வெள்ளி, 14 செப்டம்பர், 2012

அகிலின் கூடுகள் சிதைந்தபோது -நூல் அறிமுகம்

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8


அகில் என்கிற அகிலேஸ்வரன் சாம்பசிவம் ஓர் ஈழத்தமிழ் எழுத்தாளர். ஈழத்தின் யாழ் மாவட்டத்தில் சரவணை என்னும் ஊரில் பிறந்தவர். தற்போது புலம்பெயர்ந்து கனடாவில் வசித்துவருபவர். திசைமாறிய தென்றல், கண்ணின்மணி நீயெனக்கு என்ற இரண்டு நாவல்களின் வழியாகத் தமிழுலகிற்கு ஏற்கனவே அறிமுகமானவர். தமிழ் ஆத்தர்ஸ்.காம் என்ற அவரது இணையதளத்தின் மூலம் உலகெங்கும் பரவி வாழும் தமிழ் எழுத்தாளர்களை இணைக்கும் பெரும்பணியைச் செய்துவருபவர். புலம்பெயர் இலக்கியப் படைப்பாளிகளில் அறியப்படவேண்டிய ஆளுமைக்குச் சொந்தக்காரர்.

புதுச்சேரி நண்பர்கள் தோட்டம் என்ற இலக்கிய அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நூல் அறிமுகக் கூட்டத்தில் அகிலின் சிறுகதைத் தொகுதியை அறிமுகம் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கிடைத்த வாய்ப்பினைப் பயன்படுத்தி நூலினை முழுமையாகப் பலமுறை வாசித்தேன். கல்விப் புலத்தில் எங்கள் பட்ட மேற்படிப்பு மைய முதுகலைத் தமிழ் வகுப்பிற்கு ஈழத்தமிழர்களின் புலம்பெயர் இலக்கியம் என்ற பாடத்திட்டத்தை வகுத்ததோடு அப்பாடத்தை மாணாக்கர்களுக்குப் பயிற்றுவிக்கவும் கிடைத்த வாய்ப்பினால் தொடர்ந்து பல ஈழத்தமிழர் புலம்பெயர் இலக்கியங்களை வாசித்து வருபவன் நான். அந்த வாசிப்பு அனுபவத்தினை முன்னிறுத்தி, அகிலின் கூடுகள் சிதைந்தபோது என்ற சிறுகதைத் தொகுதி குறித்து சில சொல்லிட முனைகிறேன்.
இலக்கிய வடிவங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது சிறுகதைதான். கவிதைகளை நேசிப்பது, வாசிப்பது என்பதைவிட ஒருபிடி கூடுதலாகத்தான் நான் சிறுகதைகளை நேசிக்கிறேன், வாசிக்கிறேன். புதுமைப்பித்தனை, அழகிரிசாமியை, மௌனியை, ஜெயகாந்தனை, பிரபஞ்சனை வாசிப்பது போலவே இன்றைய புதிய சிறுகதை ஆசிரியர் களையும் நான் வாசிக்கிறேன். செய்நேர்த்தியில் வேறுபாடுகள் தெரிந்தாலும் வாழ்க்கையின் சகல பரிமாணங்களையும் படைப்புக்குள் கொண்டு வருவதில் புதியவர்கள் ஒன்றும் சளைத்தவர்களில்லை.

சிறுகதை என்பது சிறிய கதை இல்லை. சின்னதாய்க் கதைசொல்வதால் அது சிறுகதை ஆவதில்லை, இது வேறு. வாழ்க்கையின் ஒரு பகுதி, உணர்வோட்டத்தின் ஒரு துணுக்கு, கதா பாத்திரங்களினுடனான கணநேரத் தீண்டலின் சிலிர்ப்பு இவற்றில் ஏதோவொன்றோ இதுபோன்ற பிறிதொன்றோ படைப்பாளியின் எழுத்தாற்றலால் நம் மனமேடையில் நடத்தும் நாடகமே சிறுகதை.

சிறுகதை ஆசிரியன் பேராற்றலோடு சுழித்தோடும் வாழ்க்கை என்ற ஆற்றின் ஓரு கரையில் இறங்கி வாசகர்களின் கழுத்தைப் பிடித்து ஓடும் ஆற்றுநீரில் சிலகணங்கள் முக்;கி எடுத்துவிடுகிறான். முங்கி எழுந்த வாசகர்களாகிய நமக்கோ அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே கொஞ்ச நேரம் பிடிக்கிறது. உள்ளே முங்கியிருந்த கணத்தில் வந்துமோதிய ஆற்றுநீரின் வேகம், குளிர்ச்சி, வாசம், சுவை இவைகள் எல்லாம் நம்நினைவில் மீண்டும் மீண்டும் அலைகளாய் வந்து மோதிப் பரவசப் படுத்துகின்றன. ஆறு எங்கே தொடங்கியது? எங்கே முடியப் போகிறது? எதுவும் நமக்குத் தெரியாது, நமக்கு அதைப்பற்றிக் கவலையுமில்லை. நீரில் முங்கிய நேரத்தில் கடந்துபோன ஆற்றுப்பெருக்கைத்தான் நமக்குத் தெரியும். நம் உறவு அதனோடுதான். அது தந்த சோகம், அதிர்ச்சி, சிலிர்ப்பு, பரவசம் இவைகள்தாம் நமக்கு முக்கியம். சிறுகதைகளும் அப்படித்தான். தோழர் அகிலின் சிறுகதைகளும் அதைத்தான் செய்கின்றன.

இச்சிறுகதைத் தொகுதியில் இடம்பெற்றுள்ள பதினான்கு கதைகளுமே சிற்றிதழ்கள் மற்றும் செய்தித்தாள்களில் வெளியானவை. இதழ்கள் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் பரிசு பெற்ற சில கதைகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. தேர்ந்த வாசகர்களின் வாசிப்பினைத் தொடர்ந்தே இக்கதைகள் நூல் உருப்பெற்றுள்ளன. 2008 முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான நான்காண்டுக் கால இடைவெளியில் உருவானவைகளே இக்கதைகள். அந்த வகையில் ஈழத்தமிழர்களின் அண்மைய வாழ்க்கைப் பதிவாக இக்கதைகள் உருவாகியுள்ளன. இத்தொகுதியில் உள்ள அண்ணாநகரில் கடவுள் என்ற ஒருகதை தவிர மற்ற பதின்மூன்று கதைகளுமே ஈழம் மற்றும் புலம்பெயர் கனடாவினைப் பின்புலமாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளன. கதைக் களத்தைப் போலவே கதைக்கருவும் ஈழம், கனடா வாழ் தமிழர்களின் பிரச்சனைகளைப் பேசுகின்றன.

பொதுவாகப் புலம்பெயர் இலக்கியங்களைப் புலம்பல் இலக்கியம் என்று சிலர் குறிப்பிடுவதுண்டு. ஏனெனில் புலம்பெயர்ந்த படைப்பாளி, புகலிடச் சூழலில் வெளிப்படுத்தும் தாய்மண் ஏக்கம் குறித்த பதிவுகளே இத்தகு படைப்புகளில் மிகுதியும் நிறைந்திருக்கும். அகிலின் சிறுகதையைப் பொறுத்தமட்டில் தாய்மண் ஏக்கம் குறித்த பதிவுகளையும் மீறி வெளிப்படுவது மானுடநேயம். அதாவது நாடு, மொழி, இன பேதங்களைக் கடந்த மானுடநேயம். சக மனிதர்களை நேசிப்பது என்பதோடு அகிலின் கதைகள் நின்று விடுவதில்லை, அதனையும் கடந்து பறவைகள், விலங்குகள் என அனைத்து உயிர்களையும் நேசிக்கும் விரிந்த தளத்திலானது. வலி, கிறுக்கன், கூடுகள் சிதைந்தபோது முதலான கதைகள் இதற்குச் சான்று. பாம்பு கடித்து இறந்துபோன தனது வளர்ப்பு நாயையும் பூனையையும் பார்த்துக் கண்ணீர்விடும் கிறுக்கனும், கனடா சாலையொன்றில் இணைக்குருவிகளில் ஒன்று விபத்துக்குள்ளாகி இறப்பதையும் இறந்த குருவியின் பிரிவுத்துயர் தாங்காமல் தவிக்கும் துணைக்குருவியின் சோகத்தையும் கண்டு மனம் பரிதவிக்கும் கூடுகள் சிதைந்த போது கதையின் நாயகனும் இறைச்சிக்காக வெட்டப்படும் பன்றி, மாடுகளின் அவலத்துக்கு மனம் வெதும்பும் மயூரனும் அகிலின் பிரதிநிதிகளாக நம்முன் மானுடநேயத்தைப் பதித்துச் செல்கிறார்கள்.

ஈழத்தின் போர்ச்சூழலின் பின்னணியில் படைக்கப்பட்டுள்ள பதவி உயர்வு, பெரிய கல்வீடு, கண்ணீர் அஞ்சலி, கூடுகள் சிதைந்தபோது ஆகிய நான்கு கதைகளும் தமிழக வாசகர்களுக்குப் புதிய காட்சிப் படிமங்களை முன்நிறுத்துகின்றன. வன்னிப்போர்ச் சூழலும் முள்ளிவாய்க்காலில் இருந்து வவுனியாவுக்கு இடம்பெயரும் அப்பாவித் தமிழர்கள் மீதான இலங்கை ராணுவத் தாக்குதலும், யாழ்நகரத் தாக்குதலும் அகிலின் விவரிப்பில் வாசகர்களின் மனதில் ஆழ்ந்த வலியையும் வேதனையையும் ஏற்படுத்துவது நிஜம். பத்திரிக்கைகளில் செய்தியாக மட்டுமே வாசித்துக் கடந்த நமக்கு இச்சிறுகதைகள் பேரினவாதத்தின் திட்டமிட்ட அழிப்பையும் தமிழர்களின் உயிர், உடைமை இழப்பையும் ஆறாத வடுக்களாக நெஞ்சில் நிலை நிறுத்துகின்றன.

இத்தொகுப்பின் செம்பாதிக் கதைகள் புலம்பெயர்ச் சூழலில் நம் தமிழர்கள் எதிர்கொள்ளும் பணம், குடும்பம், உறவு, சாதி, பண்பாடு தொடர்பான சிக்கல்களை முன்நிறுத்துகின்றன. புகலிடம் தேடி மேற்கத்திய நாடுகளில், சென்ற தலைமுறையில் குறிப்பாக 80களில் புலம் பெயர்ந்து சென்றவர்களின் அடுத்த தலைமுறை புலம்பெயர் நாட்டுப் பண்பாட்டுச் சூழலில் வளர்ந்து பெரியவர்களாகிற போது, மூத்த தலைமுறை தம் தாய் மண்ணின் பண்பாட்டுச் சுவடுகளைக் காக்கவும் முடியாமல் மீறவும் மனமில்லாமல் படும்பாடு புகலிடத் தமிழர்களின் வாழ்க்கையின் ஒரு சிக்கலான பகுதியாகும். அகில் இத்தகு பண்பாட்டு நெருக்கடிகளைத் தம் சிறுகதைகளில் குறிப்பாக இது இவர்களின் காலம் என்ற சிறுகதையில் அழுத்தமாகப் பதிவு செய்கிறார்.
சாதீய சமூகக் கட்டமைப்பைக் காப்பாற்றத் துடிக்கும் யாழ்ப்பாணத் தமிழர்களின் ஆதிக்க மனோபாவத்தை விமர்சிக்கும் வெளியில் எல்லாம் பேசலாம், பெரிய கல்வீடு என்ற இரண்டு சிறுகதைகளும் முக்கியமானவை. பெரிய கல்வீடு கதை, உக்கிரமான போர்ச்சூழலிலும் தீண்டாமையைக் கட்டிக் காப்பாற்றத் துடிக்கும் பெரிய சாதியாரையும் வெளியில் எல்லாம் பேசலாம் கதை, மேற்கத்திய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் சூழலிலும் தம் சாதி மேட்டிமையை விட்டுக் கொடுக்க விரும்பாத பிற்போக்காளர்களையும் இனம்காட்டுகின்றது.

குடும்பம் என்ற சமூக அமைப்பு சிதைவடையும் மாற்றக் காலத்தின் அடையாளங்களை முன்நிறுத்துவன அம்மா எங்கே போகிறாய், உறுத்தல் என்கிற இரண்டு கதைகளும். புலம்பெயர் நாடுகளில் தங்கள் வயதான பெற்றோர்களின் உடலுழைப்பு, வருவாய் இரண்டும் பயன்படும் காலம் வரையிலும் அவர்களைத் தம்மோடு வைத்திருந்துவிட்டுப் பின்னர் அவர்களை உதாசீனப்படுத்தும் இன்றைய இளம் தலைமுறையினரின் உளப்பாங்கை வெளிப்படுத்துவன இக்கதைகள். ஆனால் இந்த இரண்டு கதைகளிலும் பெற்றோர்களைப் புறக்கணிக்கும் இளம் தலைமுறையினரின் குற்ற உணர்ச்சியைக் கோடிட்டுக் காட்டியிருப்பதன் மூலம் அகில் இப்பிரச்சனை குறித்தான தம் விமர்சனத்தை நுட்பமாகப் பதிவுசெய்திருப்பது இந்தக் கதைகளின் பலம் எனலாம்.
இத்தொகுதியின் பதினான்கு கதைகளில் அண்ணாநகரில் கடவுள், ஓர் இதயத்திலே என்கிற இரண்டு கதைகளைத் தவிர மற்ற பன்னிரண்டு கதைகளுமே ஒவ்வொரு விதத்தில் சிறப்புடையன. அதிலும் வலி, கூடுகள் சிதைந்தபோது என்ற இரண்டு கதைகளையும் இத்தொகுப்பின் மிகச்சிறந்த சிறுகதைகளாக நான் இனம் காண்கிறேன். அகிலின் படைப்பாக்கச் செய்நேர்த்தியில் உச்சத்தைத் தொட்ட கதைகளாக இவற்றைக் குறிப்பிடமுடியும்.

வலி என்ற சிறுகதை மூன்று அடுக்களில் கதையை நகர்த்துகின்றது.
1.கணவன் மனைவி இடையிலான சைவ, அசைவ உணவுப் பழக்க முரண்.
2.டிரக்கில் அடைக்கப்பட்டு மாமிசத்திற்காகக் கொண்டு செல்லப்படும் பன்றிக் குட்டிகளும் அதனூடாகப் புலம் பெயர்தல் தொடர்பான மயூரனின் கொடிய அனுபவங்களும்
3.யுத்தக் கொடூரங்களுக்கிடையே உயிருக்கு அஞ்சி, புலம்பெயரும் வாழ்க்கையையும் மாமிசத்துக்காகவே விலங்குகள் வளர்க்கப்பட்டு ஒன்று பார்க்க ஒன்றைக் கொல்லும் மனிதக் கொடூரத்தையும் உயிர்வதை என்ற ஒற்றைப்புள்ளியில் இணைத்துக்காணும் மயூரனின் மாறுபட்ட பார்வை.

இந்தக் கதையை ஒரு சைவ உணவுப் பிரச்சாரக் கதையாகப் பார்ப்பதைவிட உயிர்வதை என்ற ஒற்றைப் புள்ளியில் உலகின் சகல ஜீவராசிகளும் ஒன்றுதான் என்ற விரிந்த தளத்தில் வாசிக்க வேண்டும். இந்தப் புள்ளியை நோக்கிய கதையின் ஊடாக விரியும் புலப்பெயர்வுச் சிக்கல்கள் கதைக்குக் கூடுதல் அழுத்தத்தைத் தருகின்றன. நடைநலத்திலும், பாத்திர வார்ப்பிலும், கதையின் கட்டுக்கோப்பிலும் முழுமை பெற்ற வலி குறித்துப் பேசிக் கொண்டே போகலாம்.

கூடுகள் சிதைந்தபோது என்ற சிறுகதை வாசிப்பவர்களின் உறக்கத்தைப் பறிக்கும் கதை. சிங்கள ராணுவத்தின் இனஅழிப்புத் தாக்குதலில் செத்துமடிந்த பல்லாயிரக் கணக்கான அப்பாவி மக்களின் ரத்தசாட்சியாய்ப் படைக்கப்பட்ட கதை. வயிற்றுப் பிள்ளைக்காரியான தன் இளம் மனைவியைக் கண்ணெதிரே ராணுவத் தாக்குதலுக்குப் பலிகொடுத்துவிட்டு அந்த உடலை அடக்கம் செய்யக்கூட வழியில்லாமல் அப்படியே போட்டுவிட்டு உயிருக்கு அஞ்சி ஓடிவந்த கணவனின் மனக்குமுறலாய் வெளிப்படும் கதை. கதையின் கருவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இணைக்குருவிகளில் ஒன்று தன் துணைக்குருவி வாகனம் மோதி நசுங்கிக் கிடக்கக்கண்டு செய்வதறியாது உழலும் காட்சி. இரத்தமும் சதையுமாய்க் உடல் சிதைந்து சின்னாபின்னமாய்க் கிடக்கும் குருவியைப் பார்க்கையில் இப்படித்தான் என்ற சசியும்.. என்று அவன் கதறும்போது வாசிப்பவர்களின் நெஞ்சம் சோகத்தில் சிதறும். ஈழப்போரின் பேரழிவு நினைவுகளைக் கனடா மண்ணிலிருந்து மீட்டெடுக்கும் வகையில் பின்நோக்கு உத்தியில் படைக்கப்பட்ட கதை. இந்தக் கதையைப் பொறுத்தமட்டில் வாசித்தால்தான் கதையின் அருமை புரியும். அகில் அவர்கள் இந்தத் தொகுப்பிற்கு, கூடுகள் சிதைந்தபோது என்ற தலைப்பினை வைத்தது உண்மையில் மிகப்பொருத்தம்.

அகிலின் கூடுகள் சிதைந்தபோது சிறுகதைத் தொகுதியின் சிறப்புகளாக நான் பட்டியலிட விரும்புபவை:
1. தமிழகத்தில் வெளிவரும் வட்டார வழக்குப் புனைகதைகளைப் போல் ஈழத்தமிழின் வட்டார நடை அகிலின் சிறுகதைகளில் மிக இயல்பாகப் பொருந்திப் போகிறது.
2. ஆசிரியரின் கதை சொல்லும் பாங்கும் பங்கேற்பும் கதையின் நம்பகத் தன்மையை மிகுவித்து வாசகர்களைக் கதைக்களங்களோடு ஒன்றிப்போகச் செய்கின்றன.
3. இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைமாந்தர்கள் யாருமே எதிர்நிலைப் பாத்திரங்கள் இல்லை என்பது ஒரு தனிச்சிறப்பு. பாத்திரப்படைப்பில் அகில் கையாண்டுள்ள இந்த அணுகுமுறை முற்றிலும் புதுமையானது
4. இத்தொகுதி உயிர்க்குலம் தழுவிய மானுடநேயத்தைக் கதைகளின் ஊடாகப் பரப்புரையற்ற தொனியில் முன்நிறுத்துகின்றன.
5. அகிலின் கதைகள் தலைமுறை இடைவெளிகளால் சிதைவுற்றுக் கிடக்கும் குடும்ப உறவுகள் மற்றும் பண்பாட்டு மதிப்பீடுகளை மறுமதிப்பீடு செய்கின்றன.
6. பாத்திரங்கள் மட்டுமின்றிப் பெரிய கல்வீடு, வானொலிப் பெட்டி, இணைக் குருவிகள் போன்ற சில அஃறிணைப் பொருட்களைக் குறியீடுகளாக்கிக் கதைக்கருவை முழுமைப்படுத்தும் உத்தி, அகிலின் கதைசொல்லலில் கையாளப் படுகின்றது.

அகிலின் கூடுகள் சிதைந்தபோது தொகுதியை வெறுமனே வாசித்துக் கடப்பது என்பது அத்துணை எளிய செயலன்று. ஒவ்வொரு கதையும் வாசகனிடம் ஓர் இனந்தெரியாத சோகத்தை, வலியை ஏற்படுத்துவது நிச்சயம். கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஈழத்தமிழர்கள் சொந்த மண்ணிலும் புலம்பெயர்தலிலும் புலம் பெயர்ந்த தேசங்களிலும் படும் வேதனைகள் வார்த்தைகளில் வடித்துவிட முடியாதவை. இத்தொகுதியில் அகிலின் சிறுகதைகள் எவ்விதப் புனைவுகளுமின்றி இரத்தமும் சதையுமாக அவர்களின் வாழ்க்கையை முன்நிறுத்துகின்றன. பேரினவாதம் ஏற்படுத்தும் இனஅழிப்பின் தாக்கங்களைத் தம் சிறுகதைகளின் ஊடாகக் காட்சிப்படுத்தும் இத்தொகுதி ஆங்கிலம் போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். படைப்பாளிகள் வெற்றிபெறுவது முக்கியமில்லை. படைப்புகள் வெற்றிபெற வேண்டும். அந்த வகையில் அகிலின் கூடுகள் சிதைந்தபோது என்ற படைப்பின் வெற்றி, காலத்தின் தேவை.

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

பிஜி தமிழர்கள் --மின்நூல் (E-Book)

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

பிஜி தமிழர்கள் கற்கத் தவறிய பாடங்களும்
உலகத் தமிழர்கள் கற்க வேண்டிய பாடங்களும் -மின்நூல்


Click to launch the full edition in a new window
Publishing Software from YUDU

புதன், 1 ஆகஸ்ட், 2012

தகவல் தொடர்புச் சாதனங்களும் கதையாடலும் மின்நூல்


முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

Dr.N.Ilango


தகவல் தொடர்புச் சாதனங்களும் கதையாடலும்- மின்நூல்


Click to launch the full edition in a new window
Online Publishing from YUDU
 
மின்நூலைப் பார்வையிட இங்கே சொடுக்கவும்

வியாழன், 28 ஜூன், 2012

இருபத்தோராம் நூற்றாண்டில் தமிழ் வகுப்பறை.

முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி-8

சீன ஞானக்கவி தாவோ அவர்களின் கவிதை வரிகளோடு இவ்வுரையைத் தொடங்குகின்றேன்.
களிமண்ணால் பானை செய்கிறோம்
உபயோகிப்பதோ வெற்றிடத்தை.
கதவுகளும் ஜன்னல்களும் வைத்து
வீடு கட்டுகிறோம்
உபயோகிப்பதோ
உள்ளே உள்ள வெற்றிடத்தை
எனவே
எது இல்லையோ அதை உபயோகி
எது இருக்கிறதோ
அதன் நன்மைகளைப் பெற்றுக்கொள்.
தமிழாசிரியர்களின் பணி மொழி கற்பித்தல். மொழி கற்பித்தல் என்ற தொடர் மொழியில் கற்பித்தல், மொழியைக் கற்பித்தல், என்ற இரண்டு பொருள்களில் கையாளப் படுகின்றது. மொழியில் கற்பித்தல் எனும்போது மொழி ஓர் ஊடகமாகவும் மொழியைக் கற்பித்தல் எனும்போது மொழி ஒரு பாடப் பொருளாகவும் அமைகின்றது. தமிழாசிரியர்களின் முதன்மையான பணி மொழியைக் கற்பிப்பதே. மொழியைக் கற்பிப்பது என்பது வெறுமனே மொழியின் இலக்கண விதிகளை, மொழி அமைப்பினைக் கற்பிப்பது மட்டுமன்று, மொழியை அதன் பயன்பாட்டு நோக்கில் தொடர்பாடல் கருவியாகப் பயன்படுத்தும் நுணுக்கங்களைக் கற்பிப்பதும் ஆகும். மொழியை நன்கு கையாளக் கற்றுக்கொள்வது மட்டுமன்றி மொழி கற்பித்தலுக்கு மற்றுமோர் இன்றியமையாத நோக்கமும் உண்டு, அது மொழிபேசும் இனத்தை, இனத்தின் வரலாற்றை, இனத்தின் பண்பாட்டைக் கற்பது என்பதுமாகும்.
தாவோவின் கவிதையை இங்கே நான் பொருத்திக் காட்ட விரும்புகின்றேன். களி மண்ணால் பானை செய்கிறோம். ஆனால் நாம் பயன்படுத்திக் கொள்வது அதற்குள்ளே உள்ள வெற்றிடத்தை. சுவரெழுப்பி, கதவு ஜன்னல்களைப் பொருத்தி வீடு கட்டுகிறோம், ஆனால் பயன்படுத்திக் கொள்வது அந்தச் சுவர்களுக்கு இடையிலான வெற்றிடத்தைத்தான். இது தாவோவின் தத்துவ மொழி. மொழிக் கல்வியும் அப்படித்தான், இலக்கண விதிகளால் கட்டப்பட்ட மொழியின் அமைப்பை நாம் கற்றுக்கொள்கிறோம். ஆனால் நாம் பயன்கொள்வது மொழிக்கு உள்ளிருந்து இயங்கும் அம்மொழி பேசும் இனத்தின் வரலாற்று மற்றும் பண்பாட்டு அடையாளங் களைத்தாம். எது இல்லையோ அதை உபயோகி, எது இருக்கிறதோ அதன் நன்மைகளைப் பெற்றுக்கொள் என்பது பருப்பொருளான மொழியின் நன்மைகளைப் பெற்றுக் கொண்டு நுண்பொருளாயிருக்கும் மொழி பேசும் இனத்தின் பண்பாட்டைப் பயன்கொள்வதாகும். 
இன்றைய உலகமயச் சூழலில், இப்புவியின் அனைத்துக் கண்டங்களிலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழினத்தின் பண்பாட்டு அடையாளங்கள் காப்பாற்றப்பட, மொழி வாழ வேண்டும். இனம் வாழ்வதால்; மொழி வாழ்ந்துவிடாது. மொழி வாழ்ந்தால்தான் இனம் வாழும். மொழிவாழ மொழிவழி இனத்தின் அடையாளங்கள் பேணப்பட வேண்டும். ரியூனியன், மொரீஷியஸ், பிஜி முதலான நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழினம் தன் இன அடையாளங்களை இழந்து, மொழி இழந்து வாழும் அவலம் உலகத் தமிழர்களுக்கு ஒரு பாடம். ஓர் இனத்தின் வரலாற்று, பண்பாட்டு அடையாளங்கள் அந்த இனம் பேசும் மொழியின் அகத்தும் புறத்தும் செறித்து வைக்கப்பட்டுள்ளன. இருபத்தோராம் நூற்றாண்டில் உலகத் தமிழனுக்குரிய முதல் கடமை, தமிழ்மொழி எழுத்தில் வாழ்ந்தால் மட்டும் போதாது. தமிழ் பேசப்படவேண்டும் என்ற விழிப்புணர்வினைக் கொள்வதும் கொடுப்பதும்தான். தமிழ் பேசுவோரின் எண்ணிக்கை குறையாமல் காக்கப்பட வேண்டும். இன்றைய தகவல்மய உலகில் தொடர்பாடல் மொழியாக ஆங்கிலம் பேருரு எடுத்துள்ள சூழலில் தமிழர்களின் பேச்சுவழித் தொடர்பாடல் மொழியாகவும் எழுத்துவழித் தகவல் தொடர்பு ஊடகமாகவும் தமிழே இருத்தல் வேண்டும். தமிழர்களின் படைப்பாக்கங்கள் முழுவதும் தமிழிலேயே உருவாக்கப் படல் வேண்டும். இத்தகு இலக்குகளை அடையத் தமிழாசிரியர்கள் மொழிக்கல்வியில் புதிய அணுகுமுறை களோடு புத்துணர்ச்சி ஊட்டும் வகுப்பறைச் சூழல்களை உருவாக்குதல் வேண்டும்.
**
தொல்காப்பியர் காலம் தொட்டு இருபத்தைந்து நூற்றாண்டுகளைக் கடந்து தமிழ்க்கல்வி இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டில் புதிய சவால்களை எதிர்கொண்டு நிற்கின்றது. இலக்கிய இலக்கணக் கல்வியே தமிழ்க்கல்வி, மனப்பாடம் செய்வதே வெற்றிகரமான கற்கும் முறை என்றிருந்த தமிழ்க்கல்வி வரலாற்றில் இந்நூற்றாண்டின் இணையமும் பல்லூடகமும் பல புதிய கதவுகளைத் திறந்து வைத்துள்ளன. சுவர்களுக்குள் கட்டுப்பட்டிருந்த வகுப்பறைகள் மறைந்து உலகத்தையே வகுப்பறையாக மாற்றிய பெருமை இணையத்திற்குண்டு.
சித்திரப் பாவையின் அத்தகவு அடங்கிச்
செவி வாயாக நெஞ்சு களனாகக்
கேட்டவை கேட்டவை விடாது உளத்தமைத்து (நன்னூல் -பாயிரம்)
பாடம் கேட்ட மாணவன் உயிர்பெற்று இயக்கத்திலிருந்து ஐம்புலன்களாலும் கற்கும் காலம் கனிந்துவிட்டது. தமிழாசிரியர்கள் இலக்கிய இலக்கணக் கொள்கலன்களாக இருந்து பருத்திக் குண்டிகை போல் (நன்னூல் -பாயிரம்) கொஞ்சமாக கொஞ்சமாகக் கொடுத்த காலங்கள் பழங்கதையாகி, நவீன அறிவியல் தொழில் நுட்பத் தேர்ச்சியும் உலகு தழுவிய விசாலப் பார்வையும் கொண்டவர்களாகப் புதிய அவதாரம் எடுத்துள்ளனர்.
மொழியாசிரியர்களின் முதன்மைப் பணி மொழி கற்பித்தலே. மொழி கற்பித்தல் என்பது அடிப்படையில் பேசுதல், கேட்டல், எழுதுதல், படித்தல் என்ற தொடர்பாடல் திறன்களைப் பயிற்றுவிப்பதே ஆகும். ஒரு மொழியின் இலக்கண இலக்கியங்களைக் கற்பதென்பது அம்மொழியின் வளங்களைக் கற்பது என்பதாக மட்டுமே அமையும். தாய்மொழி வழக்காற்றுச் சூழலில் மொழி பயல்வோர்க்கு ஒருகால் இக்கல்வி போதுமானதாக அமையலாம். ஆனால் மொழியைத் தாம் வாழும் சூழலில் தாய்மொழியாக, இயல்பான நடைமுறை வழக்காற்றோடு இணைத்துக் கற்பதைவிடப் புலம்பெயர் நாட்டில்; மொழி வழக்காறு அற்ற சூழலில் கற்பதென்பது மிகுந்த சிக்கலானது. இத்தகு சூழலில் தாய்மொழியின் அமைப்பையும் இலக்கண விதிகளையும் கற்பதென்பது தாய்மொழி அல்லாத பிறமொழி கற்பதற்கு இணையான இடர்ப்பாடுகளைக் கொண்டிருப்பது தவிர்க்க முடியாதது.
ஆசிரியர்கள் இத்தருணங்களில் மொழியைக் கற்பிப்பது என்பதனை இலக்கண விதிகளைக் கற்பிப்பதாகத் அமைத்துக்கொள்வது பொருத்தமான அணுகுமுறைதானா? என்பதனை எண்ணிப் பார்த்தல் வேண்டும். இத்தகு அணுகுமுறையால் புலம்பெயர் சூழலில் மொழி கற்கும் மாணவர்களின் ஆர்வம் சிதைந்துபோக வாய்ப்புள்ளது. இச்சிக்கலுக்கான ஒரே தீர்வு, மொழியை ஒரு கருத்துப் பரிமாற்றச் சாதனமாகப் பயன்பாட்டுச் சூழலில் கற்பிப்பதே. பயன்பாட்டுச் சூழலைக் கற்பிப்பதென்பது அந்த மொழியைப் பேசும் இனத்தின் பண்பாட்டோடு தொடர்புடையது. மொழியின் மரபுகள், மொழிபேசும் மக்களின் மரபுகள், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், வாழ்க்கைமுறை முதலான பின்புலங்களைக் கற்பிப்பதே சூழலைக் கற்பிப்பதாகும்.
மாணவர்கள் இலக்கண விதிகளைக் கற்பதைவிட, மொழியைத் தங்களின் கருத்தாடல் தேவைகளுக்குப் பயன்படுத்தக் கற்பதே இன்றைய முக்கியத் தேவை. இதனைக் கவனத்தில் கொண்டே மொழியாசிரியரின் கற்பித்தல் செயல்பட வேண்டும். ஏனெனில் வகுப்பறையில் இலக்கண விதிகளை ஒட்டி நாம் கற்றுக் கொடுக்கும் மொழியமைப்புக்கும் அன்றாட வாழ்க்கையில் மக்கள் பயன்படுத்தும் நடைமுறை மொழியமைப்புக்கும் இடையே உள்ள இடைவெளி நம் கற்பித்தலை அந்நியப் படுத்திவிடக் கூடும். 
நாட்டின் எதிர்கால மனிதவளம் என்பது மாணவர்களே. இந்த மாணவர்களைச் சரியான முறையில் உருவாக்கும் கடமை ஆசிரியர்களுக்குண்டு. ஆசிரியப் பணி மகத்தானது. எழுத்தறியத் தீரும் இழிதகமை என்பது பழைய வாக்கு. இங்கே எழுத்து என்பது கல்வி. கல்வியே ஒருவனை மேம்படுத்துகிறது. இத்தகைய கல்வியைப் போதிக்கும் ஆசிரியர்களின் பெருமை சொல்லில் அடங்காதது. என்றாலும் பின்வரும் திருக்குறள் கூறும் உண்மையையும் ஆசிரியர்கள் மனத்தில் கொள்ளுதல் வேண்டும்.
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு             (திருக்குறள்: 396)
தோண்டத் தோண்ட மணற்கேணி சுரக்கும் அதுபோலக் கற்கக் கற்க அறிவு சுரக்கும் என்பது குறளின் சுருங்கிய பொருள். இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய குறிப்பு ஒன்று உண்டு. தோண்டத் தோண்ட நீர் சுரக்கும் என்றால் நீர் மணற்கேணியின் உள்ளேயிருந்து வெளிப்படுகிறதே தவிர, தோண்டியவன் அந்த நீரை ஊற்றவில்லை. நீர் வெளிவருவதற்கான முயற்சிதான் தோண்டுதல். இதனை அப்படியே கற்றலுக்கும் கற்பித்தலுக்கும் பொருத்திப் பார்ப்போம். கற்பதனாலோ கற்பிப்பதாலோ அறிவு வெளிப்படும் என்பதற்கு உரிய விளக்கம், கற்பித்தவன் அந்த அறிவைக் கொடுக்கவில்லை அது கற்கும் மாணவனிடமிருந்தே வெளிப்படுகிறது என்பதாகும். அந்த அறிவினை வெளிப்படுத்தும் முயற்சிதான் கற்றலும் கற்பித்தலும். கல்வியின் நோக்கமும் அதுவே. ஒவ்வோர் ஆசிரியரும் இதனை மனத்தில் கொண்டே தம் பயிற்றலைத் தொடங்க வேண்டும். ஆசிரியர் கடமை மாணவனுக்கு உள்ளே திறமைகளை வெளிக் கொணர்வதுதான். இதனை நன்குணரும் ஆசிரியர்களே வகுப்பறையை இருவழிப் பாதையாக மாற்றுவர். ஆசிரியர் மாணவர் இடையிலான கருத்தாடல் இருவழியிலும் நிகழ்கிற போதுதான் உண்மையான மொழித்திறன் மாணவர்களுக்குக் கிட்டும்.
                வகுப்பறை என்னும் தளத்தில் பருப்பொருள்களாக ஆசிரியர் மாணவர்கள் மட்டுமே இருந்த நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் பெறத் தொடங்கியது. தொடக்கக்கால வகுப்புகளில் புத்தகங்களோ(சுவடிகளோ), எழுதுபொருள்களோ கூட இடம் பெற்றிருக்கவில்லை. கற்பித்தல் ஆசிரியன் வாய்வழியாகப் புறப்பட்டு மாணவர்களின் செவி வழியாக நெஞ்சில் ஏற்றப்பட்டது. பின்னர் காலப்போக்கில்  சிலேட்டு, பல்பம், அட்டை, புத்தகம், நோட்டுப் புத்தகம் முதலான கற்றல் கருவிகளும் கரும்பலகை, சாக்பீஸ் முதலான கற்பித்தல் கருவிகளும் வகுப்பறைகளில் இடம்பிடித்தன. இன்று பயிற்றுக் கருவிகள் பல்கிப் பெருகி வகுப்பறைகளை ஆக்கிரமித்துள்ளன. இன்றைய வகுப்பறைப் பயிற்றுக் கருவிகளை அச்சுக் கருவிகள், ஒளி ஊடுருவும் கருவிகள், ஒளி ஊடுருவாக் கருவிகள், செவிப்புலக் கருவி, ஒளி ஒலிக் கருவிகள், கணினி மென்பொருள், வன்பொருட்கள் என வகைப்படுத்தலாம்.
இருபதாம் நூற்றாண்டின் கடைசி வரவான கணினியும் கணினி சார்ந்த பல்லூடகமும் இணையமும் கற்றல், கற்பித்தலில் பயிற்றுக் கருவிகளாக இடம்பெறத் தொடங்கிய பிறகு வகுப்பறை என்பதற்கான பருப்பொருள் தன்மையே மாற்றம் பெறலாயிற்று. இன்றைக்குப் பல்லூடகமும் இணையமும் பயிற்றுக் கருவியாக மட்டுமல்லாமல் பயிற்றுநராகவும் செயல்படத் தொடங்கியுள்ளன. சிங்கப்பூர்க் கல்வி அமைச்சு, கற்றல் கற்பித்தலில் 30 சதவீதம் கணினிப் பயன்பாடு இருத்தல் அவசியம் என 2008 இல் அறிவித்த பிறகு தமிழ்மொழிக் கல்வியில் பல்லூடக, இணையப் பயன்பாடுகள் பெருமளவு பரவலாக்கப்பட்டுள்ளன.
இணையம் வழிக் கற்பித்தலில் மின்னஞ்சல், இணைய உரையாடல், காட்சிவழிக் கலந்துரையாடல், செய்திக் குழுக்கள், கோப்புப் பரிமாற்று நெறிமுறை, சமூக வலைத்தளங்கள் முதலான இணைய வாய்ப்புகள் மிகவும் உறுதுணையாக உள்ளன. மேலும் பல்லாயிரக் கணக்கிலான தமிழ் வலைத்தளங்களும் வலைப் பதிவுகளும் கற்பித்தலுக்கு உதவக்கூடிய கட்டுரைகள், கதைகள், கவிதைகள், முதலான தரவுகளை வழங்குவது மட்டுமன்றி மின் இதழ்கள், மின் நூலகங்கள், இணையத் தமிழ் அகராதிகள், கலைக் களஞ்சியங்கள் எனப் பல்வேறு வகையான கற்றல், கற்பித்தல் மூலங்களையும் இணையம் வழங்குகின்றது.
கணினி, கணினிவழிப் பல்லூடகம், இணையம், இணைய வழி ஏந்துகள் எனக் கற்றலும் கற்பித்தலும் காலத்திற்கேற்பப் பல புதிய கோலங்களைப் புனைந்து நம்மை வியப்பிலாழ்த்தினாலும் அவைகள் ஒருபோதும் கற்பித்தலில் ஓர் ஆசிரியரின் இடத்தை நிரப்பவல்லன அல்ல. வகுப்பறை என்பது தொழிற்கூடமன்று.
புலன்களால் கற்பது மட்டுமல்ல கல்வி. அது மனத்தால் கற்பது.
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்    
என்பார் ஒளவையார். மனப் பழக்கத்தால் பயிலுவதே கல்வி. கற்றலுக்குப் பயன்படும் கருவிகள் மாணவர்களின் புலன்களைப் பழக்கவல்லன. ஆனால் ஆசிரியரே மாணவர்களின் மனத்தைப் பழக்க வல்லவர். வகுப்பறைச் சூழல், மாணவர்கள் மனநிலை இவற்றைக் கருத்தில் கொண்டு அன்றன்றைக்குத் தேவைப்படும் உத்திகளோடு வகுப்பறையை உயிரோட்டம் உள்ளதாக மாற்றும் சக்தி ஆசிரியர்களுக்கே உண்டு. இப்படிச் சொல்வதன் நோக்கம் புதிய தொழில் நுட்பங்களை புறக்கணிப்பதாகாது. எத்தகைய அறிவியல், தொழில் நுட்ப வசதிகள் கிடைத்தாலும் அவற்றையும் பயன்கொண்டு நம்மை உயர்த்திக் கொள்வதுதான் சரியான பகுத்தறிவு என்றாலும் துணைக் கருவிகள் துணைக்குத்தான் என்ற தெளிவு நமக்கு வேண்டும்.
***
சிங்கப்பூர்க் கல்வி அமைச்சகம் இருபத்தோராம் நூற்றாண்டுத் திறன்களை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதிலும் ஆசிரியர்கள் தங்கள் வகுப்பறைச் சூழலிலேயே இத்தகு திறன்களை வளர்த்துக் கொள்ளுதலுக்குத் தங்கள் கற்பித்தல் அணுகுமுறைகளில் புதியன புகுத்திட வேண்டும் என்பதிலும் விழைவு கொண்டிருப்பது காலத்தின் தேவையை உணர்ந்த தக்கதோர் முன் முனைப்பாகும்.
இந்த இருபத்தோராம் நூற்றாண்டுத் திறன்களை மாணவர்கள் பெறுவதற்குப் பிற கல்விப்புலங்களை விட மொழிப்புலமே மிகச் சரியான தளமாகும். மொழித் திறன்களாகிய பேசுதல், கேட்டல், எழுதுதல், படித்தல் ஆகிய தொடர்பாடல் திறன்களின் வழியாகத்தான் மேற்சொன்ன திறன்களை மாணவர்கள் பெறுதல் எளிதாகும். மொழிக் கல்வியின் பாடத்திட்டங்களும் இத்திறன்களைப் பெறுவதற்கு உண்மையிலேயே சரியான களமாக அமைகின்றன.
இருபத்தோராம் நூற்றாண்டுத் திறன்கள்
1. குடியியல்சார் அறிவு, உலகளாவிய விழிப்புணர்வு, மற்றும் பிற
கலாசாரங்களைப் புரிந்துகொண்டு கையாளக்கூடிய திறன்கள்
துடிப்பான சமூக அக்கறைகொண்ட வாழ்வை மேற்கொள்ளுதல்,
தேசிய மற்றும் கலாசார அடையாளங்களைத் தெரிந்துகொண்டு நாட்டுருவாக்கத்துக்குத் தேவையான பண்புநலன்களைப் பெறுதல்
உலகை மிரட்டும் பிரச்சினைகளை அறிந்துகொள்வதில் அக்கறை காட்டுதல்
சமூகக் கலாசாரக் கூருணர்வும் விழிப்புணர்வும் பெறுதல்
2. நுண்ணாய்வுத் திறனும் புத்தாக்கப்புனைவுத் திறனும்
மாணவர்கள் தம் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளும்போது, காரண காரியத்தோடு பேசுதல், பிரச்சினைகளுக்குத் தெளிவான முடிவு எடுத்தல் முதலிய திறன்களைப் பெறுதல்
புதியனவற்றை அறிந்துகொள்ளும் முனைப்பு, அவற்றைப்பற்றி மீள்நோக்கிக் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளும் திறன் மற்றும் படைப்பாக்கத்திறன் முதலியன மேம்படுதல்
3. தகவல் மற்றும் கருத்துப் பரிமாற்றத் திறன்கள்
புதிய, பலதரப்பட்ட தகவல்களைத் திறந்த மனத்துடன் பெற்றுப் புரிந்துகொண்டு செயற்படுதல்
தகவல்களைப் பெறும்போது இணையப் பாதுகாப்பைக் கவனத்தில் கொள்ளுதல்
இணையத்தில் பெற்ற தகவல்களைப் பொறுப்புடன் பயன்படுத்துதல்
பெற்ற தகவல்களை பகிர்ந்துகொள்ளும்போது, பிறருக்குப் புரியும் வகையில் எடுத்துக்கூறும் திறனைப் பெறுதல்

இருபத்தோராம் நூற்றாண்டுத் திறன்களின் குவி மையம் உலகைப் புரிந்து கொள்ளுதலும் கருத்துப் பரிமாற்றத் திறன் பெறுதலும்தான். இன்றைய உலகமயச் சூழலில் கல்வியின் இலக்கும் இத்திறன்களைப் பெறுவதில்தான் முழுமைபெறும் என்பதில் ஐயமில்லை. மொழிக்கல்வியின் முதன்மை நோக்கமே கருத்துப் பரிமாற்றத் திறன்களை வளர்ப்பதுதான். கூடுதலாக நாம் கவனம் செலுத்தவேண்டிய திறன் உலகு தழுவிய விசாலப் பார்வையைக் கற்பிப்பது. இந்த இரண்டு நோக்கங்களை மையப்படுத்தி மொழியாசிரியர்கள் தங்கள் கற்பித்தலை மேம்படுத்துதல் வேண்டும்.
உலகம் எதிர்கொண்டுள்ள ஏதேனும் ஒரு சிக்கலை முன்னிறுத்தி 21 ஆம் நூற்றாண்டுத் திறன்களை மாணவர்களுக்குக் கற்பிக்கலாம்.
சான்றாக, புவி வெப்பமடைதல்.
புவி வெப்பமடைதல் குறித்த சிக்கல்கள் -தீர்வுகள் -நமது கடமைகள் குறித்து ஆசிரியர் அறிமுக நிலையில் முன்னுரைத்து இப்பிரச்சனை தொடர்பான கூடுதல் தகவல்களை இணைய வழியாகத் திரட்டக் கற்றுக்கொடுத்தல் -தேடுபொறிகளைக் கையாண்டுத் தரவுகளைத் திரட்டப் பயிற்றுவித்தல் -விவாதக் குழுக்களில் இணைந்து இப்பொருள் குறித்து விவாதிக்க வழிகாட்டுதல் -மின்நூலகம், மின்னிதழ்கள் இணையக் கலைக்களஞ்சியங்களைப் பார்வையிடக் கற்பித்தல்.
புவி வெப்பமடைதல் குறித்த தகவல்களைத் திரட்டியபின் இப்பிரச்சனை குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்துதல் தொடர்பாக மாணவர்களின் கருத்துப் பரிமாற்றத் திறன்களை வளர்த்தல் -நல்ல குடிமகனாகத் தன்னளவில் செய்ய வேண்டுவன யாவை என உணர்த்தலும் உணரச் செய்தலும்.
வகுப்பறைக் குழு விவாதங்களின் வழி, சிக்கலின் தீவிரத்தை அறியச் செய்தல். புவி வெப்பம் குறித்த கட்டுரை, கவிதை, நாடகம் முதலான படைப்பாக்கங்களை உருவாக்க வழிகாட்டுதல், நாடகங்களை நடிக்கச் செய்தல், மாணவர்களைப் பல குழுக்களாகப் பிரித்து சொற்போர் நிகழ்த்தப் பயிற்றுவித்தல் முதலான பல பயிற்சிகளின் வழி இருபத்தோராம் நூற்றாண்டுத் திறன்களை மாணவர் பெற்றுச் சிறக்க ஆசிரியர் தம் கற்பித்தலில் முனைப்பு காட்டலாம் வேண்டும்.  
****
கற்பித்தல் என்பது ஒரு கலை. அதிலும் மொழி கற்பித்தல் என்பதனைத்  தனிப்பட்ட ஒவ்வோர் ஆசிரியரின் செய்நேர்த்தியோடு கூடிய கலையாகவே நாம் கருதுதல் வேண்டும். மொழியாசிரியர் தம் பணியின் தொடக்கக் காலங்களில் தாம் கற்றுக்கொண்ட ஏதோ ஓர் அணுகுமுறையில் மொழிக்கல்வியைத் தொடங்கினாலும் தம் பணியில் அனுபவ முதிர்வு ஏற்பட ஏற்படத் தமக்கான ஒரு கற்பித்தல் அணுகு முறையினைத் தாமே உருவாக்கிக் கொள்ளுதல் வேண்டும். இத்தகு புதிய அணுகுமுறை அவரவர்க்கு வாய்த்த வகுப்பறைச் சூழல்களின் அடிப்படையில் உருவாக வேண்டும். மொழி கற்பித்தலின் வெற்றிகரமான பழைய அணுகுமுறைகள் பலவும் தனிப்பட்ட ஆசிரியர்கள் சிலரால் உருவாக்கப்பட்டவைகளே என்பதனை நாம் நினைவில் கொள்ளுதல் வேண்டும்.
ஓவியக் கலைஞனோ, சிற்பக் கலைஞனோ, இசைக் கலைஞனோ எந்த ஒரு கலைஞனும் தன் கலைத்திறமைக்குத் தேவைப்படும் சில அறிவியல் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு தன் கலையை வளர்த்துக்கொண்டாலும் அக்கலைஞனின் வெற்றி அவனது தனிப்பட்ட செய்நேர்த்தியிலும் படைப்பாற்றலிலும்தான் முழுமை பெறுகிறது. அதேபோல் ஆசிரியனும் ஒரு கலைஞனே. அவனது வகுப்பறை ஒரு கலைக் கூடமே. அவனது கற்பித்தல் ஒரு கலை வெளிப்பாடே. ஆசிரியனின் வெற்றியும் அவனது தனிப்பட்ட கற்பித்தல் நேர்த்தியிலும் தகுதியான மாணவர்களை உருவாக்கும் படைப்பாற்றலிலும்தான் முழுமை பெறுகிறது. கற்பித்தல் செய்நேர்த்தி என்பது ஆசிரியரின் ஈடுபாட்டோடு தொடர்புடையது. எத்தனை மேடைகளில் பாடியிருந்தாலும், நடனமாடியிருந்தாலும் அன்றைக்குத்தான் முதல்முறையாக மேடையேறும் கலைஞர்களைப்போல பாடகர்களும், நடனக் கலைஞர்களும் சாதகம் செய்தோ ஒத்தகை பார்த்தோ தங்களைத் தயார் செய்துகொள்வதைப் போல் ஆசிரியர்களும் ஒவ்வொரு நாளும் கற்பிக்க வகுப்பறைக்குச் செல்வதற்குமுன் முன்தயாரிப்பில் ஈடுபடவேண்டும். ஆயத்தப் படுத்திக்கொள்ள வேண்டும். இத்தகைய ஈடுபாடே ஆசிரியர்களின் வெற்றிக்கு முதல்படி.
புதுமை புரிவீர்! புத்துணர்ச்சி பெறச்செய்வீர்! இருபத்தோராம் நூற்றாண்டில் தமிழ் வகுப்பறை என்ற இக்கருத்தரங்கின் நோக்கம் முழுமைபெற வேண்டுமென்றால் ஒவ்வொரு மொழியாசிரியரும் தமது கற்பித்தலை ஒரு கலை வெளிப்பாடாக, ஒரு படைப்பாக்க வெளிப்பாடாக மாற்ற முயலவேண்டும். அதன் முழுமையில்தான் புத்துணர்ச்சி அடங்கியுள்ளது. இருபத்தோராம் நூற்றாண்டின் தமிழ் வகுப்பறைகள் இயந்திர மயமாக இல்லாமல் உயிரோட்டம் உள்ளனவாக அமைதல் வேண்டும். 
கலீல் ஜிப்ரானின் கவிதை வரிகளோடு இந்த உரையை நிறைவு செய்கிறேன்.
உங்கள் குழந்தைகளைத்
தயவுசெய்து
படித்த ஆசிரியரிடம் ஒப்படைக்காதீர்கள்;
படிக்கின்ற ஆசிரியரிடம் ஒப்படையுங்கள்.

துணைநின்ற நூல்கள் கட்டுரைகள்:
1.             இணையம் வழித் தமிழ் கற்பித்தல் (இணையக் கட்டுரை) சுப.நற்குணன்
2.             கணினியும் தமிழ் கற்பித்தலும் (நூல்) டாக்டர் சுப.திண்ணப்பன்,
3.             சிங்கப்பூரில் தமிழ்மொழி கற்றல் கற்பித்தலில் கணினியின் பயன்பாடு -(இணையக் கட்டுரை) முனைவர் ஆ.இரா.சிவக்குமரன்.
4.             சீன ஞானம் -வாழ்க்கை வெளிச்சம் (நூல்) டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி
5.             தமிழின் புதிய தேவைகளின் பார்வையில் தமிழ் கற்பித்தல்
(இணையக் கட்டுரை) பேராசிரியர் இ.அண்ணாமலை
6.             தமிழ் கற்பித்தலில் பயிற்சிகள் (நூல்) த.பரசுராமன்


Dr.N.Ilango



செவ்வாய், 19 ஜூன், 2012

காக்கை குருவி எங்கள் ஜாதி (கலாவிசு சிறுகதைகள்) அணிந்துரை


முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி-8

சிறுகதை என்ற இலக்கிய வடிவத்தின் மீது எனக்கு அலாதி ஈர்ப்புண்டு. தமிழின் ஈராயிரம் ஆண்டு இலக்கிய வெளியில் கவிதைகளைப் படித்து, அதில் கரைந்து போவதைவிடச் சிறுகதைகளில்தான் நான் அதிகம் கரைந்து போயிருக்கிறேன். நல்ல சிறுகதை, அதனைப் படித்து முடித்த பின்னும் நெடுநேரம் நம்மோடு உரையாடி உறவாடி நீங்காமல் நிலைத்திருக்கும். சுவையான காபி கடைசிச் சொட்டுவரை குடித்து முடித்த பின்னும் நாக்கிலும் மனதிலும் நெடுநேரம் சுகமாகக் குடியிருப்பதைப் போல. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் ஒரு சிறந்த சிறுகதை, வாசகனை அடுத்த கதையைப் படிக்க விடாது.

ஐரோப்பியர் வருகை, அச்சியந்திர அறிமுகம், ஆங்கிலக் கல்வி வாய்ப்பு முதலான அகப்புறச் சூழல்களே தமிழில் உரைநடை இலக்கியங்கள் தோன்ற வாய்ப்பளித்தன. தமிழில் உருவான உரைநடை இலக்கிய வகைகளில் சிறுகதை என்பது கடைசி வரவு. தமிழில் நாவல்கள் தோன்றி ஐம்பதாண்டுகள் கழித்தே தமிழ்ச் சிறுகதைகள் உருவாயின. உரைநடை இலக்கிங்களில் சிறுகதைதான் கடைசிக் குழந்தை என்பதால் கடைக்குட்டியின் மீது எல்லோருக்குமே ஒரு தனி ஈர்ப்பு இருப்பது இயல்புதானே.
தமிழில் சிறுகதைகள் பிறந்து இன்னும் ஒரு நூற்றாண்டைக் கூடக் கடக்கவில்லை. 1926 இல் வ.வே.சு. ஐயர் எழுதிய ‘குளத்தங்கரை அரசமரம்’ என்ற சிறுகதை யிலிருந்துதான் தமிழ்ச் சிறுகதைகளின் வரலாறு தொடங்குகிறது. முதல் ஐம்பதாண்டு களிலேயே தமிழின் மிகச்சிறந்த சிறுகதைகள் எல்லாம் எழுதப்பட்டு விட்டன என்ற நம்பிக்கை எனக்குண்டு. இரண்டாம் ஐம்பதாண்டுகளில் தமிழ்ச் சிறுகதைகள் அந்தப் பழம்பெருமையைக் காப்பாற்றித் தக்கவைத்துக் கொள்ளவே பெரும்பாடு படவேண்டியுள்ளது. முதல்பாதி நூற்றாண்டுச் சிறுகதைகளை வாசித்த அதே ஈடுபாட்டோடுதான் இன்றைக்கு வருகிற சிறுகதைகளையும் நான் வாசிக்கிறேன். படைப்பின் செய்நேர்த்தியில் வேறுபாடுகள் தெரிந்தாலும் வாழ்க்கையின் சகல பரிமாணங்களையும் படைப்புக்குள் கொண்டு வருவதில் புதியவர்கள் ஒன்றும் சளைத்தவர்களில்லை.

சிறுகதைகளுக்கு மட்டும் அப்படி என்னத் தனிச்சிறப்பு? தேனீக்கள் எல்லைகள் கடந்து மலர்க் கூட்டங்களைத் தேடி, நாடி துளித்துளிகளாய் மலர்களில் உள்ள இனிப்புச் சுரப்பை உறிஞ்சி வயிற்றில் சுமந்து, கூட்டுக்கு வந்ததும் ஆறஅமர வயிற்றிலேயே சிலபல வேதி மாற்றங்களைச் செய்து அந்த இனிப்பைத் தேனாக்கிச் சேமித்துத் தருகிறதே, அப்படித்தான் சிறுகதை ஆசிரியர்களும். வாழ்க்கை அவர்களின் படைப்பில், படைப்பாற்றலில் வேதிமாற்றமடைந்து அழியாத கலையாகிறது! இலக்கியமாகிறது.
சிறுகதை என்பது வடிவில் சிறிய கதை இல்லை. சின்னதாய்க் கதை சொல்வதனாலேயே அது சிறுகதை ஆவதில்லை, இது வேறு. வாழ்க்கையின் ஒரு பகுதி, உணர்வோட்டத்தின் ஒரு துணுக்கு, கதா பாத்திரங்களினுடனான கணநேரத் தீண்டலின் சிலிர்ப்பு இவற்றில் ஏதோவொன்றோ, இதுபோன்ற பிறிதொன்றோ படைப்பாளியின் எழுத்தாற்றலால் நம் மனமேடையில் நடத்தும் நாடகமே சிறுகதை. கலாவிசுவின் சிறுகதைகளும் சற்றேறக்குறைய அதைத்தான் செய்கின்றன.
II
நூலாசிரியர் கலாவிசு புதுவை அறிந்த நல்ல கவிஞர். கவிதை வானில் என்ற இலக்கிய அமைப்பையும் அதே பெயரிலான ஓர் இலக்கிய இதழையும் தொடங்கித் தொடர்ந்து நடத்திவருபவர். நண்பர்கள் தோட்டம் நடத்தி வெற்றிபெற்ற முழுநிலாப் பாட்டரங்கங்களைத் தொடர்ந்து, கவிதை வானில் பாட்டரங்குகள் புதுவையில் தனிமுத்திரைப் பதித்து வருகின்றன. புதுச்சேரியின் கவிதை வளர்ச்சிக்கும் கவிஞர்களின் வளர்ச்சிக்கும் இந்தப் பாட்டரங்குகளின் பங்கு நிச்சயம் உண்டு. முதன்முதலாகக் கவிதைவானில் நிகழ்ச்சியில் மேடையேறி இன்றைக்கு நல்ல கவிஞர்களாய்ப் புதுவையில் வலம் வருவோர் பலருண்டு. குறிப்பாகப்  பெண் படைப்பாளியர் பலருக்கு அவர் தக்க களம் அமைத்துக் கொடுத்திருக்கிறார். கவிதைகளை ஜனநாயகப் படுத்தியதில் அவர் வெற்றி பெற்றுள்ளார். படைப்பிலக்கியத் துறையில் கவிதை, கட்டுரை, சிறுகதைகள் எனத் தொடர்ந்து இலக்கியத்தின் பல்வேறு வடிவங்களிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ள கலாவிசு, இலக்கியப் பணியோடு சமுதாயப் பணியிலும் ஆர்வமுடையவர். தன் விருப்பப் பணியாகப் புதுச்சேரிக் குடும்பநல வழக்குமன்றத்தில் ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார். இந்நூல் இவரின் பத்தாவது நூல். சிறுகதை வரிசையில் இது மூன்றாவது நூல்.

காக்கை குருவி எங்கள் ஜாதி என்ற இச்சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் இருபத்தாறு சிறுகதைகள் உள்ளன. இன்றைக்கு வருகின்ற சிற்றதழ்களுக்கு ஏற்றவகையில் அவை அளவால் சிறுத்துக் காணப்படுகின்றன. பெரும்பாலான சிறுகதைகள், அவரின் சொந்த வாழ்க்கை அனுபவங்களிலிருந்து, அதாவது அவர் பார்த்த, கேட்ட, அனுபவித்த வாழ்க்கையின் பகுதிகளிலிருந்து சிறுகதை வடிவம் பெற்றிருக்கின்றன. ஊடகங்களின் வழியாக இவர் வாசிக்க நேர்ந்த குறிப்பிடத்தக்க குற்றச் செய்திகளும் கூட இவரின் கதைக் கருவுக்குத் தப்பவில்லை. நூலாசிரியர் கலாவிசு சிறுகதைகளின் மையஅச்சு, குடும்பம் மற்றும் குடும்ப உறவுகள். இந்த மைய அச்சினைச் சுற்றியே அவரின் கதைகள் இயங்குகின்றன. அவர் அன்றாடம் தாம் சந்திக்கும் மனிதர்கள், சம்பவங்கள் இவைகளின் ஊடாகப் பயணம் செய்து குடும்பம் மற்றும் குடும்ப உறவுகள் சிதைக்கப்படுகிற கணங்களையும் அதன் உடனடி விளைவாக மறுமுனையிலிருந்து குடும்ப உறவுகள்; காப்பாற்றப்படுகிற கணங்களையும் கூர்ந்து கவனித்து எளிய கதைகளாக்கி இத்தொகுப்பில் பதிவு செய்துள்ளார்.

இந்நூலில் இடம்பெற்றுள்ள,
1.    என்னை மன்னிச்சுடு பானும்மா..
2.    ஏரோட்டம் நின்னுபோனா!
3.    இந்தக் காலத்துப் புள்ளங்க
4.    காக்கைக் குருவி எங்கள் ஜாதி
5.    மனதோடு தான்
6.    பாட்டியும் பேத்தியும்
7.    பெத்தாதான் புள்ளயா?
8.    சூப்பர் மூன்
9.    ஏழையென்ற போதும்


முதலான கதைகளில் நூலாசிரியர் கலாவிசுவின் சிறுகதைப் படைப்பாற்றல் தனித்தன்மையோடு வெளிப்படுவதனைச் சிறப்பாகக் குறிப்பிடமுடியும்

    காக்கை குருவி எங்கள் ஜாதி என்ற இச்சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள சாமான்ய மனிதர்கள், குறிப்பாக விளிம்பு நிலை மனிதர்கள், மற்ற உயர், மத்தியதர வகுப்பு மனிதர்களைக் காட்டிலும் போலித்தனப் பகட்டுகள் அற்றவர்களாகவும் பிறருக்கு உதவும் இரக்ககுணம் மிக்கவர்களாகவும் இயல்பாகச் சித்தரிக்கப் பட்டுள்ளனர்.
ஏழையென்ற போதும் என்ற சிறுகதையில் கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போகும் குடும்பத்தில் உடல்நலமில்லாத குழந்தையை யாரிடம் விட்டுவிட்டுப் போவது என்ற சிக்கல் எழும்போது வேலைக்காரியைப் பார்த்துக் கொள்ளச் சொல்லலாம் என்று கணவன் சொல்ல மனைவி தயங்குகிறாள். அப்பொழுது அவர்களுக்குள் நடக்கும் உரையாடல்,
என்னங்க? உங்களுக்குப் பைத்தியமா புடிச்சிருக்கு? சேரியில வாழ்ற பொம்பளகிட்ட புள்ளைய விட்டு, வீட்டையும் தொறந்து விட்டுட்டுப் போகணுங் கறீங்களே? அவ எதையாவது தூக்கிட்டுப் போயிட்டா?
இங்கபாரு! உனக்கு ஏழைங்கன்னா இளக்காரமா போயிடுச்சு! அவங்க உண்மையா இருப்பாங்க. நம்பள மாதிரி ஒளிச்சு அவங்களுக்குப் பேசத் தெரியாது. பழகினவங்களுக்கு ஒண்ணுன்னா உயிரைக்கூடக் கொடுப்பாங்க.
என்று விளிம்புநிலை மக்களின் போலித்தனமற்ற வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டுகிறார் ஆசிரியர். மேலும் கதையின் முடிவில் வேலைக்காரியின் தன்னலமற்ற சேவையில் மனம்மகிழ்ந்த கதைத் தலைவியிடம் அவள் கணவன்,

அப்பாடா! இப்பவாவது உனக்கு புத்திவந்துச்சே.. அதுவே எனக்குப் போதும். எட்டி நின்னு என்னான்னு கேக்கற உறவுக்காரங்களை விட கூடவே இருந்து உதவுற ஏழைங்களத்தான் நம்மளோட சொந்தக்காரங்களா நினைச்சுக்கணும். அவங்ககிட்ட பணம் மட்டும்தான் இல்லை, குணத்தால அவங்கத்தான் உயர்ந்தவங்கன்னு உனக்குப் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.
என்று சொல்வது கதையின் சிறந்த முடிப்பு.

    கலாவிசு சிறுகதைகளின் தனித்தன்மைகளாகச் சிலவற்றைப் பட்டியலிடமுடியும்.
1.    எளிய இனிய மொழிநடை.
2.    அளவான உரையாடல்
3.    இயற்கை இகந்த, அதீதப் புனைவுகளைக் கையாளாமை.
4.    கதை நிகழ்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் தருதல்
5.    நம்பிக்கையளிக்கும் விதத்தில் வாழ்க்கையைப் பதிவுசெய்வது.
6.    விளிம்புநிலை மக்களின் பக்கம் நின்று படைப்பை உருவாக்குவது.
7.    சமூகத்தில் பெண்களின் பங்களிப்பை அங்கீகரிப்பது.
8.    இயற்கை, மனிதர்கள், பறவை விலங்கினங்கள் என விரிந்த தளத்தில்
மனிதநேயத்தைப் பேசுவது.
என்பன அவை.

    சிறுகதைகளின் மொழிநடையைப் பொருத்தமட்டில் அவற்றுக்கென்று சிறப்பான தனித்தன்மை வாய்ந்த விவரித்தல் முறை ஒன்றுண்டு. கதையை, சிறுகதை யாக்குவதில் அத்தகு விவரிப்பு நடைக்கு ஒரு முக்கிய பங்குண்டு. கதை நிகழ்ச்சிகளின் கோர்வைமட்டுமே சிறுகதை ஆவதில்லை. சொல்லப்போகும் கதையின் எடுத்துரைப்பில்தான் சிறுகதை முழுமைபெறுகிறது. நூலாசிரியர் கலாவிசு சிறுகதையின் இத்தகு எடுத்துரைப்பில் கணிசமான கவனம் செலுத்துதல் வேண்டும். இது என்அவா.
இத்தொகுப்பின் பெரும்பாலான சிறுகதைகளில் நூலாசிரியர் கலாவிசு ஒரு பார்வையாளராக இருந்தே அக்கதைகளைப் பதிவுசெய்கிறார். எந்தக் கதையிலும் படைப்பாளி சட்டென்று மூக்கை நீட்டி போதனை செய்யத் தொடங்கிவிடக் கூடாது என்பதில் அவர் விழிப்போடு இருக்கிறார். இந்த அம்சம் கலாவிசு கதைகளில் பாராட்டப்பட வேண்டிய அம்சம். பொதுவாகப் படைப்பாளிகளிடம் காணப்படும் நம்பிக்கை வறட்சி கலாவிசு சிறுகதைகளில் அறவே கிடையாது. சமூகம் குறித்த அவரின் பார்வையில் முழுக்க முழுக்க நம்பிக்கை ஒளிக்கீற்றுகளே விரவிக் கிடக்கின்றன. தான் வாழும் சமூகத்தை, சமூகத்தின் மக்களை மிகவும் நேசிக்கும் ஒருவரால்தான் இது சாத்தியம்.
இந்தத் தொகுதியில் இடம்பெற்றுள்ள பல கதைகள் வாசகர்கள் மனதிலும் நிச்சயம் இடம்பிடிக்கும் என்ற நம்பிக்கையை ஆசிரியர் தம் படைப்பாற்றலால் உறுதிப்படுத்தியுள்ளார்.

நூலாசிரியர் கலாவிசு தொடர்ந்து சிறுகதைத் துறையில் முத்திரை பதிக்க வேண்டும். அதற்கான முழுத்தகுதியும் அவருக்குண்டு என்பதை அடையாளம் காட்டும் தொகுதியாக காக்கை குருவி எங்கள் ஜாதி என்ற இச்சிறுகதைத் தொகுதி விளங்குகிறது. படைப்பாளிக்குப் பாராட்டுக்கள்.

         

செவ்வாய், 29 மே, 2012

தமிழர் வீரமும் பலமும் -இளவட்டக்கல்


முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8



புதுக்கோட்டை மாவட்டம் திருமய்யம் கோட்டையை ஒட்டிய கோயில் வளாகத்தில் கவனிப்பாரற்றுக் கிடக்கும் இளவட்டக்கல். 



இளவட்டக் கல்லைச் சுமக்கப் போவதுபோல் பாவனை காட்டும் 
முனைவர் நா.இளங்கோ

இளவட்டக்கல்:
சென்ற நூற்றாண்டுகளில் தமிழகத்தின் தென்மாவட்டங்களில், குறிப்பாகப் பாண்டி நாட்டில் இந்த இளவட்டக் கல்லை தூக்கிச்சுமக்கும் வீரவிளையாட்டு நடப்பதுண்டு. இளவட்டக் கல்லைத் தூக்கிச் சுமக்கும் இளைஞனுக்கே தம் பெண்ணை மணமுடித்துத் தருவதாக மறவர் குலத்தில் ஒரு வழக்கமுண்டு. இன்றைக்கு அந்த வழக்கம் மறைந்துபோய் விட்டாலும் தென்மாவட்டங்களில் பல சிற்றூர்களில் இன்றும் இளவட்டக் கல்லைச் சுமக்கும் போட்டி நடத்தப்படுகிறது. வென்றவர்களுக்குப் பரிசுகள் உண்டு. (பெண் கொடுப்பதில்லை)

இளவட்டக்கல் பொதுவாகச் சுமார் 100 கிலோ எடைகொண்டதாகவும். முழு உருண்டையாக வழவழவென்று எந்தப்பிடிப்பும் இல்லாமல் கைக்கு அகப்படாத வடிவத்தில் இருக்கும். இளவட்டக் கல்லுக்குக் கல்யாணக் கல் என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

இளவட்டக்கல்வைச் சுமப்பதில் பல படிநிலைகள் உண்டு.
முதலில் குத்தங்காலிட்டு உட்கார்ந்த நிலையில் கல்லை இருகைகளாலும் சேர்த்தணைத்து இலேசாக எழுந்து கல்லை முழுங்காலுக்கு நகர்த்தி, பின்னர் முழுதாக நிமிர்ந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கல்லை நெஞ்சின் மீது ஏற்றி, பின்னர் தோள்பட்டைக்கு நகர்த்தி முழுதாகச் சுமக்க வேண்டும். தோள்பட்டைக்கு இளவட்டக்கல் வந்துவிட்டால் அடுத்துக் கல்லோடு கோயிலை வலம்வருவது குளத்தை வலம்வருவது எனச் சாதனைகளைத் தொடரலாம்.

புதுமாப்பிள்ளைகளுக்குக் கருப்பட்டிப் பணியாரம் செய்துகொடுத்து அவரை இளவட்டக்கல்லைத் தூக்கச் சொல்லும் பழக்கம் முன்னர் நடைமுறையில் இருந்ததாம். தமிழரின் உடல்பலத்திற்கும் வீரத்திற்கும் சாட்சியாகத் திகழ்ந்த இந்த இளவட்டக் கற்கள் இன்றைக்குப் பல ஊர்களில் தம்மைத் தூக்கிச் சுமப்பார் யாரும் இல்லாமல் பாதியளவு மண்ணில் புதைந்துகிடக்கும் பரிதாபத்தை நாம் காணலாம்.

சனி, 19 மே, 2012

My ebook - இலக்கிய வரலாற்றில் குறுந்தொகை -மின்நூல்







இலக்கிய வரலாற்றில் குறுந்தொகை மின்நூலைப் பார்வையிட இங்கே சொடுக்கவும்



 முனைவர் நா.இளங்கோ
தமிழ்ப் பேராசிரியர்
புதுச்சேரி-8

புதுச்சேரியில் பெளத்தம் - எனது மின்நூல்









மின்நூலைப் பார்வையிட இங்கே சொடுக்கவும்
Myebook - Buddhism in Puducherry (Tamil)


முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8


ஞாயிறு, 13 மே, 2012

பத்துப்பாட்டில் முல்லைப்பாட்டு - ஆய்வுநோக்கில் முல்லைப்பாட்டு -பகுதி-1

பத்துப்பாட்டில் முல்லைப்பாட்டு

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

செவ்வியல் தமிழின் பெருமைகளுக்கு ஒரு மணிமகுடமாகத் திகழ்வன இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களே. பாட்டும் தொகையும் என்று பொதுவில் அழைக்கப்படும் சங்க இலக்கியங்களின் எண்ணிக்கை பதினெட்டாகும். பத்துப்பாட்டு, பத்து நெடிய பாடல்களின் தொகுப்பாகும். இவை தனித்தனி ஆசிரியர்களால் பாடப்பட்ட தனி நூல்களே. எட்டுத்தொகை எட்டுத் தொகுப்பு நூல்களாகும். பத்துப்பாட்டு பத்தும் எட்டுத்தொகைகள் எட்டும் என சங்க இலக்கியங்கள் பதினெட்டாகும்.
பத்துப்பாட்டு எட்டுத்தொகை நூல்களின் பெயர்களை வரிசைப்படுத்தும் பழம் பாடல்கள்,

முருகு, பொருநாறு, பாண்இரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி -மருவினிய
கோல நெடுநல்வாடை, கோல்குறிஞ்சி, பட்டினப்
பாலை, கடாத்தொடும் பத்து

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறமென்று
இத்திறத்த எட்டுத் தொகை


என்று சங்க இலக்கியப் பதினெட்டு நூல்களையும் அறிமுகம் செய்யும். அகமும் புறமும் இந்நூற்களின் பாடுபொருள்களாகும்.

பத்துப்பாட்டு:

சங்க இலக்கியங்களில் பாட்டு என்றாலே அது பத்துப்பாட்டு நூல்களைத்தான் குறிப்பிடும். பேராசிரியர் பெ.சுந்தரம் பிள்ளை,

பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ
எத்துணையும் பொருட்கியையும் இலக்கணமில் கற்பனையே?


என்று பத்துப்பாட்டினை முன்வைத்துச் சங்க இலக்கியங்களின் இயற்கை நவிற்சித் தன்மைகளை வியந்து போற்றுகிறார். சங்கத் தொகை நூல்களில் பத்துப்பாட்டு முற்பட வைத்து எண்ணப்படுவதே அதன் பெருமையை உணர்த்தும். எட்டுத்தொகை போல் பத்துப்பாட்டும் தொகை நூலே. ஆசிரியர் எண்மர் பாடிய பத்து அகவல் பாக்கள் இதில் உள்ளன.

    பிற்காலத்தில் தோன்றிய பன்னிரு பாட்டியல் எனும் பாட்டியல் நூலில் பத்துப்பாட்டு இலக்கிய வகை குறித்த இரண்டு நூற்பாக்கள் இடம்பெற்றுள்ளன. அவை வருமாறு:

    நூறடிச் சிறுமை நூற்றுப்பத் தளவே
    ஏறிய அடியின் ஈரைம் பாட்டுத்
    தொடுப்பது பத்துப் பாட்டு எனப்படுமே     
        (பன். பாட். 384)

அதுவே அகவலின் வருமென அறைகுவர் புலவர்        (பன். பாட். 385)

இந்நூற்பாக்கள் ‘பத்துப் பாட்டு’ என்னும் வழக்கு நிலவிய காலத்தில் இயற்றப் பட்டிருக்க வேண்டும். சங்க இலக்கியப் பத்துப்பாட்டு இலக்கியத்தை வைத்தே இவ்விலக்கணம் வகுக்கப்பட்டுள்ளது. இத் தொகுப்பினத் தவிர வேறு பத்துப்பாட்டு நூல்கள் எதுவும் தமிழுலகில் இல்லை.

    பத்துப்பாட்டு நூலுள் மிகச் சிறிய பாட்டு முல்லைப்பாட்டு, 103 அடிகள். மிகப்பெரிய பாட்டு மதுரைக் காஞ்சி, 782 அடிகள். பத்துப்பாட்டுள் ஐந்து பாடல்கள் ஆற்றுப்படைகள். திருமுருகாற்றுப்படை என்னும் புலவர் ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, மலைபடுகடாம் என்னும் கூத்தர் ஆற்றுப்படை என்பன அவை. மதுரைக் காஞ்சி, நிலையாமை கூறும் காஞ்சித் திணை சார்ந்த நூல், எனவே புறப்பொருள் பாட்டு. ஆக மேற்சுட்டிய ஆறு நூல்களும் புறப்பொருள் பற்றியன. முல்லைப் பாட்டு, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, நெடுநல்வாடை என்ற நான்கு நூல்களும் அகப்பொருள் பற்றியன. நெடுநல்வாடை குறித்து அகமா? புறமா? என்ற விவாதங்கள் இருப்பினும் அது அகப்பொருள் நூலே.

முல்லைப்பாட்டு:
பத்துப்பாட்டின் அகப்பொருள் பாட்டுக்கள் நான்கனுள் அளவால் சிறியது முல்லைப்பாட்டு. மொத்தம் 103 அடிகள். முல்லைப்பாட்டின் ஆசிரியர் காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார். இவருடைய இயற்பெயர் பூதன் என்பது ஆகும். ஆர் விகுதி உயர்வு குறித்ததாகும். கல்விக் கேள்விகளில் சிறந்து விளங்கிய சான்றோர்களின் இயற்பெயருக்கு முன்னர் ‘ந’ என்னும் சிறப்புப் பொருளைத்தரும் இடைச்சொல்லைச் சேர்த்து வழங்குதல் பழந்தமிழர் மரபு. அவ்வகையில் பூதன் என்ற பெயர் நப்பூதனார் என வழங்கப்பட்டிருத்தல் வேண்டும். நக்கீரனார், நத்தத்தனார், நச்சள்ளையார் முதலான பெயர்களில் ந என்னும் சிறப்பு முன்னொட்டு இடம்பெறுதல் ஒப்புநோக்கத் தக்கது.

முல்லைப்பாட்டில் பாடி வீட்டின் உள் கட்டமைப்பு மற்றும் அரசர் தனியறை குறித்த வருணனைகளை மிக நுணுக்கமாகக் கையாளும் திறத்தினைக் கொண்டு இவர் வணிகர் குடியில் பிறந்தவராயினும் மன்னருடனும் மற்றும் அவர்தம் படைகளுடனும் பெரிதும் நெருங்கிப் பழகியவர் என யூகிக்க முடிகின்றது.

இவர் தந்தையார் பொன்வாணிகர் என்பதும் இவர் சோழ நாட்டுத் தலைநகரில் பிறந்து வளர்ந்தவர் என்பதும், இவரின் பெயர்வழி அறிந்துகொள்ள முடிகின்றது. முல்லைப்பாட்டு ஆசிரியரின் காலத்தை அறிய உறுதியான சான்றுகள் இல்லை. முல்லைப்பாட்டில் யவனரைப்பற்றியும், மிலேச்சரைப்பற்றியும் குறிப்புகள் வருகின்றன. நெடுநல்வாடையிலும் இதுபோன்ற குறிப்புகள் வருகின்றன. எனவே, நெடுநல்வாடை தோன்றிய காலத்தை அடுத்து முல்லைப்பாட்டு தோன்றியிருக்க வேண்டும் என்று அறிஞர் இராசமாணிக்கனார் முல்லைப்பாட்டின் காலத்தைக் கணிக்கின்றார். நற்றிணையில் உள்ள 29-ஆம் பாடலை இயற்றிய பூதனாரும், முல்லைப்பாட்டின் ஆசிரியர் நப்பூதனாரும் ஒருவரே என்ற ஒரு கருத்தும்  உள்ளது.

முல்லைக்குரிய உரிப்பொருள் இருத்தலும் இருத்தல் நிமித்தமும் ஆகும். இருத்தல் என்ற இவ் உரிப்பொருளைச் சிறப்பித்தும் முல்லைக்குரிய முதல் கருப்பொருள்களை இடம்பெறச் செய்தும் பாடப்படும் அகப்பாட்டு முல்லைப் பாட்டாகும். இருத்தல் என்றால் ஆற்றியிருத்தல் என்பது பொருளாகும். தலைவன் பிரிந்து சென்றதனால் ஏற்பட்ட பிரிவுத் துயரத்தைத் தலைவி பொறுத்துக் கொண்டிருத்தல் என்பதாகும். கற்பின் விளக்கம் கூறுவோர் எத்தகைய துன்பம் வரினும் தன்னிலையில் தளராது விளங்கும் ஒருத்தியை முல்லை சான்ற கற்பினள் என்று வியந்து பாராட்டுவது உண்டு. அத்தகைய முல்லை சான்ற கற்பினள் ஒருத்தியின் இருத்தலை விளக்குவதாக முல்லைப்பாட்டு அமைந்துள்ளது. 

போர் மேற்சென்ற தலைவன் தான் வரும் வரையில் ஆற்றியிருக்க வேண்டும் என்று தன் தலைவியிடம் வேண்ட அவளும் அவ்வாறே ஆற்றியிருந்தாள். தலைவனும் தான் குறித்த காலத்தில் திரும்பி வந்து அவளைக் கூடி இன்புற்றான். பிரிவுக் காலத்து இருவரின் மனநிலைகளையும் இப்பாடல் எடுத்துரைக்கின்றது.

முல்லைப்பாட்டின் தலைவன் - ஆய்வு நோக்கில் முல்லைப்பாட்டு -பகுதி-2

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-605008

முல்லைப்பாட்டின் தலைவன்:

    முல்லைப்பாட்டு ஓர் அகப்பொருள் இலக்கியம். புறப்பொருள் இலக்கியங்களுக்குப் பாட்டுடைத் தலைவர்கள் உண்டு. அகப்பொருள் இலக்கியங்களுக்கு பாட்டுடைத் தலைவர்கள் இல்லை. கிளவித் தலைவர்கள் மட்டுமே பாடப்படுவர். கோவை முதலான அகப்பொருள் இலக்கியங்களில் பாட்டுடைத் தலைவர், கிளவித் தலைவர் என இருவேறுபட்ட தலைவர்கள் அமையப் பாடும் மரபு பிற்கால வழக்கு.

    மக்கள் நுதலிய அகனைந் திணையும்
    சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறாஅர்

என்ற அகப்பொருள் மரபை ஒட்டி, முல்லைப்பாட்டுக்குப் பாட்டுடைத் தலைவர் இன்னார் என்று சுட்டி சொல்லப்பட முடியாது என்பதே உண்மையாயினும் முல்லைபாட்டு ஆராய்ச்சியுரையில் மறைமலையடிகள்,
  • இம் முல்லைப்பாட்டை அடுத்திருக்கின்ற மதுரைக்காஞ்சியும் நெடுநல்வாடையும் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு விளங்கலால், அவற்றை அடுத்திருக்கின்ற இதுவும் அவனையே பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு செய்யப்பட்டிருக்கலாமென்பது கருதப்படும்.
என்று குறிப்பிடுவார்.

பாண்டியன் நெடுஞ்செழியன் தலையாலங் கானம் என்னும் இடத்தில் தன்னைப் பகைத்து எதிர்ந்த சேரன் சோழன் திதியன் எழினி எருமையூரன் இருங்கோவேண்மான் பொருநன் என்னும் அரசர் எழுவரொடும் போர்புரிந்தான் என்ற சங்க இலக்கியச் செய்தியோடு முல்லைப்பாட்டினைப் பொருத்தி இப்பாடலில் குறிப்பிடப்படும் போர் தலையாலங் கானப் பேரே என்றும் தலைவியைப் பிரிந்து பாசறையில் வினையாற்றி மீளும் தலைவன் நெடுஞ்செழியனே என்றும் மறைமலையடிகள் குறிப்பிடுவார்.

வாடைக்காலத்தும் வேனிற்காலத்தும் அரசர்கள் போர்மேற்சென்று பாசறைக்கண் இருப்பது பண்டைக்காலத் தமிழ்நாட்டு வழக்கம். வேனிற் காலத்துப் போர்மேற் சென்ற பாண்டிய நெடுஞ்செழியனை நினைந்து கார்காலத்தில் பிரிவாற்றியிருந்த தலைவியின் இருத்தல் ஒழுக்கத்தைப் பொருளாக வைத்து நப்பூதனார் இம்முல்லைப் பாட்டை இயற்றினார் என்றும் திரும்பவுங் கூதிர்காலத் துவக்கத்திலே நெடுஞ்செழியன் தன் மனையாளைப் பிரிந்து போர்மேற் செல்லத், தலைமகள் பிரிவாற்றாது வருந்திய பாலையென்னும் அகப்பொருள் ஒழுக்கத்தைப் பொருளாக வைத்து நக்கீரனார் நெடுநல்வாடை இயற்றினாரென்றும் அடிகளார் கருதுவார்.

இவ்வாறு வலிந்து கிளவித்தலைவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொள்வதில் அகப்பாடல்களுக்குச் சிறப்பொன்றும் கூடுவதில்லை, அதேசமயம் அகப்பொருளுக்குரிய பொதுமைத் தன்மை சிதைந்து தனிப்பட்டவர்களின் காதல் வாழ்க்கைச் சித்தரிப்பாக மாறி கற்போர் நெஞ்சில் சுவை குன்றக்கூடும் என்பதனால் இத்தகு அகப்பாடல் தலைமக்களைக் கிளவித் தலைவர்களாகவே கொள்ளல் பொருந்தும்.

முல்லைப்பாட்டா? நெஞ்சாற்றுப்படையா? ஆய்வு நோக்கில் முல்லைப்பாட்டு -பகுதி-3

முல்லைப்பாட்டா? நெஞ்சாற்றுப்படையா?


முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

    முல்லைப்பாட்டு என்ற இவ்வகப்பாட்டு நூலைச் சில இலக்கிய வரலாற்றாசிரியர்கள் நெஞ்சாற்றுப்படை என்று குறிப்பிடுகின்றனர். ஆற்றுப் படுத்துதல் என்பதற்கு வழிகூறுதல் அல்லது நெறிப்படுத்துதல் என்பதாகப் பொருள் கொள்ளலாம். ஆற்றுப்படுத்துவதன் வழி நன்மை உண்டாதல் வேண்டும் அதுவே ஆற்றுப்படையின் நோக்கம். இங்கே நெஞ்சு ஆற்றுப்படுத்துவதனால் தலைவியின் நிறையழியும் எனில் அது ஆற்றுப்படை ஆகாது.

இன் துயில் வதியுநன் காணாள். துயர் உழந்து,
நெஞ்சு ஆற்றுப்படுத்த நிறை தபு புலம்பொடு,
நீடு நினைந்து, தேற்றியும், ஓடு வளை திருத்தியும்,
மையல் கொண்டும், ஒய்யென உயிர்த்தும்,       
    (முல்லை. 80-83)

எனவரும் முல்லைப்பாட்டுப் பகுதியில் தலைவி தன் தலைவனைக் காணாளாய் துன்புற்று நெஞ்சம் செலுத்தும் வழியில் தம் நிறையழியும் என்பதை உணர்ந்து நெஞ்சின் போக்கிலிருந்து விடுபட்டுத் தன்னைத் தேற்றிக்கொள்கிறாள் என்பதாகவே நப்பூதனார் தம் இலக்கியத்தைப் படைக்கின்றார். நெஞ்சு இங்கே ஆற்றுப்படுத்த முயன்று தோற்றுப்போகிறது. அதுமட்டுமன்றி தலைவி தன் நெஞ்சைத் தேற்றுகிறாள் அதாவது ஆற்றியிலிருத்தலே கடன் என நெஞ்சிற்கு அறிவுறுத்துகின்றாள். இப்படியிருக்க நெஞ்சு ஆற்றுப்படுத்திய நெஞ்சாற்றுப் படையே முல்லைப்பாட்டு என வலிந்து பொருள் கொள்ளுதல் பொருத்தமாகத் தோன்றவில்லை.

பொருட்சுருக்கம்:
   
திருமால், வாமனனாகச் சென்று இரந்தபோது மாவலி வார்த்த நீர் கையில் பட்ட அளவில் பேருரு எடுத்ததைப் போல் கடல்நீரைக்குடித்து உலகத்தை வளைத்து வலமாக உயரந்தெழுந்த மேகம் மலைகளில் தங்கி மாலைக் காலத்தில் பெருமழையைப் பெய்தது. போர்வினை முடித்து கார்காலத்தில் திரும்பிவருவேன் என்று சொல்லிச் சென்ற தலைவன் பெருமழை தொடங்கிய பின்னும் வராத காரணத்தால் தலைவி கண்கலங்கி அழுகின்றாள். பெருமுது பெண்டிர் அவள் துயரைத் தணிப்பதற்கு நெல்லும் பூவும் தூவி நற்சொல் கேட்டு கைதொழுது நிற்கின்றனர்.

அப்பொழுது ஆயர் குலப் பெண்ணொருத்தி, தாய்ப் பசுவைப் பிரிந்த கன்றுகளின் துயரத்தைப் பார்த்து, கன்றுகளே, இடையர்கள் பின்னின்று செலுத்திக் கொண்டுவர உங்கள் தாய்ப் பசுக்கள் இப்பொழுதே வரும் என்று சொல்கிறாள். இச்சொல் கேட்ட பெருமுது பெண்டிர் இதனையே நற்சொல்லாகக் கொண்டு தலைவியிடம் வந்து, மாயோளே! நற்சொல் கேட்டோம் ஆகவே போர்மேல் சென்ற தலைவர் வெற்றிகரமாக வினைமுடித்து இப்பொழுதே வரவர் நீ உன்னுடைய கவலையை விட்டொழிப்பாயாக என்று தேற்றுகின்றனர். அவர்கள் தேற்றவும் ஆற்றாதவளாய் தலைவி கண்ணீர் சோர அழுது வருந்துகின்றாள்.

    தலைவியின் நிலை இவ்வாறிருக்க, வினைமேற் சென்ற தலைவன் நிலையை அடுத்து விவரிக்கின்றார் நப்பூதனார்.
படையெடுத்துச் சென்ற மன்னன் பகையரசனுடைய நகரத்துக்குப் பாதுகாப்பாக இருந்த காடுகளை வெட்டி, வேட்டுவர் குடிசைகளை அழித்து, முட்களை மதிலாக வளைத்துக் கடல் போன்று அகன்றதொரு பாடி வீட்டை அமைத்திருக்கின்றான். தழைகளால் வேயப்பட்ட அப்பாடி வீட்டின் நாற்சந்தியில் காவலாக நிற்கும் யானைகள் கரும்பும் நெற்கதிரும் அதிமதுரத் தழையும் சேர்ந்த உணவை உண்ணாது தம் துதிக்கையால் நெற்றியைத் துடைத்துக் கொண்டும், வளைந்த கொம்பிலே தும்பிக்கையைத் தொங்கவிட்டுக் கொண்டும் நிற்கின்றன. யானைப் பாகர்கள் அங்குசத்தால் குத்தி வடசொற்களால் அதட்டி யானைக்குக் கவளத்தை ஊட்டுகின்றனர்.
 குந்தாயுதங்களை ஊன்றி அவற்றின் மேல் கேடயங்கள் படல்கள் போல் பிணைக்கப்பட்டுள்ளன.

இப்படி வில், வேல், கேடயம் இவைகளால் பாதுகாப்பு அரண் அமைத்த பல கூடாரங்களுக்கு நடுவே அரசனுடைய பாசறை அமைந்திருக்கின்றது. அப்பாசறையில் இடையில் வாளைத் தொங்கவிட்டிருக்கும் வீரப்பெண்கள் விளக்கு அவியும் பொழுதெல்லாம் அவற்றைச் சீர் செய்யும் வகையில் திரிகளைக் கொளுத்திக் கொண்டும் எண்ணெய் ஊற்றும் சுரையைக் கைக்கொண்டும் விளங்குகின்றனர். மணியோசைகள் அற்ற அந்த நள்ளிரவில் உடலில் சட்டையணிந்து தலைப்பாகை திரித்திருக்கும் அனுபவம் மிக்க அரசனது மெய்க்காப்பாளர்கள் மோசி மல்லிகைக் கொடி அசைவது போல் தூக்கம் நிறைந்த முகத்தோடு திரிகின்றனர். பொழுதை அளந்து அறியும் பணியாளர்கள் அரசனை வாழ்த்தி நேரத்தை அவனுக்குத் தெரிவிக்கின்றனர்.

   வலிய கயிற்றால் திரை அமைக்கப்பட்டு உள் அறை, வெளி அறை என இரண்டாக அமைக்கப்பட்ட அரசனின் பாசறையில் சட்டை அணிந்த, குதிரைச் சவுக்கை மாட்டிய, அச்சம் தரும் தோற்றம் கொண்ட, வலிமை வாயந்த யவனர்கள் வெளிச்சம் காட்ட அரசன் உள்அறையை அடைகிறான், அங்கே ஊமையரான மிலேச்சர்கள் காவல் காக்கின்றனர். பாசறையின் உள் அறையில் அமைந்துள்ள படுக்கையில் அரசன் உறக்கம் வராமல் படுத்திருக்கின்றான்.

முதல்நாள் போரில் புண்பட்ட யானைகளை நினைக்கின்றான். யாகைளின் தும்பிக்கைகளை வெட்டி வீழ்த்தி வெற்றிமுரசு கொட்டிய வீரர்களை நினைந்து நெகிழ்கின்றான். அம்பு பாய்ந்த வலியால் உணவு உண்ணாது காதுகளைக் கவிழ்த்துக் கிடக்கும் குதிரைகளை எண்ணி நோகின்றான். அவனுடைய ஒருகை படுக்கையிலும் ஒருகை தலையிலும் இருக்கின்றது. நாளைய போர் குறித்துத் திட்டமிட்டுக் கொண்டே கண் துயில்கிறான் அரசன். மறுநாள் போரில் பகைவரை வென்று வெற்றி முரசு முழங்க தாம் சூடிய வஞ்சி மாலைக்கு வெற்றியை ஈட்டிய மகிழ்வில் கண்துயில்கிறான்.

பாசறையில் தலைவன் நிலை இவ்வாறிக்க இரண்மனையில் தலைவியின் எவ்வாறிருந்தது என்பதை அடுத்துச் சொல்லத் தொடங்குகிறார் புலவர். பாவை விளக்குகள் ஒளிவீசும் உயர்ந்த ஏழடுக்கு மாளிகையிலிருக்கும் தலைவி பாசறையிலே தலைவனிருக்க அவனைத் தன் படுக்கையில் காணாது துயருருகிறாள். பின்னர், தலைவி நெஞ்சம் ஆற்றுப்படுத்திய வழியில் நிறையழியும், ஆற்றியிருத்தலே கடமை என்பதுணர்ந்து தம்மை தேற்றிக் கொண்டும் கழலும் தமது வளையல்களைச் செறித்துக் கொண்டும் மயங்கியும் பெருமூச்செறிந்தும் அம்புதைத்த மயில் போல் நடுங்கிப் படுக்கையில் கிடக்கிறாள் 

கார்காலத்து மழைநீர், கூரை கூடும் இடங்களில் அருவிபோல் சொரிய அதனால் உண்டான பல்வேறு இனிய ஓசைகளைக் கேட்டவாறு ஆற்றியிருக்கிறாள் தலைவி.

அப்பொழுது,    பகைவரை வென்று அவர்தம் நிலங்களைக் கவர்ந்த பெரிய படையோடு, வெற்றிக் கொடி உயர்த்தி, ஊதுகொம்பும், சங்கும் முழங்க வருகிறான் தலைவன். அவன் வரும் வழியில் அஞ்சனம் போல் காயா மலர்களும் பொன்போல் கொன்றை மலர்களும் கைபோல் வெண்காந்தள் மலர்களும் இரத்தச் சிவப்பில் தோன்றி மலர்களும் பூத்திருக்கின்றன. வரகங் கொல்லையில் இளமான்கள் துள்ளி விளையாடுகின்றன. வள்ளியங்காடுகள் பின்னே போகும்படி தலைவன் முல்லைநில வழியில் வரும் தலைவனின் தேரில் பூட்டிய குதிரைகள் எழுப்பிய ஆரவார ஓசை தலைவியின் காதுகள் மகிழும்படியாக எழுந்தது.

முல்லைப்பாட்டா? வஞ்சிப்பாட்டா? ஆய்வு நோக்கில் முல்லைப்பாட்டு - பகுதி-4

முல்லைப்பாட்டா? வஞ்சிப்பாட்டா? 

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப்பேராசிரியர்
புதுச்சேரி-8


முல்லைப்பாட்டா? வஞ்சிப்பாட்டா?

நப்பூதனார் இம்முல்லைப்பாட்டை 103 அடிகளில் பாடியிருப்பினும் முல்லைக்குரிய முதல், கரு, உரிப் பொருள்கள் ஒன்றும் குறைவு படாது முழுமையாகப் படைத்திருப்பது சிறப்பிற்குரியது. ஆயினும் கார்காலத்து மாலைப்பொழுதில் பெருமழை கண்டு வருந்தும் தலைவியது நிலைவிளக்கும் ‘நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு’ (முல்லை.1) என்பது முதல் ‘பூப்போல் உண்கண் புலம்பு முத்துறைப்ப’ (முல்லை. 23) எனமுடியும் 23 ஆம் வரியோடு நிறுத்திக் கொண்டு, அவ்வாறு வருந்திக் கிடப்பவள் மகிழ, தலைவன் மீண்டு வந்து சேர்ந்ததை விளக்கும் ‘இன் துயில் வதியுநன் காணாள். துயர் உழந்து’ (முல்லை. 80) எனத்தொடங்கும் வரி முதலாக ‘வினைவிளங்கு நெடுந்தேர் பூண்ட மாவே’ (முல்லை. 103) என்ற இறுதி வரையிலான 24 அடிகளை இணைத்து 47 அடியளவினதான முல்லைத் திணைப் பாடலாக மட்டும் அமைக்காமல் ‘கான்யாறு தழீஇய அகன்நெடுப் புறவு’ (முல்லை. 24) தொடங்கி ‘அரசு இருந்து பனிக்கும் முரசு முழுங்கு பாசறை’ (முல்லை. 79) முடிய 56 அடிகள் முல்லைக்குப் புறனாய வஞ்சித் திணையும் விரவி வரும்படி இம்முல்லைப் பாட்டை அமைத்திருப்பது புலவரின் படைப்பாற்றலுக்குத் தக்கதோர் சான்றாகும்.

103 அடிகள் கொண்ட ஓர் அகப்பாடலில் 47 அடியளவில் முல்லைத் திணையாம் அகப்பொருளைக் கூறி 56 அடிகளில் வங்சித் திணையாம் புறப்பொருளை விரித்துரைப்பது இப்பாடல் முல்லைப்பாட்டா? வஞ்சிப்பாட்டா? என்ற மயக்கத்தினை ஏற்படுத்துகின்றது. ஆயினும் நப்பூதனாரின் இவ்வுத்தி ‘வஞ்சி தானே முல்லையது புறனே’ என்ற தொல்காப்பியப் பொருளிலக்கணத்திற்கு மாறுபடாமல் அமைந்திருப்பதோடு முல்லையாகிய இருத்தல் உரிப்பொருளுக்கு மேலும் அழுத்தமும் அழகும் தருவதாய் பின்னப்பட்டிருப்பது இலக்கிய இன்பத்தை மிகுவிப்பதாய் உள்ளது.

முல்லைப்பாட்டின் உரிப்பொருள் இருத்தலா? இரங்கலா?

முல்லைப்பாட்டின் துறை:
கார்காலத் தொடக்கத்தே மீள்வேன் என உறுதி கூறிப் பிரிந்து சென்ற தலைவன், கார்காலம் வந்த பின்னரும் வாராமை கண்டு ஆற்றாமை மிக்குக் கலங்கி நிற்பதும் அக்கலக்கம் தீரத் தலைவன் வினைமுடிந்து மீண்டுவரும் ஓசை கேட்டு மகிழ்தலுமே இப்பாட்டின் துறையாகும்.

ஆனால் நச்சினார்க்கினியர் இப்பாடலுக்குக் கூறும் துறை, “தலைவன் வினைவயின் பிரியக் கருதியதனைக் குறிப்பால் உணர்ந்து ஆற்றாளாய தலைவியது நிலைமைகண்டு, அவன் வற்புறுப்பவும் உடம்படாதவளைப் பெருமுது பெண்டிர் அவன் வினைமுடித்து வருதல் வாய்வது நீ வருத்தம் நீங்குவதெனக் கூற, அதுகேட்டு அவள் நீடு நினைந்து ஆற்றியிருந்தவழித் தலைவன் அக்காலத்தே வந்ததனைக் கண்டு வாயில்கள் தம்முட் கூறியது” என்பதாகும்.

நச்சினார்க்கினியர் சொல்லும் துறைக் குறிப்பு பாடலில் பல முரண்களைத் தோற்றுவிக்கின்றது.
  • 1. பெருமுது பெண்டிர் விரிச்சி கேட்டது தலைவன் பிரிந்த காலத்தில் என்றாகிறது. 
  • 2. விரிச்சி கேட்டது கார்கால மாலைப் பொழுதில் என்று பாடல் குறிப்பிடுகின்றது அவ்வாறாயின் தலைவன் பிரிந்தது கார் காலத்தில் எனக் கொள்ள நேரிடும். கார்காலம் தலைவன் திரும்பிவரும் காலமே அல்லாது பிரியும் காலம் அன்று. 
  • 3. விரிச்சி கேட்டல் என்பது ஒரு சிக்கலுக்குத் தீர்வை எதிர்நோக்கி நிகழ்த்தப்படுமே அல்லாது தலைவன் பிரிவின் போது நிகழ்த்தப்பட்டதாகக் கொள்வது பொருந்தாது. 
மேலும் தலைவி அறியாதவாறு தலைவன் பிரிந்தான் என்றும் படுக்கையில் உடன் துயின்றவனைக் காணாமல் தலைவி தேடினாள் என்றும் நச்சர் உரை கூறுவது அகப்பொருள் மரபுக்கு மாறாய் உள்ளது. தலைவன் பிரிந்தகாலம் குறித்து முல்லைப்பாட்டு பேசவேயில்லை.

இவ்வாறு பாடலின் துறைக் குறிப்பினை மாற்றி அமைத்துக் கொண்டதற்கு உரிய காரணமாக அவர் கூறுவதாவது,

“இங்ஙனம் பொருள் கூறாமல் தலைவியது இரக்க மிகுதிகண்டு பெருமுது பெண்டிர் விரிச்சி கேட்டுவந்து தலைவர் வருவராதல் வாய்வது, நின்னெவ்வங் களையென்று பல்காலும் ஆற்றுவிக்கவும், ஆற்றாளாய்த் துயருழந்து(80) புலம்பொடு(81) தேற்றியும் திருத்தியும்(82) மையல் கொண்டு உயிர்த்தும்(83) நடுங்கி நெகிழ்ந்து(84) கிடந்தோள்(88) எனப்பொருள் கூறியக்கால் நெய்தற்குரிய இரங்கற் பொருட்டன்றி முல்லைக்குரிய இருத்தற் பொருட்டாகாமை யுணர்க. அன்றியும் தலைவன் காலங் குறித்தல்லது பிரியான் என்பதூம், அவன் குறித்த காலங் கடந்தால் தலைவிக்கு வருத்தம் மிகும் என்பதும், அது பாலையாம் என்பதும், அவ்வாற்றாமைக்கு இரங்கல் நிகழ்ந்தால் நெய்தலாம் என்பதும் நூற்கருத்தாதல் உணர்க.”

ஆக, முல்லைப்பாட்டுக்குப் பொருள் கொள்வதில் நச்சினார்க்கினியருக்கு உள்ள சிக்கல் முல்லைத் தினைத் தலைவியின் அழுகையும் ஆற்றாமையுமே. தலைவன் பிரிவுக்கு ஆற்றியிருப்பதே முல்லை உரிப்பொருள். இப்பாடலில் தலைவியின் ஆற்றாமை வெளிப்படுவதால் அது நெய்தலுக்குரிய இரங்கல் உரிப்பொருளாகி விடுமே என்ற ஆதங்கமே அவரை இத்துணை இடர்ப்படச் செய்துள்ளது.

காட்டவும் காட்டவும் காணாள், கலுழ்சிறந்து,
பூப்போல் உண்கண் புலம்பு முத்துஉறைப்ப  
      (முல்லை. 22-23)

இன்துயில் வதியுநன் காணாள். துயர்உழந்து,
நெஞ்சு ஆற்றுப்படுத்த நிறைதபு புலம்பொடு,
நீடுநினைந்து, தேற்றியும், ஓடுவளை திருத்தியும்,
மையல் கொண்டும், ஒய்யென உயிர்த்தும்,
ஏஉறு மஞ்ஞையின் நடுங்கி, இழை நெகிழ்ந்து      
   (முல்லை. 80-84)

எனவரும் முல்லைப் பாட்டின் அடிகளைக் கூர்ந்து நோக்குவார்க்குத் தலைவியின் ஆற்றாமை வெளிப்பட்டாலும் அது எல்லை கடவாமல் கண்ணீர் பெருக்கெடுக்கும் அளவிலேயே நிற்கிறது. நெடுநல்வாடைத் தலைவியும் இத்தகையளே. ஆற்றாமை மிக்கு, தலைவி புலம்பத் தொடங்கியிருந்தால் இது நெய்தல் உரிப்பொருளாம் இரங்கலாகியிருக்கும். அந்நிலை முல்லைப்பாட்டுத் தலைவிக்கு இல்லை. எனவே நச்சினார்க்கினியரின் தயக்கம் தேவையற்றது.

சனி, 5 மே, 2012

தமிழர் நெஞ்சில் மக்கள் கவிஞர் நூல் அணிந்துரை

முனைவர் நா.இளங்கோ

இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

இருபத்தோராம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகள் தமிழ் எழுத்தாளர் களுக்கும் பதிப்பாளர்களுக்கும் நம்பிக்கை ஊட்டும் விதத்தில் பயணத்தைத் தொடங்கியுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் தமிழில் வெளிவந்துள்ள நூல்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைத் தொடும். இந்த எண்ணிக்கையில் மறுபதிப்பு நூல்களும் அடங்கும். சென்னை மூர் மார்க்கட் எரிந்த அல்லது எரிக்கப்பட்ட பிறகு பழைய தமிழ் நூல்கள் காணக் கிடைக்காத அரிய பொருள்களாக இருந்த நிலைமாறி அரிய பழைய தமிழ் நூல்கள் புதிதாய் அச்சேறி நம் கைளில் தவழும் இந்தப் புதிய மாற்றம் தமிழர்களுக்கு உவப்பூட்டும் என்பதில் ஐயமில்லை. 

ஒவ்வோராண்டும் மாவட்டங்கள் தோறும் நடக்கும் புத்தகக் கண்காட்சிகளும் கண்காட்சிக்கு வருகைதரும் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையும் கண்காட்சிக்கு வந்து வேடிக்கை பார்த்ததோடு மட்டுமின்றி நூறு, ஆயிரங்களைச் செலவிட்டு நம் தமிழர்கள் நூல்களை வாங்கிச் செல்லும் மாற்றங்களும் இருபத்தோராம் நூற்றாண்டு நமக்குத் தந்த புத்தம் புதிய நம்பிக்கை வித்துகள். 

ஒருபக்கம் இப்படித் தமிழ் அச்சு நூல்கள் பழையனவும் புதியனவுமாகப் படையெடுக்க, மறுபக்கம் மின்னூடக வடிவில் மின் இதழ்கள், மின் படைப்புகள், மின் நூல்கள், மின் நூலகங்கள் எனத் தமிழ் எழுத்துத்தாக்கங்கள் இணையத்தில் இடம்பெயர்ந்து நிலைபெறத் தொடங்கிவிட்டன. இவை போதாதென்று சமூக வலைத்தளங்களும், வலைப்பதிவுகளும் பல்லாயிரக்கணக்கில் தத்தம் பங்குக்குத் தமிழ் எழுத்தாக்கங்களைப் பதிந்து காட்சிப்படுத்தி வைத்துள்ளன. 

ஆக தமிழில் எழுதுவதும் எழுதியதை அச்சேற்றுவதும் வாசகர்களிடம் கொண்டு செல்வதும் அத்துணை பெரிய காரியமாகத் தோன்றவில்லை. இனி நாம் எதிர்பார்ப்பதெல்லாம் ஒன்றுதான். திருவள்ளுவர் சொன்னது போல் கற்க கசடற- கற்பவை கற்க- கற்றபின் அதற்குத் தக நிற்க என்பதுதான். கருத்தூன்றிப் படிப்பதும், தேர்ந்தெடுத்துப் படிப்பதும், படித்தவற்றை பயன்கொள்வதும்தான் இன்றைய தேவை. தமிழர்களிடம் இன்னும் இந்த விழிப்புணர்வு ஏற்பட்டதாகத் தெரியவில்லை. 

II
தமிழின் இத்தகு எழுத்துலகச் சூழலில்தான் தமிழர் நெஞ்சில் மக்கள் கவிஞர் எனும் இந்நூல் வெளிவருகின்றது. இனிய நண்பர் முனைவர் ம.ஏ. கிருட்டினகுமாரின் ஐந்தாவது நூல் இது.

முனைவர் ம.ஏ. கிருட்டினகுமார் சிறந்த கல்வியாளர். தமிழ் இலக்கியம், மொழியியல், ஊடகவியல், கல்வியியல் ஆகிய துறைகளில் முதுகலைப் பட்டமும் சைவ சித்தாந்தம், நாட்டுப்புறவியல் முதலான துறைகளில் பட்டயமும் தமிழ் இலக்கியத்தில் இளமுனைவர் மற்றும் முனைவர் பட்டமும் பெற்றவர். தமிழ், ஆங்கிலம் மட்டுமன்றி தெலுங்கு, இந்தி, சமஸ்கிருதம், பிரஞ்சு முதலான மொழிகளைக் கற்றவர். தமிழ்க் கல்விப் புலத்தில் முனைவர் ம.ஏ. கிருட்டினகுமார் போல் பன்மொழிப் பயிற்சியுடைய இளைஞர்களைக் காண்பது அரிது. கற்றலிலும் கற்பித்தலிலும் தொடர்ந்து முனைப்போடு செயல்பட்டுவரும் இவர் ஒரு சிறந்த மரபுப் பாவலரும் கூட. ஆசிரியர், பேச்சாளர், கவிஞர், ஆய்வாளர் முதலான பன்முக ஆளுமைகளால் சிறந்த ஒருவரின் சமூக அக்கறையோடு கூடிய படைப்பாக்கத் திறனாய்வாக வெளிவரும் இந்நூல் மானுடம் பாடிய மக்கள் கவிஞரின் மாண்புரைக்கும் ஒரு நல்ல படைப்பு.
ஐஐஐ
தமிழர் நெஞ்சில் மக்கள் கவிஞர் எனும் இந்நூல் பட்டுக் கோட்டையார் கவிதைகளை நயமுரைக்கும் பாங்கில் விரித்துரைத்துள்ளது. கவிதைகளின் உள்ளடக்க அடிப்படையில் குடும்பம், சமூகம், வாழ்க்கை நெறி, நடை, உண்மைத் தத்துவம் எனும் ஐந்து தலைப்புகளில் நூல் பகுக்கப்பட்டுள்ளது.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தமிழ்க் கவிஞர் மரபில் மிகவும் வித்தியாசமான ஆளுமையைக் கொண்டவர். 29 ஆண்டுகளே வாழ்ந்த கவிஞர் தமிழிலக்கிய வரலாற்றில் ஓர் அழுத்தமான தடத்தைப் பதித்தவர். உண்மையில் கலையும் இலக்கியங்களும் சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கானதே என்பதனை வெறும் கொள்கையளவில், படித்ததோடு நின்றுவிடாமல் அதனை நடைமுறைப் படுத்துவதிலும் முழு வெற்றி கண்டவர். தாம் ஈடுபாடு கொண்டிருந்த விவசாயச் சங்கம் மற்றும் பொதுவுடைமை இயக்கத்தின் கொள்கைகளைத் தம் படைப்புகளில் முழுவீச்சோடு பதிவுசெய்தவர் அவர். பட்டுக்கோட்டையார் கவிதைகளின் இத்தகு தனித்தன்மையை முனைவர் ம.ஏ. கிருட்டினகுமார் இந்நூலில் மிகத் தெளிவாக விரித்துரைத்துள்ளார். நூலின் ஆற்றொழுக்கான எளிய இனிய மொழிநடை படிப்பவர்களுக்கு வாசிப்பு அனுபவத்தினை இனிமையாக்குகின்றது.

இந்நூலின் தனித்தன்மைகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
1.    பட்டுக்கோட்டையாரின் வாழ்வையும் படைப்பையும் அறிமுகம் செய்வது.
2.    அவரின் கவிதைகளை முழுதாகக் கற்ற நிறைவைத் தருவது.
3.    பாடல்களின் பின்னணியை விளக்குவது.
4.    படைப்பின் நோக்கத்தைத் தெளிவுபடுத்துவது.
5.    பாடல்களைப் பொருள் நோக்கில் வகைப்படுத்திக் காண்பது.
6.    சுவையான பொருள் பொதிந்த பாடல்வரிகளை இனம் காண்பது.

மேற்கண்ட வகையில் தம் நூலை விரித்துரைக்கும் நூலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கவிதைகள் குறித்தான தமது முழுமையான பார்வையையும் மதிப்பீட்டையும் பதிவுசெய்வதில் வெற்றிபெற்றுள்ளார்.

நூலாசிரியர் நூலின் நுவல்பொருளை விரித்துரைக்கும் பாணி சிக்கலற்றது. சிறு சிறு உட்தலைப்புகளில் விவரிக்கும் பொருளை இனங்காட்டி ஓர் எளிய முன்னுரையோடு செய்தியைத் தொடங்கி விவரித்து தம் கருத்துக்கு அணி சேர்க்கும் பொருத்தமான கவிதை வரிகளையும் தக்க மேற்கோள்களையும் உடன்தந்து சிறிய அளவிலான முடிப்புரையோடு அப்பகுதியை முடிக்கும்முறை அவரின் ஆய்வுநடை நலத்தை அடையாளப் படுத்துகின்றது. 

    சான்றாக, பாடல் புனையும் திறன் என்ற சிறுதலைப்பின் பொருளை அவர் விவரிக்கும் பகுதியைப் பார்ப்போம்,

கவிஞர் பாடல் புனைவதற்கான களங்களைத் தேடி ஓடாமல் தமக்கு அமைந்த வாழ்வினையே களமாக்கிக் கொண்டு பாடியவர். ஒவ்வொரு இனத்தாரும் தமக்குரிய பாடல் எனப் போற்றும் வகையில் எளிமையான நடையில் பேச்சு வழக்கில் இலக்கியத் தரத்துடன் பாடல் புனைந்தார். இதனால் கற்கும்போது கற்றாரும் கேட்கும்போது கல்லாதாரும் பாடலின் சுவையினை உணர்ந்து மகிழ்ந்தனர். காதல் பாடலாக இருந்தாலும் அதில் சமத்துவக் கருத்துக்களையும் மண் சார்ந்த மணத்தினையும் கையாளும் சிறப்பு இவருடைய தனித்தன்மையாக விளங்குவதனைக் காணலாம். 

கவிஞரின் பாடல்கள் பாட்டாளிகளின் வாழ்வினையும் இனத்தின் பெருமையினையும் பொதுவுடைமையின் தத்துவங்களையும் தன்மானத்தின் கூறுகளையும் உள்ளடக்கியதாகவே அமைந்தன. உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன் என்னும் புலவர் குலத்தில் தோன்றிய கவிஞருக்குக் கவிஞனுக்கே உரிய மிடுக்கு இருந்ததனை..

தாயால் பிறந்தேன் தமிழால் வளர்ந்தேன்
நாயே நேற்றுன்னை நடுவழியில் சந்தித்தேன்
நீயார் என்னை நில்லென்று சொல்வதற்கு 
(ப.பா. ப. 308)
என்னும் பாடல் வெளிப்படுத்தும். இதன்வழி கவிஞரின் தன்னம்பிக்கை யையும் தன்மானத்தினையும் தெளிவாக அறியலாம். “நாட்டு விடுதலை இயக்கம், சமுதாய விடுதலை இயக்கம், பொருளாதார விடுதலை இயக்கம் என மூவகை இயக்கங்கள் இங்கே பரவலாக மக்கள் மன மண்ணில் வேர்ஊன்றி ஆலமரமாக வளரத் தொடங்கின. பட்டுக் கோட்டையின் பாடல்களில் இம்மூன்று இயக்கங்களின் சிந்தனை வீச்சையும் அழுத்தத்தையும் காணலாம்” (பட்.. பா. ப.17) எனச் சா.பா. கூறவது இங்கு எண்ணத்தக்கது.

மேலே சான்றுகாட்டியுள்ள பகுதியை ஒப்பவே இந்நூல் முழுவதிலும் நூலின் பொருளை விவரித்துச் சென்றுள்ளார் நூலாசிரியர்.   
    தமிழர் நெஞ்சில் மக்கள் கவிஞர் எனும் இந்நூலினைக் காலத்திற்கேற்ற வரவு என்று நாம் கொண்டாடலாம். ஏனெனில் இன்றைய உலகமயமச் சூழலில் முதலாளித்துவத்தின் கோரத் தாண்டவத்தில் சிக்குண்டு சமூகத்தின்; அடித்தட்டு மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களைப் பன்னாட்டு நிறுவனங்களிடம் பறிகொடுத்து வாழ வழியற்று வதங்கிக் கிடக்கும் நிலைமையில், 

    சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா நான்
சொல்லப் போற வார்த்தையை நன்றாய் எண்ணிப் பாரடா
நீ எண்ணிப் பாரடா
ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி - உன்னை
ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி
நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி - உன்
நரம்போடு தான் பின்னி வளரணும் தன்மான உணர்ச்சி
தனியுடைமைக் கொடுமைகள் தீரத் தொண்டு செய்யடா 
நீ தொண்டு செய்யடா
தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா
எல்லாம் பழைய பொய்யடா  

என்று கடந்த நூற்றாண்டின் ஐம்பதுகளில் உரத்துக் கொடுத்த உழைக்கும் மக்களுக்கான உண்மைக் கவி பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம் பாடல்களை இன்றைய இளந் தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது காலத்தின் கட்டாயமன்றோ. பட்டுக்கோட்டையார் வலியுறுத்திய தன்மான உணர்ச்சியும் பொதுவுடைமை வேட்கையும் இருபத்தோராம் நூற்றாண்டில் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போய்விடக்கூடாது என்ற நூலாசிரியரின் ஏக்கம் இந்நூலில் தொட்டஇடம் எல்லாம் கண்ணில் தட்டுப்படுகிறது. மக்கள் கவிஞரின் கவிதையைப் போலவே இந்த நூலும் அனைத்துத் தரப்பு மக்களுக்குமான படைப்பாக எளிமையோடும் இனிமையோடும் எழுத்தாக்கம் பெற்றிருப்பது பாராட்டத்தக்கது.

நூலாசிரியர் ம.ஏ. கிருட்டினகுமார் இந்நூலின் வழியாகத் தம் கடமையைச் செவ்வனே ஆற்றியுள்ளார். மக்களுக்கான இலக்கியம் என்பது குறித்த சரியான புரிதல்களோடும் சமூக உணர்வோடும் எழுதப் பட்டிருக்கும் இந்நூல் தக்க தருணத்தில் வெளிவருகின்றது. தமிழுலகம் இதனை ஏற்றுப் போற்றும் என்பதில் ஐயமில்லை. 

nagailango@gmail.com

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...