இஸ்லாமிய இலக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இஸ்லாமிய இலக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 20 மே, 2019

அருட்கவி அதிரை தாஹாவின் இலக்கிய இணையர் காவியம் அணிந்துரை

முனைவர் நா.இளங்கோ
தமிழ்த்துறைத் தலைவர்
தாகூர் அரசு கலை அறிவியல் கல்லூரி
புதுச்சேரி- 605008

அருட்கவி அதிரை தாஹா
அருட்கவி அதிரை தாஹா, இருபதாம் நூற்றாண்டின் சிறந்த மரபுக் கவிஞர்களில் ஒருவர்; தீந்தமிழையும் தீன் தமிழையும் தம்மிரு கண்களாகப் போற்றி வருபவர்; ஆன்மீக நாவலர்களும் அருந்தமிழ்ப் பாவலர்களும் தோன்றிய புகழ்மிகு அதிராம்பட்டினத்தில் பிறந்த சிறப்பினைக் குறிக்கும் வகையில் அதிரை தாஹா என்றழைக்கப்படுகிறார் நம் அருட்கவி அல்ஹாஜ் முகம்மது தாஹா மதனீ அவர்கள். வரலாற்றுத் துறையில் பட்டம் பெற்று ஆசிரியப்பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட அருட்கவி அவர்கள் பல்லாண்டுகள் பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று இறைப்பணியும் இலக்கியப் பணியும் ஆற்றிவருபவர். தமது இலக்கியப் பயணத்தில் மரபுக் கவிதைகள், புதுக் கவிதைகள், ஹைக்கூ முதலான பல கவிதை வடிவங்களிலும் உரைநடையிலும் ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளதோடு பல நூல்களைப் பதிப்பித்தவர் என்ற பெருமையும் அருட்கவி யாருக்கு உண்டு. பிள்ளைத் தமிழ், ஆற்றுப்படை, தூது, உலா, சதகம், மாலை, வாழ்த்து, கலம்பகம் முதலான சிற்றிலக்கியங்கள் மட்டுமல்லாது புதுக் கவிதையிலும் காப்பியங்கள் இயற்றிப் படைத்த சிறப்பு இவருக்குண்டு. மேடைத் தமிழிலும் தமிழகம் புதுச்சேரி மட்டுமல்லாமல் மலேசியா, சிங்கப்பூர் முதலான மேல்நாடுகளிலும் வெற்றிக்கொடி நாட்டிவருபவர் தாஹா அவர்கள். ஆன்மீகப் பொழிவுகளிலும் இலக்கியப் பேருரைகளிலும் கவியரங்க மேடைகளிலும் தாஹா அவர்கள் தனிச் சிறப்பான முத்திரையைப் பதிப்பதில் வல்லவர். இசுலாமியப் பெண்களின் முன்னேற்றத்தில் அதிக ஈடுபாடு கொண்டு அதிராம் பட்டினத்தில் பல்லாண்டுகளாகத் தொடர் சொற்பொழிவு நிகழ்த்திச் சாதனை படைத்து வருகிறார் அருட்கவி.
1940 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் நான்காம் தேதியில் பிறந்த அதிரா தாஹா அவர்கள் எழுபத்தைந்து வயதினைக் கடந்தும் துடிப்புடன் மடைதிறந்த வெள்ளமெனக் கவிதை மழையைப் பொழிந்து வருவது இன்றைய இளந் தலைமுறை யினருக்கு மிகுந்த ஊக்கமளிப்பதாக உள்ளது. இறைவன் புகழ்பாடும் நூல்கள் மட்டுமல்லாது நபிகளாரின் புகழைப் போற்றும் வகையிலும் கலீபாக்கள், இறைநேசச் செல்வர்களின் சிறப்பினை விதந்துரைக்கும் வகையிலும் தொடர்ந்து இலக்கியங்கள் படைத்துவரும் அருட்கவியாரின் புதியதோர் மரபிலக்கியப் படைப்பே இலக்கிய இணையர் காவியம் என்ற இக்காப்பியம். ஆயிரத்திற்கும் மேலான (1123 பாடல்கள்) அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களால் ஆன இக்காப்பியம் புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சேர்ந்த பேராசிரியப் பெருமக்கள் மு.சாயபு மரைக்காயர், சா.நசீமாபானு இணையரின் சீர்மிகு வாழ்க்கையைப் பேசுகின்றது. அருட்கவி அவர்கள் இதற்கு முன்பே 2011 ஆம் ஆண்டில் பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் புகழ் போற்றும் சாயபு மரைக்காயர் சதகம் என்ற நூலினைப் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இலக்கிய இணையரில் ஒருவரை மட்டும் பாடிய சதகத்தை வெல்லும் வகையில் இணையர் இருவரின் புகழ்பாடும் காப்பியம் படைத்துப் பேராசிரியர்களைப் பெருமைப் படுத்துகின்றார் அருட்கவி அவர்கள்.
இலக்கிய இணையர்:
இலக்கிய இணையர் என்று தமிழ்கூறு நல்லுலகத்தால் சிறப்புற அழைக்கப் படுபவர்கள் பேராசிரியர்கள் மு.சாயபுமரைக்காயர், சா.நசீமாபானு இணையரே.  இருவருமே காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர்களாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். இசுலாம் எங்கள் வழி, இன்பத் தமிழ் எங்கள் மொழி என்ற உயர்ந்த குறிக்கோளுடன் கடந்த நாற்பதாண்டு களுக்கும் மேலாக புதுவை, தமிழகம் மட்டுமன்றி, இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் முதலான கீழ்த்திசை நாடுகளிலும் வளைகுடா நாடுகளிலும் இலக்கியப் பயணம் மேற்கொண்டு இன்தமிழுக்கும் இசுலாத்துக்கும் தொடர்ந்து தொண்டாற்றி வருபவர்கள்.
இலக்கிய இணையர்கள் இருவருமே நாடறிந்த நல்ல சொற்பொழி வாளர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்த பன்னூலாசிரியர்கள், ஐம்பதிற்கும் மேற்பட்ட விருதுகளுக்குச் சொந்தக்காரர்கள். ஆயிரக் கணக்கான நல்ல ஆசிரியர்களையும் பேராசிரியப் பெருமக்களையும் உருவாக்கிய பெரும் பேராசிரியர்கள். மேலும் மிகச்சிறந்த மனிதநேய மிக்க மத நல்லிணக்க மாமணிகள்; அப்பழுக்கற்ற அன்பாளர்கள்; உற்றுழி உதவும் உவப்பாளர்கள் என்று இலக்கிய இணையர்களின் பெருமைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.  
பேராசிரியர் மு. சாயபு மரைக்காயர் இசுலாமியத் தமிழ் இலக்கியக் கழகம் என்ற அமைப்பினை உருவாக்கிதோடு அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் என்ற பொறுப்பினை ஏற்று இதுவரை பதினாறு பன்னாட்டு மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளார் என்பதும் பேராசிரியர் சா.நசீமாபானு இக்கழகத்தின் மகளிர் பிரிவுத் தலைவராகப் பொறுப்பு வகித்து அம்மாநாட்டுப் பணிகளை ஒருங்கிணைத்து நடத்தியுள்ளார் என்பதும் சிறப்பாகப் பதிவு செய்யப்பட வேண்டிய செய்தி.
இலக்கிய இணையரின் இசுலாம் மார்க்கப் பணி, இலக்கியப் பணி, ஆசிரியப் பணி, சமுதாயப் பணி இவற்றில் தம் நெஞ்சைப் பறிகொடுத்த அருட்கவி அதிரை தாஹா அவர்கள் இறைநேசச் செல்வர்களின் அருஞ்செயல்களைப் புகழ்ந்து பாடி இலக்கியம் படைக்கும் தம் இலக்கியப் பணியின் ஒருபகுதியாக இலக்கிய இணையரின் வாழ்க்கையை விரித்துரைக்கும் காவியம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று விழைந்ததன் விளைவே இந்த இலக்கிய இணையர் காவியம்.
இசுலாமியக் காவியங்கள்:
       கவி – கவிதை – கவிஞன் - காவியம் முதலான சொற்களை வடசொற்கள் என்றும் அதற்கு இணையான தமிழ்ச் சொற்கள் பா – பாட்டு – பாவலன் - பாவியம் என்றும் தனித்தமிழ் அறிஞர்கள் குறிப்பிடுவர். இக்கருத்துக்கு மாற்றாக கவி – கவிதை – கவிஞன் – காப்பியம் முதலான சொற்கள் தமிழ்ச் சொற்களே என்று வாதிடுவோரும் உண்டு. தமிழில் காப்பிய மரபு வீரயுகத்திற்குப் பிறகே தோற்றம் பெறுகிறது. சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியன தமிழின் பழைய காப்பியங்கள். காவியம், காப்பியம் என்ற இரண்டு சொற்களையும் இன்று நாம் ஒரே பொருளில் கையாண்டாலும் தொடக்கத்தில் இரண்டும் இருவேறு மரபின் இலக்கிய வகைமைகளாக இருந்திருக்க வேண்டும். காவிய மரபு வடமொழி மரபு. காப்பிய மரபு தமிழ்வழி மரபு. சிலம்பும் மேகலையும் காப்பியங்களே காவியங்களல்ல. சீவக சிந்தாமணி, பெருங்கதை, மகாபாரதம், இராமாயணம் முதலானவை காவியங்களே காப்பியங்களல்ல என்பது என் துணிபு. பின்னாளில் இரண்டு மரபுகளும் பிரித்து அடையாளம் காணமுடியாத அளவிற்குக் கலந்து விட்டன. தண்டியலங்காரம் கூறும் இலக்கணம் காவிய மரபிற்கானது.
      தமிழ்க் காவியங்களை அதன் பாட்டுடைத் தலைவர்களைக் கொண்டு சமயக் காவியங்களாக இனங்காணும் போக்கு மிகுந்துள்ளது. அந்த வகையில் சமணக் காவியங்கள், பௌத்தக் காவியங்கள், சைவ, வைணவக் காவியங்கள், இசுலாம், கிருத்துவக் காவியங்கள் எனத் தமிழில் காப்பியங்கள் என்றழைக்கப் படும் காவியங்கள் மிகுதியும் உள்ளன.
இசுலாமியக் காவியம் என்றவுடன் நம்மில் பலருக்கு உடனே நினைவுக்கு வரும் இலக்கியம் சீறாப்புராணம் மட்டுமே. உண்மையில் தமிழிலக்கிய நெடும்பரப்பில் மிகுதியான காவியங்களை இசுலாமியர்களே படைத்துள்ளனர் என்பது ஒரு வியப்பூட்டும் செய்தி. இசுலாமியக் காவியங்கள் என்பதற்கான வரையறை மிக எளிதானது, இசுலாமிய சமயப் பின்னணியில் பாடப்படுவதும் இசுலாமியப் பெரியோர்களின் வாழ்க்கையைப் பாடுவதும் இசுலாமியக் காவியங்களே. பதினேழு முதல் இருபதாம் நூற்றாண்டு வரையிலான நான்கு நூற்றாண்டுகளில் தமிழில் தோன்றிய இசுலாமியக் காவியங்களின் எண்ணிக்கை இருபத்தேழாகும். அதில் பதினெட்டு பெருங் காப்பியங்கள், ஒன்பது குறுங் காப்பியங்கள். அண்மைக் காலத்தில் அதாவது கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் வெளிவந்துள்ள காவியங்களை இந்த எண்ணிக்கையில் சேர்க்கவில்லை. ஆக தமிழில் அதிகமான காவியங்களை படைத்தளித்த பெருமை இசுலாம் சமயத்திற்கே உரியது என்பதனை நாம் நினைவிற்கொள்ள வேண்டும்.
அருட்கவி அதிரை தாஹா எழுதியுள்ள இலக்கிய இணையர் காவியம் என்ற இந்நூல் தமிழ் இசுலாமியக் காவியங்களின் வரிசையில் தனியிடம் பெறத்தக்கது. அருட்கவி அவர்கள் இதற்கு முன்பே இரண்டு காவியங்களையும் ஒரு குறுங் காவியத்தையும் படைத்துள்ளார் (1.நபிபுகழ் காவியம், 2.குத்புல்ஹிந்த் அஜ்மீர் நாயகக் காப்பியம், 3.மர்யம் ஈஸா குறுங்காவியம்) என்றாலும் இந்நூல் அருட்கவியாரின் முந்தைய காவியங்களை விட அளவில் பெரியது.
அருட்கவி அதிரையாரின் இலக்கிய இணையர் காவியம் ஒரு புதுமைக் காவியம். பாட்டுடைத் தலைவர்களான பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் பேராசிரியர் சா.நசீமாபானு இணையரின் வாழ்க்கை வரலாற்றை ஆற்றொழுக்காக நிரல்பட வரிசைப்படுத்தி காப்பியம் அமைக்கப்படாமல் காப்பியத் தலைமக்களின் இலக்கியப் பணி, எழுத்துப் பணி, பெற்ற விருதுகள், இலக்கியப் பயணங்கள், விருந்தோம்பல் சிறப்பு, இணையரின் இல்ல நூலகத்தின் சிறப்பு, நூல்களின் சிறப்பு இவற்றை விரித்துரைக்கும் போக்கில் இடையிடையே அவர்கள் வாழ்க்கைப் பயணத்தின் சுவையான தருணங்களை இட்டுநிரப்பியதோர் புதுமைப் படைப்பாக இக்காப்பியம் அமைக்கப்பட்டுள்ளது. கதை சொல்லும் விதப்பு முறையும் கவிக்கூற்றுமாகக் காவியம் அமைந்துள்ளமை நூலாசிரியரின் புதுமை படைக்கும் நாட்டத்தையே காட்டுகின்றது.
காவியத்தைத் தொடங்கும்போது நூலாசிரியர் மரபினைப் போற்றும் விதத்தில் வணக்கம், வாழ்த்து, அவையடக்கம், நாட்டுப்படலம், நகரப்படலம் என்று தொடங்கி, தலைமக்கள் அறிமுகம் வரையிலும் காவிய மரபோடு பயணம் செய்தாலும் அடுத்தடுத்த இயல்களில் காவிய மரபின் இறுகிய பிடிக்குள் சிக்கிக் கொள்ளாமல் விட்டு விடுதலையாகி புதிய பாதையில் பயணிக்கின்றார்.
இலக்கிய இணையர் காவியம் என்ற இக்காவியத்தில் தனிச்சிறப்பான பகுதிகள் பல உள்ளன. குறிப்பாக இணையரின் வீட்டுத் தோட்டத்தில் வளர்ந்துள்ள மாமரம் தனது பெருமைகளை விவரித்துக் கவிஞரோடு உரையாடுவதாக உள்ள பகுதியும் வீட்டு நூலகத்தின் சிறப்பினை விவரிக்கும் போது தோட்டத்துத் தேன்கூட்டைச் சுட்டிக்காட்டிப் புத்தகங்களுக்கும் தேனுக்குமான சிறப்பியல்புகளைப் பொருத்தமுற அடுக்கிச் சொல்லும் பகுதியும் இக்காவியத்தின் தனிச்சிறப்பு வாய்ந்த பகுதிகள் என்பது வெளிப்படை.
காவியத்தின் தலைமை மாந்தர்களை அறிமுகம் செய்யும் அருட்கவியாரின் பாடல்களில் இரண்டு பாடல்களை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
முதல்பாடல் – சாயபு மரைக்காயரை அறிமுகம் செய்யும் பாடல், இரண்டாம் பாடல் நசீமாபானு இசுலாம் மார்க்கத்தைத் தழுவும் சூழலை அறிமுகம் செய்யும் பாடல்.
பாட்டுடைத் தலைவர் அறிமுகம்
திருப்பேரர் இப்பிள் ளைக்கே
தேர்ந்தனர் பாட்டன் பெயரை!
கருவிலே திருவு மானார்
சாயபு மரைக்கார் அம்மா
உருவெலாம் சிரிக்கும் பாராய்
உற்சாகம் கரையில் புரளும்
தெருவெலாம் போற்றும் பிள்ளை
தேன்பேச்சைக் கேட்டுத் தானே!
நசீமாபானு இசுலாத்தைத் தழுவுதல்
உண்மையாம் வணக்கத் திற்கோ
ஒருவனே! நபிகள் கோமான்
திண்மையாய்த் தூதர் என்றே
திட்பமாய் ஈமான் கொண்டார்!
கண்ணெனத் தொழுகை பற்றி
கடமையைச் செய்ய வந்தார்!
எண்ணியே பணத்தில் ஜக்காத்
இருப்பதில் கொடுப்பேன் என்றார்.

இத்தகு மரபான சொல்லழகும் கவியழகும் பொருந்தி நிற்கும் கவிதைகளைக் காவியம் நெடுகிலும் நாம் பார்க்க முடியும். சில பாடல்கள் யாப்பின் கட்டுக்குள் அடங்கவில்லை என்பது ஒரு சிறுகுறையே என்றாலும் சிறப்பான உவமைகள், இயற்கை வருணனை, சொல்லழகு, பொருளழகு முதலான காவிய அழகுகள் அக்குறையை நிறைவுசெய்து விடுகின்றன. கதைசொல்லும் விதப்பு முறையில் காவியத்தின் பெரும்பகுதி அமைந்திருந்தாலும் கதையை விஞ்சித் தலைமக்களின் சாதனைகளை விவரிப்பதில் கவிஞர் கூடுதல் கவனம் செலுத்துகின்றார் என்பது மேம்பட்டு நிற்கின்றது. 
அருட்கவியாரின் காவியம் தலைமக்களின் மாண்புகளை விரித்துரைப் பதோடு நூலின் போக்கில் அரிய வாழ்வியல் உண்மைகளையும் சமய, சமூக விழுமியங்களையும் கவிஞரின் அனுபவ மொழிகளின் வழியாக அழகுற எடுத்துக் காட்டுகின்றது. நூலின் பெரும்பயன் என்று இதனைச் சுட்டிக்காட்ட விரும்பு கின்றேன்.
பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் நூலகத்தின் பெருமை பேசும் பகுதிகள் இரண்டிடங்களில் வருகின்றன. இந்த இரண்டு பகுதிகளிலும் நூற்களின் பெருமை பலபடப் பேசப்படுகின்றது. இதோ ஒரு பாடல்,
மவுனமாய் இருக்கும் போதில்
மொழிபேசும் நூலெனும் தாய்
அவுடதம் மனத்தின் பிணியை
அவித்திடும் மருத்து வர்தான்
பவம்போக்கும் படிக்கப் படிக்க
பக்குவக் கருவுண் டாகும்
கவலைகள் நீக்கும் நன்கு
கலந்துரை நண்பர் நூலே!
இந்தப் பாடல் நல்ல நூற்கள் மனிதர்களுக்குத் தாயாகவும் மருத்துவராகவும் ஆசானாகவும், நண்பராகவும் இருந்து துணைசெய்கின்றன, வழிகாட்டுகின்றன  என்றெல்லாம் அடுக்கிச் சொல்கிறது. மேலும், பாடல் நூலின் சிறப்பை மட்டும் பேசாமல் தாய்மையின் சிறப்பையும் நட்பின் சிறப்பையும் பேசுகின்றது. பாடலின் ஒவ்வொரு அடியும் மறித்து நோக்க நோக்கப் புதுப்புது உண்மைகளை நமக்கு வெளிப்படுத்துகின்றது. மவுனமாய் இருக்கும் போதில் மொழிபேசும் தாய், மனத்தின் பிணியை அவித்திடும் மருத்துவர், படிக்கப் படிக்கப் பக்குவக் கரு, கவலைகள் நீக்கும் நண்பர் கலந்துரை முதலான சொற்றொடர்கள் பல வாழ்வியல் உண்மைகளைப் பேசுகின்றன. இவை விரிப்பின் பெருகுமென விரிவஞ்சி விடுக்கிறேன் வாசிக்கும்போது நீங்கள் பாடலை ஆழ்ந்து கற்றுப் பயன் பெறுவீர்கள் என்ற நம்பிக்கையுடன்.
      அருட்கவி அதிரை தாஹா அவர்கள் ஓர் ஆசுகவி, ஆயிரக் கணக்கான தமிழ் மரபுக் கவிதைகளை அவர் படைத்துள்ளார். தமிழின் பல சிற்றிலக்கிய வடிவங்களைத் தம் படைப்பில் அவர் கையாண்டுள்ளார். இசுலாம் மார்க்கத்திற்கும் இன்தமிழுக்கும் தொடர்ச்சியாக அவர் ஆற்றிவரும் பணிகள் பாராட்டத்தக்கன.
      பேராசிரியர் மு.சாயபுமரைக்காயர், பேராசிரியர் சா.நசீமாபானு இணையரின் புகழ்போற்றும் இக்காவியம் ஒரு வழிகாட்டி இலக்கியம். வருங்கால இளந்தலை முறையினர் ஏற்றுப் போற்றிக் கொண்டாட வேண்டிய இணையரின் மேன்மை மிகுந்த வாழ்க்கையைப் பதிவுசெய்யும் ஓர் அரிய நிகழ்கால வரலாற்று ஆவணம். இந்நூலைப் படைத்தளித்தமைக்காகத் தமிழுலகம் என்றென்றும் அருட்கவி அதிரை தாஹாவைப் போற்றிப் புகழும் பாராட்டும் என்ற நம்பிக்கையுடன்.


முனைவர் நா.இளங்கோ

nagailango@gmail.com 

திங்கள், 5 நவம்பர், 2007

காரை இறையடியானின் திருவருட்பாவை-ஓர் அறிமுகம்

காரை இறையடியானின் திருவருட்பாவை-ஓர் அறிமுகம்

முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி - 8.

காரைக்காலைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர் காரை இறையடியானின் இயற்பெயர் மு.முகம்மது அலி என்பதாகும். ஹாஜி, முகம்மது அப்துல்காதர், பாத்திமா அம்மாள் ஆகியோரின் இரண்டாவது மகனாக 17-11-1935 இல் பிறந்தவர்;பன்னிரு நூல்களை இயற்றிய கவிஞரும், மார்க்க அறிஞருமாகிய அமுதகவி அ.சாயபு மரைக்காயரின் பெயரனாகத் தோன்றியவர்; தமிழ் பிரவே, வித்துவான் முதலிய தமிழ்க் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்; காரைக்கால் மு.வி.ச. உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றியவர்; பூஞ்சோலை என்னும் தனித்தமிழ் இலக்கியத் திங்களிதழை ஒன்பதாண்டுகள் வெற்றிகரமாக நடத்தியவர்; சமரசம் இதழின் துணையாசிரியராக மூன்று ஆண்டுகள் பணியாற்றியவர்; மொழியியல் அறிஞர் தேவநேயப் பாவாணரோடு தொடர்பு கொண்டு, அவர்தம் உலகத் தமிழ்க் கழகத்தில் மாவட்டத் தலைவராகப் பொறுப்பேற்றுத் தொண்டாற்றியவர். தனித்தமிழ்க் கொள்கையைத் தம் உயிர் மூச்சாகக் கொண்டு பணியாற்றிய சிறப்பினால் தனித்தமிழ்த் தென்றல் என்று சிறப்பிக்கப் பெற்றவர்.
பாவலர் காரை இறையடியான் ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதியிருந்தாலும் அச்சில் வெளிவந்துள்ள நூல்கள் பத்து மட்டுமே, அவை:
1. திருவருட்பாவை
2. திருநபி இரட்டை மணிமாலை
3. காரைக்கால் மஸ்தான் சாகிபு வலியுல்லா வரலாற்றுப் பேழை
4. தமிழமுதம்
5. வாழ்வியல்
6. அறிவியல் ஆத்திசூடி விளக்கவுரை
7. கல்லறைக் காதல்
8. கன்னித்தமிழ் வளர்த்த காரைக்கால் அம்மையார்
9. செந்தமிழ்த் தொண்டர் ஆற்றுப்படை
10. நபிமொழிக் குறள்
பாவலரின் பத்து நூல்களில் தமிழமுதம் என்ற கவிதைத் தொகுப்பு நூல் 1987 ஆம் ஆண்டின் தலைசிறந்த கவிதை நூலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுத் தமிழக அரசின் பரிசினைப் பெற்றுள்ளது. 1994 ஆம் ஆண்டு அவர்தம் நபிமொழிக் குறள் என்னும் நூல் தத்துவம், சமயம், அறவியல் ஆகிய துறைகளில் வெளியான மிகச் சிறந்த நூல் என்று தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன.

திருவருட்பாவை:

காரை இறையடியானின் முதல்நூல் என்ற பெருமைக்குரிய படைப்பு அவரின் திருவருட்பாவையாகும். இஸ்லாத்தின் பெருமைகளை விளக்கும் பல சிற்றிலக்கியங்கள் தமிழில் உண்டு என்றாலும் பாவைப்பாடல் என்ற வகையில் எழுந்த முதல் இஸ்லாமியச் சிற்றிலக்கிய நூல் இதுவே.

சங்க காலத்தில் பெண்கள் விளையாடிய பாவை விளையாட்டில் தொடங்கிக் காலந்தோறும் பற்பல மாற்றங்களுடன் வளர்ச்சி பெற்றுப் பாவை எனும் சிற்றிலக்கியம் உருவாயிற்று. இறைவனின் அருட் குணங்களைப் போற்றியும் நாடு நலம் பெற மழைவேண்டியும் மகளிர் குழுவாகப் புறப்பட்டுப் பிற பெண்களைத் துயிலெழுப்பியும் நீராட அழைத்தும் பாடுவதாக அமைவதே பாவை இலக்கியம் ஆகும். பாவை விளையாட்டில் தொடங்கி, சமயச் சார்பு பெற்றுப் பாவை நோன்புக்கும் சமய வளர்ச்சிக்கும் பயன்பட்டு, அதன் பின்னர் நாடு, இனம், மொழி பற்றிய உணர்வுகளை வெளிப்படுத்தும் பாட்டாய் பாவை இலக்கியம் வளர்ந்துள்ளது.

ஆண்டாள் எழுதிய திருப்பாவை வைணவத்திற்கும், மாணிக்கவாசகரின் திருவெம்பாவை சைவத்துக்கும், அவிரோத நாதரின் சமணத் திருவெம்பாவை சமணத்திற்கும் பாவை நூல்களாகத் திகழ்வதைப் போன்று காரை இறையடியானின் திருவருட்பாவை இஸ்லாமிய பாவை இலக்கியமாகத் திகழ்கின்றது. பிற பாவை நூல்களில் கூறப்பட்ட துயிலெழுப்புதல், நீராடல் போன்ற பாவை இலக்கியக் கூறுகள் இந்நூலிலும் அமைந்து சிறக்கின்றன. பாவை பாடலுக்கென்றே அமைந்த ஏலோ ரெம்பாவாய் என்னும் தொடர் இத்திருவருட் பாவையின் ஒவ்வோர் பாடல் ஈற்றிலும் அமைந்திருப்பது பாவை சிற்றிலக்கிய மரபைக் காப்பதாய் அமைந்துள்ளது.

திருப்பாவை, திருவெம்பாவைகளில் பாவை நோன்பின் நோக்கங்களாக நல்ல கணவரை அடைதலும் நாடும் வீடும் சிறப்புற்றோங்கலும் வலியுறுத்தப்படுகின்றன. திருவருட்பாவையோ எல்லாம் வல்ல இறை அல்லாவின் திருவருளைத் தேடலும் பெறலுமே நோக்கமெனக் குறிப்பிடுகின்றது.

இஸ்லாமியப் பண்பாட்டை மறந்து ஆழ்துயிலில் ஆழ்ந்திருந்திருக்கும் சமுதாய மக்களுக்கு இஸ்லாமிய நெறியின் ஐந்து பெரும் கடமைகளை எடுத்துரைத்து வலியுறுத்துவதாக இந்நூல் அமைந்துள்ளது. புனித இரமலான் மாத நோன்பின்போது முப்பது நாட்களும் இஸ்லாமியர் இல்லந்தோறும் பாடப்படும் வகையில் முப்பது பாடல்களால் இந்நூல் அமைந்திருப்பது மிகப் பொருத்தமுடையது. இம்முப்பது பாடல்களும் இறை, இறை நம்பிக்கை, தொழுகை, நோன்பு, பொருளறம், அருள்வெளிப் பயணம் என்னும் ஆறு தலைப்புகளாகப் பகுக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியும் ஐந்து பாடல்கள் வீதம் அமைந்துள்ளது. இத்தகு பகுப்பு முறை ஏனைய பாவை நூல்களில் இடம்பெறவில்லை. இஸ்லாத்தின் ஐந்து கடமைகளையும் வலியுறுத்தும் விதத்தில் நூலை அமைத்துள்ள கவிஞரின் திறத்தால் இந்நூல் அக அமைப்பு, புற அமைப்பு இரண்டிலும் சிறந்து விளங்குகின்றது.

இந்நூலுக்குச் சீரியதோர் உரையைத் தெளிவுரையாக இலக்கியத் தென்றல் பேராசிரியர் சா.நசீமாபானு அவர்கள் எழுதியுள்ளமை இந்நூலுக்கு மற்றுமோர் மணிமகுடம்.

காரை இறையடியானின் தமிழ்ப்பற்று:

கவிஞர் காரை இறையடியானின் தனிச்சிறப்பு அவரின் இறைப்பற்றும் இன்பத் தமிழ்ப் பற்றும். இரண்டையும் வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் அவர் வெளிப்படுத்த மறப்பதே இல்லை.

தண்டை தமிழ்பாடத் தாழம்பூத் தண்கூந்தல்
கொண்டை குலுங்கியெழிற் கூத்திடுங் கோதையீர்! (பா.3)

முத்தமிழால் பாராட்ட முந்தேலோ ரெம்பாவாய்! (பா.25)

மூல முழுமுதலை முத்தமிழைத்; தந்தானை (பா.13)

துயிலெழுப்பும் பெண்களின் தண்டை தமிழ் பாடுகிறதென்றும், அல்லாவை முத்தமிழால் பாராட்ட வேண்டுமென்றும் தமிழை மறக்காமல் குறிப்பிடும் கவிஞர், உலகுக்கெல்லாம் ஒரே இறைவன் அல்லா, அவனே உலக மொழிகள் அனைத்தையும் படைத்தவன் என்ற பொருளில் முத்தமிழைத் தந்தானை என்று குறிப்பிட்டு தம் இறைக்கொள்கையைத் தெளிவாக விளக்குகின்றார். இஸ்லாம் எங்கள் வழி, இன்பத்தமிழ் எங்கள் மொழி என்ற கவிஞரின் கோட்பாட்டை விளக்கும் இத்தொடர் திருவருட்பாவையின் தலைசிறந்த தொடர் எனப்போற்றத் தக்கது.

நடைநலத்தால் சிறக்கும் திருவருட்பாவை:

காரை இறையடியானின் தனித்தமிழ்க் கவிதைநடை கற்பவர் நெஞ்சங்களைக் கொள்ளை கொள்ளும் கவினுடையது. மரபுக்கவிதையில், எதுகை மோனை அழகுகளுடன் ஓசைநயம் மிக்கதாய் அவரின் பாவைப்பாடல்கள் அமைந்து சிறக்கின்றன.

கண்ணில் கயலாடக் கார்க்கூந்தல் காற்றாட
வண்ண வடிவெங்கும் வாகிளமை வந்தாடத் (பா.6)

அண்டம் அனைத்துலகும் ஆர்படைத்தான் ஆய்ந்திடுக. (பா.3)

அல்லலார் அம்புவியில் அல்லாவை ஆய்ந்துணர்மின் (பா.7)

மொட்டுப்ப+ மூக்காலே மூச்செறியும் மொய்ங்குழலீர்! (பா.10)

மேலே எடுத்துக்காட்டப்பட்ட அடிகள் மட்டுமல்ல நூல் முழுமையுமே இத்தகு மோனை சிறந்தோங்கும் நடைநயத்தைப் பரக்கக் காணலாம். திருவருட்பாவையின் பெரும்பாலான பாடல் அடிகள் நான்கு சீர்களிலும் மோனை அமைந்து முற்று மோனையாக அமைந்திருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு. இசையோடு பாடப்படுவதற்கு ஏற்ப முப்பது பாடல்களும் சொல்லழகுடன் அற்புதமான ஓசை ஒழுங்கும் பெற்று அமைந்துள்ளமையை இசைத்து மகிழ்வார் உணர்வர். இறைவனின் பெருமையைக் கூறும் பின்வரும் இரண்டடிகளில் அகரம், ஆகாரம், இகரம் என உயிர் எழுத்து வரிசையில் அல்லாவின் புகழை வருணிக்கும் நடை கற்போர் நெஞ்சைக் கவரக்கூடியது.

அன்பன் அருளறிவன் ஆகமிலாப் பேரழகன்
இன்பன் இறையல்லா இன்னுணர்வாய் என்நெஞ்சில் (பா.14)

அன்பன்- அருளன் என இறைவனின் பண்பை அடுக்கிக் கூறலும், ஆகமிலாப் பேரழகன் என இறைவனின் உருவமற்ற பேரழகை முரண்தொடை அமைய சிறப்பித்துக் கூறலும் இறையடியானின் கவிநயத்துக்குத் தக்க சான்றுகளாகும்.

காரை இறையடியானின் வருணனைத் திறம்:

திருவருட்பாவையின் முப்பது பாடல்களுமே வருணனைச் சிறப்புடன் விளங்குகின்றன. ஒவ்வொரு பாடலிலும் வரும் முதல் இரண்டடிகள் உறங்கும் பெண்களைத் துயிலெழுப்பி நீராட அழைக்கும் பெண்கள் ஒருவரையெருவர் வருணித்துக்கொள்வதாக அமைந்துள்ளன.

கோலக் குளிர்திங்கள் கொண்முகத்தீர், காண்கூந்தல்
நீல நெடுமுகிலீர், நெற்றிப் பிறையழகீர் (பா.5)

சித்திரப் பாவையீர்! செவ்விதழ்க் கோவையீர்!
முத்துநகைப் பூவையீர்! மொய்வளைச் செங்கையீர்! (பா.25)

நெற்றிக் களத்தில் நிறக் கருமை வில்லிரண்டால்
மற்றோர் மனங்குத்தும் மாவடுக்கண் அம்புடையீர்! (பா.15)

தமிழிலக்கியங்கள் காலந்தோறும் பெண்களை வருணித்துச் சிறப்பித்த அழகு வருணனைகளை யெல்லாம் உள்வாங்கித் தாம் படைத்த பாவை நூலில் பொருள் பொருத்தமுற அவ்வருணனைகளை இடம்பெறச் செய்த கவிஞரின் திறம் பாராட்டுதற்குரியது. காலைப் பொழுதில் பறவைகள் எழுப்பும் ஓசைகளை வருணிக்கும் பகுதியைப் பாருங்கள்,

காகக் கரைவும் கனற்கொண்டை பூச்சிறகாம்
ஆக வணியாடை அஞ்சேவல் கூவலும்
வேகமாய்க் கூர்ந்தும் விழவில்லையோ நுஞ்செவியில் (பா.11)

(காகங்கள் கரையும் ஓசையும் தீப்பிழம்புபோல் சிவந்த கொண்டையினையும் புள்ளிகள் பொருந்திய இறக்கைகளாகிய ஆடையினையும் உடைய அழகிய சேவல் கூவும் ஒலியும் வேகமாகக் கேட்கிறதே, உங்கள் செவிகளில் விழவில்லையா?) இந்தப் பாடலடிகளைக் கூர்ந்து கவனித்தால் காலைப் பொழுதின் வருணனையை ஓசைகளால் காட்சிப்படுத்திக் காட்டும் பாங்கும், அதேசமயம் சேவலை வருணிக்கும் போது அதன் சிவந்த கொண்டைகளை நெருப்புக்கு இணையாகயும் பூஞ்சிறகை ஆடையாகவும் நுட்பமாக வருணித்துக் காட்டும் பாங்கும் இணைந்து இவ்வருணனைப் பகுதியை அழகூட்டுகின்றன.

இயற்கை தரும் பாடம்:

இயற்கையைக் கூர்ந்து கவனித்தால் அதன் இயல்பான நடவடிக்கைகள் கூட நமக்குப் புதிய புதிய அறவுரைகளையும் அறிவுரைகளையும் தருவதாக உணரமுடியும். கவிஞர்களின் கற்பனை மனது இத்தகு பாடங்களை எளிதாகக் கண்டுணரவல்லது. காரை இறையடியான் நிலவின் வளர்பிறை தேய்பிறை மாற்றங்களைக் கண்டு நமக்குணர்ந்தும் பாடம் சிறப்பானது.

தோற்ற முழுமதியம் தொண்டாற்றித் தேய்திங்கள்
ஆற்றல் அறிஞருக்கு அஃதோர் பெரும்பாடம்!
மாற்ற மதிபார்த்தும் மாமயக்கம் கொண்டீரேல் (பா.28)

(முழுமதியாக வலம் வரும் திங்கள் தொண்டு ஆற்றிக் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்கிறது. ஆற்றல் மிக்க அறிவாளிகளுக்கும் கூட நிலையற்ற உலகில் வாழ்க்கையும் வளர்பிறை போன்றும், தேய்பிறை போன்றும் இன்பமும் துன்பமும், நன்மையும் தீமையும் மாறி மாறி அமைவது என்ற பெரிய பாடத்தை அது கற்பிப்பதாக உள்ளது.) திங்கள் தொண்டாற்றித் தேய்கிறது என்ற கவிஞரின் கூற்றில், நிலவு உலகத்துக்கு ஒளியைத் தந்து தந்து அதனால் தேய்ந்து ஒளிமங்குகிறது என்ற தற்குறிப்பேற்றம் உள்ளதை உணரமுடியும். முழு மதியம் தேய்ந்து மறைவதும் பின்னர் வளர்ந்து முழுமதியாவதும் வாழ்க்கையின் இன்ப துன்ப சுழற்சியைக் காட்டுகிறது என்ற இறையடியானின் கற்பனை திருவருட்பாவையின் பெருமைக்கு பெருமை சேர்க்கின்றது.

இலக்கிய ஆட்சி:

திருவருட்பாவையைக் கற்குந்தோறும் கவிஞரின் சொல்லாட்சி தமிழின் பல்வேறு இலக்கியங்களை நமக்கு நினைவு படுத்துகின்றது. கவிஞரின் இலக்கியப் புலமையையும் தமிழிலக்கியங்கள்பால் அவருக்கு உள்ள ஈடுபாடுமே இத்தகு இலக்கியச் சொல்லாட்சிகளுக்குக் காரணம்.

கற்றலால் காண்பயன் கண்ணியமெய் அல்லாவைப்
பற்றிப் பணிகின்ற பண்புத் தொழுகையன்றோ? (பா.15)

மேலே குறிப்பிட்டுள்ள திருவருட்பாவையின் அடிகள் உலகப் பொதுமறையாம் திருக்குறளின் தாக்கத்தால் உருவானது என்பதைக் கற்போர் உணர்வர்.

கற்றதனால் ஆயபயன் என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின் (குறள்: 2)

(நாமக்கல் கவிஞர் உரை: படிப்பதன் பயன் அறிவு பெறுதல். அப்படியானால் நம் அறிவுக்கெல்லாம் எட்டாத ஒருபொருள் இருப்பதை உணர்ந்து அதைப் போற்றாவிட்டால் படிப்பினால் என்ன பயன்?) திருக்குறளின் கருத்தும் நாமக்கல் கவிஞரின் உரைக்கருத்தும் பின்னிப் பிணைந்திருப்பதைப் போல் இறையடியான் அவர்கள் மேலே குறிப்பிட்ட பாவை அடிகளை அமைத்திருப்பது குறிப்பிடத் தக்கது. தொழுகை என்பதைக் குறிப்பிடுமிடத்தில், பற்றிப் பணிகின்ற பண்புத் தொழுகை என்று அடைகள் பல சேர்த்துக் குறிப்பிட்டிருப்பது கவிஞரின் இஸ்லாமிய மெய்யறிவின் மேன்மையைப் புலப்படுத்துகின்றது.

திருவருட்பாவையின் நோக்கமும் பயனும்:

இஸ்லாமிய மார்க்கத்தை எளிதாக எடுத்துரைக்கும் வகையில் பாடப்பட்ட இத் திருவருட்பாவையை ஒரு முழுமைபெற்ற இலக்கியம் என்று சிறப்பித்துரைக்கலாம். இஸ்லாத்தின் ஐந்து கடமைகளையும் கற்போர் மனம் கொள்ளும் வகையில் விரித்துக் கூறிய கவிஞர் முப்பதாவது பாடலாகிய கடைசிப் பாடலில் மிக அழகாகத் தொகுத்துக் கூறுகின்றார்.

உற்ற திருநோன்பை ஓர்திங்கள் ஏற்றுயர்ந்தோம்
பெற்ற நம்பேரின்பம் பேண்கடன் ஐந்துணர்ந்தோம்
சுற்றம் வறியோர்க்கும் சோரா தறஞ்செய்தோம்
பெற்றித் தொழுகையினால் பேருணர்வு யாம் எய்தோம்
குற்றங் குறைதீர் குணக்குர்-ஆன் கொண்டிசைத்தோம்
மற்றும் திருக்கஃபா மாமதினாச் சீருணர்ந்தோம்
வெற்றி யெனக்கீந்து வியன்தலைவன் நெஞ்சணைத்தான்
தெற்றத் திருவருளைத் தேடேலோ ரெம்பாவாய் (பா.30)

வெற்றிகரமாக நோன்பு நோற்றதும், ஐந்து கடமைகளை உணர்ந்ததும், அறஞ்செய்ததும், தொழுகைகளைத் தவறாது கடைபிடித்ததும், திருமறையை ஓதி உணர்ந்ததும், இறையில்லமாம் கஃபா, மதீனா இவைகளின் சிறப்புணர்ந்ததும் ஆகிய இஸ்லாம் மார்க்கத்தின் அனைத்துக் கடமைகளையும் சிறப்புற செய்து முடித்த செய்தி இப்பாடலில் தொகுத்துரைக்கப் பட்டுள்ளது. இக்கடமைகளைச் செய்து முடித்ததன் பயனாக வெற்றி எனக்கீந்து வியன் தலைவன் நெஞ்சனைத்தான் என்ற அடிகளில் அல்லாவின் அருளைப் பெற்ற பெண், ஆற்றுப்படை போல் தெற்றத் திருவருளைத் தேடேலோ ரெம்பாவாய்! என்று மற்ற பெண்களுக்கு ஆற்றுப்படுத்துகின்றாள். இந்நூலின் பயன் என கவிஞர் விதந்தோதுவது, திருவருளைத் தேடுங்கள் என்பதே.
இஸ்லாமிய திருநெறியின் சிறப்பம்சம், அது உலக வாழ்விலும் சிறப்பானதை, அழகானதை அனுபவிக்கச் செய்கிறது. எதிலும் வரம்பு மீறிடாத அளவோடு கூடிய, நியாயமான இவ்வுலக இன்பங்களைச் சுகிக்க அனுமதித்து, அத்தகு வரம்பிட்ட வாழ்க்கை முறையையே எதிர்கால நிலையான நீடித்த வாழ்க்கை முறைக்கு அடிப்படையாகவும் ஆக்கி வைத்திருக்கிறது. (சிராஜூல் மில்லத் சிந்தனைகள், ப.19)
தூக்கம் தேவையானதுதான், அது ஒரு வரம்பிற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். தூக்கம் எல்லை கடந்தால்,

சீர்மை யொளிரமலான் செப்பப் பிறைகண்டும்
கூர்மை விழிமயங்கக் கொண்டீரோ பேருறக்கம்
பார்மைப் பணிமுடங்கின் பண்பாடு மாழ்காதோ?
ஊர்மை உலகியலும் ஊழலாய் மாறாதோ?
நேர்மை நிலைதுலங்க நேரிழையீர் நீரெழுக! (பா.1)

இவ்வுலகில் நாம் அன்றாடம் செய்ய வேண்டிய கடமைகள் தவறிடும், கடமைகள் தவறினால் நமக்கே உரிய பண்பாடுகள் அழிந்துவிடும், பண்பாடு அழிந்தால் நாம் வாழும் ஊரின் செயல்பாடுகளும் உலகின் நடைமுறைகளும் ஊழல் நிறைந்ததாகிவிடும் எனவே விழிமின்! எழுமின்! என உலக மக்களுக்கே விழிப்பை ஊட்டும் ஒப்பற்ற இலக்கியமாய் இத்திருவருட் பாவையைக் கவிஞர் காரை இறையடியான் படைத்துள்ளமை பாராட்டுதற்குரியது. தூய தமிழே தம் வாழ்வின் உயிர் மூச்சாகக் கொண்டு ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதிக் குவித்து தமிழுக்கும் இஸ்லாத்துக்கும் கடைசி மூச்சுவரைப் பணியாற்றிய காரை இறையடியானின் பணியை உலகம் உணர்தல் வேண்டும்.

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...