பிராகிருத இலக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிராகிருத இலக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 29 ஆகஸ்ட், 2009

மானுடவியல் நோக்கில் காதாசப்தசதி - பகுதி-1

மானுடவியல் நோக்கில் காதாசப்தசதி பகுதி-1

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
பட்ட மேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8

காதாசப்தசதி அறிமுகம்:

காதாசப்தசதி, அய்தராபாத்திற்குத் தென்மேற்கே இருந்த குந்தள நாட்டைக் கி.மு.230 முதல் கி.பி.130வரை ஆண்ட சாதவாகன மரபைச் சேர்ந்த முப்பது மன்னர்களில் பதினேழாமவனான ஹாளன் என்பவனால் தொகுப்பிக்கப் பெற்ற பிராகிருத மொழி நூலாகும்.

இந்நூலில் எழுநூறு பாடல்கள் தொகுக்கப்பட்டன. காதா என்பது நூல் எழுதப்பட்ட வடமொழி யாப்பின் பெயர். இது முதலடி 12 மாத்திரையும், இரண்டாம் அடி 18 மாத்திரையும். மூன்றாம் அடி 12 மாத்திரையும், நான்காம் அடி 15 மாத்திரையும், அமையப் பாடப்பட்டதாகும். காதா யாப்பினால் எழுதப்பட்ட எழுநூறு பாடல்களைக் கொண்டது என்ற பொருள்பட காதாசப்தசதி என இந்நூல் பெயர் பெற்றது.

காதசாப்தசதி எழுந்த நிலம்:

சப்தசதிப் பாடல்களில் விந்தியமலை (பா.160) குறிக்கப்படுகின்றது. கோதாவரி (பா.11) நுருமதை (பா.62) முதலிய ஆறுகளும் குறிப்பிடப்படுகின்றன. கடல் பற்றிய குறிப்பு இல்லை. சாதவாகன மன்னர்களின் குந்தள அரசு பிராகிருதத்தைப் பேச்சு மொழியாகக் கொண்டிருந்தது. இன்றைய மகாராட்டிரமும் ஆந்திரமும் இணைந்த பகுதிகளே சாதவாகனர்களின் ஆட்சிப் பரப்பாக இருந்தன.

காலம்

காதாசப்தசதி கி.மு. முதல் நூற்றாண்டில் ஹாளனால் தொகுப்பிக்கப்ட்டிருக்க வேண்டுமென நம்பப்படுகிறது. ஹாளனின் அவைக்களப் புலவர்கள் பலர் முயன்று திரட்டித் தொகுத்த தொகுப்பே சப்தசதி யாதலால், சப்தசதிப் பாடல்கள் முழுவதும் ஒரே கால கட்டத்தில் எழுதப் பெற்றவை என்று கொள்ள வாய்ப்பில்லை. எழுநூறுபாடல்களில் 348 பாடல்களுக்கு மட்டுமே , ஆசியரியர் பெயர் பற்றிய குறிக்கப்பட்டுள்ளது. பிற பாடல்களில் ஆசிரியர் பற்றிய குறிப்பு இல்லை என்ற செய்தி இப்பாடல்கள் ஒரே சமயத்தில் பாடப்பட்டவை அல்ல என்ற கருத்தை உறுதிப்படுத்தும். ஆளனின் காலத்திற்கு முன் சில நூற்றாண்டுகள் பழமையுடைய பாடல்கள் கூடத் திரட்டித் தொகுக்கப் பெற்றிருக்கலாம்.

சப்தசதிப் பாடல்கள் பெரிதும் சங்க அகப்பாடல்களை ஒத்திருப்பதால் சற்றேறக் குறைய கடைச்சங்க கலத்தை ஒட்டிய காலப்பகுதியில்தான் ஆந்திர நாட்டில் இந்த அகப்பாடல்கள் தொகுக்கப் பெற்றிருக்கவேண்டும்.

காலம் பற்றிய ஆய்வில் ஏற்படும் சிக்கல்:

காதாசப்தசதிப் பாடல்களில் இடம்பெறும் உள்ளடக்க ஆய்வு சப்தசதிப் பாடல்களின் காலத்தைத் தமிழ் அகப்பாடல்களின் காலத்திற்குப் பின்னே அழைத்துச் செல்கின்றன. தமழிலக்கிய வரலாற்றில் சங்க அகப்பாடல்களுக்குப் பிந்திய இலக்கியங்களான கலித்தொகை, பரிபாடல்களின் காலத்தை ஒட்டியதாகவம், அவற்றின் உள்ளடக்கங்களை ஒட்டியதாகவம் சப்தசதிப் பாடல்கள் அமைந்துள்ளன. சான்றாகச் சூரிய வழிபாடு (பா.129) மந்திரங்கள் ஓதி வழிபடுதல் (பா.1), ஆகிய வழிபாட்டுச் செய்திகளம் ஊழ் (பா.116) மேலுலகம், (பா.58) மறுபிறப்பு (பா.290) பாவபுண்ணியம் (பா.49) அதிர்ஷ்டம் (பா.166) முதலான நம்பிக்கைகள் பற்றிய குறிப்புகளும் தேவர்கள் பாற்கடலைக் கடைந்த செய்தி (பா.65) தேவர்கள் கண்ணிமையாமல் இருப்பர் என்ற செய்திபோன்ற தேவர்களைப் பற்றிய குறிப்புகளும் வீமனால் உதையுண்ட துரியோதனன் பற்றிய பாரதக் கதைக் குறிப்பும் (பா.245) இராம லக்குவர் ஓவியம் பற்றிய குறிப்பும்(பா.380) திருமால் குறளனாக (வாமனனாக) வந்த கதைக் குறிப்பும் (பா.378) சப்தசதிப் பாடல்களில் இடம் பெற்றுள்ளன. மேற்கூறிய புராண இதிகாசக் குறிப்புகள் சப்தசதிப் பாடல்களின் காலத்தைத் தமிழ்ச்சங்க அகப்பாடல்களுக்குப் பிற்பட்டதாகக் காட்டுகின்றன.

காதசப்தசதியும் காதலும்:

சப்தசதியில் இருவகைக் காதலும் குறிக்கப் பெறுகின்றன. தமிழ் அகப்பாடல்களைப் போல் குறிக்கோள் நிலைக் காதல்களை மட்டும் சுட்டுவதாக அமையாமல் நடைமுறையில் காதலுக்குள்ள மதிப்பும் நிலை பேறும் பேசப்படுகின்றன.

குறிக்கோள் நிலைக் காதலுக்குப் பின்வரும் பாடலைச் சான்றாகக் காட்டலாம். காதலியைத் தவிர வேறு எந்தப் பெண் வந்தாலும் தலை கவிழ்ந்தவாறு பேசுகிறான் அவன். காதலனைத் தவிர வேறு யாரையும் கண்ணெடுத்தும் பார்க்க மாட்டேன் என்கிறாள் அவள்.

இவர்கள் இருவரின் கண்களும் எல்லாவற்றையும்
காணுமாறு நிமிர வேண்டுமானால்
இவர்கள் இருவரைத் தவிர வேறு ஆடவர் பெண்டிர்
எவரும்
இவ்வூரிரல் ஏன், இவ்வுலகில் இருத்தலாகாது (பா.151)


என்ற நிலையில் காதல் பேசப்படுகிறது. ஆனால் நடைமுறையில் காதலின் உண்மையான நிலை என்ன என்பதை,

காதலனே!
நீ உன் காதலியைக்
காணாமலிருந்து விட்டால்
நெருங்கிய உயிர்க் காதலும்
மறக்கப்பட்டு விடும்


கையில் ஏந்திய நீர் கைவிரல் சந்துகளின் வழியெ ஒழுகிப் போவது போலக் கால இடைவெளி காதலை விழுங்கி வரண்டு விடச்செய்கிறது (பா.173) என்கிறார் பகுரன்.
மாந்தர்கள் குணங்களால் கவரப்படாமல் எடுத்த எடுப்பிலேயே காதல் கவர்ச்சிக்கு இறையாகி விடுகிறார்கள். (பா.287) என்று வருத்தப்படுகிறார் ஒரு கவிஞர். இத்தகைய காதலின் நடைமுறைத் தன்மையைச் சுட்டிக் காட்டும் பாடல்கள் காதாசப்தசதியின் தனிச்சிறப்பு.

மானுடவியல் நோக்கில் காதாசப்தசதி- பகுதி-2

மானுடவியல் நோக்கில் காதாசப்தசதி பகுதி-2

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
பட்ட மேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8

சமூக மானிடவியல் பார்வையில்:

மானிடவியல் என்பது உடலியல் குணாதிசயங்கள் தொழில் செய்முறைகள் வழக்கமான நம்பிக்கைகள் ஆகியவைகளால் தனித்து நிற்கும் சமுதாயத்தை ஊன்றிக் கவனிப்பதாகும். (ரூத் பெனிடிக்ட்) சமூக மானிடவியல் ஓர் இனத்தைப் பற்றி ஆய்கிறபொழுது அவ்வின மக்களின் வரலாற்றுக்கும் முந்தைய-தற்போதைய வழக்கங்களை ஆராய்கிறது. காதாசப்தசதி என்ற இலக்கியம் தான் சார்ந்துள்ள சமூகம் பற்றிய மானிடவியல் உண்மைகளை எவ்வாறு ஏற்றுள்ளது எனக் காண்போம்.

தந்தைவழிக் குடும்பம்:

ஒரு குடும்பத்தின் தலைமைப் பொறுப்பு தந்தையிடம் அல்லது கணவரிடம் இருக்குமேயானால் அதனைத் தந்தைவழிக் குடும்பம் எனலாம். தலைமை பெண்ணிடம் இருக்குமே யானால் அதைத் தாய்வழிக் குடும்பம் எனலாம். காதாசப்தசதிப் பாடல்கள் குறிப்பிடும் சமூகம் தந்தைவழிக் குடும்ப அமைப்பைக் கொண்டிருந்ததை அகச்சான்றுகளின் வழி அறிய முடிகிறது. பெண் திருமணத்திற்குப் பிறகு கணவன் வீடு செல்வதும் மாமியார், கொழுந்தன் இவர்களைக் கொண்ட குடும்பத்தில் வாழ்வதும் இதனை வலியுறுத்தும் சான்றுகளாகும். மேலும் இன்தசன் எழுதிய பாடலில் (பா.119)

தந்தைபட்ட கடன்
மகனுக்கும் செல்வது போல
எங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியும் களிப்பும்
மரபுவழி நிலைத்து நீடிக்கும்.


என்று குறிப்பிடுகிறார். இப்பாடலில் இடம்பெறும் தந்தைபட்ட கடன் மகனுக்கும் செல்வது போல என்ற உவமை தந்தைவழிக் குடும்பமே காதாசப்தசதி குறிப்பிடும் குடும்பம் என்பதை வலியுறுத்தும் வலிமையான சான்றாகும்.

கூட்டுக்குடும்பம்:

திருமணமான கணவன், மனைவி இருவரும் தனித்துச்சென்று தனிக்குடும்பமாக வாழாமல் கணவனின் தந்தை, தாய் சகோதரர்களைக் கொண்ட குடும்பத்தில் இணைந்து கூட்டாக வாழ்வது கூட்டுக் குடும்ப அமைப்பாகும். தமிழ்ச் சங்க அகப்பாடல்களில் கூட்டுக்குடும்ப வாழ்க்கை பற்றிய செய்திகள் இல்லை. ஆனால் காதாசப்தசதிப் பாடல்கள் பலவற்றில் பெண்ணின் மாமியார் பற்றிய குறிப்புகளும் கொழுந்தன் பற்றிய குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன.

கணவனுடன் பிறந்த கொழுந்தன்
கணவன் இல்லாத நேரத்தில்
தகாத பார்வை பார்க்கிறான்
குலக்கொடியான அவளின் உள்ளமும் உடலும் கூசுகிறது.
அஞ்சி நடுங்குகிறாள்.
வெளியில் சொன்னாலும்
குடும்பம் கொலைக்களமாகிவிடும்
(பா.380)

என வரும் பாடலில் திருமணமான பெண் தன் கணவனுடன் கூட்டுக் குடும்பத்தில் வசித்து வருகிறாள் என்ற செய்தி புலப்படுகிறது.

காதல் மணமும் ஏற்பாட்டு மணமும்:

சப்தசதிப் பாடல்களில் மிகுந்த காதல் செய்திகள் பேசப்பட்டாலும் காதலித்தவர்கள் மணம் புரிந்து கொண்டதற்கான சான்று வெளிப்படையாகக் கிட்டவில்லை. குறிப்பாக உணர முடிகிறது.

நான் நாணுடையவள்
அவர் காதலில் உறுதியானவர்
என் தோழிகள் நுண்ணறிவினர்
(பா.30)

என்ற பாடலில் காதல் மணமாக மாற வாய்ப்புத் தருகிறது. ஆனால் பெற்றோர்கள் எற்பாடு செய்யும் ஏற்பாட்டு மணங்களைப் பற்றிய குறிப்புகள் பல கிடைக்கின்றன. இதற்கு முன் பார்த்தும் பேசியும் பழகியும் இல்லாத ஒரு பெண்ணைப் புதுமணக் கோலத்தில் கண்டு மணமகனான அவன் அவாவுகிறான் என்ற பாடல் (பா.39) செய்தி, ஏற்பாட்டு மணம் பற்றிக் குறிப்பிடுகின்றது. வயது முதிர்ந்த கிழவனை மணந்து கொண்ட பெண்கள் பற்றி இரண்டு பாடல்கள் (பா.122,126) பேசுகின்றன.

காமக்கிழத்தியர்

காதாசப்தசதியில் இடம்பெறும் பெரும்பாலான தலைவர்கள் பல பெண்களோடு உறவுள்ளவர்களாக உள்ளார்கள். பரத்தையர் பற்றிய குறிப்பு பல பாடல்களில் (பா.145, 255, 256, 292) இடம் பெற்றுள்ளன. ஒரு பாடலில் (பா.301) தலைவன் தான் பல பெண்களோடு இன்பம் நுகர்வதற்குத் தன் மனைவியே காரணம் என்றும்,

தேனீ ஏன் எல்லா மலர்களிலும் படிகிறது?
தேன் இல்லாத மலர்களும் இருப்பதால்தான்
அது மலருக்கு மலர் தாவுகிறது.
தேன் இல்லாதது மலர்களின் குற்றமே தவிரத்
தாவும் ஈக்களின் குற்றமன்று"


எனவே தன்மேல் குற்றமில்லை என்றும் வாதிடுகிறான்.
ஒருவனுக்குக் காமக் கிழத்தியர் பலர் இருந்தாலும் உரிமை மனைவி ஒருத்தியே என்பதைப் போட்சன் என்பவர் எழுதிய பாடல் (பா.294) குறிப்பிடுகிறது.

வேட்டுவனின் மனைவி
வெறும் மயிலிறகு மட்டும் சூடியவளாய்ப்
பெருமிதத்தோடு நடந்து செல்கிறாள்
அவ்வளவு பெருமிதத்தோடு
வேட்டுவனுடன் ஏனை காமக் கிழத்தியரால்
நடந்து செல்ல இயலவில்லை.


இக்கட்டுரை சமூக மானிடவியல் பார்வையில் காதாசப்தசதிப் பாடல்களைக் காண முயன்ற நிலையில் சப்தசதிப் பாடல்கள் காட்டும் சமூகம் தந்தைவழிச் சமூக அமைப்பு என்றும், கூட்டுக் குடும்ப அமைப்பே நிலவியது என்றும், ஏற்பாட்டு மணம் பற்றிய குறிப்புகளே மிகுதி என்றும் காடக் கிழத்தியர் மனைவியர் ஆகார் என்றும் ஆய்ந்து கண்டது.

* பாடல் சான்றுகள்: ஆந்திர நாட்டு அகநானூறு, இரா.மதிவாணன்

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...