திங்கள், 9 டிசம்பர், 2019

பெருமுக்கல் தொல்லியல் வரலாற்றியல் பயணம். 01-09-2018

புதுச்சேரி, கலாம் விதைகளின் விருட்சம் சமூக இயக்கம்
ஒருங்கிணைத்த  பெருமுக்கல் தொல்லியல் வரலாற்றியல் பயணம்.
(01-09-2018)


பெருமுக்கல் வரலாறு குறித்த விளக்கவுரை முனைவர் நா.இளங்கோ

பெருமுக்கல் மலை: திண்டிவனத்திலிருந்து 11 கி.மீ தொலைவில் மரக்காணம் செல்லும் சாலையில் உள்ளது.

பெருமுக்கல் மலை


பெருமுக்கல் பாறைக் கற்குறியீட்டு ஓவியங்கள் சுமார் 6000 ஆண்டுகளுக்கு முந்தைய எகிப்திய ஹீரோக்ளிபிக் HIEROGLYPHIC வகையைச் சார்ந்தவை என்றும் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முந்தைய கீறல் ஓவியங்கள் PETRO GLYPHS வகையைச் சார்ந்தவை என்றும் இருவேறு கருத்துக்கள் உள்ளன. இக்குறியீடுகள் பெருமுக்கல் மலையிலுள்ள சீதைக் குகை என்று ஊர்மக்களால் அழைக்கப்படும் குகையில் இடம்பெற்றுள்ளன.

4000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கீறல் ஓவியக் களஆய்வில் முனைவர் நா.இளங்கோ


பெருமுக்கல் கீறல் ஓவியங்கள்
பெருமுக்கல் மலையிலுள்ள கோயில் முக்தியாலீசுவர் திருக்கோயில். இத்திருக்கோயிலின் சுற்றுச்சுவர்களில் இடம்பெற்றுள்ள 60 கல்வெட்டுகள் பதிவுசெய்து வெளியிடப்பட்டுள்ளன. இக் கல்வெட்டுகள் மூலம் பிற்காலச் சோழா், பாண்டியா், காடவராயா், சம்புவரையா் மற்றும் விஜயநகர மன்னா்களின் திருக்கோயில் கொடைகள் குறித்த செய்திகளை அறிந்துகொள்ள முடிகின்றது. முற்காலச் சோழா் காலம் முதல் தமிழக வரலாற்றினை அறிந்துகொள்ள உதவும் அரிய ஆவணங்களாக இவை உள்ளன.
இக்கோயிலின் பழமையான கல்வெட்டு உத்தமசோழன் காலத்துக் கல்வெட்டாகும்.
அடுத்து முதலாம் குலோத்துங்க சோழன் விக்கிரம சோழன் காலத்துக் கல்வெட்டுகள் ஏராளமாக உள்ளன. விக்கிரம சோழ மன்னனின் காலத்தில் தான் (கி.பி 1118−35) மலை மீது உள்ள திருக்கோயில் புனரமைக்கப்பட்டுக் கற்றளியாக திருப்பணி செய்யப் பட்டுள்ளது.
இக்கோயிலுக்கு மிகுதியான திருப்பணிகள் செய்தகாக்கு நாயகனின்திருவுருவச் சிலையும் கோயிலின் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டபெரியான் திருவனான சிறுத்தொண்டன்திருவுருவச் சிலையும் திருக்கோயிலின் அா்ச்சகரானதிருச்சிற்றம் பலமுடையான் அன்பா்க்கரசு பட்டனதுதிருவுருவச் சிலையும் சிற்பங்களாக இக்கோயிலில் செதுக்கப்பட்டுள்ளன.




கோயில் கல்வெட்டுகளில் பெருமுக்கல், “ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து ஒய்மா நாடான விசைய இராசேந்திர வளநாட்டு பெருமுக்கிலான கங்கை கொண்ட நல்லூா்என்று குறிப்பிடப்படுகிறது. முதலாம் இராசேந்திரன் காலத்தில் பெருமுக்கல், கங்கை கொண்ட நல்லூர் என்று அழைக்கப் பட்டிருக்கலாம்

பெருமுக்கல் கோட்டை.
ஆற்காடு நவாபின் ஆளுகைக்கு உட்பட்டு 18ஆம் நூற்றாண்டில் ஹைதர் அலிகான் பெருமுக்கல் பகுதியை ஆட்சி புரிந்துள்ளார். அவர்காலத்தில் சந்தா சாஹிப் மகனது திருமணம் 1747 வருடம் டிசம்பா் மாதம் புதுச்சேரியில் நடைபெற்றுள்ளது. இத்திருமண விழாவில் புதுச்சேரியின் பிரெஞ்சு ஆளுநா் கலந்துகொள்ள வேண்டுமென பெருமுக்கலை ஆண்ட ஹைதர் அலிகான் நேரில் சென்று தங்க நகைகளைப் பரிசளித்து அழைப்பு விடுத்ததாக புதுவை ஆனந்தரங்கப் பிள்ளையின் டைரிக்குறிப்பு தெரிவிக்கின்றது.
ஹைதர் அலிகான் பிரெஞ்சு அரசாங்கத்திற்கு ஆதரவாக இருந்ததால் ஆங்கிலேயரின் பகையை எதிர்கொள்ள நேரிட்டது. புதுச்சேரியைக் கைப்பற்ற பிரிட்டிஷ் தளபதி கர்னா் அயா்கூட் தலைமையில் பெரும்படை 1760 ல் பெருமுக்கல் கோட்டையைத் தாக்கி அங்கிருந்த செல்வங்களைக் கொள்ளை யடித்துக் கோட்டையையும் கைப்பற்றியது.
பின்னா் 1780 ல் மைசூரை ஆண்ட ஹைதா் அலியின் படைகள் பெருமுக்கல் கோட்டையைக் கைப்பற்றின. மீண்டும் 1783 ல் பெருமுக்கல் கோட்டை ஆங்கிலேயா் கட்டுப்பாட்டிற்குச் சென்றது.
1790ல் ஹைதர் அலியின் மகன் திப்புசுல்தான் மீண்டும் ஆங்கிலேயரிடமிருந்து இக்கோட்டையைக் கைப்பற்றினார். அடுத்த சில ஆண்டுகளில் மீண்டும் பெருமுக்கல் கோட்டை பிரிட்டிஷ் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.
18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடர்ந்து பல முறை போரின் கோரத் தாக்குதலுக்கு உள்ளான பெருமுக்கல் கோட்டை சிதைந்து சின்னாபின்னமாக இப்பொழுதும் காட்சியளிக்கிறது.

சனி, 23 நவம்பர், 2019

கோட்டக்குப்பம் பேர் பெற்ற ஊர் - நூல் அறிமுகம்

கோட்டக்குப்பம் பேர் பெற்ற ஊர் - நூல் அறிமுகம்

முனைவர் நா.இளங்கோ
தமிழ்ப் பேராசிரியர்
புதுச்சேரி

வரலாறு என்பது மனிதகுல நினைவுகளின் தொகுப்பு. வரலாறு கடந்த காலங்களோடு உறைந்து விடுவதில்லை அது நிகழ்காலத்திலும் தொடர்ந்து எதிர்காலத்டும் நீட்சிபெற்று விளங்குகிறது. பொதுவாக நாம்காணும் வரலாறுகள் பலவும் கடந்தகாலத்தோடு உறைந்துவிட்ட தரவுகளிலிருந்தே கட்டமைக்கப் படுகின்றன.பேரரசுகளின், பேரரசர்களின் போர், வெற்றி, வீரம் இவற்றோடு மட்டுமே வரலாறுகள் முழுமை பெறுவதில்லை. அது மக்களைச் சார்ந்து எழுதப்படவேண்டும். மக்களின் வாழ்க்கையும் அதற்கான போராட்டங்களும் வரலாற்றின் பக்கங்களில் அருகியே காணப்படுகின்றன. உயிரோட்டமுள்ள மக்கள் வாழ்க்கைப் பதிவுகள் வரலாற்றின் பக்கங்களை நிரப்பும்பொழுதுதான் வரலாறு முழுமை பெறுகிறது. புதைபொருட் சின்னங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள் நாணயங்கள் இலக்கியங்கள் முதலான தரவுகளிலிருந்தே வரலாறுகள் எழுதப்பட்டாலும் வரலாற்று ஆசிரியனின் வர்க்க. மொழி, இனச் சார்புகளின் அடிப்படையிலேயே வரலாறுகள் கட்டமைக்கப் படுகின்றன. இதுகாறும் வரலாறென அறியப்பட்ட தெல்லாம் ஆள்பவர்களால் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட, நியாயப்படுத்த எழுதப்பட்ட வரலாறுகளே ஆகும். அது தேசிய வரலாறானாலும் மாநிலங்களின் வரலாறானாலும் வென்றவர்களின் வரலாறாகவே அமைந்து விடுகிறது. அரசியல் வரலாறுகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தனவோ அதைவிட முக்கியத்துவம் உடையன சமூக வரலாறுகள். மக்கள் சமூகத்தின் வரலாறுகள் உள்ளூர், வட்டார வரலாறுகளிலிருந்து தொடங்க வேண்டும்.

இருபத்தொராம் நூற்றாண்டின் கடந்த பதினைந்தாண்டுகளில் இந்திய வரலாறு எழுதுதலில் இரண்டு எதிரெதிரான புதிய போக்குகள் வேகங்கொள்ளத் தொடங்கியுள்ளன.

ஒன்று: வலதுசாரித் தன்மையுள்ள பௌராணிக நம்பிக்கைகளில் இருந்து கட்டமைக்கப்படும் வரலாறுகள். அது வரலாற்று உண்மைதானா என்று ஆராய்வது அவர்களுக்கு முக்கியமல்ல. அவர்கள் கட்டமைத்திருக்கும் நினைவுகளே வரலாறு என்பதாகத் தொடர்ந்து எழுதியும் பேசியும் புதிய வரலாற்றைப் புனைவதே முக்கியமானதாகும். நினைவுகளைக் கொண்டு உருவாக்கப்படும் இத்தகு வரலாற்றை அவர்களே ஒருகட்டத்தில் நம்பத் தொடங்கி விடுவார்கள். கட்டமைக்கப்படும் இவ்வகை வரலாற்றின் அடிப்படையிலேயே அவர்களின் அரசியல் இயங்கும்.

இரண்டாவது: ஓரளவு இடதுசாரித் தன்மையுள்ள வர்க்கங்களின் முரணிலிருந்து வெளிப்படும் வரலாற்றைப் பதிவுசெய்வது. அரசு, அதிகார வர்க்கத்தின் வரலாறாக இதுவரை வெளிவந்துள்ள வரலாறுகளுக்கு மாற்றாக ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றை எழுதுவது. மையத்திலிருந்து வரலாற்றைப் பார்க்காமல் விளிம்புகளிலிருந்து வரலாற்றை உருவாக்குவது. விளிம்புநிலை மக்களிடமிருந்து தொடங்கும். இத்தகு ஆய்வுகளில் ஒருவித வட்டாரத் தன்மை மேலோங்கியிருக்கும். இவ்வகை உள்ளூர், வட்டார வரலாறுகள் சாமானிய மக்களின் வாழ்க்கையோடு அணுக்கமாகப் பயணம் செய்வதோடு அவர்களின் தொழில், உணவு, புழங்கு பொருட் பண்பாடு, பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், சடங்குகள், வழிபாடு, கலைகள் முதலான உயிரோட்டமுள்ள வாழ்வியலைப் பதிவுசெய்யும். அண்மைக் காலத்தின்தான் உள்ளூர் வரலாறுகள் மற்றும் இதுவரைப் பதிவுபெறாத வட்டார ஆளுமைகள் குறித்த வரலாறுகள் தமிழகச் சூழலில் வெளிவரத் தொடங்கியுள்ளன.

கோட்டக்குப்பம் பேர்பெற்ற ஊர் எனும் தலைப்பிலான இந்த நூல் கோட்டக்குப்பம், ஜாமிஆ மஸ்ஜித் 150 –வது ஆண்டு பாரம்பரிய விழா வெளியீடாக வெளிவருகின்றது. இந்நூலாசிரியர் கோட்டை கலீம்அவர்கள் தொண்ணூறு ஆண்டு பழமைவாய்ந்த கோட்டக்குப்பம் அஞ்சுமன் நுசுரத்துல் இசுலாம் நூலகத்தின் பொறுப்பாளர் ஆவார். இசுலாமிய மார்க்கச் சிந்தனைத் தளத்திலும் அரசியல் சமூகச் செயற்பாட்டுத் தளத்திலும் மிகச் சிறப்பாகச் செயலாற்றி வருபவர். மத நல்லிணக்கப் பணிகளில் எப்பொழுதும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு பணியாற்றி வரும் தோழர் கோட்டை கலீம்ஒரு முற்போக்குச் சிந்தனையாளரும் கூட. சரியான வரலாற்றைப் பதிவு செய்வதிலும் புதிய வரலாற்றை உருவாக்குவதிலும் அவர் முனைப்போடு செயல்படுவார். மதநல்லிணக்கத் தோழர்களை இணைத்துக் கொண்டு செயலாற்றுவதில் அவரின் தலைமைப்பண்பு தெற்றெனப் புலப்படும். அண்மைக் காலமாகத் தொடர்ந்து முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் இந்திய மதவாதச் சக்திகளுக்கு எதிராக அவர் நடத்திவரும் கருத்துப் போராட்டம் பலரின் கவனத்தை வெகுவாக ஈர்த்துவருகிறது. கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகத்தின் பெருமைகளை உலகறியச் செய்யும் நோக்கோடு அவர் ஆற்றிவரும் பணிகள் பாராட்டுதற்குரியன.

கோட்டக்குப்பம் பேர்பெற்ற ஊர் எனும் தலைப்பிலான இந்த நூல் தோழர் கோட்டை கலீமின் அரிய முயற்சியாலும் கடின உழைப்பாலும் இன்று நூலாக்கம் பெற்று கோட்டக்குப்பம் சிற்றூர் இசுலாமிய மக்களின் வரலாற்றை, வாழ்வியலை மிக அழுத்தமாகப் பதிவுசெய்கின்றது. இந்நூலில் இடம்பெற்றுள்ள செய்திகளைக் கோட்டக்குப்பத்தின் வரலாறு, கோட்டக்குப்பம் மக்களின் வாழ்வியல் என்ற இரண்டு பொருண்மைகளின் கீழ் நாம் பகுக்க முடியும்.

கோட்டக்குப்பத்தின் வரலாறு: 1. கோட்டைக் கதவு 2. வேர்கள் 3. ஊரும் நிர்வாகமும் 4. உள்ளாட்சி நிர்வாகம் 5. அரசியல் 6. தொழிலும் பிழைப்பும்என்ற ஆறு தலைப்புகளிலும்கோட்டக்குப்பம் மக்களின் வாழ்வியல்: 1. பசியும் உணவும் 2. ஆடைக் கலாச்சாரம் 3. கடிதங்கள் 4. பெயர்பெற்ற வீடுகள் தெருக்கள் 5. வட்டார வழக்குகள் 6. அளவையும் அறவையும் 7. கல்யாண வைபோகமே 8. திண்ணை தர்பார் 9. கிணற்றடியும் குளத்தங்கரையும் 10. பாதையும் பயணமும் 11. சேவைத் தலங்கள் என்ற பதினொரு தலைப்புகளிலும் இந்நூலில் மிக விரிவாகப் பேசப்படுகின்றன.

இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளை நூலாசிரியர் அரசியல், வரலாறு, பண்பாட்டு மானிடவியல், புழங்குபொருள் பண்பாடு, சமூகவியல், மொழியியல், இடப்பெயராய்வு, நாட்டுப்புறவியல் முதலான பல அறிவுத்துறைகளின் துணையோடு எழுதியுள்ளமை பாராட்டுதற்குரியது. ஒவ்வாரு கட்டுரையும் நிறைவான தகவல்களோடு நூலாசிரியரின் கடும் உழைப்புக்கும் முயற்சிக்கும் சான்று பகர்வனவாய் அமைந்துள்ளமை இந்நூலின் தனிச் சிறப்பாகும்.

      கோட்டக்குப்பத்தின் வரலாறு பேசும் பகுதியில் இடம்பெற்றுள்ள அரசியல் என்ற தலைப்பிலான கட்டுரையும் கோட்டக்குப்பம் மக்களின் வாழ்வியல் பேசும் பகுதியில் இடம்பெற்றுள்ள திண்ணை தர்பார், கிணற்றடியும் குளத்தங்கரையும் என்ற தலைப்பிலான இரண்டு கட்டுரைகளும் என்னை வெகுவாகக் கவர்ந்த கட்டுரைகளாகும். அரசியல் என்ற தலைப்பிலான கட்டுரை பிரஞ்சிந்திய விடுதலைப் போரின் தளபதி மக்கள் தலைவர் சுப்பையாவின் பெருமைகளைப் பேசுவதோடு பிரஞ்சிந்திய விடுதலைக்குக் கோட்டக்குப்பம் மக்கள் ஆற்றியுள்ள அரும்பணிகளையும் மிக நேர்த்தியாகப் பதிவுசெய்கின்றது. திண்ணை தர்பார், கிணற்றடியும் குளத்தங்கரையும் என்ற இரண்டு கட்டுரைகளும் கோட்டக்குப்பம் மக்களின் வாழ்வியலை மிக அழகாகப் பதிவுசெய்வதோடு திண்ணையை ஆண்களோடும் கிணற்றடியைப் பெண்களோடு இணைத்துப்பார்த்து “கிணற்றடி பெண்ணடிமைத் தனத்தின் ஊற்றாக இருந்தது எனில், திண்ணை ஒருவகையில் ஆணாதிக்கத்தின் குறியீடு” என்று குறிப்பிடும் நூலாசிரியரின் வைர வரிகளோடுமிகச் சிறப்பாக எழுதப்பட்டுள்ளன.

      இந்நூலில் இடம்பெற்றுள்ள கல்யாண வைபோகமே என்ற கட்டுரை கோட்டக்குப்பம் திருமண விருந்து, திருமணச் சடங்குகள், நிகழ்த்துமுறை, திருமணப் பதிவு முதலான உட்தலைப்புகளில் இசுலாமிய மக்களின் திருமண முறைமை குறித்த முழுமையான தகவல் களஞ்சியமாக அமைந்து சிறக்கின்றது மேலும் பெயர்பெற்ற வீடுகள் தெருக்கள் என்ற தலைப்பிலான கட்டுரை ஊர்ப்பெயர், இடப்பெயர், குடும்பப்பெயர், மககட்பெயர் ஆய்வுகளைத் தம்மகத்தே அடக்கியுள்ள அரியதோர் கட்டுரையாக அமைந்துள்ளது.

கோட்டக்குப்பம் பேர்பெற்ற ஊர்நூலின் மற்றுமொரு தனிச்சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது இந்நூலின் மொழிநடை. நூலாசிரியர் தொடர்ச்சியாக சமூக ஊடகங்களில் எழுதிவருவதன் எதிரொலியாக இந்நூற் கட்டுரைகளின் பல இடங்களில் நையாண்டியும் பகடியும் களிநடம் புரிவதனைக் காண முடிகின்றது.

பின்வரும் நூலின் பகுதியை மேற்சொன்ன நூலாசிரியரின் மொழிநடைக்குச் சான்றாகக் காட்டலாம்,
“இதே மாதிரி பிரெஞ்சு இந்தியாவை ஒட்டிய எல்லையோரக் கிராமம் என்பதால் பேச்சில் பிரெஞ்சு ஆதிக்கமும் உண்டு. முகத்தில் பூசிக்கொள்ளும் மாவை (talcum powder)பூதரமாவு என்பார்கள். பூசிக்கொண்டால் பூதம் மாதிரி தெரிவதால் இந்தப் பெயர் என்று விபரமில்லாக் காலத்தில் விபரமாக நினைத்துக் கொண்டிருந்தோம். பின்னர்தான் ஆசிரியர்கள் புண்ணியத்தில் பிரெஞ்சு என்ற ஒரு மொழி உலகத்தில் பேசுறாய்ங்க. அப்படி பிரெஞ்சு கூறும் நல்லுலகைச் சேர்ந்தவங்க இங்க பாண்டிச்சேரியில் கொஞ்ச காலம் குப்பை கொட்டாம இருந்திருக்காங்க. அவங்க மொழியில் இந்த மாவுக்கு (talcum powder)பூதர் (poudre)என்று நாமகரணம் சூட்டியிருக்காங்க எனத் தெரிந்து தெளிவாயிட்டோம். அதன் காரணமாகவே இந்த மாவு பூதர மாவு என்று வழங்கப்பட்டது ஷாப் கடை என்பதைப்போல்”

நூலின் பெரும்பாலான பகுதிகளின் சற்றேறக்குறைய மேற்காட்டிய மொழிநடையை ஒட்டியதோர் நடையிலேயே நூலினை ஆக்கியுள்ளார் நூலாசிரியர். ஓட்டம் மிகுந்த இயல்பான பேச்சுநடை விரவிய மொழிநடையின் இடையிடையே இலக்கிய மேற்கோள்களையும் நாட்டுப்புறச் சொலவடை, பழமொழி முதலான வழக்குச் சொற்களையும் இணைத்து ஒருவகைக் கலப்பு நடையிலேயே நூல் அமைந்துள்ளமை வாசிப்பை இலகுவாக்குகின்றது.

நூலாக்கம் என்பது கடந்த காலங்களைப் போல் இன்றைக்கு கடினமாயில்லை. பார்வை நூல்களைத் தேடித் தேடி அலைந்து திரிய வேண்டிய தேவையில்லாமல் இணையத்திலேயே இன்றைக்குத் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. தகவல்களைத் திரட்டிப் பகுத்துப்பார்த்து உண்மைகளைத் தேடி நூல் எழுதிவிடலாம். ஆனால் இந்த நூல் அப்படிப்பட்டதல்ல. முழுமையான களப்பணியும் சரியான உற்றுநோக்கலும் இல்லாமல் இத்தகு நூல்களை உருவாக்க முடியாது. நூலாசிரியர் அரிதின் முயன்று ஆவணங்களைக் குடைந்து தேடியதோடு மட்டுமல்லாமல் களப்பணிகளின் மூலமாகவும் இவ்வரிய நூலை உருவாக்கியுள்ளார்.

கோட்டக்குப்பத்தைப் போன்றே ஒவ்வாரு கிராமத்திலும் பதிவுசெய்வதற்கு ஏராளமான சமூக அரசியல் அரசியல் பண்பாட்டுச் செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன. பயன்கருதாது உழைக்கும் நல்லவர்கள் ஒருசிலராவது இந்நூலின் தந்த ஊக்கத்தால் உழைப்பார்களானால் அதுவே இந்நூலுக்கு வெற்றி!


அரிதின் முயன்று நூலை உருவாக்கிய கோட்டை கலீமுக்குப் பாராட்டும் வாழ்த்தும்! இந்நூல் முயற்சிக்கு ஒத்துழைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி!

கோட்டை கலீம் (லியாகத் அலி)

வெள்ளி, 22 நவம்பர், 2019

சங்கராபரணி ஆற்றங்கரை நாகரிகம் - 27-11-2018

சங்கராபரணி ஆற்றங்கரை நாகரிகம்-1
கடந்த 27-11-2018 நானும் நண்பர் கோ.செங்குட்டுவனும் விழுப்புரம் மாவட்டம் செ.கொத்தமங்கலம் கிராமத்திற்குத் தொல்லியல் பயணம் மேற்கொண்டோம். (உடன் என்மகன் இ.மாறன், புகைப்படக் கலைஞர் ம.கிருஷ்ணா)
"சதிக்கல், தவ்வை" சிலைகளைப் பார்வையிட்ட பின் கொத்தமங்கலம் கிராமத்தை ஒட்டிய சங்கராபரணி ஆற்றங்கரைக்குச் சென்றோம். அங்கே பல்லாயிரக் கணக்கில் குவியல் குவியலாகப் பழங்காலப் பானையோடுகள். கருப்பு சிவப்பு, அடர்கருப்பு, சிவப்பு, பழுப்பு நிறங்களில் சுமார் கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பானையோடுகள். இதுவரைத் தொல்லியல் துறை மற்றும் வரலாற்று ஆய்வாளர்களின் கவனத்திற்கு வராத அரிய பொக்கிஷம்.
இங்கே நீங்கள் காணும் குவியலைப் போல் பல குவியல்கள் ஆங்காங்கே ஆற்றங்கரை எங்கும்...
முனைவர் நா.இளங்கோ- கோ.செங்குட்டுவன்

முனைவர் நா.இளங்கோ - கொத்தமங்கலம் களஆய்வு


சங்கராபரணி ஆற்றங்கரை நாகரிகம்-2
நீங்கள் காணும் பானையோடுகள் செ.கொத்தமங்கலம் சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ளன. இதே சங்கராபரணி ஆற்றங்கரையில்தான் திருவக்கரை, அரிக்கமேடு முதலான தொல்லியல் பகுதிகளும் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.
சங்கராபரணி ஆறு விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மலைத் தொடரின், மேற்கு சரிவில் உற்பத்தியாகிப் புதுச்சேரி, தேங்காய்த் திட்டு அருகே கடலில் கலக்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே தற்போது வீடூர் அணை கட்டப் பட்டுள்ளது. 
இந்த நதிக்கு வராக நதி, செஞ்சி ஆறு முதலான பெயர்களும் உண்டு. புதுச்சேரியில் இவ்வாறு சுண்ணாம்பாறு, அரியாங்குப்பம் ஆறு என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.

செஞ்சி அருகே, ஊரணித்தாங்கல் கிராமத்தை ஒட்டிய சங்கராபரணி ஆற்றங்கரையில், கி.மு., இரண்டாம் நுாற்றாண்டைச் சேர்ந்த, சாதவாகனர் கால செப்பு நாணயம் கிடைத்ள்ளது. (படம் இணைப்பில்)





சங்கராபரணி ஆற்றங்கரை நாகரிகம் -3
செ.கொத்தமங்கலம் சங்கராபரணி ஆற்றங்கரைக்குப் பல்லாயிரக் கணக்கில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பானையோடுகள் எப்படி வந்தன?
(பானையோடுகளின் காலத்தை கி.மு.3 ஆம் நூற்றாண்டு என்று உறுதிசெய்தவர் தொல்லியல் அறிஞர் பேராசிரியர் இரவிச்சந்திரன்)
கிடைக்கும் பானையோடுகள் ஆற்றின் மேற்பரப்பிலேயே குவியல் குவியலாகக் கிடைப்பதைப் பார்த்தால் அவை இந்த ஆற்றங்கரையின் ஏதோ ஒரு பகுதியிலிருந்து காலம் காலமாக ஆற்றின் நீரோட்டத்தால் கொண்டு வரப்பட்டு இங்கே குவிந்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.
செ.கொத்தமங்கலத்திற்கு வடமேற்கே ஆற்றங்கரையை ஒட்டி இரும்புக்கால (2300 ஆண்டுகளுக்கு முந்தைய) மனிதக் குடியிருப்பு ஒன்று இருந்துள்ளமையை நாம் உய்த்துணர முடிகிறது. முழுமையான தொல்லியல் ஆய்வே இதனை உறுதிப் படுத்த முடியும்.


சங்கராபரணி ஆற்றங்கரை நாகரிகம் -4
செஞ்சி மலைத் தொடரின், மேற்கு சரிவில் உற்பத்தியாகும் சங்கராபரணி ஆற்றுடன் பச்சமலை, மேல்மலையனூர் மலைச் சரிவுகளிலிருந்தும் வரும் நீர் தென்பாலை என்னுமிடத்தில் சேர்கிறது.செஞ்சியில் உற்பத்தியாவதால் செஞ்சி ஆறு என்றழைப்படும் இவ்வாற்றின் இரண்டாவது துணையாறு நரியார் ஓடை. இது ஊருணித்தாங்கல் கிராமத்திற்கருகில் சங்கராபரணியுடன் கலக்கிறது (இங்கேதான் சாதவாகனர்களின் செப்புக் காசு கிடைத்தது)
வல்லம் கிராமத்திற்கு அருகே இந்த ஆறு தென்கிழக்கு திசையில் திரும்புகிறது. வீடூர் என்னுமிடத்தில் இதனுடைய மூன்றாவது துணையாறு தும்பியாறு கலக்கிறது. இதனை அடுத்து இருப்பதுதான் வீடூர் நீர்த்தேக்கம்.
வீடூர் நீர்த் தேக்கத்திலிருந்து வெளியேறும் சங்கராபரணி மீண்டும் தென்கிழக்குப் பகுதியில் திரும்பி ராதாபுரம் என்னும் இடத்தில் பம்பையார் என்னும் துணை நதியை தன்னோடு இணைத்துக் கொண்டு அங்கிருந்து புதுச்சேரி பகுதிக்குள் நுழைந்து, செல்லிப்பட்டு என்ற இடத்தில பம்பை என்னும் துணை நதியை இணைத்துக் கொண்டு பயணிக்கிறது சங்கராபரணி ஆறு..
அன்னமங்கலம் ஆறு, நரியார் ஓடை, கொண்டியாறு, பம்பையார், பம்பை, குடுவையாறு ஆகிய ஆறு நதிகள் சங்கராபரணியின் துணை ஆறுகள்.
சங்கராபரணி ஆறு தோன்றும் செஞ்சி மலைச்சாரல் தொடங்கி கடலில் கலக்கும் புதுச்சேரி வரை இதன் கரையோரங்களில் செழித்து வளர்ந்த ஆற்றங்கரை நாகரிகத்தின் சுவடுகள் பல்லாயிரம் ஆண்டுப் பழமை வாய்ந்தன.
புதுச்சேரிப் பேரறிஞர் சுந்தர சண்முகனார் கெடிலக்கரை நாகரிகம் நூலை உருவாக்கியது போல் வருங்காலத் தலைமுறை சங்கராபரணி ஆற்றங்கரை நாகரிகம் என்ற அரிய வரலாற்று நூலை உருவாக்க வேண்டும் என்பதே எனது பேரவா.
செ.கொத்தமங்கலம் பகுதியின் வரலாற்றுத் தொன்மையை வெளிப்படுத்தும் இப்பதிவுகளின் முதன்மை நோக்கம் அரசும் தொல்லியல் துறையும் விரைந்து செயலாற்றி இப்பகுதியைப் பாதுகாத்து தொல்லியல் ஆய்வுகளை நிகழ்த்த வேண்டும் என்பதே.
இப்பதிவுகளின் வழியாக செ.கொத்தமங்கலம் பகுதியைப் பார்வையிட வரும் வரலாற்று ஆர்வலர்களும் சுற்றுலாப் பயணிகளும் வரலாற்றுத் தடயங்களைச் சிதைத்து அழித்துவிடாமல் பாதுகாக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.
-முனைவர் நா.இளங்கோ
முனைவர் நா.இளங்கோ - கொத்தமங்கலம் களஆய்வு

கொத்தமங்கலம் பானையோடுகள்

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...