மலையருவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலையருவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 7 செப்டம்பர், 2008

திருமண வரவேற்பு

திருமண வரவேற்பு

மலையருவி

நண்பர்கள் உறவினர்
அறிமுக நபர்கள்
கூட்டமாய் கும்பலாய்
குழுமிக் கிடந்தனர்

சென்ட் நெடி
வாடத்தொடுங்கிய
பூக்களின் வாசம்
வியர்வை நாற்றம்
எல்லாம் கலந்த ஏதோ
மூக்கை முட்டி
முண்டியடித்தது

நட்புமின்றி பகையுமின்றி
நளினம் கலந்த
முகவிசாரிப்புகள்

பரிசுப் பொட்டலம்
பணக்கவர் ஏந்திய
ஒப்பனை கலந்த
பகட்டு முகங்கள்

பந்தியில் அமர்ந்து
வீசிய உணவை
சீய்த்துக் களைத்து
பசித்த வயிறோடு
விருந்தும் உபசரிப்பும்

மெல்லிசை என்னும் பேரால்
வல்லிசை நரசிம்மத்தால்
கிழிக்கப்பட்ட காதுகளோடு!
திருமண வரவேற்பு

வாழ்க மணமக்கள்!

திங்கள், 17 செப்டம்பர், 2007

மனிதத் தின்னிகள் (சிறுகதை)

மனிதத் தின்னிகள்

மலையருவி

விரும்பியோ விரும்பாமலோ சில காரியங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் அவை அனிச்சைச் செயல்களைப் போல் ஆகிவிடுகின்றன. காலை சேர விழிப்புக்குப் பின்னர் கண்களும் மனமும் எதையோ தேட ஆரம்பிக்கின்றன. வார்த்தைகளும் படங்களும் காட்சிகளுமாக வீடெங்கும் சிதறிக் கிடக்கின்றன. விழித்தெழுகிற போதெல்லாம் இவைகளின் நடுவிலிருந்துதான் நான் விழிக்கிறேன்.
வீடெங்கும் செய்திக் குப்பைகள். பழைய குப்பைகளை ஒதுக்கி வைத்துவிட்டு புதிய குப்பைகளைத் தேடியது கண்களும் மனமும்.
எப்பொழுதும் போல் அன்றைக்கும் தொலைக்காட்சி முன்பு அமர்ந்து செய்தி கேட்கத் தொடங்கினேன். செய்தி தொடங்கும் முன்பே கண்களை மீறிக்கொண்டு மனம் தேட ஆரம்பித்தது.
செய்தி தொடங்கியது, முக்கியச் செய்திகள் முடிந்து விரிவான செய்திகளை வாசிக்கத் தொடங்கினார் செய்தி வாசிப்பாளர். செய்தி வாசிப்பவரையே கூர்ந்து கவனித்துப் பார்த்தேன். அது ஒரு மனிதமுகம் என்பதே மறந்துபோய், மனிதஉருவில் வடிவமைக்கப்பட்ட இயந்திரமோ என்ற சந்தேகம் என் மனதில் தோன்றியது. முகத்தின் தசைநார்கள் இறுகி உலோகத்தில் வார்த்தெடுத்தது போலிருந்தது அந்த முகம்.
செய்தி வாசிப்பதும் செய்தி தொடர்பான காட்சிகளுமாக நேரம் கடந்து கொண்டே இருந்தது. வழக்கமான அரசியல் செய்திகள், பதட்டம் நிலவுவதாகவும் பரபரப்பு காணப்படுவதாகவும் நீண்டுகொண்டே இருந்தன. நான் பொறுமையிழந்தேன். சே! என்ன எழவு செய்தி இது? சலிப்பூட்டக் கூடியதாகவும் எரிச்சலூட்டக் கூடியதாகவும் இருந்தது அன்றைய காலைநேரச் செய்தி.
கடைசியாகக் கிடைத்த செய்தி என்று ஏதாவது சொல்லக்கூடும் என்று எதிர்பார்த்திருந்தேன். மீண்டும் தலைப்புச் செய்திகள் என்று செய்தி முடிவுக்கு வந்துவிட்டது.
தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு எழுந்து சோம்பல் முரித்துக் கொண்டேன். குப்பைகளுக்கு நடுவில் இருந்தாலும் அன்றைக்கு அன்றைக்கு புதிய குப்பை இல்லையென்றால், மனம் இயக்கமற்று இருப்பதைப் போலாகிவிடுகிறது. காலை தினசரியைத் தேடி எடுத்துப் புரட்டத் தொடங்கினேன். முதலில் வேகவேகமாக நாளிதழின் முதல் பக்கம் தொடங்கி கடைசிப் பக்கம் வரை ஒரு பார்வை பார்த்துவிட்டு, சுவாரஸ்யமின்றி மீண்டும் முதல் பக்கத்திலிருந்து செய்திகளை மேயத் தொடங்கினேன். செய்தித்தாளில் மனம் ஒன்றவில்லை. பெரிய பெரிய எழுத்துக்களில் எட்டுக்காலம் செய்தியிலிருந்து தொடங்கி ஆறு காலம் செய்தி, நாலு காலம் செய்தி, பெட்டிச் செய்தி என்று உள்ளே இறங்கித் தேடினேன். படங்கள், செய்திகள் என்று பக்கம் பக்கமாகச் செய்திகளைக் கொட்டிக் கவிழ்த்துத் தேடிப் பார்த்து விட்டேன்.
ஏன் இன்றைக்கு என்ன ஆயிற்று?
என்ன செய்திகள் இவை?
இரத்தம், கொலை, சாவு, பிணம் எதுவுமில்லாமல் வெறுமையாய் இருந்தன எழுத்துக்கள், வார்த்தைகள், படங்கள்.
வேறு வழியின்றி பழைய குப்பைகளில் மீண்டும் தேடினேன்.
குவியல் குவியலாய்ப் பிணங்கள். படங்களும் எழுத்துக்களும் வார்த்தைகளுமாய்.
மதக்கலவரத்தில் எட்டு பேர் உயிரோடு எரிப்பு
நிவாரண உதவி வாங்கச் சென்ற நாற்பது பேர் உடல் நசுங்கிச் சாவு
கார் குண்டு வெடிப்பு இருபது பேர் உடல் சிதறி மரணம்
இரத்தம், நிணம், பிய்ந்த சதைத் துண்டங்கள்…
கொலை, சாவு, பிணம்…
பிணவாடை மூக்கைத் துளைத்த பின் எழுந்து என் அன்றாட பணிகளைத் தொடங்கினேன்.

வெள்ளி, 14 செப்டம்பர், 2007

வீட்டுக்குள் வளர்ந்த விருட்சம்-மலையருவி கவிதை

வீட்டுக்குள் வளர்ந்த விருட்சம்

-மலையருவி

யார் அந்த விதையைப் போட்டார்கள் என்றே தெரியவில்லை?
போயும் போயும்
வீட்டு வரவேற்பரையிலா அதைப்போடுவது....

விதை விழுந்ததை எப்படி கவனிக்காமல் போனோம்
விதை விழுந்ததை மட்டுமா
அது வேர்விட்டு வளர்ந்ததையும் அல்லவா
கவனிக்கத் தவறிவிட்டோம்

தொலைக்காட்சி பெட்டி வரவேற்பரைக்கு வந்த பிறகுதான்
அது நடந்திருக்க வேண்டும்
அநேகமாக கேபிள் ஒயரோடு
அந்த ஆலம் விதை வந்திருக்க வேண்டும்

என்ன அசுர வளர்ச்சி
வந்த சில மாதங்களிலேயே
வேர்விட்டு... விழுதுகளைப் பரப்பி
வரவேற்பரை முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டு
வளர்ந்து செழித்தது ஆலமரம்

வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கோ நண்பர்களுக்கோ
எங்கள் முகம் தெரியாமல்
அவர்கள் முகங்களைக் காட்டாமல்
அது வியாபித்திருக்கிறது

வீட்டுக் குழந்தைகள் விளையாட இடந்தராமல்
குறுக்கும் நெடுக்குமாய்க் கிளைகளைப் பரப்பி
கண்டபடி வளர்ந்து காடாக மண்டிவிட்டது

ஏன் பல சமயங்களில்
நாங்களே ஒருவரை பார்க்க முடியாமல்
பேசிக்கொள்ள முடியாமல்
இடத்தை அடைத்துக் கொண்டு
இருப்பிடத்தை இருட்டாக்கி விட்டது

யார் அந்த விதையைப் போட்டார்கள் என்றே தெரியவில்லை?
போயும் போயும்
வீட்டு வரவேற்பரையிலா அதைப்போடுவது....

வரவேற்பரையும் போதாமல்
சில கிளைகள்
படுக்கைஅறையையும் எட்டிப் பார்த்து
அச்சமூட்டுகின்றன.

ஆலமரத்தின் விழுதுகளுக்கிடையே
வேர் முடிச்சுகளில் சிக்கி
கிளைகளின் ஊடே
இருகிய முகங்களோடு
விழிகள் நிலைகுத்தி
உறைந்து போகிறோம்

விமர்சனம்- மலையருவி கவிதை (நா.இளங்கோ)

விமர்சனம்

நக்கீரன்
பொற்றாமரைக் குளத்தில்
முங்கி எழுந்தான்,
மேனி குளிர்ந்தது

சிவபெருமான்நெற்றிக் கண்ணின்
நெருப்பு மட்டும்
அடிக்கடி
கனவில்லாமலே வந்து போனது

பாண்டிய மன்னன்
அந்தப்புரத்தில்
மகாராணியின் கூந்தல் படுக்கையில்
அயர்ந்திருந்தான்

சங்கப் பலகை
ஈ மொய்த்திருந்தது

தருமியின்
பல்லக்கு பவனி
ஊரில்
புதுப்பேச்சாய் இருந்தது

நக்கிரனோ
காய்ச்சலும் குளிரும்
மாறிமாறி வந்ததால்
படுக்கையில்
நொந்து நூலானான்.

-மலையருவி

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...