கட்டுரை இலக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டுரை இலக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 1 மே, 2012

எண்ணப் பறவை சிறகடித்து… கலக்கல் காங்கேயன் நூல் வாழ்த்துரை



முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்,
புதுச்சேரி.

என் இனிய மாணவ நண்பர் காங்கேயனின் “எண்ணப் பறவை சிறகடித்து..” எனும் இக்கட்டுரைத் தொகுப்பு அவரின் முதல்நூல். காங்கேயன் நாடறிந்த நல்ல பேச்சாளர். மேடைகளில் இனிமையாகப் பாடக் கூடியவர். அண்மைக் காலங்களில் மக்களிடையே மிகுந்த செல்வாக்கு பெற்றுவரும் மேடைக்கலையாம் பாட்டு மன்றத்தில் புதுச்சேரியின் புகழை நாடெங்கும் பரப்பி வருபவர். அவரின் பாட்டுமன்றம் இயலும் இசையும் கலந்த ஒரு புதுவகைப் பட்டிமன்றமாய்ப் படித்தவர்கள் முதல் பாமரர்வரை அனைவரையும் ஈர்க்கும் ஓர் அற்புத மேடைக்கலையாய்த் தமிழகத்தை வலம்வருவது பாராட்டுதலுக்குரியது.

மேடைப்பேச்சு தந்த உற்சாகத்தில் எழுத்துலகிலும் அடியெடுத்து வைக்கின்றார் காங்கேயன். பேசுகிற பேச்செல்லாம் காற்றோடுப் போய்விடக் கூடாது என்ற எண்ணத்தில் அவர் எடுத்திருக்கும் முதல் முயற்சியே இந்நூல். இந்நூலைத் தொடர்ந்து பல நல்ல நூல்களைத் தமிழுலகிற்கு அவர் தொடர்ந்து அளிப்பார் என்று நான் நம்புகிறேன்.

சிந்திக்கத் தெரிந்த ஒவ்வொரு மனிதனும் பதிவுசெய்யப்பட வேண்டிய பல பிரதிகளை மனதில் சுமந்து கொண்டேதான் வாழ்ந்து வருகிறான். ஆனால் பலருக்கு அதனை அச்சில் கொண்டுவரும் வாய்ப்பும் சூழலும் அமைவதில்லை. இன்றைய கணிப்பொறி அச்சுமுறையின் வருகை எல்லோருக்கும் நூல் எழுதும், அச்சிடும், வெளியிடும் பணிகளை எளிமைப் படுத்தியிருக்கிறது.

கவிதைகளும் உரைநடைப் புனைகதைகளும் மட்டுமே படைப்புகள் இல்லை. அவற்றுக்கும் அப்பால் கட்டுரைகள் என்ற படைப்பு இலக்கியங்கள் உண்டு. ஆனால் தமிழில் கட்டுரை என்ற இலக்கிய வடிவம் பெரிதும் படைப்பிலக்கிய மரியாதையைப் பெறுவதில்லை. தமிழர்களின் நீண்ட நெடிய கவிதை மரபுகளே அதற்குக் காரணமாய் இருக்கலாம்.

தமிழ்மொழியைப் பொறுத்தவரைக் கிடைக்கின்ற பழந்தமிழ் இலக்கண நூலாம் தொல்காப்பியத்திலேயே உரை என்ற இலக்கியவகை பற்றிய குறிப்பு கிடைக்கின்றது. இறையனார் களவியல் உரை தொடங்கித் தமிழிலக்கிய நெடும்பரப்பு தோறும் எழுதப்பட்ட இலக்கிய, இலக்கண, சமய உரைகள் தமிழின் தற்கால உரைநடைக்குக் கொஞ்சமும் குறைவின்றி ஈடு கொடுக்கின்றன.

ஐரோப்பியர் வருகைக்குப் பின்னர் தமிழகத்திற்குக் கிடைத்திட்ட தாள், மை, அச்சு இயந்திரம், ஆங்கிலக் கல்வி போன்ற வசதி வாய்ப்புகள் தமிழின் உரைநடை வளர்ச்சிக்குப் பெரிதும் ஆக்கமும் ஊக்கமும் அளித்தன. வீரமாமுனிவரின் ‘பரமார்த்த குரு கதை’யே தமிழின் முதல் உரைநடை இலக்கியம் என்பாருண்டு. தமிழின் உரைநடைக்கு அணிசேர்த்த தலைமைப் படைப்பை வழங்கிய பெருமை புதுச்சேரிக்கு உண்டு. ஆனந்தரங்கம் பிள்ளை (1709-1761) அவர்களால் எழுதியளிக்கப் பெற்ற நாட்குறிப்பு இலக்கியம், தொடக்காலத் தமிழ் உரைநடைக்குக் கிடைத்த தனிமகுடம்.

கட்டுரை இலக்கியம், உரைநடை இலக்கிய வடிவங்களில் தனித்தன்மை மிக்கது. ஒரு பொருள் பற்றிச் சிந்தித்தவற்றை ஒழுங்குபடுத்தி எழுதுவதே கட்டுரை என்பர். கட்டுரைகளில் படைப்பிலக்கிய அந்தஸ்தைப் பெறுவதும் தனித்தன்மை மிக்க இலக்கியமாக மதிக்கத் தக்கதுமான கட்டுரைகள் தன்னுணர்ச்சிக் கட்டுரைகளே. ஆங்கிலத்தில் இவ்வகைக் கட்டுரைகள் மிகுதி. நுளளயல என்று குறிப்பிடத்தக்கன இவைகளே. தமிழில் இவ்வகைக் கட்டுரைகள் அதிகமில்லை. அண்மைக் காலமாகத் தமிழிலும் தன்னுணர்ச்சிக்; கட்டுரைகள் எழுதப்படுகின்றன.

நண்பர் காங்கேயனின் “எண்ணப் பறவை சிறகடித்து..” எனும் இந்நூல் இருபத்திரண்டு சிறுசிறு கட்டுரைகளைக் கொண்ட ஒரு கலம்பகக் கட்டுரைத் தொகுப்பு. பல தன்னுணர்ச்சிக் கட்டுரைகள், சில இலக்கியக் கட்டுரைகள் எனக் கலவையாக நூல் அமைக்கப்பட்டுள்ளது. நூலாசிரியர் கலக்கல் காங்கேயன் இந்நூலில் பல்வேறு காலங்களில் தான் சந்தித்த, சிந்தித்த, பேசிய, கேட்ட, விவாதித்த, பல செய்திகளை மற்றும் சம்பங்களைத் தொகுத்தளிக்கின்றார். அரசியல், சமூகம், ஆன்மீகம், இலக்கியம், இயற்கை முதலான பல தளங்களில் செய்திகள் பேசப்படுகின்றன.

வேடிக்கை மனிதர்கள், சான்றோர் பண்புகள் முதலான முதல் எட்டுக் கட்டுரைகளும் தன்னுணர்ச்சிக் கட்டுரைகளாக அமைந்துள்ளன. மரங்கள் மகத்தானவை என்ற ஒன்பதாம் கட்டுரையும் ஐந்து பெரிது ஆறு சிறிது என்ற பதினெட்டாம் கட்டுரையும் ஓரறிவு உயிர்களாம் மரங்கள் குறித்தும் ஐந்தறிவு உயிர்களாம் விலங்குகள் குறித்தும் பேசுகின்றன. குறுந்;தொகை காட்டும் குரங்குகள் காதல் என்ற பத்தாம் கட்டுரையும் சிவபெருமான் தொடங்கிய யுவுஆ சென்டர் என்ற பதினொன்றாம் கட்டுரையும் குறுந்தொகை மற்றும் தேவார இலக்கியங்கள் பற்றியன. பத்தொன்பது மற்றும் இருபது இருபத்தொன்றாம் கட்டுரைகளாக இடம்பெற்றுள்ள கவியரசு கண்ணதாசன், காவியக் கவிஞர் வாலி, கவிப்பேரரசு வைரமுத்து என்ற தலைப்புகளிலான மூன்று கட்டுரைகளும் காங்கேயனின் சிறப்புக் களங்களான திரைப்படப் பாடலாசிரியர்கள் பற்றிப் பேசுகின்றன. இந்த மூன்று கட்டுரைகளையும் நூலின் மிக முக்கியமான கட்டுரைகளாகக் குறிப்பிடலாம். மேலும் எனக்குப் பிடித்த எம்.ஜி.ஆர் என்ற கட்டுரையும் தனித்துக் குறிப்பிடத்தக்கது.

நூலின் பல கட்டுரைகள் அவரின் மேடைப்பேச்சு தொனியிலேயே அமைக்கப் பட்டுள்ளன. அதனால்தான் வெளிப்படையாக மேடைகளில் அவர் வெளிப்படுத்தும் சமூகத்தின் மீதான சாடல்களும் நையாண்டிகளும் உள்ளது உள்ளபடி எத்தகைய புனைவுகளுமற்றுக் கட்டுரைகளில் பதிவாகியுள்ளன. பேசுவதென்பது காற்றில் கரைந்து போகக்கூடியது, ஆனால் எழுத்தில் எழுதிப் பதிப்பிப்பதென்பது கல்வெட்டில் வெட்டப்படுவதற்குச் சமமானது. இது காலத்தால் கரைந்து போகாதது. பேசுவதைவிட எழுதுவதில் அதிக எச்சரிக்கை உணர்ச்சி தேவை. காங்கேயன் இதைப்பற்றி எல்லாம் அதிகம் கவலைப்படாமல் தன் கட்டுரைகளைச் சுதந்திரமாக அமைத்திருப்பது அவரின் கரவற்ற உள்ளத்தின் வெளிப்பாடு என்பதனை நாம் உணர்தல் வேண்டும்.

காங்கேயனை அவரின் கல்லூரி நாட்கள் தொடங்கி நான் அறிவேன். பாடத்திற்கு வெளியேதான் கற்றுக்கொள்ளத் தக்கன மிகுதி என்பதனை அவர் நன்கு உணர்ந்தவர். வகுப்பறைகளுக்கு வெளியேதான் அவரின் தேடல் தொடங்கும். இடைவிடாத தேடலும் தேடலுக்கான முயற்சியும்தான் காங்கேயனின் தனித்தன்மை. இலக்கிய அரங்குகளில், இலக்கியங்களில், இலக்கிய ஆளுமைகளிடம் அவர் காட்டும் ஈடுபாடு அலாதியானது. கடந்த இருபது ஆண்டுகளில் புதுச்சேரியின் அனைத்து இலக்கிய அரங்குகளிலும் அவரின் கவனம் தொடர்ந்து இருந்து வந்துள்ளதை நான் கவனித்திருக்கிறேன். இன்றைக்குத் தமிழக, புதுச்சேரி மேடைகளில் தொடந்து தம் பங்களிப்பைச் செய்துவரும் பரபரப்பான சூழலில் கூட, வாய்ப்புள்ள நாட்களில் புதுச்சேரியின் தமிழிலக்கிய அரங்குகளில் அமைதியான ஒரு பார்வையாளராக இருந்து நிகழ்ச்சிகளைக் கேட்க அவர் தவறியதில்லை. இந்தத் தேடல்தான் காங்கேயனின் வெற்றிக்கான சூத்திரம்.

எண்ணப் பறவைச் சிறகடித்து நூலின் மொழிநடை மிக மிக இலகுவானது. கதை சொல்லும் போக்கிலான அவரின் கட்டுரைகள் மெத்தப் படித்தவர்கள் முதல் சாதாரண வாசகர்கள் வரை அனைவரையும் கவரக் கூடியன. திருவாளர் தென்கச்சி சுவாமிநாதன் எழுத்தின் சாயல் பல கட்டுரைகளில் தென்பட்டாலும் தமக்கென ஒரு தனிபாணியினைக் கொண்டது இந்நூல். ஒவ்வொரு கட்டுரையும் கொஞ்சம் அனுபவம், கொஞ்சம் ஆதங்கம், கொஞ்சம் ஆலோசனை என்ற கட்டமைப்பில் அமைக்கப் பட்டுள்ளது. இடையிடையே வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் தக்க தமிழிலக்கிய மேற்கோள்களும் இனிய திரைப்படப் பாடல் வரிகளும் நகைச்சுவைகளும் குட்டிக்கதைகளும் இணைக்கப்பட்டு வாசகர்கள் அலுப்பின்றி வாசிக்கும் வண்ணம் கட்டுரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

நண்பர் காங்கேயனின் “எண்ணப் பறவை சிறகடித்து.. ..” எனும் இக் கட்டுரைத் தொகுப்பு நூல் ஒரு தனிமனிதத் தன்னுணர்ச்சிக் கட்டுரைகள் என்ற அளவில் சுருங்கிவிடாமல் ஆன்மீகம், அரசியல், சமூகம், இலக்கியம், இயற்கை குறித்த பல்வேறு சிந்தனைகளை உடன்பாட்டு நிலையிலும் எதிர்மறை நிலையிலும் தூண்டி விடுவதோடு, வாசகனை அடுத்த தளத்திற்கு அழைத்துச் செல்லும் படைப்பிலக்கியப் பணியினையும் செய்கிறது. நல்ல சிந்தனைகளை விதைத்திருக்கும் நூலாசிரியருக்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துக்கள்.

முனைவர் நா.இளங்கோ
nagailango@gmail.com








வியாழன், 16 செப்டம்பர், 2010

சிங்கப்பூர் கவிஞர் ந.வீ. விசயபாரதியின் புலமைக்கு மரியாதை நூல் அணிந்துரை

பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
புதுச்சேரி

ந.வீ. விசயபாரதியின் முப்பரிமாண இலக்கியம்

என்றைக்குக் கவிதைகள் தோன்றினவோ அன்றைக்கே கவிதைகள் குறித்த ரசனையும் தோன்றிவிட்டது எனலாம். படைப்பவன் ரசனையும் படிப்பவன் ரசனையும் ஒன்றுபடுவதுதான் கவிதை ரசனை என்பதில்லை, வேறுபடவும் செய்யும். கவிதைகளை ரசிப்பதில் பல சமயங்களில் படைப்பாளியை விஞ்சி விடுகிறான் படிப்பவன், அதாவது சுவைஞன். படைப்பவனை விட, சுவைஞனுக்கு இருக்கும் சுதந்திரம் மிகப்பெரிது. சுவைஞனுக்குள்ளே படிக்கும் குறிப்பிட்ட அந்த ஒரு கவிதை மட்டுமல்ல, அதன் முன்னர் பல நூறு ஆண்டுகளாய்த் தோன்றிய கவிதைகளும் அதன் ரசனைகளும் பொதிந்து கிடக்கின்றன. தமிழ் போன்ற மூவாயிரம் ஆண்டு மூத்த இலக்கிய இலக்கண வளங்கள் மிகுந்த செம்மொழியில் எழுதப்படும் கவிதைகளை வாசிக்கும் ஒரு சுவைஞனுக்கு அம்மொழியின் நீண்ட கவிதைப் பாரம்பரியமே ஒரு பெரும் பலமாகவும் சில சமயங்களில் பலவீனமாகவும் மாறிவிடுவது இயற்கை.

சிங்கைக் கவிஞர் அன்புத் தோழர் ந.வீ. விசயபாரதியின் புலமைக்கு மரியாதை என்ற இந்நூலும் அப்படியொரு சுவைஞனின் ரசனை சார்ந்ததொரு படைப்புதான். இந்நூலில் அமைந்துள்ள எட்டுக் கட்டுரைகளும் கிட்டத்தட்ட ஒரே தொனியில் படைப்பாளியின் படைப்பாற்றலைச் சிலாகித்து உச்சிமோர்ந்து கொள்கின்றன. சங்க இலக்கியங்கள் தொடங்கிக் காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், இக்கால இலக்கியங்கள் எனக் கவிஞர் வைரமுத்துவின் படைப்புகள் வரை நூலின் கட்டுரைகள் தமிழிலக்கிய நெடும்பரப்பின் அடி முதல் நுனிவரை தொட்டுத் தடவிச் செல்வது நூலின் சிறப்பு.

நூலின் எட்டுக் கட்டுரைகளும் பெருவழுதி (நற்றிணை), பிசிராந்தையார் (புறநானூறு), இளங்கோவடிகள் (சிலப்பதிகாரம்), கம்பர் (இராமகாதை), முக்கூடற் பள்ளு ஆசிரியர், பாரதியார், பாரதிதாசன், வைரமுத்து என்னும் எட்டுக் கவிஞர்களின் புலமைக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் அமைக்கப்பட்டிருப்பதை நோக்கி நூலுக்குப் பெயராக, புலமைக்கு மரியாதை என்று ஆசிரியர் பெயரிட்டிருப்பது சாலப் பொருத்தமாகிறது.

ஓர் இலக்கியப்பாடல், அதன் பின்னணி, பாடலின் கருத்து, பாடல் சொற்பொருள் நுட்பம், பின்னர் அந்தக் கவிதையின் நயம் என்று ஒவ்வொரு கட்டுரையும் இலக்கியக் கட்டுரைகளாக விரிந்து செல்லும் இந்நூலின் ஊடாக ஆசிரியர், ஒரு கதைசொல்லி போல் இலக்கியக் காட்சிகளைக் கதைகளாகவும் விவரித்துச் சொல்லும் பாங்கு இந்நூலின் தனியழகு என்றே குறிப்பிட வேண்டும். சான்றாக நற்றிணை குறித்த முதல் கட்டுரையில் இடம்பெறும் பின்வரும் பகுதியைக் குறிப்பிடலாம்.

மறுநாள் விடிகிறது,
முதல் நாள் தலைவனைச் சந்தித்த ஆனந்த நினைவுகளில் மூழ்கியபடி தலைவி வீட்டில் இருக்கும்போது அவளது அன்னை யதார்த்தமாக அவளைப் பார்க்கிறாள்;.
ஏதோ அவளிடம் மாற்றம் தெரிவதாக உணர்கிறாள்;, உற்றுற்றுப் பார்த்தபின் அவளது கூந்தலில் வண்டுகள் மொய்ப்பதைப் பார்த்து விடுகிறாள். மிக நெருங்கிப்போய்க் கவனித்தபோது அவளிடமிருந்து மலரின் நறுமணம் வீசுவதையும் உணர்கிறாள்.
'இப்படிப்பட்ட மணம் இதற்குமுன் உன்னிடம் இருந்ததில்லையே” என்று தலைவியிடம் சந்தேகத்துடன் தாய் கேட்க, தலைவி சில கணம் தடுமாறிப் போகிறாள்;, குற்றமுள்ள நெஞ்சின் குறுகுறுப்புடன் தாயின் முகம் பார்க்கத் தைரியம் இல்லாமல் ‘தோள்கொடுப்பாள் தோழி’ என்ற நம்பிக்கையுடன் தோழியைப் பார்க்கிறாள். (நற்றிணையில் மொழிநயம்)
இப்படி ஒவ்வொரு கட்டுரையும் ஒரு கதையைச் சுவைபட விரித்துச் சொல்கிறது.

கட்டுரைகளின் நடுவே கதைகள் எனப் புதியநடைபோடும் விசயபாரதியின் படைப்புக்கு மேலும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. அது அவரின் கவிதை மயப்பட்ட மொழிநடை. ஆசிரியர் இயல்பாகவே ஒரு கவிஞர் என்பதாலும் சொல்லப்படும் உள்ளடக்கத்தின் சார்பாலும் அவரின் உரைநடை அப்படியே கவிதையாக நெகிழ்ந்து குழைந்து வெளிப்படுகின்றது.

மணம் வீசும் பூக்களின் சாறுபிழிந்து
பக்குவப்படுத்தப்பட்ட வாசனை திரவியங்கள்,
சந்தனச் சிற்பத்துக்கு சதை பொதித்து
உயிரூட்டி உலவ விட்டதைப்போல
பேரழகுப் பெண்கள்
வல்லமை மிக்க சொல்லாற்றல் கொண்ட அறிஞர்கள்,
இசையும் இலக்கியமும்
இசைந்து இசைக்கக்கூடிய பாடகர்கள்,
மலரினும் மென்மையான மார்புடைய அழகிகள்

மேலே சான்று காட்டப்பட்ட பகுதி அமளியில் அனிச்சமலர் என்ற இரண்டாம் கட்டுரையில் இடம்பெற்றுள்ள உரைநடைப் பகுதி. உரைநடையை உடைத்துப் போட்டது நான். படித்துப்பாருங்கள் உரைநடையே கவிதையாய், கவிதையே உரைநடையாய் நம்மை மயக்கும். விசயபாரதியின் சொல்லாற்றல் அப்படிப்பட்டது.

இலக்கியத்தின் மூன்று பரிமாணங்களாகிய கவிதை, கதை, கட்டுரை என்ற மூன்றையும் தன்னகத்து அடக்கிய புலமைக்கு மரியாதை எனும் இத்தொகுப்பு ஒரு முப்பரிமாண இலக்கியம் என்பதில் வியப்புக்கு இடமேது.

நூலாசிரியரின் மொழியாளுமை வியப்பளிக்க வைக்கிறது. மகாகவி பாரதி சொன்னது போல் ‘சொல் புதிது சுவை புதிது’ என அனைத்திலும் புதுமைநலம் விளைந்ததொரு மொழியாளுமை கொண்டு தம் படைப்பால் படைப்பின் உத்தியால் பண்டைய இலக்கியங்களுக்குப் புதுமெருகு ஏற்றியுள்ளார் கவிஞர் விசயபாரதி.

சான்றுக்கு ஒன்றிரண்டு.

ஒன்று:
உச்சக் காட்சியில் கண்ணகியின் கோபத்தைக் காடுகொள்ளாத சாதுவின் மிரட்சியாய்க் காட்டியது இன்னொரு புரட்சி (அமளியில் அனிச்சமலர்)
கண்ணகி ஒரு சாது! அமைதியே வடிவானவள், சிலம்பின் வழக்குரை காதையில் அவள் கொள்ளும் சத்திய ஆவேசம், அதனால் மதுரையம்பதிக்கும் மன்னனுக்கும் மக்களுக்கும் நேர்ந்த கதி என்ற காப்பியக் கதையோட்டங்கள் அனைத்தையும் உள்வாங்கும் போக்கில், ‘சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்ற பழமொழியை ஆசிரியர் தம் மொழிநடையின் இடையில் பிசைந்து தந்துள்ள செய்நேர்த்தியைக் கவனிக்க வேண்டும்.

இரண்டு:
தமிழ் மொழியின் சிறப்பே அம்மொழி காலத்திற்கு ஏற்பத் தன் கட்டுப்பாடுகளைத் தளர்த்திக் கொண்டும், காலச் சூரியனின் கதகதப்பில் தன்னை உலர்த்திக் கொண்டும் இயைந்து கொடுத்து வளர்ந்த எளிமைதான். (இலக்கியம் இனிக்கிறது)

‘காலச் சூரியனின் கதகதப்பில் தன்னை உலர்த்திக் கொண்டும்’ என்ற சொல்லாட்சியில் வெளிப்படும் படிமத் தன்மை நூலாசிரியரின் கவித்துவ வெளிப்பாடு என்பதில் ஐயமில்லை. செத்தொழிந்த சில செம்மொழிகளைப் போலில்லாமல் தமிழ் இன்றும் சீரிளமைத் திறத்தோடு இருப்பதற்குக் காரணம் என்ன? என்ற உலக வியப்புக்கு ஓர் உண்மைக் காரணத்தை உரத்துச் சொல்கிறார். தமிழ், காலச் சூரியனின் கதகதப்பில் தன்னை உலர்த்திக் கொண்டது என்று. உரைநடையிலும் படிமங்களை உலவவிட்ட ஆசிரியரின் நுட்பம் பாராட்டத்தக்கது.

தமிழ் இலக்கியங்களின் மீது அதிலும் குறிப்பாக நம்முடைய பழந்தமிழ் இலக்கியங்களின் மீது நூலாசிரியருக்கு இருக்கும் நாட்டம் அளப்பரிது. ‘தமிழ் வாழ்க!’ என்று மேடைகளில் முழங்கிவிட்டுச் செயலற்ற வாய்ப்பேச்சு வீரர்களாகத் தமிழர்கள் முடங்கிப் போய்விடக் கூடாது.

“தமிழிலக்கியத்தின் மீதான நம் தேடல் தீவிரமாகும் போதுதான் தமிழின் தேக்கநிலை மாறி ஊக்கநிலை உருவாகும் அந்த நிலை உருவாக நம் அறிவுப்பசி விரிவாகத் தமிழிலக்கிய வாசிப்பு ஒன்றே சரியான தீர்வாகும்” (கண்ணின் கடைப்பார்வை)
என்று தமிழ்வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமான அறிவுரைகளை வழங்குவதோடு தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோளும் வைக்கின்றார் நூலாசிரியர்.

‘தமிழ் வாழ்க’ என்ற மேடை முழக்க வரிகள் இன்றைய தேவையில்லை. உண்மையில் தமிழை வாழ வைக்க எண்ணுபவர்கள் செய்ய வேண்டிய அவசரத்தேவை ஒன்று இப்போது இருக்கிறது. புத்தகக் கடைகளின் அலமாரிகளில் அழுக்குப்படாமல் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிற பழந்தமிழ் அறிஞர்களின் நூல்களைக் காசுகொடுத்து வாங்காவிட்டால்கூடப் பரவாயில்லை; அதே நிலையில் அரசாங்க நூலகங்களின் அலமாரிகளில் ஆய்வு மாணவர்களால் மட்டுமே அதுவும் தேர்வுக்கான தேவையின்போது மட்டுமே எடுத்துப் படிக்கப்படுகிற நிலைமை மாற்றப்பட வேண்டும்; அதற்குத் தமிழர்கள் பழந்தமிழ் நூல்களை நூலகங்களிலிருந்து இரவல் வாங்கியாவது படிக்கவேண்டும் என்பது நம் பணிவான வேண்டுகோள். (கண்ணின் கடைப்பார்வை)
சிங்கைக் கவிஞர் விசயபாரதியின் இவ்வேண்டுகோள். தாய்த்தமிழகத்தின் சூழலுக்கும் பொருந்திய வேண்டுகோளே என்பதை நாம் மறுக்க முடியாது.

மொத்தத்தில் புலமைக்கு மரியாதை எனும் இக்கட்டுரைத் தொகுப்பு தமிழுக்குப் புது வரவு என்பதோடு புதுமையான வரவு. நூலாசிரியர் விசயபாரதியின் நோக்கம் தெளிவாய் உள்ளது. இது படைப்பிலக்கியமில்லை. இலக்கிய ஆராய்ச்சியுமில்லை. ரசனை, இலக்கிய ரசனை, ஒரு சுவைஞன் சுவைத்த தமிழ் அமுதின் சில துளிகள் இவை. உங்கள் முன் படைக்கப்பட்டதன் நோக்கம்,
“தமிழிலக்கியத்தின் மீதான நம் தேடல் தீவிரமாகும்போதுதான் தமிழின் தேக்கநிலை மாறி ஊக்கநிலை உருவாகும் அந்த நிலை உருவாக நம் அறிவுப்பசி விரிவாக தமிழிலக்கிய வாசிப்பு ஒன்றே சரியான தீர்வாகும்.”
என்று ஆசிரியர் சொன்னதுபோல் தமிழின் தேக்க நிலை மாற வேண்டும் ஊக்க நிலை உருவாக வேண்டும் என்பதுதான். இந்நூல் நிச்சயம் அதற்குத் துணைபுரியும். நூலாசிரியர் ந.வீ.விசயபாரதிக்குப் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

புதன், 20 மே, 2009

மானுடம் பயனுற - இர.தியாகராசன் நூல் அணிந்துரை முனைவர் நா.இளங்கோ

மானுடம் பயனுற - இர.தியாகராசன்

நூல் அணிந்துரை


முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்,
புதுச்சேரி-8.

இர.தியாகராசனின் மானுடம் பயனுற எனும் இக்கட்டுரைத் தொகுப்பு அவரின் முதல்நூல். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பல படைப்புகள் எழுதப்பெறாத மனப் பிரதிகளாக உள்ளுறைகின்றன. சிலர் அவற்றுக்கு எழுத்து வடிவம் தந்து வெளியே உலவ விடுகின்றனர். பலர் அந்த முயற்சியில் இறங்குவதே இல்லை. ஒவ்வொரு மனிதனின் மறைவின் போதும் எழுதப்படாத பல பிரதிகள் அவனோடேயே மறைந்து விடுகின்றன.

கவிதைகளும் உரைநடைப் புனைகதைகளும் மட்டுமே படைப்புகள் இல்லை. அவைகளுக்கும் அப்பால் கட்டுரைகள் என்ற படைப்பு இலக்கியங்கள் உண்டு. ஏனோ தெரியவில்லை தமிழில் கட்டுரைகள் பெரிதும் படைப்பிலக்கிய அந்தஸ்தைப் பெறுவதில்லை. தமிழர்களின் நீண்ட நெடிய கவிதை மரபுகளே அதற்குக் காரணமாயிருக்கலாம்.

தமிழ்மொழியைப் பொறுத்தவரை கிடைக்கின்ற பழந்தமிழ் முதல் நூலாம் தொல்காப்பியத்திலேயே உரை என்ற இலக்கியவகை பற்றிய குறிப்பு கிடைக்கின்றது. இறையனார் களவியல் உரை தொடங்கித் தமிழிலக்கிய நெடும்பரப்பு தோறும் எழுதப்பட்ட இலக்கிய, இலக்கண, சமய உரைகள் தமிழின் தற்கால உரைநடைக்குக் கொஞ்சமும் குறைவின்றி ஈடுகொடுக்கின்றன. ஐரோப்பியர் வருகைக்குப் பின்னர் தமிழகத்திற்குக் கிடைத்திட்ட தாள், மை, அச்சு இயந்திரம், ஆங்கிலக் கல்வி போன்ற வசதி வாய்ப்புகள் தமிழின் உரைநடை வளர்ச்சிக்குப் பெரிதும் ஆக்கமும் ஊக்கமும் அளித்தன. வீரமாமுனிவரின் பரமார்த்த குருகதையே தமிழின் முதல் உரைநடை இலக்கியம் என்பாருண்டு. தமிழின் உரைநடைக்கு அணிசேர்த்த தலைமைப் படைப்பை வழங்கிய பெருமை புதுச்சேரிக்கு உண்டு. ஆனந்தரங்கம் பிள்ளை (1709-1761) அவர்களால் எழுதியளிக்கப்பெற்ற நாட்குறிப்பு இலக்கியம், தொடக்காலத் தமிழ் உரைநடைக்குக் கிடைத்த தனிமகுடம்.

கட்டுரை இலக்கியம், உரைநடை இலக்கிய வடிவங்களில் தனித்தன்மை மிக்கது. ஒரு பொருள் பற்றிச் சிந்தித்தவற்றை ஒழுங்குபடுத்தி எழுதுவதே கட்டுரை என்பர். ‘விவாதித்து விவரிப்பதே’ கட்டுரையின் பண்பு என்பார் கா.சிவத்தம்பி. இந்த விளக்கங்கள் எல்லாம் செய்திக் கட்டுரைகளுக்குப் பொருந்தும். கட்டுரைகளில் படைப்பிலக்கிய அந்தஸ்தைப் பெறுவதும் தனித்தன்மை மிக்க இலக்கியமாக மதிக்கத் தக்கதுமான கட்டுரைகள் தன்னுணர்ச்சிக் கட்டுரைகளே. ஆங்கிலத்தில் இவ்வகைக் கட்டுரைகள் மிகுதி. நுளளயல என்று குறிப்பிடத்தக்கன இவைகளே. தமிழில் இவ்வகைக் கட்டுரைகள் அதிகமில்லை. அண்மைக் காலமாகத் தமிழிலும் இவ்வகைக் கட்டுரைகள் எழுதப்படுகின்றன.

II
மானுடம் பயனுற என்னும் இக்கட்டுரைத் தொகுப்பு. தன்னுணர்ச்சிக் கட்டுரைகளின் தொகுப்பாக அமைந்து படைப்பிலக்கிய அந்தஸ்தைப் பெறுகின்றது. நூலாசிரியர் இர.தியாகராசன் இந்நூலில் பல்வேறு காலங்களில் தான் சந்தித்த, சிந்தித்த, பேசிய, கேட்ட, விவாதித்த, சாதித்த பல செய்திகள் மற்றும் சம்பங்களைத் தொகுத்தளிக்கின்றார். அரசியல், சமூகம், ஆன்மீகம் முதலான பல தளங்களில் செய்திகள் பேசப்படுகின்றன. நூலாசிரியருக்குச் சமூகத்தின் மீது ஏற்பட்ட கோபம், ஆத்திரம், எரிச்சல் போன்றவைகளே நூலில் அதிகம் பதிவுபெற்றுள்ளன. தான் நம்புகின்றவைகளே சரியானவை என்னும் தொனியில் நூலை அமைத்திருக்கும் ஆசிரியர் பல சமயங்களில் நீதிபோதனைகளைப் போதிக்கும் ஒரு போதானாசிரியனாகவே வெளிப்பட்டிருப்பது நூலின் பலம் என்றும் பலஹீனம் என்றும் கருதவாய்ப்பளிக்கிறது.

நூலாசிரியர் இர.தியாகராசன் கடவுள் நம்பிக்கை மிக்கவர். விதி, பாவ புண்ணியங்களின் பலாபலன்களைத் திடமாக நம்புபவர். அவரின் கருத்து முதல்வாதக் கொள்கைகள் எனக்கு உடன்பாடில்லை. ஆயினும் அவர் வலியுறுத்தும் மானுட மேம்பாடு குறித்த சிந்தனைகளோடு ஒத்துப்போகிறவன் நான். ஆன்மீகம் குறித்தும் ஆன்மீக வாதிகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள் குறித்தும் நூலாசிரியர் செய்யும் பதிவுகள் மிக ஆழமானவை.

"இக்காலத்தில் பக்தி என்பது ஒரு சம்பிரதாயமாக சடங்குகளாக மாறிவிட்டது. அகண்ட ஓங்கார பூஜை, 1008 பாலகுட அபிஷேகம், 108 விளக்கு பூஜை, 1008 சங்காபிஷேகம் இவைகள் எல்லாமே வியாபார நோக்கில் காலம் காலமாக மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டவை". (இர.தியாகராசன், பக்தி)

"எல்லா வக்கிர புத்திகளையும் கொண்ட மனிதர்கள்தான் பக்தி என்ற பெயரில் விரதம் என்ற பெயரில் கோயிலை நாடுகிறார்கள். உண்மையான பக்திமான் பொல் வேடம் போடுகிறார்கள். நான் வெளிஉலகில் இவர்கள் நடத்தையைக் கவனிக்கிறேன். இவர்கள் எல்லாம் இப்படிப் பகல்வேடம் போட்டு வாழ்கிறார்களே என்று அங்கலாய்ப்பது உண்டு. மனம் நொந்துபோவது உண்டு. இத்தகைய மனம் கொண்ட பேர்வழிகள் தான் சபரிமலை என்றும், திருப்பதி என்றும் புனித ஸ்தலங்களுக்குச் செல்கிறார்கள் இங்கு காணிக்கை போடுகிறார்கள். இவர்களுக்கு ஓர் எண்ணம் நாம் செய்யும் எல்லாத் தவறுகளுக்கும் விரதம் இருந்து காணிக்கை போட்டால் கடவுள் நம்பக்கம் வந்துவிடுவார் என்ற ஒரு அற்ப விபரீத எண்ணம்". (இர.தியாகராசன், மனிதனின் விரோதச் செயல்கள்)

"இதையே! இப்படிச் செய்தால் என்ன? அத்தனைப் பணங்களையும் திருவிழாச் செலவுகளைக் குறைத்துவிட்டு, அந்தந்த ஊரில் உள்ள ஏழைப் பெண்களுக்குத் திருமண உதவி, ஏழைப் பிள்ளைகளுக்குப் படிக்க வசதி, பசியால்வாடும் ஏழை மக்களுக்கு உணவுவசதி என்று செய்யலாமே! இறைவன் ஆனந்தக் கூத்தாடுவானே! அப்போதுதானே ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணமுடியும்". (இர.தியாகராசன், பகட்டுவாழ்வு)

மேலே சான்று காட்டியுள்ள போலி ஆன்மீகம் குறித்த சாடல் பகுதிகளைக் கூர்ந்து கவனித்தால் நூலாசிரியர் இர.தியாகராசனின் ஆழ்ந்த மானுடநேயம் புலப்படுவதை அவதானிக்க முடியும்.

அடுத்ததாக, அரசியல் குறித்து இர.தியாகராசன் வெளிப்படுத்தும் சத்திய ஆவேசம் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. ‘அரசியல் ஒரு சாக்கடை’ அது நமக்குத் தேவையில்லை என்று ஒதுங்கிப் பொகும் சராசரி இந்தியனின் பொதுப்பார்வையிலிருந்து நூலாசிரியர் வேறுபடுகிறார். அரசியல் விவாதிக்கப்பட வேண்டிய விசயம். அதில் கற்க, கற்பிக்க, கோபப்பட, போராட என்று பல நிலைகள் உள்ளன. கட்சி அரசியலின், அரசியல்வாதிகளின் கயமைகள் குறித்த இவரின் கோபமும் ஆவேசமும் நூலின் தனிச்சிறப்பு.

"அரசியல் என்பது நாட்டு மக்களுக்குத் தொண்டு செய்யக்கூடிய ஒரு வழி! மார்க்கம். சம்பாதிப்பதற்கு அல்ல. இப்போது அரசியலுக்கு வரும் 90 சதவீதம் பேர் வருமானம் தேடிக்கொள்வதற்காக வருகிறார்கள். ஏதோ முதல் போட்டு வியாபாரம் செய்தால் இலாபம் கிடைக்கும் என்ற முறையில், பேராசையில் வருகிறார்கள். விளைவு தன்னுடைய குடும்பத்தாரை வளப்படுத்துகிறார்கள். மக்களை ஏமாற்றுகிறார்கள்". (இர.தியாகராசன், நாட்டுப்பற்று)

"மாயையிலிருந்து மக்கள் விடுபட வேண்டும். பாதகம் செய்பவர்களைக் கண்டால் மோதி மிதித்திட வேண்டும், முகத்தில் காரி உமிழ்ந்திட வேண்டும். அந்த தைரியம் வர வேண்டும். இது எல்லா அரசியல் வாதிகளுக்கும் பொருந்தும். அரசியல்வாதி என்ன தவறு செய்தாலும் அவருடைய தொண்டன் அப்படியே ஏற்றுக்கொள்கிறானே! இந்த அறியாமைப் போக வேண்டும். தவறு செய்தால் நீ யாராக இருந்தாலும் உன்னைத் தட்டிக் கேட்பேன் என்று சூளுரைக்க வேண்டும். அப்படி செய்து பாருங்கள். ஒரு அரசியல்வாதி கூட மிஞ்ச மாட்டான். தவறு செய்தால் பொதுமக்கள் சும்மாவிட மாட்டார்கள் என்ற பயம் வந்துவிடும். முடிவு! ஏமாற்ற மாட்டான். பொய் சொல்லமாட்டான். சரியாகக் காரியம் செய்வான்". (இர.தியாகராசன், அப்பழுக்கற்ற வாழ்வு)

இப்படி நூலின் தொட்ட இடமெல்லாம் வெளிப்படும் நூலாசிரியர் இர.தியாகராசனின் கோபம் ஒரு நியாயத்தில் மையம் கொண்டிருப்பது கூர்ந்து நோக்கத்தக்கது. அந்த நியாயம் மானிட மேன்மை என்பதாகும். ‘மனிதனாக வாழ்ந்திட வேண்டும் மனதில் வையடா’ என்றானே பட்டுக்கோட்டை அந்த வழியில் ‘மானிட சமுத்திரம் நானென்று கூவு’ என்றானே பாவேந்தன் அந்த வழியில் இன்னும்.. இன்னும்.. வள்ளலார், பாரதி போன்ற மனிதநேயப் படைப்பாளிகளின் வழியில் இர.தியாகராசன் மானுடம் பயனுற இந்த நூலைப் படைத்துள்ளார்.

"ஒருவர் டாக்டராக, இன்ஜினியராக, அரசியல்வாதியாக, ஆன்மீகவாதியாக, நாத்திகனாக எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் கூட அதையும் தாண்டி மனிதனாக வாழ்கிறானா? என்ற கோணத்தில் மட்டும்தான் பார்ப்பேன். அதென்ன ‘மனிதனாக இரு’ என்று அடிக்கடி செல்கிறேன் என்று நினைக்கிறீர்களா? ரொம்ப சாதாரணமாக! பிறருக்காக வாழ்வதுதான் மனித வாழ்க்கை. இல்லையென்றால் மிருக வாழ்க்கை". (இர.தியாகராசன், பிறருக்காக வாழ்வது)

பிறருக்காக வாழும் மனித வாழ்க்கையை வலியுறுத்தும் நூலாசிரியருக்கு இத்தகு சிந்தனை வெறும் ஏட்டுக்கல்வி மற்றும் கேள்வி ஞானத்தால் மட்டும் வந்ததில்லை. அது அவரின் பரம்பரைச் சொத்து.

இர.தியாகராசனின் தந்தையார் விடுதலைப் போராட்ட வீரர் சு.இரத்தின வேல் அவர்கள் கற்றுத்தந்த வாழ்வியல் கல்வி அது. பெரியவர் சு. இரத்தின வேல் ஐயா அவர்களை நான் நன்கு அறிவேன். அவர் ஒரு சேவை மாமணி, மறக்கலாகா மாமனிதர், வாழ்வியல் நெறியாளர். அவர் தம் மைந்தர்களுக்கு விட்டுச் சென்ற மிகப்பெரிய சொத்து சேவை மனப்பான்மை. அவரின் மூத்த மகன் நூலாசிரியர் இர.தியாகராசன், அடுத்தவர் இர.ஆனந்தராசன், சிறிய மகன் என்னுடைய அன்பு மாணவர் மற்றும் இனிய நண்பர் சிங்கை. இரத்தின. வேங்கடேசன் மூவரும் தந்தையாரின் சேவை மனப்பான்மையைப் பொன்னேபோல் போற்றி ஒல்லும் வகையிலெல்லாம் சமுதாயப்பணி செய்து வருகின்றார்கள். நூலாசிரியர் தம் முன்னுரையிலும் இதனைக் கோடிட்டுக் காட்டுகின்றார்.

இர.தியாகராசனின் மானுடம் பயனுற என்னும் இக் கட்டுரைத் தொகுப்பு நூல் ஒரு தனிமனிதத் தன்னுணர்ச்சிக் கட்டுரைகள் என்ற அளவில் சுருங்கிவிடாமல் ஆன்மீகம், அரசியல், சமூகம் குறித்த பல்வேறு சிந்தனைகளை உடன்பாட்டு நிலையிலும் எதிர்மறை நிலையிலும் தூண்டிவிடுவதோடு, வாசகனை அடுத்த தளத்திற்கு அழைத்துச் செல்லும் படைப்பிலக்கியப் பணியினையும் செய்கிறது. நல்ல சிந்தனைகளை விதைக்கும் நூலாசிரியருக்குப் பாராட்டுக்கள்.

நா.இளங்கோ
புதுவை-8
1-5-2009
(மே தினம்)

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...