ஞாயிறு, 21 டிசம்பர், 2014

வீரயுக மனப்பதிவுகளும் மகட்பாற் காஞ்சியும்



முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
கா.மா.பட்ட மேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8

தொல்காப்பியர் தம் புறத்திணையியல் காஞ்சித்திணையின் இருபது துறைகளில் ஒன்றாக மகட்பாற் காஞ்சி என்னும் துறையை அமைத்துள்ளார். பழந்தமிழகத்தின் முதுகுடி மன்னர்களுக்கும் புதிதாக மேலெழுந்து வந்த பேரரசுகளின் வேந்தர்களுக்கும் இடையிலான போராட்ட முரணாக இத்துறை தொல்காப்பியரால் வரையறுக்கப்படுகிறது.
நிகர்த்து மேல்வந்த வேந்தனொடு முதுகுடி
மகட்பாடு அஞ்சிய மகட்பா லானும் - தொல் பொருள். நூ.77. 14-15
முதுகுடித் தலைவன் மகளை மணம் செய்துகொள்ள வேண்டுமென்ற பெருவிருப்புடன் படையோடு வந்த வேந்தனுக்கு மகளைத் தரமறுத்தலே மகட்பாற் காஞ்சியாகும். ஒத்து மாறுபட்டுத் தன்மேல் வந்த வேந்தனொடு தன் தொல்குலத்து மகட்கொடை அஞ்சிய மகட்பாற் காஞ்சிஎன்று இந்நூற்பாவிற்குப் பொருளுரைப்பார் இளம்பூரணர்.
புறநானூற்றில் 336 முதல் 355 வரையுள்ள இருபது பாடல்கள் மகட்பாற் காஞ்சி என்னும் துறைக் குறிப்புகளோடு கிடைக்கின்றன. இப்பாடல்களைப் பாடியவர்கள் பரணர் (336, 341, 343, 348, 352, 354), கபிலர் (337, 347), அண்டர் நடுங்கல்லினார் (344,345), குன்றூர்க் கிழார் மகனார் (338), அள்@ர் நன்முல்லையார் (340), அரிசில் கிழார் (342), அண்டர்மகன் குறுவழுதியார் (346), மதுரை மருதனிளநாகனார் (349), மதுரை மேலக்கடைக் கண்ணம் புகுத்தாராயத்தனார் (350), மதுரைப் படைமங்க மன்னியார் (351), கடுமான் கிள்ளி (355), காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணனார் (353), பெயர் தெரியாப் புலவர் (339) ஆகியோர் ஆவர். இப்பாடல்களின் பாட்டுடைத் தலைவர்கள் தொல்குடி மன்னர்களாய்ஃ தலைவர்களாய் உள்ளனர். (தொல்குடி மன்னன் மகளே! புறம். 353) இவ்வகைப் பாடல்களில் பாட்டுடைத் தலைவர்களின் பெயர்களோ மகள்கொடை வேண்டிய வேந்தர்களின் பெயர்களோ பாடல்களில் மட்டுமல்லாது பாடல்களின் கொளுக்களில் கூட இடம்பெறவில்லை. இத்தொல்குடி மன்னர்களின் ஊர் மூதூர் எனக் குறிப்பிடப்படுகிறது. இவர்களிடம் மகள்கொடை வேண்டியவர்கள் அனைவரும் வேந்தர்கள் என்றே குறிப்பிடப்படுகின்றனர். வேட்ட வேந்தனும் (336), கொற்ற வேந்தர் வரினும் (338), வம்ப வேந்தர் (345), கடிய கூறும் வேந்தே (349), கடுமான் வேந்தர் (350) போன்று பன்னிரண்டு பாடல்களில் பெண்கேட்டவர்கள் வேந்தர்கள் என்ற குறிப்பு இடம்பெற்றுள்ளது.
புறநானூற்றில் இடம்பெற்றுள்ள மகட்பாற்காஞ்சி பாடல்களின் பொருண்மைக்குச் சான்றாக ஒரு பாடலினைக் காண்போம். இப்பாடல் இளம்பூரணரால் மகட்பாற் காஞ்சித் துறைக்குச் சான்றாகக் காட்டப்பட்ட சிறப்புடையது.
நுதிவேல் கொண்டு நுதல்வியர் துடையாக்
கடிய கூறும் வேந்தே தந்தையும்
நெடிய வல்லது பணிந்துமொழி யலனே
இஃதிவர் படிவ மாயின் வையெயிற்
றரிமதர் மழைக்க ணம்மா வரிவை
மரம்படு சிறுதீப் போல
அணங்கா யினள்தான் பிறந்த வூர்க்கே.    (புறம். 349)
திணை: காஞ்சி, துறை: மகட்பாற் காஞ்சி 
மதுரை மருதன் இளநாகனார் பாடியது.
தன் கைவேலின் கூரிய இலையால் தன் நெற்றி வியர்வையைத் துடைத்துக்கொண்டே வேந்தனும் கேட்டார் அஞ்சத் தக்க மொழிகளைக் கூறிநின்றான்;. இவள் தந்தையும் நெடு மொழிகளைத் தவிர பணிவைப் புலப்படுத்தும் சொற்களைச் சொல்லுகின்றான் இல்லை. இஃது இவர்கள் கொள்கை யாகும்;. இதனை ஆராயுங்கால்; கூரிய பற்களையும் அரிபரந்து மதர்த்துக் குளிர்ந்த கண்களையும் அழகிய மாமை நிறத்தையும் உடைய அரிவையாவாள்; மரத்தைக் கடையு மிடத்துத் தோன்றும் சிறுதீ அம் மரத்தை யழிப்பது போல, இவள் தான் பிறந்த ஊருக்கு அழிவைத் தருபவள் ஆயினாள்.
இப்பாடலில் பெண்கேட்கும் வேந்தனுக்கும் பெண்கொடுக்க மறுக்கும் தந்தைக்குமான மோதல் கோபத்துடன் கூடிய மொழிகளாக இருதரப்பிலிருந்தும் வெளிப்படுகின்றன. இம்மோதலும் முரணும் அடுத்தகட்டப் போருக்கான அடித்தளமாய் அமைந்துவிட இவர்களுக்கிடையே போர் உறுதியாவதோடு, போரில் வேந்தன் வெல்லப்போவதும் உறுதியாகிறது. வெற்றிபெற்ற வேந்தன் இவளின் ஊரை அழிப்பதும் கட்டாயம் நிகழும். எனவே அழகான இந்தப்பெண் தான் பிறந்த ஊரையே அழித்த பழிக்கு ஆளாவாள் என்னும் பொருளில்; மருதன் இளநாகனார் இப்பாடலை யாத்துள்ளார்.
புறநானூற்று மகட்பாற் காஞ்சி பாடல்களில் இடம்பெறும் செய்திகளை,
1.     முதுகுடி மன்னர் வேளாண் குடியினர்.
2.     மகட்கொடை வேண்டியோர் வேந்தர்கள்.
3.     தந்தை, தமையர் மகட்கொடை தர மறுத்தல்.
4.     மூவேந்தர் போர் தொடுத்தல்.
5.     முதுகுடி மன்னர்களுக்குக் குறிப்பிட்ட சமுதாயத்தோடு
 இருந்த திருமண உறவு.
6.     ஊரது அழிவு.
7.     தாயையும் மகளையும் ஓர் அழிவுக்குக் காரணமாய்க் காட்டுதல்.
8.     மகட்கொடை வேண்டிப் பொருள் தரல்.
9.     பொருளை முதுகுடி மன்னர் மறுத்தல்.
10.   முதுகுடி மன்னர் பெயர்கள் குறிப்பிடப் பெறாமை.
என்ற பத்துவகைப் பொருட் பாகுபாட்டுக்குள் அடக்கி வகைப்படுத்தியுள்ளார் பெ.மாதையன். (சங்க இலக்கியத்தில் வேளாண் சமுதாயம், பக். 63-64)
                மேலே காட்டப்பட்டுள்ள மகட்பாற் காஞ்சி பொருட் பாகுபாட்டினை ஊன்றி நோக்கிச் சில உண்மைகளை நாம் உய்த்துணர வேண்டியுள்ளது. பெண்கேட்ட வேந்தர்கள், பெண்கொடுக்க மறுத்த மன்னர்கள் என்ற இவர்களைப் பற்றிய எந்தவகை வரலாற்றுக் குறிப்பும் இல்லாமல் ஒருவகைப் புனைவுத் தன்மையோடு படைத்து மொழியப்பட்டுள்ள இவ்வகைப் பாடல்களை அகப்பாடல்களுக்கே உரிய நாடக வழக்கு உலகியல் வழக்குகளின் இணைவில் தோன்றும் புலனெறி வழக்குப் பாடல்களாகக் கொள்வதே பொருத்தமாயிருக்கும். எல்லா மகட்பாற்காஞ்சிப் பாடல்களும் போர் ஏற்படக்கூடும், ஊர் அழியக்கூடும் என்று பேசுகின்றனவே அல்லாமல் போர் நடந்ததாகவோ அழிவு ஏற்பட்டதாகவோ ஒரு பாடலிலும் சித்திரிக்கவில்லை. சில பாடல்கள் போருக்கான ஆயத்தங்களை அவலச்சுவை தோன்ற விவரிக்கின்றன. வேறு துறைகளில் அமைந்த புறநானூற்றின் பல பாடல்கள் (புறம். 6, 7, 16, 57) பகைமன்னர்களின் ஊர், நீர்நிலை, விளைநில அழிப்புகளை மிக விரிவாகப் பாடியுள்ள சூழலில் மகட்கொடை மறுத்த தொல்குடி மன்னர்களின் ஊரை வேந்தர்கள் அழித்தார்கள் எனப் புலவர்கள் பாடாமைக்குக் காரணம் சிந்திக்கத்தக்கது. போர் மூண்டால் போரிடும் வேந்தர் - தொல்குடி மன்னர் இருவரில் யார் வேண்டுமானாலும் வெற்றிபெற வாய்ப்புண்டு. ஆனால் புலவர்கள் ஒரு திட்டமிட்ட ஒரு வாய்பாட்டுத் தன்மையில் வேந்தனால் தொல்குடி ஊர் அழிக்கப்படும் என்ற தொனியிலேயே பாடல்களை யாத்தமையும் இங்கே கூர்ந்து நோக்கத்தக்கது.
                மகட்பால் துறையில் பாடப்பட்டுள்ள புறுநானூற்றுப் பாடல்களில் மகள்கொடை மறுத்துப் போருக்கு ஆயத்தமாகும் தந்தையர்கள் பெரிதும் மென்புல வேளாண் குடியினத் தலைவனாகவும் மதில்கள் சூழ்ந்த மருதநிலத் தலைவனாகவும் தண்பணைக் கிழவன் தந்தை (342), “பன்னல் வேலிப் பணை நல்லூரே (345), “ஓரெயில் மன்னன் ஒரு மடமகளே (338), “இஞ்சிக் கதுவாய் மூதூர் (350) என்று சித்திரிக்கப்பட்டிருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.
                மகட்பாற் காஞ்சிப் பாடல்களைப் பாடிய புலவர்களின் காலப்பின்னணி குறித்து விரிவாக ஆய்வு செய்துள்ள பெ.மாதையன் அவர்கள், மகட்பாற் காஞ்சி பாடிய புலவர்கள் பெரும்பாலும் வேந்தர் சமுதாயம் சார்ந்த புலவர்களாகவே உள்ளனர் என்றும் முதுகுடி மன்னரிடம் மகட்கொடை வேண்டிய வேந்தரைப் பற்றிய குறிப்புகள் இடம்பெற்ற பாடல்களில் உறந்தையைத் தித்தனும் கூடலை அகுதையும் ஆண்டதாய்க் காட்டப் பட்டிருப்பதும் இவர்களின் ஊர்வளம் முதுகுடி மன்னர்களின் மகள்களுக்கு உவமையாய்க் காட்டப்பட்டிருப்பதும் இந்த அரசர்கள் அந்தக் காலத்தில் வேந்தர்களைக் காட்டிலும் செல்வாக்குடைய அரசர்களாய் இருந்துள்ளனர் என்பதற்குச் சான்றுகள் ஆகின்றன என்றும் ஒருபுறம் செல்வாக்குடன் முதுகுடி மன்னர்கள் வாழ்ந்த காலத்திலேயே மறுபுறம் வேந்தர்கள் தமது பேரரசை நிறுவத் தொடங்கியிருந்தார்கள், அவர்கள் நிலஎல்லைப் பெருக்க நோக்கில் முதுகுடி மன்னர்களின் வேளாண் ஊர்களைக் கவர முயன்றதன் அடையாளங்களைத்தான் மகட்பாற் காஞ்சிப் பாடல்கள் காட்டுகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார். (சங்க இலக்கியத்தில் வேளாண் சமுதாயம், பக். 79-85)
                மகட்பாற் காஞ்சிப் பாடல்கள் புனைந்துரைக்கும் வேளாண் தொல்குடி மன்னர் X வேந்தர் என்ற முரண் சித்திரிப்பின் பின்னுள்ள புலமை அரசியலை இனிக் காண்போம்.
                மகள் கொடை மறுப்பு, மகட்பாற் காஞ்சிப் பாடல்களின் பின்புலம் குறித்து க.கைலாசபதி அவர்கள் சுட்டியுள்ள சில செய்திகள் வருமாறு; கிறித்து சகாப்தம் தொடங்குவதற்கு ஏழெட்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர், தமிழக வரைப்பிலே நூற்றுக்கணக்கான குலமரபுக் குழுக்கள் சிதறிக்கிடந்தன. காலப்போக்கில் இக்குலங்களிலிருந்து மூன்று அரசுகள் உருவாயின. முடியுடை வேந்தர் தலைதூக்கினர். பழைய குலங்கள் பன்னெடுங்காலமாக மரபு முறைப்படி வாழ்ந்து வந்தவை. அவற்றிற்குக் குலப்பெருமை இருந்தது. புதிய வேந்தர்கள் போர், கொள்ளை, கொலை முதலியவற்றால் முன்னுக்கு வந்தவர்கள். அவர்கள் வம்பவேந்தர் (புறம்: 345). பெண்கேட்டு நிற்பவர்கள் செல்வம் நிறைந்த வேந்தர்களாயிருந்தும் பழைய குலப்பெருமை, ஆண்மை முதலியவற்றால் ஒவ்வாதார் ஆதலின் அவருக்குப் பெண்கொடுக்க மறுக்கின்றனர். இவ்வாறு பழைய மரபில் வந்த சில கிளைச் சமுதாயத்தினர் புதிய வேந்தருக்குப் பெண் கொடுக்கவும் மறுக்கும் சமுதாய மாற்ற நிலையில் புதிய வேந்தருக்குப் பக்கபலமாகப் பிரசாரம் செய்தனர் புலவர். (பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும், பக். 20-23)
                கைலாசபதி அவர்கள் குறிப்பிட்டுள்ளது போல் வம்ப வேந்தர் புகழ்பாடும் புலமை மரபினரின் ஒருவகைப் பிரச்சார உத்தியே மகட்பாற் காஞ்சிப் பாடல்கள். பாணர் மரபு அழிந்து புலமை மரபு மேலோங்கிய வேந்தர் காலத்துப் புதிய படைப்பாக்கங்களே இவ்வகைப் பாடல்களெனக் கொள்ளலாம்.
                இனி, புறநானூற்று மகட்பாற் காஞ்சிப் பாடல்களில் பதிவாகியுள்ள பாணர் மரபின் வீரயுக மனப்பதிவுகளையும் புலமை மரபின் பேரரசுக் கட்டமைப்புக்கான புலமைத் தொழிற்பாட்டையும் வேறுபடுத்திப் பார்ப்போம்.
                புறநானூற்று மகட்பாற் காஞ்சிப் பாடல்கள் மகட்கொடை மறுக்கும் தந்தை தனயர்களின் சித்தரிப்பு பழைய வீரயுக மதிப்பீடுகளின் பதிவுகளாக இடம்பெற்றுள்ளன. உலக வீரயுகப் பாடல்களை ஆராய்ந்து வீரயுகப் படைப்புகளின் பொதுவான அம்சங்கள் என்று சி.எம்.பௌரா அவர்கள் குறிப்பிட்டுள்ளவற்றுள் முக்கியமானதோர் அம்சம் பாடலின் தலைமகன் வீரபுருடன், புகழெனின் உயிரும் கொடுக்கும் அவனது ஆண்மையும் புகழுமே பாடலின் விழுமிய பொருளாய் இருத்தல்(ஒப்பியல் இலக்கியம், ப.81). மகட்கொடை மறுக்கும் தந்தை மற்றும் தனயன்மார்கள் கொற்ற வேந்தன் வரினும் தற்றக வணங்கார்க் கீகுவ னல்லன் (338), “தந்தையும் நெடிய வல்லது பணிந்து மொழியலனே (349), “வேந்து குறையுறவுங் கொடாஅன் (341), “பணிந்து வந்து கொடுப்பினும் புரைய ரல்லோர் வரையலள் இவளென (343), “செல்வம் வேண்டார் செருப்புகல் வேண்டி (345) என்றெல்லாம் பேசும் வீரமொழிகள் தொல்குடி சமூகத்தின் வீரயுக மனப்பதிவுகளாக இவ்வகைப் பாடல்களில் வெளிப்பட்டுள்ளமை கண்கூடு.
மகட்பாற் காஞ்சிப் பாடல்கள் உண்மையில் யாரைப் புகழ்கின்றன?. ஊரை அழிக்கக் காத்திருக்கும் வேந்தர்களையா? அல்லது பெண்கொடுக்க மறுத்து அதனால் தானும் ஊரும் அழிந்தாலும் கவலையில்லை என்று பழைய குடிமரபுகளைக் காப்பாற்றத் துடிக்கும் தொல்குடித் தலைவர்களையா? புலவர்கள் திறம்படத் தம் புலமைத் தொழிற்பாட்டை இவ்வகைப் பாடல்களில் வெளிப்படுத்தியுள்ளார்கள். ஒருபக்கம் வீரயுக மதிப்பீடுகளைச் சுமந்து வாழும் தொல்குடிச் சமூகத்தின் மாண்புகளைப் பாணர்களாக நின்று புகழ்ந்து பாடும் தொனியும் இன்னுமொரு பக்கம் வேந்தர்களின் பேரழிவுப் போர்களுக்குத் தாக்குபிடிக்க முடியாமல் நீங்கள் அழியப்போவது உறுதி எனவே, நீங்கள் புத்திசாலித்தனமாக முடிவெடுத்துக் கொள்ளுங்கள் என்று புலவர்களின் செவியறிவுறூஉவாகப் பாடும் தொனியும் என்ற இரண்டு தொனிகளும் இணைந்து ஒலிப்பதுதான் இவ்வகைப் பாடல்களின் தனிச்சிறப்பு.
மகட்பாற் காஞ்சிப் பாடல்களின் இந்த இரண்டு அடுக்குகளுக்கு மேலாக மற்றுமோர் அடுக்கும் இவ்வகைப் பாடல்களில் உண்டு. அந்த அடுக்குதான் கட்டுரையின் தொடக்கத்திலேயே குறிப்பிட்டதுபோல் இவ்வகைப் பாடல்களை அகப்பாடல்களுக்கே உரிய நாடக வழக்கு உலகியல் வழக்குகளின் இணைவில் தோன்றும் புலனெறி வழக்குப் பாடல்களாகக் கொள்ளலாம்  என்ற புலனெறிப் பாங்கிலான படைப்பாக்க உத்தி. தொல்குடித் தலைவர்கள் ஓ வேந்தர்கள் இடையிலான முரணுக்கு நடுவே இவ்வகைப் பாடல்களை அகப்பாடல்களுக்கே உரிய ஒருவகை புனைவுப் பாங்கிலும் புலவர்கள் உருவாக்கியுள்ளனர். மகட்கொடைக்குரிய பெண்ணின் அழகைப் புனைந்து சிறப்பிப்பதை எல்லாப் பாடல்களும் ஒரு வாய்பாடு போலத் தொடர்ந்து செய்கின்றன. திருநயத்தக்க பண்பின் இவள் நலனே (342), அரிமதர் மழைக்கண் அம்மா அரிவை (349), நேரிழை உருத்த பல்சுணங் கணிந்த மருப்பிள வளமுலை ஞெமுக்குவோரே (337) முதலான வருணனைகள் பாடல்தோறும் அப்பெண்ணின் உருவ எழிலை விதந்து பேசுகின்றன. மகட்கொடை வேண்டிநின்ற ஒரு வேந்தன் வழியிடையே அப்பெண்ணைக் கண்டு அவள் அழகில் மயங்கி
கானக் காக்கைக் கலிச்சிற கேய்க்கும்
மயிலைக் கண்ணிப் பெருந்தோட் குறுமகள்
ஏனோர் மகள்கொல் இவளென விதுப்புற்று            (புறம்: 34)
இவள் யாரோ என்று வியந்ததாக, நாடக பாணியில் ஒரு பாடல் பெண்ணின் அழகினைச் சிறப்பிக்கின்றது. இத்தகு சித்திரிப்புகள் இவ்வகைப் பாடல்களின் அகப்பொருட் சாயலுக்குப் பொருத்தமான சான்றுகளாக அமைகின்றன.
நிறைவாக: புறநானூற்று மகட்பாற் காஞ்சிப் பாடல்களின் முழுமையான பொருள் விளக்கத்திற்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டியனவாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். இப்பாடல்கள்,
1. பாணர்மரபினைப் பின்பற்றி வீரயுக மனப்பதிவுகளையும் தொல்குடி   மதிப்பீடுகளையும் சித்திரிக்கின்றன.
2. புலவர் மரபில் நின்று வம்ப வேந்தர்களின் அரச கட்டமைப்புக்குத் துணைபுரியும் பாங்கில் பிரச்சாரம் செய்கின்றன.
3. அகப்பொருள் பாடல்களுக்கே உரிய புலனெறிப் பாங்கிலான உத்திகளுடன் புலமைமரபு மேலோங்கப் படைக்கப்பட்டுள்ளன.
இம்மூன்று பொருண்மை அடுக்குகளையும் தனித்தனியே இனங்கண்டு வாசிப்பதில்தான் மகட்பாற் காஞ்சிப் பாடல்களின் வெற்றி அமைந்துள்ளது.  

செவ்வாய், 16 டிசம்பர், 2014

காமற் கடந்த வாய்மையள் (மணிமேகலை)


முனைவர் நா.இளங்கோ
தமிழ்த் துறைத்தலைவர்
அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி
காரைக்கால் - 609602

மணிமேகலை, தமிழில் தோன்றிய முதல் பெண்மையக் காப்பியம். ஒரு பெண்ணின் பெயரால் அமைந்த முதல் காப்பியமும் இதுவே. இக்காப்பியத்தின் முதன்மைப் பாத்திரங்களும் துணைமைப் பாத்திரங்களும் பெரிதும் பெண்களே. ஆபுத்திரன், உதயகுமாரன் முதலான ஆண் பாத்திரங்கள் காப்பியத்தில் உண்டு எனினும் கதையின் மையம் மணிமேகலை, மாதவி, சுதமதி, மணிமேகலா தெய்வம், காயசண்டிகை, சித்திராபதி, ஆதிரை முதலான பெண் பாத்திரங்களைச் சார்ந்தே இயங்குகின்றன. மேலும் கணிகையர் குலத்து மணிமேகலையைக் காப்பியத் தலைவியாக்கிப் புதுமையும் புரட்சியும் நிகழ்த்திய பெருமையும் இக்காப்பியத்திற்குண்டு.
மணிமேகலைக் காப்பியத்தை இயற்றியவர் மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார். இப்பெயரைக் கொண்டு இவரது ஊர் சீத்தலை என்றும் இவர் மதுரையில் கூல வாணிகம் செய்து வந்தவர் என்றும் அறிகிறோம். பௌத்த மதப் பரப்பலுக்காக ஒரு தனிக் காவியமே படைத்த இச்சாத்தனார் ஒரு பௌத்த நெறியாளர். இவரது காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி என்பார் மயிலை சீனி வேங்கடசாமி. தமிழின் முதல் காப்பியம் என்ற பெருமைக்குரிய சிலப்பதிகாரமும் சாத்தனாரின் மணிமேகலையும் கதைத் தொடர்ச்சியால் இரட்டைக் காப்பியங்கள் என்றழைக்கப்படுகின்றன. சிலப்பதிகாரத்தின் முப்பெரும் கதை மாந்தர்களாம் கண்ணகி, கோவலன், மாதவி மூவரில் கோவலன் மாதவி இருவருக்கும் பிறந்த மகளே மணிமேகலை. இவளே மணிமேகலைக் காப்பியத்தின் தலைவி.
காப்பியத் தலைவி மணிமேகலையை மாதவியின் கூற்றில் வைத்துக் காப்பியம் அறிமுகம் செய்யும் பகுதி பின்வருமாறு:
காவலன் பேர்ஊர் கனைஎரி ஊட்டிய
மாபெரும் பத்தினி மகள் மணிமேகலை
அருந்தவப் படுத்தல் அல்லது யாவதும்
திருந்தாச் செய்கைத் தீத்தொழில் படாஅள்        (2:54-57)
- இவ்வடிகளில் மணிமேகலையைக் கண்ணகி மகள் என்று சிறப்பிப்பதோடு இவள் தவத்திற்குரியவள் என்றும் கணிகையாகத் தீத்தொழில் புரிந்து வாழமாட்டாள் என்றும் மாதவி தெளிவுபடுத்துகின்றாள். ஆக மணிமேகலை, தாய் மாதவியால் ஆடலும் பாடலும் கூடிய பரத்தமை வாழ்க்கையிலிருந்து விடுவிக்கப்பட்டுத் தவ வாழ்க்கைக்கு உரியவளாகிறாள். இது மாதவியின் விருப்பம். மணிமேகலை தவ வாழ்க்கையை விரும்பி ஏற்றாளா? இல்லையா என்பது காப்பியத்தில் பேசப்படவில்லை.
                காப்பியத்தில் மணிமேகலையின் அறிமுகம் அவளின் கண்ணீரோடுதான் தொடங்குகிறது. கண்ணீருக்குக் காரணம், தோழி வயந்தமாலையிடம் மாதவி சொல்லிய கோவலன் கண்ணகியர் அடைந்த பெருஞ்சோகம் குறித்த விவரிப்பு. தாயின் துயரத்தோடு ஒன்றிக் கண்ணீர் வடிக்கிறாள் மணிமேகலை. ஒரு காப்பியத் தலைவியைக் கண்ணீரோடு அறிமுகம் செய்யும் சாத்தனாரின் உட்குறிப்பு கதையின் ஊடாக மணிமேகலையைத் தொடர்வோருக்கே புலப்படக்கூடியது.
                காவியத்தின் தொடக்கத்தில் உவவனத்திற்கு மணிமேகலை வந்துள்ளாள் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு அவளைச் சந்திக்கத் தேரேறி வருகிறான் உதயகுமாரன். அவன் தேரொலி கேட்டு வருவது உதயகுமாரனே என்றும் அவன் தன்மேல் காதல் உடையவன் என்றும் மணிமேகலை சுதமதியிடம் கூறுகிறாள். உதயகுமாரனிடமிருந்து தப்பிக்க உவவனத்துப் பளிக்கறையில் புகுந்துகொள்கிறாள் மணிமேகலை. தேடிவந்த மணிமேகலையைக் காணாமல் சுதமதியிடம் அவள் எத்திறத்தாள்? என்று வினவும் உதயகுமாரனுக்கு சுதமதி கூறும் விடை முக்கியத்துவம் உடையது.
எத்திறத் தாள்நின் இளங்கொடி? உரைஎன
குருகுபெயர்க் குன்றம் கொன்றோன் அன்னநின்
முருகச் செவ்வி முகந்துதன் கண்ணால்
பருகாள் ஆயின்இப் பைந்தொடி நங்கை
ஊழ்தரு தவத்தள் சாப சரத்தி
காமற் கடந்த வாய்மையள் என்றே
தூமலர்க் கூந்தல் சுதமதி உரைப்ப (5:12-18)
- ‘முருகவேளை ஒத்த உன் இளமை அழகினை அவள் தன் கண்ணாலும் பார்க்கமாட்டாள். முன்வினைப் பயனால் தவநெறி புகுந்தவள். தீயோரைச் சுடுகின்ற சாபமாகிய அம்பினை உடையவள். காமனை வென்ற வாய்மையுடையவள்என்றெல்லாம் சுதமதி மணிமேகலை குறித்து உதயகுமாரனுக்குச் சொன்ன விவரிப்பு முற்ற முழுதாகக் காப்பிய ஆசிரியனின் கூற்றே ஆகும். ஏனெனில் இக்கூற்றில் பொதிந்துள்ள மணிமேகலை பற்றிய மதிப்பீடுகள் எவையும் அவள் யதார்த்த வாழ்க்கையின் பிரதிபலிப்பு அல்ல. படைப்பாசிரியனாகிய சாத்தனார் மணிமேகலைக்கு விரும்பிச் சூட்டிய கிரீடமாகவே ஊழ்தரு தவத்தள் சாபசரத்தி காமற்கடந்த வாய்மையள் என்ற இம்மதிப்பீடுகள் அமைந்துள்ளன. குறிப்பாக, காமற் கடந்த வாய்மையள் என்று சாத்தனார் சுதமதி வாயிலாக மணிமேகலைக்குத் தரும் அடைமொழி காப்பியத்தின் போக்கில் எவ்வாறு ஒத்தும் உறழ்ந்தும் நிற்கின்றது என்பதனை இனிக் காண்போம்.
                உவவனத்தில் பளிக்கறையில் மறைந்துகொண்ட மணிமேகலையைக் கண்டு தன் காதலைத் தெரிவிக்க முயன்று முடியாமல் திரும்பும் உதயகுமாரன் சுதமதியிடம் மணிமேகலையை அவள் பாட்டி சித்திராபதியைக் கொண்டு அடைவேன் (வஞ்சி நுண்இடை மணிமே கலைதனைச் சித்திரா பதியால் சேர்தலும் உண்டு) என்று சொல்லிவிட்டுப் புறப்படுகிறான். உதயகுமாரன் புறப்பட்டுவிட்டான் என்று தெரிந்து பளிக்கறையைவிட்டு வெளியே வந்த மணிமேகலை உதயகுமாரனைக் குறித்தும் அவன் சொன்னவை குறித்தும் தன்நிலை குறித்தும் மிகவும் வெளிப்படையாகச் சொல்லும் பின்வரும் பகுதி கூர்ந்து கவனிக்கத்தக்கது.
பளிக்கறை திறந்து பனிமதி முகத்துக்
களிக்கயல் பிறழாக் காட்சியள் ஆகிக்
கற்புத் தான்இலள் நல்தவ உணர்வுஇலள்
வருணக் காப்புஇலள் பொருள்விலை யாட்டிஎன்று
இகழ்ந்தனன் ஆகி நயந்தோன் என்னாது
புதுவோன் பின்றைப் போனதுஎன் நெஞ்சம்
இதுவோ அன்னாய்! காமத்து இயற்கை 
இதுவே ஆயின் கெடுகதன் திறம்!என (5:84-90)
- ‘இவள் கற்பு இல்லாதவள், நல்ல தவ உணர்வும் இல்லாதவள், குலமரபின்படியும் தனக்கொரு காவல் அற்றவள், பொருளுக்காகத் தன்உடலை விற்பவள்என்றெல்லாம் என்னைக் குறித்து மிகஇழிவாகப் பேசி என்னை அடைய விரும்புகின்றான் என்பது தெரிந்தும் அதனைப் பொருட் படுத்தாமல் அந்தப் புதிய ஆடவனின் பின்னே என் நெஞ்சமும் செல்கின்றதே. இதுதான் காமத்தின் இயல்பா? அப்படியாயின் அக்காமத்தின் வலிமை கெட்டொழியட்டும்.
                தோழி சுதமதியிடம் மனந்திறந்து மணிமேகலை கூறுவதாக வரும் இப்பகுதி உண்மையில் மணிமேகலையின் நிலை என்ன? என்பதனை நமக்குத் தௌ;ளத் தெளிவாகக் காட்டுகிறது. மணிமேகலை இதுவரை காமத்தின் வயப்படாதவள், இப்பொழுதுதான் முதன்முறையாக ஒரு ஆடவனைக் கண்டு அவன்மேல் காதல் கொள்கிறாள். உதயகுமாரன் தன்னை விரும்புகின்றான் என்பதனைத் தன் பாட்டி சித்திராபதியிடமிருந்து தெரிந்துகொண்ட வயந்தமாலை அதனை ஒருநாள் தன்தாய் மாதவியிடம் சொல்லக் கேட்டிருக்கிறாள். அப்பொழுதெல்லாம் அவளுக்கு உதயகுமாரனைக் குறித்து யாதொரு சிந்தனையும் தோன்றியதில்லை. இப்பொழுது பளிக்கறைக்கு உள்ளிருந்து அவனைக் கண்டபொழுதுதான் அவள் காதல் வயப்பட்டாள். அதிலும் தன்னைக் குறித்து அவன் மிகக் கேவலமாகப் பேசியதைக் கேட்டபிறகும் அவன் பின்னாலேயே தன் மனம் செல்லுகிறது. இதுதான் காமமா? என்று முதன்முறையாக அந்த அனுபவம் குறித்துக் கேள்வி எழுப்புகிறாள் மணிமேகலை. அப்படியானால் இதற்கு முன்பே சுதமதி வாயிலாக சாத்தனார் சொன்ன, காமற் கடந்த வாய்மையள் என்ற மதிப்பீட்டிற்கு என்ன பொருள்? காமத்தை அடைந்த பிறகல்லவா அதனைக் கடக்க வேண்டும்? இங்கே மணிமேகலை அடைந்த காமத்தைக் கடக்கத் துணிகிறாள்.
இதுவோ அன்னாய்! காமத்து இயற்கை 
இதுவே ஆயின் கெடுகதன் திறம்! 
- இதுதான் காமத்தின் இயல்பா? அப்படியானால் அந்தக் காமம் என்னை விட்டு விலகி அழிந்து போகட்டும் என்று காமத்தைக் கடக்கக் கருதுகிறாள். ஆனால் மணிமேகலை உண்மையில் காமத்தைக் கடந்து வென்றாளா? என்பதனைக் காப்பியத்தின் தொடர் நிகழ்ச்சிகளில் நாம் காணவேண்டும்.
                காமத்தை எதிர்கொள்ளாமலே அதனைக் கடந்திருக்க வேண்டிய மணிமேகலை ஏன் உதயகுமாரனிடத்தில் காதல் கொண்டாள். காப்பிய ஆசிரியனுக்கு விடைசொல்ல வேண்டிய கடமை இருக்கிறது. மந்திரம் கொடுத்த காதைஇதற்குப் பதில் சொல்கிறது. சென்ற பிறவியில் அசோதர நாட்டு மன்னன் இரவிவன்மன் அமுதபதி இணையருக்குப் பிறந்த பெண் இலக்குமி. அவளே இந்தப் பிறவியில் மணிமேகலையாகப் பிறந்துள்ளாள். இலக்குமியின் கணவனாக இருந்தவன் இராகுலன். அவன் மன்னன் அத்திபதி நீலபதி இணையருக்குப் பிறந்தவன். அந்தப் பிறவியில் இராகுலனைத் திட்டிவிடம் என்னும் பாம்பு கொன்றுவிட இலக்குமி அவனோடு தீக்குளித்து இறந்து போனாள். இந்த இலக்குமி இராகுலன் இணையரே இப்பிறவியில் மணிமேகலை உதயகுமாரனாகப் பிறந்துள்ளார்கள் என்ற செய்தியைப் பீடிகை கண்டு பழம் பிறப்புணர்ந்தும் மணிமேகலா தெய்வம் உரைத்தும் தெரிந்துகொண்டாள் மணிமேகலை. மேலும்,
உவவன மருங்கில் உன்பால் தோன்றிய
உதய குமரன் அவன்உன் இராகுலன்
ஆங்குஅவன் அன்றியும் அவன்பால் உள்ளம்
நீங்காத் தன்மை நினக்கும்உண்டு ஆகலின்
கந்த சாலியின் கழிபெரு வித்துஓர்
வெந்துஉகு வெங்களர் வீழ்வது போன்ம்என
அறத்தின் வித்துஆங்கு ஆகிய உன்னைஓர்
திறப்படற்கு ஏதுவா சேயிழை! செய்தேன் (10:42-49)
- உவவனத்தில் காமத்தோடு உன்னைநாடி வந்த உதயகுமாரனே உன்னுடைய முற்பிறப்புக் கணவனாகிய இராகுலன். அதனால்தான் அவன் உன்னை விரும்பியதோடு மட்டுமல்லாமல் நீயும் அவனிடத்தில் நீங்காத விருப்பம் கொண்டாய். உன் உள்ளத்தில் தோன்றிய அக்காமம், கந்தசாலி என்னும் நெல்லின் மிகச்சிறந்த வித்து வெந்து உருகுகின்ற உப்பு நிலத்தில் வீழ்வதைப் போன்றது என்று கருதி அறத்தின் வித்தாகிய உன்னைச் சரியான நிலைக்கு ஆற்றுப்படுத்தவே இத்தீவிற்குக் கொண்டுவந்தேன் என்று மணிமேகலா தெய்வம் மணிமேகலையிடம் உரைத்தது.
                மணிமேகலா தெய்வத்தின் இக்கூற்று சில விளக்கங்களைச் சாத்தனார் சார்பாக நின்று நமக்குத் தெரிவிக்கின்றது. ஒன்று, மணிமேகலை உதயகுமாரனைக் கண்டு காதல் வயப்பட்டது முன்வினைத் தொடர்ச்சியே, காமவயப்படுதல் என்ற குறையைக் காப்பியத் தலைவிமேல் சுமத்த முடியாது. இரண்டு, தெய்வம் மணிமேகலையை இத்தீவிற்குக் கொண்டு வரவில்லையெனில் அறத்தின் வித்தாகிய மணிமேகலை காமம் என்ற வெங்களர் நிலத்தில் வீழ்ந்துவிட வாய்ப்பிருக்கிறது. மூன்று, பிறவிகள் தோறும் தொடரும் கணவன் மனைவி உறவுகள் வினைப் பயனால் விளைவது, அதனை வெல்லுதல் அத்துனை எளிமையானதன்று.
                தெய்வத்தின் இச்சீரிய முயற்சியால் பழம் பிறப்புணர்ந்து உதயகுமாரன் மேல் கொண்ட காமத்தை வெல்லவேண்டிய மணிமேகலை அதற்கு நேர்மாறாக முற்பிறப்புக் கணவன் என்று உதயகுமாரன் மேல் கூடுதல் ஈர்ப்புடையவளாக மாற்றம் பெறுகிறாள். ஒரு பக்கம் கொண்ட துறவிக் கோலத்தால் இயல்பாக எழும் காதலை அடக்கிய தவிப்பும் மறுபுறம் முற்பிறவிக் கணவன் என்பதனால் உதயகுமாரன் மீதான ஈர்ப்புமாக மணிமேகலையின் மனம் ஊசலாடுகிறது.
                ஆபுத்திரனின் அமுதசுரபி பெற்று பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக என உண்டி கொடுத்து உயிர்க்குலம் காக்கும் கடமையில் ஈடுபட்டுவரும் மணிமேகலைக்கு உதயகுமாரனின் சந்திப்பு மீண்டும் சிக்கலை உருவாக்குகிறது.
சித்திராபதியால் தூண்டப்பட்ட உதயகுமாரன் குதிரைகள் பூட்டப்பட்ட நெடுந்தேரில் ஏறி மணிமேகலை தங்கியிருந்த உலக அறவியை அடைந்தான். அங்கே மணிமேகலை, கையில் அமுதசுரபி ஏந்திப் பெரும்பசி உடைய வறியவர்களுக்கெல்லாம் மிகுதியான உணவினை வாரி வழங்கிக் கொண்டிருந்தாள். மணிமேகலையைக் கண்டவுடன் பெருகிய காமத்தோடு அவளை நெருங்கிப் பேசத் தொடங்கினான் உதயகுமாரன். முன்பு உவவனத்தில் ஷஇதுவோ அன்னாய்! காமத்து இயற்கை  இதுவே ஆயின் கெடுகதன் திறம்!| எனக் காமத்தைக் கடக்க உறுதிபூண்ட மணிமேகலை, இப்பொழுது, ஷஇவன் எனது முற்பிறவிக் கணவன் இராகுலனே| என்று நினைக்கிறாள். அவன் பாதங்களில் விழுந்து வணங்குவதும் தகுதியானதே என்று கருதி அவனடி தொழுது வணங்கி நிற்கிறாள்.
என்அமர் காதலன் இராகுலன் ஈங்குஇவன்
தன்அடி தொழுதலும் தகவு!என வணங்கி
அறைபோய் நெஞ்சம் அவன்பால் அணுகினும் 
இறைவளை முன்கை ஈங்குஇவன் பற்றினும்
தொன்று காதலன் சொல்எதிர் மறுத்தல்
நன்றி அன்று!என நடுங்கினள் மயங்கி (18:128-133)
- உதயகுமாரனை வணங்கியதோடு அல்லாமல் மணிமேகலையின் சிந்தனையோட்டம் பல தடைகளைத் தாண்டி பெருக்கெடுக்கிறது. எனது நெஞ்சம் கட்டுப்பாட்டினை இழந்து உதயகுமாரனிடத்திலே சென்றாலும் வளைகள் குலுங்கும் எனது கரங்களை அவன் பற்றினாலும் முற்பிறப்புக் கணவனாகிய இவன் பேச்சை மறுத்தல் கூடாது என்று மனதில் உறுதி கொள்கிறாள் மணிமேகலை.
                காப்பியத்தின் இப்பகுதி மணிமேகலையின் மனஓட்டப் பதிவு என்பதனை நாம் கருத்தில் கொள்ளுதல் வேண்டும். வெளிப்படையாகப் பேசுகிற பேச்சைவிட மனத்துக்குள்ளே ஒருவர் பேசுகிற பேச்சே உண்மைக்கு நெருக்கமாயிருக்கும். மன ஊசலாட்டத்தின் வெளிப்பாடுகள் யாவும் நம் விருப்பின் பல முகங்கள். இங்கே மணிமேகலையின் மனஓட்டத்தில் உதயகுமாரன் நம் கரங்களைப் பற்றினாலும் நாம் ஒன்றும் மறுத்துப் பேசக்கூடாது என்று நினைப்பது அவன் அத்துமீறி விடுவானோ என்ற அச்சத்தில் தோன்றுவது. ஆனால் இவள் தனக்குத்தானே சொல்லிக் கொள்கிறாள் நம் நெஞ்சம் கட்டுப்பாடிழந்து அவனிடத்திலே சென்றுவிட்டால் அதையும் நாம் ஏற்றுக்கொள்வது தான் நல்லது என்று. ஆக, மணிமேகலையின் மனம் உதயகுமாரனை அடையத் துடிக்கிறது, அதற்குக் காரணம் அவன் முற்பிறப்புக் கணவன். மணிமேகலா தெய்வம் நினைத்தது வேறு, நடந்தது வேறு. தெய்வம் நினைத்தது என்னவென்றால் மணிமேகலை பழம்பிறப்பு உணர்ந்தால் உதயகுமாரன் மீது ஏற்பட்ட காதலும் அதனால் ஏற்பட்ட குற்ற உணர்ச்சியும் நீங்கிவிடும். அதனால் அவள் தெளிவு பெற்று அறத்தின் வித்தாக மாறுவாள் என்பதுதான். ஆனால் நிலைமை தலைகீழாகிப் போனது பழம்பிறப்பு உணர்ந்ததால் மணிமேகலை உதயகுமாரன் காதல் இன்னும் நெருக்கமாகிப் போனது. கதையின் போக்கிலேயே இதற்கு ஒரு தீர்வும் கிடைக்கின்றது.
                மயங்கிய மணிமேகலை தெளிவு பெறுகிறாள். அவளின் காதல் மனம் அடங்கி, துறவு மனம் விழிக்கிறது. மீண்டும் உதயகுமாரனைச் சந்தித்தால் துறவு வெல்லுமா? காதல் வெல்லுமா? என்ற ஐயத்தில் அதற்கான வாய்ப்பைத் தவிர்க்க விரும்பி காயசண்டிகை என்ற விஞ்சையப் பெண்ணாக மாற்றுரு கொள்கிறாள் மணிமேகலை. காயசண்டிகை உருவில் இருப்பவள் மணிமேகலையே என்று தெரிந்துகொண்ட உதயகுமாரன் அவளை நெருங்கி உரையாட, உறவாட, உண்மை அறியாத காயசண்டிகையின் கணவன் காஞ்சனன் உதயகுமாரனை வாளால் வெட்டிக் கொன்றுவிடுகிறான். கொலையுண்டு வீழ்ந்து கிடக்கும் உதயகுமாரனின் உடல்கண்டு மீண்டும் தடுமாறுகிறாள் மணிமேகலை.
                உதயகுமாரனின் வெட்டுண்ட உடலைக் கண்டு மணிமேகலை புலம்பும் காட்சியில் மணிமேகலையின் தவக்கோலத்தை நாம் காண முடியவில்லை. கணவன் அல்லது காதலனின் மரணத்திற்கான புலம்பலாகவே அக்காட்சியைப் படைக்கின்றார். சாத்தனார்.
ஷகாதலனே! திட்டிவிடம் என்னும் பாம்பு தீண்ட உன்உயிர் நீங்கிய அந்தநாளில் பெருநெருப்புடைய ஈமத்தீயில் விழுந்து நான் உயிரைவிட்டேன். உவவனத்தில் உன்னிடம் என் உள்ளம் சென்றதைத் தவிர்க்க முடியவில்லை| என்று தொடங்கும் மணிமேகலையின் புலம்பலில்
திட்டி விடம்உண நின்உயிர் போம்நாள்
கட்டுஅழல் ஈமத்து என்உயிர் சுட்டேன்
உவவன மருங்கில் நின்பால் உள்ளம்
தவிர்விலேன் .. .. ..  .. .. ..            (21: 11-14)
வைவாள் விஞ்சையன் மயக்குஉறு வெகுளியின்
வௌ;வினை உருப்ப விளிந்தனை யோ!என
விழுமக் கிளவியின் வெய்துஉயிர்த்துப் புலம்பி
அழுதனள் ஏங்கி அயாஉயிர்த்து எழுதலும்
செல்லல் செல்லல்! சேயரி நெடுங்கண்!
அல்லிஅம் தாரோன் தன்பால் செல்லல்!
நினக்கு இவன் மகனாத் தோன்றியதூஉம்
மனக்கு இனியாற்கு நீ மகள் ஆயதூஉம் 
பண்டும் பண்டும் பல் பிறப்பு உளவால் (21: 23-31)
கூரிய வாளினையுடைய விஞ்சையன் காஞ்சனன் என்னைத் தன்மனைவி காயசண்டிகை எனத் தவறாக உணர்ந்து சீற்றம் கொண்டு உன்னைக் கொன்றுவிட்டானே| என்று அழுது புலம்பி ஏக்கப்பெருமூச்சுடன் உதயகுமாரனை நெருங்குகின்றாள். தவக்கோலம் பூண்ட மணிமேகலையின் இப்புலம்பலில் மிக்குத் தோன்றுவது காமத்தைக் கடக்கவியலாத அவளின் இயல்பான சோகமே. நிலைமை கட்டுமீறிப் போவதை உணர்ந்த கந்திற்பாவை, ‘செல்லாதே! செல்லாதே! மணிமேகலையே உதயகுமாரனை நெருங்கிச் செல்லாதே!என்று எச்சரிக்கைக் குரல் எழுப்புகிறது. கந்திற்பாவையின் எச்சரிக்கை எழாமல்போனால் மணிமேகலையின் காதலும் துயரமும் துறவு என்ற கட்டினையும் மீறிச் செயல்பட்டிருக்கும் என நாம் ஊகிக்க முடியும்.
                கந்திற்பாவையே இச்சிக்கலான சூழலை முடிவுக்குக் கொண்டுவருகின்றது. ஷசென்ற பிறப்பில் இவன் உனக்குக் கணவனாகத் தோன்றியதும் அவனுக்கு நீ மனைவியாகத் தோன்றியதும் அந்தப் பிறப்பினில் மட்டுமல்ல அதற்கு முன்னும் முன்னும் பல பிறப்புகளில் தொடர்ந்து வந்துள்ளது. பிறவியில் அழுந்துகின்ற தடுமாற்றத்தினைப் போக்க முயலுகின்ற தவக்கோலப் பெண்ணாகிய நீ இவன் மரணத்திற்காகத் துன்பம் கொள்ளாதே| என்று மணிமேகலையின் தவக்கோலத்தை நினைவுபடுத்திக் காமத்தைக் கடக்க வேண்டிய கடமையை அறிவுறுத்துகின்றது.
                காப்பியத்தின் தொடக்கத்தில் சுதமதி கூறிய காமற் கடந்த வாய்மையள் என்ற தகுதிப் பாட்டினை ஒத்தும் உறழ்ந்துமே மணிமேகலையின் வாழ்க்கைப் பயணம் நடைபோடுகின்றது. மாதவி தவக்கோலத்தைப் புனைந்துவிட்டாள். தோழி சுதமதி அக்கோலத்திற்கு ஒரு பெரிய அங்கீகாரத்தை வாய்மொழியாக வழங்கிவிட்டாள். மணிமேகலா தெய்வம்தான் அவளின் தவக்கோலத்திற்கு ஓர் அர்த்தத்தை ஏற்படுத்துகின்றாள். மணிமேகலை என்ற இயல்பான பெண்ணுக்கும் மணிமேகலை என்ற தவமகளுக்குமான மோதலே காப்பியத்தை நடத்திச் செல்கின்றது. உதயகுமாரனின் மரணம் இப்போராட்டத்தை ஓர் உச்ச கட்டத்திற்குக் கொண்டு சென்று சிக்கலை ஒருவாறு முடித்தும் வைக்கிறது. காதலனாம் உதயகுமாரனின் மரணத்திற்குப் பின்னும்கூட அவன்தாய் பட்டத்தரசியைக் காதலன் பயந்தோய்! என்று விளித்து அறம் சொல்லத் தொடங்குகிறாள் மணிமேகலை.
காப்பியத் தலைவியை அறிமுகப்படுத்தும் போதே கண்ணீரோடு அறிமுகப்படுத்தினார் சாத்தனார் என்று முன்னர்க் குறிப்பிட்டேன். மணிமேகலையின் கண்ணீருக்குக் காரணம் தவக்கோலம். பிறர் ஏற்றிவைத்த சுமையோடு அதனைச் சுமக்கவும் முடியாமல் இறக்கி வைக்கவும் தோன்றாமல் அவள் படும் வேதனையின் முற்குறியே மணிமேகலையின் கண்ணீர். ஆசிரியர் சாத்தனார் மணிமேகலையின் இந்த உள்முரணை முழுதாக உணர்ந்தே காப்பியம் படைக்கின்றார். அதனால்தான் மணிமேகலையின் மனஓட்டங்களையும் தடுமாற்றங்களையும் ஆசிரியனின் அனுமதியோடு நாம் கேட்க முடிகிறது. இதுவே படைப்புக்கும் படைப்பாளிக்குமான வெற்றி.

துணைநூல்:
சிலம்பொலி சு. செல்லப்பன் (தெளிவுரை), மணிமேகலை, சென்னை: பாரதி பதிப்பகம், 1998.
                

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...