செவ்வாய், 29 மே, 2012

தமிழர் வீரமும் பலமும் -இளவட்டக்கல்


முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8



புதுக்கோட்டை மாவட்டம் திருமய்யம் கோட்டையை ஒட்டிய கோயில் வளாகத்தில் கவனிப்பாரற்றுக் கிடக்கும் இளவட்டக்கல். 



இளவட்டக் கல்லைச் சுமக்கப் போவதுபோல் பாவனை காட்டும் 
முனைவர் நா.இளங்கோ

இளவட்டக்கல்:
சென்ற நூற்றாண்டுகளில் தமிழகத்தின் தென்மாவட்டங்களில், குறிப்பாகப் பாண்டி நாட்டில் இந்த இளவட்டக் கல்லை தூக்கிச்சுமக்கும் வீரவிளையாட்டு நடப்பதுண்டு. இளவட்டக் கல்லைத் தூக்கிச் சுமக்கும் இளைஞனுக்கே தம் பெண்ணை மணமுடித்துத் தருவதாக மறவர் குலத்தில் ஒரு வழக்கமுண்டு. இன்றைக்கு அந்த வழக்கம் மறைந்துபோய் விட்டாலும் தென்மாவட்டங்களில் பல சிற்றூர்களில் இன்றும் இளவட்டக் கல்லைச் சுமக்கும் போட்டி நடத்தப்படுகிறது. வென்றவர்களுக்குப் பரிசுகள் உண்டு. (பெண் கொடுப்பதில்லை)

இளவட்டக்கல் பொதுவாகச் சுமார் 100 கிலோ எடைகொண்டதாகவும். முழு உருண்டையாக வழவழவென்று எந்தப்பிடிப்பும் இல்லாமல் கைக்கு அகப்படாத வடிவத்தில் இருக்கும். இளவட்டக் கல்லுக்குக் கல்யாணக் கல் என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

இளவட்டக்கல்வைச் சுமப்பதில் பல படிநிலைகள் உண்டு.
முதலில் குத்தங்காலிட்டு உட்கார்ந்த நிலையில் கல்லை இருகைகளாலும் சேர்த்தணைத்து இலேசாக எழுந்து கல்லை முழுங்காலுக்கு நகர்த்தி, பின்னர் முழுதாக நிமிர்ந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கல்லை நெஞ்சின் மீது ஏற்றி, பின்னர் தோள்பட்டைக்கு நகர்த்தி முழுதாகச் சுமக்க வேண்டும். தோள்பட்டைக்கு இளவட்டக்கல் வந்துவிட்டால் அடுத்துக் கல்லோடு கோயிலை வலம்வருவது குளத்தை வலம்வருவது எனச் சாதனைகளைத் தொடரலாம்.

புதுமாப்பிள்ளைகளுக்குக் கருப்பட்டிப் பணியாரம் செய்துகொடுத்து அவரை இளவட்டக்கல்லைத் தூக்கச் சொல்லும் பழக்கம் முன்னர் நடைமுறையில் இருந்ததாம். தமிழரின் உடல்பலத்திற்கும் வீரத்திற்கும் சாட்சியாகத் திகழ்ந்த இந்த இளவட்டக் கற்கள் இன்றைக்குப் பல ஊர்களில் தம்மைத் தூக்கிச் சுமப்பார் யாரும் இல்லாமல் பாதியளவு மண்ணில் புதைந்துகிடக்கும் பரிதாபத்தை நாம் காணலாம்.

சனி, 19 மே, 2012

My ebook - இலக்கிய வரலாற்றில் குறுந்தொகை -மின்நூல்







இலக்கிய வரலாற்றில் குறுந்தொகை மின்நூலைப் பார்வையிட இங்கே சொடுக்கவும்



 முனைவர் நா.இளங்கோ
தமிழ்ப் பேராசிரியர்
புதுச்சேரி-8

புதுச்சேரியில் பெளத்தம் - எனது மின்நூல்









மின்நூலைப் பார்வையிட இங்கே சொடுக்கவும்
Myebook - Buddhism in Puducherry (Tamil)


முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8


ஞாயிறு, 13 மே, 2012

பத்துப்பாட்டில் முல்லைப்பாட்டு - ஆய்வுநோக்கில் முல்லைப்பாட்டு -பகுதி-1

பத்துப்பாட்டில் முல்லைப்பாட்டு

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

செவ்வியல் தமிழின் பெருமைகளுக்கு ஒரு மணிமகுடமாகத் திகழ்வன இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களே. பாட்டும் தொகையும் என்று பொதுவில் அழைக்கப்படும் சங்க இலக்கியங்களின் எண்ணிக்கை பதினெட்டாகும். பத்துப்பாட்டு, பத்து நெடிய பாடல்களின் தொகுப்பாகும். இவை தனித்தனி ஆசிரியர்களால் பாடப்பட்ட தனி நூல்களே. எட்டுத்தொகை எட்டுத் தொகுப்பு நூல்களாகும். பத்துப்பாட்டு பத்தும் எட்டுத்தொகைகள் எட்டும் என சங்க இலக்கியங்கள் பதினெட்டாகும்.
பத்துப்பாட்டு எட்டுத்தொகை நூல்களின் பெயர்களை வரிசைப்படுத்தும் பழம் பாடல்கள்,

முருகு, பொருநாறு, பாண்இரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி -மருவினிய
கோல நெடுநல்வாடை, கோல்குறிஞ்சி, பட்டினப்
பாலை, கடாத்தொடும் பத்து

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறமென்று
இத்திறத்த எட்டுத் தொகை


என்று சங்க இலக்கியப் பதினெட்டு நூல்களையும் அறிமுகம் செய்யும். அகமும் புறமும் இந்நூற்களின் பாடுபொருள்களாகும்.

பத்துப்பாட்டு:

சங்க இலக்கியங்களில் பாட்டு என்றாலே அது பத்துப்பாட்டு நூல்களைத்தான் குறிப்பிடும். பேராசிரியர் பெ.சுந்தரம் பிள்ளை,

பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ
எத்துணையும் பொருட்கியையும் இலக்கணமில் கற்பனையே?


என்று பத்துப்பாட்டினை முன்வைத்துச் சங்க இலக்கியங்களின் இயற்கை நவிற்சித் தன்மைகளை வியந்து போற்றுகிறார். சங்கத் தொகை நூல்களில் பத்துப்பாட்டு முற்பட வைத்து எண்ணப்படுவதே அதன் பெருமையை உணர்த்தும். எட்டுத்தொகை போல் பத்துப்பாட்டும் தொகை நூலே. ஆசிரியர் எண்மர் பாடிய பத்து அகவல் பாக்கள் இதில் உள்ளன.

    பிற்காலத்தில் தோன்றிய பன்னிரு பாட்டியல் எனும் பாட்டியல் நூலில் பத்துப்பாட்டு இலக்கிய வகை குறித்த இரண்டு நூற்பாக்கள் இடம்பெற்றுள்ளன. அவை வருமாறு:

    நூறடிச் சிறுமை நூற்றுப்பத் தளவே
    ஏறிய அடியின் ஈரைம் பாட்டுத்
    தொடுப்பது பத்துப் பாட்டு எனப்படுமே     
        (பன். பாட். 384)

அதுவே அகவலின் வருமென அறைகுவர் புலவர்        (பன். பாட். 385)

இந்நூற்பாக்கள் ‘பத்துப் பாட்டு’ என்னும் வழக்கு நிலவிய காலத்தில் இயற்றப் பட்டிருக்க வேண்டும். சங்க இலக்கியப் பத்துப்பாட்டு இலக்கியத்தை வைத்தே இவ்விலக்கணம் வகுக்கப்பட்டுள்ளது. இத் தொகுப்பினத் தவிர வேறு பத்துப்பாட்டு நூல்கள் எதுவும் தமிழுலகில் இல்லை.

    பத்துப்பாட்டு நூலுள் மிகச் சிறிய பாட்டு முல்லைப்பாட்டு, 103 அடிகள். மிகப்பெரிய பாட்டு மதுரைக் காஞ்சி, 782 அடிகள். பத்துப்பாட்டுள் ஐந்து பாடல்கள் ஆற்றுப்படைகள். திருமுருகாற்றுப்படை என்னும் புலவர் ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, மலைபடுகடாம் என்னும் கூத்தர் ஆற்றுப்படை என்பன அவை. மதுரைக் காஞ்சி, நிலையாமை கூறும் காஞ்சித் திணை சார்ந்த நூல், எனவே புறப்பொருள் பாட்டு. ஆக மேற்சுட்டிய ஆறு நூல்களும் புறப்பொருள் பற்றியன. முல்லைப் பாட்டு, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, நெடுநல்வாடை என்ற நான்கு நூல்களும் அகப்பொருள் பற்றியன. நெடுநல்வாடை குறித்து அகமா? புறமா? என்ற விவாதங்கள் இருப்பினும் அது அகப்பொருள் நூலே.

முல்லைப்பாட்டு:
பத்துப்பாட்டின் அகப்பொருள் பாட்டுக்கள் நான்கனுள் அளவால் சிறியது முல்லைப்பாட்டு. மொத்தம் 103 அடிகள். முல்லைப்பாட்டின் ஆசிரியர் காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார். இவருடைய இயற்பெயர் பூதன் என்பது ஆகும். ஆர் விகுதி உயர்வு குறித்ததாகும். கல்விக் கேள்விகளில் சிறந்து விளங்கிய சான்றோர்களின் இயற்பெயருக்கு முன்னர் ‘ந’ என்னும் சிறப்புப் பொருளைத்தரும் இடைச்சொல்லைச் சேர்த்து வழங்குதல் பழந்தமிழர் மரபு. அவ்வகையில் பூதன் என்ற பெயர் நப்பூதனார் என வழங்கப்பட்டிருத்தல் வேண்டும். நக்கீரனார், நத்தத்தனார், நச்சள்ளையார் முதலான பெயர்களில் ந என்னும் சிறப்பு முன்னொட்டு இடம்பெறுதல் ஒப்புநோக்கத் தக்கது.

முல்லைப்பாட்டில் பாடி வீட்டின் உள் கட்டமைப்பு மற்றும் அரசர் தனியறை குறித்த வருணனைகளை மிக நுணுக்கமாகக் கையாளும் திறத்தினைக் கொண்டு இவர் வணிகர் குடியில் பிறந்தவராயினும் மன்னருடனும் மற்றும் அவர்தம் படைகளுடனும் பெரிதும் நெருங்கிப் பழகியவர் என யூகிக்க முடிகின்றது.

இவர் தந்தையார் பொன்வாணிகர் என்பதும் இவர் சோழ நாட்டுத் தலைநகரில் பிறந்து வளர்ந்தவர் என்பதும், இவரின் பெயர்வழி அறிந்துகொள்ள முடிகின்றது. முல்லைப்பாட்டு ஆசிரியரின் காலத்தை அறிய உறுதியான சான்றுகள் இல்லை. முல்லைப்பாட்டில் யவனரைப்பற்றியும், மிலேச்சரைப்பற்றியும் குறிப்புகள் வருகின்றன. நெடுநல்வாடையிலும் இதுபோன்ற குறிப்புகள் வருகின்றன. எனவே, நெடுநல்வாடை தோன்றிய காலத்தை அடுத்து முல்லைப்பாட்டு தோன்றியிருக்க வேண்டும் என்று அறிஞர் இராசமாணிக்கனார் முல்லைப்பாட்டின் காலத்தைக் கணிக்கின்றார். நற்றிணையில் உள்ள 29-ஆம் பாடலை இயற்றிய பூதனாரும், முல்லைப்பாட்டின் ஆசிரியர் நப்பூதனாரும் ஒருவரே என்ற ஒரு கருத்தும்  உள்ளது.

முல்லைக்குரிய உரிப்பொருள் இருத்தலும் இருத்தல் நிமித்தமும் ஆகும். இருத்தல் என்ற இவ் உரிப்பொருளைச் சிறப்பித்தும் முல்லைக்குரிய முதல் கருப்பொருள்களை இடம்பெறச் செய்தும் பாடப்படும் அகப்பாட்டு முல்லைப் பாட்டாகும். இருத்தல் என்றால் ஆற்றியிருத்தல் என்பது பொருளாகும். தலைவன் பிரிந்து சென்றதனால் ஏற்பட்ட பிரிவுத் துயரத்தைத் தலைவி பொறுத்துக் கொண்டிருத்தல் என்பதாகும். கற்பின் விளக்கம் கூறுவோர் எத்தகைய துன்பம் வரினும் தன்னிலையில் தளராது விளங்கும் ஒருத்தியை முல்லை சான்ற கற்பினள் என்று வியந்து பாராட்டுவது உண்டு. அத்தகைய முல்லை சான்ற கற்பினள் ஒருத்தியின் இருத்தலை விளக்குவதாக முல்லைப்பாட்டு அமைந்துள்ளது. 

போர் மேற்சென்ற தலைவன் தான் வரும் வரையில் ஆற்றியிருக்க வேண்டும் என்று தன் தலைவியிடம் வேண்ட அவளும் அவ்வாறே ஆற்றியிருந்தாள். தலைவனும் தான் குறித்த காலத்தில் திரும்பி வந்து அவளைக் கூடி இன்புற்றான். பிரிவுக் காலத்து இருவரின் மனநிலைகளையும் இப்பாடல் எடுத்துரைக்கின்றது.

முல்லைப்பாட்டின் தலைவன் - ஆய்வு நோக்கில் முல்லைப்பாட்டு -பகுதி-2

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-605008

முல்லைப்பாட்டின் தலைவன்:

    முல்லைப்பாட்டு ஓர் அகப்பொருள் இலக்கியம். புறப்பொருள் இலக்கியங்களுக்குப் பாட்டுடைத் தலைவர்கள் உண்டு. அகப்பொருள் இலக்கியங்களுக்கு பாட்டுடைத் தலைவர்கள் இல்லை. கிளவித் தலைவர்கள் மட்டுமே பாடப்படுவர். கோவை முதலான அகப்பொருள் இலக்கியங்களில் பாட்டுடைத் தலைவர், கிளவித் தலைவர் என இருவேறுபட்ட தலைவர்கள் அமையப் பாடும் மரபு பிற்கால வழக்கு.

    மக்கள் நுதலிய அகனைந் திணையும்
    சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறாஅர்

என்ற அகப்பொருள் மரபை ஒட்டி, முல்லைப்பாட்டுக்குப் பாட்டுடைத் தலைவர் இன்னார் என்று சுட்டி சொல்லப்பட முடியாது என்பதே உண்மையாயினும் முல்லைபாட்டு ஆராய்ச்சியுரையில் மறைமலையடிகள்,
  • இம் முல்லைப்பாட்டை அடுத்திருக்கின்ற மதுரைக்காஞ்சியும் நெடுநல்வாடையும் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு விளங்கலால், அவற்றை அடுத்திருக்கின்ற இதுவும் அவனையே பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு செய்யப்பட்டிருக்கலாமென்பது கருதப்படும்.
என்று குறிப்பிடுவார்.

பாண்டியன் நெடுஞ்செழியன் தலையாலங் கானம் என்னும் இடத்தில் தன்னைப் பகைத்து எதிர்ந்த சேரன் சோழன் திதியன் எழினி எருமையூரன் இருங்கோவேண்மான் பொருநன் என்னும் அரசர் எழுவரொடும் போர்புரிந்தான் என்ற சங்க இலக்கியச் செய்தியோடு முல்லைப்பாட்டினைப் பொருத்தி இப்பாடலில் குறிப்பிடப்படும் போர் தலையாலங் கானப் பேரே என்றும் தலைவியைப் பிரிந்து பாசறையில் வினையாற்றி மீளும் தலைவன் நெடுஞ்செழியனே என்றும் மறைமலையடிகள் குறிப்பிடுவார்.

வாடைக்காலத்தும் வேனிற்காலத்தும் அரசர்கள் போர்மேற்சென்று பாசறைக்கண் இருப்பது பண்டைக்காலத் தமிழ்நாட்டு வழக்கம். வேனிற் காலத்துப் போர்மேற் சென்ற பாண்டிய நெடுஞ்செழியனை நினைந்து கார்காலத்தில் பிரிவாற்றியிருந்த தலைவியின் இருத்தல் ஒழுக்கத்தைப் பொருளாக வைத்து நப்பூதனார் இம்முல்லைப் பாட்டை இயற்றினார் என்றும் திரும்பவுங் கூதிர்காலத் துவக்கத்திலே நெடுஞ்செழியன் தன் மனையாளைப் பிரிந்து போர்மேற் செல்லத், தலைமகள் பிரிவாற்றாது வருந்திய பாலையென்னும் அகப்பொருள் ஒழுக்கத்தைப் பொருளாக வைத்து நக்கீரனார் நெடுநல்வாடை இயற்றினாரென்றும் அடிகளார் கருதுவார்.

இவ்வாறு வலிந்து கிளவித்தலைவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொள்வதில் அகப்பாடல்களுக்குச் சிறப்பொன்றும் கூடுவதில்லை, அதேசமயம் அகப்பொருளுக்குரிய பொதுமைத் தன்மை சிதைந்து தனிப்பட்டவர்களின் காதல் வாழ்க்கைச் சித்தரிப்பாக மாறி கற்போர் நெஞ்சில் சுவை குன்றக்கூடும் என்பதனால் இத்தகு அகப்பாடல் தலைமக்களைக் கிளவித் தலைவர்களாகவே கொள்ளல் பொருந்தும்.

முல்லைப்பாட்டா? நெஞ்சாற்றுப்படையா? ஆய்வு நோக்கில் முல்லைப்பாட்டு -பகுதி-3

முல்லைப்பாட்டா? நெஞ்சாற்றுப்படையா?


முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

    முல்லைப்பாட்டு என்ற இவ்வகப்பாட்டு நூலைச் சில இலக்கிய வரலாற்றாசிரியர்கள் நெஞ்சாற்றுப்படை என்று குறிப்பிடுகின்றனர். ஆற்றுப் படுத்துதல் என்பதற்கு வழிகூறுதல் அல்லது நெறிப்படுத்துதல் என்பதாகப் பொருள் கொள்ளலாம். ஆற்றுப்படுத்துவதன் வழி நன்மை உண்டாதல் வேண்டும் அதுவே ஆற்றுப்படையின் நோக்கம். இங்கே நெஞ்சு ஆற்றுப்படுத்துவதனால் தலைவியின் நிறையழியும் எனில் அது ஆற்றுப்படை ஆகாது.

இன் துயில் வதியுநன் காணாள். துயர் உழந்து,
நெஞ்சு ஆற்றுப்படுத்த நிறை தபு புலம்பொடு,
நீடு நினைந்து, தேற்றியும், ஓடு வளை திருத்தியும்,
மையல் கொண்டும், ஒய்யென உயிர்த்தும்,       
    (முல்லை. 80-83)

எனவரும் முல்லைப்பாட்டுப் பகுதியில் தலைவி தன் தலைவனைக் காணாளாய் துன்புற்று நெஞ்சம் செலுத்தும் வழியில் தம் நிறையழியும் என்பதை உணர்ந்து நெஞ்சின் போக்கிலிருந்து விடுபட்டுத் தன்னைத் தேற்றிக்கொள்கிறாள் என்பதாகவே நப்பூதனார் தம் இலக்கியத்தைப் படைக்கின்றார். நெஞ்சு இங்கே ஆற்றுப்படுத்த முயன்று தோற்றுப்போகிறது. அதுமட்டுமன்றி தலைவி தன் நெஞ்சைத் தேற்றுகிறாள் அதாவது ஆற்றியிலிருத்தலே கடன் என நெஞ்சிற்கு அறிவுறுத்துகின்றாள். இப்படியிருக்க நெஞ்சு ஆற்றுப்படுத்திய நெஞ்சாற்றுப் படையே முல்லைப்பாட்டு என வலிந்து பொருள் கொள்ளுதல் பொருத்தமாகத் தோன்றவில்லை.

பொருட்சுருக்கம்:
   
திருமால், வாமனனாகச் சென்று இரந்தபோது மாவலி வார்த்த நீர் கையில் பட்ட அளவில் பேருரு எடுத்ததைப் போல் கடல்நீரைக்குடித்து உலகத்தை வளைத்து வலமாக உயரந்தெழுந்த மேகம் மலைகளில் தங்கி மாலைக் காலத்தில் பெருமழையைப் பெய்தது. போர்வினை முடித்து கார்காலத்தில் திரும்பிவருவேன் என்று சொல்லிச் சென்ற தலைவன் பெருமழை தொடங்கிய பின்னும் வராத காரணத்தால் தலைவி கண்கலங்கி அழுகின்றாள். பெருமுது பெண்டிர் அவள் துயரைத் தணிப்பதற்கு நெல்லும் பூவும் தூவி நற்சொல் கேட்டு கைதொழுது நிற்கின்றனர்.

அப்பொழுது ஆயர் குலப் பெண்ணொருத்தி, தாய்ப் பசுவைப் பிரிந்த கன்றுகளின் துயரத்தைப் பார்த்து, கன்றுகளே, இடையர்கள் பின்னின்று செலுத்திக் கொண்டுவர உங்கள் தாய்ப் பசுக்கள் இப்பொழுதே வரும் என்று சொல்கிறாள். இச்சொல் கேட்ட பெருமுது பெண்டிர் இதனையே நற்சொல்லாகக் கொண்டு தலைவியிடம் வந்து, மாயோளே! நற்சொல் கேட்டோம் ஆகவே போர்மேல் சென்ற தலைவர் வெற்றிகரமாக வினைமுடித்து இப்பொழுதே வரவர் நீ உன்னுடைய கவலையை விட்டொழிப்பாயாக என்று தேற்றுகின்றனர். அவர்கள் தேற்றவும் ஆற்றாதவளாய் தலைவி கண்ணீர் சோர அழுது வருந்துகின்றாள்.

    தலைவியின் நிலை இவ்வாறிருக்க, வினைமேற் சென்ற தலைவன் நிலையை அடுத்து விவரிக்கின்றார் நப்பூதனார்.
படையெடுத்துச் சென்ற மன்னன் பகையரசனுடைய நகரத்துக்குப் பாதுகாப்பாக இருந்த காடுகளை வெட்டி, வேட்டுவர் குடிசைகளை அழித்து, முட்களை மதிலாக வளைத்துக் கடல் போன்று அகன்றதொரு பாடி வீட்டை அமைத்திருக்கின்றான். தழைகளால் வேயப்பட்ட அப்பாடி வீட்டின் நாற்சந்தியில் காவலாக நிற்கும் யானைகள் கரும்பும் நெற்கதிரும் அதிமதுரத் தழையும் சேர்ந்த உணவை உண்ணாது தம் துதிக்கையால் நெற்றியைத் துடைத்துக் கொண்டும், வளைந்த கொம்பிலே தும்பிக்கையைத் தொங்கவிட்டுக் கொண்டும் நிற்கின்றன. யானைப் பாகர்கள் அங்குசத்தால் குத்தி வடசொற்களால் அதட்டி யானைக்குக் கவளத்தை ஊட்டுகின்றனர்.
 குந்தாயுதங்களை ஊன்றி அவற்றின் மேல் கேடயங்கள் படல்கள் போல் பிணைக்கப்பட்டுள்ளன.

இப்படி வில், வேல், கேடயம் இவைகளால் பாதுகாப்பு அரண் அமைத்த பல கூடாரங்களுக்கு நடுவே அரசனுடைய பாசறை அமைந்திருக்கின்றது. அப்பாசறையில் இடையில் வாளைத் தொங்கவிட்டிருக்கும் வீரப்பெண்கள் விளக்கு அவியும் பொழுதெல்லாம் அவற்றைச் சீர் செய்யும் வகையில் திரிகளைக் கொளுத்திக் கொண்டும் எண்ணெய் ஊற்றும் சுரையைக் கைக்கொண்டும் விளங்குகின்றனர். மணியோசைகள் அற்ற அந்த நள்ளிரவில் உடலில் சட்டையணிந்து தலைப்பாகை திரித்திருக்கும் அனுபவம் மிக்க அரசனது மெய்க்காப்பாளர்கள் மோசி மல்லிகைக் கொடி அசைவது போல் தூக்கம் நிறைந்த முகத்தோடு திரிகின்றனர். பொழுதை அளந்து அறியும் பணியாளர்கள் அரசனை வாழ்த்தி நேரத்தை அவனுக்குத் தெரிவிக்கின்றனர்.

   வலிய கயிற்றால் திரை அமைக்கப்பட்டு உள் அறை, வெளி அறை என இரண்டாக அமைக்கப்பட்ட அரசனின் பாசறையில் சட்டை அணிந்த, குதிரைச் சவுக்கை மாட்டிய, அச்சம் தரும் தோற்றம் கொண்ட, வலிமை வாயந்த யவனர்கள் வெளிச்சம் காட்ட அரசன் உள்அறையை அடைகிறான், அங்கே ஊமையரான மிலேச்சர்கள் காவல் காக்கின்றனர். பாசறையின் உள் அறையில் அமைந்துள்ள படுக்கையில் அரசன் உறக்கம் வராமல் படுத்திருக்கின்றான்.

முதல்நாள் போரில் புண்பட்ட யானைகளை நினைக்கின்றான். யாகைளின் தும்பிக்கைகளை வெட்டி வீழ்த்தி வெற்றிமுரசு கொட்டிய வீரர்களை நினைந்து நெகிழ்கின்றான். அம்பு பாய்ந்த வலியால் உணவு உண்ணாது காதுகளைக் கவிழ்த்துக் கிடக்கும் குதிரைகளை எண்ணி நோகின்றான். அவனுடைய ஒருகை படுக்கையிலும் ஒருகை தலையிலும் இருக்கின்றது. நாளைய போர் குறித்துத் திட்டமிட்டுக் கொண்டே கண் துயில்கிறான் அரசன். மறுநாள் போரில் பகைவரை வென்று வெற்றி முரசு முழங்க தாம் சூடிய வஞ்சி மாலைக்கு வெற்றியை ஈட்டிய மகிழ்வில் கண்துயில்கிறான்.

பாசறையில் தலைவன் நிலை இவ்வாறிக்க இரண்மனையில் தலைவியின் எவ்வாறிருந்தது என்பதை அடுத்துச் சொல்லத் தொடங்குகிறார் புலவர். பாவை விளக்குகள் ஒளிவீசும் உயர்ந்த ஏழடுக்கு மாளிகையிலிருக்கும் தலைவி பாசறையிலே தலைவனிருக்க அவனைத் தன் படுக்கையில் காணாது துயருருகிறாள். பின்னர், தலைவி நெஞ்சம் ஆற்றுப்படுத்திய வழியில் நிறையழியும், ஆற்றியிருத்தலே கடமை என்பதுணர்ந்து தம்மை தேற்றிக் கொண்டும் கழலும் தமது வளையல்களைச் செறித்துக் கொண்டும் மயங்கியும் பெருமூச்செறிந்தும் அம்புதைத்த மயில் போல் நடுங்கிப் படுக்கையில் கிடக்கிறாள் 

கார்காலத்து மழைநீர், கூரை கூடும் இடங்களில் அருவிபோல் சொரிய அதனால் உண்டான பல்வேறு இனிய ஓசைகளைக் கேட்டவாறு ஆற்றியிருக்கிறாள் தலைவி.

அப்பொழுது,    பகைவரை வென்று அவர்தம் நிலங்களைக் கவர்ந்த பெரிய படையோடு, வெற்றிக் கொடி உயர்த்தி, ஊதுகொம்பும், சங்கும் முழங்க வருகிறான் தலைவன். அவன் வரும் வழியில் அஞ்சனம் போல் காயா மலர்களும் பொன்போல் கொன்றை மலர்களும் கைபோல் வெண்காந்தள் மலர்களும் இரத்தச் சிவப்பில் தோன்றி மலர்களும் பூத்திருக்கின்றன. வரகங் கொல்லையில் இளமான்கள் துள்ளி விளையாடுகின்றன. வள்ளியங்காடுகள் பின்னே போகும்படி தலைவன் முல்லைநில வழியில் வரும் தலைவனின் தேரில் பூட்டிய குதிரைகள் எழுப்பிய ஆரவார ஓசை தலைவியின் காதுகள் மகிழும்படியாக எழுந்தது.

முல்லைப்பாட்டா? வஞ்சிப்பாட்டா? ஆய்வு நோக்கில் முல்லைப்பாட்டு - பகுதி-4

முல்லைப்பாட்டா? வஞ்சிப்பாட்டா? 

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப்பேராசிரியர்
புதுச்சேரி-8


முல்லைப்பாட்டா? வஞ்சிப்பாட்டா?

நப்பூதனார் இம்முல்லைப்பாட்டை 103 அடிகளில் பாடியிருப்பினும் முல்லைக்குரிய முதல், கரு, உரிப் பொருள்கள் ஒன்றும் குறைவு படாது முழுமையாகப் படைத்திருப்பது சிறப்பிற்குரியது. ஆயினும் கார்காலத்து மாலைப்பொழுதில் பெருமழை கண்டு வருந்தும் தலைவியது நிலைவிளக்கும் ‘நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு’ (முல்லை.1) என்பது முதல் ‘பூப்போல் உண்கண் புலம்பு முத்துறைப்ப’ (முல்லை. 23) எனமுடியும் 23 ஆம் வரியோடு நிறுத்திக் கொண்டு, அவ்வாறு வருந்திக் கிடப்பவள் மகிழ, தலைவன் மீண்டு வந்து சேர்ந்ததை விளக்கும் ‘இன் துயில் வதியுநன் காணாள். துயர் உழந்து’ (முல்லை. 80) எனத்தொடங்கும் வரி முதலாக ‘வினைவிளங்கு நெடுந்தேர் பூண்ட மாவே’ (முல்லை. 103) என்ற இறுதி வரையிலான 24 அடிகளை இணைத்து 47 அடியளவினதான முல்லைத் திணைப் பாடலாக மட்டும் அமைக்காமல் ‘கான்யாறு தழீஇய அகன்நெடுப் புறவு’ (முல்லை. 24) தொடங்கி ‘அரசு இருந்து பனிக்கும் முரசு முழுங்கு பாசறை’ (முல்லை. 79) முடிய 56 அடிகள் முல்லைக்குப் புறனாய வஞ்சித் திணையும் விரவி வரும்படி இம்முல்லைப் பாட்டை அமைத்திருப்பது புலவரின் படைப்பாற்றலுக்குத் தக்கதோர் சான்றாகும்.

103 அடிகள் கொண்ட ஓர் அகப்பாடலில் 47 அடியளவில் முல்லைத் திணையாம் அகப்பொருளைக் கூறி 56 அடிகளில் வங்சித் திணையாம் புறப்பொருளை விரித்துரைப்பது இப்பாடல் முல்லைப்பாட்டா? வஞ்சிப்பாட்டா? என்ற மயக்கத்தினை ஏற்படுத்துகின்றது. ஆயினும் நப்பூதனாரின் இவ்வுத்தி ‘வஞ்சி தானே முல்லையது புறனே’ என்ற தொல்காப்பியப் பொருளிலக்கணத்திற்கு மாறுபடாமல் அமைந்திருப்பதோடு முல்லையாகிய இருத்தல் உரிப்பொருளுக்கு மேலும் அழுத்தமும் அழகும் தருவதாய் பின்னப்பட்டிருப்பது இலக்கிய இன்பத்தை மிகுவிப்பதாய் உள்ளது.

முல்லைப்பாட்டின் உரிப்பொருள் இருத்தலா? இரங்கலா?

முல்லைப்பாட்டின் துறை:
கார்காலத் தொடக்கத்தே மீள்வேன் என உறுதி கூறிப் பிரிந்து சென்ற தலைவன், கார்காலம் வந்த பின்னரும் வாராமை கண்டு ஆற்றாமை மிக்குக் கலங்கி நிற்பதும் அக்கலக்கம் தீரத் தலைவன் வினைமுடிந்து மீண்டுவரும் ஓசை கேட்டு மகிழ்தலுமே இப்பாட்டின் துறையாகும்.

ஆனால் நச்சினார்க்கினியர் இப்பாடலுக்குக் கூறும் துறை, “தலைவன் வினைவயின் பிரியக் கருதியதனைக் குறிப்பால் உணர்ந்து ஆற்றாளாய தலைவியது நிலைமைகண்டு, அவன் வற்புறுப்பவும் உடம்படாதவளைப் பெருமுது பெண்டிர் அவன் வினைமுடித்து வருதல் வாய்வது நீ வருத்தம் நீங்குவதெனக் கூற, அதுகேட்டு அவள் நீடு நினைந்து ஆற்றியிருந்தவழித் தலைவன் அக்காலத்தே வந்ததனைக் கண்டு வாயில்கள் தம்முட் கூறியது” என்பதாகும்.

நச்சினார்க்கினியர் சொல்லும் துறைக் குறிப்பு பாடலில் பல முரண்களைத் தோற்றுவிக்கின்றது.
  • 1. பெருமுது பெண்டிர் விரிச்சி கேட்டது தலைவன் பிரிந்த காலத்தில் என்றாகிறது. 
  • 2. விரிச்சி கேட்டது கார்கால மாலைப் பொழுதில் என்று பாடல் குறிப்பிடுகின்றது அவ்வாறாயின் தலைவன் பிரிந்தது கார் காலத்தில் எனக் கொள்ள நேரிடும். கார்காலம் தலைவன் திரும்பிவரும் காலமே அல்லாது பிரியும் காலம் அன்று. 
  • 3. விரிச்சி கேட்டல் என்பது ஒரு சிக்கலுக்குத் தீர்வை எதிர்நோக்கி நிகழ்த்தப்படுமே அல்லாது தலைவன் பிரிவின் போது நிகழ்த்தப்பட்டதாகக் கொள்வது பொருந்தாது. 
மேலும் தலைவி அறியாதவாறு தலைவன் பிரிந்தான் என்றும் படுக்கையில் உடன் துயின்றவனைக் காணாமல் தலைவி தேடினாள் என்றும் நச்சர் உரை கூறுவது அகப்பொருள் மரபுக்கு மாறாய் உள்ளது. தலைவன் பிரிந்தகாலம் குறித்து முல்லைப்பாட்டு பேசவேயில்லை.

இவ்வாறு பாடலின் துறைக் குறிப்பினை மாற்றி அமைத்துக் கொண்டதற்கு உரிய காரணமாக அவர் கூறுவதாவது,

“இங்ஙனம் பொருள் கூறாமல் தலைவியது இரக்க மிகுதிகண்டு பெருமுது பெண்டிர் விரிச்சி கேட்டுவந்து தலைவர் வருவராதல் வாய்வது, நின்னெவ்வங் களையென்று பல்காலும் ஆற்றுவிக்கவும், ஆற்றாளாய்த் துயருழந்து(80) புலம்பொடு(81) தேற்றியும் திருத்தியும்(82) மையல் கொண்டு உயிர்த்தும்(83) நடுங்கி நெகிழ்ந்து(84) கிடந்தோள்(88) எனப்பொருள் கூறியக்கால் நெய்தற்குரிய இரங்கற் பொருட்டன்றி முல்லைக்குரிய இருத்தற் பொருட்டாகாமை யுணர்க. அன்றியும் தலைவன் காலங் குறித்தல்லது பிரியான் என்பதூம், அவன் குறித்த காலங் கடந்தால் தலைவிக்கு வருத்தம் மிகும் என்பதும், அது பாலையாம் என்பதும், அவ்வாற்றாமைக்கு இரங்கல் நிகழ்ந்தால் நெய்தலாம் என்பதும் நூற்கருத்தாதல் உணர்க.”

ஆக, முல்லைப்பாட்டுக்குப் பொருள் கொள்வதில் நச்சினார்க்கினியருக்கு உள்ள சிக்கல் முல்லைத் தினைத் தலைவியின் அழுகையும் ஆற்றாமையுமே. தலைவன் பிரிவுக்கு ஆற்றியிருப்பதே முல்லை உரிப்பொருள். இப்பாடலில் தலைவியின் ஆற்றாமை வெளிப்படுவதால் அது நெய்தலுக்குரிய இரங்கல் உரிப்பொருளாகி விடுமே என்ற ஆதங்கமே அவரை இத்துணை இடர்ப்படச் செய்துள்ளது.

காட்டவும் காட்டவும் காணாள், கலுழ்சிறந்து,
பூப்போல் உண்கண் புலம்பு முத்துஉறைப்ப  
      (முல்லை. 22-23)

இன்துயில் வதியுநன் காணாள். துயர்உழந்து,
நெஞ்சு ஆற்றுப்படுத்த நிறைதபு புலம்பொடு,
நீடுநினைந்து, தேற்றியும், ஓடுவளை திருத்தியும்,
மையல் கொண்டும், ஒய்யென உயிர்த்தும்,
ஏஉறு மஞ்ஞையின் நடுங்கி, இழை நெகிழ்ந்து      
   (முல்லை. 80-84)

எனவரும் முல்லைப் பாட்டின் அடிகளைக் கூர்ந்து நோக்குவார்க்குத் தலைவியின் ஆற்றாமை வெளிப்பட்டாலும் அது எல்லை கடவாமல் கண்ணீர் பெருக்கெடுக்கும் அளவிலேயே நிற்கிறது. நெடுநல்வாடைத் தலைவியும் இத்தகையளே. ஆற்றாமை மிக்கு, தலைவி புலம்பத் தொடங்கியிருந்தால் இது நெய்தல் உரிப்பொருளாம் இரங்கலாகியிருக்கும். அந்நிலை முல்லைப்பாட்டுத் தலைவிக்கு இல்லை. எனவே நச்சினார்க்கினியரின் தயக்கம் தேவையற்றது.

சனி, 5 மே, 2012

தமிழர் நெஞ்சில் மக்கள் கவிஞர் நூல் அணிந்துரை

முனைவர் நா.இளங்கோ

இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

இருபத்தோராம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகள் தமிழ் எழுத்தாளர் களுக்கும் பதிப்பாளர்களுக்கும் நம்பிக்கை ஊட்டும் விதத்தில் பயணத்தைத் தொடங்கியுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் தமிழில் வெளிவந்துள்ள நூல்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைத் தொடும். இந்த எண்ணிக்கையில் மறுபதிப்பு நூல்களும் அடங்கும். சென்னை மூர் மார்க்கட் எரிந்த அல்லது எரிக்கப்பட்ட பிறகு பழைய தமிழ் நூல்கள் காணக் கிடைக்காத அரிய பொருள்களாக இருந்த நிலைமாறி அரிய பழைய தமிழ் நூல்கள் புதிதாய் அச்சேறி நம் கைளில் தவழும் இந்தப் புதிய மாற்றம் தமிழர்களுக்கு உவப்பூட்டும் என்பதில் ஐயமில்லை. 

ஒவ்வோராண்டும் மாவட்டங்கள் தோறும் நடக்கும் புத்தகக் கண்காட்சிகளும் கண்காட்சிக்கு வருகைதரும் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையும் கண்காட்சிக்கு வந்து வேடிக்கை பார்த்ததோடு மட்டுமின்றி நூறு, ஆயிரங்களைச் செலவிட்டு நம் தமிழர்கள் நூல்களை வாங்கிச் செல்லும் மாற்றங்களும் இருபத்தோராம் நூற்றாண்டு நமக்குத் தந்த புத்தம் புதிய நம்பிக்கை வித்துகள். 

ஒருபக்கம் இப்படித் தமிழ் அச்சு நூல்கள் பழையனவும் புதியனவுமாகப் படையெடுக்க, மறுபக்கம் மின்னூடக வடிவில் மின் இதழ்கள், மின் படைப்புகள், மின் நூல்கள், மின் நூலகங்கள் எனத் தமிழ் எழுத்துத்தாக்கங்கள் இணையத்தில் இடம்பெயர்ந்து நிலைபெறத் தொடங்கிவிட்டன. இவை போதாதென்று சமூக வலைத்தளங்களும், வலைப்பதிவுகளும் பல்லாயிரக்கணக்கில் தத்தம் பங்குக்குத் தமிழ் எழுத்தாக்கங்களைப் பதிந்து காட்சிப்படுத்தி வைத்துள்ளன. 

ஆக தமிழில் எழுதுவதும் எழுதியதை அச்சேற்றுவதும் வாசகர்களிடம் கொண்டு செல்வதும் அத்துணை பெரிய காரியமாகத் தோன்றவில்லை. இனி நாம் எதிர்பார்ப்பதெல்லாம் ஒன்றுதான். திருவள்ளுவர் சொன்னது போல் கற்க கசடற- கற்பவை கற்க- கற்றபின் அதற்குத் தக நிற்க என்பதுதான். கருத்தூன்றிப் படிப்பதும், தேர்ந்தெடுத்துப் படிப்பதும், படித்தவற்றை பயன்கொள்வதும்தான் இன்றைய தேவை. தமிழர்களிடம் இன்னும் இந்த விழிப்புணர்வு ஏற்பட்டதாகத் தெரியவில்லை. 

II
தமிழின் இத்தகு எழுத்துலகச் சூழலில்தான் தமிழர் நெஞ்சில் மக்கள் கவிஞர் எனும் இந்நூல் வெளிவருகின்றது. இனிய நண்பர் முனைவர் ம.ஏ. கிருட்டினகுமாரின் ஐந்தாவது நூல் இது.

முனைவர் ம.ஏ. கிருட்டினகுமார் சிறந்த கல்வியாளர். தமிழ் இலக்கியம், மொழியியல், ஊடகவியல், கல்வியியல் ஆகிய துறைகளில் முதுகலைப் பட்டமும் சைவ சித்தாந்தம், நாட்டுப்புறவியல் முதலான துறைகளில் பட்டயமும் தமிழ் இலக்கியத்தில் இளமுனைவர் மற்றும் முனைவர் பட்டமும் பெற்றவர். தமிழ், ஆங்கிலம் மட்டுமன்றி தெலுங்கு, இந்தி, சமஸ்கிருதம், பிரஞ்சு முதலான மொழிகளைக் கற்றவர். தமிழ்க் கல்விப் புலத்தில் முனைவர் ம.ஏ. கிருட்டினகுமார் போல் பன்மொழிப் பயிற்சியுடைய இளைஞர்களைக் காண்பது அரிது. கற்றலிலும் கற்பித்தலிலும் தொடர்ந்து முனைப்போடு செயல்பட்டுவரும் இவர் ஒரு சிறந்த மரபுப் பாவலரும் கூட. ஆசிரியர், பேச்சாளர், கவிஞர், ஆய்வாளர் முதலான பன்முக ஆளுமைகளால் சிறந்த ஒருவரின் சமூக அக்கறையோடு கூடிய படைப்பாக்கத் திறனாய்வாக வெளிவரும் இந்நூல் மானுடம் பாடிய மக்கள் கவிஞரின் மாண்புரைக்கும் ஒரு நல்ல படைப்பு.
ஐஐஐ
தமிழர் நெஞ்சில் மக்கள் கவிஞர் எனும் இந்நூல் பட்டுக் கோட்டையார் கவிதைகளை நயமுரைக்கும் பாங்கில் விரித்துரைத்துள்ளது. கவிதைகளின் உள்ளடக்க அடிப்படையில் குடும்பம், சமூகம், வாழ்க்கை நெறி, நடை, உண்மைத் தத்துவம் எனும் ஐந்து தலைப்புகளில் நூல் பகுக்கப்பட்டுள்ளது.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தமிழ்க் கவிஞர் மரபில் மிகவும் வித்தியாசமான ஆளுமையைக் கொண்டவர். 29 ஆண்டுகளே வாழ்ந்த கவிஞர் தமிழிலக்கிய வரலாற்றில் ஓர் அழுத்தமான தடத்தைப் பதித்தவர். உண்மையில் கலையும் இலக்கியங்களும் சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கானதே என்பதனை வெறும் கொள்கையளவில், படித்ததோடு நின்றுவிடாமல் அதனை நடைமுறைப் படுத்துவதிலும் முழு வெற்றி கண்டவர். தாம் ஈடுபாடு கொண்டிருந்த விவசாயச் சங்கம் மற்றும் பொதுவுடைமை இயக்கத்தின் கொள்கைகளைத் தம் படைப்புகளில் முழுவீச்சோடு பதிவுசெய்தவர் அவர். பட்டுக்கோட்டையார் கவிதைகளின் இத்தகு தனித்தன்மையை முனைவர் ம.ஏ. கிருட்டினகுமார் இந்நூலில் மிகத் தெளிவாக விரித்துரைத்துள்ளார். நூலின் ஆற்றொழுக்கான எளிய இனிய மொழிநடை படிப்பவர்களுக்கு வாசிப்பு அனுபவத்தினை இனிமையாக்குகின்றது.

இந்நூலின் தனித்தன்மைகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
1.    பட்டுக்கோட்டையாரின் வாழ்வையும் படைப்பையும் அறிமுகம் செய்வது.
2.    அவரின் கவிதைகளை முழுதாகக் கற்ற நிறைவைத் தருவது.
3.    பாடல்களின் பின்னணியை விளக்குவது.
4.    படைப்பின் நோக்கத்தைத் தெளிவுபடுத்துவது.
5.    பாடல்களைப் பொருள் நோக்கில் வகைப்படுத்திக் காண்பது.
6.    சுவையான பொருள் பொதிந்த பாடல்வரிகளை இனம் காண்பது.

மேற்கண்ட வகையில் தம் நூலை விரித்துரைக்கும் நூலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கவிதைகள் குறித்தான தமது முழுமையான பார்வையையும் மதிப்பீட்டையும் பதிவுசெய்வதில் வெற்றிபெற்றுள்ளார்.

நூலாசிரியர் நூலின் நுவல்பொருளை விரித்துரைக்கும் பாணி சிக்கலற்றது. சிறு சிறு உட்தலைப்புகளில் விவரிக்கும் பொருளை இனங்காட்டி ஓர் எளிய முன்னுரையோடு செய்தியைத் தொடங்கி விவரித்து தம் கருத்துக்கு அணி சேர்க்கும் பொருத்தமான கவிதை வரிகளையும் தக்க மேற்கோள்களையும் உடன்தந்து சிறிய அளவிலான முடிப்புரையோடு அப்பகுதியை முடிக்கும்முறை அவரின் ஆய்வுநடை நலத்தை அடையாளப் படுத்துகின்றது. 

    சான்றாக, பாடல் புனையும் திறன் என்ற சிறுதலைப்பின் பொருளை அவர் விவரிக்கும் பகுதியைப் பார்ப்போம்,

கவிஞர் பாடல் புனைவதற்கான களங்களைத் தேடி ஓடாமல் தமக்கு அமைந்த வாழ்வினையே களமாக்கிக் கொண்டு பாடியவர். ஒவ்வொரு இனத்தாரும் தமக்குரிய பாடல் எனப் போற்றும் வகையில் எளிமையான நடையில் பேச்சு வழக்கில் இலக்கியத் தரத்துடன் பாடல் புனைந்தார். இதனால் கற்கும்போது கற்றாரும் கேட்கும்போது கல்லாதாரும் பாடலின் சுவையினை உணர்ந்து மகிழ்ந்தனர். காதல் பாடலாக இருந்தாலும் அதில் சமத்துவக் கருத்துக்களையும் மண் சார்ந்த மணத்தினையும் கையாளும் சிறப்பு இவருடைய தனித்தன்மையாக விளங்குவதனைக் காணலாம். 

கவிஞரின் பாடல்கள் பாட்டாளிகளின் வாழ்வினையும் இனத்தின் பெருமையினையும் பொதுவுடைமையின் தத்துவங்களையும் தன்மானத்தின் கூறுகளையும் உள்ளடக்கியதாகவே அமைந்தன. உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன் என்னும் புலவர் குலத்தில் தோன்றிய கவிஞருக்குக் கவிஞனுக்கே உரிய மிடுக்கு இருந்ததனை..

தாயால் பிறந்தேன் தமிழால் வளர்ந்தேன்
நாயே நேற்றுன்னை நடுவழியில் சந்தித்தேன்
நீயார் என்னை நில்லென்று சொல்வதற்கு 
(ப.பா. ப. 308)
என்னும் பாடல் வெளிப்படுத்தும். இதன்வழி கவிஞரின் தன்னம்பிக்கை யையும் தன்மானத்தினையும் தெளிவாக அறியலாம். “நாட்டு விடுதலை இயக்கம், சமுதாய விடுதலை இயக்கம், பொருளாதார விடுதலை இயக்கம் என மூவகை இயக்கங்கள் இங்கே பரவலாக மக்கள் மன மண்ணில் வேர்ஊன்றி ஆலமரமாக வளரத் தொடங்கின. பட்டுக் கோட்டையின் பாடல்களில் இம்மூன்று இயக்கங்களின் சிந்தனை வீச்சையும் அழுத்தத்தையும் காணலாம்” (பட்.. பா. ப.17) எனச் சா.பா. கூறவது இங்கு எண்ணத்தக்கது.

மேலே சான்றுகாட்டியுள்ள பகுதியை ஒப்பவே இந்நூல் முழுவதிலும் நூலின் பொருளை விவரித்துச் சென்றுள்ளார் நூலாசிரியர்.   
    தமிழர் நெஞ்சில் மக்கள் கவிஞர் எனும் இந்நூலினைக் காலத்திற்கேற்ற வரவு என்று நாம் கொண்டாடலாம். ஏனெனில் இன்றைய உலகமயமச் சூழலில் முதலாளித்துவத்தின் கோரத் தாண்டவத்தில் சிக்குண்டு சமூகத்தின்; அடித்தட்டு மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களைப் பன்னாட்டு நிறுவனங்களிடம் பறிகொடுத்து வாழ வழியற்று வதங்கிக் கிடக்கும் நிலைமையில், 

    சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா நான்
சொல்லப் போற வார்த்தையை நன்றாய் எண்ணிப் பாரடா
நீ எண்ணிப் பாரடா
ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி - உன்னை
ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி
நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி - உன்
நரம்போடு தான் பின்னி வளரணும் தன்மான உணர்ச்சி
தனியுடைமைக் கொடுமைகள் தீரத் தொண்டு செய்யடா 
நீ தொண்டு செய்யடா
தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா
எல்லாம் பழைய பொய்யடா  

என்று கடந்த நூற்றாண்டின் ஐம்பதுகளில் உரத்துக் கொடுத்த உழைக்கும் மக்களுக்கான உண்மைக் கவி பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம் பாடல்களை இன்றைய இளந் தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது காலத்தின் கட்டாயமன்றோ. பட்டுக்கோட்டையார் வலியுறுத்திய தன்மான உணர்ச்சியும் பொதுவுடைமை வேட்கையும் இருபத்தோராம் நூற்றாண்டில் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போய்விடக்கூடாது என்ற நூலாசிரியரின் ஏக்கம் இந்நூலில் தொட்டஇடம் எல்லாம் கண்ணில் தட்டுப்படுகிறது. மக்கள் கவிஞரின் கவிதையைப் போலவே இந்த நூலும் அனைத்துத் தரப்பு மக்களுக்குமான படைப்பாக எளிமையோடும் இனிமையோடும் எழுத்தாக்கம் பெற்றிருப்பது பாராட்டத்தக்கது.

நூலாசிரியர் ம.ஏ. கிருட்டினகுமார் இந்நூலின் வழியாகத் தம் கடமையைச் செவ்வனே ஆற்றியுள்ளார். மக்களுக்கான இலக்கியம் என்பது குறித்த சரியான புரிதல்களோடும் சமூக உணர்வோடும் எழுதப் பட்டிருக்கும் இந்நூல் தக்க தருணத்தில் வெளிவருகின்றது. தமிழுலகம் இதனை ஏற்றுப் போற்றும் என்பதில் ஐயமில்லை. 

nagailango@gmail.com

செவ்வாய், 1 மே, 2012

எண்ணப் பறவை சிறகடித்து… கலக்கல் காங்கேயன் நூல் வாழ்த்துரை



முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்,
புதுச்சேரி.

என் இனிய மாணவ நண்பர் காங்கேயனின் “எண்ணப் பறவை சிறகடித்து..” எனும் இக்கட்டுரைத் தொகுப்பு அவரின் முதல்நூல். காங்கேயன் நாடறிந்த நல்ல பேச்சாளர். மேடைகளில் இனிமையாகப் பாடக் கூடியவர். அண்மைக் காலங்களில் மக்களிடையே மிகுந்த செல்வாக்கு பெற்றுவரும் மேடைக்கலையாம் பாட்டு மன்றத்தில் புதுச்சேரியின் புகழை நாடெங்கும் பரப்பி வருபவர். அவரின் பாட்டுமன்றம் இயலும் இசையும் கலந்த ஒரு புதுவகைப் பட்டிமன்றமாய்ப் படித்தவர்கள் முதல் பாமரர்வரை அனைவரையும் ஈர்க்கும் ஓர் அற்புத மேடைக்கலையாய்த் தமிழகத்தை வலம்வருவது பாராட்டுதலுக்குரியது.

மேடைப்பேச்சு தந்த உற்சாகத்தில் எழுத்துலகிலும் அடியெடுத்து வைக்கின்றார் காங்கேயன். பேசுகிற பேச்செல்லாம் காற்றோடுப் போய்விடக் கூடாது என்ற எண்ணத்தில் அவர் எடுத்திருக்கும் முதல் முயற்சியே இந்நூல். இந்நூலைத் தொடர்ந்து பல நல்ல நூல்களைத் தமிழுலகிற்கு அவர் தொடர்ந்து அளிப்பார் என்று நான் நம்புகிறேன்.

சிந்திக்கத் தெரிந்த ஒவ்வொரு மனிதனும் பதிவுசெய்யப்பட வேண்டிய பல பிரதிகளை மனதில் சுமந்து கொண்டேதான் வாழ்ந்து வருகிறான். ஆனால் பலருக்கு அதனை அச்சில் கொண்டுவரும் வாய்ப்பும் சூழலும் அமைவதில்லை. இன்றைய கணிப்பொறி அச்சுமுறையின் வருகை எல்லோருக்கும் நூல் எழுதும், அச்சிடும், வெளியிடும் பணிகளை எளிமைப் படுத்தியிருக்கிறது.

கவிதைகளும் உரைநடைப் புனைகதைகளும் மட்டுமே படைப்புகள் இல்லை. அவற்றுக்கும் அப்பால் கட்டுரைகள் என்ற படைப்பு இலக்கியங்கள் உண்டு. ஆனால் தமிழில் கட்டுரை என்ற இலக்கிய வடிவம் பெரிதும் படைப்பிலக்கிய மரியாதையைப் பெறுவதில்லை. தமிழர்களின் நீண்ட நெடிய கவிதை மரபுகளே அதற்குக் காரணமாய் இருக்கலாம்.

தமிழ்மொழியைப் பொறுத்தவரைக் கிடைக்கின்ற பழந்தமிழ் இலக்கண நூலாம் தொல்காப்பியத்திலேயே உரை என்ற இலக்கியவகை பற்றிய குறிப்பு கிடைக்கின்றது. இறையனார் களவியல் உரை தொடங்கித் தமிழிலக்கிய நெடும்பரப்பு தோறும் எழுதப்பட்ட இலக்கிய, இலக்கண, சமய உரைகள் தமிழின் தற்கால உரைநடைக்குக் கொஞ்சமும் குறைவின்றி ஈடு கொடுக்கின்றன.

ஐரோப்பியர் வருகைக்குப் பின்னர் தமிழகத்திற்குக் கிடைத்திட்ட தாள், மை, அச்சு இயந்திரம், ஆங்கிலக் கல்வி போன்ற வசதி வாய்ப்புகள் தமிழின் உரைநடை வளர்ச்சிக்குப் பெரிதும் ஆக்கமும் ஊக்கமும் அளித்தன. வீரமாமுனிவரின் ‘பரமார்த்த குரு கதை’யே தமிழின் முதல் உரைநடை இலக்கியம் என்பாருண்டு. தமிழின் உரைநடைக்கு அணிசேர்த்த தலைமைப் படைப்பை வழங்கிய பெருமை புதுச்சேரிக்கு உண்டு. ஆனந்தரங்கம் பிள்ளை (1709-1761) அவர்களால் எழுதியளிக்கப் பெற்ற நாட்குறிப்பு இலக்கியம், தொடக்காலத் தமிழ் உரைநடைக்குக் கிடைத்த தனிமகுடம்.

கட்டுரை இலக்கியம், உரைநடை இலக்கிய வடிவங்களில் தனித்தன்மை மிக்கது. ஒரு பொருள் பற்றிச் சிந்தித்தவற்றை ஒழுங்குபடுத்தி எழுதுவதே கட்டுரை என்பர். கட்டுரைகளில் படைப்பிலக்கிய அந்தஸ்தைப் பெறுவதும் தனித்தன்மை மிக்க இலக்கியமாக மதிக்கத் தக்கதுமான கட்டுரைகள் தன்னுணர்ச்சிக் கட்டுரைகளே. ஆங்கிலத்தில் இவ்வகைக் கட்டுரைகள் மிகுதி. நுளளயல என்று குறிப்பிடத்தக்கன இவைகளே. தமிழில் இவ்வகைக் கட்டுரைகள் அதிகமில்லை. அண்மைக் காலமாகத் தமிழிலும் தன்னுணர்ச்சிக்; கட்டுரைகள் எழுதப்படுகின்றன.

நண்பர் காங்கேயனின் “எண்ணப் பறவை சிறகடித்து..” எனும் இந்நூல் இருபத்திரண்டு சிறுசிறு கட்டுரைகளைக் கொண்ட ஒரு கலம்பகக் கட்டுரைத் தொகுப்பு. பல தன்னுணர்ச்சிக் கட்டுரைகள், சில இலக்கியக் கட்டுரைகள் எனக் கலவையாக நூல் அமைக்கப்பட்டுள்ளது. நூலாசிரியர் கலக்கல் காங்கேயன் இந்நூலில் பல்வேறு காலங்களில் தான் சந்தித்த, சிந்தித்த, பேசிய, கேட்ட, விவாதித்த, பல செய்திகளை மற்றும் சம்பங்களைத் தொகுத்தளிக்கின்றார். அரசியல், சமூகம், ஆன்மீகம், இலக்கியம், இயற்கை முதலான பல தளங்களில் செய்திகள் பேசப்படுகின்றன.

வேடிக்கை மனிதர்கள், சான்றோர் பண்புகள் முதலான முதல் எட்டுக் கட்டுரைகளும் தன்னுணர்ச்சிக் கட்டுரைகளாக அமைந்துள்ளன. மரங்கள் மகத்தானவை என்ற ஒன்பதாம் கட்டுரையும் ஐந்து பெரிது ஆறு சிறிது என்ற பதினெட்டாம் கட்டுரையும் ஓரறிவு உயிர்களாம் மரங்கள் குறித்தும் ஐந்தறிவு உயிர்களாம் விலங்குகள் குறித்தும் பேசுகின்றன. குறுந்;தொகை காட்டும் குரங்குகள் காதல் என்ற பத்தாம் கட்டுரையும் சிவபெருமான் தொடங்கிய யுவுஆ சென்டர் என்ற பதினொன்றாம் கட்டுரையும் குறுந்தொகை மற்றும் தேவார இலக்கியங்கள் பற்றியன. பத்தொன்பது மற்றும் இருபது இருபத்தொன்றாம் கட்டுரைகளாக இடம்பெற்றுள்ள கவியரசு கண்ணதாசன், காவியக் கவிஞர் வாலி, கவிப்பேரரசு வைரமுத்து என்ற தலைப்புகளிலான மூன்று கட்டுரைகளும் காங்கேயனின் சிறப்புக் களங்களான திரைப்படப் பாடலாசிரியர்கள் பற்றிப் பேசுகின்றன. இந்த மூன்று கட்டுரைகளையும் நூலின் மிக முக்கியமான கட்டுரைகளாகக் குறிப்பிடலாம். மேலும் எனக்குப் பிடித்த எம்.ஜி.ஆர் என்ற கட்டுரையும் தனித்துக் குறிப்பிடத்தக்கது.

நூலின் பல கட்டுரைகள் அவரின் மேடைப்பேச்சு தொனியிலேயே அமைக்கப் பட்டுள்ளன. அதனால்தான் வெளிப்படையாக மேடைகளில் அவர் வெளிப்படுத்தும் சமூகத்தின் மீதான சாடல்களும் நையாண்டிகளும் உள்ளது உள்ளபடி எத்தகைய புனைவுகளுமற்றுக் கட்டுரைகளில் பதிவாகியுள்ளன. பேசுவதென்பது காற்றில் கரைந்து போகக்கூடியது, ஆனால் எழுத்தில் எழுதிப் பதிப்பிப்பதென்பது கல்வெட்டில் வெட்டப்படுவதற்குச் சமமானது. இது காலத்தால் கரைந்து போகாதது. பேசுவதைவிட எழுதுவதில் அதிக எச்சரிக்கை உணர்ச்சி தேவை. காங்கேயன் இதைப்பற்றி எல்லாம் அதிகம் கவலைப்படாமல் தன் கட்டுரைகளைச் சுதந்திரமாக அமைத்திருப்பது அவரின் கரவற்ற உள்ளத்தின் வெளிப்பாடு என்பதனை நாம் உணர்தல் வேண்டும்.

காங்கேயனை அவரின் கல்லூரி நாட்கள் தொடங்கி நான் அறிவேன். பாடத்திற்கு வெளியேதான் கற்றுக்கொள்ளத் தக்கன மிகுதி என்பதனை அவர் நன்கு உணர்ந்தவர். வகுப்பறைகளுக்கு வெளியேதான் அவரின் தேடல் தொடங்கும். இடைவிடாத தேடலும் தேடலுக்கான முயற்சியும்தான் காங்கேயனின் தனித்தன்மை. இலக்கிய அரங்குகளில், இலக்கியங்களில், இலக்கிய ஆளுமைகளிடம் அவர் காட்டும் ஈடுபாடு அலாதியானது. கடந்த இருபது ஆண்டுகளில் புதுச்சேரியின் அனைத்து இலக்கிய அரங்குகளிலும் அவரின் கவனம் தொடர்ந்து இருந்து வந்துள்ளதை நான் கவனித்திருக்கிறேன். இன்றைக்குத் தமிழக, புதுச்சேரி மேடைகளில் தொடந்து தம் பங்களிப்பைச் செய்துவரும் பரபரப்பான சூழலில் கூட, வாய்ப்புள்ள நாட்களில் புதுச்சேரியின் தமிழிலக்கிய அரங்குகளில் அமைதியான ஒரு பார்வையாளராக இருந்து நிகழ்ச்சிகளைக் கேட்க அவர் தவறியதில்லை. இந்தத் தேடல்தான் காங்கேயனின் வெற்றிக்கான சூத்திரம்.

எண்ணப் பறவைச் சிறகடித்து நூலின் மொழிநடை மிக மிக இலகுவானது. கதை சொல்லும் போக்கிலான அவரின் கட்டுரைகள் மெத்தப் படித்தவர்கள் முதல் சாதாரண வாசகர்கள் வரை அனைவரையும் கவரக் கூடியன. திருவாளர் தென்கச்சி சுவாமிநாதன் எழுத்தின் சாயல் பல கட்டுரைகளில் தென்பட்டாலும் தமக்கென ஒரு தனிபாணியினைக் கொண்டது இந்நூல். ஒவ்வொரு கட்டுரையும் கொஞ்சம் அனுபவம், கொஞ்சம் ஆதங்கம், கொஞ்சம் ஆலோசனை என்ற கட்டமைப்பில் அமைக்கப் பட்டுள்ளது. இடையிடையே வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் தக்க தமிழிலக்கிய மேற்கோள்களும் இனிய திரைப்படப் பாடல் வரிகளும் நகைச்சுவைகளும் குட்டிக்கதைகளும் இணைக்கப்பட்டு வாசகர்கள் அலுப்பின்றி வாசிக்கும் வண்ணம் கட்டுரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

நண்பர் காங்கேயனின் “எண்ணப் பறவை சிறகடித்து.. ..” எனும் இக் கட்டுரைத் தொகுப்பு நூல் ஒரு தனிமனிதத் தன்னுணர்ச்சிக் கட்டுரைகள் என்ற அளவில் சுருங்கிவிடாமல் ஆன்மீகம், அரசியல், சமூகம், இலக்கியம், இயற்கை குறித்த பல்வேறு சிந்தனைகளை உடன்பாட்டு நிலையிலும் எதிர்மறை நிலையிலும் தூண்டி விடுவதோடு, வாசகனை அடுத்த தளத்திற்கு அழைத்துச் செல்லும் படைப்பிலக்கியப் பணியினையும் செய்கிறது. நல்ல சிந்தனைகளை விதைத்திருக்கும் நூலாசிரியருக்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துக்கள்.

முனைவர் நா.இளங்கோ
nagailango@gmail.com








புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...