சனி, 29 ஆகஸ்ட், 2009

மானுடவியல் நோக்கில் காதாசப்தசதி - பகுதி-1

மானுடவியல் நோக்கில் காதாசப்தசதி பகுதி-1

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
பட்ட மேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8

காதாசப்தசதி அறிமுகம்:

காதாசப்தசதி, அய்தராபாத்திற்குத் தென்மேற்கே இருந்த குந்தள நாட்டைக் கி.மு.230 முதல் கி.பி.130வரை ஆண்ட சாதவாகன மரபைச் சேர்ந்த முப்பது மன்னர்களில் பதினேழாமவனான ஹாளன் என்பவனால் தொகுப்பிக்கப் பெற்ற பிராகிருத மொழி நூலாகும்.

இந்நூலில் எழுநூறு பாடல்கள் தொகுக்கப்பட்டன. காதா என்பது நூல் எழுதப்பட்ட வடமொழி யாப்பின் பெயர். இது முதலடி 12 மாத்திரையும், இரண்டாம் அடி 18 மாத்திரையும். மூன்றாம் அடி 12 மாத்திரையும், நான்காம் அடி 15 மாத்திரையும், அமையப் பாடப்பட்டதாகும். காதா யாப்பினால் எழுதப்பட்ட எழுநூறு பாடல்களைக் கொண்டது என்ற பொருள்பட காதாசப்தசதி என இந்நூல் பெயர் பெற்றது.

காதசாப்தசதி எழுந்த நிலம்:

சப்தசதிப் பாடல்களில் விந்தியமலை (பா.160) குறிக்கப்படுகின்றது. கோதாவரி (பா.11) நுருமதை (பா.62) முதலிய ஆறுகளும் குறிப்பிடப்படுகின்றன. கடல் பற்றிய குறிப்பு இல்லை. சாதவாகன மன்னர்களின் குந்தள அரசு பிராகிருதத்தைப் பேச்சு மொழியாகக் கொண்டிருந்தது. இன்றைய மகாராட்டிரமும் ஆந்திரமும் இணைந்த பகுதிகளே சாதவாகனர்களின் ஆட்சிப் பரப்பாக இருந்தன.

காலம்

காதாசப்தசதி கி.மு. முதல் நூற்றாண்டில் ஹாளனால் தொகுப்பிக்கப்ட்டிருக்க வேண்டுமென நம்பப்படுகிறது. ஹாளனின் அவைக்களப் புலவர்கள் பலர் முயன்று திரட்டித் தொகுத்த தொகுப்பே சப்தசதி யாதலால், சப்தசதிப் பாடல்கள் முழுவதும் ஒரே கால கட்டத்தில் எழுதப் பெற்றவை என்று கொள்ள வாய்ப்பில்லை. எழுநூறுபாடல்களில் 348 பாடல்களுக்கு மட்டுமே , ஆசியரியர் பெயர் பற்றிய குறிக்கப்பட்டுள்ளது. பிற பாடல்களில் ஆசிரியர் பற்றிய குறிப்பு இல்லை என்ற செய்தி இப்பாடல்கள் ஒரே சமயத்தில் பாடப்பட்டவை அல்ல என்ற கருத்தை உறுதிப்படுத்தும். ஆளனின் காலத்திற்கு முன் சில நூற்றாண்டுகள் பழமையுடைய பாடல்கள் கூடத் திரட்டித் தொகுக்கப் பெற்றிருக்கலாம்.

சப்தசதிப் பாடல்கள் பெரிதும் சங்க அகப்பாடல்களை ஒத்திருப்பதால் சற்றேறக் குறைய கடைச்சங்க கலத்தை ஒட்டிய காலப்பகுதியில்தான் ஆந்திர நாட்டில் இந்த அகப்பாடல்கள் தொகுக்கப் பெற்றிருக்கவேண்டும்.

காலம் பற்றிய ஆய்வில் ஏற்படும் சிக்கல்:

காதாசப்தசதிப் பாடல்களில் இடம்பெறும் உள்ளடக்க ஆய்வு சப்தசதிப் பாடல்களின் காலத்தைத் தமிழ் அகப்பாடல்களின் காலத்திற்குப் பின்னே அழைத்துச் செல்கின்றன. தமழிலக்கிய வரலாற்றில் சங்க அகப்பாடல்களுக்குப் பிந்திய இலக்கியங்களான கலித்தொகை, பரிபாடல்களின் காலத்தை ஒட்டியதாகவம், அவற்றின் உள்ளடக்கங்களை ஒட்டியதாகவம் சப்தசதிப் பாடல்கள் அமைந்துள்ளன. சான்றாகச் சூரிய வழிபாடு (பா.129) மந்திரங்கள் ஓதி வழிபடுதல் (பா.1), ஆகிய வழிபாட்டுச் செய்திகளம் ஊழ் (பா.116) மேலுலகம், (பா.58) மறுபிறப்பு (பா.290) பாவபுண்ணியம் (பா.49) அதிர்ஷ்டம் (பா.166) முதலான நம்பிக்கைகள் பற்றிய குறிப்புகளும் தேவர்கள் பாற்கடலைக் கடைந்த செய்தி (பா.65) தேவர்கள் கண்ணிமையாமல் இருப்பர் என்ற செய்திபோன்ற தேவர்களைப் பற்றிய குறிப்புகளும் வீமனால் உதையுண்ட துரியோதனன் பற்றிய பாரதக் கதைக் குறிப்பும் (பா.245) இராம லக்குவர் ஓவியம் பற்றிய குறிப்பும்(பா.380) திருமால் குறளனாக (வாமனனாக) வந்த கதைக் குறிப்பும் (பா.378) சப்தசதிப் பாடல்களில் இடம் பெற்றுள்ளன. மேற்கூறிய புராண இதிகாசக் குறிப்புகள் சப்தசதிப் பாடல்களின் காலத்தைத் தமிழ்ச்சங்க அகப்பாடல்களுக்குப் பிற்பட்டதாகக் காட்டுகின்றன.

காதசப்தசதியும் காதலும்:

சப்தசதியில் இருவகைக் காதலும் குறிக்கப் பெறுகின்றன. தமிழ் அகப்பாடல்களைப் போல் குறிக்கோள் நிலைக் காதல்களை மட்டும் சுட்டுவதாக அமையாமல் நடைமுறையில் காதலுக்குள்ள மதிப்பும் நிலை பேறும் பேசப்படுகின்றன.

குறிக்கோள் நிலைக் காதலுக்குப் பின்வரும் பாடலைச் சான்றாகக் காட்டலாம். காதலியைத் தவிர வேறு எந்தப் பெண் வந்தாலும் தலை கவிழ்ந்தவாறு பேசுகிறான் அவன். காதலனைத் தவிர வேறு யாரையும் கண்ணெடுத்தும் பார்க்க மாட்டேன் என்கிறாள் அவள்.

இவர்கள் இருவரின் கண்களும் எல்லாவற்றையும்
காணுமாறு நிமிர வேண்டுமானால்
இவர்கள் இருவரைத் தவிர வேறு ஆடவர் பெண்டிர்
எவரும்
இவ்வூரிரல் ஏன், இவ்வுலகில் இருத்தலாகாது (பா.151)


என்ற நிலையில் காதல் பேசப்படுகிறது. ஆனால் நடைமுறையில் காதலின் உண்மையான நிலை என்ன என்பதை,

காதலனே!
நீ உன் காதலியைக்
காணாமலிருந்து விட்டால்
நெருங்கிய உயிர்க் காதலும்
மறக்கப்பட்டு விடும்


கையில் ஏந்திய நீர் கைவிரல் சந்துகளின் வழியெ ஒழுகிப் போவது போலக் கால இடைவெளி காதலை விழுங்கி வரண்டு விடச்செய்கிறது (பா.173) என்கிறார் பகுரன்.
மாந்தர்கள் குணங்களால் கவரப்படாமல் எடுத்த எடுப்பிலேயே காதல் கவர்ச்சிக்கு இறையாகி விடுகிறார்கள். (பா.287) என்று வருத்தப்படுகிறார் ஒரு கவிஞர். இத்தகைய காதலின் நடைமுறைத் தன்மையைச் சுட்டிக் காட்டும் பாடல்கள் காதாசப்தசதியின் தனிச்சிறப்பு.

மானுடவியல் நோக்கில் காதாசப்தசதி- பகுதி-2

மானுடவியல் நோக்கில் காதாசப்தசதி பகுதி-2

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
பட்ட மேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8

சமூக மானிடவியல் பார்வையில்:

மானிடவியல் என்பது உடலியல் குணாதிசயங்கள் தொழில் செய்முறைகள் வழக்கமான நம்பிக்கைகள் ஆகியவைகளால் தனித்து நிற்கும் சமுதாயத்தை ஊன்றிக் கவனிப்பதாகும். (ரூத் பெனிடிக்ட்) சமூக மானிடவியல் ஓர் இனத்தைப் பற்றி ஆய்கிறபொழுது அவ்வின மக்களின் வரலாற்றுக்கும் முந்தைய-தற்போதைய வழக்கங்களை ஆராய்கிறது. காதாசப்தசதி என்ற இலக்கியம் தான் சார்ந்துள்ள சமூகம் பற்றிய மானிடவியல் உண்மைகளை எவ்வாறு ஏற்றுள்ளது எனக் காண்போம்.

தந்தைவழிக் குடும்பம்:

ஒரு குடும்பத்தின் தலைமைப் பொறுப்பு தந்தையிடம் அல்லது கணவரிடம் இருக்குமேயானால் அதனைத் தந்தைவழிக் குடும்பம் எனலாம். தலைமை பெண்ணிடம் இருக்குமே யானால் அதைத் தாய்வழிக் குடும்பம் எனலாம். காதாசப்தசதிப் பாடல்கள் குறிப்பிடும் சமூகம் தந்தைவழிக் குடும்ப அமைப்பைக் கொண்டிருந்ததை அகச்சான்றுகளின் வழி அறிய முடிகிறது. பெண் திருமணத்திற்குப் பிறகு கணவன் வீடு செல்வதும் மாமியார், கொழுந்தன் இவர்களைக் கொண்ட குடும்பத்தில் வாழ்வதும் இதனை வலியுறுத்தும் சான்றுகளாகும். மேலும் இன்தசன் எழுதிய பாடலில் (பா.119)

தந்தைபட்ட கடன்
மகனுக்கும் செல்வது போல
எங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியும் களிப்பும்
மரபுவழி நிலைத்து நீடிக்கும்.


என்று குறிப்பிடுகிறார். இப்பாடலில் இடம்பெறும் தந்தைபட்ட கடன் மகனுக்கும் செல்வது போல என்ற உவமை தந்தைவழிக் குடும்பமே காதாசப்தசதி குறிப்பிடும் குடும்பம் என்பதை வலியுறுத்தும் வலிமையான சான்றாகும்.

கூட்டுக்குடும்பம்:

திருமணமான கணவன், மனைவி இருவரும் தனித்துச்சென்று தனிக்குடும்பமாக வாழாமல் கணவனின் தந்தை, தாய் சகோதரர்களைக் கொண்ட குடும்பத்தில் இணைந்து கூட்டாக வாழ்வது கூட்டுக் குடும்ப அமைப்பாகும். தமிழ்ச் சங்க அகப்பாடல்களில் கூட்டுக்குடும்ப வாழ்க்கை பற்றிய செய்திகள் இல்லை. ஆனால் காதாசப்தசதிப் பாடல்கள் பலவற்றில் பெண்ணின் மாமியார் பற்றிய குறிப்புகளும் கொழுந்தன் பற்றிய குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன.

கணவனுடன் பிறந்த கொழுந்தன்
கணவன் இல்லாத நேரத்தில்
தகாத பார்வை பார்க்கிறான்
குலக்கொடியான அவளின் உள்ளமும் உடலும் கூசுகிறது.
அஞ்சி நடுங்குகிறாள்.
வெளியில் சொன்னாலும்
குடும்பம் கொலைக்களமாகிவிடும்
(பா.380)

என வரும் பாடலில் திருமணமான பெண் தன் கணவனுடன் கூட்டுக் குடும்பத்தில் வசித்து வருகிறாள் என்ற செய்தி புலப்படுகிறது.

காதல் மணமும் ஏற்பாட்டு மணமும்:

சப்தசதிப் பாடல்களில் மிகுந்த காதல் செய்திகள் பேசப்பட்டாலும் காதலித்தவர்கள் மணம் புரிந்து கொண்டதற்கான சான்று வெளிப்படையாகக் கிட்டவில்லை. குறிப்பாக உணர முடிகிறது.

நான் நாணுடையவள்
அவர் காதலில் உறுதியானவர்
என் தோழிகள் நுண்ணறிவினர்
(பா.30)

என்ற பாடலில் காதல் மணமாக மாற வாய்ப்புத் தருகிறது. ஆனால் பெற்றோர்கள் எற்பாடு செய்யும் ஏற்பாட்டு மணங்களைப் பற்றிய குறிப்புகள் பல கிடைக்கின்றன. இதற்கு முன் பார்த்தும் பேசியும் பழகியும் இல்லாத ஒரு பெண்ணைப் புதுமணக் கோலத்தில் கண்டு மணமகனான அவன் அவாவுகிறான் என்ற பாடல் (பா.39) செய்தி, ஏற்பாட்டு மணம் பற்றிக் குறிப்பிடுகின்றது. வயது முதிர்ந்த கிழவனை மணந்து கொண்ட பெண்கள் பற்றி இரண்டு பாடல்கள் (பா.122,126) பேசுகின்றன.

காமக்கிழத்தியர்

காதாசப்தசதியில் இடம்பெறும் பெரும்பாலான தலைவர்கள் பல பெண்களோடு உறவுள்ளவர்களாக உள்ளார்கள். பரத்தையர் பற்றிய குறிப்பு பல பாடல்களில் (பா.145, 255, 256, 292) இடம் பெற்றுள்ளன. ஒரு பாடலில் (பா.301) தலைவன் தான் பல பெண்களோடு இன்பம் நுகர்வதற்குத் தன் மனைவியே காரணம் என்றும்,

தேனீ ஏன் எல்லா மலர்களிலும் படிகிறது?
தேன் இல்லாத மலர்களும் இருப்பதால்தான்
அது மலருக்கு மலர் தாவுகிறது.
தேன் இல்லாதது மலர்களின் குற்றமே தவிரத்
தாவும் ஈக்களின் குற்றமன்று"


எனவே தன்மேல் குற்றமில்லை என்றும் வாதிடுகிறான்.
ஒருவனுக்குக் காமக் கிழத்தியர் பலர் இருந்தாலும் உரிமை மனைவி ஒருத்தியே என்பதைப் போட்சன் என்பவர் எழுதிய பாடல் (பா.294) குறிப்பிடுகிறது.

வேட்டுவனின் மனைவி
வெறும் மயிலிறகு மட்டும் சூடியவளாய்ப்
பெருமிதத்தோடு நடந்து செல்கிறாள்
அவ்வளவு பெருமிதத்தோடு
வேட்டுவனுடன் ஏனை காமக் கிழத்தியரால்
நடந்து செல்ல இயலவில்லை.


இக்கட்டுரை சமூக மானிடவியல் பார்வையில் காதாசப்தசதிப் பாடல்களைக் காண முயன்ற நிலையில் சப்தசதிப் பாடல்கள் காட்டும் சமூகம் தந்தைவழிச் சமூக அமைப்பு என்றும், கூட்டுக் குடும்ப அமைப்பே நிலவியது என்றும், ஏற்பாட்டு மணம் பற்றிய குறிப்புகளே மிகுதி என்றும் காடக் கிழத்தியர் மனைவியர் ஆகார் என்றும் ஆய்ந்து கண்டது.

* பாடல் சான்றுகள்: ஆந்திர நாட்டு அகநானூறு, இரா.மதிவாணன்

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009

திருக்குறள் பேச்சுப் போட்டி - பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

திருக்குறள் பேச்சுப் போட்டி


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

முனைவர் நா.இளங்கோ
புதுச்சேரி-8

அவையோர்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள்! இன்று நான் பேச எடுத்துக்கொண்ட தலைப்பு “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதாகும். இச்சொற்றொடர் திருக்குறள் பொருட்பாலில் பெருமை என்ற அதிகாரத்தில் இடம்பெறும் அரிய குறளின் ஓர் பகுதியாகும். திருக்குறளின் பெருமையினை நான் சொல்லித்தான் இந்த உலகம் அறிந்துகொள்ள வேண்டுமென்பதில்லை.

“எல்லாப் பொருளும் இதன்பால் உள இதன்பால்
இல்லாத எப்பொருளும் இல்லையால்”


என்று மதுரைத் தமிழ்நாகனாராலும்,
“உள்ளுதொறும் உள்ளுதொறும் உள்ளம் உருக்குமே
வள்ளுவர் வாய்மொழி மாண்பு”


என்று மாங்குடி மருதனாராலும் போற்றிப் புகழப்படும் மாண்புடைய நூல் திருக்குறளாகும். எக்காலத்தும் உலகப் பொதுமறை என்று உலக மக்களால் கொண்டாடப்படும் சிறப்பு வாய்ந்த நூல் திருக்குறளாகும்.

திருவள்ளுவர் நமக்கு அருளிய திருக்குறள் ஓர் அறிவு நூல், அறநூல், தத்துவ நூல். எப்படிப் புகழ்ந்தாலும் திருக்குறளின் முழுமையை நம்மால் வார்த்தைகளால் அளந்து கூறிவிட முடியாது. மக்கள் வாழ்வு முழுவதையும் திருவள்ளுவர் நுணுகி அறிந்து, ஆராய்ந்து உணர்ந்துள்ளார். தமிழரின் வாழ்வியலை மட்டுமின்றி உலக மக்களின் வாழ்வியலையும் தம் நுண்மாண் நுழைபுலத்தால் ஓர்ந்து உணர்ந்ததால்தான் அவரால் ஓர் உலகப் பொதுமறையைப் படைக்க முடிந்தது. குறள் கூறும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வாழ்வியல் மெய்ம்மை நமக்கு இதனைத் தெளிவாக உணர்த்துகின்றது.

இச்சொற்றொடர் அமைந்த அந்த அரிய திருக்குறளை முழுதுமாக உங்களுக்கு நான் சொல்லிக்காட்ட விரும்புகின்றேன்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் குறள்: 972


இத்திருக்குறளுக்கு நேரிய பொருள்: பிறப்பினால் உலக மக்கள் அனைவரும் ஒருவரே ஆவர். அவர்கள் செய்யும் தொழில்கள் வேறுபட்டிருந்தாலும் அதனால் அவர்களுக்குத் தனித்த சிறப்புகள் ஏதுமில்லை என்பதாகும். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது ஓர் அடிப்படை உயிரியல் உண்மை. இவ்வுண்மையைத் திருவள்ளுவர் வாழ்வியல் விழுமியமாக முன்வைக்கின்றார். பிறப்பினால் ஏற்றத்தாழ்வுகள் கற்பிக்கப்படும் இந்தியச் சமூகச் சூழலில் திருவள்ளுவர் முன்வைக்கும் பிறப்பொக்கும் என்ற கருத்து ஒரு பாரிய புரட்சிக் கருத்தாகும். இந்தப் பரந்த உலகத்தையும் உலகத்து மக்களையும் இன்னும் கேட்டால் புல், பூண்டு, மரம், செடி., கொடி, பறவை, விலங்கு முதலான உலகத்து உயிர்கள் அனைத்தையுமே ஒரே தரத்தில் வைத்து எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் என்று உரத்து குரல் கொடுக்கின்றார் அவர். திருவள்ளுவரின் பொதுமைக் கரங்களில் அடங்காத சாதியில்லை, மதமில்லை, மொழியில்லை, வீடில்லை, நாடில்லை, நிறங்கள் இல்லை எல்லோரும் ஒன்று. ஒன்றே ஒன்றன்றி மேல் கீழ் என்ற பேதமில்லை, உயர்வு தாழ்வென்ற தரமில்லை, நான் நீ என்ற பிரிவில்லை, நாம், நாம், நாம்தான்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருவள்ளுவச் சிந்தனையின் வெளிப்பாடுதான் வள்ளலாரின் ஆன்மநேய ஒருமைப்பாட்டுணர்ச்சி.

எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்
தம்முயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர்!அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
இடம்எனநான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திட
என்சிந்தை மிகவிழைந்த தாலோ


வள்ளலாரின் திருஅருட்பாக்களின் அடிநாதமாய் விளங்கின்ற ஆன்மநேய ஒருமைப்பாட்டு உணர்ச்சிக்கு மேலே சொல்லப்பட்ட பாடல் ஒரு சான்று. இப்பாடலில் வரும் ‘எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணி உள்ளே ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்’ என்ற பாடலடிகளில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருவள்ளுவரின் புரட்சிக் குரலைக் கேட்கமுடியும். பிறப்பொக்கும் என்பதைத்தான் வள்ளலார் எத்துணையும் பேதமுறாது என்கிறார். எல்லா உயிர்க்கும் என்பதைதான் எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி என்கிறார். ஆக திருக்குறளின் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற விழுமியமே வள்ளலாரால் ஆன்மநேய ஒருமைப்பாடு என்பதாக மாற்றம் பெறுகிறது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று நம்புகிறவன் உள்ளத்திலேதான் இறைவன் திருநடனமிடுகிறார் என்று திருவள்ளுவரின் பொதுமைச் சிந்தனைக்கு ஆன்மீகம் என்ற புதிய பரிமாணத்தை அளிக்கின்றார் வள்ளலார்.

‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று திருமூலர் படைத்துக் காட்டும் ஓருலக ஒருமைப்பாட்டுக்கும் வழியமைத்துக் கொடுத்தது திருக்குறளின் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தொடரே என்றால் மிகையில்லை.

மகாகவி பாரதி தமிழ்மரபில் தொடர்ந்து வரும் திருக்குறளின் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சிந்தனைமரபின் தொடர்ச்சியாக ஓர் புதுமையைப் புகுத்துகின்றார். அதனைப் பின்வரும் பாடல் தெளிவுபடுத்தும்.

எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓர் இனம்
எல்லாரும் இந்திய மக்கள்
எல்லாரும் ஓர்நிறை எல்லாரும் ஓர் விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - நாம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - ஆம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே


என்று பாடினான பாரதி;. இப்பாடலின் உள்ளீடு திருக்குறளின் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதேயாகும். எல்லாரும் ஓர் குலம் என்று பாடும் அந்தப் பாடலில் அவன் பொதுவுடைமைத் தத்துவத்தைப் பேசுகிறான்.
முப்பது கோடி ஜனங்களின் சங்க
முழுமைக்கும் பொதுவுடைமை.
என்றும்

இனியொரு விதி செய்வோம் - அதை
எந்தநாளும் காப்போம்
தனியொருவனுக்கு உணவிலை யெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்
என்றும்

பாரதி பேசும் பொதுவுடைமைச் சிந்தனைக்கு பலம் சேர்த்தது திருவள்ளுவரின் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற விழுமியமே. சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் என்ற திருக்குறளின் வரிகளையும் அவன் உள்வாங்கியதால்தான் செய் தொழிலின் வேறுபாட்டால் சிறப்புகள் இல்லை. எனவே உழைப்பு பொது, அதேபோல் ஊதியமும் பொதுவாயிருக்க வேண்டும். உடல் உழைப்பாளி குறைந்த ஊதியம் பெற்றதால் போதிய உணவின்றி பசித்திருக்க நேருகின்றதென்றால் இந்த உலகத்தையே அழித்துவிடலாம் என்று ஆவேசப்படுகிறான். திருவள்ளுவரும் இப்படி ஆவேசத்தின் உச்சியில் பரந்து கெடுக உலகியற்றியான் என்று சபிப்பதை இங்கே நாம் நினைவிற்கொள்ளுதல் வேண்டும்.

இன்றைக்கு உலகின் உயர்ந்த சித்தாந்தமாகப் போற்றப்படும் மார்ச்சீய சிந்தாந்தத்தின் வித்தாக பாரதி அமைத்துக் காட்டியது திருக்குறளின் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற உயிர்த்துடிப்புள்ள அடிகளைத்தான் என்று நினைக்கும் போது உண்மையிலேயே நாம் வியந்து போகிறோம்.

திருக்குறள் ஒரு தெளிந்த நீரோடை. ஆதன் உண்மையான ஆழம் ஆயிரம் அடிகளும் அதற்கு மேலும், அது அதனை இரண்டடியாகக் காட்டி ஏமாற்றுகிறது.

நன்றி! வணக்கம்!

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009

முனைவர் நா.இளங்கோவின் படர்க்கை நூல் முன்னுரை

முனைவர் நா.இளங்கோவின்
படர்க்கை நூல் முன்னுரை


முனைவர் நா.இளங்கோ
இணைப்பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8.

முன்னுரையாக

தமிழ் ஆய்வுப்புலம் இன்றைக்குத் தமிழ் இலக்கியம் தமிழ் மொழி என்பனவற்றை எல்லாம் கடந்து தமிழியல் ஆய்வுப் புலமாகப் பேருரு எடுக்கத் தொடங்கிவிட்டது. தமிழியல் என்பது தமிழ் இலக்கிய இலக்கண இயல் என்பதானதன்று. அது தமிழ்மொழி, தமிழர் பண்பாடு, தமிழ் தமிழர் வரலாறு, தமிழர் கலை, தமிழர் அறிவியல் போன்ற பல துறைகளையும் உள்ளடக்கியது. அண்மைக் காலங்களில் தமிழர் கல்விப் புலங்களில் தமிழியல் என்ற சொல்லாடல் பெருகிவிட்டது. தொடக்கக் காலங்களில் தமிழியல் என்பது மேற்கத்திய இன மொழி ஆய்வுத்துறையின் ஒரு பகுதியாகத்தான் தோற்றம் பெற்றது. மேற்கத்திய ஆய்வாளர்களின் கீழ்த்திசை ஆய்வு மற்றும் இந்தியவியல் ஆய்வுகளின் பின்புலத்திலேயே தமிழியல் ஆய்வுகள் வளரத் தொடங்கின. அந்த வகையில் காலனித்துவம் சார்ந்த கல்வி மற்றும் ஆய்வாகவே தமிழியல் இருந்துவந்தது. மேற்கத்திய ஆய்வாளர்களின் இத்தகு தமிழியல் ஆய்வுகளில் தமிழ், தமிழர் முதலான உள்ளடக்கங்கள் பெரிதும் கீழ்நோக்கிய பார்வையிலேயே பதிவுசெய்யப்பட்டன.

இருபதாம் நூற்றாண்டின் பின்பாதியில் தமிழ்ப் பண்டிதர்களிடமிருந்து தமிழாய்வு மெல்ல மெல்லத் தமிழ்க் கல்வியாளர்களிடம் இடம் பெயர்ந்தபோது மேற்கத்திய தமிழியல் ஆய்வுகளே நம்மவர்களுக்குப் பெரிதும் முன்னுதாரண ஆய்வுகளாக அமைந்தன. தமிழியல் ஆய்வுகளில் அவர்களின் பதிவுகளே நமக்கு வழிகாட்டக் கூடியனவாக அமைந்தன. தமிழ், தமிழர் குறித்த தங்கள் அடையாளங்களை அவ்வகை ஆயு;வகளிலேயே நம்மவர்கள் கண்டெடுத்தார்கள். பெரும்பாலான தமிழியல் ஆய்வுக் கட்டுரைகள் ஆங்கிலத்தில் அமைந்து விடுவதும் இக்காரணம் பற்றியே.

இன்றைக்குத் தமிழ் ஆய்வாளர்களுக்குத் தமிழியல் குறித்த பார்வையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. காலனித்துவ ஆதிக்க மனோபாவத்திலிருந்து விடுபட்டு புதிய தமிழியலை நாம் கட்டமைத்துள்ளோம். நமக்கான வரலாற்றை, பண்பாட்டை, கலையை, அறிவியலை மீட்டெடுக்கும் புதிய தமிழியல் ஆய்வுகள் பெருகத் தொடங்கியுள்ளன. இவ்வகைப் புதிய தமிழியல் ஆய்வுகளில் ஒரு சிறு பொறியே படர்க்கை தமிழியல் ஆய்வுகள்.

***
நான் பல்வேறு கருத்தரங்குகளில் எழுத்துரையாக வாசித்த கட்டுரைகளைத் திரட்டி சென்ற ஆண்டு தமிழ் இணர் என்ற பெயரில் ஒரு நூலாகப் படைத்தேன். நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்நூல் தந்த ஊக்கத்தில் இப்பொழுது கருத்தரங்கத்தரங்கத் தமிழியல் கட்டுரைகளைத் திரட்டி படர்க்கை என்ற பெயரில் நூலாக வழங்குகின்றேன். இந்நூலில் உள்ள கட்டுரைகள் நான் 1986 முதல் 2007 வரை பல்வேறு காலங்களில் எழுதியளித்த கட்டுரைகளின் தொகுப்பு. எனவே கட்டுரைகளில் சில தளர்நடை இடும் சில வீறுநடை போடும். ஆய்வில் நான், நீ என்ற தன்மை, முன்னிலைகள் தவிர்க்கப்பட வேண்டும். படர்க்கையே ஆய்வுக்கு உகந்தது. அந்தப் பொருளிலேயே இத்தொகுப்பிற்குப் படர்க்கை என்று பெயரிட்டுள்ளேன்.

பேசுவது எனக்குச் சுகமான வி~யம். எழுதுவது கொஞ்சம் சிரமம். கருத்தரங்குகளில் எழுத்துரையைக் கையில் வைத்துக் கொண்டு பேசி, நான் சொற்களால் காட்சிப் படுத்திய கருத்துக்களை எழுத்தில் அப்படியே கொண்டுவர முயன்றிருக்கிறேன். கருத்தரங்க அவையில் விவாதிக்கப்பட்ட செய்திகளை அச்சு வாகனம் ஏற்றினால்தான் அது அனைவருக்கும் போய்ச்சேரும் என்பதால் துணிந்து நூலாக்கியுள்ளேன்.

நான் மாணவனாயிருந்த காலம் தொடங்கி இன்றுவரை, ஏன் என்றும் என்வளர்ச்சிக்கு உற்ற துணையாயிருக்கும் இலக்கிய இணையர் பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் பேராசிரியர் சா.நசீமாபானு இருவருக்கும் இந்நூலை அன்புக் காணிக்கை ஆக்கியுள்ளேன்.

இந்த நூலாக்கத்திற்கு என்னைப் பெரிதும் ஆற்றுப்படுத்தியவர் முனைவர் சிலம்பு நா.செல்வராசு. என்றும் என்முன்னேற்றத்தில் உண்மையான அக்கறைகொண்ட தோழரிவர்.
அணிந்துரை வழங்கிய முனைவர் வே.ச.திருமாவளவன் என் மதிப்பிற்குரிய பேராசிரியர். பாடநூல்களுக்கு அப்பால் அவரிடம் மாணவர்கள் கற்க வேண்டிய பாடம் அவரின் உழைப்பு, ஈடுபாடு, நேர்மை முதலியன.

இந்நூலின் ஆக்கத்திற்கு உற்ற துணையாயிருந்த இனிய தோழர் தமிழ் விரிவுரையாளர் சின்ன. சேகர். இவரே என் உழைப்பிற்கு உற்றதுணை.

இந்நூலை வெளியிடும் காவ்யா சண்முகசுந்தரம். பதிப்புத் துறையில் வெள்ளிவிழா கண்ட முன்னோடிப் பதிப்பாளர். வெற்றியாளர். உழைப்புத் தேனி.

இந் நால்வருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல.
தமிழ்கூறு நல்லுலகம் நல்ல நூல்களைப் போற்றிப் பாராட்டும் என்ற நம்பிக்கையுடன்.
நன்றி!
முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா.இளங்கோவின் தமிழ் இணர் நூல் முன்னுரையின் ஒரு பகுதி

முனைவர் நா.இளங்கோவின் தமிழ் இணர் நூல் முன்னுரையின் ஒரு பகுதி

முனைவர் நா.இளங்கோ
இணைப்பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8.


முன்னுரையாக…

தமிழர்களின் ஆய்வுத் தேட்டத்தைத் தொல்காப்பியத்திலும் திருக்குறளிலும் இடைக்கால உரையாசிரியர்களின் உரைப்பகுதிகளிலும் பரக்கக் காணலாம். ஷமாத்திரை முதலா அடிநிலை காறும் நோக்குதல் காரணம் நோக்கெனப் படுமே| என்று தொல்காப்பியர் குறிப்பிடும் நோக்கு தமிழரின் ஆய்வு அணுகுமுறையின் ஒரு கூறு. முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணுவதும் பாடலுள் பயின்றவை நாடுவதும் ஒருவகை ஆய்வு அணுகுமுறையே. திருவள்ளுவர் குறிப்பிடும் நவில்தொறும் நூல் நயமும், குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளலும் ஆய்வு அணுகுமுறைகளே. இடைக்கால இலக்கண இலக்கிய உரையாசிரியர்கள், அனைவரும் ஆய்வாளர்களே. ஆங்கிலக் கல்வி நம்மிடம் இயல்பாக, மரபாக அமைந்திருந்த ஆய்வு மனப் பான்மையை கூர்மைப்படுத்தியது என்பது உண்மை.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக் காலங்களில் தமிழாய்வு சிறிய அளவில் நிறுவனம் சார்ந்த கல்வியாளர்களாலும் பெரும்பான்மை நிறுவனம் சாராத கல்வியாளர்களாலும் வளர்த்தெடுக்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி பல்கலைக் கழகங்களின் பெருக்கத்தாலும் ஆய்வுப் படிப்புகளின் நெருக்கத்தாலும் தமிழாய்வு பெரிதும் நிறுவனம் சார்ந்த கல்வியாளர்களையே சார்ந்து நிற்கவேண்டிய கட்டாயத்திற்குள்ளானது. கல்வியாளர் ஆய்வுகளுக்கு அப்பாற்பட்டு சிறுபத்திரிக்கை வட்டங்களிலும் சில சுதந்திர ஆய்வாளர்களாலும் தமிழாய்வு குறிப்பிடத்தக்க இலக்கை எட்டியுள்ளமை நிறைவளிக்கக் கூடியதே. கடந்த பத்தாண்டுகளில் கல்விப்புலம் சார்ந்து நடத்தப்பெறும் ஆய்வரங்குகள் பெருகியுள்ளன. ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் மட்டுமில்லாமல் பல அரசு, தனியார் கல்லூரிகளும் தமிழ் கலை இலக்கிய அமைப்புகள் பலவும் சிற்றிதழ்கள் சார்ந்தும் இவ்வகை ஆய்வரங்குகள் நடத்தப்படுகின்றன. இவ் ஆய்வரங்குகளில் வாசிக்கப்படும் கட்டுரைகள் பெரும்பாலும் நூலாக்கம் பெருகின்றன. இன்னும் சிலகாலம் கழித்து இவ்வகை ஆய்வரங்குகளின் ஆய்வுகள் மதிப்பிடப்படும். தமிழாய்வுக்கு உண்மையிலேயே இவ்வகை ஆய்வரங்குகளின் பங்களிப்பு யாது? என்பது சீர்தூக்கிப் பார்க்கப்படும். அல்லன நீக்கி நல்லன பாதுகாக்கப்படும்.

அண்மைக் காலங்களில் தமிழாய்வு மேலை இலக்கியத் திறனாய்வு அணுகுமுறைகள் பலவற்றையும் தம்முள் இணைத்துக் கொண்டுள்ளது. புதிய புதியத் துறைகள் புதிய புதிய அணுகுமுறைகள் தமிழாய்வை மேலும் செழுமைப்படுத்தும் என்பதில் நமக்கு எள் அளவும் ஐயமில்லை. அதே சமயம் தமிழின் மரபார்ந்த ஆய்வு அணுகுமுறைகளையும் நாம் மீட்டெடுத்தல் அவசியம்.

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...