வியாழன், 10 டிசம்பர், 2009

ஆய்வு நோக்கில் குறுந்தொகை- பகுதி ௩, தொகுப்பும் உரைகளும்

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

தொகுப்பு வரலாறு:

"இத்தொகை முடித்தான் பூரிக்கோ. இத்தொகை பாடிய கவிகள் இருநூற்றைவர்" என்பது பழங்குறிப்பு. இந்நூலைத் தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை. 10 பாடல்களில் ஆசிரியர் பெயர் காணப்படவில்லை. (ஆசிரியர் பெயர் காணப்படாத பாடல்களின் எண்கள்: 191, 201, 256, 313, 321, 326, 375, 379, 381, 395) எஞ்சிய பாடல்களைப் பாடியவர்களின் தொகை இருநூற்றைந்து.

குறுந்தொகையும் அகநானூறும் முறையே தந்தையும் மகனாரும் தொகுத்தனராதல் வேண்டும் என்று கருதுகிறார் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை. அவர் தரும் விளக்கம் வருமாறு,

"பிரதிகளின் இறுதியில், இத்தொகை முடித்தான் பூரிக்கோ, 'இத்தொகை பாடிய கவிகள் இருநூற்றைவர், இத்தொகை நாலடிச் சிற்றெல்லையாகவும் எட்டடிப் பேரெல்லையாகவும் தொகுக்கப்பட்டது' என்று காணப்படுகிறது. அகநானூறு என்ற தொகை நூல் பிரதிகளின் இறுதியில், 'தொகுத்தான் உப்பூரிக்குடி கிழார் மகனாவான் உருத்திரசன்மன், தொகுப்பித்தான் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி' எனக் காணப்படுகின்றது. நற்றிணைப் பிரதிகளின் இறுதியில், 'இத்தொகை தொகுப்பித்தான் பன்னாடு தந்த மாறன் வழுதி' எனக் காணப்படுகின்றது. குறுந்தொகைப் பிரதியின் இறுதியிலுள்ள முடித்தான் என்பது தொகுத்தான் என்று பொருள்படும் எனக் கோடலே நேரிது. இஃது உண்மையொடு பட்டதாயின் பூரிக்கோவும், உப்பூரிகுடி கிழாரும் ஒருவரேயாதல் சாலும். ஆகவே குறுந்தொகையும் அகநானூறும் முறையே தந்தையும் மகனாரும் தொகுத்தனராதல் வேண்டும்".
(வையாபுரிப் பிள்ளை, இலக்கிய தீபம், பக். 95-96)

வையாபுரிப் பிள்ளையின் விளக்கத்தின் படி பூரிக்கோ எனவரும் கோவும், உப்பூரிகுடி கிழார் எனவரும் கிழாரும் ஒரே இனத்தைச் சார்ந்தவராய் இருத்தல் வேண்டும். ஆயின் கோவும் கிழாரும் ஒரே இனத்தைச் சுட்டுவன அல்ல என்று கூறி இக்கருத்தை மறுக்கிறார் மு.சண்முகம் பிள்ளை. (குறுந்தொகை, பதிப்பாசிரியர்- மு.சண்முகம் பிள்ளை, ப.கக)

உரையாசிரியர்களும் குறுந்தொகையும்:

தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்களின் உரைகளிலும் சிலப்பதிகாரம் முதலிய இலக்கிய நூல்களின் உரைகளிலும் இளம்பூரணர் முதலான உரையாசிரியர்கள் சங்க இலக்கியத் தொகை நூல்கள் பலவற்றிலிருந்தும் பல பாடல் அடிகளை மேற்கோளாகக் காட்டுகின்றனர். அப்படிக் காட்டும் நூல்களுள் ஏனைய தொகை நூல்களைக் காட்டிலும் குறுந்தொகையே மிகுதியாக எடுத்தாளப்படுகின்றது. இதனால் குறுந்தொகைப் பாடல்கள் இலக்கிய வரலாற்றின் எல்லாக் காலங்களிலும் எவ்வாறு கற்றவர்கள் கருத்தைக் கவர்ந்து பலராலும் பயிலப்பட்டு வந்தன என்பது தெற்றென விளங்கும்.

இக் குறுந்தொகையுள் இப்பொழுது தெரிந்தவரையில் 165 செய்யுட்களே பிறநூலுரைகளில் மேற்கோளாகக் காட்டப்பெறாதவை என்கிறார் உ.வே.சா. தம் குறுந்தொகைப் பதிப்பு முகவுரையில். இந்நூலை மேற்கோளாக எடுத்தாண்ட உரையாசிரியர்கள் பட்டியலையும் அவர் தருகின்றார்.

அவை வருமாறு,
1. அகப்பொருள் விளக்க உரையாசிரியர்
2. அடியார்க்கு நல்லார்
3. அழகிய மணவாள ஜீயர்
4. இளம்பூரணர்
5. இறையனார் அகப்பொருள் உரையாசிரியர்
6. கல்லாடர்
7. களவியல் காரிகை உரையாசிரியர்
8. காரிரத்ந கவிராயர்
9. குணசாகரர்
10. சங்கரநமச்சிவாயர்
11. சாமிநாத தேசிகர்
12. சிவஞான முனிவர்
13. சேனாவரையர்
14. சொக்கப்ப நாவலர்
15. தக்கயாகப் பரணி உரையாசிரியர்
16. தண்டியலங்கார உரையாசிரியர்
17. தமிழ்நெறி விளக்க உரையாசிரியர்
18. திருமயிலை யமகவந்தாதி உரையாசிரியர்
19. திவ்யப் பிரபந்த ஈட்டு வியாக்யானக்காரராகிய நம்பிள்ளை
20. தெய்வச்சிலையார்
21. நச்சினார்க்கினியர்
22. பரிமேலழகர்
23. புறநானூற்று உரையாசிரியர்
24. பெருந்தேவனார்
25. பேராசிரியர்
26. மயிலேறும் பெருமாள் பிள்ளை
27. மயிலைநாதர்
28. யாப்பருங்கல விருத்தி உரையாசிரியர்
29. வைத்தியநாத தேசிகர்
மேலே சுட்டப்பட்ட அத்துணை உரையாசிரியர்களும் குறுந்தொகையைத் தம் உரையில் மேற்கோளாகக் காட்டிச் சிறப்பித்துள்ளார்கள்.

தொல்காப்பியப் பொருளதிகார உரையில் இளம்பூரணர் குறுந்தொகையை 126 இடங்களில் எடுத்தாளுகின்றார். பேராசிரியர் 103 இடங்களில் குறுந்தொகைப் பாடல்களை மேற்கோள் காட்டுகின்றார். நச்சினார்க்கினியர் மிக அதிகமாக 223 இடங்களில் குறுந்தொகைக் காட்டுகளோடு தம் உரையை எழுதியுள்ளார். வேறு எந்த நூலும் இத்துணை மிகுதியாக உரையாசிரியர்களின் கருத்தை ஈர்க்கவில்லை. குறுந்தொகையின் சிறப்பிற்கு உரையாசிரியர் களின் மேற்கோளாட்சியே மிகச்சிறந்த சான்று.

குறுந்தொகைக்குப் பழைய உரை:

குறுந்தொகைக்கான பழைய உரைகள் இருபெரும் உரையாசிரியர்களால் எழுதப்பட்டன என்பதற்கான சான்றுகள் உள்ளன. ஒன்று பேராசிரியரின் உரை, மற்றொன்று நச்சினார்க்கினியர் உரை. பேராசிரியர் இருபது பாடல் தவிர்த்த பிற பாடல்களுக்கு உரை கண்டார் என்றும், அவர் விடுத்த இருபது பாடல்களுக்கு நச்சினார்க்கினியர் பின்னாளில் உரை கண்டார் என்றும் தெரிய வருகின்றது.

நல்லறி வுடைய தொல்பே ராசான்
கல்வியும் காட்சியும் காசினி அறிய
பொருள்தெரி குறுந்தொகை இருபது பாட்டிற்கு
இதுபொருள் என்றுஅவன் எழுதா தொழிய
இதுபொருள் என்றதற்கு ஏற்ப உரைத்தும்


எனவரும் நச்சினார்க்கினியரின் உரைப்பாயிரப் பகுதி முன் சொல்லப்பட்டதற்குச் சான்றாகும்.

இச்செய்தியை,
பாரத்தொல் காப்பியமும் பத்துப்பாட் டுங்கலியும்
ஆரக் குறுந்தொகையுள் ஐஞ்ஞான்கும் - சாரத்
திருத்தகு மாமுனிசெய் சிந்தா மணியும்
விருத்திநச்சி னார்க்கினிய மே


எனவரும் நச்சினார்க்கினியர் செய்த உரைகளைத் தொகுத்து வழங்கும் வெண்பாவும் தெரிவிக்கின்றது. பேராசிரியர் குறுந்தொகைக்கு உரை செய்தார் என்பதற்கு நச்சினார்கினியரின் தொல்காப்பிய உரையிலேயே அகச்சான்று உள்ளது. தொல்காப்பிய அகத்திணையியல்,

உள்ளுறை உவமம் ஏனை உவமம் எனத்
தள்ளா தாகும் திணையுணர் வகையே


என்னும் 46ஆம் நூற்பா உரையில், 'யானே ஈண்டை யேனே' (குறுந். 54) என்பதனை எடுத்துக் காட்டி, "பேராசிரியரும் இப்பாட்டில் மீனெறி தூண்டில் என்பதனை ஏனை உவமம் என்றார்" எனக் குறிப்பிட்டுள்ளார். ஆகவே குறுந்தொகைக்குப் பேராசிரியர் உரை கண்டிருந்தார் என்பது தெளிவாகும். இவ்விரண்டு உரைகளும் இன்று கிடைக்கவில்லை.

புதன், 2 டிசம்பர், 2009

ஆய்வு நோக்கில் குறுந்தொகை -பகுதி-௨ -குறுந்தொகையின் காலம்

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

குறுந்தொகையின் காலம்:

சங்கத் தொகை நூல்களில் பாடல்களில் பயின்றுவரும் சிறப்புத் தொடர்களால் பெயர் பெற்ற புலவர்கள் இருபத்தேழு பேர். இவருள் பத்தொன்பது புலவர் பெயர்களுக்குரிய சிறப்புத் தொடர்களைக் கொண்ட பாடல்கள் குறுந்தொகையுள் உள்ளன. பிற நூல்களிலும் குறுந்தொகைத் தொடரால் பெயர்பெற்ற புலவர்கள் வருகின்றனர். எனவே, புலவர்களின் பெயரிடுதலுக்குக் காரணமான பாடல்களைக் கொண்ட குறுந்தொகை ஏனைய தொகைநூல்களினும் முற்பட்டது எனக் கருத இடமுண்டு.

பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை அவர்களின் கருத்தும் இதற்கு அரணாயுள்ளது. அவர்தம் ஆய்வுரை வருமாறு,
"ஓரேருழவன், கயமனார், காக்கைப் பாடினியார் நச்சள்ளையார், தும்பிசேர் கீரனார் என்ற புலவர் பெயர்கள் குறுந்தொகையில் (131, 9, 210, 392) வந்துள்ளன. இந்நூலில் இப்புலவர்களின் பெயர்கள் காரணம் பற்றி அமைந்துள்ளன என்பது விளங்குகிறது. எனவே இந்நூலிலேயே இப்புலவர்களின் பாடல்கள் முதலில் தொகுக்கப்பட்டன என்று கொள்ளுதல் வேண்டும்". (வையாபுரிப் பிள்ளை, இலக்கிய தீபம், பக். 75-76)

மாங்குடி மருதனாரைப் புறப்பாட்டு ஒன்று ஏனைய புலவர்களுக்குத் தலைவராகக் கொண்டு போற்றுகிறது.
மாங்குடி மருதன் தலைவ னாக
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைகஎன் நிலவரை (புறம்., 72)

என்று தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் சூள் உரைக்கின்றான். இவன் தலைமைப் புலவராகக் குறிப்பிடும் மாங்குடி கிழாரின் பாடல் குறுந்தொகையுள் இடம் பெற்றிருத்தலால் இந்நூல் முதன்மை பெற்ற நூல் எனக் கருத இடமுள்ளது. சங்கப் பாடல்கள் பலவற்றின் ஆசிரியர்களாகத் திகழும் கபிலர், பரணர், ஒளவையார், நக்கீரர் முதலியோர் பாடல்கள் இக் குறுந்தொகையுள் அமைந்திருத்தலும் இந்நூலின் காலப்பழமைக்கு ஒரு சான்று எனக் கொள்ளலாம்.

குறுந்தொகையின் காலம் பற்றிய பல்வேறு ஆய்வுக் கருத்துக்களைத் தம் இலக்கிய தீபம் என்ற நூலில் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை அவர்கள் தெரிவித்துள்ளார்கள். அவர்தம் ஆய்வுக் கருத்துக்களில் சில பின்வருமாறு,

குறுந்தொகைப் பாடல்களைப் பாடிய புலவர்கள் வேறு வேறு காலத்தினர். புறநானூற்று முதற்பதிப்பு முகவுரையில் காணும், "இந்நூற் செய்யுட்களால் பாடப்பட்டவர்கள் ஒருகாலத்தாரல்லர், ஒரு சாதியாரல்லர், ஓரிடத்தாருமல்லர், பாடியவர்களும் இத்தன்மையரே", என்னும் குறிப்பு தொகை நூற் பாடல்கள் பற்றிய சரியான கணிப்புரையாகும்.

தொல்காப்பிய உரைகாரராகிய பேராசிரியர் குறுந்தொகைக்கு உரை வரைந்துள்ளமையால் அவர் காலமாகிய 14 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே இது தொகுக்கப்பெற்றது என்பது தெளிவு. இளம்பூரணரும் குறுந்தொகைப் பாடல்களை மேற்கோளாக எடுத்தாளுதலின் அவர் காலமாகிய 12 ஆம் நூற்றாண்டிற்கும் முற்பட்டது இத்தொகை என்பது துணிவு.

வீரசோழியவுரையில், 'அளவடியால் தொக்கது குறுந்தொகை' (அலங். 36, உரை) என்று கூறப்பட்டுள்ளது. எனவே, இந்நூல் எழுதப்பட்ட கி.பி. 1062-இல் பட்டமெய்திய வீர ராசேந்திரன் காலத்திற்கு முன்னரே இக் குறுந்தொகை கோக்கப் பெற்றமை விளங்கும்.

"உருத்திரசன்மன் அகநானூறு தொகுத்தவன் என்பது தெரிகிறது. சங்கப் புலவர்களின் இறுதிக்காலம் கி..பி. 3ஆம் நூற்றாண்டின் இறுதி எனத் துணியலாம். இவர்களது செய்யுட்களைத் தொகுக்கும் கருத்து எழுவதற்கும் செயலாக முற்றுதற்கும் ஒன்றிரண்டு நூற்றாண்டுகள் சென்றிருக்கலாம். எனவே, அகநானூறு தொகுக்கப்பட்ட காலம் 5ஆம் நூற்றாண்டின் முற்பகுதி என்பது ஒரு வகையாற் புலனாகின்றது. குறுந்தொகை நூலினைத் தொகுத்தவன் பூரிக்கோ ஆதலானும் இப் பூரிக்கோ என்பான் உப்பூரிகுடி கிழானாக இருத்தல் கூடுமாதலானும் இத்தொகை நூல் உருத்திரசன்மனது தந்தையால் நான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொகுக்கப் பெற்றது எனக் கொள்ளுதல் தக்கதாகின்றது" (வையாபுரிப் பிள்ளை, இலக்கிய தீபம், பக். 102-103)

குறுந்தொகையிலுள்ள செய்யுள் ஒவ்வொன்றும் தோன்றிய காலத்தை வரையறுத்தலும் இயலாததொரு காரியமே. சில செய்யுட்களை இயற்றிய ஆசிரியர் பெயர்களே மறைந்துவிட்டன. 19 செய்யுட்களை இயற்றியோர்க்கு அவரவரது செய்யுட்களில் வந்துள்ள அருந்தொடர்களே பெயராக அமைந்துள்ளன. எஞ்சிய செய்யுட்களிலும் காலவரையறை செய்வதற்குப் பயன்படும் ஆதாரங்கள் சிலவேயாம்.

வெண்கோட்டு யானை சோணை படியும்
பொன்மலி பாடலி பெறீஇயர்
யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே (குறுந். 75)

என்னும் குறுந்தொகைப் பாடலில் வரலாற்றுச் செய்தி இடம்பெற்றுள்ளது. 'சோணைநதிக் கரையிலே பொன் மிகுதியால் சிறப்புற்று விளங்கும் பாடலி என்னும் வளநகரத்தை நீ பெறுவாயாக' என்று தலைமகனது வரவுணர்த்திய பாணனை நோக்கித் தலைவி கூறுகிறாள். எனவே இச்செய்யுள் இயற்றப் பெற்ற காலத்தே பாடலிபுத்திரம் வளஞ்சிறந்த பெருநகரமாக விளங்கியது என்பது புலனாகும்.

பாடலிபுத்திர நகரின் வரலாறு கி.மு. 5-இல் இருந்தே தொடங்குகிறது. கி.பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளில் பாடலிபுத்திரம் சிறப்புற்று விளங்கியிருத்தல் கூடும். எனவே குறுந்தொகைச் செய்யுட்கள் இயற்றப் பெற்ற காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என்னும் முடிவுக்கு வருகிறார் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை. எனவே குறுந்தொகைப் பாடல்கள் கி.பி. 3 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் பாடப்பெற்றிருத்தல் வேண்டும்.

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...