதி விழாவில் இலக்கியச் செம்மல் விருது





சிங்கப்பூர் பாரதி இலக்கிய விழாவில்
பேராசிரியர் நா.இளங்கோவுக்கு இலக்கியச் செம்மல் விருது.


சிங்கப்பூர் இலக்கிய ஆர்வலர்கள் ஒருங்கிணைந்து நடத்திய மகாகவி பாரதி விழா 11-09-2009 ஞாயிறன்று சிங்கப்பூர் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய மாநாட்டரங்கில் உரையரங்கம், கவியரங்கம், வழக்காடுமன்றம், சிறப்புப் பேருரை, விருது வழங்கல், ஆடல்- பாடல் அரங்கம் எனப் பல்சுவை அங்கங்களோடு முத்தமிழ் விழாவாகக் கோலாகலமாக நடைபெற்றது.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக ஆசிய இயல் துறைத்தலைவர் முனைவர் சுப. திண்ணப்பன் தலைமையில் புதுவைச் சமுதாயக் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் அரங்க மு.முருகையன் “நாட்டுப்புறப் பாடல்களே பாரதியின் பாடலுக்கு ஆதாரம்” என்ற பொருளில் உரையாற்றி விழாவைத் தொடங்கிவைத்தார். தொடக்க விழாவைத் தொடர்ந்து ‘பாரதியை நினைப்போம்’ என்ற தலைப்பில் உரையரங்கமும் ‘யாதுமாகி நின்றாய் பாரதி’ என்ற தலைப்பில் கவியரங்கமும் நடைபெற்றன.

நிறைவு அரங்கமாக மூத்த பத்திரிக்கையாளர் சொற்சித்தர் வே. புருஷோத்தமன் தலைமையில் பேராசிரியர் முனைவர் நா.இளங்கோவின் நிறைவுப் பேருரையும் “மகாகவி பாரதியின் கனவுகள் இன்றளவும் நனவாகவில்லை” என்ற தலைப்பில் வழக்காடு மன்றமும் நடைபெற்றன. புதுவைக் காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையப் பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ வழக்காடு மன்ற நடுவராகப் பொறுப்பேற்றார். பாரதியின் கனவுகள் நனவாகவில்லை என ஸ்டாலின் போஸ் வழக்குத் தொடுக்க முனைவர் இரத்தின வேங்கடேசன் வழக்கை மறுத்து எதிர் வழக்காடினார்.

விருதளிப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் பேராசிரியர் முனைவர் நா. இளங்கோவிற்கு அவரின் இருபத்தைந்து ஆண்டுகால இலக்கியப் பணியினைப் பாராட்டிச் சிங்கப்பூர் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் இலக்கியச் செம்மல் என்ற விருது வழங்கிச் சிறப்பித்தனர். சொற்சித்தர் வே.புருஷோத்தமன் இலக்கிய ஆர்வலர்கள் சார்பில் சிறப்பு விருந்தினருக்குப் பொன்னாடைப் போர்த்தி விருது வழங்கி கௌரவித்தர். கவிஞர் இறை.மதியழகன் நிறைவுப் பேருரைஞரை அறிமுகம் செய்துவைத்தார். நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்து நடத்திய முனைவர் இரத்தின. வேங்கடேசன் நன்றி கூறினார்.

வியாழன், 17 செப்டம்பர், 2009

சனியன் பெட்டி - மலையருவி

சனியன் பெட்டி

முனைவர் நா.இளங்கோ


மிகுந்த தயக்கத்தோடே... அந்த வீட்டை நெருங்கினேன். கேட்டைத் திறந்து அழைப்பு மணியைத் தேடினேன். சற்று உள்ளடங்கியிருந்தது. அழுத்தினேன். அழைப்பு மணிச்சத்தம் உள்ளே கேட்டதா? ஏன்பதை யூகிக்க முடியவில்லை. சில நிமிடக் காத்திருப்புக்குப் பின் யாரும் வராததால் உள்கேட்டைத் திறந்துகொண்டு தயங்கித் தயங்கி உள்ளே எட்டிப் பார்த்தேன்.

ஹாலில் சிலர் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. சன்னமான அழுகையொலியை மட்டும் கேட்க முடிந்தது. என்னுடைய வருகையைக் கவனித்தது போல் சிலர் லேசாக அசைந்து கொடுத்தார்கள். ஆனால் அவர்கள் முகங்கள் இருளடைந்ததைப் போல் இருந்ததால் முகத்தில் அவர்கள் என்ன உணர்ச்சியை வெளிப்படுத்தியிருப்பார்கள் என்று எனக்குச் சரியாக விளங்கவில்லை.

யாருடைய வார்த்தைக்கும் காத்திராமல் ஹாலின் ஓரத்தில் இருந்த நாற்காலியில் பவ்வியமாக உட்கார்ந்தேன். நான் நாற்காலியை இழுக்கும் ஓசைகூட அந்தச் சூழலுக்கு இடையூறாக இருக்கலாம் என்ற பயத்தில் மிக மெதுவாக நாற்காலியை இழுத்து உட்காரும் ஓசைகூட கேட்காத வகையில் மென்மையாக உட்கார்ந்தேன்.

ஹாலின் ஒரு மூலையில் அது இருந்தது.

சுற்றும் முற்றும் பார்த்தேன். இப்பொழுது எல்லோர் முகங்களையும் தெளிவாகப் பார்க்க முடிந்தது. ஒருவர் முகம் பேயறைந்ததைப் போலிருந்தது. முற்றொருவர் இலேசாக அழுதுகொண்டிருந்தார். மற்றொருத்தி கண்ணீரை வெளிப்படுத்தாமல் சேலைத் தலைப்பால் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டாள். மற்றும் ஒருவர் பொங்கிவரும் அழுகையைத் தவிர்ப்பதற்காக முகத்தை மேல்நோக்கி உயர்த்தி அப்படியும் இப்படியுமாக முகத்தால் ஒரு அரைவட்டமடித்தார்.

மூலையிலிருந்து இரண்டு பெண்கள் தேம்பித் தேம்பி அழும் ஓசை அந்த அறை முழுவதும் வியாபித்து ஒரு இருக்கமான சூழலை உண்டாக்கியிருந்தது. எனக்கு அழுகை வரவில்லை. இப்படி ஒரு கல் நெஞ்சா நமக்கு. இத்தனைபேரின் சோகத்தில் பங்கெடுக்க முடியவில்லையே என்று ஒரு கணம் சிந்தித்தேன். ஒரு நொடியில் அந்த சிந்தனை மறைந்து லேசான சிரிப்பு தோன்றியது. ஏங்கே அந்தச் சிரிப்பு வெளிப்படையாகப் பிறருக்குத் தெரிந்துவிடுமோ? என்ற பயத்தில் சட்டென்று முகத்தை இருக்கமாக்கிக் கொண்டேன்.

நீண்ட நேர அழுகை மற்றும் சோகத்திற்குப் பின்னர் அங்கே ஒரு மயான அமைதி நிலவியது. உறைந்துபோன முகங்களுக்கு மீண்டும் உயிர்வந்ததைப் போலிருந்தது. லேசான அமைதியும் அதைத் தொடர்ந்து சலசலப்புமானது அந்த அறை. இப்பொழுது எல்லோரும் என்னைக் கவனிக்க ஆரம்பித்தார்கள்.

அப்போழுது ஒருகுரல் ‘சரி சரி முடிஞ்சது, அடுத்து நியூஸ் போடப்போறான் டிவிய நிறுத்துங்கப்பா’.

வியாழன், 10 செப்டம்பர், 2009

சிங்கப்பூர் பாரதி விழா அழைப்பிதழ் - முனைவர் நா.இளங்கோ

சிங்கப்பூர் பாரதி விழா அழைப்பிதழ்

நிகழ் நிரல்

பெரிதுபடுத்திப் பார்க்கம் (ZOOM)



அழைப்பிதழ் மேலட்டை


பெரிதுபடுத்திப் பார்க்கம் (ZOOM)

சிங்கப்பூரில் பாரதி விழா 13-9-2009

சிங்கப்பூரில் பாரதி விழா 13-9-2009

பாரதி 127
(இலக்கிய விழா)
பேரன்புடையீர் வணக்கம்!
எதிர்வரும் 2009 செப்டம்பர் 13 ஆம் நாள் மகாகவி பாரதியின் நினைவு நாளினை நினைவு கூர்ந்திட இலக்கியவிழா ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்விழா பிற்பகல் நேர விழாவாகத் துவங்கி மாலையில் இனிதே நிறைவுறும். விழாவில் சிங்கையின் கவிஞர்கள் அறிஞர் பெருமக்கள் பத்திரிக்கையாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கவும் தமிழக அறிஞர்கள் விழா தொடக்க, நிறைவுப் பேருரையாற்றவும் இருக்கிறார்கள். நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு மாபெரும் கவிஞரின் நினைவினைப் போற்றி அவர்தம் கவி வரிகளைச் சிந்திப்போம் வாரீரென அன்புடன் அழைக்கின்றோம்.
-இலக்கிய ஆர்வலர்கள், சிங்கப்பூர்



நாள் : 13 செப்டம்பர் 2009
நேரம் : பிற்பகல் 2.30 மணியளவில்
நிகழிடம் : உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம்
(மாநாட்டு அறை)
450, விக்டோரியா சாலை
சிங்கப்பூர்

தமிழ்ச்சுவைப் பருக! தவறாது வருக!!

நிகழ்நிரல்

தமிழ் வாழ்த்து : திருமதி கலையரசி செந்தில்குமார்

நாட்டியம் : செல்வி மீனலோச்சனி
(மெக்பர்சன் உயர்நிலைப் பள்ளி)

மலரஞ்சலி : ஆர்வலர்கள் / அறிஞர் பெருமக்கள்

வரவேற்புரை : பரவை செந்தில்குமார்

தலைமை : பேரா. முனைவர் சுப திண்ணப்பனார்

முன்னிலை : ஆசியான் கவிஞர் க து மு இக்பால்
தொடக்கவுரைஞர் : பேரா. முனைவர் அரங்க மு முருகையன்
சமுதாயக் கல்லூரி, புதுவைப் பல்கலைக் கழகம்
“நாட்டுப்புறப்பாடல்களே பாரதியின் பாடல்களுக்கு ஆதாரம்”

தொடக்கவுரைஞர் அறிமுகம் : கவிஞர் சு உஷா

"பாரதியை நினைப்போம்"

பாரதியின் மொழி : கவிமாமணி மா அன்பழகன்

பாரதியின் பெண் : திரு ஜோதி மாணிக்கவாசகம்

பாரதியின் ஊடகம் : திரு செ பா பன்னீர்செல்வம்

"கவியரங்கம்"

"யாதுமாகி நின்றாய் பாரதி”

தலைமை : 'தமிழவேள் கொண்டான்' கவிஞரேறு அமலதாசன்

பாரதி என் தோழன் : கவிதைநதி ந.வீ.விசயபாரதி

பாரதி என் குழந்தை : கவிஞர் இன்பா

பாரதி என் தெய்வம் : கவிஞர் வேள்பாரி

பாரதி என் ஆசான் : கவிஞர் பாலு மணிமாறன்

பாரதி என் காதலி : கவிஞர் சாந்தி உடையப்பன்

பாரதி என் சேவகன் : கவிஞர். இராம வைரவன்

நடனம் : ஈஸ்ட் வீயு உயர்நிலைப் பள்ளி மாணவியர்



"வழக்காடு மன்றம்"

"மகாகவி பாரதியின் கனவுகள் இன்றளவும் நனவாகவில்லை"

நடுவர் : இலக்கியச் செம்மல் பேரா. முனைவர் நா.இளங்கோ

வழக்குத் தொடுப்பவர்: சிந்தனைச் செல்வர் ஸ்டாலின் போஸ்

வழக்கு மறுப்பவர் : சொல்லின் செல்வர் முனைவர் இரத்தின வேங்கடேசன்

"நிறைவுப்பேருரை"

தலைமை : சொற்சித்தர் வே புருஷோத்தமன்

நிறைவுப் பேருரைஞர் : பேரா.முனைவர் நா.இளங்கோ
இணைப்பேராசிரியர், பட்டமேற்படிப்பு மையம்,
புதுவை

“பாட்டுக்கொருபுலவன் பாரதி”

நிறைவுப்பேருரைஞர் அறிமுகம் : கவிஞர் இறை மதியழகன்

நிகழ்ச்சி நெறியாளர் : கவிஞர் கோவிந்தராசு

செவ்வாய், 8 செப்டம்பர், 2009

பரிபாடல் வையைப்பாடல்களில் மகளிர் பகுதி-௧ முனைவர் நா.இளங்கோ

பரிபாடல் வையைப்பாடல்களில் மகளிர் - பகுதி-1

பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி -8.

பரிபாடல் அறிமுகம் :

சங்க இலக்கியங்களில் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகக் குறிப்பிடப்படும் பரிபாடல் எழுபது பாக்களைக் கொண்ட நூல் என அறிகிறோம்.
திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத்
தொருபாட்டு காடுகாட்கு ஒன்று- மருவினிய
வையை யிருபத்தாறு மாமதுரை நான்கென்ப
செய்யபரி பாடல் திறம்.


திருமாலுக்கு 8, செவ்வேட்கு 31, காடுகிழாட்கு 1, வையைக்கு 26, மதுரைக்கு 4, எனப் பாடல்கள் இருந்தமை அறிகிறோம். ஆனால் இப்போது கிடைப்பன மொத்தம் 22 பாடல்களே. திருமால் 6, செவ்வேள் 8, வையை 8, இவைதவிர உரைமேற்கோளால் கிடைத்த திருமால் பாடல் 1, வையை பாடல் 1 ஆக இரு முழு பாடல்களும் சில குறைப் பாடல்களும் கிடைத்துள்ளன.

பரிபாடலைப் பாடிய புலவர்கள் பதின்மூவர், அவற்றிற்கு இசை வகுத்தோர் பதின்மர். ஒவ்வொரு பாடலின் கீழும் பாடியோர் பெயர், இசை வகுத்தோரின் பெயர், பாடற்பண் ஆகியவை காணப்பெறும். பாடப்பெற்ற பண் அடிப்படையில் முதலில் பண் பாலையாழ் பின்னர் பண் நோதிறம் பின்னர் பண் காந்தாரம் என இந்நூல் தொகுக்கப் பெற்றுள்ளமையை கூர்ந்து நோக்கி உணரலாம்.

பரிபாடல்கள் குறிப்பிட்ட பண்களோடு பாடப்பட்டன எனவேதான் பரிபாடல் இசைப்பாட்டு எனும் பெயர்பெற்றது. ' இன்னியல் மாண்தேர்ச்சி இசைபரிபாடல்" என நூலின்கண் வரும்தொடரே அதன் இசைத்தன்மைக்கு அகச்சான்றாகும்.

பரிபாடலில் வையைப் பாடல்கள் :

அகத்திணைச் சூழலில் சங்க இலக்கியங்கள் புனலாட்டத்தினை விரித்துரைத்துள்ளன. தொல்காப்பியர், தலைவனும் தலைவியும் ஆற்றிலும் குளத்திலும் பொழிலிலும் தம்நாட்டு எல்லை கடந்தும் விளையாடுவதற்குரியர் என இலக்கணம் வகுத்துள்ளார்.
யாறும் குளனும் காவும் ஆடிப்
பதியிகந்து நுகர்தலும் உரிய என்ப.
(தொல். 1137)
இவ்விளையாட்டு எல்லாத்திணைக்கும் பொதுவானதே. மலைவாழ்நர் அருவியிலும் சுனையிலும் நெய்தல் திணையினர் கடலிலும் மருதத்திணையினர் ஆற்றிலும் நீராடுவதாகச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

இன்று நமக்குக் கிடைக்கின்ற வையைப் பாடல்கள் ஒன்பது (பாடல் எண்: 6, 7, 10, 11, 12, 16, 20, 22 பரிபாடல் திரட்டு 2). பெரும்பாலான வையைப்பாடல்களில் அமைப்பு
1. தொடக்கம், மழை பற்றிய செய்திகள் 2. வையை வருணனை 3. மக்களைப் பற்றிய வருணனை 4. அகப்பொருள் தழுவிய காதல் செய்திகள் 5. பாடல் முடிவு என்ற பொதுநிலையில் அமைந்துள்ளன.

வையையைப் பாடிய புலவர்கள் அனைவரும் அதன் வெள்ளக் காட்சியினை மழைப்பொழிவுடன் சேர்த்தே புனைந்துள்ளனர். பின்னர் வையையை வருணிக்கும் பாங்கில் ஆற்றுப் புதுவெள்ளத்தின் நிறம், மணம், நீரோட்டம், வையையின் பயன் எனப் பல நிலைகளில் வருணித்துள்ளனர்.

அடுத்தநிலையில் புனலாட்டில் கலந்து கொண்டோர் பற்றிய வருணனை இடம் பெறுகிறது. சிறுவர் சிறுமியர் வலியர் மெலியர் இளையர் முதியர் ஒருமை மகளிர் வரைவின் மகளிர் தோழியர் ஏவலர்கள் ஆகியோர் புனலாடச் சென்றார்கள்.
முதியர் இளையர் முகைப் பருவத்தர்
வதி மண வம்பு அலர்வாய் அவிழ்ந்தன்னார்
விரவு நரையரும் வெறு நரையோரும்
பதிவத மாதர் பரத்தையர் பாங்கர் ....
(10, 19-23)
புனலாடச் சென்றவர்கள் செய்துகொண்ட ஒப்பனைகள் அவர்கள் ஏறி வந்த ஊர்திகள் புனலாட்டுக்குக் கொண்டு சென்ற பொருள்கள் புனலாடிய திறம் புனலாட்டுக்குப்பின் செய்த செயல்கள் ஆகியன அடுத்து பேசப்படுகின்றன.

வையைப் பாடல்களின் தலையாய செய்திகளான அகப்பொருள்செய்திகள் பலநிலைகளில் அடுத்தடுத்து வருணிக்கப்படுகின்றன. இவ் அகப்பொருள் செய்திகளில் ஊடலும் கூடலும் முக்கிய இடம்பெறுகின்றன.

வையையின் சிறப்பு :

பரிபாடல் புலவர் பலர் வையை நதியினைத் தகுந்த அடைமொழிகள் பல தந்து பாராட்டியுள்ளனர். 'நறுநீர் வையை" (11, 140), பூமலி வையை (20, 11), வளங்கெழு வையை (17, 44) இவைகளின் மேலாக தமிழ் வையை (6, 90) என்று தமிழோடு இயைபுபடுத்திப் பாராட்டியுள்ளார் நல்லந்துவனார். மேலும் ''இனிய இயலின் சிறந்த தேர்ச்சி பொருந்திய பரிபாடலையுடைய நறுநீர் வையாய்""
இன்னியன் மாண்தேர்ச்சி இசை பரிபாடல்
முன்முறை செய்தவத் திம்முறை இயைந்தோம்
மறுமுறை யமையத்து மியைக
நறுநீர் வையை!
-(11, 137-140)
எனவும் வையை புகழ்துரைக்கப் பட்டுள்ளது.

வையைப்பாடல்கள் அகப்பாடல்களா? :

வையைப் பாடல்கள் எட்டும் தொகுத்தோரால் அகப்பாடல்களாகக் கருதப்பட்டு அகப்பொருள் துறைக்குறிப்பு வகுக்கப்பட்டுள்ளது. பாடுபொருள் வையை என்பதனால் வையை என்று தலைப்பு அமைத்தவர்கள், பாடலின் இடைஇடையே வரும் அகப்பொருள் செய்திகளைக் கணக்கில் கொண்டு துறை வகுத்துள்ளார்கள். தொகுத்தோரால் வகுக்கப்பட்ட துறைகள் இப்பாடல்களுக்கு முற்றும் பொருந்துவதாக அமையாதது மட்டுமின்றி தொல்காப்பிய அகப்பொருள் மரபுகளுக்கும் முரணாக அமைந்துள்ளன.

தலைவன், தலைவி, பரத்தை போன்ற அகப்பொருள் மாந்தர்களின் செயல்களும் இடம்பெறும் பாடலாக வையைப் பரிபாடல்கள் உள்ளனவே அன்றி முழுதும் அகப்பொருள் செய்திகளே பேசப்படவில்லை. சிறுவர் சிறுமியர், இளையர் முதியோர், கற்றோர் கல்லாதவர், அரசன் குடிகள் எனப் பலதிறத்து மக்களும் வையைப்பாடலில் இடம்பெறுகின்றனர்.

அகப்பொருள் மரபுக்கு மாறான நிகழ்வுகள் பலவும் அங்கே நடைபெறுகின்றன. (பரத்தை தோழி நேரடி பூசல், பரத்தை தலைவி நேரடி பூசல், பரத்தையர் அல்லாத பிற பெண்களும் மதுவுண்டு களிப்பது, தலைவி தலைவனைக் காலால் உதைப்பது, தலைவனின் பெருமைக்கு மாறானவற்றைத் தோழி உரைப்பது போன்ற பல நிகழ்வுகள்) எனவே பரிபாடல் வையைப் பாடல்களை அகப்பாடல்கள் என்பது பொருந்துமாறு இல்லை.

வையைப்பாடல்களில் மகளிர் :

பரிபாடல் வையைப் பாடல்களில் இடம்பெறும் மகளிர் பலதிறத்தவர். களவுத்தலைவி, கற்புத்தலைவி, தோழி, பரத்தையர், கண்டோர், பரத்தை இல்லத்தார், அறம்கூறும் முதுபெண்டிர் எனப் பலதிறத்துப் பெண்கள் வையைப் பாடல்களில் இடம்பெற்றுள்ளனர்.
வையைத் தலைவியர்கள் கற்புக் காலத்துப் பிறர் காணத் தலைவனோடு ஊடுகின்றனர். வாயில்கள் இல்லாமலே ஊடலைக் களைகின்றனர். தலைவனை ஊடலில் தாக்கவும் செய்கின்றனர். பரத்தையரோடு நேரடியாக வாதம் புரிகின்றனர்.
வையைத் தோழியர்கள் தலைவனை நேரடியாகப் பழிகூறி இழித்துரைக்கின்றனர். பரத்தையர்களை கடுமையான ஏசல்மொழிகளால் பழித்துரைக்கின்றனர்.
வையைப் பரத்தையர்கள் தலைவனிடம் உரிமையோடு ஊடல்கொள்கின்றார்கள். தலைவியோடு நேரடியாகப் பூசலிட்டு தம்உரிமையையும் சாதுர்யத்தையும் வெளிப்படுத்து கின்றார்கள்.
வையைப் பாடல்களில் இடம்பெறும் பிற பெண்கள் தலைவிக்கு அறிவுரை கூறுகின்றவர்களாகவும் பரத்தைக்கு அறிவுரை கூறுகின்றவர்களாகவும் தலைவி தோழி பரத்தை பூசலை விலக்குகின்றவர்களாகவும் உள்ளனர்.

பரிபாடல் வையைப்பாடல்களில் மகளிர் பகுதி-௨ -முனைவர் நா.இளங்கோ

பரிபாடல் வையைப்பாடல்களில் மகளிர் -பகுதி-2

பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி -8.

வையைப்பாடல் - ஒருபாடல் ஒருகாட்சி :

பரிபாடல் வையைப் பாடல்களில் இடம்பெறம் மகளிர் குறித்த ஆய்வுக்கு வாய்ப்பாக பரிபாடலில் இருபதாம் பாடலாக அமைந்துள்ள நல்லந்துவனாரின் பாடல் ஒன்றினைச் சிறப்பாக நோக்குவோம்.
இப்பாடலுக்கு இடப்பட்ட ''பருவ வரவின்கண் தலைமகளது ஆற்றாமை கண்டு தூதுவிடச் சென்ற பாணன் தலைமகனுக்குக் கார்ப்பருவமும் வையைநீர் விழவணியும் கூறியது" என்ற துறைக்குறிப்பு பொருந்துமாறில்லை.

புனலாட ஒரு தலைவியுடன் வந்த தோழியர் தலைவன் உடனிருப்ப தலைவியிடமிருந்து காணாமல் போனதாகக் கருதப்பட்ட வளையும் ஆரமும் கூட்டத்திலிருந்த பரத்தையொருத்தி அணிந்திருத்தலைக் கண்டனர். அதனால் இப்பரத்தை நம்தலைவியின் மாற்றாள் என எண்ணினர். அதனையறிந்து தலைவன் நாணினான். இதனை அறிந்த பரத்தை மகளிர் கூட்டத்தில் புகுந்து மறைந்தாள். தோழியர் அவளைப் பின்தொடர்ந்தனர். அதுகண்ட பரத்தை என்னை ஏன் பின்தொடர்கின்றீர்? என்று சினந்தாள். அப்போது தோழியர் பரத்தைக்குக் கூறும் மறுமொழி,
.......... ......... அமர் காமம்
மாயப்பொய் கூட்டி மயக்கும் விலைக்கணிகை
பெண்மைப் பொதுமைப் பிணையிலி ஐம்புலத்தைத்
துற்றுவ துற்றும் துணைஇதழ் வாய்த்தொட்டி

முற்றா நறுநறா மொய்புனல் அட்டிக்
காரிகை நீர்ஏர் வயல் காமக்களி நாஞ்சில்
மூரி தவிர முடுக்கு முதுசாடி

மடமதர் உண்கண் கயிறாக வைத்துத்
தடமென் தோள் தொட்டுத் தகைத்து மடவிரலால்
இட்டார்க்கு யாழ்ஆர்த்தும் பாணியில் எம்இழையைத்
தொட்டு ஆர்த்தும் இன்பத்துறைப் பொதுவி
-(20, 48-58)

என்ற வசைமொழிகள். இந்த வசைமொழிகளின் பொருள்,
''காமத்தைப் பொய்யோடு கலந்து விற்கும் கணிகையே! பொதுமகளே! காமுகப் பன்றிகள் நுகரும் தொட்டியே! வனப்பாகிய வயலில் கள்ளாகிய நீரைவிட்டுக் காமமாகிய கலப்பையாலே எம்முடைய எருது உழுகின்ற பழையசாலே! பொருள் வழங்குவோரைக் கண்ணாகிய கயிற்றாலே தோளாகிய தறியில் கட்டி காமவின்பம் மிகும்பொருட்டு இசையினையும் எம்பால் களவுகொண்ட அணிகளை அணிந்துகொண்ட அவ்வழகையும் ஊட்டுகின்ற பொதுமகளே!"" என்பதாகும்.
பரத்தையைக் கணிகையென்றும் பொதுமகளென்றும் கூறும் இவ்வகை மொழிகள் சங்கஇலக்கியங்களில் நாம் காணாத கேட்காத மொழிகள்.

மேலும் தோழி தலைவனைப் பற்றி கூறுவன, ''முன்னர் கெட்டுப்போன எம் எருதினைத் தேடிக் கண்டுபிடித்து வணக்கி இவ்வையையாகிய தொழுவத்தில் புகவிட்டு அடித்து இடித்து அது எம் எருது என்று அறிவிக்க உன்னைத் தொடர்ந்தோம்". இங்கே எருது என்று குறிப்பிடப்படுபவன் தலைவனே!.தோழி தலைவனை இப்படி இழித்துரைப்பதெல்லாம் அகமரபு காணாத புதுமை.

இப்போது தலைவி நேரடியாகப் பரத்தையிடம்
எந்தை எனக்கு ஈத்த இடுவளை ஆரப்பூண்
வந்தவழி நின்பால் மாயக்களவு அன்றேல்
தந்தானைத் தந்தே தருக்கு
-(20, 76-78)
என்தந்தை எனக்குத் தந்த வளையலும் ஆரமும் உனக்கு வந்தவழி களவு இல்லையென்றால் இவை தந்தவனை எனக்குக் காட்டு என்று கேட்கிறாள். இதற்குப் பரத்தை கூறும் மறுமொழி இன்னும் புதுமையானது, உன் அன்பன் எனக்கும் அன்பன் இவை மட்டுமல்ல உன் சிலம்புகளையும் கழற்றி எனக்குத் தருவான்.

இப்படிப் பலவகையிலும் இன்னும் பல புதுமையான சுவையான செய்திகளுடன் தொடர்கிறது மேலே குறிப்பிட்ட வையைப்பாடல்.
மருதநில உரிப்பொருளாகிய ஊடலும் ஊடல் நிமித்தமும் பாடும் சங்க அகப்பாடல்களில் இடம்பெறும் பரத்தையர் பற்றிய செய்திகளும் பரிபாடல் வையைப் பாடல்களில் இடம்பெறும் பரத்தையர் பற்றிய செய்திகளும் நமக்கு எவற்றை உணர்த்துகின்றன?.
பரத்தையர் பற்றிய சித்தரிப்புகள் எந்த அளவிற்கு உலகியலோடு பொருந்தும்?. இவை உலகியலா? அன்றிப் புலநெறி வழக்கா? இச்சிக்கல் ஆய்விற்குரியது.

சங்கப்பாடல்களில் காதலும் கற்பும்

சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்ற அல்லது அக இலக்கிய மரபுகள் குறிப்பிடுகின்ற காதல், கற்பு, ஒருதாரமணம் இவைகள் எல்லாமே பழைய தாய்வழிச் சமூகம் மாறித் தந்தைவழிச் சமூகம் உருவானபோது உருவாக்கப்பட்ட கோட்பாடுகள். தந்தைவழிச் சமூகத்தின் போது உருவான தனியுடைமைச் சமூகத்தில்தான் சொத்துரிமையைப் பாதுகாக்க ஒருதாரமணம் தேவைப்பட்டது.
தந்தைவழிச் சமூகத்தில் தன்னுடைய உடைமையை நேரடியாகத் தன் வாரிசே பெற பெண் ஒருதாரமணத்தைக் கைக்கொள்ள வேண்டியதாயிற்று. ஏனெனில் ஒருபெண் ஒருவனோடு மட்டுமே உறவு உடையவளாக இருந்தால் மட்டுமே தந்தைவழிச் சமூகம் நிலைக்கமுடியும். இத்தகைய சூழ்நிலையில்தான் ஒருதாரமணக் கோட்பாட்டைக் கட்டிக்காப்பதற்காகக் (பெண்களுக்கு மட்டும்) காதலும் கற்பும் கோட்பாடுகளாக ஆக்கம் பெற்றன.

எல்லாக் காலங்களிலும் காதலும் கற்பும் பெண்களுக்கு வலியுறுத்தப்பட்டதே அல்லாமல் ஆண்களுக்கு அவை வலியுறுத்தப்படவில்லை. பெண்களுக்குக் காதலும் கற்பும் ஒருதாரமணமும் வலியுறுத்தப்பட்ட அதே சமூகத்தில்தான் ஆண்களுக்குப் பரத்தையர் ஒழுக்கம் கற்பிக்கப்பட்டது.

கற்பு ஒரு கற்பிதம் :

தனியுடைமை ஆணாதிக்கம் இவைகளைக் கட்டிக்காக்கவே காதல் கற்புக் கோட்பாடுகள் காலந்தோறும் மக்களாலும் இலக்கியவாதிகளாலும் மிக உயரியதாகவும் புனிதமானதாகவும் கருதப்பட்டும் கற்பிக்கப்பட்டும் வந்தன.
கற்பு ஒரு கற்பிதம். அதன் நோக்கமும் தேவையும் பெண்ணடிமையே. ஆணின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகப் பெண்ணை கட்டுப்பாட்டிற்குள் அடக்கிவைக்கவே கற்பு கற்பிக்கப்பட்டது. பெண்ணுக்குக் கற்பை வலியுறுத்தக் கற்பிக்கப்பட்டதே காதல். காதல் புனிதமானது என்று பெண்ணை நம்பச்செய்த ஆண்கள் காதலை ஒருபோதும் புனிதமாகக் கருதவில்லை.

குலமகள்-விலைமகள் :

ஆடவரே உயிர் என்று போற்றி ஒழுகும் பெண்கள் கற்பிற் சிறந்தவர்களாகப் போற்றப்பட்டனர். அவர்களின் செயிர்தீர் கற்பு கடவுள் கற்பு என்பது ஆடவனுக்கு உடலாலும் உள்ளத்தாலும் உண்மையாய் இருத்தல் என்று கற்பிக்கப்பட்டது.

கற்புடைய பெண்களின் மேன்மைக்காக எதிர்நிலையில் பரத்தையர்கள்கள் பற்றிய புலநெறிவழக்கு (இற்பரத்தை, காமக்கிழத்தி, காதற்பரத்தை, சேரிப்பரத்தை எனப் பலநிலைகளில்) உருவாக்கப்பட்டது. கற்பைப் போற்றிக்காக்கும் தலைவியின் பெருமையை மிகுவிக்கவே அல்லது வலிமைப்படுத்தவே பரத்தையர்கள், பரத்தையர் ஒழுக்கம், ஊடல், ஊடல் தணிக்கும் வாயில்கள் படைத்துக்கொள்ளப்பட்டன. மருதத்திணையின் முழுநேர வேலையே பரத்தையர் காரணமான ஊடலும் ஊடல் நிமித்தங்களுமாயின.

பரத்தையர்களே சங்க காலத்தில் இல்லையா? இவை முழுக்க முழுக்க கற்பிதங்களா? என்றால், பரத்தையர்களே கற்பனை என்று பொருள்கொள்ளத் தேவையில்லை. பரத்தமை ஒழுக்கம் பற்றிய புலநெறி வழக்குகள், மருத உரிப்பொருள் தொடர்பான செய்திகள் இவைகளே கற்பிதங்கள்.

கற்புப் புனிதம் :

கட்டுரையில் முன்பு ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பரிபாடலின் இருபதாம் பாடலில் நாம் பார்த்த பரத்தை பற்றிய கடுமையான சாடல்களுக்கு எதிர்நிலையில் தலைவியின் கற்பின்திறம் விதந்து பாராட்டப்படுவதையும் இங்கு ஒப்பு நோக்கவேண்டும்.

தோழி மிகக்கடுமையாகப் பரத்தையைச் சாடிய பிறகு பரத்தை தலைவியை சிலசொல்லி ஏசுகிறாள். இந்த ஏசல் மொழிகளைப் பாடல் குறிப்பிடவில்லை, தேடினாள் ஏச என்றுமட்டும் குறிப்பிடுகிறது. பரத்தையின் இந்த ஏசலைக்கேட்ட முதுமகளிர் சிலர்,
சிந்திக்கத் தீரும் பிணியாள் செறேற்க
...... ........ வந்திக்க வார்
-(20, 68-70)
சிந்தித்த அளவிலே பாவம் நீங்குதற்குரிய கற்புடைய இத்தலைவியைச் சினந்து சில சொல்லிப் பாவம் செய்தனை, அப்பாவம் நீங்க அவளை வணங்க வருவாயாக என்று தலைவியின் கற்பின் திறத்தைப் புகழ்கின்றனர்.

இதே பாடலில் மற்றொரு சூழலில் மகளிர் சிலர் தலைவியை நோக்கி, ''பரத்தையர் இன்பம் விரும்பிச் செல்வானைச் செல்லாமல் தடுத்தலும், சென்றான் என நீக்கி ஒழுகுதலும் மனைவியர்க்குக் கூடுமோ? குலமகளிர் கணவன் தம்மை இகழினும் அவனைத் தாம் போற்றும் இயல்புடையர் அல்லரோ! ஆடவர் காமம் தக்கவிடத்தே மட்டும் நிற்கும் தன்மை உடையதன்று".
தகவுடை மங்கையர் சான்றாண்மை சான்றார்
இகழினும் கேள்வரை ஏத்தி இறைஞ்சுவர்
-(20, 88-89)
என்றெல்லாம் கற்பை ஏற்றுக்கொள்ளாத ஆடவர் காமத்திற்கு பரிந்தும், பெண்கள் பரத்தையரிடம் செல்லும் ஆண்களைத் தடுக்கமுடியாது என்றும் ஆண்கள் பெண்களை இகழ்ந்தாலும் பெண்கள் ஆண்களைப் போற்றுவதே கற்புடைமை என்றும் வையைப் பாடல் ஆண்களின் அதிகார அரசியலுக்குத் துணைநிற்கின்றது.

தொகுப்புரை :

1. வையைப் பாடல்களுக்குத் தொகுத்தோரால் வகுக்கப்பட்ட துறைக்குறிப்புகள் முற்றும் பொருந்துவனவாக இல்லை.
2. வையைப்பாடல்களின் மகளிர் செயல்கள் பல சங்க இலக்கியங்களிலிருந்து மாறுபட்டு அமைந்துள்ளன.
3. பரிபாடல் வையைப் பாடல்களில் அகப்பொருள் மரபுகளுக்கு மாறான பல நிகழ்வுகள் இடம்பெறுவதால் இப்பாடல்களை அகப்பாடல்கள் என்று கூறுவது பொருந்தாது.
4. ஒருதாரமணத்தை நிலைநிறுத்தவே கற்பு காதல் என்ற கோட்பாடுகள் கற்பித்துக்கொள்ளப்பட்டன.
5. பெண்களின் கற்புப் புனிதத்தைப் போற்றும் முயற்சிக்காகவே பரத்தையர் ஒழுக்கங்கள் கற்பிக்கப்பட்டன.
6. கற்பை ஏற்றுக்கொள்ளாத ஆடவர் காமத்தை நியாயப்படுத்தியும் அதனை ஏற்றுக்கொண்டு நடப்பதே குலமகளிர் கடமை என்றும் வையைப் பாடல்கள் ஆண்களின் அதிகார அரசியலுக்குத் துணைநிற்கின்றன.

புதன், 2 செப்டம்பர், 2009

தமிழின் முதல் பொதுவுடைமை இதழ் ‘சுதந்திரம்’ ஓர் அறிமுகம் (1934)-பகுதி-1

தமிழின் முதல் பொதுவுடைமை இதழ் ‘சுதந்திரம்’ ஓர் அறிமுகம் (1934)-பகுதி-1

பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி -8.


இந்திய இதழியலுக்கு வித்தூன்றி அதை வளர்த்த பெருமை கிறித்தவ பாதிரிமார்களையே சாரும். தமிழ் இதழியலும் அவ்வாறே தோற்றம் கொள்கின்றன. 1831 ஆம் ஆண்டு சென்னை கிறித்தவ சமயச்சங்கம் தமிழ்ப் பத்திரிகை என்ற மாத இதழை முதன் முதலில் தொடங்கியது. தமிழ் இதழியல் வரலாற்றில் ஏறத்தாழ முப்பதாண்டுக் காலம் கிறித்தவச் சமயச் சார்பு இதழ்கள் மட்டுமே வெளிவந்தன. 1864 ஆம் ஆண்டில்தான் இந்துக்கள் தமது சமயம் சார்ந்த இதழ்களைத் தொடங்கினர். 1864 இல் பிரம்ம சமாஜம் தத்துவ போதினி என்ற இதழை வெளியிட்டது. இவ்வாண்டு முதல் பல இந்து சமய இதழ்களும் வெளிவரத் தொடங்கின.

தமிழகத்தில் கருத்துக்களையும் கொள்கைகளையும் பரப்பும் கருவிகளாகவே தொடக்கத்தில் இதழ்கள் பயன்பட்டன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் சமயக் கருத்துக்களைப் பரப்புவதில் பெரிதும் துணைபுரிந்த தமிழ் இதழ்கள் பின்னர் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் விடுதலைப் போராட்டப் பின்னணியில் சுதந்திர உணர்ச்சியை ஊட்டவும் பரப்பவும் முற்ற முழுதாகத் தம்மை ஈடுபடுத்திக் கொண்டன. இருபதாம் நூற்றாண்டின் முதல்பாதியில் கொழுந்துவிட்டெரிந்த தேசிய உணர்ச்சிக்கு இதழ்கள் துணைபுரிந்த அதே காலகட்டத்தில், ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபதுகளில் தமிழ் இதழியலின் ஒரு பிரிவு திராவிட இயக்கக் கொள்கைகளைப் பரப்பவும், முப்பதுகளில் ஒரு பிரிவு பொதுவுடைமைக் கருத்துக்களைப் பரப்பவும் பயன்படுத்தப்பட்டன.

பொதுவுடைமை இயக்கம் இந்தியாவில் 1925 இல் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் பொதுவுடைமைக் கருத்துக்களையும் முற்போக்குச் சிந்தனைகளையும் தமிழ் இதழ்களில் எழுதிவந்தவர் தோழர் ம.சிங்காரவேலரே ஆவார். தமிழ் இதழியல் வரலாற்றாசிரியர்கள் தமிழகத்தின் முதல் பொதுவுடைமை இதழ் 1935-இல் ம.சிங்காரவேலர், ப.ஜீவானந்தம், கே.முருகேசன், டி.என்.ராமச்சந்திரன் ஆகியோரால் தொடங்கப்பட்ட புது உலகம் இதழே என்று குறிப்பிடுகின்றார்கள். சிலர் 1937 இல் தோழர் ப.ஜீவானந்தம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ஜனசக்தி என்ற இதழே முதல் பொதுவுடைமை இதழ் என்று குறிப்பிடுகின்றார்கள். ஆனால் இந்த இரண்டு இதழ்களுக்கு முன்பே புதுவையிலிருந்து 1934 ஜூனில் சுதந்திரம் என்ற பொதுவுடைமை இதழ் தோழர் வ.சுப்பையா அவர்களால் தொடங்கப்பட்டது. இந்தச் சுதந்திரம் இதழே தமிழில் வெளிவந்த முதல் பொதுவுடைமை இதழ்.

தோழர் சுப்பையா:

ரஷ்யாவுக்கு ஒரு லெனின், சீனாவுக்கு ஒரு மாவோ, இந்தியாவுக்கு ஒரு மகாத்மா அதுபோல் புதுவைக்கு ஒரு வ.சுப்பையா என்று சிறப்பிக்கக் கூடிய பெருமைக்குரிய தலைவர்தான் தோழர் வ.சுப்பையா அவர்கள். பிரஞ்சு ஏகாதிபத்தியம், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் என இரண்டு ஏகாதிபத்தியத்திய அரசுகளுக்கு எதிராகவும் போராடி வெற்றி பெற்ற புதுவைச் சுதந்திரப் போராட்டத் தியாகி வ.சுப்பையா. ஆசியாவிலேயே முதன் முதலாகத் தொழிலாளர்களுக்கு எட்டுமணி நேர வேலை உரிமையைப் பெற்றுத்தந்த மக்கள் தலைவர். இந்தியப் பொதுவுடைமை இயக்கத் தளபதிகளில் முன்னணித் தலைவர். இவர் தமது 23 ஆம் வயதில் தொழிலாளர்களை அரசியல் ரீதியாக அணிதிரட்ட மேற்கொண்ட வெற்றிகரமான முயற்சியே சுதந்திரம் இதழ்.

இதழ் அறிமுகம்:

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு – நாம்
எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு

என்ற பாரதியின் பாடல் அடிகளைக் குறிக்கோள் வாசகமாகக் கொண்டு 1934 ஜூன் மாதம் மாலை: 1, மலர்: 1 என்ற எண்ணிக்கைக் கணக்கோடு மாத இதழாகச் சுதந்திரம் வெளிவரலாயிற்று. முதல் இதழிலிருந்தே ஆசிரியராக இருந்தவர் வ.சுப்பையா என்றாலும் மூன்றாவது இதழிலிருந்துதான் ஆசிரியர்: வ.சுப்பையா என்று இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதழின் மேலட்டை பலவண்ணங்களில் அச்சிடப்பட்டுள்ளது. 1க்கு 8 டம்மி அளவில் மேலட்டை நீங்கலாக 52 பக்கங்களில் முதல் இதழும், பிற இதழ்கள் 60 பக்கங்களிலும் வெளிவந்துள்ளன. முதல் மூன்று இதழ்களின் மேலட்டைகளில் குதிரை மீதமர்ந்த சுதந்திர அன்னையின் படம் இடம்பெற்றுள்ளது. இந்த மேலட்டை குறித்து ஆசிரியர் தமது ஆசிரியர் குறிப்பு பகுதியில் குறிப்பிடும் செய்தி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. அதன் ஒரு பகுதி பின்வருமாறு,

நமது சுதந்திர அன்னை சமூகமென்னும் பரியின் மீது அமர்ந்து ஒரு கரத்தில் சுதந்திரக் கொடியையும் மற்றொன்றில் வீரச்சின்னத்தையும் ஏந்தி, சுதந்திர முழக்கம் செய்துகொண்டு, அடிமையென்னும் கோட்டையினின்று வெளியேறி முன்னேற்றமென்னும் கனவேகத்துடன் சென்று தமிழக முழுவதும் தனது வெற்றிக்கனலைப் பரப்ப, சுதந்திர லட்சியத்தை உலகத்திற்கே முதலில் போதித்த பிரான்சின் குடியாட்சியிலிருக்கும் புதுவையிலிருந்து இன்று வெளிவருகிறாள். இவள் பணி தமிழகத்திலுள்ள புதல்வர்களுக்குச் சுதந்திர அமுதையூட்டி வீரர்களாக வாழச்செய்ய வேண்டுமென்பதாகும்.(சுதந்திரம், மாலை:1-மலர்:1, ப.2)

இதழின் நோக்கம்:

இந்த இதழைத் தொடங்கும் போது வ.சுப்பையா அவர்கள் தமது நோக்கமாக, ‘தமிழகத்திலுள்ள புதல்வர்களுக்குச் சுதந்திர அமுதை ஊட்டவே இந்தச் சுதந்திர அன்னை வருகிறாள்’ என்று குறிப்பிடும் பகுதி கவனத்தில் கொள்ளத் தக்கது. மேலும் இந்த முதல் இதழில் ஆசிரியர் குறிப்பிடும் பல செய்திகள் அவரின் சமூகம் குறித்த சரியான புரிதல்களை வெளிப்படையாகத் தெரிவிக்கின்றது. சான்றாக,

நமது சமூகத்திலே மதத்தின் பேராலும், சாத்திரத்தின் பேராலும் அடிமைப்படுத்தி வைத்திருக்கும் சுமார் ஏழு கோடி மக்களான நமது இந்தியச் சகோதரர்களை முதலில் விடுதலையடையச் செய்யவேண்டும்.

சமுதாயத்தில் ஒரு நேத்திரம் போல் விளங்கும் சுமார் 18 கோடிக்கு அதிகமான பெற்ற தாய்மாரையும் உடன்பிறந்த சகோதரிகளையும் நசுக்கி, அடிமைப்படுத்தி இழிவுறுத்தும் நாடு நம்நாடன்றோ? (சுதந்திரம், மாலை:1-மலர்:1, ப-ள்.3,4)
என்று எழுதும் இடங்களில் தலித் விடுதலை குறித்த சிந்தனையையும், பெண் விடுதலை குறித்த சிந்தனையையும் சரியான புரிதலோடு குறிப்பிடுகின்றார். இன்றைக்குப் பெருவளர்ச்சி பெற்றுள்ள தலித்திய, பெண்ணியச் சிந்தனைகளை முதல் இதழிலேயே ஆசிரிய உரையில் குறிப்பிடும் வ.சுப்பையா அவர்களின் பணி பாராட்டுதலுக்குரியது.

அகத்திலுள்ள உயர்வு தாழ்வு என்கிற அசடுகளை நீக்குவோம். எல்லோரும் ஓர் குலமெனப் பாடுவோம், பின் வீர சுதந்திரத்தை நிரந்தரமாக நாட்டுவோம். இதுவே உண்மைச் சுதந்திரம். இதுவே இன்பச் சுதந்திரம் (சுதந்திரம், மாலை:1-மலர்:1, ப.4)
என்பது சுதந்திரம் ஆசிரியர் வ.சுப்பையா அவர்களின் தெளிவான முடிவு.

தமிழின் முதல் பொதுவுடைமை இதழ் ‘சுதந்திரம்’ ஓர் அறிமுகம் (1934)-பகுதி-2

தமிழின் முதல் பொதுவுடைமை இதழ் ‘சுதந்திரம்’ ஓர் அறிமுகம் (1934)-பகுதி-2

பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி -8.

சுதந்திரமும் பொதுவுடைமையும்:

மகாத்மா காந்தியடிகள் 1933 இல் அரிசன சேவா சங்கத்தை ஏற்படுத்தினார். அரிசன சேவா சங்கத்தில் முழு ஈடுபாட்டோடு பணியாற்றிய வ.சுப்பையா அவர்கள் 1934 பிப்ரவரி 17 இல் மிகுந்த இன்னல்களுக்கிடையே மகாத்மாவைப் புதுவைக்கு அழைத்து வந்தார். பிறகு அரசியல் ரீதியாக எவ்வாறு செயல்பட்டார் என்பதைப் பின்வரும் பகுதியில் சுப்பையாவே குறிப்பிடுகின்றார்.
அரிசன மக்களோடு எனக்கிருந்த நெருக்கத்தின் காரணமாகப் பஞ்சாலைத் தொழிலாளர்களின் இயக்கத்தோடு எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. அதன்பின் அரசியலிலும் நேரடியாக ஈடுபட நேர்ந்தது. அரசியல் இயக்கத்தில் தீவிரமாகச் செயல்பட்ட நான், 1934 ஜூனில் சுதந்திரம் எனும் பத்திரிக்கையைத் தொடங்கினேன். அது இன்றுவரை தொழிலாளர் வர்க்கத்தின் நலனுக்காக ஏந்தப்பட்ட போர்க்கொடியாகச் செயல்பட்டு வருகிறது.

தோழர் அமீர் அய்தர்கான் என்பவர்தான் தமிழகத்தில் பொதுவடைமை இயக்கத்தைத் தோற்றுவிக்கத் தூண்டுகோலாய் இருந்தவர். 1934 ஜூலையில் அவரோடு எனக்குப் பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பழக்கத்தின் காரணமாகப் பொதுவுடைமைக் கட்சியோடு நெருக்கமும் ஏற்பட்டது. அந்தக் கட்சியின் தொடர்பு காரணமாகத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஒரு புதிய உத்வேகம் கிடைத்தது. (சுதந்திரம் பொன்விழா மலர்-3, ப.40)
தோழர் வ.சுப்பையா அவர்கள் பொதுவுடைமை இயக்கத்தோடு தமக்குத் தொடர்பு ஏற்படுவதற்கு முன்பே சுதந்திரம் இதழைத் தொடங்கியுள்ளார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

மக்கள் தலைவர் வ.சுப்பையா அவர்களின் சமதர்ம சிந்தனை:

தோழர் அமீர் அய்தர்கான் அவர்களைச் சந்தித்த பிறகே சுப்பையா அவர்களுக்குப் பொதுவுடைமை இயக்கத் தொடர்பு ஏற்பட்டது என்று அவரே குறிப்பிட்டிருந்தாலும், இயல்பாகவே வ.சுப்பையா அவர்களுக்குப் பொதுவுடைமைச் சிந்தனையும் அது குறித்த தெளிவான அரசியல் அரசியல் அறிவும் இருந்திருக்கின்றது என்பதைச் சுதந்திரம் இதழின் முதல் இதழிலிருந்தே தெரிந்துகொள்ள முடிகின்றது.

தொழிலாளிகளின் திண்டாட்டம் முதலாளிகளின் கொண்டாட்டம் என்ற தலைப்பில் சுதந்திரம் முதல் இதழில் அவர் எழுதியுள்ள கட்டுரையில், தனியொருவனுக்கு உணவிலை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதி பாடல் அடிகளோடு கட்டுரையைத் தொடங்குகின்றார். மேலும், “இன்றைக்கு உலகத்தில் வறுமையும் அறியாமையும் ஒழிய வேண்டுமானால் முதலாளிகளின் ஆதிக்கத்தை அறவே களைந்தெறிய வேண்டும்.” என்றும் “ஏழை மக்களின் உழைப்பினால் ஏற்பட்ட பலன் முழுமையும் ஒருவன் கொள்ளைகொண்டு போகிறான். உழைப்பாளியோ அரை வயிற்றுக் கஞ்சிக்கும் வழியில்லாமல் அவதிப்படுகிறான்” என்றும் சுப்பையா அவர்கள் வேதனைப்படுகிறார். இதற்குக் காரணம் யாது? என்று சிந்திக்கும் வ.சுப்பையா அவர்கள் முதலாளித்துவ சமூக அமைப்பே இதற்குக் காரணம் என்று முடிவு கட்டுகிறார்,

முதலாளிகள் அனுபவிக்கும் ஆடம்பர வாழ்க்கை ஏழைத் தொழிலாளியின் அரிய உழைப்பினால் ஏற்பட்டதன்றோ? இதை முதலாளி மட்டுமே அனுபவிக்கின்றான். இது என்ன அக்கிரமம்? இத்தகைய சமூக அமைப்பினால் உலகத்தின் பெரும் பகுதியான ஏழைத் தொழிலாளிகளின் துயரம் என்னே? (சுதந்திரம், மாலை:1-மலர்:1, ப.22)
என்பதோடு தீர்வு என்ன என்பதையும் அவரே அக்கட்டுரையில் குறிப்பிடுகின்றார்,
நமது சமூகத்திலிருக்கும் இத்தகைய முதலாளிகளின் ஆதிக்கத்தை வேருடன் களைந்தெறிந்து, சமதர்ம லட்சியத்தை நிரந்தரமாக நாட்டவேண்டும். அதற்குத் தொழிலாளர்களே முனைந்து வேலை செய்ய வேண்டும்.தொழிலாளிகளிடையே தக்க முயற்சி வேண்டும், தைரியம் வேண்டும்.

மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ?

(சுதந்திரம், மாலை:1-மலர்:1, ப.23)

மக்கள் தலைவர் சுப்பையா அவர்களின் மேலே குறிப்பிட்ட கட்டுரையை முழுவதுமாகக் கவனத்தில் கொண்டால் சுதந்திரம் இதழ் தொடங்கும் போதே ஆசிரியருக்கு சமதர்ம சிந்தனையும் பொதுவுடைமை குறித்த அரசியல் தெளிவும் இருந்துள்ளமை புலனாகிறது.

லெனினும் ரஷ்யப் புரட்சியும்:

சுப்பையா அவர்கள் 1934 ஜூலையில் தோழர் கே.பாஷ்யம் முன்முயற்சியின் பேரில் சென்னையில் அமீர் அய்தர்கானைச் சந்திந்துத் தம்மைப் பொதுவுடைமை இயக்கத்தில் இணைத்துக்கொண்டது மட்டுமில்லாமல், தமிழகம், ஆந்திரா, புதுவைப் பகுதிகளில் இயக்கத்தைக் கட்டுவது குறித்தும் திட்டமிட்டார்கள். தோழர் சுந்தரய்யாவும் அப்போது உடனிருந்தார். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு சுப்பையா அவர்கள் பொதுவுடைமை இயக்க நூல்களைத் தீவிரமாகப் படிக்கத் தொடங்கியதோடு இந்தியாவின் தலைசிறந்த பொதுவுடைமை இயக்கத் தலைவராகவும் ஆனார். பொதுவுடைமை இயக்கம், தத்துவம், இயக்க வரலாறு போன்றவற்றை முறையாகப் பயிலத் தொடங்கியவுடன் அவ்விஷயங்களைத் தம் இதழான சுதந்திரத்திலும் தொடர்ந்து எழுதத் தொடங்கினார். சுதந்திரம் ஐந்தாம் இதழில் லெனினும் ரஷ்யப் புரட்சியும் என்ற தலைப்பில் வரலாற்றுத் தொடர் ஒன்றை வ.சு அவர்கள் எழுதியுள்ளார்கள்.

பொதுவுடைமை என்பது மக்களுக்கு இயற்கையாகச் சொந்தமான உரிமைகளுக்காகப் போராடும் இயக்கமாகும். கொடுமையான அக்கிரமமான சமூகப் பொருளாதார அமைப்பை மாற்றி, உலகத்திலுள்ள மக்கள் அனைவரும் உயர்வு தாழ்வின்றி உணவுபெற்று சமவுரிமை பெற்று இன்பமாக உய்வதற்கான பொதுவுடைமை என்ற சீரிய திட்டத்தை அமைக்க வேண்டுமென்று அரும்பாடுபட்டார் ரஷ்ய தேசத்துப் பெரியார் லெனின். (சுதந்திரம், மாலை:1-மலர்:5, ப-ள்.5,6)
என்று பொவுடைமை குறித்தும் ரஷ்யத் தலைவர் லெனின் குறித்தும் தமிழில் தம் சுதந்திரம் இதழில் எழுதினார் வ.சுப்பையா.

முடிப்பாக:

இதுவரை குறிப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தமிழின் முதல் பொதுவுடைமை இதழ், இதழியல் வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவது போல் !935 இல் வெளிவந்த புது உலகமும் இல்லை, 1937 இல் வெளிவந்த ஜனசக்தியும் இல்லை, 1934 இல் வெளிவந்த சுதந்திரம் இதழே என்று துணிந்து முடிபு கூறலாம்.

1934 இல் சுதந்திரம் இதழை வெளியிடும் போது தோழர் வ.சுப்பையா அவர்களுக்குப் பொதுவுடைமைக் குறித்த அரசியல் தெளிவு இருந்தமையும் அக்கருத்துக்கள் சுதந்திரம் இதழில் வெளிவந்துள்ளமையும் இக்கட்டுரையால் நிறுவப்பட்டுள்ளது.

சனி, 29 ஆகஸ்ட், 2009

மானுடவியல் நோக்கில் காதாசப்தசதி - பகுதி-1

மானுடவியல் நோக்கில் காதாசப்தசதி பகுதி-1

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
பட்ட மேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8

காதாசப்தசதி அறிமுகம்:

காதாசப்தசதி, அய்தராபாத்திற்குத் தென்மேற்கே இருந்த குந்தள நாட்டைக் கி.மு.230 முதல் கி.பி.130வரை ஆண்ட சாதவாகன மரபைச் சேர்ந்த முப்பது மன்னர்களில் பதினேழாமவனான ஹாளன் என்பவனால் தொகுப்பிக்கப் பெற்ற பிராகிருத மொழி நூலாகும்.

இந்நூலில் எழுநூறு பாடல்கள் தொகுக்கப்பட்டன. காதா என்பது நூல் எழுதப்பட்ட வடமொழி யாப்பின் பெயர். இது முதலடி 12 மாத்திரையும், இரண்டாம் அடி 18 மாத்திரையும். மூன்றாம் அடி 12 மாத்திரையும், நான்காம் அடி 15 மாத்திரையும், அமையப் பாடப்பட்டதாகும். காதா யாப்பினால் எழுதப்பட்ட எழுநூறு பாடல்களைக் கொண்டது என்ற பொருள்பட காதாசப்தசதி என இந்நூல் பெயர் பெற்றது.

காதசாப்தசதி எழுந்த நிலம்:

சப்தசதிப் பாடல்களில் விந்தியமலை (பா.160) குறிக்கப்படுகின்றது. கோதாவரி (பா.11) நுருமதை (பா.62) முதலிய ஆறுகளும் குறிப்பிடப்படுகின்றன. கடல் பற்றிய குறிப்பு இல்லை. சாதவாகன மன்னர்களின் குந்தள அரசு பிராகிருதத்தைப் பேச்சு மொழியாகக் கொண்டிருந்தது. இன்றைய மகாராட்டிரமும் ஆந்திரமும் இணைந்த பகுதிகளே சாதவாகனர்களின் ஆட்சிப் பரப்பாக இருந்தன.

காலம்

காதாசப்தசதி கி.மு. முதல் நூற்றாண்டில் ஹாளனால் தொகுப்பிக்கப்ட்டிருக்க வேண்டுமென நம்பப்படுகிறது. ஹாளனின் அவைக்களப் புலவர்கள் பலர் முயன்று திரட்டித் தொகுத்த தொகுப்பே சப்தசதி யாதலால், சப்தசதிப் பாடல்கள் முழுவதும் ஒரே கால கட்டத்தில் எழுதப் பெற்றவை என்று கொள்ள வாய்ப்பில்லை. எழுநூறுபாடல்களில் 348 பாடல்களுக்கு மட்டுமே , ஆசியரியர் பெயர் பற்றிய குறிக்கப்பட்டுள்ளது. பிற பாடல்களில் ஆசிரியர் பற்றிய குறிப்பு இல்லை என்ற செய்தி இப்பாடல்கள் ஒரே சமயத்தில் பாடப்பட்டவை அல்ல என்ற கருத்தை உறுதிப்படுத்தும். ஆளனின் காலத்திற்கு முன் சில நூற்றாண்டுகள் பழமையுடைய பாடல்கள் கூடத் திரட்டித் தொகுக்கப் பெற்றிருக்கலாம்.

சப்தசதிப் பாடல்கள் பெரிதும் சங்க அகப்பாடல்களை ஒத்திருப்பதால் சற்றேறக் குறைய கடைச்சங்க கலத்தை ஒட்டிய காலப்பகுதியில்தான் ஆந்திர நாட்டில் இந்த அகப்பாடல்கள் தொகுக்கப் பெற்றிருக்கவேண்டும்.

காலம் பற்றிய ஆய்வில் ஏற்படும் சிக்கல்:

காதாசப்தசதிப் பாடல்களில் இடம்பெறும் உள்ளடக்க ஆய்வு சப்தசதிப் பாடல்களின் காலத்தைத் தமிழ் அகப்பாடல்களின் காலத்திற்குப் பின்னே அழைத்துச் செல்கின்றன. தமழிலக்கிய வரலாற்றில் சங்க அகப்பாடல்களுக்குப் பிந்திய இலக்கியங்களான கலித்தொகை, பரிபாடல்களின் காலத்தை ஒட்டியதாகவம், அவற்றின் உள்ளடக்கங்களை ஒட்டியதாகவம் சப்தசதிப் பாடல்கள் அமைந்துள்ளன. சான்றாகச் சூரிய வழிபாடு (பா.129) மந்திரங்கள் ஓதி வழிபடுதல் (பா.1), ஆகிய வழிபாட்டுச் செய்திகளம் ஊழ் (பா.116) மேலுலகம், (பா.58) மறுபிறப்பு (பா.290) பாவபுண்ணியம் (பா.49) அதிர்ஷ்டம் (பா.166) முதலான நம்பிக்கைகள் பற்றிய குறிப்புகளும் தேவர்கள் பாற்கடலைக் கடைந்த செய்தி (பா.65) தேவர்கள் கண்ணிமையாமல் இருப்பர் என்ற செய்திபோன்ற தேவர்களைப் பற்றிய குறிப்புகளும் வீமனால் உதையுண்ட துரியோதனன் பற்றிய பாரதக் கதைக் குறிப்பும் (பா.245) இராம லக்குவர் ஓவியம் பற்றிய குறிப்பும்(பா.380) திருமால் குறளனாக (வாமனனாக) வந்த கதைக் குறிப்பும் (பா.378) சப்தசதிப் பாடல்களில் இடம் பெற்றுள்ளன. மேற்கூறிய புராண இதிகாசக் குறிப்புகள் சப்தசதிப் பாடல்களின் காலத்தைத் தமிழ்ச்சங்க அகப்பாடல்களுக்குப் பிற்பட்டதாகக் காட்டுகின்றன.

காதசப்தசதியும் காதலும்:

சப்தசதியில் இருவகைக் காதலும் குறிக்கப் பெறுகின்றன. தமிழ் அகப்பாடல்களைப் போல் குறிக்கோள் நிலைக் காதல்களை மட்டும் சுட்டுவதாக அமையாமல் நடைமுறையில் காதலுக்குள்ள மதிப்பும் நிலை பேறும் பேசப்படுகின்றன.

குறிக்கோள் நிலைக் காதலுக்குப் பின்வரும் பாடலைச் சான்றாகக் காட்டலாம். காதலியைத் தவிர வேறு எந்தப் பெண் வந்தாலும் தலை கவிழ்ந்தவாறு பேசுகிறான் அவன். காதலனைத் தவிர வேறு யாரையும் கண்ணெடுத்தும் பார்க்க மாட்டேன் என்கிறாள் அவள்.

இவர்கள் இருவரின் கண்களும் எல்லாவற்றையும்
காணுமாறு நிமிர வேண்டுமானால்
இவர்கள் இருவரைத் தவிர வேறு ஆடவர் பெண்டிர்
எவரும்
இவ்வூரிரல் ஏன், இவ்வுலகில் இருத்தலாகாது (பா.151)


என்ற நிலையில் காதல் பேசப்படுகிறது. ஆனால் நடைமுறையில் காதலின் உண்மையான நிலை என்ன என்பதை,

காதலனே!
நீ உன் காதலியைக்
காணாமலிருந்து விட்டால்
நெருங்கிய உயிர்க் காதலும்
மறக்கப்பட்டு விடும்


கையில் ஏந்திய நீர் கைவிரல் சந்துகளின் வழியெ ஒழுகிப் போவது போலக் கால இடைவெளி காதலை விழுங்கி வரண்டு விடச்செய்கிறது (பா.173) என்கிறார் பகுரன்.
மாந்தர்கள் குணங்களால் கவரப்படாமல் எடுத்த எடுப்பிலேயே காதல் கவர்ச்சிக்கு இறையாகி விடுகிறார்கள். (பா.287) என்று வருத்தப்படுகிறார் ஒரு கவிஞர். இத்தகைய காதலின் நடைமுறைத் தன்மையைச் சுட்டிக் காட்டும் பாடல்கள் காதாசப்தசதியின் தனிச்சிறப்பு.

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...