வரலாற்றுப் பயணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வரலாற்றுப் பயணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 9 டிசம்பர், 2019

பெருமுக்கல் தொல்லியல் வரலாற்றியல் பயணம். 01-09-2018

புதுச்சேரி, கலாம் விதைகளின் விருட்சம் சமூக இயக்கம்
ஒருங்கிணைத்த  பெருமுக்கல் தொல்லியல் வரலாற்றியல் பயணம்.
(01-09-2018)


பெருமுக்கல் வரலாறு குறித்த விளக்கவுரை முனைவர் நா.இளங்கோ

பெருமுக்கல் மலை: திண்டிவனத்திலிருந்து 11 கி.மீ தொலைவில் மரக்காணம் செல்லும் சாலையில் உள்ளது.

பெருமுக்கல் மலை


பெருமுக்கல் பாறைக் கற்குறியீட்டு ஓவியங்கள் சுமார் 6000 ஆண்டுகளுக்கு முந்தைய எகிப்திய ஹீரோக்ளிபிக் HIEROGLYPHIC வகையைச் சார்ந்தவை என்றும் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முந்தைய கீறல் ஓவியங்கள் PETRO GLYPHS வகையைச் சார்ந்தவை என்றும் இருவேறு கருத்துக்கள் உள்ளன. இக்குறியீடுகள் பெருமுக்கல் மலையிலுள்ள சீதைக் குகை என்று ஊர்மக்களால் அழைக்கப்படும் குகையில் இடம்பெற்றுள்ளன.

4000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கீறல் ஓவியக் களஆய்வில் முனைவர் நா.இளங்கோ


பெருமுக்கல் கீறல் ஓவியங்கள்
பெருமுக்கல் மலையிலுள்ள கோயில் முக்தியாலீசுவர் திருக்கோயில். இத்திருக்கோயிலின் சுற்றுச்சுவர்களில் இடம்பெற்றுள்ள 60 கல்வெட்டுகள் பதிவுசெய்து வெளியிடப்பட்டுள்ளன. இக் கல்வெட்டுகள் மூலம் பிற்காலச் சோழா், பாண்டியா், காடவராயா், சம்புவரையா் மற்றும் விஜயநகர மன்னா்களின் திருக்கோயில் கொடைகள் குறித்த செய்திகளை அறிந்துகொள்ள முடிகின்றது. முற்காலச் சோழா் காலம் முதல் தமிழக வரலாற்றினை அறிந்துகொள்ள உதவும் அரிய ஆவணங்களாக இவை உள்ளன.
இக்கோயிலின் பழமையான கல்வெட்டு உத்தமசோழன் காலத்துக் கல்வெட்டாகும்.
அடுத்து முதலாம் குலோத்துங்க சோழன் விக்கிரம சோழன் காலத்துக் கல்வெட்டுகள் ஏராளமாக உள்ளன. விக்கிரம சோழ மன்னனின் காலத்தில் தான் (கி.பி 1118−35) மலை மீது உள்ள திருக்கோயில் புனரமைக்கப்பட்டுக் கற்றளியாக திருப்பணி செய்யப் பட்டுள்ளது.
இக்கோயிலுக்கு மிகுதியான திருப்பணிகள் செய்தகாக்கு நாயகனின்திருவுருவச் சிலையும் கோயிலின் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டபெரியான் திருவனான சிறுத்தொண்டன்திருவுருவச் சிலையும் திருக்கோயிலின் அா்ச்சகரானதிருச்சிற்றம் பலமுடையான் அன்பா்க்கரசு பட்டனதுதிருவுருவச் சிலையும் சிற்பங்களாக இக்கோயிலில் செதுக்கப்பட்டுள்ளன.




கோயில் கல்வெட்டுகளில் பெருமுக்கல், “ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து ஒய்மா நாடான விசைய இராசேந்திர வளநாட்டு பெருமுக்கிலான கங்கை கொண்ட நல்லூா்என்று குறிப்பிடப்படுகிறது. முதலாம் இராசேந்திரன் காலத்தில் பெருமுக்கல், கங்கை கொண்ட நல்லூர் என்று அழைக்கப் பட்டிருக்கலாம்

பெருமுக்கல் கோட்டை.
ஆற்காடு நவாபின் ஆளுகைக்கு உட்பட்டு 18ஆம் நூற்றாண்டில் ஹைதர் அலிகான் பெருமுக்கல் பகுதியை ஆட்சி புரிந்துள்ளார். அவர்காலத்தில் சந்தா சாஹிப் மகனது திருமணம் 1747 வருடம் டிசம்பா் மாதம் புதுச்சேரியில் நடைபெற்றுள்ளது. இத்திருமண விழாவில் புதுச்சேரியின் பிரெஞ்சு ஆளுநா் கலந்துகொள்ள வேண்டுமென பெருமுக்கலை ஆண்ட ஹைதர் அலிகான் நேரில் சென்று தங்க நகைகளைப் பரிசளித்து அழைப்பு விடுத்ததாக புதுவை ஆனந்தரங்கப் பிள்ளையின் டைரிக்குறிப்பு தெரிவிக்கின்றது.
ஹைதர் அலிகான் பிரெஞ்சு அரசாங்கத்திற்கு ஆதரவாக இருந்ததால் ஆங்கிலேயரின் பகையை எதிர்கொள்ள நேரிட்டது. புதுச்சேரியைக் கைப்பற்ற பிரிட்டிஷ் தளபதி கர்னா் அயா்கூட் தலைமையில் பெரும்படை 1760 ல் பெருமுக்கல் கோட்டையைத் தாக்கி அங்கிருந்த செல்வங்களைக் கொள்ளை யடித்துக் கோட்டையையும் கைப்பற்றியது.
பின்னா் 1780 ல் மைசூரை ஆண்ட ஹைதா் அலியின் படைகள் பெருமுக்கல் கோட்டையைக் கைப்பற்றின. மீண்டும் 1783 ல் பெருமுக்கல் கோட்டை ஆங்கிலேயா் கட்டுப்பாட்டிற்குச் சென்றது.
1790ல் ஹைதர் அலியின் மகன் திப்புசுல்தான் மீண்டும் ஆங்கிலேயரிடமிருந்து இக்கோட்டையைக் கைப்பற்றினார். அடுத்த சில ஆண்டுகளில் மீண்டும் பெருமுக்கல் கோட்டை பிரிட்டிஷ் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.
18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடர்ந்து பல முறை போரின் கோரத் தாக்குதலுக்கு உள்ளான பெருமுக்கல் கோட்டை சிதைந்து சின்னாபின்னமாக இப்பொழுதும் காட்சியளிக்கிறது.

சனி, 1 ஜூன், 2019

நம் மூதாதையர்களின் முகவரி தேடி - மூன்று

நம் மூதாதையர்களின் முகவரி தேடி -3
சிங்கவரம்

சிங்கவரம். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி நகருக்கு வடக்கே சுமார் ஐந்து கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயில் பல்லவகாலத்துக் குடைவரைக் கோயில். இக்குடைவரைக் கோயிலை அமைத்தவன் முதலாம் மகேந்திரவர்மனா? அல்லது அவன் தந்தை சிம்மவிஷ்னுவா? என்பதற்குத் தெளிவான சான்றுகள் இல்லை. சிங்கவரம் என்பது சிஙகபுரம் என்பதன் மரூஉ என்றும் சிம்மவிஷ்னுவின் பெயரால் இவ்வூர் உருவாக்கப் பட்டது என்பதும் தெளிவு. சிங்கவரம் முன்னாளில் விஷ்னுசெஞ்சி என்று அழைக்கப் பட்டதாகத் தெரிகிறது.
அடிவாரத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட படிகள் ஏறிச்சென்றால் கோவிலைக் காணலாம்.உள்ளே எல்லோரா போல் ஒரே பாறையைக் குடைந்து உருவாக்கப் பட்ட குடைவரைக் கோவில். அந்தப் பாறையிலேயே முன்புறம் இரு தூண்கள் மிகப்பெரிய அளவில் நிற்க உள்ளே நீண்ட கருவறை தெரிகிறது குடைவரையாகத் திகழும் கருவறையில், தலையை சற்றே தூக்கியவாறு, வலக்கையைக் கீழே தொங்கவிட்டு, இடக் கையால் கடக முத்திரை காட்டி, தெற்கில் தலை வைத்துப் பாம்பணையில் கிடந்த கோலத்தில் உள்ளார் அரங்கநாதர். அரந்தநார் உருவம் 24 அடி நீளமாம். மூலவரை மூன்று தனித்தனிப் பகுதிகளாகத்தான் பார்க்கமுடியும். முதல் பாகத்தில் இறைவன் முகம், கரங்கள், ஆதிசேடன், கந்தர்வர் மற்றும் திருமகள்; இரண்டாம் பாகத்தில் இறைவனின் உடல்பகுதி மற்றும் பிரம்மா, மூன்றாவது பாகத்தில்- இறைவனின் பாதங்கள், கீழே பூமாதேவி, நாரதர், பிரகலாதன், பிருகு மற்றும் அத்ரி முனிவர்களைக் காணலாம்.
சிங்கவரம் கோயில் இறைவனைப் பிற்காலத்துச் சாசனம் ஒன்று, திருப்பன்றிக் குன்று எம்பெருமான் எனக் குறிப்பிடுகின்றது. எனவே தொடக்கத்தில் இக்குடைவரைக் கோவில் வராகப்பெருமாள் கோவிலாக இருந்திருக்க வேண்டும் என்பார் மயிலை சீனி வேங்கடசாமி.
மேலும் இப்போதுள்ள மூலவர் திருவரங்கத்திலிருந்து மாலிக்காபூர் படையெடுப்பின்போது இங்கு கொண்டுவந்து நிறுவப்பட்டது என்று சொல்லப்படுகிறது. இக்கருத்து ஏற்புடையதாகத் தெரியவில்லை.
சிங்கவரம் - மூலவர் -அரங்கநாதர்

சிங்கவரம் கோவில்

நம் மூதாதையர்களின் முகவரி தேடி 
சிங்கவரம்- கொற்றவை

சிங்கவரம், பல்லவகாலத்துக் குடைவரைக் கோவிலின் குடவரைக்குத் தென்புறத்தில் சற்று கீழே உள்ள பாறையை ஒட்டி தாயார் அரங்கநாயகி கருவறை உள்ளது. அக்கருவறையின் உள்ளே அங்குள்ள பாறையில் புடைப்புச் சிற்பமாக துர்க்கையின் சிற்பம் இடம்பெற்றுள்ளது. இரண்டு கைகளில் சங்கு சக்கரம் ஏந்தியவளாக வடிக்கப்பட்டிருப்பதால் இத்துர்க்கை, விஷ்ணு துர்க்கை என்றழைக்கப்படுகிறாள்.
தாயார் சன்னதி வழியாக துர்க்கையை நாம் பார்க்க முடியாது. சன்னதியின் அருகேயுள்ள மிகச்சிறிய சன்னல் வழியாகத்தான் அப்புடைப்புச் சிற்பத்தைக் காணமுடியும்.
நான் கீழே இணைத்துள்ள அரங்கநாயகி சிலையின் பின்புறத்தில் புடைப்புச் சிற்பத்தின் ஒருபகுதி தெரிவதைக் காணலாம். விஷ்ணு துர்க்கை என்றழைக்கப்படும் அப்புடைப்புச் சிற்பத்தின் படத்தையும் இப்பதிவில் இணைத்துள்ளேன். (இணையத்திற்கு நன்றி)
விஷ்ணு துர்க்கை என்று இப்புடைப்புச் சிற்பம் அழைக்கப்பட்டாலும் உண்மையில் இச்சிற்பம் கொற்றவையே. மகிஷாசுர மர்த்தினியாகிய கொற்றவையின் சிற்பம் பல்லவர்காலச் சிற்பத்தொகுதிகளிலும் குடைவரைகளிலும் இடம்பெறுவது வழக்கமே.
ஆனால் அச்சிற்பங்களில் மகிஷாசுரனாகிய எருமைத் தலைமேல் கொற்றவை நிற்பதுபோல்தான் செதுக்கப்பட்டிருக்கும். ஆனால் சிங்கவரத்துக் கொற்றவைச் சிற்பமோ அவ்வாறில்லாமல், ஒரு காலை எருமைத் தலைமேலும் மற்றொரு காலைத் தரையின் மேலும் வைத்து நிற்கிறது. இந்த அமைப்புள்ள கொற்றவையின் உருவம் வேறெங்கும் காணப்படவில்லை. இது பல்லவச் சிற்பங்களில் மிகப் பழமையானது என்பார் மயிலை சீனி வேங்கடசாமி.
இச்சிற்பத்தில் போர்வீரன் ஒருவன் கொற்றவைக்கு நவகண்டம் படைக்கிறான் (தலையை வெட்டிப் படையலாகத் தருவது மட்டுமல்ல உடம்பின் ஒருபகுதியை அரிந்து படையலாகத் தருவதும் நவகண்டப் படையல்தான்) என ஊகிக்க முடிகிறது. மற்றொருவன் கொற்றவைக்குப் பூசை செய்கிறான்
சிங்கவரம் - கொற்றவை



நம் மூதாதையர்களின் முகவரி தேடி - இரண்டு

நம் மூதாதையர்களின் முகவரி தேடி -2
மண்டகப்பட்டு
மண்டகப்பட்டு: விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் செஞ்சி இணைப்புச் சாலையில் அமைந்துள்ளது மண்டகப்பட்டு என்னும் இவ்வூர். இலக்சிதன் கோயில் என அழைக்கப்படும் இக்குடைவரைக் கோயில். கி.பி 590 முதல் கி.பி 630 வரை தமிழகத்தை ஆட்சி புரிந்த பல்லவ மன்னனான முதலாம் மகேந்திரவர்மனால் உருவாக்கப்பட்டது. தமிழ் நாட்டில் கல்லினால் அமைக்கப்பட்ட அதாவது கல்லைக் குடைந்து உருவாக்கிய முதலாவது கோயில் என்றவகையில் தமிழகக் கட்டிடக்கலை வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக இக்குடைவரைக் கோவில் கருதப்படுகின்றது.
இக்குடைவரைக் கோவிலில் காணப்படும் மகேந்திரவர்மனின் வடமொழிக் கல்வெட்டு, "செங்கல், உலோகம், சுதை, மரம் இல்லாமல், பாறைகளால் சிவபெருமான், பிரம்மா (நான்முகன்), விஷ்ணு (திருமால்) ஆகிய மும்மூர்த்தி களுக்கும், விசித்திரசித்தன் எனும் அரசனால் எடுக்கப்பட்ட இலக்ஷிதாயனக் கோவில்" என்று இக்கோயிலைக் குறிப்பிடுகின்றது.

மண்டகப்பட்டு - வடமொழிக் கல்வெட்டு
முனைவர் நா.இளங்கோ- பேராசிரியர்கள் - ஆய்வாளர்கள்

முனைவர் நா.இளங்கோ - இரத்தின. வேங்கடேசன்

நம் மூதாதையர்களின் முகவரி தேடி 
திருநாதர் குன்று

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஊரின் வடக்கே மூன்று கி.மீ. தொலைவில் திருநாதர் குன்று என்றழைக்கப்படும் சிறிய மலைக் குன்று உள்ளது. இதனைச் சிறுகடம்பூர் மலையென்றும் அழைப்பர். இக்குன்று தமிழ் மற்றும் தமிழக வரலாற்றில் முக்கிய இடம் பெற்றுள்ளது. இம்மலையின் உச்சியில் உள்ள பெரிய கற்பாறையில் சமண சமயத்தின் இருபத்து நான்கு தீர்த்தங்கரர்களின் திருமேனிகள் செதுக்கப்பட்டுள்ளன. அவை அமர்ந்த நிலையில், இருவரிசையில் அமைக்கப்பட்டு, கழுகுமலையில் உள்ள சமணச் சிற்பங்கள் போலுள்ளன. ஒவ்வொரு தீர்த்தங்கரரின் தலையின் மேற்பகுதியில் முக்குடை காணப்படுகிறது. இரு சாமரங்கள் குறுக்காகப் பிணைந்த நிலையில் வடிக்கப்பட்டுள்ளன. இவை கி.பி ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று கருதப்படுகிறது.
இக்குன்றின் வட திசையில் அருகதேவரின் சிற்பமும், குன்றின் மீது செல்லும் வழியில் உடைந்த நிலையில் அருகதேவரின் அமர்ந்துள்ள சிலையும் காணப்படுகின்றன. குன்றின் உச்சியில் சமணத் துறவிகள் வசித்த பாறைக் குகை ஒன்றும் உள்ளது. சுமார் இருபது பேர் தங்கக்கூடிய வகையில் இயற்கையாக அமைந்துள்ள இக்குகையில் சமண முனிவர்கள் தங்கி உண்ணாநோன்பு இருந்து உயிர் துறந்திருக்கலாம். அதற்கான கல்வெட்டுச் சான்றுகளும் (கி.பி. 5 அல்லது 6ஆம் நூற்றாண்டு) அங்கேயே கிடைக்கின்றன.

முனைவர் நா.இளங்கோ - சிறப்புரை

திருநாதர் குன்று - குகை

திருநாதர் குன்று

இக்குன்றின் மேற்குப் பகுதியில் காணப்படும் நிசீதிகைக் (உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தவர்களின்) கல்வெட்டுகள் தமிழ்மொழி மற்றும் சமய சமூக வரலாற்றில் மிகமிக முக்கியமானதாகும். முதிர்ந்தநிலை பிராமி மொழியிலிருந்து வட்டெழுத்தாக தமிழ் வளர்ந்த, மாறுதல் அடைகிற காலக்கட்டத்தைச் சேர்ந்த கல்வெட்டாக இக்வெட்டுகளைக் குறிப்பிடமுடியும். சிறப்பாக, ‘ஐ’ எனும் தமிழ் எழுத்து திருநாதர்குன்று கல்வெட்டில்தான் முதன்முதலில் காணக் கிடைக்கின்றது.
இங்குள்ள ஒரு கல்வெட்டு, சந்திரநந்தி ஆசிரியர் எனும் சமணத்துறவி ஐம்பத்தேழு நாட்கள் உண்ணா நோன்பிருந்து வீடுபேறு பெற்றார் என்ற செய்தியைத் தெரிவிக்கின்றது. இக்கல்வெட்டின் உண்மை வடிவத்தையும் அதில் இடம்பெற்றுள்ள தமிழ் எழுத்துக்களின் தற்போதய வரிவடிவத்தையும் இணைத்து இங்கே பதிவிட்டுள்ளேன்.
மற்றொரு கல்வெட்டு, இளைய பட்டாரகர் எனும் சமணத்துறவி முப்பது நாட்கள் உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தார் என்ற செய்தியைத் தெரிவிக்கின்றது.
திருநாதர் குன்று - கல்வெட்டு

திருநாதர் குன்று - கல்வெட்டு

முனைவர் நா.இளங்கோ : கல்வெட்டு எழுத்து விளக்கம்


நம் மூதாதையர்களின் முகவரி தேடி - ஒன்று

நம் மூதாதையர்களின் முகவரி தேடி  -1

முனைவர் நா.இளங்கோ

தமிழ்ப் பேராசிரியர்
புதுச்சேரி-605008

 10-12-2016 சனிக்கிழமை, புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம், சிங்கப்பூர் முனைவர் இரத்தின.வேங்கடேசனின் "விடுதலைப் போராட்ட வீரர் இரத்தினவேலு - வேங்கடேசன் அறக்கட்டளை"யின் ஆதரவில் ஒரு வரலாற்றுச் சிற்றுலாவிற்கு ஏற்பாடு செய்திருந்தது.
நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் பக்தவச்சல பாரதி, முனைவர் இரவிசங்கர், முனைவர் இரா.சம்பத் இவர்களுடன் நெறியாளராக முனைவர் நா.இளங்கோ மற்றும் வழிநடத்தும் முனைவர் இரத்தின.வேங்கடேசன், தமிழ்மாலை வேங்கடேசன்
டன் பேராசிரியர் அரங்க.முருகையன், பேராசிரியர் கே.பழனிவேலு மற்றும் ஆய்வு மாணவர்கள் நாற்பது பேர் புடைசூழச் சிற்றுலா புறப்பட்டோம். உடன் விழுப்புரம் எழுத்தாளர் கோ.செங்குட்டுவன் ஆற்றுப்படுத்துநராக...
சிற்றுலா சென்ற இடங்கள் 

கீழ்வாலை, பனைமலை, மண்டகப்பட்டு, திருநாதர் குன்று, சிங்கவரம்..

முனைவர் நா.இளங்கோ - பேராசிரியர்களுடன்

ஆய்வாளர்கள் - பேராசிரியர்கள்

ஆய்வாளர்கள்

நம் மூதாதையர்களின் முகவரி தேடி 

கீழ்வாலை
கீழ்வாலை: விழுப்புரம் திருவண்ணாமலை சாலையில் கண்டாச்சிபுரம் அருகே உள்ள சிற்றூர் கீழ்வாலை. நெடுஞ்சாலையை ஒட்டித் தெற்கே அரை கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள பாறைகளும், சிறுகுன்றுகளும், மலைக்குகைகளும் கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றின் மிச்ச சொச்சங்களுடன் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன.
கீழ்வாலையின் அந்தப் பாறைகளில் பழங்கற்கால மனிதர்கள் வரைந்துள்ள சிவப்புநிற ஓவியங்கள் பல காணப்படுகின்றன. இத்தகு பாறை ஓவியங்கள் பெருங்கற்கால ஓவியங்கள் என்று அழைக்கப் படுகின்றன. அப்பாறையில் இடம்பெற்றுள்ள சில குறியீடுகள் சிந்து சமவெளிக் குறியீடுகளை ஒத்துள்ளன என்பது கூடுதல் சிறப்பு.
கீழ்வாலையின் பாறைகளில் இடம்பெற்றிருந்த நூற்றுக்கணக்கான ஓவியங்கள், குறியீடுகள் இவற்றில் காலவெள்ளத்தில் அழிந்தவை போக எஞ்சியிக்கும் ஓவியங்கள் வெகுசிலவே.
இப்பொழுதும் மிக அழகாகக் காட்சியளிக்கும் ஓர் ஓவியம் நம்கண்ணையும் கருத்தையும் கவரத்தக்க வகையில் தீட்டப்பட்டிருக்கிறது. அவ்வோவியத்தில் குதிரை போன்றதோர் விலங்கின் மீது ஒருவன் அமர்ந்திருக்க அவ்விலங்கைப் பிணித்துள்ள கயிற்றினைப் பிடித்துக்கொண்டு ஒரு பெண் முன்னே செல்வது போன்றும் எதிரில் ஒரு மனிதன் எதிர்ப்படுவது போன்றும் அமைந்துள்ளது அவ்வோவியம். மனிதர்களின் முகங்கள் பறவைகளின் அலகுகளோடு தீட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அதே பாறையின் ஒருபுறத்தில் ஐந்து குறியீடுகள் வரிசையாக வரையப்பட்டுள்ளன. அந்த ஐந்து குறியீடுகளும் சிந்துசமவெளி அகழ்வாய்வில் கிடைத்துள்ள எழுத்துக் குறியீடுகளை ஒத்துள்ளன.
எழுத்துக் குறியீடுகளும் ஓவியங்களும் தீட்டப்பட்டுள்ள குன்றுக்கு அருகே அவ்வோவியங்களைத் தீட்டிய ஆதிமனிதர்கள் வாழ்ந்த குகை ஒன்றும் உள்ளது. அந்தக் குகையில் கிட்டத்தட்ட முப்பது அல்லது நாற்பதுபேர் வசித்திருக்கக்கூடும் என்று ஊகிக்க முடிகிறது. ஆதி மனிதர்களின் இந்தக் குகையை ஒட்டி நீர்ச்சுனை ஒன்று உள்ளது. எத்தகைய வறட்சியிலும் வற்றாத இந்தச் சுனைநீரை அந்த ஆதிமனிதர்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும். இந்தக் குகையும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளும் அரிய வரலாற்றுப் புதையல்களாகும்.
பாறைகளின் அருகே பேராசிரியர்களும் ஆய்வாளர்களும் குழுவாக அமர்ந்து கலந்துரையாடிய வேளையில் முனைவர் நா.இளங்கோவும் எழுத்தாளர் கோ.செங்குட்டுவனும் இக்கீழ்வாலை ஓவியங்களின் வரலாற்றுச் சிறப்பினை ஆய்வாளர்களுக்கு விளக்கியுரைத்தனர்.

முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா.இளங்கோ - வரலாறு 

கீழ்வாலை ஓவியம்

இரத்தின.வேங்கடேசன் - முனைவர் நா.இளங்கோ

நம் மூதாதையர்களின் முகவரி தேடி 
பனைமலை
பனைமலை: பல்லவ அரச வம்சத்தைச் சேர்ந்த இரண்டாம் நரசிம்மன் என்ற ராஜசிம்மன் ( 700-728 CE ) கலை அம்சத்தில் உருவான பனைமலை தாளகிரீஸ்வரர் ஆலயம் கடினமான சிவப்புக் கருங்கல்லால் ஆனதாகும் விழுப்புரம் வழியாக செஞ்சி செல்லும் சாலையில் (அனந்தபுரம் வழி) 20 கி.மீ தொலைவில் பனைமலை அமைந்திருக்கிறது.
பனைமலைக் கோவில் ஓவியம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. கோயிலின் வடக்குச் சிற்றாலயத்தில் இவ்வோவியம் இடம்பெற்றுள்ளது மகுடம் தரித்தத் தலைக்கு மேல் வண்ணக் குடை, ஒரு கால் தரையில் ஊன்றியிருக்க மற்றொரு காலை மடித்துத் தலையை சாய்த்து, அழகிய அணிகலன்களுடன் காட்சித் தருகிறாள் உமையம்மை. (இவ்வோவியம் பல்லவனின் அரசியாகிய அரங்கபதாகை என்போரும் உண்டு)
எதிர்ச் சுவரில் சிவபெருமானின் சம்ஹார தாண்டவம். அதனை இரசிக்கும் பார்வதி. சிவனின் சம்ஹார தாண்டவ ஓவியம் முற்றிலும் சிதைந்துவிட்ட நிலையில், பார்வதி தேவியின் ஓவியம் மட்டும் ஓரளவு நின்றிருக்கிறது.
பனைமலை ஓவியம், தென்னிந்திய ஓவியக் கலை மரபில் அஜந்தா எல்லோராவுக்கு அடுத்த நிலையில் இருப்பது. தமிழகத்தில் எஞ்சி நிற்கும் பல்லவ ஓவியம். இலங்கை சிகிரியா மலைக் குன்றில் உள்ள ஓவியங்களுடன் ஒப்பிடக் கூடியது.
மேலும் மகிஷ சம்ஹாரத்திற்க்குப் பின் சாந்தமான வடிவில் நிற்கும் மகிஷாசுரமர்த்தனி சிற்பம் ஒன்று பனைமலையின் இடப்பக்க பாதையில் ஒரு சிறிய குகையில் அமைந்திருக்கிறது. காண்பதற்கரிய இச்சிற்பம் கண்ணையும் கருத்தையும் கவரத்தக்கது.

பனைமலை - பல்லவர் ஓவியம்


பனைமலல - கொற்றவை

பனைமலை

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...