புதுச்சேரிக் கவிஞர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதுச்சேரிக் கவிஞர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 31 ஜூலை, 2009

வெள்ளைத் திமிர் மு.பாலசுப்பிரமணியனின் கலகக்குரல்

வெள்ளைத் திமிர்
மு.பாலசுப்பிரமணியனின் கலகக்குரல்


முனைவர் நா.இளங்கோ
இணைப்பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8.

உலகக் கலைகளுக்கெல்லாம் தாய் இசைக்கலையே. புவிக்கோளத்தைச் சூழ்ந்துள்ள வளிமண்டலமே உலக உயிரினங்களுக்கெல்லாம் ஆதாரம் ஆனதுபோல், இந்த இயற்கையின் கொடையாகிய வளிமண்டலமே இசைக்கு ஆதாரம். இயற்கையின் இசை அலாதியானது பாரதி இதனைப் பதிவு செய்கின்றான்.

கானப் பறவை கலகலெனும் ஓசையிலும்
காற்று மரங்களிடைக் காட்டும் இசையினிலும்
ஆற்று நீரோசை அருவி ஒலியினிலும்
நீலப் பெருங்கடல் எந்நேரமும் தானிசைக்கும்
ஓலத்திடையே உதிக்கும் இசையினிலும்


நெஞ்சைப் பறிகொடுத்ததாகப் பாரதி பாடுவதில் இயற்கைக்கும் இசைக்கும் உள்ள நுட்பமான உறவு சொல்லப்படுகிறது.

இசையும் மொழியும் இணைந்தபோதுதான் கவிதை பிறந்தது. ஓசையை ஓர் ஒழுங்குக்கு உட்படுத்தி அதில் சொற்களை இட்டுநிரப்பி மனிதன் கவிதையைக் கற்றுக்கொண்டான். ஆதியில் கவிதை என்பது பாட்டுதான். எழுத்துக்களைப் படைத்துக்கொள்வதற்கு முன்பே மனிதன் பாட்டைப் படைத்துவிட்டான். பாட்டில் இசையே முதன்மை பெற்றது, சொல்லும் பொருளும் அடுத்த இடத்தில்தான். இப்படித் தொடங்கிய பாட்டு, வாய்மொழிக் கவிதையாய் வளர்ந்து ஏட்டில் குடியேறி கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை தனக்கும் இசைக்குமான தொடர்பை விட்டுவிடாமல் பற்றித் தொடர்ந்தது. பின்னர், கவிதை அச்சு ஊடகத்திற்கு இடம் பெயர்ந்தது.

இருபதாம் நூற்றாண்டு, கவிதையை இசையிலிருந்து பிரித்தது. பறக்கக் கற்றுக்கொண்ட குஞ்சுப் பறவைக்கு இனி தாய்ப்பறவையின் துணை தேவையில்லை. இனியும் தாய்ப்பறவை ஊட்டிக் கொண்டிருந்தால் குஞ்சுப்பறவை செயலற்றுப் போகும். கவிதைகளுக்கும் இதே விதிதான். கவிதைகள் வாய்க்கும் செவிக்குமாக ஊடாடும்வரைதான் இசை அல்லது ஓசை ஒழுங்கு தேவைப்பட்டது. கவிதைகள் அச்சு வாகனமேறி கண்ணுக்கும் கருத்துக்குமாக ஊடாடத் தொடங்கிய பின்னர், கவிதை தன் எல்லாக் கட்டுகளையும் உடைத்துக் கொண்டு, விட்டு விடுதலையாகி நிற்க வேண்டும். இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதைகள் அதைத்தான் செய்தனஃசெய்கின்றன. நவீன கவிதைகள், புதுக்கவிதைகள், ஹைக்கூ என்ற இத்தகு புதிய வடிவங்களின் வரவுகளுக்குக் காரணங்கள் இவைதாம்.

பாட்டரங்கங்கள் கவிதையைச் செவிக்குப் படைப்பன. அங்கே கவிதை பாட்டாயிருக்க வேண்டும். அதைவிடுத்துத் தமிழின் நவீன கவிதைகளைப் பாட்டரங்கங்களில் வாசிப்பது பாட்டி மஞ்சள் தேய்த்துக் குளித்த கதைதான். கவிதைகள் வாய்மொழியில், ஏட்டில், அச்சில் குடியிருந்த தலைமுறைகளைக் கடந்து நான்காவது தலைமுறையாக கணிப்பொறி வழி இணையத்தில் குடியேறத் தொடங்கிவிட்டன. இவை ஊடக மாற்றங்கள். ஒவ்வொரு ஊடக மாற்றத்திற்கும் ஏற்ப, கவிதைகள் தம்மைத் தாமே புதுப்பித்துக் கொள்கின்றன.

II
பொறியாளர் மு.பாலசுப்பிரமணியனின் நான்காவது படைப்பு வெள்ளைத் திமிர் என்ற கவிதைத் தொகுப்பு. முதல் மூன்று படைப்புகளும் கூடக் கவிதைப் படைப்புகள்தாம்.

நடைவண்டி - சிறுவர் கவிதைகள்
வாழப் பிறந்தோம் - சமுதாயக் கவிதைகள்
அரைக்கீரை விற்கிறான் அம்பானி – ஹைக்கூ


என்று மூன்று படைப்புகளையும் வௌ;வேறு வடிவில்ஃ நோக்கில் வெளியிட்டு புதுவைக் கவிஞர்கள் பரம்பரையில் தமக்கென ஒரு தனியிடத்தை இயல்பாகப் பெற்றவர் பரிதிஅன்பன் என்று அறியப்படும் பொறியாளர் மு.பாலசுப்பிரமணியன்.

'வெள்ளைத் திமிர்' என்ற நூலின் தலைப்பே தனித்துக் குறிப்பிடப் பெறும் சிறப்புடையது. உலக வரலாற்றை ஒருவரியில் சொல்லும் ஒப்பற்ற சொற்கள் இந்த வெள்ளைத் திமிர். பின்னைக் காலனியியம் என்றதொரு புதிய அணுகுமுறையில் இன்றைக்கு அலசப்படும் சமூக பொருளாதார பண்பாட்டுச் சொல்லாடல் மதிப்புடையது இந்த சொற்கள். கவிஞர் இந்தச் சொற்களை ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு என்ற ஒற்றைப் பொருளில் கையாண்டாலும் இந்தச் சொற்கள் வழங்கும் படிமம் விரிந்த பொருளுடையது. பன்முக வாசிப்புக்கு வழிவகுப்பது.

கவிஞர் மு.பாலசுப்பிரமணியனின் விரிந்த வாசிப்பு அனுபவமும் உலக நடப்புகளைச் சரியான கோணத்தில் புரிந்துகொள்ளும் கூர்த்த மதியும், புரிந்துகொண்டதைப் பதிவுசெய்யும் துணிச்சலும் இந்நூலின் பக்கங்கள் தோறும் காணக் கிடைக்கின்றன.

நூலின் உள்ளடக்கங்களைப் பார்க்கிறபோது கவிதைகளுக்கான பாடுபொருள்களைத் தேடிப் பிடிக்கும் சிரமம் மு.பாலசுப்பிரமணியனுக்கு ஒருநாளும் ஏற்பட்டிருக்காது என்றே நினைக்கத் தோன்றுகிறது. வீட்டுச் சூழல், நட்புச் சூழல் சமூகச் சூழல், நாட்டுச் சூழல் என்று தாம் புழங்குகின்ற அனைத்துச் சூழல்களின் இயல்புகளையும் அவற்றின் சிக்கல்களையும் கவிதைகளாக்கும் செய்நேர்த்தி அவருக்கு கைவந்திருக்கின்றது. மு.பாலசுப்பிரமணியனின் முந்தைய கவிதைத் தொகுதிகளில் காணக்கிடைக்காத பல நவீன கவிதை உள்ளடக்கங்கள் இத்தொகுதியில் இடம்பெற்றிருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு. சான்றாக, காலம், மனம், வாழ்க்கை, நினைவு, காலஓட்டம், தேடல் முதலான கவிதைகளைக் குறிப்பிடலாம். இவ்வகைக் கவிதைகளில் மு.பாலசுப்பிரமணியனின் தேடலும் வாழ்க்கை குறித்த விசாரணைகளும் நுட்பமாக வெளிப்படுகின்றன.

கவிதைகள் குறித்தும் கவிதைகளின் நோக்கம் குறித்தும் கவிதை எழுபவனின் கடமைகள் குறித்தும் சில தெளிவான வரையறைகளைக் கவிஞர் மு.பாலசுப்பிரமணியன் உருவாக்கி வைத்துள்ளார். கவிஞரின் இலக்கியப் பயிற்சி இதற்குத் துணைபுரிந்திருக்க வேண்டும். கவிதை என்ற தலைப்பில் கவிஞர் எழுதியுள்ள ஒரு கவிதை அவரின் கவிதைக் கோட்பாட்டை/ விருப்பை வெளிப்படுத்துகின்றது எனலாம்.

நடந்ததை நடப்பதை நயமாக உரைக்கவும்
நடக்க இருப்பதில் நம்பிக்கை வைக்கவும்
கடந்ததைக் காதலைக் காவியம் ஆக்கவும்
கருத்தினைக் கடமையைக் கனிவாக உரைக்கவும்
துயிலுகின்ற மக்களைத் தூண்டி எழுப்பவும்
துணிவாகச் சமூகக் கொடுமைகள் சாடவும்
வெயிலாக வெளிப்பட்டு வெற்றுமைகள் கொளுத்தவும்
வேண்டும் கவிதை


என்றெல்லாம் கவிதைகளின் தேவையை வலியுறுத்தும் கவிஞர் இதே கவிதையில் இன்னும் ஒருபடி மேலேபோய், "உரிமைகள் வென்றிடும் குரலாய் மாறும், உண்மையில் கவிதையே உலகை ஆளும்" என்ற அசாத்தியமான நம்பிக்கையோடு கவிதையை முடிக்கின்றார்.

கவிதைகள் எவ்வளவுதான் உயர்ந்தவையாயிருந்தாலும் எழுதுபவனைப் பொறுத்தன்றோ கவிதை பயனுடையதாகும். கவிதைகளின் நோக்கத்தைப்போல் கவிஞனின் நோக்கமும் இலக்கும் உயர்வாயிருத்தல் வேண்டுமென்பதனையும் கவிஞர் மு.பாலசுப்பிரமணியன் தெளிவுபடுத்துகின்றார்.

விருப்புக்குப் பாட்டெழுதி
வெறுந்தாளை நிரப்பாமல்
பொறுப்புக்குப் பாட்டெழுதி
பொதுவுடைமை போற்றிடுஎPர்
உறுப்புகளை வருணித்து
உணர்ச்சிகளைத் தூண்டாமல்
உழைப்பாளர் வியர்வையின்
உன்னதம் போற்றிடுவீர்


வெறுந்தாளை நிரப்பும் இன்றைய சராசரிக் கவிஞர்களைச் சாடுவதோடு மட்டுமின்றி கவிதையும் கவிஞனும் எப்போதும் ஒடுக்கப்பட்டவன் பக்கமே நிற்க வேண்டும் என்ற பொருளில் உழைப்பவர் பெருமை பேசவேண்டும் என்றும் சமத்துவம் போற்றப்பட வேண்டும் என்றும் ஆழமான சிந்தனைகளையும் ஆரவாரமின்றி பதிவுசெய்கின்றார் மு.பாலசுப்பிரமணியன்

கவிஞர்கள் தம்மைச் சுற்றி நடக்கும் அவலங்களை அத்துமீறல்களை அடக்குமுறைகளைக் கவனத்தில் கொள்ளாமல் கற்பனை உலகில் கவிதைத் தேர் ஒட்டிக்கொண்டிருப்பதும் கடவுளர் துதிபாடி காலத்தை வீணே கடத்திக் கொண்டிருப்பதும் கண்டிக்கத்தக்கன. வாழும் காலத்திற்குப் பயன்படாத கவிஞன் வெறுஞ்சதைப் பிண்டம். கவிஞன் தாம் வாழுகின்ற காலத்தின் குரலாய் இருக்க வேண்டும். கவிஞர் மு.பாலசுப்பிரமணியனின் வெள்ளைத் திமிர் சமகாலத்து உள்ளுர் மற்றும் உலக நடப்புகள் அனைத்தையும் விமர்சனக் கண்ணோட்டத்தோடு பதிவுசெய்கின்றது.

கவிழ்ந்த தேர் என்ற தலைப்பில் ஈழத்தின் அரசியல் மேதை பாலசிங்கம் மறைவை அழுத்தமான சோகத்தோடு கவிதையாக்குகின்றார். வெள்ளைத் திமிர் என்ற தலைப்பில் ஈராக் மீதான அமெரிக்கப் படையெடுப்பையும் சதாமின் மரணதண்டனையையும் ஆவேசமாகச் சாடிப் பாடுகின்றார். துறைமுக விரிவாக்கம் என்ற தலைப்பில் புதுவைத் தேங்காய்த்திட்டில் அமைக்க இருந்த துறைமுக விரிவாக்கத்திற்கெதிரான மக்கள் போராட்டத்தையும் ஆட்சியாளர்களின் சுயநலப் போக்கையும் கடுமையான கோபத்தோடு கவிதையாக்குகின்றார். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

III
கடந்த இருபத்தைந்து ஆண்டு காலப் புதுவைக் கலை இலக்கிய வளர்ச்சியின் அடையாளம் கவிஞர் மு.பாலசுப்பிரமணியன். 1983 தொடங்கி புதுவையின் எல்லா இலக்கிய மேடைகளையும் பார்வையாளர் வரிசையிலிருந்து கூர்ந்து கவனித்து வளர்ந்தவர் இவர். கடந்த பத்தாண்டுகளாகப் புதுச்சேரி மாநிலக் கலை இலக்கியப் பெருமன்றத்தில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு இலக்கியப் பேராசான் ஜீவாவின் பாதையில் கலை இலக்கியங்களைப் படிக்க / படைக்க முற்படுபவர். சுயமரியாதைச் சிந்தனையும் முற்போக்கு அரசியல் பார்வையும் கொண்டவர். புதுவையின் வளர்ந்துவரும் புதிய தலைமுறையின் முன்னோடி. புதியவர்களை அரவணைத்து ஆற்றுப்படுத்தும் பண்பாளர். புதுவையின் குறிப்பிடத்தக்க படைப்பாளியாக எதிர்காலத்தில் அடையாளம் காட்டத்தகும் ஆற்றலுடையவர்.

'அரைக்கீரை விற்கிறான் அம்பானி' நூலின் அணிந்துரையில் புதுவைத் தமிழ்நெஞ்சன் கவிஞர் மு.பாலசுப்பிரமணியனைப் பற்றிக் குறிப்பிடும் வரிகளைப் பொருத்தம் நோக்கி இங்கு எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.

பரிதிஅன்பன் (மு.பாலசுப்பிரமணியன்) சூடும் சுரணையும் மானமும் உள்ள ஒரு தோழன். இலக்கியத் தாகமும் இனவுணர்வு வேகமும் பொதுத் தொண்டில் ஈடுபாடும் இம்மண்ணின் மைந்தன் என்கிற அடையாளமும் மொழி, இன, நாட்டுணர்வின் முகவரியும் கொண்டவன்.

புதுவைத் தமிழ்நெஞ்சனின் பாராட்டுரைக்கு நூற்றுக்கு நூறு தகுதி பெற்றவர் மு.பாலசுப்பிரமணியன். தொடர்ந்துவரும் அவரின் தமிழ்ப்பணிக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

முனைவர் நா.இளங்கோ

வியாழன், 30 ஏப்ரல், 2009

வண்ணத்துப் பூச்சி – மாநி நூல் அணிந்துரை முனைவர் நா.இளங்கோ

வண்ணத்துப் பூச்சி – மாநி
அணிந்துரை


பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ
புதுச்சேரி-8

தமிழில் பரவலாகக் குழந்தை இலக்கியம் என்ற பெயரில் அறியப்படும் இலக்கிய வகையே ஆய்வாளர்களால் சிறுவர் இலக்கியம் என்று குறிப்பிடப்படுகின்றது. சிறுவர் இலக்கியம் என்று இந்தவகை இலக்கியங்களை அழைப்பதுதான் பொருத்தமுடையது. பதினைந்து வயது வரையிலானவர்களை யாரும் குழந்தைகள் என்று குறிப்பிடமாட்டார்கள், அவர்கள் சிறுவர்களே. இத்தகுச் சிறுவர்களுக்காகப் பாடப்படும் இலக்கியங்கள் சிறுவர் இலக்கியங்கள் தானே.
சிறுவர் இலக்கியம் சிறுவர்கள் பாடுவது, சிறுவர்களைப் பற்றிப் பாடுவது, சிறுவர்களுக்காகப் பாடுவது என மூன்று வகைப்படும். மேற்கூறிய மூன்று வகைகளில் சிறுவர்கள் பாடுவது என்றவகை இன்றைய ஆங்கிலவழிக் கல்வியின் வருகையால் பெரிதும் சிதைவுக்கு ஆளாகியுள்ளது. ஏனெனில் கிராமப்புறங்களில் சிறுவர்கள் பாடிவந்த நாட்டுப்புறச் சிறுவர் பாடல்கள், சிறுவர் விளையாட்டுப் பாடல்கள், மொழிப் பயிற்சி எண்ணுப் பயிற்சிப் பாடல்கள் காணாமல் போய் மண்ணுக்கு அந்நியப்பட்ட நர்சரி ரைம்ஸ்களாக மாறிவிட்டன.

இரண்டாவது வகையாகிய சிறுவர்களைப் பற்றிய பாடல்கள் தமிழில் பாடப்படவே இல்லை என்று கூறலாம். இந்தவகை இலக்கியங்களை உருவாக்க அதிக உற்றுநோக்கலும் உளவியல் கல்வியும் அவசியம். எப்பொழுதும் நுனிப்புல் மேயும் எழுத்தாளர்களால் இது சாத்தியமில்லை.
மூன்றாவது வகையாகிய சிறுவர்களுக்காகப் பாடுவது என்ற வகையில் நிறைய சிறுவர் இலக்கியப் படைப்பாளிகள் தமிழில் உண்டு. ஆனால் இவ்வகைச் சிறுவர் இலக்கியங்களில் அனைத்துவகை இலக்கிய வடிவங்களுக்கும் முக்கியத்துவம் தராமல் கவிதை இலக்கியம் படைப்பவர்களே அதிகம். சிறுவர்களுக்கான நாடகம், நாவல் கட்டுரை இலக்கியங்களைப் படைப்பவர்கள் தமிழில் அதிகமில்லை. சிறுவர் கவிதை இலக்கியம் படைப்பவர்கள் அதிகமிருந்தாலும் அவர்களில் தனித்தன்மை உடைய படைப்பாளிகளைக் காண்பது மிகவும் அரிதாகவுள்ளது. பல சிறுவர் இலக்கியப் படைப்பாளிகள் நூல் எண்ணிக்கை, நூலக விற்பனை, பரிசு, விருது போன்ற வாய்ப்புகளுக்காக எழுதுவதுதான் அதிகம். தனித்தன்மை அற்ற இவ்வகைப் படைப்புகள் ஒன்றைப் பார்த்து ஒன்று எனப் போலச் செய்தலில் உருவாக்கப் பட்டவை.
தமிழில், இத்தகு சிறுவர் இலக்கியச் சூழலில் கவிஞர் மாநி (மார்க்ரெட் நிக்கோலஸ்) அவர்களின் வண்ணத்துப் பூச்சி சிறுவர்களுக்கான கவிதைத் தொகுப்பாக வெளிவருகிறது. புதுவை மாநகரம் கவிதைப் பாரம்பரியம் மிக்க நகரம். அண்மைக் காலங்களில் அதாவது 2000 க்குப் பிறகு புதுவையில் அதிக அளவில் நூல்கள் வெளியிடப் பெறுவதும் அதிலும் குறிப்பாகக் கவிதை நூல்கள் மிகுதியாக வெளிவருவதும் கண்கூடு. இலக்கியப் படைப்புகளின் பெருக்கம் எப்பொழுதுமே மகிழ்ச்சியளிக்கக் கூடிய ஒன்றுதான். மாநி அவர்களும் வாழையடி வாழையெனவரும் தமிழ்க் கவிஞர் கூட்டத்தில் ஒருவராகக் கலந்துகொண்டார். தமிழ்க் கவிஞர்கள் பரம்பரையில் மேலும் ஒரு பெண்கவிஞர் சேர்ந்திருப்பது மகிழ்ச்சியளிக்கக் கூடியதே.
சங்ககாலம் தொடங்கி காரைக்கால் அம்மையார், ஆண்டாள், ஒளவையார் எனத் தொடர்ச்சியான பெண்கவிதை மரபுத் தொடர்ச்சி தமிழில் உண்டு. நாட்டுப்புறங்களில் எண்ணிலடங்காத் தாலாட்டுப் பாடல்களைப் படைத்து மகிழும் பெண்கள் ஏட்டிலக்கியங்களில். சிறப்பாகச் சிறுவர் இலக்கியங்கள் படைப்பதில் அதிகப் பங்களிப்பைச் செய்யாதது வியப்பாகத்தான் உள்ளது. தமிழில் சிறுவர் இலக்கியம் படைக்கும் பெண்கள் மிக மிகக் குறைவு என்பதை நாம் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். மாநி தொடங்கி வைத்துள்ளார். இவரைத் தொடர்ந்து இன்னும் பல பெண் படைப்பாளிகள் சிறுவர் இலக்கியங்களின் பக்கம் தங்கள் படைப்புப் பார்வையைத் திருப்ப வேண்டுமென்பது நமது அவா!.

கவிஞர் மாநி அவர்களின் வண்ணத்துப் பூச்சி நூலைக் கவிதைத் தொகுப்பு என்று குறிப்பிடுவதை விட பாடல் தொகுப்பு என்று குறிப்பிடுவதுதான் பொருத்தமாய் இpருக்கும். ஏனெனில் வருக வருகவே! என்ற முதல் பாடல் தொடங்கி அறிவுரை கேளாய்! என்று முடியும் ஐம்பத்தொன்றாம் பாடல் வரையிலான அனைத்துமே இசையோடு பாடுவதற்கேற்ற வகையில் இயைபுத் தொடை அமைய பாடப்பட்டிருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு. சிறுவர் பாடல்களுக்கே உரிய மரபை ஒட்டி கவிஞர் மாநியும் சில அறிவுரைப் பாடல்கள், சில விலங்குப் பாடல்கள், தலைவர்கள் குறித்தப் பாடல்கள் சில என்ற மரபான தலைப்புகளிலேயே தம் நூலை அமைத்துச் செல்கிறார் என்றாலும் சில பாடல் தலைப்புகள் வண்ணத்துப் பூச்சியில் தனித்தன்மையோடு விளங்குகின்றன. குறிப்பாக வாழ்வுண்டு!, வாழ்வு காண்போம்!, வாழ்ந்திடுவாய்ப் பெண்ணே!, வாழ்க்கை முறை அறிந்திடு! முதலான தலைப்புகளைக் குறிப்பிடலாம். இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டுச் சிறுவர்கள் சென்ற நூற்றாண்டுச் சிறுவர்களைப் போலில்லை. அவர்கள் இன்றைய ஊடகச் சூழலில் மிகவும் மாற்றம் பெற்றுள்ளார்கள். எனவே அவர்களுக்கு வெறும் பொழுது போக்குப் பாடல்கள் மட்டும் போதா, வாழ்க்கை குறித்த சரியான புரிதலும் அவர்களுக்கு அவசியம் என்பதை உணர்ந்தே கவிஞர் மாநி அவர்கள் மேலே குறிப்பிட்ட வாழ்க்கை தொடர்பான பாடல்களை இணைத்திருப்பார் என்று எண்ணத் தோன்றுகிறது.

பகையை அறுக்கப் போரிடு
பாய்ந்து சென்று வென்றிடு
வகையாய் வாழ்வை வகுத்திடு
வாழும் வரையில் உயர்ந்திடு
(மாநி, அறிவுரை கேளாய்!)

மேலே இடம் பெற்றுள்ள பாடலைப்போல் அறிவுரைப் பாடல்கள் பலவற்றிலும் புதிய புதிய உள்ளடக்கங்களோடு கவிஞர் மாநி படைத்துள்ள பாடல்கள் பொதுநிலையில் பார்ப்பவர்களுக்கு இவை சிறுவர் பாடல்களின்; உள்ளடக்கங்கள் தாமா? என்ற ஐயத்தைத் தோற்றுவிக்கலாம். ஆனால் இன்றைய சிறுவர்கள் மற்றும் அவர்களின் கல்வி மற்றும் அறிவு வளர்ச்சி வாழ்க்கைச் சூழல் இவைகளோடு பொருத்திப் பார்த்தால் இவ்வகை உள்ளடக்கங்களின் பொருத்தப்பாடு புலப்படும்.

சமூகம் இரண்டு வகையான உழைப்பாளிகளைக் கொண்டுள்ளது. ஒன்று உடலுழைப்பு, மற்றொன்று மூளை உழைப்பு. இரண்டு வகையான உழைப்புகளுமே சமூகத்திற்கு இன்றியமையாதனவாகும். ஆனால் மக்கள் மூளை உழைப்புக்குத் தருகிற அங்கீகாரத்தையோ மதிப்பையோ உடல் உழைப்புக்கும் உடல் உழைப்பாளிகளுக்கும் தருவதில்லை. உடலுழைப்பு, வியர்வை, அழுக்கு இவைகள் குறித்துச் சமூகத்தின் நடுத்தட்டு மக்கள் ஒருவகை அசூயையே கொண்டுள்ளனர். தங்கள் பிள்ளைகளை வளர்க்கும்போதே உடலுழைப்புக்கு எதிரான மனநிலையிலேயே வளர்க்கின்றனர். வியர்வை வராத அழுக்கடைய வாய்ப்பில்லாத பணிகளையே தங்கள் பிள்ளைகள் பார்க்க வேண்டும், அதுவே சமூகத்தில் உயர்ந்த பணி என்று நினைக்கும் பெற்றோர் இதே மனநிலையைப் பிள்ளைகள் பெறும்படியாக மூளைச் சலவை செய்துவிடுகின்றனர். தங்கள் பிள்ளைகள் டாக்டராகவோ எஞ்சினியராகவோ வர வேண்டும் என்பதிலேயே அவர்கள் இலக்கு மையப்படுத்தப்படுகிறது. எனவேதான் தனியார் கல்வி நிறுவனங்கள், ஆங்கில வழிக் கல்வி, ரேங்க் போன்ற சில குறுகிய வட்டங்களுக்குள்ளேயே நடுத்தட்டு மக்களின் சிந்தனைகள் சுற்றிச் சுற்றி வருகின்றன. கவிஞர் மாநி இவ்வகை மாயைகளை எல்லாம் போட்டு நொறுக்குகின்றார்.

வாழ வேண்டும் புறப்படு!
வளர வேண்டும் புறப்படு!
வருவாய் கொள்ளப் புறப்படு!
வருந்தி உழைக்கப் புறப்படு!
வெற்றி கொண்டு புறப்படு!
வேர்வை சிந்தப் புறப்படு!
(மாநி, புறப்படு தம்பி)

விளையும் அறிவில் விருப்பங்கொள்!
வேர்வை சிந்த விருப்பங்கொள்!
(மாநி, விருப்பங்கொள்வாய்)

மூளை உழைப்புக்கு இணையாக, இல்லை ஒரு படி மேலாக உடலுழைப்பைப் போற்றுகின்றார் கவிஞர். உடலுழைப்பும் வியர்வையும் மாண்புடையனவாகக் கவிஞரால் சிறப்பிக்கப்படுகிறது. இன்றைய சிறுவர்கள் மனதில் இக்கருத்து விதைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தே கவிஞர் இப்படிப் பாடுகிறார்.

உழவு செய்யும் உழவன்!
ஊரைக் காக்கும் தலைவன் !
(மாநி, உழவனைப் போற்றிடு)

என்று உழைக்கும் வர்க்கத்தின் பிரதிநிதியாம் உழவனை ஊரைக் காக்கும் தலைவன் என வருணிக்கும் கவிஞரின் சமூகப் பார்வை உண்மையிலேயே பாராட்டுதலுக்குரியது.
வண்ணத்துப் பூச்சி என்ற இத்தொகுப்பில் நல்ல பாடல்கள் பல தொட்ட இடமெல்லாம் கண்ணில் தட்டுப்பட்டு மனநிறைவளிக்கின்றன. விருப்பங்கொள்வாய்!, வாழ்வு காண்போம்!, இயற்கை!, ப+க்கள் தெரிந்திடு!, படிப்பே உலகம்! முதலான பாடல்களை அந்த வகையில் கண்டிப்பாகக் குறிப்பிட வேண்டும். படிக்கப் படிக்க இன்பம் தரும் பாடல்கள் அவை.

ஆடும் கடலும் அருவி நீரும்
கூடும் நதியும் உயிரைக் காக்கும்!
பாடும் குயிலும் ஆடும் மயிலும்
ஆடும் மலரும் அழகைச் சேர்க்கும்

சிட்டாய்ப் பறக்கும் குருவியும் புறாவும்
பட்டான், தட்டான் யாவும் இங்கே
பட்டுப் போன்ற இனிமை யாகும்
விட்டு விலகாக் காட்சி என்போம்!

கொட்டும் மழையும் குட்டை குளமும்
வட்டப் பாதையின் வளைவும் நெளிவும்
உயர்ந்த மலையும் உறையும் பனியும்
வயல்வெளி பசுமையும் வளமை ஆகும்
(மாநி, இயற்கை)

கவிஞர் மாநி தீட்டியுள்ள இயற்கை அழகோவியம் இது.
எளிய இனிய தமிழ்ச் சொற்கள், சந்த நயம், மரபுத் தொடர்ச்சி, புதிய உள்ளடக்கங்கள், சமுதாயச் சிந்தனைகள் என்று எல்லா நிலைகளிலும் சிறந்து விளங்கும் வண்ணத்துப் ப+ச்சி என்ற இப்பாடல் தொகுப்பு நிச்சயம் பாராட்டத் தக்க ஒரு புதிய வரவு. கவிஞர் மாநி தொடர்ந்து பல நல்ல படைப்புளை உருவாக்கி தமிழுலகிற்கு அணி சேர்க்க வேண்டும்.

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்


என்பார் ஒளவையார். தொடர்ந்து பழகுவதால் எதுவும் சாத்தியமாகும், எளிமையாகும். கவிஞர் மாநி அவர்களும் தொடர்ந்து கவிதை எழுதிப் பழகப் பழக அவருக்கும் கவிதை சாத்தியமாகும் எளிமையாகும்.

வாழ்த்துக்களுடன்
நா.இளங்கோ
14-04-2009
அம்பேத்கர் பிறந்த நாள்

புதன், 31 டிசம்பர், 2008

துளிப்பாக்களில் (ஹைக்கூ) அழகியலும் சமுதாயமும் - அணிந்துரை

துளிப்பாக்களில் (ஹைக்கூ) அழகியலும் சமுதாயமும் -
கு. தேன்மொழி

அணிந்துரை


முனைவர் நா.இளங்கோ
இணைப்பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8.

கவிதை வாசகனிடம் வெளிப்படையாகப் பேசுகிற விஷயங்களை விடப் பேசாமல் விடுகிற விஷயங்கள் ஏராளம். கவிதை பேசாமல் விட்டனவற்றைக் கவிதைக்குள்ளே தேடி வாசிப்பதில்தான் வாசகனின் வெற்றியும் கவிதையின் வெற்றியும் அடங்கியுள்ளது. மரபுக் கவிதை, புதுக்கவிதைகளை விட ஹைக்கூக் களுக்கே இவ்விதி முற்று முழுதாகப் பொருந்தும். கடந்த பத்தாண்டுகளில் தமிழில் ஹைக்கூ தொகுதிகள் மிகுதியாக வெளிவரத் தொடங்கிவிட்டன.
‘அந்தாதி பார்த்து அந்தாதி கலம்பகம் பார்த்துக் கலம்பகம்’ என்பதைப்போல் ஹைக்கூ பார்த்து ஹைக்கூக்கள் பெருகிவிட்டன. இன்றைக்கு வேறு எந்தக் கவிதையும் எழுதத் தெரியாத பலர் ஹைக்கூ எழுதத் தொடங்கிவிட்டார்கள். மொத்தமாக நாலு பக்கம் எழுதினாலே போதும் ஒரு கவிதைப் புத்தகம் போட்டுவிடலாம், இந்த வசதி ஹைக்கூ எழுதுவதில்தான் இருக்கிறது. இதற்காகவே ஹைக்கூ எழுதுபவர்களும் இருக்கிறார்கள். நான் மேலே சொன்னதெல்லாம் விதிவிலக்குகள். உண்மையிலேயே ஹைக்கூ வடிவத்தையும் வெளிப்பாட்டு உத்திகளையும் முழுமையாக உள்வாங்கிக் கொண்டு இந்த உள்ளடக்கத்தை இந்த உருவத்தில் கொடுத்தால்தான் சிறப்பாக இருக்கும் எனத் தேர்ந்து ஹைக்கூ எழுதுகிற கவிஞர்கள் தமிழில் நிறையபேர் இருக்கிறார்கள். மரபுக் கவிதைகளுக்குப் பெயர்பெற்ற புதுச்சேரி ஹைக்கூ கவிதைகளிலும் தனிமுத்திரை பதித்து வருகிறது.

தமிழ் ஹைக்கூக்களின் வரலாற்றுத் தொடக்கம் 16-10-1916 நாளிட்ட சுதேசமித்திரன் இதழில் தொடங்குகிறது. இவ்விதழில்தான் மகாகவி பாரதியார் ஜப்பானியக் கவிதை என்னும் தலைப்பில் சில ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளை மொழிபெயர்த்தார். இந்த மொழிபெயர்ப்பு ஹைக்கூ கவிதைகள் புதுச்சேரியிலிருந்து எழுதப்பட்டவை. அன்று தொடங்கி புதுச்சேரிக்கும் ஹைக்கூவுக்குமான உறவகள் தொடர்கதை.

“துளிப்பாக்களில் (ஹைக்கூ) அழகியலும் சமுதாயமும்” என்ற தலைப்பில் கவிஞர் கு.தேன்மொழி அவர்களால் எழுதப்பட்டுள்ள இந்நூல் புதுச்சேரி ஹைக்கூக்களைப் பற்றிய முதல் ஆய்வு நூலாகும். இந்நூலாசிரியர் ஹைக்கூ என்பதனைத் துளிப்பா என்றே கையாளுகின்றார். ஜப்பானிய ஹைக்கூ, தமிழில் துளிப்பா ஆகிறது. “இருபதாம் நூற்றாண்டுப் புதுச்சேரித் துளிப்பாக்கள்” என்ற துளிப்பா நூல்களின் தொகுப்பே இந்த ஆய்வுக்கு அடிப்படை.

புதுச்சேரி ஹைக்கூ கவிஞர்கள் எ.மு.ராசன், புதுவை- தமிழ்நெஞ்சன், புதுவை- சீனு. தமிழ்மணி, செந்தமிழினியன், அரிமதி தென்னகன், இளவேனில், அரிமதி இளம்பரிதி, ஆலா ஆகிய எண்மரின் கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் விளக்கமுறையில் ஆய்வினை நடத்திச் செல்லும் கு.தேன்தொழி நூற்பொருளைப் பின்வரும் நான்கு இயல்களாகப் பகுத்து விளக்கியுள்ளார்.

1. தமிழ்த் துளிப்பாக்கள் தோற்றமும் வளர்ச்சியும்
2. இருபதாம் நூற்றாண்டுப் புதுச்சேரி துளிப்பாக்களில் வெளிப்படும் அழகியல்
3. இருபதாம் நூற்றாண்டுப் புதுச்சேரி துளிப்பாக்களில் பதிவுசெய்யப் பெற்றுள்ள அரசியல்
4. இருபதாம் நூற்றாண்டுப் புதுச்சேரி துளிப்பாக்களில் வெளிப்படும் சமுதாய சிந்தனைகள்

தமிழ்த் துளிப்பாக்கள் தோற்றமும் வளர்ச்சியும் என்ற முதல் இயல் ஜப்பானிய ஹைக்கூ கவிதை வரலாற்றை விளக்கிச் செல்வதோடு தமிழக, புதுவை ஹைக்கூ கவிதைகளுக்கான இலக்கிய வரலாற்றையும் பதிவு செய்கிறது. இரண்டு, மூன்று, நான்காம் இயல்கள் புதுச்சேரித் துளிப்பாக்களில் இடம்பெற்றுள்ள அழகியல், அரசியல், சமுதாயச் சிந்தனைகளைத் திரட்டி ஆய்வுசெய்கின்றன.

தமிழின் முதல் துளிப்பா தொகுப்பு அமுதபாரதியின் புள்ளிப்பூக்கள் 1984 ஆம் ஆண்டு வெளிவந்தது. இம்முதல் துளிப்பா தொகுதி வெளிவந்து இன்னும் இருபத்தைந்து ஆண்டுகள் கூட ஆகாதநிலையில் துளிப்பா குறித்த ஆய்வுகள் கடந்த பத்து ஆண்டுகளில் தொடர்ந்து வெளிவரத் தொடங்கிவிட்டன. இவற்றில் பெரும்பாலான ஆய்வுகள் பல்கலைக் கழக இளமுனைவர் மற்றும் முனைவர்பட்ட ஆய்வுகள் என்பது குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக ஆய்வுகளுக்கு வெளியே துளிப்பா குறித்து வெளிவந்துள்ள நூல்கள் பெரிதும் துளிப்பாவை அறிமுகம் செய்யும் வகையிலேயே அமைந்தன. சான்றாக, 1990 ஆம் முனைவர் தி.லீலாவதி எழுதிய ‘இதுதான் ஹைக்கூ’ என்ற நூலைக் குறிப்பிடலாம்.

கடந்த பத்து ஆண்டுகளாகத் தமிழகப் பல்கலைக்கழகங்கள் போட்டி போட்டுக்கொண்டு இளமுனைவர் பட்ட வகுப்புகளை அஞ்சல் வழியில் தொடங்கி காசு பார்க்கத் தொடங்கியதன் விளைவாகத் தமிழ் ஆய்வுலகத்திற்குச் சில தீமைகளும் சில நன்மைகளும் ஏற்பட்டன. தீமைகளில் முக்கியமானது, ஆய்வு என்ற பெயரில் நீர்த்துப் போன பல ஆய்வேடுகள் மலைபோல் குப்பைகளாகக் குவிந்தன. நன்மைகளில் முக்கியமானது பல்கலைக் கழகப் பேராசிரியர்களின் அங்கீகாரம் பெறாமல் தனித்து, தவிக்க விடப்பட்ட பல புதிய வகை இலக்கியங்கள் ஆய்வுப் பொருள்களாயின. ஹைக்கூ இலக்கிய வகை ஆய்வுகள் இவ்வகையில் ஆய்வுலகின் அங்கீகாரம் பெற்று வெற்றிநடை போடுகின்றன. கவிஞர் கு.தேன்மொழியின் இந்த ஆய்வுநூல் ஓர் இளமுனைவர் பட்ட ஆய்வேட்டின் நூல் வடிவம் என்பது சிறப்பாகக் குறிப்பிடத்தகுந்தது.

தமிழ் ஹைக்கூ இலக்கியங்களுக்கு தனித்த இலக்கிய வரலாறு இல்லாத குறையை இந்நூலின் முதல் இயல் தீர்த்து வைக்கின்றது. இவ்வியலில் நூலாசிரியர் ஜப்பானிய வாகா, சோகா, செடோகா, கட்டவ்டா, தான்கா, ரெங்கா, ஹொக்கு முதலான இலக்கிய வடிவங்களை அறிமுகம் செய்வதோடு அதன் தொடர்ச்சியாகத் தமிழில் எவ்வாறு ஹைக்கூ வடிவங்கள் கையாளப்பட்டன என்பதைச் சுருக்கமாக விளக்கிச் செல்கிறார். தமிழில் எழுதப்படும் ஹைக்கூ, சென்ரியு, ஹைபுன், லிமரிக்கூ வடிவங்களுக்கிடையேயான வேறுபாடுகளையும் குறிப்பிடுகின்றார். மேலும் தமிழ்த் துளிப்பாக்களின் வரலாறு, தமிழ்த் துளிப்பாக்களின் ஆராய்ச்சி வரலாறு இரண்டினையும் பட்டியலிட்டு வரும் ஆய்வாளர்களுக்கும் பயன்படும் விதத்தில் முதல் இயலை முழுமை செய்கின்றார். இந்நூலில் மிகுந்த பயனளிக்கும் பகுதியாக இம்முதல் இயலை அமைத்த நு}லாசிரியர் மிகுந்த பாராட்டுக்குரியவர்.

இரண்டு, மூன்று, நான்காம் இயல்களைப் பற்றி விரிவாகக் குறிப்பிட வேண்டும். துளிப்பாக்கள் குறித்து நான் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் எழுதிய பகுதியை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

“காதலியின் பேச்சு போல் ஹைக்கூ. நம்மிடம் பேசும். காதலி பேசுகிற ஒன்றிரண்டு வார்த்தைகளே ஒருவனுக்குக் காவியமாய் விரிவடையும். சொல்லிய வார்த்தைகளிலிருந்து சொல்லாதவற்றை எல்லாம் கற்பனை செய்துகொள்ளும் பித்துற்ற காதலனைப் போல் நம்மை கணப்பொழுதில் மாற்றிவிடும் ஆற்றல் நல்ல ஹைக்கூ.வுக்கு உண்டு.”

இந்நூலாசிரியர் கு.தேன்மொழி புதுச்சேரி கவிஞர்கள் துளிப்பாக்களில் சொல்லிய, சொல்ல நினைத்த, சொல்லாமல் விட்ட பல உள்ளடக்கங்களை ஆய்வு என்ற நிலையில் விளக்கிக் காட்ட முற்படுகின்றார். துளிப்பா கவிதை வாசிப்பு அனுபவத்திற்கும் ஆய்வுக்கும் மிகப்பெரிய இடைவெளி இருப்பதை இப்பகுதிகளில் நான் உணர்கிறேன். இது குறித்து அதிகம் எழுதுவது ஆய்வுரையாக விரிந்துசென்று நூலை வாசிக்கத் தடையாய் இருந்துவிடக் கூடும். எனவே வாசகர்களுக்கு இடம் விட்டுவிடுவதுதான் அணிந்துரையாளனின் பணி.

நூலின் மொழிநடையைச் சிறப்பாகக் குறிப்பிடவேண்டும். பொதுவாக ஆய்வு நூல்கள் என்றாலே செயற்கையான கடுநடையில் அமைந்திருப்பதைத்தான் அதிகம் பார்த்திருக்கின்றோம். விதிவிலக்காக இந்நூல் எளிய இனிய மொழிநடையில் அமைந்திருக்கின்றது. ஆய்வாளர்கள் மட்டுமின்றி கவிதை ஆர்வலர்களும் மாணவர்களும் கூட மயக்கமின்றி இந்நூலைப் படித்துச் சுவைக்கத்தக்க விதத்தில் இந்நூல் எழுதப்பட்டிருக்கின்றது.

இந்நூலின் பின்னிணைப்புகள் குறித்துத் தனியாகக் குறிப்பிடவேண்டும். முதல் இணைப்பு துளிப்பா கவிஞரும், தமிழின் முதல் துளிப்பா இதழ் கரந்தடியின் ஆசிரியருமான புதுவை சீனு. தமிழ்மணி அவர்களின் மிகப்பயனுள்ள நேர்காணல். இரண்டாம் இணைப்பு, ஆய்வுக்குப் பயன்பட்ட துளிப்பா கவிஞர்கள் எண்மரின் தேர்ந்தெடுத்த சுமார் 300 துளிப்பாக்கள். ஆய்வுநூலை வாசிப்பவர்களுக்கு மட்டுமின்றி பொதுவாகக் கவிதைகளை விரும்பி வாசிக்கும் ஆர்வலர்களுக்கும் பயன்படும் விதத்தில் தேர்ந்தெடுத்த 300 துளிப்பாக்கள் இடம்பெற்றுள்ளமை இந்நு}லுக்கு மேலும் அழகு சேர்க்கின்றது.

தமிழ் துளிப்பா நூல்கள் பெருகிக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில் துளிப்பா குறித்த சரியான புரிதல்களோடும் வரலாற்றுணர்வோடும் ஆய்வு நோக்கிலும் எழுதப் பட்டிருக்கும் இந்நூல் உரிய காலத்தில் வெளிவருகின்றது. தமிழுலகம் இதனை ஏற்றுப் போற்றும் என்பதில் ஐயமில்லை. நூலாசிரியர் கு.தேன்மொழி தொடர்ந்து பல நல்ல ஆய்வு நூல்களை எழுதி தமிழாய்வை மேம்படுத்த முயலவேண்டும்

முனைவர் நா. இளங்கோ
புதுவை
17-12-2008

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2008

கல்! நில்! வெல்!- புத்தக மதிப்புரை

கல்! நில்! வெல்!

உவப்புரை

முனைவர் நா.இளங்கோ
இணைப்பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8.

பாவலர் கு.அ.தமிழ்மொழி புதுவையின் இளைய பாவலர். கடந்த ஐந்தாண்டுகளாக எழுதி வருபவர். அதாவது அவரின் பத்து வயதில் எழுதத் தொடங்கியவர். பதினைந்தாம் அகவையைத் தொடும் பாவலர் தமிழ்மொழியின் படைப்புகள் வெளிவந்துள்ள இதழ்கள் இருபத்தைந்துக்கும் மேல். இவரின் கவிதைகள் இடம்பெற்றுள்ள கவிதைத் தொகுப்புகள் இருபதுக்கும் மேல். பெற்றுள்ள விருதுகள் பத்துக்கும் மேல். இத்துணைச் சிறப்புகளுக்கும் உரிய பாவலர் கு.அ. தமிழ்மொழியின் முதல் கவிதைத் தொகுதி ‘சிறகின் கீழ் வானத்தை’ அடுத்து அவர் வெளியிடவிருக்கும் இரண்டாவது கவிதைத் தொகுதிதான் இந்த, “கல்! நில்! வெல்!”.
ஒரு பாவலர் தம் சிறார் பருவத்திலேயே இத்தகு ஆளுமைகளைப் பெற்றிருப்பது உண்மையிலேயே வியந்து பாராட்டுதற்குரியது. சக சிறார்களோடு ஒப்பிடுகையில் பாவலர் தமிழ்மொழி தனித்தன்மை வாய்ந்தவர். சுயமரியாதைக்காரர், தமிழ்த் தேசியப் போராளி, சுற்றுச்சூழல் ஆர்வலர் முதலான பன்முகப் பரிமாணங்களும் பாவலர் தமிழ்மொழிக்கு உண்டு. தமிழ்மொழி நல்ல ஓவியரும் கூட. புதுவைக்குப் பெருமை சேர்க்கும் இவர் 2006 ஆம் ஆண்டிற்கான நடுவண் அரசின் தேசியக் குழந்தைகள் விருதினைப் பெற்றிருப்பதில் வியப்பு ஒன்றும் இல்லை.

பாவலர் தமிழ்மொழியின் முதல் தொகுதி சிறகின் கீழ் வானம் (2005) வெளிவந்தபோதே தமிழ் அறிஞர்கள் பலரின் பாராட்டுதல்களைப் பெற்றதோடு கவிஞாயிறு தாராபாரதி ஐக்கூ விருது (2005), திருமதி சுந்தராம்பாள் இலக்கிய விருது (2004-05) ஆகிய இரண்டு விருதுகளையும் பெற்றுச் சாதனை புரிந்தது. 2008 இல் பாவலர் தமிழ்மொழி வெளியிட்டிருக்கும் கல்! நில்! வெல்! என்ற இந்த நூலும் பல்வேறு பாராட்டுகளையும் பரிசுகளையும் பெறுவது திண்ணம்.
II
கல்! நில்! வெல்! என்ற இந்த நூலில் இடம் பெற்றுள்ள கவிதைகள் அனைத்தும் சிந்தடி நான்காய் அமைந்த வஞ்சித் விருத்தம் (சிந்தடி நான்காய் வருவன வஞ்சி / யெஞ்சா விருத்தம் என்மனார் புலவர் -யாப்பருங்கலம்) யாப்பை ஒத்து அமைந்துள்ளமையும் அடிதோறும் இயைபுத் தொடை அமைய பாடப்பட்டிருப்பதும் ஒரு புதுமை எனலாம். இதோ ஒரு சான்று,

கசடற எதையும் கல்
கற்ற வழியில் நில்
அறிவுப் பாதையில் செல்
எதையும் அறிவால் வெல்.


சிறார் பாடல்கள் என்ற இலக்கிய வகையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். சிறார்களுக்காகப் பாடப்படும் பாடல்கள் அவை. பாவலர் தமிழ்மொழியின் சிறார் பாடல்கள் ஒரு புத்திலக்கியம். ஏனென்றால் பாடல்களை எழுதியவரும் சிறாரே. பாடலுக்கான வாசகர்களும் சிறார்களே.
நாட்டுப்புறப் பாடல் வகைகளில் சிறார் பாடல்கள் என்று ஒருவகை உண்டு. நாட்டுப்புறச் சிறுவர்கள் தம் ஆயத்தோடு விளையாடும் காலங்களில் இவ்வகைப் பாடல்களைப் பாடுவர். நாட்டுப்புறச் சிறுவர் பாடல்களில் விளையாட்டுப் பாடல்கள், நகைச்சுவைப் பாடல்கள், கேலிப் பாடல்கள், சொற்பயிற்சிப் பாடல்கள், எழுத்துப் பயிற்சிப் பாடல்கள் முதலான பல்வகைப் பாடல்களும் இடம்பெறும்.

உனக்கும் எனக்கும் போட்டி
கதை சொல்லடி பாட்டி
தமுக்கு அடிப்பவன் தோட்டி
கையிலே பிடிப்பது ஈட்டி
(நாட்டுப்புறச் சிறுவர் பாடல்)

அதோ பாரு காக்கா
கடையில விக்குது சீக்கா
பொண்ணு போறா சோக்கா
எழுந்து போடா மூக்கா
(நாட்டுப்புறச் சிறுவர் பாடல்)

மேலே சான்று காட்டப்பட்டுள்ள நாட்டுப்புறச் சிறுவர் பாடல் மரபை அடியொற்றி இயைபுத் தொடையமைந்த முச்சீரடிகள் நான்கு கொண்ட பாடல் வடிவத்தைப் பாவலர் தமிழ்மொழி கையாண்டிருப்பது தமிழ்க்கவிதை உலகில் ஒரு புதுமையான பாராட்டத்தக்க முயற்சியே.

பாவலர் தமிழ்மொழி தமிழ்வழிக் கல்வி கற்று வருபவர். அதனால் தாய்மொழியிலேயே சிந்திக்கவும் எழுதவுமான வாய்ப்பு அவருக்கு முழுமையாகக் கிடைத்துள்ளது. தாய்மொழி வழியாக அல்லாமல் ஆதிக்க மொழியில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இத்தகு வாய்ப்புகள் அமைவதில்லை. உயர்நிலைக் கல்வியைக்கூட இன்னும் முடிக்காத அவருக்கு இருக்கும் தமிழ்மொழியின் சொல்வளம் வியக்கத்தக்கதாய் உள்ளது. தமிழில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் கூட இத்தகு சொல்வளம் பெற்றிருப்பார்களா? என்பது அய்யமே. தமிழ்மொழியில் இடம்பெறும் சொற்களில் சற்றேறக்குறைய ஒன்றுபோல் ஒலிக்கக்கூடிய ண – ன, ல – ள, ர – ற வேறுபாடுடைய சொற்களைத் தேர்ந்தெடுத்து அதன் பொருள் விளக்கமுறுமாறு இயைபுத் தொடையமைய எளிய இனிய நடையில் கவிதை யாத்துள்ள பாவலர் தமிழ்மொழியின் முயற்சி பலபடப் பாராட்டத்தக்கது. நூலின் இறுதியில் கவிதைகளில் பயின்றுவந்துள்ள சொற்களின் ‘சொற்பொருள் அகரவரிசை’யை இணைத்துள்ளமை மிகுந்த பயனளிக்கக்கூடியது.

ஒருவகைப் புல்லே தினை
ஒழுக்கம் இடம்பொருள் திணை

கரும்பின் கட்டி வெல்லம்
நீரின் பெருக்கு வெள்ளம்

கடலின் பெயரோ பரவை
பறக்கும் உயிர்கள் பறவை


தமிழில் பிழையின்றி எழுத விரும்பும் மாணவர்கள் கட்டாயம் இந்தக் கவிதை நு}லை வாசித்துப் பயிற்சி செய்துகொள்வது நல்லது.

கடலில் தோன்றும் அலை
சிலந்தி பின்னும் வலை
ஓவியம் என்பது கலை
சிற்பி வடிப்பது சிலை


கவிதை விளையாட்டு போல் இயைபுத் தொடை அமைய நல்ல ஓசை நயத்தோடு படைக்கப்பட்டிருக்கும் பாவலர் தமிழ்மொழி இவ்வகைக் கவிதைகள் மொழித்திறன் வளர்க்கும் கருவியாக அமைந்திருப்பது “கல்! நில்! வெல்!” என்ற இத்தொகுதிக்குக் கூடுதல் பயனையும் மதிப்பையும் அளிக்கின்றன.

எதையும் செய்வாய் ஆய்வு
உடலுக்குத் தேவை ஓய்வு
பைசா கோபுரம் சாய்வு
வேலையில் வேண்டும் தோய்வு


“எதையும் செய்வாய் ஆய்வு” என்றும் “வேலையில் வேண்டும் தோய்வு” என்றும் சிறார்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் பயன்படும் நல்ல பல செய்திகளையும் தம் கவிதைத் தொகுதி வழி வழங்கியிருக்கும் பாவலர் கு.அ.தமிழ்மொழி மேலும் பல நல்ல படைப்பாக்கங்களைத் தமிழுக்குத் தந்து சிறப்புற வேண்டும். அதற்கான அடையாளங்கள் அவர் படைப்பில் மிளிர்கின்றன.
வாழ்க! வளர்க!!
15-8-2008 நா.இளங்கோ

சனி, 5 ஜூலை, 2008

சமகாலத் தமிழிலக்கியப் படைப்புகளில்

சமகாலத் தமிழிலக்கியப் படைப்புகளில்
புதுச்சேரியின் பங்களிப்பு

முனைவர் நா.இளங்கோ
இணைப்பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8.

இருபதாம் நு}ற்றாண்டுத் தமிழ்க் கவிதைகளில் புதுச்சேரியின் பங்களிப்பு

சங்க இலக்கியங்களைத் தவிர்த்து, கடந்த 19ஆம் நூற்றாண்டுவரை தமிழ்க் கவிதைகளின் நோக்கம் பெரிதும் தனிமனிதத் தேவைகளை ஒட்டியதாகவே அமைந்திருந்தது. இவ்வுலகில் வாழும் வகைநாடி அரசர்களையோ வள்ளல்களையோ புரவலர்களைகளையோ பாடிப் புகழ்ந்து பொருள் நாடினர் புலவர் பலர். சிலரோ மேலுலகப் பேறு வேண்டிக் கடவுள்களைப் பராவுவதில் காலம் கழித்தனர். இன்னும் சிலரோ தாசியின் மஞ்சத்தில் தமிழ்க்கவிதைகளை அமரவைத்து வேடிக்கை பார்த்தனர். 'கூளப்ப நாயக்கன் காதல்" போன்ற காதல் இலக்கியங்கள் இதற்குச் சான்று. பொதுவில் கவிதை சமூக மேம்பாட்டிற்கானதாய் இல்லாமல் தனிமனித மேம்பாட்டிற்கானதாகவே இருந்தது. சிற்றிலக்கியங்கள் இதன் உச்சகட்டம்.

ஐரோப்பியர்/ ஆங்கிலக் கல்வி வருகைக்கு முன்னர்வரை தமிழில் உரைநடைகளுக்குரிய பணிகளையும் கவிதை என்ற பெயரால் அழைக்கப்படும் செய்யுள்களே செய்துவந்தன. கடிதங்கள், சோதிட நு}ல்கள், மருத்துவ நு}ல்கள், கணிதக் குறிப்புகள் அனைத்தும் செய்யுள் வடிவிலேயே அமைந்தன. ஆங்கிலக் கல்விதான் உரைநடை, கவிதை இவைகளுக்கு இடையேயான பணிகளைப் பிரித்தது. இருபதாம் நு}ற்றாண்டில்தான் தமிழில், கவிதைகள் கவிதைகளுக்கான வேலையையும் உரைநடை உரைநடைகளுக்கான வேலையையும் செய்யத் தொடங்கின.

20ஆம் நூற்றாண்டுக் கவிதையுகம் பாரதியிலிருந்து தொடங்குகிறது. மரபின் அனைத்து வளங்களையும் தனதாக்கிக்கொண்டு அதுவரை தமிழ்க் கவிதை தொடாத சிகரங்களை நோக்கிப் பாரதியின் கவிதை பயணித்தது. பாரதி கவிதைகளுக்கான ஊற்றுக் கண்களாக 19 ஆம் நூற்றாண்டின் வள்ளலார், மாயூரம் வேதநாயகர், கோபாலகிருஷ்ண பாரதியார், பேராசிரியர் சுந்தரம் பிள்ளை முதலானவர்களின் கவிதைகள் திகழ்ந்தன. 1905ஆம் ஆண்டு வங்கப் பிரிவினையை ஒட்டி இந்தியாவெங்கும் ஏற்பட்ட அரசியல் விழிப்புணர்வோடு பாரதியின் கவிதையுகம் தொடங்குகின்றது. 1908 இல் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி காரணமாகப் புதுவைக்குப் புலம் பெயர்ந்த பாரதி, 1908 முதல் 1918 வரை புதுவையில் வாழ்ந்த காலத்தில்தான் மகாகவியாய் ஏற்றம் பெற்றான். பாரதியின் புதுவை வாழ்க்கை தத்துவ ரீதியாகப் பல புதிய கதவுகளை அவனுள் திறந்து வைத்தது. தன்னுடைய அறிவினுக்குப் புலப்படல் இன்றித் தேய மீது எவரோ சொல்லும் சொல்லினைச் செம்மையென்று மனத்திடைக் கொள்ளும் தீய பக்தி இல்லாத பாரதி, தம் படைப்புக்களின் மையப்பொருளாக மானுடத்தை வைத்தான். மானுட மேன்மைக்குத் தன் கவிதைகளைப் பயன்படுத்தினான். குறிப்பிட்ட ஜாதி, மதம், மொழி, இனம் என்றில்லாமல் மனிதகுலம் முழுமைக்குமாகத் தேடினான். இந்தத் தேடல்தான் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதைகளின் மூலவேர்.

ஆக 20ஆம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை புதுவையில் இருந்துதான் தொடங்கியது. பாரதிக்குப் பிறகுதான் தமிழகக் கவிஞர்கள் பாரதி காட்டிய புதுநெறியில் தளர்நடை போடத் தொடங்கினார்கள். பாரதி காட்டிய புதுநெறியில், தேசீயம், தமிழுணர்வு, சமுதாயச் சீர்திருத்தச் சிந்தனைகள், சமத்துவம் முதலான புதிய பாடுபொருள்கள் தமிழ்க் கவிதைகளுக்குக் கிடைத்தன.
தமிழ்க் கவிதைகளைப் பொருத்தமட்டில் இருபதாம் நு}ற்றாண்டு என்ற காலப்பரப்பைத் தோராயமாக நான்கு கால் கால் நு}ற்றாண்டுகளாகப் பகுத்துக்கொள்ளலாம்.

முதல் கால் நூற்றாண்டு 1925 வரை பாரதி காலம்,
இரண்டாம் கால் நூற்றாண்டு 1950 வரை பாரதிதாசன் காலம்,
மூன்றாம் கால் நூற்றாண்டு 1975 வரை பாரதிதாசன் பரம்பரையினர் காலம்,
நான்காம் கால் நூற்றாண்டு 2000 நவீன கவிதைகளுக்கான காலம்.
பாரதி தமிழ்க் கவிதையுலகிற்குத் தந்த தேசீயம், தமிழுணர்வு, சமுதாயச் சீர்திருத்தச் சிந்தனைகள், சமத்துவம் ஆகிய புதிய பாடுபொருள்களே இருபதாம் நூற்றாண்டு முழுமைக்கும் தமிழ்க்கவிதைகளுக்கான பாடுபொருள்களாக இருந்தன.

பாடலில் பழமுறை பழநடை என்பதோர்
காடு முழுவதும் கண்டபின்
கடைசியாய்
சுப்பிரமணிய பாரதி தோன்றியென்
பாட்டுக்குப் புதுமுறை புதுநடை
காட்டினார்

என்று பாரதிதாசனே குறிப்பிட்டவாறு, பாரதியிடமிருந்து தம் கவிதைப் பயணத்தைத் தொடங்கிய பாரதிதாசன் தொடக்கத்தில் பாரதி கவிதைகளின் நகல்களாகவே தம் கவிதைகளை அமைத்துக் கொண்டார். 1928 ஆம் ஆண்டு முதல் தந்தைப் பெரியாரிடமும் அவரின் சுயமரியாதை இயக்கத்துடனும் தம்மைத் தீவிரமாகப் பிணைத்துக்கொண்டு தன்னை, முழு நாத்திகன் என்று அறிவித்துக்கொண்டது முதல் பாரதிதாசனின் கவிதைகள் புதிய தளத்தில் வீறுநடை போடத் தொடங்கின. பாரதியின் தேசியத்துக்கு மாற்றாக தீவிரத் தமிழ்த் தேசியம், பாரதியின் ஆன்மீகத்துக்கு மாற்றாக கடவுள் மறுப்பு, சமய எதிர்ப்பு, ஆரிய எதிர்ப்பு எனப் புதிய புதிய பாடுபொருள்களுடன் தமிழ்க்கவிதை உலகம் தம்மிலிருந்து தொடங்கும்படியாகத் தம் கவிதை ஆளுமையால் புதுப்பாதை சமைத்தார். இந்தப் புதிய பாதையும் புதுவையிலிருந்துதான் போடப்பட்டது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதையில் பாரதியும் பாரதிதாசனும் சாதித்தவற்றுக்கு இணையாகக் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர்கள் ஒருவரும் இல்லை. இந்நு}ற்றாண்டின் தமிழ்க் கவிஞர்களைப் பாரதி பரம்பரை (வெ.இராமலிங்கம் பிள்ளை, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, ச.து.சு. யோகியார், திருலோக சீத்தாராம், அ.சீனுவாச ராகவன், கா.மு.ஷெரீப், கொத்தமங்கலம் சுப்பு, பெ.தூரன், எஸ்.டி. சுந்தரம்), பாரதிதாசன் பரம்பரை (வாணிதாசன், புதுவைச் சிவம், முடியரசன், கண்ணதாசன், புலவர் குழந்தை, பெருஞ்சித்திரனார், பொன்னடியான், சுரதா, முருகு சுந்தரம், தமிழன்பன், நா.காமராசன்) என்ற இருபிரிவுகளுக்குள்ளேயே அடக்கிவிட முடியும். கவிஞர் தமிழ்ஒளி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், ப.ஜீவானந்தம், திருமூர்த்தி, கம்பதாசன் முதலான கவிஞர்கள் பாரதிதாசன் பரம்பரையில் தனிப்பாதை சமைத்துக் கொண்ட பொதுவுடைமைக் கவிஞர்களாவர்.
பாரதியின் தேசியக் கவிதைப் பரம்பரை, பாரதிதாசனின் தமிழ்த் தேசியக் கவிதைப் பரம்பரை, தமிழ்ஒளியின் பொதுவுடைமைக் கவிதைப் பரம்பரை என்ற தமிழ்க் கவிதையின் மூன்று முக்கிய கவிதைப் பரம்பரைகளும் புதுவையில் இருந்துதான் தொடங்கின, வளர்ந்தன, செழித்தன.

1975க்குப் பிறகு தமிழகத்தில் மரபுக் கவிதைகளுக்கு மரியாதை இல்லை. வீச்சும் குறைந்துவிட்டது. திராவிட இயக்கம் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தபிறகு அதுவரை மரபுக் கவிதைகளின் உள்ளடக்கமாயிருந்த தமிழ்த் தேசீயம் குறித்த பாடுபொருள்கள் நமத்துப் போய்விட்டன. புதிய முற்போக்குச் சிந்தனைகளுக்கு மரபுக் கவிதைகளின் வடிவம் பொருந்திவராது என்று கவிஞர்கள் நினைக்கத் தொடங்கியதன் விளைவு சிறந்த மரபிலக்கியக் கவிஞர்கள் புதுக்கவிதைகளைக் கையில் எடுக்கத் தொடங்கினார்கள். வானம்பாடி இயக்கம் இப்படி உருவானதுதான். இவர்களில் பலரும் பாரதி, பாரதிதாசன் கவிதை மரபுகளை உள்ளடக்கத்தில் உள்வாங்கிக் கொண்டு கூடுதலாக மார்க்சீய வெளிச்சத்தில் புதுக்கவிதை படைக்க வந்தவர்கள். புவியரசு, சிற்பி, நா.காமராசன், மீரா, தமிழன்பன், அப்துல் ரகுமான், மு.மேத்தா முதலான கவிஞர்களை இந்த வரிசையில் நாம் அடையாளம் காணமுடியும்.

புதுச்சேரியைப் பொருத்தமட்டில் பாரதிதாசன் பரம்பரைதான் இருபதாம் நூற்றாண்டின் இறுதிவரையிலும் தொடர்ந்தது. ஏன் இன்றும் கூடத் தொடர்கிறது. பாரதிதாசனின் தமிழ்த் தேசியம், பகுத்தறிவு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, சீர்திருத்தம், சமத்துவ நாட்டம் முதலான உள்ளடக்கங்களோடு தமிழ்ஒளியின் ஒடுக்கப்பட்டவர்கள் குரலாகக் கவிதையைப் படைக்கும் மார்க்சீயக் கவிதைப்பாணியும் கலந்து தமிழ்க் கவிதைகளைப் படைக்கும் போக்கு புதுச்சேரிக் கவிதைகளின் ஃகவிஞர்களின் தனித்தன்மை என்று கூறலாம். இவ்வகைக் கவிதைகள் சிறந்த மரபுக் கவிதைகளாகத் தொடர்வது புதுச்சேரியின் தனிச்சிறப்பு.

இவ்வகையில் குறிப்பிடத்தக்க புதுவையின் மரபுக் கவிஞர்கள் என்று அரிமதி தென்னகன், ஆதிகேசவன், இலக்கியன், உசேன், கல்லாடன், சங்கரய்யா, செவ்வேள், ம.இலெ. தங்கப்பா, திருமுருகன், வெ.நாரா முதலானவர்களைக் குறிப்பிடலாம். (பட்டியல் முழுமையானதன்று).
புதுக்கவிதைகளைப் பொருத்தமட்டில் தொடக்கத்தில் புதுச்சேரியில் அதிக வரவேற்பில்லை. பாவேந்தர் வழி வந்த மரபுக் கவிதை வடிவங்களின் செல்வாக்கே இதற்குக் காரணம். ஆனாலும் இருபதாம் நு}ற்றாண்டின் எண்பதுகளில் புதுக்கவிதை வடிவங்கள் மெல்ல மெல்லப் புதுவையில் செல்வாக்கு பெறத் தொடங்கின. புதுவையின் புதுக்கவிதை முன்னோடிகளாகப் பிரபஞ்ச கவி, வில்லியனு}ர் பழனி, பஞ்சு, தேவமைந்தன், மலையருவி, புதுவை அமலன், எ.மு. ராஜன் முதலானவர்களைக் குறிப்பிடலாம். ஹைக்கூக்களின் வருகைக்குப் பின்னர் புதுவைப் புதுக்கவிஞர்கள் பெருகினர். இருபதாம் நூற்றாண்டுப் புதுவைப் புதுக்கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் என்று புதுவை இளவேனில், சீனு. தமிழ்மணி, தமிழ்நெஞ்சன், அரிமதி தென்னகன், செந்தமிழினியன், பாரதிவாணர் சிவா முதலானவர்களைக் குறிப்பிடலாம் (பட்டியல் முழுமையானதன்று). புதுச்சேரியின் நவீனக் கவிதை இயக்கம் பிரேம் - ரமேஷ் கவிதைகளில் தொடங்குகிறது. இவர்களின் கவிதைப்பாணி தமிழில் புதுமையானது. தருமு. சிவராமின் பாணியில் தொடங்கும் இவர்களின் தமிழ்க்கவிதை புதிய தடத்தில் பயணித்து முன்னோடிக் கவிதைகளாகத் திகழ்கின்றன.

இருபத்தொன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புதுவைக் கவிதைகளின்/ கவிஞர்களின் வளர்ச்சி அபரிமிதமாயிருக்கிறது, வீக்கமோ என்று சந்தேகப்படும் அளவிற்கு!. நண்பர்கள் தோட்டம், கவிதை வானில், புதுவை எழுத்தாளர் கழகம் போன்ற இலக்கிய அமைப்புகள் நடத்திய, நடத்தும் திங்கள் பாட்டரங்கங்களே புதுவையில் கவிஞர்கள் பெருக்கத்திற்குக் காரணம். கவிதை ஜனநாயகப் படுத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியதே. கடந்த நூற்றாண்டில் தமிழ்க் கவிதைகளுக்கான புதிய பாதைகள் சமைத்த பெருமைக்குரிய புதுச்சேரி மண் இந்த நூற்றாண்டிலும் சாதிக்க வேண்டும். அதுவே நம் விருப்பம்.
கவிதைகள் மானுட மேன்மைக்கே!

புதன், 5 டிசம்பர், 2007

ஹைக்கூ... கடவுளின் கடைசிக் கவிதை -நூல் மதிப்புரை



கடவுளின் கடைசிக் கவிதை (மணிகண்டன்)

நூல் மதிப்புரை



முனைவர் நா.இளங்கோ
இணைப்பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்,
புதுச்சேரி-8.

ஹைக்கூ ஒரு விந்தையான கவிதை வடிவம். உருவத்தில் சிறிய கவிதை வடிவங்கள் தமிழின் மரபிலும் உண்டு. குறள் வெண்பா, மூன்றடி அகவல், வஞ்சி விருத்தம் என்றெல்லாம். ஆனால் அந்தக் கவிதை வடிவங்களில் இருந்தெல்லாம் மாறுபட்டது. ஹைக்கூ. ஜப்பான்தான் ஹைக்கூவின் தாயகம். பிறந்தகத்திலிருந்து புகுந்தகம் வந்தபிறகு ஹைக்கூ.விடம் எத்தனையோ மாற்றங்கள். ஜப்பான் ஹைக்கூ.க்குக் கன்னிப் பெண்ணின் அழகு. தமிழ் ஹைக்கூ.வுக்கு தாய்மையின் அழகு. துளிப்பா, குறும்பா, சிந்தர், ஹொக்கு என்றெல்லாம் தமிழில் ஹைக்கூ.வுக்கு எத்தனை செல்லப்பெயர்கள். மூன்றடிக் கவிதை ஹைக்கூ.. வாமனனை ஞாபகப்படுத்தும் வடிவம். கவிதை அளவில் சிறியதென்றாலும் அது எடுக்கும், விஸ்வரூபம்.

கவிதை வாசகனிடம் வெளிப்படையாகப் பேசுகிற விஷயங்களை விடப் பேசாமல் விடுகிற விஷயங்கள் ஏராளம். கவிதை பேசாமல் விட்டனவற்றைக் கவிதைக்குள்ளே தேடி வாசிப்பதில்தான் வாசகனின் வெற்றியும் கவிதையின் வெற்றியும் அடங்கியுள்ளது. தமிழின் மரபுக் கவிதைகளுக்கும் புதுக் கவிதைகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளைப் போலவே, புதுக் கவிதைகளுக்கும் ஹைக்கூ. கவிதைகளுக்கும் இடையே வேறுபாடுகள் உண்டு. புதுக் கவிதையை மூன்றடியில் எழுதிவிட்டால் அது ஹைக்கூ. ஆகிவிடாது.

காதலியின் பேச்சு போல் ஹைக்கூ. நம்மிடம் பேசும். காதலி பேசுகிற ஒன்றிரண்டு வார்த்தைகளே ஒருவனுக்குக் காவியமாய் விரிவடையும். சொல்லிய வார்த்தைகளிலிருந்து சொல்லாதவற்றை எல்லாம் கற்பனை செய்துகொள்ளும் பித்துற்ற காதலனைப் போல் நம்மை கணப்பொழுதில் மாற்றிவிடும் ஆற்றல் நல்ல ஹைக்கூ.வுக்கு உண்டு. நல்ல ஹைக்கூ.! அதில்தான் கவிஞனின் செய்நேர்த்தியே இருக்கிறது.

தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் எல்லோருமே கவிஞர்கள்தாம். பலர் இன்னும் எழுதவில்லை என்பதால் அவர்கள் கவிஞர்கள் இல்லை என்று சொல்லமுடியாது. இன்னும் எரியவில்லை என்பதால் விறகுக்குள் நெருப்பில்லை என்று சொல்லமுடியுமா?. எழுதும் கவிதைக்கு உயிர் வேண்டுமே! உயிருள்ள கவிதைகள் தாமே வாழும். உயிருள்ள கவிதையை யார் எழுதமுடியும்? எப்படி எழுத முடியும்?
நன்னூல் ஆசிரியன் பவணந்தி விடை சொல்கிறான்,

பல்வகைத் தாதுவின் உயிர்க்குஉடல் போல்பல
சொல்லால் பொருட்கு இடனாக உணர்வினின்
வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள்.
கவிதையில் உள்ள சொற்கள் உடல் என்றால், கவிதையின் பொருள்தான் உயிர். வெறும் சொற்கள் கவிதையாகாது! அது வெறும் பிணம். கருத்து மட்டுமே கவிதையாகுமா? அதுவும் ஆகாது. உணர்வினின் வல்லோர் சொல்லும் கருத்தே கவிதையாகும். அதையே அணிகளால் அழகூட்டினால் கவிதை சிறக்கும் இதுவே நன்னூலார் கருத்து. பவணந்தியார் சொல்லும் இலக்கணம் எல்லா கவிதைகளுக்கும் பொதுவானது. ஹைக்கூ.வுக்குச் சிறப்பானது.

சென்ற நூற்றாண்டின் 80 களுக்குப் பிறகுதான் தமிழில் தமிழில் ஹைக்கூ தொகுதிகள் வெளிவரத் தொடங்கின. தமிழில் ஹைக்கூவுக்கு 25 ஆண்டுக் கால வரலாறுதான். ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழில் வெளிவந்த ஹைக்கூ நூல்கள் நூற்றுக்கணக்கில் இருக்கும். பெருகும் ஹைக்கூ நூல்களின் / ஹைக்கூ கவிதைகளின் வளர்ச்சி ஒரு வகையில் அச்சத்தை உண்டாக்குகிறது. என்றாலும் அச்சப்பட நாம் யார்? நமக்கென்ன தகுதி? அதைக் காலம் பார்த்துக் கொள்ளும் என்ற மெல்லிய ஆறுதல் நம்மைத் தேற்றுகிறது.

பகுதி இரண்டு

தோழர் மணிகண்டனின் கடவுளின் கடைசிக் கவிதை (சென்ரியூ கவிதைகள்) என்ற தலைப்பில் வெளிவரும் ஹைக்கூ நூல் கவிஞரின் முதல் முயற்சி. மணிகண்டன் என்ற கவிஞரை நான் நன்கு அறிவேன். அவர் இளங்கலைத் தமிழ் பயிலும் காலத்தில் அவருக்குப் படைப்பிலக்கியம் பாடப்பகுதியில் மரபுக் கவிதைகள் எழுதக் கற்றுக் கொடுத்தேன். அப்பொழுதே தன்னை ஒரு கவிஞன் என்று அடையாளம் காட்டிக்கொண்ட ஒரு படைப்பாளி அவர். பாடம் சொல்லித்தரும் நிலையிலிருக்கும் நான் கொஞ்சம் சிரமப்பட்டு வெண்பா எழுத, மாணவர் மணிகண்டனோ மிக எளிதாக வெண்பா படைப்பார். புதுமைப்பித்தன், ஆகாசம்பட்டு சேஷாசலம் வெண்பாக்களை நினைவுபடுத்தும் பாணியில் அவருக்கு வெண்பா சரளமாக வந்து விழும். புதிய பாணியில் மரபுக் கவிதைகளை எழுதக்கூடிய நல்ல கவிஞர்.

மணிகண்டன் தமது முதல் கவிதைத் தொகுதியை ஹைக்கூவில் படைத்துள்ளார். வரவேற்கத்தக்க, பாராட்டத்தக்க பல நல்ல ஹைக்கூக்கள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன. இந்தவகை ஹைக்கூக்களைக் கவிஞர் சென்ரிய+ கவிதைகள் என்கிறார். சென்ரியூ என்றால் வேறொன்றுமில்லை, சமூக அக்கறையோடு எழுதப்படும் ஹைக்கூ கவிதைகள், அவ்வளவுதான். இந்தத் தொகுப்பில் மொத்தம் 190 ஹைக்கூ கவிதைகள் உள்ளன. கவிதைகள் பல்வேறு தலைப்புகளின் கீழ் வரிசைப்படுத்தப்படவில்லை. ஒவ்வொரு கவிதைக்கும் தனித்தனியே தலைப்புகள் இல்லை. ஏன் அப்படி? என்றால், அது அப்படித்தான். ஹைக்கூ கவிஞர்கள் கவிதைகளுக்குத் தலைப்பிடுவதை அனுமதிப்பது இல்லை. கவிதைகளுக்குத் தலைப்பிட்டால் அது வாசகனின் வாசிப்பு அனுபவத்தில் கவிஞன் தேவையின்றித் தலையிட்டதாகிவிடும். ஒரு கவிதையை என்னவாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பது வாசகனுக்குத் தெரியும். எனவேதான் மணிகண்டனும் கவிதைகளுக்குத் தலைப்பிடவில்லை.

சில ஹைக்கூக்கள்:
இந்தியா சுதந்திரம் அடைந்து அறுபது ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஷஇந்தியாவின் ஆன்மா கிராமங்களில்தான் வாழ்கிறது என்ற வெற்று ஆராவாரம் ஒரு பக்கம். கிராமங்கள்தாம் இந்தியாவின் முதுகெலும்பு என்ற கூச்சல் மறுபக்கம். உண்மையில் இந்தியக் கிராமங்கள் எப்படி இருக்கின்றன? ஊர் தனி! சேரி தனி! வெட்கப்பட வேண்டாமா? ஊரையும் சேரிகளையும் தனித்தனியே பிரித்து வைக்கும் ஆதிக்கச் சாதிவெறி மண்டிக்கிடக்கும் இந்தியக் கிராமங்களில்தாம் இந்தியாவின் ஆன்மா இருக்கிறது என்றால்? இந்தியாவின் முகவரி சாதிவெறி தானா?

தேர்வராத சேரிக்குள்
ஊரே வரும் …
தேர்தல் நேரம்

கவிஞர் மணிகண்டனின் மேலே காட்டப்பட்ட சென்ரியூ எழுப்பும் கேள்விகள் ஒன்றா? இரண்டா? இரண்டாயிரம் ஆண்டுக்கால மனுராஜ்ஜியத்தையே அல்லவா நார்நாராகக் கிழிக்கிறது கவிதை. அத்தோடு விட்டாரா! தேர் வராத சேரிக்குள் ஊரே வருகிறது. எப்பொழுது? தேர்தல் நேரம். நம் கேலிக்குரிய ஜனநாயகத்தையும் அல்லவா புரட்டிப் போடுகிறார். இந்தக் கவிதைக்கு இப்படி விளக்கம் சொல்லிக்கொண்டே செல்வதைவிட கொஞ்சம் ஊன்றி, மீண்டும் மீண்டும் வாசித்துப் பாருங்கள், வாமன வடிவில் இருக்கும் கவிதை விஸ்வரூபம் எடுப்பதை உணரமுடியும். இந்தத் தொகுப்பின் மிகச் சிறந்த கவிதைகளில் மேலே குறிப்பிட்ட கவிதையும் ஒன்று.

உலகமே இருமை. ஒன்று, அதற்கு எதிரான மற்றொன்று என்று எல்லாமே பைனரி மயம். நன்மை- தீமை, உண்மை- பொய், ஆக்கம்- அழிவு, தோன்றல்- மறைதல், கடவுள்- சாத்தான் இந்த இணைகளைக் கூர்ந்து பாருங்கள். இவற்றில் ஒன்றைக் கொண்டாடுகிறோம், மற்றொன்றை ஒதுக்குகிறோம். உண்மையில் ஒன்று இல்லையென்றால் மற்றொன்று ஏது? இந்த ஞானம்தான் அறிவியல், அறவியல், அழகியல், ஆன்மஇயல் எல்லாமே.

தேவாலய மணியோசை
கேட்கும் பொழுதெல்லாம் …
சாத்தானின் ஞாபகம்

என்ற மணிகண்டனின் ஹைக்கூ நமக்குச் சொல்லாமல் சொல்லுகிற ஞானம் அதுதான். தேவனின் நினைவு வருகிறபோதெல்லாம் சாத்தானின் ஞாபகம் வருகிறது. கவிஞருக்கு மட்டுமா? எல்லோருக்கும்தான். தேவன், தேவனாயிருப்பது சாத்தானின் இருப்பால், சாத்தான், சாத்தானாயிருப்பது தேவனின் இருப்பால்.

இப்படி முரண்களை நிரல்படுத்தும் ஹைக்கூக்கள்தாம் இந்தத் தொகுப்பில் மிகுதி. ஹைக்கூ கவிதைகளுக்கு இவ்வகை உத்தி ஒரு புதிய வாய்பாட்டு வடிவத்தைக் கொடுக்கிறது.

ஆயுதங்களுடன் இருந்தும்
திருடு போனது
பத்திரகாளி சிலை
தொலைந்த பணம் கிடைக்குமா?
புறப்படத் தயாராக
கடைசிப் பேருந்து

அடிக்கடி வருவார்
அம்மாவின் வார்த்தைகளில்
இறந்துபோன அப்பா

மேலே எடுத்துக் காட்டப்பட்டுள்ள ஹைக்கூக்களைக் கொஞ்சம் ஆழ்ந்து வாசியுங்கள், கவிஞரின் செய்நேர்த்தி அந்தக் கவிதைகளில் மிளிர்வதை உணரமுடியும்.

கடவுளின் கடைசிக் கவிதை என்ற இந்தத் தொகுப்பு சமகாலக் கவிதைத் தொகுப்புகளையும் விமர்சனக் கண்ணோட்டத்தோடு பார்க்கிறது.

கவிதைப் புத்தகத்தில்
கடைசிப் பக்கம் வரை தேடல்
கிடைக்க வில்லை கவிதை

ஆனால் மணிகண்டனின் கவிதைத் தொகுப்பில் பக்கங்கள் தோறும், தொட்ட இடம் எல்லாம் கண்ணில் தட்டுப்படுகிறது கவிதை. கவிஞரின் முதல் தொகுப்பு என்பதால் வீறுநடை யில்லாமல் சில இடங்களில் தளர்நடை தெரியலாம். இந்தத் தளர்நடைதானே வீறுநடைக்கு ஆதாரம் என்பதை உணர்ந்து தமிழுலகம் இந்நூலை ஏற்றுப் போற்றி மகிழும் என நம்புகிறேன்.

நா.இளங்கோ

வெள்ளி, 14 செப்டம்பர், 2007

வீட்டுக்குள் வளர்ந்த விருட்சம்-மலையருவி கவிதை

வீட்டுக்குள் வளர்ந்த விருட்சம்

-மலையருவி

யார் அந்த விதையைப் போட்டார்கள் என்றே தெரியவில்லை?
போயும் போயும்
வீட்டு வரவேற்பரையிலா அதைப்போடுவது....

விதை விழுந்ததை எப்படி கவனிக்காமல் போனோம்
விதை விழுந்ததை மட்டுமா
அது வேர்விட்டு வளர்ந்ததையும் அல்லவா
கவனிக்கத் தவறிவிட்டோம்

தொலைக்காட்சி பெட்டி வரவேற்பரைக்கு வந்த பிறகுதான்
அது நடந்திருக்க வேண்டும்
அநேகமாக கேபிள் ஒயரோடு
அந்த ஆலம் விதை வந்திருக்க வேண்டும்

என்ன அசுர வளர்ச்சி
வந்த சில மாதங்களிலேயே
வேர்விட்டு... விழுதுகளைப் பரப்பி
வரவேற்பரை முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டு
வளர்ந்து செழித்தது ஆலமரம்

வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கோ நண்பர்களுக்கோ
எங்கள் முகம் தெரியாமல்
அவர்கள் முகங்களைக் காட்டாமல்
அது வியாபித்திருக்கிறது

வீட்டுக் குழந்தைகள் விளையாட இடந்தராமல்
குறுக்கும் நெடுக்குமாய்க் கிளைகளைப் பரப்பி
கண்டபடி வளர்ந்து காடாக மண்டிவிட்டது

ஏன் பல சமயங்களில்
நாங்களே ஒருவரை பார்க்க முடியாமல்
பேசிக்கொள்ள முடியாமல்
இடத்தை அடைத்துக் கொண்டு
இருப்பிடத்தை இருட்டாக்கி விட்டது

யார் அந்த விதையைப் போட்டார்கள் என்றே தெரியவில்லை?
போயும் போயும்
வீட்டு வரவேற்பரையிலா அதைப்போடுவது....

வரவேற்பரையும் போதாமல்
சில கிளைகள்
படுக்கைஅறையையும் எட்டிப் பார்த்து
அச்சமூட்டுகின்றன.

ஆலமரத்தின் விழுதுகளுக்கிடையே
வேர் முடிச்சுகளில் சிக்கி
கிளைகளின் ஊடே
இருகிய முகங்களோடு
விழிகள் நிலைகுத்தி
உறைந்து போகிறோம்

விமர்சனம்- மலையருவி கவிதை (நா.இளங்கோ)

விமர்சனம்

நக்கீரன்
பொற்றாமரைக் குளத்தில்
முங்கி எழுந்தான்,
மேனி குளிர்ந்தது

சிவபெருமான்நெற்றிக் கண்ணின்
நெருப்பு மட்டும்
அடிக்கடி
கனவில்லாமலே வந்து போனது

பாண்டிய மன்னன்
அந்தப்புரத்தில்
மகாராணியின் கூந்தல் படுக்கையில்
அயர்ந்திருந்தான்

சங்கப் பலகை
ஈ மொய்த்திருந்தது

தருமியின்
பல்லக்கு பவனி
ஊரில்
புதுப்பேச்சாய் இருந்தது

நக்கிரனோ
காய்ச்சலும் குளிரும்
மாறிமாறி வந்ததால்
படுக்கையில்
நொந்து நூலானான்.

-மலையருவி

ஆறு. செல்வனின் ஆய்த எழுத்து - நூல் மதிப்புரை

புதுவைக்கு மீண்டும் ஒரு தமிழ்ஒளி

ஆறு. செல்வனின் ஆய்த எழுத்து

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

புதுவை மாநகரம் கவிதைப் பாரம்பரியம் மிக்க நகரம். அண்மைக் காலங்களில் அதாவது 2000 க்குப் பிறகு புதுவையில் அதிக அளவில் நூல்கள் வெளியிடப் பெறுவதும் அதிலும் குறிப்பாகக் கவிதை நூல்கள் மிகுதியாக வெளிவருவதும் கண்கூடு. இலக்கியப் படைப்புகளின் பெருக்கம் எப்பொழுதுமே மகிழ்ச்சியளிக்கக் கூடிய ஒன்றுதான். ஆனால் இதில் கவலையளிக்கக் கூடிய விஷயங்கள் சிலவுண்டு. வெளிவரும் நூல்களில் எத்தனை வாசிக்கப்படுகின்றன? வாங்கிப் படிப்பவர்கள் எத்தனை பேர்? நூலகங்களை நம்பி மட்டுமே நூல்கள் வெளியிடப் பெறுகின்றனவா? நூலகங்களில் இத்தகு கதையல்லாத படைப்புகள் எவ்வளவு தூரம் வாசிக்கப்படுகின்றன? வேளியிடப்பட்ட புத்தகங்களால் சமுதாயத்துக்கு ஏற்பட்ட நன்மைகள் என்னென்ன? என்றெல்லாம் விடையில்லாத வினாக்கள் பல தொக்கி நிற்கின்றன.

பாரதி, பாரதிதாசன், வாணிதாசன், தமிழ்ஒளி எனத் தொடர்ந்து நீண்டு செல்லும் புதுவைக் கவிஞர்களின் வரிசையில் கவிஞர் ஆறு.செல்வனும் ஒருவர். அவருக்குக் கவிதை தொழிலல்ல. பாரதிக்குப் பிறகு யாருக்குமே கவிதை தொழிலல்ல. அவர் ஓர் அரசு அதிகாரி. சமூகம் அவரைக் கவிதையெழுத வைத்திருக்கிறது. யாரையுமே சமூகம்தான் இலக்கியம் படைக்கத் தூண்டும். சுயும்புவாக யாரும் எதையும் படைத்து விடுவதில்லை. கவிஞரின் மூன்றாவது படைப்பு ஆயுத எழுத்து. முதலிரண்டு படைப்புகளின் மூலம் நானும் ஒரு கவிஞன்தான் என்பதை அழுத்தமாகப் பதிவுசெய்தவர் ஆறு.செல்வம். இந்த மூன்றாவது படைப்பு அவரின் படைப்பாற்றலை மட்டும் வெளிப்படுத்தவில்லை. மாறாகச் சமூகம் குறித்த அவரின் பார்வை, சமூக அவலங்கள் குறித்த அவரின் கவலை, சமூகத்தின் மீதான படைப்பாளிகளுக்கே உரிய கோபம் இவற்றோடு சமூக மாற்றத்திற்கான அறைகூவலாகவும் அமைந்திருப்பதுதான் இந்த நூலின் தனிச்சிறப்பு.

இந்தக் கவிதை நூலுக்கு ஆயுத எழுத்து ஆசிரியர் பெயரிட்டிருப்பதன் காரணம் நூலிலுள்ள கவிதைகளைப் படிப்பார்க்குத் தெளிவாக விளங்கும்.தமிழால் புகழடைந்தேன் என்ற தலைப்பு தொடங்கி இருபத்தைந்து தலைப்புகளில் தமிழின் சிறப்பு, தொழிலாளர் மேன்மை, சாதி மத எதிர்ப்பு, பகுத்தறிவு முழக்கம், அரசியல் அவலம் பெண்ணுரிமை முதலான பல்வேறு உள்ளடக்கங்களில் கவிதை படைத்துள்ளார் கவிஞர் ஆறு.செல்வம்.

தமிழ்! தமிழ்!
தமிழால் புகழடைந்தேன் என்று தொடங்கி மூன்று தலைப்புகளில் தமிழின் புகழ்பாடும் கவிஞர் ஆறு.செல்வம், செத்து விழுந்த போதும் தமிழேசிதையாய் எரியட்டும்! – என்தேகம் எரிந்த சாம்பல் தமிழ்க்குஉரமாய்க் கரையட்டும்! என்று சம்பிரதாய ப+ர்வமாகத் தம் நூலைத் தொடங்கினாலும், அடுத்து வருகின்ற இருபத்திரண்டு தலைப்புகளிலும் தான் ஓரு சமூக விடுதலைக் கவிஞன் என்பதை வெளிப்படுத்தத் தவறவில்லை. எனவேதான்,

விடுதலை என்பது வேறொன்று மில்லை
உரிமையைப் பெறும்மோகம் - அதை
வேண்டுவ தென்பதும் கெஞ்சுவ தென்பதும்
வேடிக்கைக் கதை யாகும்.

என்று எழுதுகிறார்.

அதிகார வர்க்கத்தின் அழகு:
இந்தியச் சமூகத்தில் சாதியும் வர்க்கமும் இணைந்து இருப்பதே கண்கூடான உண்மை. இதில் உழைக்கும் வர்க்கம் அழுக்கு ஆடையோடும் உழைத்துழைத்து வெயிலால் கருத்த தோலோடும் இருக்கின்றது. உழைப்பை அறியாத அதிகார வர்க்கமோ செவத்த உடலோடும் சலவை செய்த ஆடைகளோடும் உலா வருகின்றது. இந்தச் சமூக அவலத்தைத் தூங்காதே சித்திரமே…! எனும் தலைப்பில் கவிஞர் வருணிக்கும் அழகே தனியழகு,

தோலுநல்லா செவந்திருக்கும்
துணியெல்லாம் வெளுத்திருக்கும்
பாலப்போல மொகமிருக்கும்
பச்சையான சிரிப்பிருக்கும்


தோளுமேல கையிருக்கும்
தோழனைப்போல் பேச்சிருக்கும்
ஏழைரத்தம் குடிச்சிடத்தான்
எப்பொழுதும் நெனைப்பிருக்கும்.

ஏழை ரத்தம் குடிக்கும் அந்த அதிகார ராட்சசர்களின் வருணனையின் முரண் படித்து ரசிக்கத்தக்கது.

தொழிலாளர் புகழ்பாடும் தொகுப்பு:
ஆய்த எழுத்து தொகுப்பில் பல பாடல்கள் உழைக்கும் மக்களின் உயர்வைச் சித்திரிக்கின்றன. அதிலும் குறிப்பாக மே தினத்தைப் பாடும்போது உழைப்பாளிகளின் சிறப்பைப் பாடுகிறார்,

சாலையில் கிடந்திடும் சரித்திரமே!
சாக்கடை மந்திடும் சந்தனமே!
ஆலையில் சிக்கிய பூவினமே!
ஆதிக்கச் சாதிக்குத் தீவனமே!

என்றெல்லாம் ஆதிக்கச் சாதிக்குத் தீவனமான உழைக்கும் மக்களின் விடுதலைப் போருக்கு என் கவிதை பயன்படட்டும் என்று முழக்கமிடுகின்றார்.

காதலைப் பாடாத கவிஞனா?
காதலைப் பாடாத கவிஞர்களே உலகில் இல்லை என்று சொல்லிவிடலாம். ஆறு.செல்வனும் காதலைப் பாடுகின்றார். எப்படி? கணத்தில் மயங்கும் கவர்ச்சியை எல்லாம் காதல் என்று நம்புவதைக் கண்டித்து, காதல் வெறும் பாலினக் கவர்ச்சியால் மட்டும் உருவாகக் கூடாது என்றும் காதலிலும் ஒரு சமூக நீதிக்கான போராட்டம் இருக்க வேண்டுமென்றும் கவிஞர் விரும்புகிறார். அதனால்தான்,

சாதியை உடைத்து மதங்களைப் புதைத்து
சமத்துவமான காதல் செய்வீர்!
சடங்குகள் கடந்து சாத்திரம் துறந்து
பகுத்தறிவான காதல் செய்வீர்!

என்று காதலிலும் புதுமை செய்யத் தூண்டுகிறார்.

விளிம்பு நிலை மக்களின் கவிதை:
கவிஞர் ஆறு.செல்வத்தின் இக்கவிதைத் தொகுப்பு தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கவிதைத் தொகுப்பாய் இருப்பது இந்நூலின் தனிச்சிறப்பாகும். உரிமையைக் கேட்டிட நாள் எதற்கு? என்ற கவிதையில்,

சாதிக்கெல்லாம் இங்கு வேட்டுவைப்போம் - மட
சாத்திரச் சடங்கைப் போட்டுடைப்போம்
ஆதிக்கச் சாதியின் ஆட்டம் அடங்கிட
அடிமையெல்லாம் இங்கு கூட்டுவைப்போம்

என்று பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் கூட்டே ஆதிக்க விலங்கொடிக்கும் என்று அடிமைப்பட்ட மக்களின் கூட்டணியை வேண்டுகின்றார். இது கவிஞரின் தொலைநோக்குப் பார்வையையும் அவரின் அரசியல் தெளிவையும் காட்டுகிறது.

அறிவுக்கு வேலை கொடு, பகுத்தறிவுக்கு வேலை கொடு:
சாதி மத வேறுபாடுகளுக்குக் காரணம் மதம். பகுத்தறிவால் மட்டுமே இந்த இழிநிலைகளிலிருந்து மீளமுடியும் என்று திண்ணமாக நம்பும் கவிஞர் ஆறு.செல்வன், நம்முடைய மடைமையைப் பல கவிதைகளில் சாடிப் பாடுகின்றார். அறிவை இவன் என்னைக்குத்தான் பயன்படுத்துவான்? என்று ஆதங்கத்தோடு ஒரு கவிதையைப் படைத்துப் பகுத்தறிவை ஊட்டும் அற்புதமான பாடல் ஒன்று,

பகலிரவா படிக்காம தூங்கிக் கிடப்பான்
பரீட்சையில வெற்றிபெற தேங்கா ஒடைப்பான்
சுகமிழந்து நோவுவந்தா மருந்து குடிப்பான்
சுகமடைஞ்சா திருப்பதிக்கு மொட்டை யடிப்பான்


கற்சிலையைக் கழுவிவிட பாலும் தேனுமா? – அது
காதுகுளிர கேட்பதற்கு மேள தாளமா?
உச்சிவேளை காலைதோறும் சூடதீபமா? - இங்கு
உணர்ச்சியுள்ள மனுஷன் வாழ்க்கை பாதை ஓரமா?

மக்கள் திருந்தினால் கவிஞர்க்கு வெற்றி!

தேர்தல் பாதை?
மக்களாட்சியின் மகத்துவம் வெளிப்படுவது தேர்தல்களில்தான், ஆனால் அந்தத் தேர்தல் இங்கே எப்படியெல்லாம் கேலிக்கூத்தாகி சந்தி சிரிக்குது என்பதைத் தேர்தல் வருது என்றொரு கவிதையில் பாடுகிறார் கவிஞர் ஆறு.செல்வம்,

கூழ வாங்கிக் குடிக்கிறான் - அவன்
குடிசைக் குள்ள நொழையறான்
ஏழ பாழ எல்லார்கிட்டயும்
இளிச்சி சிரிச்சி கொழையறான்


சேல வேட்டி குடுக்கறான் - அவன்
சிரிச்சி சிரிச்சி மயக்கறான்
வேல முடிஞ்சி ஜெயிச்சிபுட்டா
மேல ஏறி மிதிக்கிறான்

இந்தத் தெளிவு வாக்காளர்களுக்கு வந்துவிட்டால்…பிறகென்ன கவலை.

தலித் மக்களின் விடுதலை:
விடுதலை பெற்று அறுபதாண்டுகள் ஆனபின்னாலும் நாட்டில் சாதிக்கொடுமைகள் ஓயவில்லை சேரி மக்களின் துன்பக் கதைகளில் மாற்றமில்லை என்பதைச் சேரி - கச்சேரி என்றொரு பாடலில் அவலச்சுவை மிகும் படியாக எடுத்துரைக்கின்றார்.

தவிச்சி தவிச்சிப் பச்சப்புள்ள
துடிக்கும் - பசியில் துடிக்கும் - அது
தாவி வந்து தாயின்மார்பைக்
கடிக்கும் - கண்ணீர் வடிக்கும்


சுவைச்சிக் குடிக்க பாலில்லாம
வெடிக்கும் - நெஞ்சு வெடிக்கும் - இந்த
சோகம் எந்த சாமிக்கைய்யா
அடுக்கும் - அய்யா அடுக்கும்.


கட்சிக் காரன் கலவரத்தில்
எரிப்பான் -வூட்ட எரிப்பான் - ஒரு
கணக்கு வச்சி வேட்டிசேல
குடுப்பான் - அவனே குடுப்பான்

இதற்கெல்லாம் என்னதான் தீர்வு? கவிஞரே சொல்கிறார் கேளுங்கள்,

உரிமை கேட்டு ஒண்ணுசேரும்
கோபம் - எங்க கோபம் - அதில்
உலகம் வெந்து சாம்பலாகிப்
போகும் - ஒருநாள் போகும்

கவிஞரின் கவிதைகள் ஒவ்வொன்றும் புலரப்போகும் விடியலுக்கான நம்பிக்கைகளை நம்முள் விதைக்கின்றன. மக்களுக்குக் கவிஞர் சொன்ன கோபம் எப்போது வரும்? உரிமை கேட்டு ஒண்ணு சேரும் ஞானம் எப்போது வரும்? என்ற ஏக்கத்தை ஆயுத எழுத்து தருகின்றது. அன்று கவிஞர் தமிழ்ஒளி எழுப்பிய கேள்விகளோடும் தீர்வுகளோடும் மீண்டும் புதுவைக்கு ஒரு தமிழ்ஒளி. நம்பிக்கையூட்டும் கவிதைத் தொகுப்பு.

மக்கள் கவிஞர் புதுவைத் தமிழ்ஒளி -ஓர் அறிமுகம்

மக்கள் கவிஞர் புதுவைத் தமிழ்ஒளி

முனைவர் நா.இளங்கோ
இணைப்பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8.

கவிஞர் தமிழ்ஒளி:
தமிழனே நான்உலகின் சொந்தக் காரன் தனிமுறையில் நான்உனக்குப் புதிய சொத்து - தமிழ்ஒளி1947 நவம்பர் 15 அன்று கவிஞர் தமிழ்ஒளி வீராயி என்ற காவியத்திற்கு எழுதிய முன்னுரையில் கீழ்க்கண்டவாறு எழுதினார்.

நம் கண்ணெதிரே நம் உடன் பிறந்தான் மாடாக உழைத்து ஓடாகத் தேய்ந்து போகிறான், அவன் குடும்பம் வறுமைப் படுகுழியில் வீழ்ந்து கதறுகிறது. இதைக்கண்டு மனமிரங்காமல் மரத்துப்போன நெஞ்சுடன் உலாவும் மானிடப் பிண்டங்களின் உடலில் சுரீர் சுரீர் என்று தைக்கும்படி எழுதுவதுதான் உண்மை எழுத்தாளனின் கடமையும் நோக்கமும் ஆகும்.
எழுத்தாள நண்பர்களே! கற்பனையுலகைப் படைக்கும் கவிஞர்களே! நான் வீராயி மூலம் விடுக்கும் வேண்டுகோள் இதுதான், மக்களுக்காக மக்கள் உயர மக்கள் காலத்துக் கதைகளை எழுதுங்கள். உலகம் முழுதும் உருவாகிக்கொண்டு வரும் உழைக்கும் இனத்தின் கூட்டு முன்னணிக்கு உங்கள் எழுத்து உறுதுணையாகட்டும். … …”1
இம்முன்னுரையில் கவிஞர் தமிழ்ஒளியின் இலக்கியக் கோட்பாடு எது என்பதை அவரே தௌ;ளத் தெளிவாகக் குறிப்பிடுகின்றார்;. மக்களுக்காக எழுதுங்கள். மக்கள் உயர எழுதுங்கள். உழைக்கும் மக்களின் உயர்வுக்கு எழுதுங்கள் என்பதே அவரின் வேண்டுகோள்.

கவிஞர் தமிழ்ஒளி அறிமுகம்:
(1924-1965)கவிஞர் தமிழ்ஒளி பிறந்த மண் புதுச்சேரி கருவடிக்குப்பத்தைச் சார்ந்த சாமிப்பிள்ளைத் தோட்டம். புதுவைக்குப் புகழ்சேர்க்கும் கவிஞர்கள் வரிசையில் பாரதி, பாரதிதாசனுக்குப் பிறகு பாரதிதாசன் பரம்பரையில் வந்த மக்கள் கவிஞன் தமிழ்ஒளி. கவிஞரின் இயற்பெயர் விஜயரங்கம். பிறந்த நாள்: 21-9-1924. பெற்றோர்;: திரு.சின்னையா நயினார், திருமதி செங்கேணியம்மாள் ஆவர். தாழ்த்தப்பட்ட சாதியின் ஒரு பிரிவான வள்ளுவர் இனத்தைச் சேர்ந்தவர். கவிஞர் விஜயரங்கம் புதுவை கல்வே கல்லூரியில் பயின்ற மாணவர். அங்கேதான் அடிப்படைக் கல்வியும் உயர்நிலைக்கல்வியும் பயின்றார். ஃபிரெஞ்சு மொழியும் கற்றார். பின்னர் முறையாகத் தமிழ் கற்க விரும்பி கரந்தைச் செந்தமிழ்க் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். 1945 முதல் தம் இறுதிக்காலம் நெருங்கும் வரை சென்னையிலேயே வாழ்ந்தார். அவர் அமரரானதும் அடக்கமானதும் புதுவையில். நாள்: 29-3-1965.

தமிழ்ஒளியின் படைப்புகள்:
1944இல் எழுதத் தொடங்கிய தமிழ்ஒளி தம் இறுதிக்காலம் (1965)வரை எழுதிக்கொண்டே இருந்தார்.
படைப்புகள்: எழுதிய ஆண்டு வெளிவந்த ஆண்டுகாவியங்கள்:

1. கவிஞனின் காதல் 1944 1947
2. நிலைபெற்ற சிலை 1945 1947
3. வீராயி 1947 1947
4. மேதின ரோஜா 1952 1952
5. விதியோ? வீணையோ? 1954 1961
6. மாதவி காவியம் 1958 1995
7. கண்ணப்பன் கிளிகள் 1958 1966
8. புத்தர் பிறந்தார் 1958 1966
9. கோசலக்குமரி 1962 1966

தனிக்கவிதைகள்:
1. நீ எந்தக் கட்சியில்? 1948 1948
2. மேதினமே நீ வருக! 1949 1952
3. தமிழ்ஒளியின் கவிதைகள் 1954-64 1966
4. மக்கள் கவிதைகள் 1954-58 1987

குழந்தைப் பாடல்கள்:
1. அந்திநிலா பார்க்கவா! 1948-62 2001

ஆய்வு நூல்கள்:
1. சிலப்பதிகாரம் காவியமா? நாடகமா? 1959 1959
2. திருக்குறளும் கடவுளும் 1959 1959
3. தமிழும் சமஸ்கிருதமும் 1960 1960
4. தமிழர் சமுதாயம் 1961 1962

கதைகள்:
1. சாக்கடைச் சமுதாயம் 1948-49 1952
2. அறிவ+ட்டும் 100 அற்புதக் கதைகள் 1960 1961
3. குருவிப்பட்டி 1954-60 1961
4. உயிரோவியங்கள் 1948-49 1989

குறு நாவல்கள்;:
1. மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் 1952 1952
2. மாமாவின் சாகசம் 1952 1952

வரலாறு:
1. தோழர் ஸ்டாலின் 1952 1952

நாடகங்கள்:
1. கவிஞர் விழா(ஓரங்க நாடகங்கள்) 1947 1947

அச்சில் வெளிவராத மேடை நாடகங்கள்:
1. சிற்பியின் கனவு 1945
2. சேரன் செங்குட்டுவன் 1946
3. தோழர் ஸ்டாலின் ------

(இன்னும் வெளிவராத சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள் சில)

ஆக இருபத்தைந்துக்கும் மேற்பட்ட நூல்களைக் கவிதை, காவியம், கட்டுரை, நாடகம், ஆய்வுகள் எனப் பலதுறைகளிலும் எழுதி வெளியிட்ட மாபெரும் படைப்பாளி கவிஞர் தமிழ்ஒளி. இத்தனைக்கும் அவர் வாழ்ந்த காலங்கள் வெறும் நாற்பதே ஆண்டுகள். நாற்பதாண்டுகளே வாழ்ந்தாலும் காலத்தினால் அழியாத கவிதைகளையும் இலக்கியங்களையும் படைத்துக் கொடுத்திருக்கிறார்.

தமிழ்ஒளியின் பாதை:
கவிஞர் தமிழ்ஒளி பாரதியை ஞானத் தந்தையாகக் கருதினார், பாரதிதாசனை வழிகாட்டியாகக் கொண்டார். அவர்களிருவரும் வகுத்துத் தந்த வழியை மேலும் செம்மைப்படுத்தினார்.1944 இல் எழுதத் தொடங்கிய தமிழ்ஒளி தமிழ், தமிழ்இனம், தமிழர் எழுச்சி, சீர்திருத்தம் என்ற போக்கில் அதாவது தேசிய இனங்களின் உரிமை, தமிழ் ஆட்சிமொழி, சுயமரியாதை, சமத்துவம் என்ற செயல்பாட்டில் தம் படைப்;புப் பணியைத் தொடங்கினார். 1945இல் கவிஞர் மார்க்சீயத் தத்துவத்தை ஆழ்ந்து பயிலத் தொடங்கினார். அதன் விளைவாகவே ‘நிலைபெற்ற சிலை’, ‘வீராயி ’ ஆகிய காவியங்களைப் படைத்தார்.1947இல் இலக்கியப் பேராசான் ஜீவா முன்னிலையில் தமிழ்ஒளியும் குயிலனும் பொதுவுடைமை இயக்கத்தில் இணைந்தனர். 1947 தொடங்கி ஒன்பது ஆண்டுகள் பொதுவுடைமை இயக்கத்தில் உறுப்பினராகவும் கலை இலக்கியத் தளத்தில் புரட்சிப் படைப்பாளராகவும் விளங்கினார் தமிழ்ஒளி. 1953இல் பொதுவுடைமை இயக்கத்திலிருந்து வெளியேறினார். 1953இற்குப் பிறகு புதியபுதிய உள்ளடக்கங்களிலும் உத்திகளிலும் காவியங்கள் படைப்பதில் மிகுந்த ஈடுபாடு காட்டினார். வாழ்வின் கடைசிவரை பிற்போக்கு சக்திகள் தம்மை அண்டாமல் பார்த்துக் கொண்டார்.

தமிழ்ஒளியும் பொதுவுடைமையும்:
1948இல் இந்திய அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி செய்ததாகக் கூறி இந்தியப் பொதுவுடைமைக் கட்சியினைக் காங்கிரஸ் அரசு தடைசெய்தது. தடையின் விளைவாகக் கம்னிய+ஸ்ட் கட்சி அலுவலகம், தொழிற்சங்க அலுவலகங்கள், கட்சிப் பத்திரிக்கை அலுவலகங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டன. தலைவர்கள் பலர் கைதாயினர். வேறு சிலர் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டனர். நாட்டில் நடப்பதைக் கட்சி ஆதரவாளர்கள் அறிந்து கொள்ள இயலாத சூழ்நிலை உருவானது.இந்த இக்கட்டான சூழலில் இந்திய கம்னிய+ஸ்ட் கட்சி நடத்திவந்த ஜனசக்தி தடைசெய்யப்பட்டது. முன்னணி என்ற பெயரில் பொதுவுடைமைச் சார்பு இதழ் ஒன்று புதியதாகத் தொடங்கப்பட்டது. கட்சியின் நம்பிக்கைக்குரிய தோழர் குயிலன் ஆசிரியர் பொறுப்பேற்றார். துணைஆசிரியர் பொறுப்பில் தமிழ்ஒளியும் எஸ்.ஆர்.எஸ்.ராஜனும் செயல்பட்டனர். 1948 அக்டோபர் தொடங்கி 1949 செப்டம்பர் வரை தொடர்ந்து 48 இதழ்கள் வெளிவந்தன. பின்னர் முன்னணி இதழும் தடைசெய்யப்பட்டது.இந்த முன்னணி ஏட்டின் ஒவ்வொரு இதழிலும் கதை, கட்டுரை, கவிதை, நாடகம் ஆகிய பல இலக்கிய வடிவங்களில் தம் முற்போக்குக் கருத்துக்களுக்கு எழுத்து வடிவம் கொடுத்து எழுதி வந்தார் தமிழ்ஒளி. மார்க்சீய தத்துவ ஞானத்தை மக்களுக்கு விளக்குவதற்காகவே ஜனயுகம் என்ற பெயரில் புதிய மாத இதழ் ஒன்றைத் தொடங்கினார் தமிழ்ஒளி. அந்த ஏடு பற்றிய ஒரு விமர்சனம் 4-9-1948இல் முன்னணி ஏடு ஒன்றில் கவிஞர் குயிலன் அவர்களால் எழுதப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதி:“மார்க்சிஸ்ட் தத்துவத்தை விளக்குவதற்கே அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் மாத சஞ்சிகை தமிழில் வெளிவருவது மிகவும் பொருத்தமானது. மகிழ்ச்சி தரும் செய்தி. அவசரத் தேவையைப் ப+ர்த்தி செய்யும் ஆயுதம். சஞ்சிகையின் ஆசிரியர் விஜயரங்கத்தைப் பாராட்டுகிறோம்.”2 என்று தமிழ்ஒளியைப் பாராட்டி எழுதியுள்ளார் தோழர் குயிலன் அவர்கள்.

கவிஞர் தமிழ்ஒளியின் தனித்தன்மைகள்:
தமது கவிதைகளின் உருவமும் உள்ளடக்கமும் சிறப்பாகவும் முற்போக்காகவும் அமைய வேண்டுமென்று விரும்பி எழுதிய கவிஞர் தமிழ்ஒளி, பண்டைய தமிழ் இலக்கியங்களிலும் இன்றைய புதுமை இலக்கியங்களிலும் அளவற்ற ஈடுபாடு கொண்ட இலக்கிய ரசிகர். கம்பரும் திருவள்ளுவரும் இளங்கோவும் மகாகவிபாரதியும்; அவரது குருநாதர்கள்.மனிதாபிமானம், தேசியம், சோஷலிசம் ஆகிய மாபெரும் கொள்கைகளில் பற்றுகொண்டு, தமிழின் பண்டைய - நவீன இலக்கிய மரபுகளில் தோய்ந்து சிந்தனை வளத்தோடும் சந்த நயத்தோடும் செஞ்சொற் கவிதைகளை யாத்தவர் கவிஞர் தமிழ்ஒளி.கவிஞர் தமிழ்ஒளி தமிழ்ச் சமுதாயத்தில் சாதி வேற்றுமையில்லாத ஏற்றத் தாழ்வற்ற சமூக அமைப்பை நிறுவக் கனவு கண்டார். இந்திய நாட்டிலும் உலகம் முழுவதும் எத்திசையில் எது நடந்தாலும் கொடுமைகளை எதிர்ப்பதிலும் நல்லதை வரவேற்பதிலும் ஆர்வம் காட்டினார்.தமிழ்ஒளி இந்தியச் சமுதாயத்தைக் கட்டிப் போட்டிருக்கும் சாதி மதக் கோட்பாடுகளையும் சுரண்டல் கொள்கைகளையும் ஆணிவேரோடு பிடுங்கி எறியும் வல்லமை தொழிலாளி வர்க்கத்துக்கே உண்டு என்பதை உணர்ந்தார். அதனால்தான் தொழிலாளி வர்க்கத்தின் பல்வேறு பிரிவினரையும் வர்க்க அமைப்புகளில் ஒன்று திரட்டும் பணியைத் தம் கவிதைகளில் பாராட்டினார், துணைநின்றார். தொழிலாளர் சங்கங்களையும், துறைமுகத் தொழிலாளி, டிராம்வேத் தொழிலாளி, சலவைத் தொழிலாளி, நகர சுத்தித் தொழிலாளி எனச் சங்கம் வைத்துப் போராடத் தொடங்கிய அனைத்து உழைக்கும் மக்களையும் பாராட்டிக் கவிதை புனைந்தார். சென்னைத் துறைமுகத் தொழிலாளர் சங்கத்தோடு நேரடியாகத் தொடர்பு கொண்டிருந்தார்.உலகத் தொழிலாளர்களின் உரிமைத் தினமான மே தினத்தைப் பற்றி முதல் முதல் தமிழில் பாடிய கவிஞன் தமிழ்ஒளியே ஆவார்.

தமிழ்ஒளி கவிதைகள்:
தமிழ் இலக்கியப் படைப்புலகில் இருபதாம் நூற்றாண்டு மகத்தானது. தேசிய இனம், தேசியம், சர்வ தேசியம் போன்ற கருத்தாக்கங்கள் கால்கொண்ட காலம் அது. இவ்வகைக் கருத்தாக்கங்களை உள்வாங்கிக் கவிதை படைத்த பாரதியே இந்த மரபிற்குச் சொந்தக்காரன். பாரதியின் இத்தகைய பாடுபொருள்களை மிகச்சரியான மார்க்சியத் தத்துவப் பின்புலத்தோடு புரிந்துகொண்டு, பாவேந்தன் பாரதிதாசனின் மறுமலர்ச்சிச் சிந்தனைகளையும் முழுமையாக உள்வாங்கிக்கொண்டு புதுப்பாதை சமைத்த கவிஞன்தான் தமிழ்ஒளி. பாரதியைப் போல் தமிழ்ஒளியும் கவிதையை வாழ்வாகக் கொண்டவர். வாழ்க்கையையும் கவிதையாக மாற்றியவர். தனக்கென்று வேறு வாழ்க்கையை அமைத்துக்கொள்ளாமல் கவிஞனாகவே வாழ்ந்து கவிதையாக நிலைத்திருப்பவர்.பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரையார் தமிழ்ஒளிக் கவிதைகளில் மூன்று வகைகளைக் காணமுடியும் என்று மதிப்பிடுகிறார். முதல்வகைக் கவிதைகள், பாரதி பாரதிதாசன் வழியில் நின்று முற்போக்குக் கருத்துக்களைக் கூறும் கவிதைகள். இரண்டாம்வகைக் கவிதைகள் கற்பனைத் திறனோடும், உவமை முதலிய அணியழகுத் திறன்களோடும் தமிழ்ஒளி புனைந்த கவிதைகள். இதில் அவர் இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்கள் அனைவரையும் விஞ்சிவிட்டார் என்று புகழ்ந்துரைக்கின்றார். மூன்றாம் வகைக் கவிதைகள் இருபதாம் நூற்றாண்டுக்கே புதுமையான கவிதைகள் முத்தமிழ்க் கவிஞன் இளங்கோவின் முழுமைச்சிறப்பை ஒத்த கவிதைகள் என்று கூறி இவ்வகைக் கவிதைகளுக்குச் சான்றாக, கவிஞரின் விதியோ? வீணையோ? என்ற இசை நாடகத்தைக் குறிப்பிடுகின்றார் பன்மொழிப் புலவர்.3

தமிழ்ஒளி கவிதைகளில் மூன்று கட்டங்கள்:
கவிஞர் தமிழ்ஒளியின் கவிதைகளை மூன்று காலக்கட்டங்களாகப் பிரிக்கலாம்.
1. 1944 முதல் 1947 வரையிலான கவிதைகள்.(சீர்திருத்தக் கவிதைகள்)
2. 1947 முதல் 1953 வரையிலான கவிதைகள்.(முற்போக்குக் கவிதைகள்)
3. 1954 முதல் 1965 வரையிலான கவிதைகள்.(பொதுமைக் கவிதைகள்)
இம்மூன்று காலக் கட்டங்களிலும் தமிழ்ஒளியின் கவிதைகளில் சமூகத்தின் ஒடுக்கப்பட்டவர்களுக்கான ஆதரவுக் குரலே ஓங்கி ஒலிக்கின்றது. கவிஞர் தமிழ்ஒளி கேட்கிறார்,

ஏ செந்தமிழா! என்னுடைய சோதரா! நீ யார்பக்கம்? நிகழ்த்திட வேண்டும் கொள்ளை யடித்திடும் கொடியவர் பக்கமா? துன்பமுற்றிடும் தொழிலாளர் பக்கமா? 4 
கவிஞர் எப்பொழுதுமே துன்பமுற்றிடும் தொழிலாளர் பக்கம்தான். இதில் நான் யார் பக்கமும் இல்லை பொதுவான மனிதன் என்று கூறுபவர்கள் ஊமையர், பேடியர், பேதையர் என்று சாடுகிறார் தமிழ்ஒளி.கவிஞரின் கடைசிப் பத்தாண்டுக் கால வாழ்க்கை புதிர் நிறைந்தது, குழப்பமானது என்றெல்லாம் சொல்பவர்கள் உண்டு. இக்காலக் கட்டத்தில் கவிஞர் இரண்டு பெரும் இடர்ப்பாடுகளுக்கு ஆளானார் என்பர். ஒன்று அவரின் காதல் தோல்வி. மற்றது அவரை மரணம்வரை துரத்திச் சென்று வாட்டி வதைத்த காசநோய்.

தமிழ்ஒளியின் சோகமும் நம்பிக்கையும்:
கவிஞர் தமிழ்ஒளி தம் கவிதைகளிலும் குறுங்காவியங்களிலும் சிறுகதைகளிலும் எதார்த்த வாழ்விலுள்ள இன்னல்கள் பலவற்றைப் பரவலாக எடுத்துரைக்கின்றார். ஒடுக்கப்பட்ட மக்களின் சோகமயமான வாழ்க்கைச் சித்திரம் படிப்பவர்கள் நெஞ்சை நெகிழ்விக்கச் செய்யும் வகையில் கவிஞரின் படைப்புகளில் சித்தரிக்கப்பட்டிருக்கும். காவியங்கள் மிகுதியும் துன்பியல் முடிவுகளைக் கொண்டதாகவே பாடப்பட்டிருக்கும். ஆனால் கவிஞர் எதிர்கால வாழ்வின் மீது தளராத நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதை அவர் கவிதைகளின் வழி உணரமுடியும்.
உழுபவனே நிலத்திற்குச் சொந்தக் காரன்
உழைப்பவனே தேசத்தின் உரிமை யாளன்
புழுவைப்போல் கிடந்ததுவும் பிச்சை வாங்கும்
புன்மைநிலை அடைந்ததுவும் வாடைக் காற்றில்
அழுதுதுயர் அடைந்ததுவும் இனிமே லில்லை
அடங்காத வேகமொடும் ஆர்வத் தோடும்எழுந்து வா! 
உழைப்பவரின் போராட் டத்தில் 
இரண்டின்றிக் கலந்துவிட இதுதான் நேரம் 5

எதிர்காலத்தின் மீது எவ்வளவு நம்பிக்கையோடு கவிதை யாத்துள்ளார் என்பதை உணர்தல் வேண்டும்.

செஞ்சேனைகளின் வெற்றி:
தமிழ்க் கவிஞர்களில் சீனப்புரட்சியை வரவேற்று இங்கே புரட்சிக்குரல் எழுப்பிய ஒரே கவிஞன் தமிழ்ஒளியே. உலகில் எங்கெல்லாம் செஞ்சேனைகள் வெற்றி பெறுகின்றனவோ அவற்றை வரவேற்கத் தமிழ்ஒளி தவறுவதே இல்லை. சீனத்து செஞ்சேனைகளின் வெற்றியைப் பல பாடல்களில் புகழ்ந்து பாடுகின்றார்,
சீனம் நமக்கொரு நம்பிக்கை - அதன்
செஞ்சேனை வெற்றிக ளால்
புது ஞானம் பிறக்குது மண்ணிலே - இந்த
ஞானத்தை அன்று விதைத்தது
வானர சாகிய சோவியத் - அது
வாழ்த்தி மகிழுது தாயென ஈனர்கள்
ஓட்டம் பிடிக்கிறார் - நான்கிங்
எல்லை பரிசுத்தம் ஆகுது. 6 
சோவியத் புரட்சியைப் பல பாடல்களில் புகழ்ந்து பாடியிருந்தாலும் சீனப் புரட்சியைப் பாடும்போதும் சோவியத்நாடு தாய்போல் சீனாவை வாழ்த்தி மகிழ்வதாகப் பாடுகின்றார். சீனப் புரட்சி இந்திய ஏழைகளின் கனவுகளில் நம்பிக்கையை ஊட்டுவதாகவும் இந்தியத் தொழிலாள வர்க்கத்தினருக்கு ஊக்கம் அளிப்பதாகவும் இருக்கிறது என்று சீனப்புரட்சி தந்த நம்பிக்கையில் இந்தியப் புரட்சியையும் கனவு காண்கிறார் கவிஞர் தமிழ்ஒளி.

மே தினமே வருக:
உலகு தழுவிய நிலையில் அவர் படைத்த மேதினக் கவிதை ஒரு நீண்ட கவிதை. தமிழிலக்கியத்திற்கு அது ஒரு புதுமை இலக்கியம். இந்திய மொழிகளில் மேதினத்தை வரவேற்று இதுபோன்றதொரு கவிதையை வேறு யாரும் படைத்ததில்லை என்பதே இக்கவிதையின் தனித்தன்மைக்கு ஒரு சிறந்த சாட்சி. உழைப்பாளி வர்க்கத்தின் உரிமைக்குரலாக, போர்ப்பரணியாக ஒலிக்கும் புரட்சிக் கவிதை அது,
கோழிக்கு முன்னெழுந்து கொத்தடிமை போலுழைத்துப்பாடுபட்ட ஏழைமுகம் பார்த்துப் பதைபதைத்துக்கண்ணீர் துடைக்கவந்த காலமே நீ வருக!மண்ணை இரும்பை மரத்தைப் பொருளாக்கிவிண்ணில் மழையிறக்கி மேதினிக்கு நீர்பாய்ச்சிவாழ்க்கைப் பயிரிட்டு வாழ்ந்த தொழிலாளிகையில் விலங்கிட்டுக் காலமெல்லாம் கொள்ளையிட்டபொய்யர் குலம்நடுங்கப் பொங்கி வந்த மேதினமே! 7என்றெல்லாம் சர்வதேசத் தொழிலாளர் உரிமைப் பிரகடனத்தை நினைவ+ட்டும் வகையில் உணர்ச்சி பொங்கக் கவிதை படைக்கின்றார். மேதினத்தின் வலிமையையும் சாதனையையும் நினைவு கூர்கின்றார், கந்தல் மனிதரவர் கையில் அதிகாரம்ஏற்றிவைத்த நின்பெருமை என்னுயிர்க்கும் மேலன்றோபோற்றினேன் வையப் புரட்சியொடு நீ வருக. 8உலகத் தொழிலாளர்கள் உள்ளவரை நிலைத்திருக்கும் கவிதையை காலத்தால் அழிக்க முடியாத கவிதையைத் தந்து காலத்தை வென்று நிற்கிறார் கவிஞர் தமிழ்ஒளி.

கவிதையின் உள்ளடக்கத்தோடு உருவத்திலும் புதுமை:
கவிஞர் தமிழ்ஒளி முற்போக்கான புரட்சிகரமான சிந்தனைகளை வெறும் பரப்புரையாகத் தம் கவிதைகளில் பெய்துவிடவில்லை. கவிதைகளுக்கே உரிய அழகியலோடு தம் கவிதைகளைப் படைக்கின்றார். இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களில் இவர்போல் சந்த நயத்தோடும் உவமை உருவகப் புதுமைகளோடும் சொல்லாட்சிச் சிறப்புகளோடும் புரட்சிக்கவிதைகள் யாத்தவர் இல்லை என்று சொல்லும்படியாகக் கவிஞரின் கவிதைகள் மிளிர்கின்றன. தமிழ்ஒளியின் காவியங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் தனித்தன்மை வாய்ந்த படைப்புகளாக விளங்குகின்றன.“கருத்துக்களைச் சொல்லுவது மட்டுமே கவிதையின் நோக்கமெனில், யாப்புவகைகள் பல இருக்கத் தேவையிராது. கவிதை ஒரு கலை, அந்த உணர்வோடு இலக்கியம் படைக்கும் கவிஞன் தான் விரும்பும் வண்ணம் கவிதையைக் கையாளும் பொருட்டே யாப்பு வகைகள் பல உருவாக்கப்பட்டன.” 9 என்பது கவிஞர் தமிழ்ஒளியின் கருத்தாக இருந்தது. அதனால் ஒவ்வொரு காவியத்திற்கும் ஒவ்வொரு கவிதைக்கும் ஏற்பப் பலப்பல சந்த நடையுடைய கவிதைகளையும் யாப்பு வடிவங்களையும் தேர்ந்தெடுத்தார் தமிழ்ஒளி.

கவிதைகள் நிலைக்கும் கவிஞன் வாழ்வான்:
காலத்தை வெல்லும் கவிதைகள் தந்த கவி தமிழ்ஒளி கவிதை உலகில் வாழ்ந்தபோதும், வாடி வீழ்ந்தபோதும் மறக்கப்பட்டான், மறைக்கப்பட்டான். சாதி செய்த சதி அது.கவிஞர் தமிழ்ஒளியே கூறுவதுபோல்,

‘வஞ்சகக் காலன் வருவதும் போவதும் வாழ்க்கை நியதியடா! –எனில் செஞ்சொற் கவிதைகள் காலனை வென்று சிரிப்பது இயற்கையடா!’10 

என்று ஆறுதல் கொள்ளத் தோன்றுகிறது.கவிஞர் தமிழ்ஒளி புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் காலமானபோது சொன்ன கவிதை வரிகளைத்தான் தமிழ்ஒளி அவர்களின் மரணத்தின் போதும் நினைவு கொள்ள வேண்டியுள்ளது. அந்த வைர வரிகள் இதோ,சென்னையினின்று பிணம் வரும் என்கின்றசெய்தியைச் சிற்சிலர் பேசி நின்றார் - அவர் சொன்னது கேட்டுக் கொதிப்படைந்து, ‘வெறும் சொத்தைகள்’ என்று வழிதொடர்ந்தேன்!உயிரில் உணர்வில் கலந்த கவிஞன் என்உயிரில் உயிர் கொண்டு உலவுகின்றான்! - வெறுந்துயரில் நான் மூழ்கிக் கிடக்கவில்லை, அவன்தொண்டு சிறந்திடத் தொண்டு செய்வேன்!.11கவிஞரின் இந்த வரிகளை நினைவு கொண்டு கவிஞர் தமிழ்ஒளியின் மரணம் தந்த துயரத்தில் நாம் மூழ்கிவிடாமல் நம் உயிரில் உணர்வில் கலந்து நிற்கும் கவிஞர் அவர்களின் தொண்டு சிறந்திடத் தொண்டு செய்வோம்.

அடிக்குறிப்புகள்:

1. கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி காவியங்கள் தொகுதி- ஒன்று, பக். 129-130.
2. சங்கை வேலவன், தமிழ்ஒளியின் கவிப்பயனம், ப.217.
3. கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி கவிதைகள்; தொகுதி.2, பக்.8,9
4. கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி கவிதைகள்; தொகுதி.2, ப.42
5. கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி கவிதைகள்;; தொகுதி.2, ப.37
6. கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி கவிதைகள்;; தொகுதி.2, ப.54
7. கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி கவிதைகள்;; தொகுதி.2, ப.75
8. கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி கவிதைகள்;; தொகுதி.2, ப.75
9. செ.து.சஞ்சீவி, தமிழ்ஒளி, பக்.401
0. கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி கவிதைகள்;; தொகுதி.1, ப.64
11. கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி கவிதைகள்;; தொகுதி.1, ப.102

புதன், 12 செப்டம்பர், 2007

பருத்திக்காடும் வெடித்த பஞ்சும்- நூல் மதிப்புரை

பருத்திக்காடும் வெடித்த பஞ்சும்

முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி.

உரைநடை எங்கே கவிதையாக உருவெடுக்கிறது என்பது ஒரு படைப்பு ரகசியம். ஒரு முழுக்கவிதையில் ஒரே ஒரு சொல்லில் கவிதை உட்கார்ந்து கொண்டு கண்ணாம்பூச்சி விளையாடும். அந்தச் சொல்லைக் கண்டுபிடித்து விளையாட்டைத் தொடர்வது அத்துணை எளிய செயலாய் இருப்பதில்லை. பல சமயங்களில் அப்படி ஒரு சொல்லும் கிடைக்காமலேயே முழு கவிதையும் நம்மை ஏமாற்றிவிடுவதுண்டு. கவிதை என்று சொல்லிவிட்டால் நம்பித்தானே ஆகவேண்டும் என்ற பழக்கத்தால் ஏமாற்றங்களைப் பல சமயத்தில் நாம் வெளிப்படுத்துவதில்லை.

"பருத்திக் காடு" புதுவை யுகபாரதியின் புதிய ஹைக்கூ கவிதைத் தொகுப்பு. இந்நூல் அவரின் மூன்றாவது ஹைக்கூ கவிதைத் தொகுப்பு. ஹைக்கூ, ஜப்பானில் பிறந்து வளர்ந்த கதையெல்லாம் நாம் நிறைய பேசியாகிவிட்டது. தமிழில் ஹைக்கூ வந்தது பழங்கதையாகி விட்டது. தமிழில் ஹைக்கூ புதிய முகங்களோடு புதிய குணங்களோடு புதுப்பிறவி எடுத்தாகிவிட்டது. பிறகு ஏன் ப+ர்வஜென்மக் கதைகளெல்லாம்? தமிழில் ஹைக்கூ எழுதக் கற்றுக் கொள்வதென்பது ஷவெந்நீர் வைக்க கற்றுக் கொள்வதைவிட எளிய காரியமாகிவிட்டது. இந்த எளிமை இந்தக் கவிதை வடிவத்திற்கு ஒரு ஜனநாயகத் தன்மையைக் கொடுத்துள்ளது என்பதால் மகிழ்ச்சியே.

கவிதை எல்லோருக்குமானது, ஒவ்வொருவர் மனதிலும் கவிதை இருக்கிறது, அதை வடித்தெடுப்பவன் கவிஞனாகிறான். இதுவரை உலகத்தில் எழுதப்பட்ட கவிதைகளை விட எழுதப்படாமல் ஒவ்வொருவர் மனதிலும் பிறந்து தவழ்ந்து வெளிவராமல் செத்துப்போன கவிதைகள் ஏராளம். அவற்றில் உலகின் தலைசிறந்த கவிதைகள் ஏராளமிருக்கலாம். இனி ஒரு கவிதையையும் சாகவிடமாட்டோம் என்ற நம்பிக்கை துளிர்விட ஆரம்பித்திருக்கிறது.

தமிழில் வெளிவந்துள்ள நூற்றுக்கணக்கான ஹைக்கூ நூல்களில் பருத்திக்காடு ஒரு புதுமைப்படைப்பு. ஏனெனில் இந்நூல் அந்தாதி யாப்பில் புதுவையிலிருந்து வெளிவரும் முதல் ஹைக்கூ தொகுப்பு. அதிலும் முதல் பன்னிரண்டு ஹைக்கூ பாடல்கள் அ முதல் ஒள வரை வரிசைப் படுத்தப்பட்ட உயிர் எழுத்துக்களில் தொடங்குகின்றன. வாழ்க்கை ஒரு சுழலும் வட்டம், இதில் மேல் கீழ், அந்தம் ஆதி (தொடக்கம் முடிவு ) என்பதெல்லாம் ஒரு கற்பிதம். ஒரு கவிதையின் முடிவு அடுத்த கவிதையின் தொடக்கமாயிருப்பது சுழலும் வட்டத்தை ஞாபகப்படுத்துகின்றது.

பருத்திக்காடு:நிலவுக் குழந்தை:
இந்நூல் தமிழ், இயற்கை, சமூகம், அரசியல் என்று இன்றைக்குப் பரவலாகப் பாடுபொருளாகும் அத்துணை செய்திகளையும் பாடுகிறது, சாடுகிறது. கவிஞனுக்குத்தான் இந்த வசதியிருக்கிறது எதையும் சாடலாம், பாடலாம்.சோற்றுப் பருக்கைகள் நிலவுக் குழந்தை சிந்துகிறது விண்மீன்கள் இயற்கையைப் பாடாத கவிஞன் ஏது? புதுவை யுகபாரதியின் பார்வையில்
விண்மீன்கள்
நிலவுக் குழந்தை சிந்திய
சோற்றுப் பருக்கைகள்.

இயற்கையைக் காட்சிப் படிமமாக்குவதில் கவிஞர் வெற்றி பெற்றுள்ளார். ஷகுறுகுறு நடந்து சிறுகை நீட்டி இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும் நம்மை இன்ப மயக்கத்தில் ஆழ்த்தும் மழலைச் செல்வங்கள் என்றானே புறநானூற்றுப் புலவன், அந்தப் புலவன் மகிழ்ந்த மகிழ்ச்சியை அப்படியே உள்வாங்கி வடித்த கவிதை இது.

அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள்
சிறு கை அளாவிய கூழ் (குறள்-64)

என்ற குறள் கூறும் சிறுகை அளாவிய கூழை நினைவு படுத்தும் கவிஞரின் கற்பனையில் விண்மீன்கள் சோற்றுப் பருக்கைகளாகவும் நிலவு குழந்தையாகவும் நம் மனக்கண் முன் காட்சிகளாக விரிகின்றன.

கல்மரக்காடுகள்: 

ஒரு சொல்லில் கவிதை உயிர் வாழ்ந்துவிடும் என்ற இலக்கணத்திற்கு இலக்கியமாய் இந்நூலில் காணப்படும் ஒரு சொற்சேர்க்கை, ஷகல்மரக்காடுகள். மரக்காடுகள் நமக்குத் தெரியும், இதென்ன கல்மரக்காடுகள்?. மரங்களுக்கு உயிர் உண்டு, உயிருள்ள மரங்கள் கார்பன்-டை-ஆக்ஸைடை சுவாசித்து ஆக்ஸிஸனை வெளியிட்டு மனித உயிர்க்குலங்களையே காக்கின்றன. இந்தக் கல்மரக்காடுகள் உயிரற்றவை, உயிருள்ள மரங்களின் அழிவில் பிறந்து உயிர்க்குலங்களை அழிக்கப் பிறந்தவை. கல் சூ மரம் என்ற சமனற்ற எதிர்நிலைக் கருத்துக்களை இணைத்து கவிதை படைக்கின்றார் கவிஞர் யுகபாரதி.

விற்பனை அதிகரிப்பு
விளைச்சல் நிலங்களில்
கல்மரக்காடுகள்

கல்மரக்காடுகள்
கண்ணீர் சொரிகின்றன..
மழை வேண்டி

இந்த இரண்டு கவிதைகளிலும் இடம்பெறும் கல்மரக்காடுகள் என்ற சொற்சேர்க்கை. விளைச்சல் நிலங்களில்- கல்மரக்காடுகளை உருவாக்கும் கயமையைச் சாடும் கோபமும், மழைவேண்டி கல்மரக்காடுகள் கண்ணீர் சொரியும் இளிவரலும் இவ்விரு கவிதைகளில் இரண்டு வேறுவேறு மெய்ப்பாடுகளைத் தோற்றுவிக்கின்றன.

சமகால அரசியல் விமர்சனம்: ஒவ்வொரு மனிதனுக்கும் கடமைகள் பல உள்ளன. தனிமனிதக் கடமைகள், சமுதாயக்கடமைகள், நாட்டுக்கான கடமைகள் என அவை விரிந்து செல்லும். சராசரி மனிதனுக்குள்ள கடமையை விட படைப்பாளிக்குக் கூடுதல் கடமைகள் உண்டு. தான் வாழும் காலத்தைக் கூர்ந்து கவனித்து நடக்கும் அவலங்களுக்கு எதிர்வினை புரியும் கடமை அது. அப்படிப் பட்டவன்தான் படைப்பாளி, மற்றவன் எழுத்தால் வயிறு வளர்ப்பவன். கவிஞர் புதுவை யுகபாரதி தாம் வாழும் காலத்தை விமர்சனக் கண்ணோட்டத்தோடு கூர்ந்து பார்க்கிறார். உரிய எதிர்வினையை எழுத்தில் வடிக்கிறார். அச்சமற்று நெஞ்சுறுதியோடு அவர் வைக்கும் அரசியல் விமர்சனங்கள் இந்த நூலின் தனிச் சிறப்பு.

தமிழ்நாடு தலைகுனிகிறது
சாய்பாபாவுடன்
கலைஞர்?

இலவச அரிசி
உழைப்புக்கு...
வாய்க்கரிசி

இந்த இரண்டு கவிதைகளில் முன்னது தமிழக அரசியலை உணர்வு ப+ர்வமாக விமர்சிக்கிறது, பின்னது புதுவை அரசியலை அறிவு பூர்வமாக விமர்சிக்கிறது. கவிஞன் தான் வாழும் நிலத்தில் காலூன்றிக் கொண்டு உலகம் முழுவதும் ஏன்? பிரபஞ்சம் முழுவதும் சிறகடித்துப் பறக்கும் விந்தையானவன். மின்னொளி கொடுத்துக் கண்ணொளி பறிப்பு சிறப்புப் பொருளியல் மண்டலம்இன்றைக்கு இநதியாவின் பற்றியெரியும் பிரச்சனை, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பது தொடர்பானது. மேற்கு வங்கத்தில் நந்தி கிராமத்தில் நடந்த துப்பாக்கிச் சூடும் அப்பாவிப் பொதுமக்கள் செத்து மடிந்ததும் இந்தியாவின் பல பகுதிகளிலும் இதே சிக்கல் வெடித்துக் கிளம்புவதும் அன்றாடச் செய்திகள். சிறப்புப் பொருளாதார மண்டலம் யாருக்கு நன்மை செய்யும்? யாரை பலி வாங்கும்? என்ற கேள்விகளுக்கெல்லாம் சுருக்கமாக, சுருக்கென்று தைப்பது போல் விடையளிக்கிறார் புதுவை யுகபாரதி.

மின்னொளி கொடுத்துக் கண்ணொளி பறிப்பு. வாழ்வாதாரங்களைப் பறித்துக் கொண்டு மண்ணின் மக்களை நாடோடிகளாக்கிய பின் எது கிடைத்து என்ன பயன்? கண்ணொளி போன பின் மின்னொளி இருந்தென்ன? இருண்டென்ன? இந்தக் கவிதை ஏற்படுத்தும் தாக்கம் மிகப்பெரிது. கவிஞர் யுகபாரதியின் பருத்திக்காடு நம்மை நோக்கி எழுப்பும் கேள்விகள் ஏராளம். சில கவிதைகள் விடை சொல்கின்றன. சில கவிதைகள் மௌன சாட்சியாய் நிற்கின்றன. சில ஹைக்கூக்கள் நம்மை கவிதைவரை அழைத்துச் செல்லவில்லை என்றாலும் அதனால் பெரிய குறையொன்றுமில்லை. ஒரு படைப்பாளியின் எல்லாப் படைப்புகளுமே அசாதாரணமாயிருக்க வேண்டும் என்று நினைப்பது பேராசை. நல்ல தனித் தமிழில் படைக்கப் பட்டிருக்கும் பருத்திக்காடு கவிஞரின் மற்றுமோர் வெற்றிப்படைப்பு.யுகபாரதியின் ஒரு கவிதையோடு நிறைவு செய்கிறேன்.

உணர்வு வயப்படுங்கள்
பிறகு சிந்திக்கலாம்
ஊர் பிழைக்கும்..

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...