திங்கள், 30 ஆகஸ்ட், 2010

பிரஞ்சிந்திய விடுதலை வீரர் மக்கள் தலைவர் வ.சுப்பையா -பகுதி-1

பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

மக்கள் தலைவர்:

1987 இல் இந்தியாவின் 40 ஆவது சுதந்திர ஆண்டு விழாவின் போது இந்திய அரசு தேர்ந்தெடுத்து அறிவித்த தலைசிறந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் 97 பேரில் மக்கள் தலைவர் தோழர் வ.சுப்பையாவும் ஒருவர். மகாகவி என்றால் அது பாரதியாரையும் புரட்சிக்கவிஞர் என்றால் அது பாரதிதாசனையும் பெரியார் என்றால் அது ஈ.வெ.ராமசாமி அவர்களையும் குறிப்பது போல் மக்கள் தலைவர் என்றால் அது தோழர் வ.சுப்பையா அவர்களையே குறிக்கும்.

பிரஞ்சு ஏகாதிபத்தியத்தின் பிடியில் சிக்குண்டு கிடந்த புதுச்சேரியை விடுவித்துச் சுதந்திர பூமியாக மாற்ற மக்களைத் திரட்டிப் போராடி இந்தியத் தாயகத்துடன் இணைத்த சிற்பி தோழர் வ.சுப்பையாதான் என்பதை அவருக்கு நேர்எதிரான கொள்கை நிலையில் நிற்பவர்களும் ஒப்புக் கொள்வார்கள். எத்தனைமுறை சிறையில் இட்டாலும் நாடு கடத்தினாலும் கொண்ட கொள்கையில் உறுதியோடு நின்று கடைசிவரை போராடி வெற்றிகண்ட பெருமை அவருக்கு உண்டு.

தொழிற்சங்கம் கண்ட தலைவர்:

புதுவை பிரஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்தபோது தொழிற்சங்கம் அமைக்கும் அடிப்படை உரிமைகூட மறுக்கப்பட்டிருந்தது. மக்கள் பொதுக்கூட்டங்கள் நடத்தவும் நேரடியான அரசியல் போராட்டங்களில் ஈடுபடவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இத்தகைய நெருக்கடியான காலங்களில் தோழர் வ.சுப்பையா அவர்கள் எழுச்சியும் பொதுநலத்தில் நாட்டமும் மிக்க இளைஞர்களை, மாணவர்களை ஒருங்கிணைத்து இளைஞர் சங்கத்தினை அமைத்துச் சமுதாயத்திற்குப் பாடுபட்டார்.

தம் இளமைக்காலம் முதலே தேச நலனில் அக்கறை கொண்டு இந்திய அளவில் நடைபெறும் சுதந்திரப் போராட்டங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

காந்தியடிகளும் மக்கள் தலைவரும்:

தோழர் வ.சுப்பையா அவர்கள் 1933 இல் மகாத்மா காந்தியடிகள் அமைத்த அரிசன சேவா சங்கத்தின் கிளை அமைப்பு ஒன்றைப் புதுவையில் தொடங்கி அதன் செயலராக இருந்து தீண்டாமையை ஒழிக்கவும் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் மேன்மைக்காகவும் பாடுபட்டார். 1934 பிப்ரவரி 17 இல் மிகுந்த முயற்சி மேற்கொண்டு மகாத்மாவைப் புதுவைக்கு அழைத்து வந்தார். முதன்முதலில் காந்தியடிகளைப் புதுவைக்கு அழைத்துவந்த பெருமை தோழர் வ.சுப்பையா அவர்களையே சாரும்.

தோழர் வ.சுப்பையா அவர்கள் அரிசன சேவா சங்கத்தில் தீவிரமாக ஈடுபட்டுப் பணியாற்றியதால் சமூகத்தின் அடித்தள மக்களின் சமூகப் பொருளாதாரப் பிரச்சனைகளை நன்கு புரிந்துகொள்ள முடிந்தது. அடித்தள மக்களில் பலர் பஞ்சாலைத் தொழிலாளர்களாக இருந்தமையால், அன்றைய சூழலில் பஞ்சாலைத் தொழிலாளர்கள் பிரஞ்சு ஆலை முதலாளிகளால் உரிமைகள் ஏதுமற்ற அடிமைகள்போல் நடத்தப்படுவது கண்டு மனம் வெதும்பினார். ஆலைத் தொழிலாளர்களுக்குத் தொழிற்சங்கம் பற்றியும் தொழிலாளர் உரிமை பற்றியும் போதித்துக் கிராமங்கள்தோறும் தொழிலாளர் வர்க்கத்தை ஒன்று திரட்டினார். ஆலையில் இரகசியமாகத் தொழிற்சங்கம் ஏற்படுத்தினார்.

சுதந்திரம் இதழைத் தொடங்கினார்:

இதே காலக்கட்டத்தில் 1934 ஜூன் முதல் ‘சுதந்திரம்’ என்ற மாதப் பத்திரிக்கையைத் தொடங்கி இதழ்பணியின் வழியாகத் தொழிலாளர் நலன்களைப் பேணினார்.

பஞ்சாலைப் போராட்டங்கள்:

1935, 36 களில் புதுவைப் பஞ்சாலைகளில் நடைபெற்ற போராட்டங்கள் அனைத்திற்கும் வழிகாட்டியாகவும் உந்துசக்தியாகவும் இருந்து செயலாற்றினார். தொழிலாளர் போராட்டங்களின் விளைவாக வேலைநேரம் குறைக்கப்பட்டது. கூலி உயர்வும் வேலை உத்திரவாதமும் வழங்கப்பட்டன. ஆனால் தொழிற்சங்க உரிமை மட்டும் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்தது.

1936 இல் தொழிற்சங்க உரிமை கோரி மூன்று பஞ்சாலைத் தொழிலாளர்களும் இணைந்து நடத்திய போராட்டத்தை ஒடுக்க 1936 ஜூலை 30 அன்று பிரஞ்சு ஏகாதிபத்யம் ராணுவத்தின் துணையோடு அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டது. துப்பாக்கிச் சூட்டில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். நூற்றுக் கணக்கானோர் காயமடைந்தனர். இச்சம்பவம் இந்தியா மட்டுமில்லாமல் உலக நாடுகளின் கவனத்தைப் புதுச்சேரியின் பக்கம் திருப்பியது. இப்போராட்டத்தை முன்னின்று நடத்திய பெருமை தோழர் வ.சுப்பையா அவர்களையே சாரும்.

எட்டு மணி நேர வேலை, தொழிற்சங்க உரிமை:

தொழிலாளர்கள் மீதான அடக்குமுறை, துப்பாக்கிச் சூடு போன்ற பிரச்சனைகளைப் பிரஞ்சு அரசோடு பேசித்தீர்க்க பண்டித நேருவின் ஆலோசனையின் பேரில் அவரின் அறிமுகக் கடிதத்தோடு தோழர் வ.சுப்பையா 1937 மார்ச் 6 இல் பிரான்சுக்குச் சென்றார். பிரஞ்சு அரசோடு இப்பிரச்சனை குறித்து விவாதித்தார். அதன் விளைவாக 1937 ஏப்ரல் 6 இல் பிரஞ்சு- இந்தியாவிற்கான தொழிற்சங்கச் சட்டம் ஒன்று இயற்றப்பட்டது. அதன்படி தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 8 மணிநேர வேலையும் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையும் வழங்கப்பட்டன. ஆசிய நாடுகளிலேயே 8 மணிநேர வேலை என்பது புதுச்சேரியில்தான் முதன்முதலாக அமுலாக்கப்பட்டது. அத்துடன் தொழிலாளர்களுக்கான கூட்டு ஒப்பந்தம், ஓய்வுக்கால ஊதியம், பெண் ஊழியர்களுக்கும் அவர்கள் குழந்தைகளுக்கும் சமூகப்பயன் அளிக்கும் திட்டங்களும் வரையறுக்கப்பட்டன. இத்தணைச் சாதனைகளுக்கும் சொந்தக்காரர் தோழர் வ.சுப்பையா அவர்கள்.

பிரஞ்சிந்திய விடுதலை வீரர் - மக்கள் தலைவர் -வ.சுப்பையா -பகுதி-2

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
புதுச்சேரி- 605 008

சிறைவாழ்க்கையும் தலைமறைவு வாழ்க்கையும்:

1938 ஆம் ஆண்டு மத்தியில் பிரஞ்சு அரசானது புதுவையில் எழுந்த தேசிய விடுதலை இயக்கப் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் சுப்பையாவைப் பிரஞ்சு எல்லையில் கைது செய்யும் ஆணையைப் பிறப்பித்தது. சென்னையில் பிரிட்டிஷ் எல்லையில் கைது செய்யும் ஆணையும் பிறப்பிக்கப்பட்டது. ஆதலால் 1938 ஜூன் முதல் தோழர் வ.சுப்பையா அவர்கள் தலைமறைவானார். ஆயினும் சென்னையில் கைது செய்யப்பட்டு 1938 டிசம்பரில் மூன்று வாரகாலம் சிறை வைக்கப்பட்டார். பின்னர் பிரிட்டிஷ் அரசானது சுப்பையாவைப் பிரஞ்சு அரசிடம் ஒப்படைத்தது. 1939 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூன் 11 வரை புதுவைச் சிறையில் வைக்கப்பட்டார். அவர் மீது தொடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யென நிரூபிக்கப்பட்டதால் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.

1939 செப்டம்பர் 1 இல் இரண்டாம் உலகப்போர் மூண்டபின்னர் பிரிட்டி~; அரசானது தோழர் வ.சுப்பையா பொதுக்கூட்டங்களில் பேசக்கூடாது என்னும் தடையை விதித்தது. ஆயினும் அவர் தடையை மீறிப் பேசினார். அதனால் 1941 ஜனவரியில் தஞ்சாவூரில் பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டு 1942 செப்டம்பர் முதல் வேலூர் மத்தியச் சிறைச்சாலையில் அரசியல் கைதியாகக் காவலில் வைக்கப்பட்டார்.
1944 ஏப்ரல் 18 இல் பிறப்பிக்கப்பட்ட ஆணைப்படி தோழர் வ.சுப்பையா பிரஞ்சு எல்லையிலிருந்து நாடு கடத்தப்பட்டார். பின்னர் பிரான்சு விடுதலை பெற்று பாரிசில் புதிய ஆட்சி நிறுவப்பட்டவுடன் 1945 செப்டம்பர் 6 இல் சுப்பையா மீதிருந்த இத்தடை நீக்கப்பட்டது.

விடுதலைக்கான தேசிய ஜனநாயக முன்னணி:

புதுவையில் முழு அரசியல் தன்னாட்சி மாற்றம் தேவை என்பதை உணர்ந்த தோழர் வ.சுப்பையா அவர்கள் அந்நிய ஏகாதிபத்யத்திற்கு எதிரான அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைத்து தேசிய ஜனநாயக முன்னணி என்ற ஒரு பேரியக்கத்தைத் தொடங்கினார்.

1946 இன் இறுதியில் தோழர் சுப்பையா அவர்கள் பிரஞ்சுப் பாராளுமன்றத்தின் மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 1947 இல் பிரான்சு சென்றார். 1947 ஜூலை இறுதிவாக்கில் பண்டித நேரு அவர்களின் ஆலோசனையின் பேரில் புதுவை விடுதலை இயக்கச் செயல் திட்டம் குறித்து விவாதிக்க இந்தியா திரும்பினார்.

1947 ஆகஸ்ட் 15 இல் புதுச்சேரியின் விடுதலைப் போராட்டம் தொடங்கப்பட்டது. 1948 இறுதியில் பிரஞ்சு அரசானது தோழர் சுப்பையா மீது பலதரப்பட்ட கொடிய குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவரைக் கைது செய்ய முயன்றது. இதையறிந்த சுப்பையா தலைமறைவாக இருந்துகொண்டே விடுதலை இயக்கத்தை வழிகாட்டி நடத்தி வந்தார். 1950 ஜனவரி 15 அன்று பிரஞ்சு அரசின் கைக்கூலிகளாலும் போலீசாலும் தோழர் சுப்பையா அவர்களின் வீடு தீக்கிரையாக்கப்பட்டது. ஆயினும் தலைமறைவாக இருந்துகொண்டே புதுச்சேரி விடுதலைப் போராட்டத்தை வழிநடத்திக் கொண்டிருந்தார் சுப்பையா.

புதுச்சேரி விடுதலை 1954 நவம்பர்1:

1954 ஏப்ரல் 4 இல் தோழர் சுப்பையா அவர்கள் புதுடில்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அக்கூட்டத்தில் புதுச்சேரி மக்களுக்கு இறுதிக்கட்டப் போராட்ட அறைகூவல் விடுத்தார். 1954 ஏப்ரல் 7 முதல் இறுதிக்கட்டப் போராட்டம் பெரும் வலிமை பெற்றது. அதற்குமேலும் தாக்குப்பிடிக்க முடியாமல் பிரஞ்சு ஏகாதிபத்யம் இந்தியாவை விட்டு வெளியேறியது.

1954 நவம்பர் 1 புதுச்சேரி விடுதலை நாளின் போது தோழர் சுப்பையா அவர்கள் கோட்டக்குப்பத்திலிருந்து முத்தியால்பேட்டை வழியாகப் புதுச்சேரி எல்லைக்குள் நுழைந்தார். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டு தோழர் வ.சுப்பையா அவர்களுக்கு மாபெரும் வரவேற்பு அளித்தார்கள். புதுச்சேரியின் வரலாற்றில் இந்தநாள் ஒரு மறக்க முடியாத பொன்னாள் ஆக அமைந்தது. உண்மையான மக்கள் தலைவர் இவர்தான் என வரலாறு தன் ஏட்டில் குறித்துக் கொண்டது.

புதுச்சேரி விடுதலைக்குப் பின்:

1955 இல் புதிதாக அமைக்கப்பட்ட புதுவைச் சட்டமன்றத்திற்குத் தோழர் வ.சுப்பையா அவர்கள் ஓர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்பட்டார். 1969 முதல் 1977 வரை புதுவைச் சட்டமன்றத்தில் இருமுறை அமைச்சர் பதவி வகித்துள்ளார்.

தோழர் வ.சுப்பையா அவர்களின் 60 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அரசியல் வாழ்க்கையில் மகாத்மா காந்தி, பண்டித நேரு, லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, வி.வி.கிரி, நேதாஜி சுபா~; சந்திர போஸ், சத்தியமூர்த்தி, டாக்டர் இராதாக்கிரு~;ணன், வினோபாஜி, பெருந்தலைவர் காமராசர், திரு.வி.க., பெரியார் மற்றும் பல தேசிய அரசியல் தலைவர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டு நாட்டுப்பணியும் சமுதாயப் பணியும் ஆற்றியுள்ளார்.

தோழர் வ.சுப்பையா அவர்களின் தனிப்பெரும் சிறப்புகள்:

தோழர் வ.சுப்பையா அவர்கள் புதுவை மண்ணிலிருந்து புறப்பட்ட போராட்ட வீரர், பாட்டாளிகளின் தோழன், மிகச் சிறந்த தேசபக்தர், சாமான்யர்களுக்காகவே தம் வாழ்வை அர்ப்பணித்த சமூகநீதிக் காவலர், இந்திய தேசத்தலைவர்களுக்கெல்லாம் உற்ற நண்பர், மொத்தத்தில் தமக்கென வாழாப் பிறர்க்குரியாளர்.

பாரதத்தின் விடுதலை வரலாற்றிலும் புதுவையின் விடுதலை வரலாற்றிலும் இரண்டறக் கலந்து நிற்கும் இணையற்ற வீரர். ஆங்கில ஏகாதிபத்யம், பிரஞ்சு ஏகாதிபத்யம் என்ற இரண்டு ஏகாதிபத்யங்களை எதிர்த்துப் போராடி வெற்றி கண்ட ஒரே விடுதலை வீரர் என்ற பெருமைக்குரியவர் தோழர் வ.சுப்பையா அவர்கள்.

மக்கள் தலைவரின் பன்முகப்பட்ட பணிகள்:

தோழர் வ.சுப்பையா அவர்களின் பன்முகப்பட்ட பணிகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில், குறிப்பாகப் புதுவையின் விடுதலைப் போருக்கு வித்திட்டு வளர்த்து விடுதலையை முழுமைப்படுத்திப் பெற்றுத்தந்த மிகச் சிறந்த தேசபக்த விடுதலை மறவர். 1934 ஆம் ஆண்டிலேயே சுதந்திரம் என்ற பத்திரிக்கையை உருவாக்கித் தொடர்ந்து நடத்தி முற்போக்கு இதழ்களுக்கெல்லாம் முன்னுதாரணமாகத் திகழ்ந்த சிறந்த பத்திரிக்கையாளர். அகில இந்தியத் தொழிற்சங்க காங்கிரஸ் என்ற தேசிய அமைப்பில் திறமை மிக்க தலைவர். இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். சமூக, பொருளாதார, அரசியல், இலக்கியம் ஆகிய துறைகளில் எழுத்தாற்றலும் நாவன்மையும் ஒருங்கே கொண்ட சிந்தனையாளர். அரசியலில் பல பெரும் பொறுப்புகளை ஏற்றுத் திறம்பட நிர்வாகம் செய்த ஆற்றல் மிக்க நிர்வாகி. எல்லாவற்றுக்கும் மேலாக மக்களால் மதித்துப் போற்றப்படும் மக்கள் தலைவர்.

புதன், 11 ஆகஸ்ட், 2010

முதல் ஆற்றுப்படையின் நாயகன் சோழன் கரிகாலன்

முனைவர் நா.இளங்கோ

இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

சோழன் கரிகால் பெருவளத்தான்

ஆற்றுப்படை இலக்கியங்களில் காலத்தால் முந்தியது என்று கருதப்படும் பொருநராற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் சோழன் கரிகால் பெருவளத்தான் ஆவான். இவனே பத்துப்பாட்டினுள் ஒன்பதாவதாகத் திகழும் பட்டினப் பாலைக்கும் தலைவனாவான். அந்நூலைப் பாடியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார்.

திருமாவளவன், கரிகால் பெருவளத்தான் என்னும் பெயர்களை உடைய கரிகாலன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட இளஞ்சேட்சென்னி என்பானின் மகன். இவன்தாய் அழுந்தூர் வேண்மாள் ஆவாள். கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள். இளம்வயதில் இவனுக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாகக் கால்கள் கருகிட இவனுக்கு இப்பெயர் வழங்கலாயிற்று என்றும் பகைவரால் தீயிட்டுக் கொல்லக் கருதிய போது கால் கரிந்த தீக்காயத்துடன் தப்பி உயிர்பிழைத்துக் கரிகாலன் ஆனான் என்றும் சிலர் கரிகாலன் என்ற சொல்லுக்கு விளக்கம் காண்பர்.

கரி -யானை காலன் -யமன், அழிப்பவன் என்று பொருள் கொண்டு யானைகளுக்கு எமன் என்றும் யானைகளைக் கொல்பவன் அதாவது யானைப் போரில் வல்லவன் என்றும் சிலர் விளக்கம் கூறுவர். கரிகாலன் என்றால் யானைப் போரில் சிறந்தவன் என்ற பொருளே பொருத்தமாயிருக்கும் என்று தோன்றுகிறது.

ஆயினும் பொருநராற்றுப்படை ஏட்டுச் சுவடிகளில் இடம்பெற்றுள்ள மிகைப் பாடல் வெண்பா ஒன்று,
அரிகால்மேல் தேன்தொடுக்கும் ஆய்புனல் நீர்நாடன்
கரிகாலன் கால்நெருப்பு உற்று.


என்று கரிகாலன் கால் நெருப்புற்ற செய்தியைக் குறிப்பிடுகின்றது. எனவே நெடுங்காலத்திற்கு முன்பே கரிகாலன் என்பதற்குக் கரிந்த காலன் என்ற புனைவு வழக்கிற்கு வந்துவிட்டமை தெளிவாகிறது.

பொருநராற்றுப்படையில் பாட்டுடைத் தலைவன் கரிகாலன் குறித்த வரலாற்றுச் செய்திகள் சிலவற்றை முடத்தாமக் கண்ணியார் பதிவு செய்துள்ளார்.

வெல்வேல்
உருவப் பல்தேர் இளையோன் சிறுவன்
முருகன் சீற்றத்து உருகெழு குருசில்
தாய்வயிற்று இருந்து தாயம் எய்தி
(பொருநர்: 129-132)

இரும்பனம் போந்தைத் தோடும் கரும்சினை
அரவாய் வேம்பின் அம்குழைத் தெரியலும்
ஓங்குஇரும் சென்னி மேம்பட மிலைந்த
இருபெரும் வேந்தரும் ஒருகளத்து அவிய
வெண்ணித் தாக்கிய வெருவரு நோன்தாள்
கண்ஆர் கண்ணி கரிகால் வளவன்
(பொருநர்: 143-148)

இம்மன்னன் இளஞ்சேட் சென்னி என்னும் அரசனுடைய மகன் என்பதனை ‘உருவப் பல்தேர் இளையோன் சிறுவன்’ எனவரும் அடி உறுதிசெய்கின்றது. இவன் தன்தாய் வயிற்றில் கருவாயிருந்த போதே இவன் தந்தை இறந்தான் என்பதனையும் தாய் வயிற்றிலிருந்த போதே அரசுரிமை பெற்றுப் பின்னர் பிறந்தான் என்பதனையும் பொருநராற்றுப்படை ‘தாய்வயிற்று இருந்து தாயம் எய்தி’ என்னும் அடியினால் பதிவுசெய்கின்றது.

தாய் வயிற்றிலிருந்தபோதே அரசுரிமை பெற்றதனால் கரிகாலன் இளைஞனாயிருந்த போதே இவனுடைய அரசுரிமையைக் கைப்பற்றுதற்கு இவனுடைய உறவினரும் பிறரும் முயன்றனர் என்று அறிகிறோம். ஆனால் இளமையிலேயே முடிசூடிக் கொண்டதோடு மட்டுமில்லாமல் தம் நாட்டை மிகச் சிறப்பாக ஆட்சி செய்து அதன் பெருமையைப் பாரறியச் செய்தான் என்பதனை முடத்தாமக் கண்ணியார் கவிவழக்காகப் பின்வருமாறு புனைந்து கூறுகின்றார்.

பவ்வம் மீமிசைப் பகல்கதிர் பரப்பி
வௌ;வெம் செல்வன் விசும்பு படர்ந்துஆங்கு
பிறந்துதவழ் கற்றதன் தொட்டுச் சிறந்தநல்
நாடுசெகில் கொண்டு நாள்தொறும் வளர்ப்ப
(பொருநர்: 135-138)

“கடலில் தோன்றும்போதே தன் சுடர்களைப் பரப்பி எழுந்து எல்லோராலும் விரும்பப்படும் வெம்மையுடைய ஞாயிறு பின்னர் ஆகாயத்தில் மெல்லச் சென்றது போன்று பிறந்து தவழ்தலைக் கற்ற நாள் தொடங்கி ஏனையோர் நாட்டில் சிறந்த நல்ல நாடுகளைத் தன் வெற்றியாலே தன் தோள்களில் சுமந்தவன். அப்படித் தோளிலே சுமக்கும் நாடுகளை நாள்தோறும் வளர்த்தெடுக்கும் ஆற்றலும் அவனுக்குண்டு.” என்பது கவிஞர் கூற்று.

அடுத்து, கரிகால் பெருவளத்தானின் வெண்ணிப் போர் குறித்த வரலாற்றுச் செய்திகளைப் பதிவு செய்கின்றார் முடத்தாமக் கண்ணியார்.

“சிங்கத்தின் குட்டியானது தன் வலிமை குறித்து மிகுந்த செருக்கு கொண்டு, தன்தாயிடம் முலைப்பால் குடித்தலைக் கைவிடாத இளம் பருவத்திலேயே முதன்முதலில் இரையைக் கொல்லும் தன் கன்னி வேட்டையிலேயே விரைந்து செயல்பட்டு ஆண்யானையைக் கொன்று வெற்றிகரமாக முடித்ததைப் போன்று கரிய பனந்தோட்டு மாலையும், வேப்பமாலையும் முறையே சூடிய இருபெரு வேந்தர்களாம் சேரனையும் பாண்டியனையும் ஒருசேர வெண்ணி என்னும் ஊரிலே போரிட்டுக் கொன்ற அச்சந்தரும் வலிய வீரத்தையும் முயற்சியையும் உடையவன் சோழன் கரிகாலன். அவன் கண்ணுக்கு இனிய ஆத்தி மாலையைத் தலைக் கண்ணியாக அணிந்தவன்.” (பொருநர்: 139-148 அடிகளின் உரை)

சிங்கத்தின் கன்னிவேட்டையை, கரிகாலனின் வெண்ணிப் போருக்கு உவமையாக ஆசிரியர் கையாண்டுள்ளமையால் வெண்ணிப் போரும் கரிகாலனின் இளம்வயதில் நடைபெற்றிருக்க வேண்டும் என்று துணிய இடமுண்டு. ‘இருபெரும் வேந்தரும் ஒருகளத்து அவிய’ என்றதனால் கரிகாலனுடனான வெண்ணிப் போரில் சேரனும் பாண்டியனும் களத்திலேயே கொல்லப்பட்டனர் அல்லது இறந்தனர் எனத் தெரிகிறது.

கரிகால் பெருவளத்தானைப் பாடும் பட்டினப்பாலை, அவனது இளம் பருவத்திலேயே அவன் பகைவர்களால் சிறையிடப்பட்டான் என்றும் தன் சொந்த வலிமையினால் சிறையிலிருந்து மீண்டான் என்றும் குறிப்பிடுகின்றது.

கொடுவரிக் குருளை கூட்டுள் வளர்த்தாங்குப்
பிறர் பிணியகத் திருந்து பீடுகாழ் முற்றி
அருங்கரைக் கவியக் குத்தி குழிகொன்று
பெருங்கை யானை பிடிபுக் காங்கு
(பட்டின. 221-224)

புலிக்குட்டி, கூண்டுக்குள்ளே இருந்து வளர்ந்தே பலம் பெறுவது போல, எதிரிகளின் சிறைக்கூடங்களில் வாழ்ந்த போது கரிகாலன் வல்லவன் ஆயினான். ஒரு குழியில் யானை பிடித்து அடக்கப்படுகிறது. ஆனால் அதே குழியை நிரப்பி தப்பித்து ஓடி, பெண் யானையுடன் சேர்ந்துவிடும் இயல்பு அதற்கு உண்டு. இவ்வாறே கரிகாலன் சிறையில் இருந்த காலமெல்லாம் இடையறாது சிந்தித்துத் திட்டமிட்டு சிறையிலிருந்து தப்பி அரசுரிமையை மீண்டும் பெற்றுப் பகைவர்களை அடக்கினான் என்று அறிகிறோம்.

“சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் கரிகாலனை இருவராகக் கொள்வார் மா.இராசமாணிக்கனார். முதல் கரிகாலன் கி.மு. 120 முதல் கி.மு. 90 வரை அழுந்தூரைத் தலைநகராகக் கொண்டு சோழநாட்டின் ஒருபகுதியை ஆண்டான் எனவும் இவன் சென்னி மரபைச் சேர்ந்தவன் எனவும் கூறுவர். இரண்டாவது கரிகாலன் கி.மு. முதல் நூற்றாண்டில் வாழ்ந்தவன் என்றும் அவர் கூறுகின்றார்.

மா.இராசமாணிக்கனார் போலவே சிவராசப் பிள்ளையும் கரிகாலனை இருவராகக் கொண்டு விளக்கினார். கரிகாலன் வெற்றிபெற்ற வெண்ணிப் பறந்தலைப் போர் இருமுறை நடைபெற்றதாக இவர்கள் கருதுவர். வெண்ணிப் போரில் கரிகாலனிடம் தோற்றுப் புறப்புண் நாணி வடக்கிருந்த பெருஞ்சேரலாதன் தோல்வி அடைந்தது முதல் வெண்ணிப்போர் ஆகும். இப்போர் முதல் கரிகாலன் காலத்தில் நிகழ்ந்துள்ளது. இப்போரில் வேந்தர் இருவரையும் வேளிர் பதினொருவரையும் கரிகாலன் வென்றுள்ளான். இப்போரினைக் கழாத்தலையாரும் வெண்ணிக் குயத்தியாரும் பாடி உள்ளனர். இதேபோல் வேறொரு வெண்ணிப்போர் பொருநர் ஆற்றுப் படையுள் கூறப்பட்டுள்ளது என்றும் மா.இராசமாணிக்கனார் கருதுகிறார்.” (சிலம்பு நா.செல்வராசு, எழுத்துரை, ப.2-3)

சோழ மன்னன் கரிகாலன் குறித்த செய்திகளில் தொன்மங்களும் வரலாற்று உண்மைகளுமாக விரவிக் கிடக்கின்றன. கரிகாலன் என்ற பெயரிலேயே ஒவ்வொரு காலத்திலும் சோழ மன்னர்கள் பலர் இருந்துள்ளனர். கரிகாலன் என்ற பெயரில் மன்னர் நால்வர் இருந்ததாக அபிதான சிந்தாமணி கூறுகிறது. பலர் தங்கள் மன்னர் பரம்பரையைக் கரிகாலன் பரம்பரை என்று பெருமையோடு புனைந்து பேசுகின்றனர்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு இன்றும் உலகோர் வியந்து பாராட்டும்படியான கல்லணையைக் கட்டியவன் சோழன் கரிகாலனே. பொருநராற்றுப்படை இந்தச் செய்தியைப் பதிவு செய்யவில்லை. எனவே கல்லணையைக் கட்டிய கரிகாலன் வேறு, பொருநராற்றுப் படையின் பாட்டுடைத் தலைவன் கரிகாலன் வேறு என்று அறிய முடிகிறது.

இளமையில் நரை முடித்து அறங்கூறு அவையத்தில் நல்ல தீர்ப்பு வழங்கி அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றவன் பொருநராற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் கரிகாலனாயிருக்க வாய்ப்புண்டு. ஆயினும் அதுபற்றி ஆற்றுப்படையில் எந்த அகச்சான்றுமில்லை. சங்க இலக்கியங்களில் இடம்பெறும் ஆதிமந்தி சோழன் கரிகாலனின் மகளே என்றும் ஒரு குறிப்பு உண்டு.

எவ்வாறாயினும் பொருநராற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் கரிகால் பெருவளத்தான் தன்னைநாடி வரும் கலைஞர்களைப் பேணிப் புரந்து விருந்து உபசரித்து பரிசில்கள் வழங்கி உரிய மரியாதைகளோடு வழியனுப்பி வைப்பதில் மிகச் சிறந்த பண்பாளன் என்பதை முடத்தாமக் கண்ணியார் மிகச்சிறப்பாகத் தம் ஆற்றுப்படையில் பதிவு செய்துள்ளார்.

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

மக்கள் தலைவர் சுப்பையாவும் சுதந்திரமும்

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

தோழர் சுப்பையா:

ரஷ்யாவுக்கு ஒரு லெனின், சீனாவுக்கு ஒரு மாவோ, இந்தியாவுக்கு ஒரு மகாத்மா அதுபோல் புதுவைக்கு ஒரு வ.சுப்பையா என்று சிறப்பிக்கக் கூடிய பெருமைக்குரிய தலைவர்தான் தோழர் வ.சுப்பையா அவர்கள்.

பிரஞ்சு ஏகாதிபத்தியம், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் என இரண்டு ஏகாதிபத்தியத்திய அரசுகளுக்கு எதிராகவும் போராடி வெற்றி பெற்ற புதுவைச் சுதந்திரப் போராட்டத் தியாகி வ.சுப்பையா. ஆசியாவிலேயே முதன் முதலாகத் தொழிலாளர்களுக்கு எட்டுமணி நேர வேலை உரிமையைப் பெற்றுத்தந்த மக்கள் தலைவர். இந்தியப் பொதுவுடைமை இயக்கத் தளபதிகளில் முன்னணித் தலைவர். இவர் தமது 23 ஆம் வயதில் தொழிலாளர்களை அரசியல் ரீதியாக அணிதிரட்ட மேற்கொண்ட வெற்றிகரமான முயற்சியே சுதந்திரம் இதழ்.

இதழ் அறிமுகம்:

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு – நாம்
எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு

என்ற பாரதியின் பாடல் அடிகளைக் குறிக்கோள் வாசகமாகக் கொண்டு 1934 ஜூன் மாதம் மாலை: 1, மலர்: 1 என்ற எண்ணிக்கைக் கணக்கோடு மாத இதழாகச் சுதந்திரம் வெளிவரலாயிற்று.

முதல் இதழிலிருந்தே ஆசிரியராக இருந்தவர் வ.சுப்பையா என்றாலும் மூன்றாவது இதழிலிருந்துதான் ஆசிரியர்:- வ.சுப்பையா என்று இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதழின் மேலட்டை பலவண்ணங்களில் அச்சிடப்பட்டுள்ளது. 1க்கு 8 டம்மி அளவில் மேலட்டை நீங்கலாக 52 பக்கங்களில் முதல் இதழும், பிற இதழ்கள் 60 பக்கங்களிலும் வெளிவந்துள்ளன.

முதல் மூன்று இதழ்களின் மேலட்டைகளில் குதிரை மீதமர்ந்த சுதந்திர அன்னையின் படம் இடம்பெற்றுள்ளது. இந்த மேலட்டை குறித்து ஆசிரியர் தமது ஆசிரியர் குறிப்பு பகுதியில் குறிப்பிடும் செய்தி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. அதன் ஒரு பகுதி பின்வருமாறு,

நமது சுதந்திர அன்னை சமூகமென்னும் பரியின் மீது அமர்ந்து ஒரு கரத்தில் சுதந்திரக் கொடியையும் மற்றொன்றில் வீரச்சின்னத்தையும் ஏந்தி, சுதந்திர முழக்கம் செய்துகொண்டு, அடிமையென்னும் கோட்டையினின்று வெளியேறி முன்னேற்றமென்னும் கனவேகத்துடன் சென்று தமிழக முழுவதும் தனது வெற்றிக்கனலைப் பரப்ப, சுதந்திர லட்சியத்தை உலகத்திற்கே முதலில் போதித்த பிரான்சின் குடியாட்சியிலிருக்கும் புதுவையிலிருந்து இன்று வெளிவருகிறாள். இவள் பணி தமிழகத்திலுள்ள புதல்வர்களுக்குச் சுதந்திர அமுதையூட்டி வீரர்களாக வாழச்செய்ய வேண்டுமென்பதாகும்.(சுதந்திரம், மாலை:1-மலர்:1, ப.2)

இதழின் நோக்கம்:

இந்த இதழைத் தொடங்கும் போது வ.சுப்பையா அவர்கள் தமது நோக்கமாக, ‘தமிழகத்திலுள்ள புதல்வர்களுக்குச் சுதந்திர அமுதை ஊட்டவே இந்தச் சுதந்திர அன்னை வருகிறாள்’ என்று குறிப்பிடும் பகுதி கவனத்தில் கொள்ளத் தக்கது. மேலும் இந்த முதல் இதழில் ஆசிரியர் குறிப்பிடும் பல செய்திகள் அவரின் சமூகம் குறித்த சரியான புரிதல்களை வெளிப்படையாகத் தெரிவிக்கின்றது. சான்றாக,

நமது சமூகத்திலே மதத்தின் பேராலும், சாத்திரத்தின் பேராலும் அடிமைப்படுத்தி வைத்திருக்கும் சுமார் ஏழு கோடி மக்களான நமது இந்தியச் சகோதரர்களை முதலில் விடுதலையடையச் செய்யவேண்டும்.
சமுதாயத்தில் ஒரு நேத்திரம் போல் விளங்கும் சுமார் 18 கோடிக்கு அதிகமான பெற்ற தாய்மாரையும் உடன்பிறந்த சகோதரிகளையும் நசுக்கி, அடிமைப்படுத்தி இழிவுறுத்தும் நாடு நம்நாடன்றோ?

(சுதந்திரம், மாலை:1-மலர்:1, ப-ள்.3,4)

என்று எழுதும் இடங்களில் தலித் விடுதலை குறித்த சிந்தனையையும், பெண் விடுதலை குறித்த சிந்தனையையும் சரியான புரிதலோடு குறிப்பிடுகின்றார். இன்றைக்குப் பெருவளர்ச்சி பெற்றுள்ள தலித்திய, பெண்ணியச் சிந்தனைகளை முதல் இதழிலேயே ஆசிரிய உரையில் குறிப்பிடும் வ.சுப்பையா அவர்களின் பணி பாராட்டுதலுக்குரியது.

அகத்திலுள்ள உயர்வு தாழ்வு என்கிற அசடுகளை நீக்குவோம். எல்லோரும் ஓர் குலமெனப் பாடுவோம், பின் வீர சுதந்திரத்தை நிரந்தரமாக நாட்டுவோம். இதுவே உண்மைச் சுதந்திரம். இதுவே இன்பச் சுதந்திரம்
(சுதந்திரம், மாலை:1-மலர்:1, ப.4)
என்பது சுதந்திரம் ஆசிரியர் வ.சுப்பையா அவர்களின் தெளிவான முடிவு.

சுதந்திரமும் பொதுவுடைமையும்:

மகாத்மா காந்தியடிகள் 1933 இல் அரிசன சேவா சங்கத்தை ஏற்படுத்தினார். அரிசன சேவா சங்கத்தில் முழு ஈடுபாட்டோடு பணியாற்றிய வ.சுப்பையா அவர்கள் 1934 பிப்ரவரி 17 இல் மிகுந்த இன்னல்களுக்கிடையே மகாத்மாவைப் புதுவைக்கு அழைத்து வந்தார். பிறகு அரசியல் ரீதியாக எவ்வாறு செயல்பட்டார் என்பதைப் பின்வரும் பகுதியில் சுப்பையாவே குறிப்பிடுகின்றார்.

அரிசன மக்களோடு எனக்கிருந்த நெருக்கத்தின் காரணமாகப் பஞ்சாலைத் தொழிலாளர்களின் இயக்கத்தோடு எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. அதன்பின் அரசியலிலும் நேரடியாக ஈடுபட நேர்ந்தது. அரசியல் இயக்கத்தில் தீவிரமாகச் செயல்பட்ட நான், 1934 ஜூனில் சுதந்திரம் எனும் பத்திரிக்கையைத் தொடங்கினேன். அது இன்றுவரை தொழிலாளர் வர்க்கத்தின் நலனுக்காக ஏந்தப்பட்ட போர்க்கொடியாகச் செயல்பட்டு வருகிறது.

தோழர் அமீர் அய்தர்கான் என்பவர்தான் தமிழகத்தில் பொதுவடைமை இயக்கத்தைத் தோற்றுவிக்கத் தூண்டுகோலாய் இருந்தவர். 1934 ஜூலையில் அவரோடு எனக்குப் பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பழக்கத்தின் காரணமாகப் பொதுவுடைமைக் கட்சியோடு நெருக்கமும் ஏற்பட்டது. அந்தக் கட்சியின் தொடர்பு காரணமாகத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஒரு புதிய உத்வேகம் கிடைத்தது. (சுதந்திரம் பொன்விழா மலர்-3, ப.40)

தோழர் வ.சுப்பையா அவர்கள் பொதுவுடைமை இயக்கத்தோடு தமக்குத் தொடர்பு ஏற்படுவதற்கு முன்பே சுதந்திரம் இதழைத் தொடங்கியுள்ளார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

முதல் ஆற்றுப்படையைப் பாடிய முடத்தாமக் கண்ணியார்

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
பட்ட மேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8

முடத்தாமக் கண்ணியார்

பத்துப்பாட்டு நூல்களுள் இரண்டாவதாக இடம்பெற்றிருக்கும் பொருநராற்றுப்படை என்னும் இந்நூலைப் பாடியவர். முடத்தாமக் கண்ணியார் என்னும் புலவராவார். இவரைப் பெண்பால் புலவர் என்று கருதவும் வாய்ப்புண்டு. வளைந்த ஒளியுள்ள தலைமாலை என்னும் பொருள்படும் ‘முடத்தாமக் கண்ணி’ என்னும் சொற்றொடரை இப்புலவர் தம் கவிதை ஒன்றில் கையாண்டிருக்கலாம் எனவும் அல்லது அசையும் வலிமையில்லாத ஒளியுள்ள கண்களைப் பாடியிருக்கலாம் எனவும் அல்லது ஒளியுள்ள கண்களையுடைய முடப்பெண் ஒருத்தியை இச்சொற்றொடர் குறித்திருக்கலாம் எனவும் மொ.அ. துரையரங்கசாமி கருதுவார்.

செம்புலப் பெயல்நீரார் போன்று தாம் பாடிய பாடலடியால் அவர் இப்பெயர் பெற்றிருக்க வேண்டும் என்பது அவர்தம் கருத்து. சங்க இலக்கியங்களில் பொருநராற்றுப்படை ஒன்று மட்டுமே இவர் பாடியதாகத் தெரிகின்றது. வேறு தொகை நூல்கள் ஒன்றிலும் இவர் பாடல் இடம்பெறவில்லை. காவிரியையும் சோழநாட்டினையும் மிகச் சிறப்பித்துப் புகழ்ந்து பாடும் இவர் சோழநாட்டினர் என்று கொள்வதில் தவறில்லை.

இப்புலவரின் பெயர் தொல்காப்பிய உரையாசிரியர் சேனாவரையரால் மேற்கோளாகக் காட்டப்பெற்றுள்ளது.

இயற்பெயர் முன்னர் ஆரைக் கிளவி
பலர்க்கு உரிய எழுத்தின் வினையொடு முடிமே

(தொல். சொல். இடை. நூ. 21)

என்னும் தொல்காப்பியச் சொல்லதிகார இடையியல் நூற்பா உரையில் ஆர் விகுதி பன்மையோடு முடிதற்கு, ‘முடத்தாமக் கண்ணியார் வந்தார்’ என்று எடுத்துக் காட்டப்பட்பட்டிருப்பதால் இவரின் இயற்பெயர் முடத்தாமக் கண்ணி என்று கருதுவார் உ.வே.சா. இவர் பெயரின் முன்னர் முடம் என்ற சொல் இடம் பெற்றிருப்பதனால் இவர் உறுப்பு முடம்பட்டவர் என்று கருதுவாருமுண்டு.

இவர் பெயரிலுள்ள கண்ணி என்ற சொல் தலையில் சூடும் மாலையைக் குறிப்பதாயின் இவர் பெண்பால் புலவர் என்று கொள்வதற்கு வாய்ப்பில்லை. ஏனெனில் கண்ணி என்பது ஆண்கள் தலையில் அணியும் மாலையைக் குறிப்பதாகும்.

நூலின் அகச்சான்று கொண்டு இவர் பெண்பால் புலவராக இருக்கலாம் என்று துணிதற்கு இடமுள்ளது. பொருநராற்றுப்படை நூலின் தொடக்கத்தில் இடம்பெறும் பாலையாழ் வருணனையின் ஒரு பகுதியாக யாழ் பத்தரின் மேல் இரண்டு பக்கத் தோலினையும் இணைத்து மூட்டித் தைத்துள்ளமையை புலவர் வருணிக்கும் பகுதி பின்வருமாறு,

எய்யா இளம்சூல் செய்யோள் அவ்வயிற்று
ஐதுமயிர் ஒழுகிய தோற்றம் போலப்
பொல்லம் பொத்திய பொதிஉறு போர்வை
(பொருநர்: 6-8)

பத்தரின் நடுவிடம் உயர்ந்துள்ளமையும் (இளஞ்சூல் வயிறு போல) பத்தரைப் போர்த்தியுள்ள தோலின் நிறம் விளக்குச் சுடரின் நிறம்போல் சிவந்திருப்பதும் (சூலுற்றவளின் சிவந்த நிறம் போல) பத்தரின் இருபுறத் தோலினையும் இழுத்துத் தைத்துள்ள தையல் இளஞ்சூல் வாய்த்த பெண்ணின் வயிற்று மென்மையான மயிரொழுங்கு போல் உள்ளதென்றும் முடத்தாமக் கண்ணியார் உவமித்து வருணித்துள்ள பாங்கு ஒரு பெண்பால் புலவருக்கே வாய்க்கும் என்பதனால் இவரைப் பெண்பால் புலவர் என்று கொள்வதில் பிழையில்லை.

இவர் இசைத்துறையில் வல்லவராய் இருந்திருக்க வேண்டும் என்பதனை இப் பொருநராற்றுப்படையில் வரும் யாழ் குறித்த விரிவான வருணனைகளின் வழி அறிந்துகொள்ள முடிகிறது. பாலையாழின் ஒவ்வொரு பகுதியையும் தக்க உவமைகளின் வழி நம் கண்முன் நிறுத்துகின்ற கண்ணியாரின் கவியுள்ளம் யாழிசையின் மீது கொண்டுள்ள அளப்பறிய ஈடுபாடும் பக்தியும் பின்வரும் அடிகளில் உணரக் கிடக்கின்றன.

ஆறலை கள்வர் படைவிட அருளின்
மாறுதலை பெயர்க்கும் மருவுஇன் பாலை
(பொருநர்: 21-22)

கொடிய ஆறலைக் கள்வர்கள் கூட யாழிசையில் ஈடுபட்டார்களானால் தம் ஆயுதங்களைப் போட்டுவிட்டு கொலைத் தொழிலையும் கைவிட்டு அருள் நெஞ்சினராக மாறிவிடுவர் என்று நம்பும் ஆசிரியர் பண்பட்ட உள்ளம் அவரின் மென்மையான இயல்பினை உறுதிப்படுத்துகிறது.

கண்ணியாரின் கவித்திறனுக்கு நூலில் இடம்பெறும் யாழ் வருணனை மற்றும் பாடினியின் கேசாதிபாத வருணனைகளே சான்று. உவமைகளை அடுக்கிச் செல்லும் அவரின் புலமைநலம் கற்பவர் நெஞ்சைப் பெரிதும் ஈர்க்கக்கூடியது. சோழநாட்டின் வருணனையும் திணைமயக்கக் காட்சிகளும் ஆசிரியர் கற்பனைத் திறனுக்குத் தக்க எடுத்துக்காட்டுகள்.

ஆற்றுப்படை இலக்கிய வகையில் பொருநராற்றுப்படையே முதல் நூல் என்று கருதப்படுகிறது. புதிய இலக்கிய மரபினை உருவாக்கும் துணிவும் இலக்கியப் பயிற்சியும் முடத்தாமக் கண்ணியாரிடம் மிக்கிருந்தமைக்கு நூலே சான்று. அகவல் அடியால் பாடப்பட்ட பொருநராற்றுப்படையின் இடைஇடையே பயில்வார்க்குச் சலிப்பு தோன்றா விதத்திலும் ஓசைநலத்தை மிகுவிக்கும் நோக்கிலும் வருணனைப் பகுதிகளில் வஞ்சி அடிகளை விரவிப் பாடியுள்ள புலவரின் புலமைநலம் பாராட்டுதற்குரியது.

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...