வியாழன், 30 ஏப்ரல், 2009

வண்ணத்துப் பூச்சி – மாநி நூல் அணிந்துரை முனைவர் நா.இளங்கோ

வண்ணத்துப் பூச்சி – மாநி
அணிந்துரை


பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ
புதுச்சேரி-8

தமிழில் பரவலாகக் குழந்தை இலக்கியம் என்ற பெயரில் அறியப்படும் இலக்கிய வகையே ஆய்வாளர்களால் சிறுவர் இலக்கியம் என்று குறிப்பிடப்படுகின்றது. சிறுவர் இலக்கியம் என்று இந்தவகை இலக்கியங்களை அழைப்பதுதான் பொருத்தமுடையது. பதினைந்து வயது வரையிலானவர்களை யாரும் குழந்தைகள் என்று குறிப்பிடமாட்டார்கள், அவர்கள் சிறுவர்களே. இத்தகுச் சிறுவர்களுக்காகப் பாடப்படும் இலக்கியங்கள் சிறுவர் இலக்கியங்கள் தானே.
சிறுவர் இலக்கியம் சிறுவர்கள் பாடுவது, சிறுவர்களைப் பற்றிப் பாடுவது, சிறுவர்களுக்காகப் பாடுவது என மூன்று வகைப்படும். மேற்கூறிய மூன்று வகைகளில் சிறுவர்கள் பாடுவது என்றவகை இன்றைய ஆங்கிலவழிக் கல்வியின் வருகையால் பெரிதும் சிதைவுக்கு ஆளாகியுள்ளது. ஏனெனில் கிராமப்புறங்களில் சிறுவர்கள் பாடிவந்த நாட்டுப்புறச் சிறுவர் பாடல்கள், சிறுவர் விளையாட்டுப் பாடல்கள், மொழிப் பயிற்சி எண்ணுப் பயிற்சிப் பாடல்கள் காணாமல் போய் மண்ணுக்கு அந்நியப்பட்ட நர்சரி ரைம்ஸ்களாக மாறிவிட்டன.

இரண்டாவது வகையாகிய சிறுவர்களைப் பற்றிய பாடல்கள் தமிழில் பாடப்படவே இல்லை என்று கூறலாம். இந்தவகை இலக்கியங்களை உருவாக்க அதிக உற்றுநோக்கலும் உளவியல் கல்வியும் அவசியம். எப்பொழுதும் நுனிப்புல் மேயும் எழுத்தாளர்களால் இது சாத்தியமில்லை.
மூன்றாவது வகையாகிய சிறுவர்களுக்காகப் பாடுவது என்ற வகையில் நிறைய சிறுவர் இலக்கியப் படைப்பாளிகள் தமிழில் உண்டு. ஆனால் இவ்வகைச் சிறுவர் இலக்கியங்களில் அனைத்துவகை இலக்கிய வடிவங்களுக்கும் முக்கியத்துவம் தராமல் கவிதை இலக்கியம் படைப்பவர்களே அதிகம். சிறுவர்களுக்கான நாடகம், நாவல் கட்டுரை இலக்கியங்களைப் படைப்பவர்கள் தமிழில் அதிகமில்லை. சிறுவர் கவிதை இலக்கியம் படைப்பவர்கள் அதிகமிருந்தாலும் அவர்களில் தனித்தன்மை உடைய படைப்பாளிகளைக் காண்பது மிகவும் அரிதாகவுள்ளது. பல சிறுவர் இலக்கியப் படைப்பாளிகள் நூல் எண்ணிக்கை, நூலக விற்பனை, பரிசு, விருது போன்ற வாய்ப்புகளுக்காக எழுதுவதுதான் அதிகம். தனித்தன்மை அற்ற இவ்வகைப் படைப்புகள் ஒன்றைப் பார்த்து ஒன்று எனப் போலச் செய்தலில் உருவாக்கப் பட்டவை.
தமிழில், இத்தகு சிறுவர் இலக்கியச் சூழலில் கவிஞர் மாநி (மார்க்ரெட் நிக்கோலஸ்) அவர்களின் வண்ணத்துப் பூச்சி சிறுவர்களுக்கான கவிதைத் தொகுப்பாக வெளிவருகிறது. புதுவை மாநகரம் கவிதைப் பாரம்பரியம் மிக்க நகரம். அண்மைக் காலங்களில் அதாவது 2000 க்குப் பிறகு புதுவையில் அதிக அளவில் நூல்கள் வெளியிடப் பெறுவதும் அதிலும் குறிப்பாகக் கவிதை நூல்கள் மிகுதியாக வெளிவருவதும் கண்கூடு. இலக்கியப் படைப்புகளின் பெருக்கம் எப்பொழுதுமே மகிழ்ச்சியளிக்கக் கூடிய ஒன்றுதான். மாநி அவர்களும் வாழையடி வாழையெனவரும் தமிழ்க் கவிஞர் கூட்டத்தில் ஒருவராகக் கலந்துகொண்டார். தமிழ்க் கவிஞர்கள் பரம்பரையில் மேலும் ஒரு பெண்கவிஞர் சேர்ந்திருப்பது மகிழ்ச்சியளிக்கக் கூடியதே.
சங்ககாலம் தொடங்கி காரைக்கால் அம்மையார், ஆண்டாள், ஒளவையார் எனத் தொடர்ச்சியான பெண்கவிதை மரபுத் தொடர்ச்சி தமிழில் உண்டு. நாட்டுப்புறங்களில் எண்ணிலடங்காத் தாலாட்டுப் பாடல்களைப் படைத்து மகிழும் பெண்கள் ஏட்டிலக்கியங்களில். சிறப்பாகச் சிறுவர் இலக்கியங்கள் படைப்பதில் அதிகப் பங்களிப்பைச் செய்யாதது வியப்பாகத்தான் உள்ளது. தமிழில் சிறுவர் இலக்கியம் படைக்கும் பெண்கள் மிக மிகக் குறைவு என்பதை நாம் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். மாநி தொடங்கி வைத்துள்ளார். இவரைத் தொடர்ந்து இன்னும் பல பெண் படைப்பாளிகள் சிறுவர் இலக்கியங்களின் பக்கம் தங்கள் படைப்புப் பார்வையைத் திருப்ப வேண்டுமென்பது நமது அவா!.

கவிஞர் மாநி அவர்களின் வண்ணத்துப் பூச்சி நூலைக் கவிதைத் தொகுப்பு என்று குறிப்பிடுவதை விட பாடல் தொகுப்பு என்று குறிப்பிடுவதுதான் பொருத்தமாய் இpருக்கும். ஏனெனில் வருக வருகவே! என்ற முதல் பாடல் தொடங்கி அறிவுரை கேளாய்! என்று முடியும் ஐம்பத்தொன்றாம் பாடல் வரையிலான அனைத்துமே இசையோடு பாடுவதற்கேற்ற வகையில் இயைபுத் தொடை அமைய பாடப்பட்டிருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு. சிறுவர் பாடல்களுக்கே உரிய மரபை ஒட்டி கவிஞர் மாநியும் சில அறிவுரைப் பாடல்கள், சில விலங்குப் பாடல்கள், தலைவர்கள் குறித்தப் பாடல்கள் சில என்ற மரபான தலைப்புகளிலேயே தம் நூலை அமைத்துச் செல்கிறார் என்றாலும் சில பாடல் தலைப்புகள் வண்ணத்துப் பூச்சியில் தனித்தன்மையோடு விளங்குகின்றன. குறிப்பாக வாழ்வுண்டு!, வாழ்வு காண்போம்!, வாழ்ந்திடுவாய்ப் பெண்ணே!, வாழ்க்கை முறை அறிந்திடு! முதலான தலைப்புகளைக் குறிப்பிடலாம். இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டுச் சிறுவர்கள் சென்ற நூற்றாண்டுச் சிறுவர்களைப் போலில்லை. அவர்கள் இன்றைய ஊடகச் சூழலில் மிகவும் மாற்றம் பெற்றுள்ளார்கள். எனவே அவர்களுக்கு வெறும் பொழுது போக்குப் பாடல்கள் மட்டும் போதா, வாழ்க்கை குறித்த சரியான புரிதலும் அவர்களுக்கு அவசியம் என்பதை உணர்ந்தே கவிஞர் மாநி அவர்கள் மேலே குறிப்பிட்ட வாழ்க்கை தொடர்பான பாடல்களை இணைத்திருப்பார் என்று எண்ணத் தோன்றுகிறது.

பகையை அறுக்கப் போரிடு
பாய்ந்து சென்று வென்றிடு
வகையாய் வாழ்வை வகுத்திடு
வாழும் வரையில் உயர்ந்திடு
(மாநி, அறிவுரை கேளாய்!)

மேலே இடம் பெற்றுள்ள பாடலைப்போல் அறிவுரைப் பாடல்கள் பலவற்றிலும் புதிய புதிய உள்ளடக்கங்களோடு கவிஞர் மாநி படைத்துள்ள பாடல்கள் பொதுநிலையில் பார்ப்பவர்களுக்கு இவை சிறுவர் பாடல்களின்; உள்ளடக்கங்கள் தாமா? என்ற ஐயத்தைத் தோற்றுவிக்கலாம். ஆனால் இன்றைய சிறுவர்கள் மற்றும் அவர்களின் கல்வி மற்றும் அறிவு வளர்ச்சி வாழ்க்கைச் சூழல் இவைகளோடு பொருத்திப் பார்த்தால் இவ்வகை உள்ளடக்கங்களின் பொருத்தப்பாடு புலப்படும்.

சமூகம் இரண்டு வகையான உழைப்பாளிகளைக் கொண்டுள்ளது. ஒன்று உடலுழைப்பு, மற்றொன்று மூளை உழைப்பு. இரண்டு வகையான உழைப்புகளுமே சமூகத்திற்கு இன்றியமையாதனவாகும். ஆனால் மக்கள் மூளை உழைப்புக்குத் தருகிற அங்கீகாரத்தையோ மதிப்பையோ உடல் உழைப்புக்கும் உடல் உழைப்பாளிகளுக்கும் தருவதில்லை. உடலுழைப்பு, வியர்வை, அழுக்கு இவைகள் குறித்துச் சமூகத்தின் நடுத்தட்டு மக்கள் ஒருவகை அசூயையே கொண்டுள்ளனர். தங்கள் பிள்ளைகளை வளர்க்கும்போதே உடலுழைப்புக்கு எதிரான மனநிலையிலேயே வளர்க்கின்றனர். வியர்வை வராத அழுக்கடைய வாய்ப்பில்லாத பணிகளையே தங்கள் பிள்ளைகள் பார்க்க வேண்டும், அதுவே சமூகத்தில் உயர்ந்த பணி என்று நினைக்கும் பெற்றோர் இதே மனநிலையைப் பிள்ளைகள் பெறும்படியாக மூளைச் சலவை செய்துவிடுகின்றனர். தங்கள் பிள்ளைகள் டாக்டராகவோ எஞ்சினியராகவோ வர வேண்டும் என்பதிலேயே அவர்கள் இலக்கு மையப்படுத்தப்படுகிறது. எனவேதான் தனியார் கல்வி நிறுவனங்கள், ஆங்கில வழிக் கல்வி, ரேங்க் போன்ற சில குறுகிய வட்டங்களுக்குள்ளேயே நடுத்தட்டு மக்களின் சிந்தனைகள் சுற்றிச் சுற்றி வருகின்றன. கவிஞர் மாநி இவ்வகை மாயைகளை எல்லாம் போட்டு நொறுக்குகின்றார்.

வாழ வேண்டும் புறப்படு!
வளர வேண்டும் புறப்படு!
வருவாய் கொள்ளப் புறப்படு!
வருந்தி உழைக்கப் புறப்படு!
வெற்றி கொண்டு புறப்படு!
வேர்வை சிந்தப் புறப்படு!
(மாநி, புறப்படு தம்பி)

விளையும் அறிவில் விருப்பங்கொள்!
வேர்வை சிந்த விருப்பங்கொள்!
(மாநி, விருப்பங்கொள்வாய்)

மூளை உழைப்புக்கு இணையாக, இல்லை ஒரு படி மேலாக உடலுழைப்பைப் போற்றுகின்றார் கவிஞர். உடலுழைப்பும் வியர்வையும் மாண்புடையனவாகக் கவிஞரால் சிறப்பிக்கப்படுகிறது. இன்றைய சிறுவர்கள் மனதில் இக்கருத்து விதைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தே கவிஞர் இப்படிப் பாடுகிறார்.

உழவு செய்யும் உழவன்!
ஊரைக் காக்கும் தலைவன் !
(மாநி, உழவனைப் போற்றிடு)

என்று உழைக்கும் வர்க்கத்தின் பிரதிநிதியாம் உழவனை ஊரைக் காக்கும் தலைவன் என வருணிக்கும் கவிஞரின் சமூகப் பார்வை உண்மையிலேயே பாராட்டுதலுக்குரியது.
வண்ணத்துப் பூச்சி என்ற இத்தொகுப்பில் நல்ல பாடல்கள் பல தொட்ட இடமெல்லாம் கண்ணில் தட்டுப்பட்டு மனநிறைவளிக்கின்றன. விருப்பங்கொள்வாய்!, வாழ்வு காண்போம்!, இயற்கை!, ப+க்கள் தெரிந்திடு!, படிப்பே உலகம்! முதலான பாடல்களை அந்த வகையில் கண்டிப்பாகக் குறிப்பிட வேண்டும். படிக்கப் படிக்க இன்பம் தரும் பாடல்கள் அவை.

ஆடும் கடலும் அருவி நீரும்
கூடும் நதியும் உயிரைக் காக்கும்!
பாடும் குயிலும் ஆடும் மயிலும்
ஆடும் மலரும் அழகைச் சேர்க்கும்

சிட்டாய்ப் பறக்கும் குருவியும் புறாவும்
பட்டான், தட்டான் யாவும் இங்கே
பட்டுப் போன்ற இனிமை யாகும்
விட்டு விலகாக் காட்சி என்போம்!

கொட்டும் மழையும் குட்டை குளமும்
வட்டப் பாதையின் வளைவும் நெளிவும்
உயர்ந்த மலையும் உறையும் பனியும்
வயல்வெளி பசுமையும் வளமை ஆகும்
(மாநி, இயற்கை)

கவிஞர் மாநி தீட்டியுள்ள இயற்கை அழகோவியம் இது.
எளிய இனிய தமிழ்ச் சொற்கள், சந்த நயம், மரபுத் தொடர்ச்சி, புதிய உள்ளடக்கங்கள், சமுதாயச் சிந்தனைகள் என்று எல்லா நிலைகளிலும் சிறந்து விளங்கும் வண்ணத்துப் ப+ச்சி என்ற இப்பாடல் தொகுப்பு நிச்சயம் பாராட்டத் தக்க ஒரு புதிய வரவு. கவிஞர் மாநி தொடர்ந்து பல நல்ல படைப்புளை உருவாக்கி தமிழுலகிற்கு அணி சேர்க்க வேண்டும்.

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்


என்பார் ஒளவையார். தொடர்ந்து பழகுவதால் எதுவும் சாத்தியமாகும், எளிமையாகும். கவிஞர் மாநி அவர்களும் தொடர்ந்து கவிதை எழுதிப் பழகப் பழக அவருக்கும் கவிதை சாத்தியமாகும் எளிமையாகும்.

வாழ்த்துக்களுடன்
நா.இளங்கோ
14-04-2009
அம்பேத்கர் பிறந்த நாள்

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...