வெள்ளி, 6 ஏப்ரல், 2012

சிங்கப்பூர் தமிழாசிரியர்களுக்கான கருத்தரங்கு -2012

Dr.N.Ilango
Associate Professor
Dept.of Tamil
P.G. Centre,
Govt. of Puducherry
Puducherry-8

2012 பிப்ரவரி 25 ஆம் நாள் சனிக்கிழமை சிங்கப்பூர் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் சிங்கப்பூர் கல்வி அமைச்சகத்தின் பாடத்திட்ட வரைவு மற்றும் மேம்பாட்டுப் பிரிவு சார்பாக நடத்தப்பட்ட தமிழாசிரியர்களுக்கான கருத்தரங்கின்( TL Seminar-2012) சிறப்பு அழைப்பாளராக  (கருத்தரங்கின் மையப்பேருரை நிகழ்த்துநராக) அழைக்கப்பட்டேன்.

அழைப்பிதழ்:
 TL Seminar-2012


 Programme

கருத்தரங்கின் மையப்பேருரை நிகழ்த்துநராக
முனைவர் நா.இளங்கோ
Keynote Address By Dr.N.Ilango


கருத்தரங்கில் நினைவுப் பரிசு வழங்குகிறார்
சிங்கப்பூர் கல்விஅமைச்சக இணை இயக்குநர்


Mr.Lo Chee Lin - Dr.N.Ilango

குறுந்தொகையும் இயற்கையும் - ஆய்வு நோக்கில் குறுந்தொகை -பகுதி-5


முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

குறுந்தொகையும் இயற்கையும்

சங்க இலக்கியங்கள், குறிப்பாகக் குறுந்தொகைப் பாடல்கள் பெரிதும் இயற்கையோடு இயைந்த வாழ்வினையே படம் பிடிக்கின்றன. எந்தவொரு பாடலும் இயற்கையை விட்டு விலகி நிற்பதேயில்லை. குறுந்தொகைப் பாடல்களில் இடம்பெறும் நாடக பாணியிலான பாத்திரங்களின் தனிக்கூற்று இயங்குவதற்கான களமாகவும் மேடையாகவும் பின்னணியாகவும் இயற்கை படைக்கப்பட்டுள்ளது.

பாத்திரக் கூற்று அகப்பாடல்களின் மைய உட்கரு. இதுவே உரிப்பொருள். காலம், இடம் இவற்றின் பின்னணியாய் முதற்பொருள், நிலமும் பொழுதும். பின்னணியில் இடம்பெறும் மனிதர்கள், விலங்குகள், பறவைகள், மரங்கள், செடிகொடிகள், தொழில், இசை முதலான பொருள்கள் அனைத்தும் கருப்பொருள்கள். நாடகபாணித் தனியுரைகளின் கால, இடச் சூழ்நிலைகளை விளங்கிக் கொள்வதற்கும் பின்னணியைப் படம் பிடிப்பதற்கும் உதவும் இயற்கை அகப்பாடல்களில் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.

வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட செவ்விய ஆகுமதி
யார்அஃது அறிந்திசி னோரே சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்குஇவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே
(குறுந். 18)

கபிலரின் இக்குறிஞ்சிப் பாடலில், தோழி தலைவனைத் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துவது உரிப்பொருள். சிறிய கொம்பிலே பெரிய பலாப்பழம் தொங்குவதைப் போல் தலைவியின் சிறிய உயிர் தலைவன் மீது வைத்த பெரிய காமத்தைத் தாங்கிக் கொண்டிருக்கிறது. பழம் பெருக்கப் பெருக்கக் கொம்புக்கு ஆபத்து எதிர்நோக்கியிருப்பதைப் போல், தலைவன் மீது வைத்த எல்லையற்ற அன்பினால் தலைவி உயிருக்கு ஆபத்து நேரலாம். தலைவன் ஊரிலுள்ள பலாமரங்களோ வேலியால் பாதுகாக்கப்பட்டிருக்கிறது, அதேசமயம் அந்தப் பலா மரங்கள் கொம்புக்கு ஆபத்தில்லாத வேர்ப்பலாக்கள். பாதுகாப்பான வேர்ப்பலாக்கள் நிறைந்த சாரலைச் சேர்ந்த தலைவனுக்குக் கொம்புப் பலாவால் கொம்புக்கு ஆபத்து என்பது தெரியுமோ? எனவே தான் செவ்வியை ஆகுமதி என்கிறாள் தோழி.

இந்தக் குறுந்தொகைப் பாடலில் கருப்பொருளால் அமைந்த இயற்கை வருணனையானது கதையின் உட்பொருளை நமக்கு வெளிப்படுத்துவதற்குக் கவிஞன் தனது மனக்காட்சியில் கண்டதற்கு இணையான ஒரு குறியீடாக நிற்கிறது. அதுமட்டுமின்றி மறைகுறிப்பான பிறிது மொழிதலுக்கும் இடமளிக்கிறது. குறுந்தொகையின் எல்லாப் பாடல்களிலும் இயற்கையின் பங்கு அளப்பரியது.

புதுமைப்பித்தன் சிறுகதைகள் -சில குறிப்புகள்

பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி - 8.

புதுமைப்பித்தன்

புதுமைப்பித்தன் தம் படைப்புகள் குறித்து சொன்ன வாசகங்களோடு கட்டுரையைத் தொடங்குவோம்.விமர்சகர்களுக்கு ஒரு வார்த்தை. வேதாந்திகள் கைக்குள் சிக்காத கடவுள் மாதிரிதான் நான் பிறப்பித்து விட்டவைகளும் அவை உங்கள் அளவுகோல்களுக்குள் அடைபடாதிருந்தால் நானும் பொருப்பாளியல்ல, நான் பிறப்பித்து விளையாட விட்டுள்ள ஜீவராசிகளும் பொறுப்பாளியல்ல. உங்கள் அளவுகோல்களைத்தான் என் கதைகளின் அருகில் வைத்து அளந்து பார்த்துக்கொள்ளுகிறீர்கள் என்று உங்களுக்குச் சொல்லிவிட விரும்புகிறேன். (பதி.ஆ. வேங்கடாசலபதி, புதுமைப்பித்தன் கதைகள், ப. 780)என்று புதுமைப்பித்தன் தன்படைப்புகள் குறித்து விமர்சகர்களுக்கு சொன்ன எச்சரிக்கையோடு அவரின் படைப்புகளை அணுகுவது பொருத்தமாயிருக்கும்.

இருபதாம் நூற்றாண்டு சிறுகதை

இருபதாம் நூற்றாண்டு இலக்கிய வரலாற்றில் - சிறுகதை வரலாற்றில் தனக்கென ஒரு தனியிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ள புதுமைப்பித்தனைத் தூய கலை இலக்கியவாதிகளும் சோசலிச யதார்த்தவாதிகளும் ஒருசேரச் சொந்தம் கொண்டாடுவது புதுமை. இதுவே அவர் படைப்புகளின் சூட்சுமம். புதுமைப்பித்தன் எந்தக் கூண்டுகளிலும் சிக்கிக் கொள்ளாதவர். அவர் படைப்புகள் சோசலிசம், பெரியாரியம், காந்தியம், சித்த தத்துவம் எல்லாம் பேசும், அதே சமயம் அவற்றைக் கிண்டலடிக்கவும் செய்யும். சொ.விருத்தாசலம் என்ற இயற்பெயருடைய புதுமைப்பித்தன் வேறு பல புனைபெயர்களிலும் பத்திரிக்கைகளுக்கு எழுதியுள்ளார். சோ.வி., வே.கந்தசாமிக் கவிராயர், ரசமட்டம், கூத்தன், நந்தி, கபாலி, சுக்ராச்சாரி என்பன அவரின் சில புனைபெயர்கள்.

சமூகம் குறித்த எதிர்வினையே அவரின் படைப்புகள்

நூற்றுக்கும் மேற்பட்ட சொந்தச் சிறுகதைகள் படைத்ததோடு மட்டுமின்றி சுமார் நூறு மொழிபெயர்ப்புச் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள், குறுநாவல், திரைப்பட உரையாடல் என்று இலக்கியத்தில் பல துறைகளிலும் தம் படைப்புகளை உருவாக்கியவர் புதுமைப்பித்தன். புதுமைப்பித்தன் தன் கதைகளின் பொதுத்தன்மை நம்பிக்கை வறட்சி என்று சொல்லிக்கொண்டார், அதற்குக் காரணம் அவரின் வாழ்க்கைப் பின்னணி. அவரின் நம்பிக்கை வறட்சி மனிதர்கள் உண்டாக்கிய தர்மங்கள் குறித்ததாயிருந்தது. சாமான்ய மனிதர்களின் நடைமுறை வாழ்க்கையும் அவற்றின் அவலங்களும் அவரின் சிறுகதைகளில் அதிக இடங்களைப் பிடித்தன. சமூகத்தின் மீதான புதுமைப்பித்தனின் கோபமே, அவர் படைப்புகளில் கேலியாக, கிண்டலாக, நையாண்டிகளாக வெளிப்பட்டன. எத்தகைய அறங்களின் மீதும் தமக்கு நம்பிக்கையில்லை என்பதுபோல் அவர் காட்டிய பாசாங்கெல்லாம் சமூகம் குறித்த அவரின் எதிர்வினையே.

சோதனை முயற்சிகள்

புதுமைப்பித்தன் ஆங்கில வழியில் உலகின் பலமொழிப் புனைகதைகளைக் கற்றார். தமிழிலும் உயர்ந்த தரத்தில் சிறுகதைகளைப் படைக்க விரும்பி ஒவ்வொரு சிறுகதையையும் ஒரு சோதனை முயற்சி போல் செய்து பார்த்தார். அதனால்தான் அவர் கதைகள் எதுவும் ஒன்று போல் மற்றொன்று இருப்பதில்லை. தம்முடைய கதைகளை வெறும் சுவாரஸ்யத்திற் காகவோ கருத்துப் பிரச்சாரத்துக்காகவோ அவர் படைக்கவில்லை. புதுமைப்பித்தனின் ஒவ்வொரு கதையும் ஒரு பிரச்சனையைப் பேசும். பாத்திரங்களையோ, பிரச்சினைகளையோ மோதவிட்டுவிட்டுத் தன்னை இனங்காட்டிக் கொள்ளாமல் ஒதுங்கிக் கொள்வார். இது அவர்படைப்பின் பாணி.

புதுமைப் பித்தன் கதைகளின் தனித்தன்மை

ஒரு தமிழ்வாசகன் புதுமைப்பித்தன் எழுத்துக்களுக்குள் எளிதில் நுழைந்து படைப்பை அனுபவிக்க முடிவதற்கு அவரின் விசேடமான கதைசொல்லும் முறையே ஒரு முக்கிய காரணம். தொன்ம வேர்முடிச்சுகளால் காப்பாற்றப் படும் இந்தியமரபு இழையோடும் மொழியும் கதையாடலுமே புதுமைப் பித்தன் கதைகளின் தனித்தன்மை. இந்தியத் தொன்ம இதிகாச மரபுகளும் சைவத் தமிழ் மரபும் கலந்து புதுமைப்பித்தனின் எழுத்துலகை ஆட்சி செய்வது வாசகர் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்தது.

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...