வியாழன், 16 செப்டம்பர், 2010

சிங்கப்பூர் கவிஞர் ந.வீ. விசயபாரதியின் புலமைக்கு மரியாதை நூல் அணிந்துரை

பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
புதுச்சேரி

ந.வீ. விசயபாரதியின் முப்பரிமாண இலக்கியம்

என்றைக்குக் கவிதைகள் தோன்றினவோ அன்றைக்கே கவிதைகள் குறித்த ரசனையும் தோன்றிவிட்டது எனலாம். படைப்பவன் ரசனையும் படிப்பவன் ரசனையும் ஒன்றுபடுவதுதான் கவிதை ரசனை என்பதில்லை, வேறுபடவும் செய்யும். கவிதைகளை ரசிப்பதில் பல சமயங்களில் படைப்பாளியை விஞ்சி விடுகிறான் படிப்பவன், அதாவது சுவைஞன். படைப்பவனை விட, சுவைஞனுக்கு இருக்கும் சுதந்திரம் மிகப்பெரிது. சுவைஞனுக்குள்ளே படிக்கும் குறிப்பிட்ட அந்த ஒரு கவிதை மட்டுமல்ல, அதன் முன்னர் பல நூறு ஆண்டுகளாய்த் தோன்றிய கவிதைகளும் அதன் ரசனைகளும் பொதிந்து கிடக்கின்றன. தமிழ் போன்ற மூவாயிரம் ஆண்டு மூத்த இலக்கிய இலக்கண வளங்கள் மிகுந்த செம்மொழியில் எழுதப்படும் கவிதைகளை வாசிக்கும் ஒரு சுவைஞனுக்கு அம்மொழியின் நீண்ட கவிதைப் பாரம்பரியமே ஒரு பெரும் பலமாகவும் சில சமயங்களில் பலவீனமாகவும் மாறிவிடுவது இயற்கை.

சிங்கைக் கவிஞர் அன்புத் தோழர் ந.வீ. விசயபாரதியின் புலமைக்கு மரியாதை என்ற இந்நூலும் அப்படியொரு சுவைஞனின் ரசனை சார்ந்ததொரு படைப்புதான். இந்நூலில் அமைந்துள்ள எட்டுக் கட்டுரைகளும் கிட்டத்தட்ட ஒரே தொனியில் படைப்பாளியின் படைப்பாற்றலைச் சிலாகித்து உச்சிமோர்ந்து கொள்கின்றன. சங்க இலக்கியங்கள் தொடங்கிக் காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், இக்கால இலக்கியங்கள் எனக் கவிஞர் வைரமுத்துவின் படைப்புகள் வரை நூலின் கட்டுரைகள் தமிழிலக்கிய நெடும்பரப்பின் அடி முதல் நுனிவரை தொட்டுத் தடவிச் செல்வது நூலின் சிறப்பு.

நூலின் எட்டுக் கட்டுரைகளும் பெருவழுதி (நற்றிணை), பிசிராந்தையார் (புறநானூறு), இளங்கோவடிகள் (சிலப்பதிகாரம்), கம்பர் (இராமகாதை), முக்கூடற் பள்ளு ஆசிரியர், பாரதியார், பாரதிதாசன், வைரமுத்து என்னும் எட்டுக் கவிஞர்களின் புலமைக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் அமைக்கப்பட்டிருப்பதை நோக்கி நூலுக்குப் பெயராக, புலமைக்கு மரியாதை என்று ஆசிரியர் பெயரிட்டிருப்பது சாலப் பொருத்தமாகிறது.

ஓர் இலக்கியப்பாடல், அதன் பின்னணி, பாடலின் கருத்து, பாடல் சொற்பொருள் நுட்பம், பின்னர் அந்தக் கவிதையின் நயம் என்று ஒவ்வொரு கட்டுரையும் இலக்கியக் கட்டுரைகளாக விரிந்து செல்லும் இந்நூலின் ஊடாக ஆசிரியர், ஒரு கதைசொல்லி போல் இலக்கியக் காட்சிகளைக் கதைகளாகவும் விவரித்துச் சொல்லும் பாங்கு இந்நூலின் தனியழகு என்றே குறிப்பிட வேண்டும். சான்றாக நற்றிணை குறித்த முதல் கட்டுரையில் இடம்பெறும் பின்வரும் பகுதியைக் குறிப்பிடலாம்.

மறுநாள் விடிகிறது,
முதல் நாள் தலைவனைச் சந்தித்த ஆனந்த நினைவுகளில் மூழ்கியபடி தலைவி வீட்டில் இருக்கும்போது அவளது அன்னை யதார்த்தமாக அவளைப் பார்க்கிறாள்;.
ஏதோ அவளிடம் மாற்றம் தெரிவதாக உணர்கிறாள்;, உற்றுற்றுப் பார்த்தபின் அவளது கூந்தலில் வண்டுகள் மொய்ப்பதைப் பார்த்து விடுகிறாள். மிக நெருங்கிப்போய்க் கவனித்தபோது அவளிடமிருந்து மலரின் நறுமணம் வீசுவதையும் உணர்கிறாள்.
'இப்படிப்பட்ட மணம் இதற்குமுன் உன்னிடம் இருந்ததில்லையே” என்று தலைவியிடம் சந்தேகத்துடன் தாய் கேட்க, தலைவி சில கணம் தடுமாறிப் போகிறாள்;, குற்றமுள்ள நெஞ்சின் குறுகுறுப்புடன் தாயின் முகம் பார்க்கத் தைரியம் இல்லாமல் ‘தோள்கொடுப்பாள் தோழி’ என்ற நம்பிக்கையுடன் தோழியைப் பார்க்கிறாள். (நற்றிணையில் மொழிநயம்)
இப்படி ஒவ்வொரு கட்டுரையும் ஒரு கதையைச் சுவைபட விரித்துச் சொல்கிறது.

கட்டுரைகளின் நடுவே கதைகள் எனப் புதியநடைபோடும் விசயபாரதியின் படைப்புக்கு மேலும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. அது அவரின் கவிதை மயப்பட்ட மொழிநடை. ஆசிரியர் இயல்பாகவே ஒரு கவிஞர் என்பதாலும் சொல்லப்படும் உள்ளடக்கத்தின் சார்பாலும் அவரின் உரைநடை அப்படியே கவிதையாக நெகிழ்ந்து குழைந்து வெளிப்படுகின்றது.

மணம் வீசும் பூக்களின் சாறுபிழிந்து
பக்குவப்படுத்தப்பட்ட வாசனை திரவியங்கள்,
சந்தனச் சிற்பத்துக்கு சதை பொதித்து
உயிரூட்டி உலவ விட்டதைப்போல
பேரழகுப் பெண்கள்
வல்லமை மிக்க சொல்லாற்றல் கொண்ட அறிஞர்கள்,
இசையும் இலக்கியமும்
இசைந்து இசைக்கக்கூடிய பாடகர்கள்,
மலரினும் மென்மையான மார்புடைய அழகிகள்

மேலே சான்று காட்டப்பட்ட பகுதி அமளியில் அனிச்சமலர் என்ற இரண்டாம் கட்டுரையில் இடம்பெற்றுள்ள உரைநடைப் பகுதி. உரைநடையை உடைத்துப் போட்டது நான். படித்துப்பாருங்கள் உரைநடையே கவிதையாய், கவிதையே உரைநடையாய் நம்மை மயக்கும். விசயபாரதியின் சொல்லாற்றல் அப்படிப்பட்டது.

இலக்கியத்தின் மூன்று பரிமாணங்களாகிய கவிதை, கதை, கட்டுரை என்ற மூன்றையும் தன்னகத்து அடக்கிய புலமைக்கு மரியாதை எனும் இத்தொகுப்பு ஒரு முப்பரிமாண இலக்கியம் என்பதில் வியப்புக்கு இடமேது.

நூலாசிரியரின் மொழியாளுமை வியப்பளிக்க வைக்கிறது. மகாகவி பாரதி சொன்னது போல் ‘சொல் புதிது சுவை புதிது’ என அனைத்திலும் புதுமைநலம் விளைந்ததொரு மொழியாளுமை கொண்டு தம் படைப்பால் படைப்பின் உத்தியால் பண்டைய இலக்கியங்களுக்குப் புதுமெருகு ஏற்றியுள்ளார் கவிஞர் விசயபாரதி.

சான்றுக்கு ஒன்றிரண்டு.

ஒன்று:
உச்சக் காட்சியில் கண்ணகியின் கோபத்தைக் காடுகொள்ளாத சாதுவின் மிரட்சியாய்க் காட்டியது இன்னொரு புரட்சி (அமளியில் அனிச்சமலர்)
கண்ணகி ஒரு சாது! அமைதியே வடிவானவள், சிலம்பின் வழக்குரை காதையில் அவள் கொள்ளும் சத்திய ஆவேசம், அதனால் மதுரையம்பதிக்கும் மன்னனுக்கும் மக்களுக்கும் நேர்ந்த கதி என்ற காப்பியக் கதையோட்டங்கள் அனைத்தையும் உள்வாங்கும் போக்கில், ‘சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்ற பழமொழியை ஆசிரியர் தம் மொழிநடையின் இடையில் பிசைந்து தந்துள்ள செய்நேர்த்தியைக் கவனிக்க வேண்டும்.

இரண்டு:
தமிழ் மொழியின் சிறப்பே அம்மொழி காலத்திற்கு ஏற்பத் தன் கட்டுப்பாடுகளைத் தளர்த்திக் கொண்டும், காலச் சூரியனின் கதகதப்பில் தன்னை உலர்த்திக் கொண்டும் இயைந்து கொடுத்து வளர்ந்த எளிமைதான். (இலக்கியம் இனிக்கிறது)

‘காலச் சூரியனின் கதகதப்பில் தன்னை உலர்த்திக் கொண்டும்’ என்ற சொல்லாட்சியில் வெளிப்படும் படிமத் தன்மை நூலாசிரியரின் கவித்துவ வெளிப்பாடு என்பதில் ஐயமில்லை. செத்தொழிந்த சில செம்மொழிகளைப் போலில்லாமல் தமிழ் இன்றும் சீரிளமைத் திறத்தோடு இருப்பதற்குக் காரணம் என்ன? என்ற உலக வியப்புக்கு ஓர் உண்மைக் காரணத்தை உரத்துச் சொல்கிறார். தமிழ், காலச் சூரியனின் கதகதப்பில் தன்னை உலர்த்திக் கொண்டது என்று. உரைநடையிலும் படிமங்களை உலவவிட்ட ஆசிரியரின் நுட்பம் பாராட்டத்தக்கது.

தமிழ் இலக்கியங்களின் மீது அதிலும் குறிப்பாக நம்முடைய பழந்தமிழ் இலக்கியங்களின் மீது நூலாசிரியருக்கு இருக்கும் நாட்டம் அளப்பரிது. ‘தமிழ் வாழ்க!’ என்று மேடைகளில் முழங்கிவிட்டுச் செயலற்ற வாய்ப்பேச்சு வீரர்களாகத் தமிழர்கள் முடங்கிப் போய்விடக் கூடாது.

“தமிழிலக்கியத்தின் மீதான நம் தேடல் தீவிரமாகும் போதுதான் தமிழின் தேக்கநிலை மாறி ஊக்கநிலை உருவாகும் அந்த நிலை உருவாக நம் அறிவுப்பசி விரிவாகத் தமிழிலக்கிய வாசிப்பு ஒன்றே சரியான தீர்வாகும்” (கண்ணின் கடைப்பார்வை)
என்று தமிழ்வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமான அறிவுரைகளை வழங்குவதோடு தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோளும் வைக்கின்றார் நூலாசிரியர்.

‘தமிழ் வாழ்க’ என்ற மேடை முழக்க வரிகள் இன்றைய தேவையில்லை. உண்மையில் தமிழை வாழ வைக்க எண்ணுபவர்கள் செய்ய வேண்டிய அவசரத்தேவை ஒன்று இப்போது இருக்கிறது. புத்தகக் கடைகளின் அலமாரிகளில் அழுக்குப்படாமல் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிற பழந்தமிழ் அறிஞர்களின் நூல்களைக் காசுகொடுத்து வாங்காவிட்டால்கூடப் பரவாயில்லை; அதே நிலையில் அரசாங்க நூலகங்களின் அலமாரிகளில் ஆய்வு மாணவர்களால் மட்டுமே அதுவும் தேர்வுக்கான தேவையின்போது மட்டுமே எடுத்துப் படிக்கப்படுகிற நிலைமை மாற்றப்பட வேண்டும்; அதற்குத் தமிழர்கள் பழந்தமிழ் நூல்களை நூலகங்களிலிருந்து இரவல் வாங்கியாவது படிக்கவேண்டும் என்பது நம் பணிவான வேண்டுகோள். (கண்ணின் கடைப்பார்வை)
சிங்கைக் கவிஞர் விசயபாரதியின் இவ்வேண்டுகோள். தாய்த்தமிழகத்தின் சூழலுக்கும் பொருந்திய வேண்டுகோளே என்பதை நாம் மறுக்க முடியாது.

மொத்தத்தில் புலமைக்கு மரியாதை எனும் இக்கட்டுரைத் தொகுப்பு தமிழுக்குப் புது வரவு என்பதோடு புதுமையான வரவு. நூலாசிரியர் விசயபாரதியின் நோக்கம் தெளிவாய் உள்ளது. இது படைப்பிலக்கியமில்லை. இலக்கிய ஆராய்ச்சியுமில்லை. ரசனை, இலக்கிய ரசனை, ஒரு சுவைஞன் சுவைத்த தமிழ் அமுதின் சில துளிகள் இவை. உங்கள் முன் படைக்கப்பட்டதன் நோக்கம்,
“தமிழிலக்கியத்தின் மீதான நம் தேடல் தீவிரமாகும்போதுதான் தமிழின் தேக்கநிலை மாறி ஊக்கநிலை உருவாகும் அந்த நிலை உருவாக நம் அறிவுப்பசி விரிவாக தமிழிலக்கிய வாசிப்பு ஒன்றே சரியான தீர்வாகும்.”
என்று ஆசிரியர் சொன்னதுபோல் தமிழின் தேக்க நிலை மாற வேண்டும் ஊக்க நிலை உருவாக வேண்டும் என்பதுதான். இந்நூல் நிச்சயம் அதற்குத் துணைபுரியும். நூலாசிரியர் ந.வீ.விசயபாரதிக்குப் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...