வெள்ளி, 29 ஆகஸ்ட், 2008

கல்! நில்! வெல்!- புத்தக மதிப்புரை

கல்! நில்! வெல்!

உவப்புரை

முனைவர் நா.இளங்கோ
இணைப்பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8.

பாவலர் கு.அ.தமிழ்மொழி புதுவையின் இளைய பாவலர். கடந்த ஐந்தாண்டுகளாக எழுதி வருபவர். அதாவது அவரின் பத்து வயதில் எழுதத் தொடங்கியவர். பதினைந்தாம் அகவையைத் தொடும் பாவலர் தமிழ்மொழியின் படைப்புகள் வெளிவந்துள்ள இதழ்கள் இருபத்தைந்துக்கும் மேல். இவரின் கவிதைகள் இடம்பெற்றுள்ள கவிதைத் தொகுப்புகள் இருபதுக்கும் மேல். பெற்றுள்ள விருதுகள் பத்துக்கும் மேல். இத்துணைச் சிறப்புகளுக்கும் உரிய பாவலர் கு.அ. தமிழ்மொழியின் முதல் கவிதைத் தொகுதி ‘சிறகின் கீழ் வானத்தை’ அடுத்து அவர் வெளியிடவிருக்கும் இரண்டாவது கவிதைத் தொகுதிதான் இந்த, “கல்! நில்! வெல்!”.
ஒரு பாவலர் தம் சிறார் பருவத்திலேயே இத்தகு ஆளுமைகளைப் பெற்றிருப்பது உண்மையிலேயே வியந்து பாராட்டுதற்குரியது. சக சிறார்களோடு ஒப்பிடுகையில் பாவலர் தமிழ்மொழி தனித்தன்மை வாய்ந்தவர். சுயமரியாதைக்காரர், தமிழ்த் தேசியப் போராளி, சுற்றுச்சூழல் ஆர்வலர் முதலான பன்முகப் பரிமாணங்களும் பாவலர் தமிழ்மொழிக்கு உண்டு. தமிழ்மொழி நல்ல ஓவியரும் கூட. புதுவைக்குப் பெருமை சேர்க்கும் இவர் 2006 ஆம் ஆண்டிற்கான நடுவண் அரசின் தேசியக் குழந்தைகள் விருதினைப் பெற்றிருப்பதில் வியப்பு ஒன்றும் இல்லை.

பாவலர் தமிழ்மொழியின் முதல் தொகுதி சிறகின் கீழ் வானம் (2005) வெளிவந்தபோதே தமிழ் அறிஞர்கள் பலரின் பாராட்டுதல்களைப் பெற்றதோடு கவிஞாயிறு தாராபாரதி ஐக்கூ விருது (2005), திருமதி சுந்தராம்பாள் இலக்கிய விருது (2004-05) ஆகிய இரண்டு விருதுகளையும் பெற்றுச் சாதனை புரிந்தது. 2008 இல் பாவலர் தமிழ்மொழி வெளியிட்டிருக்கும் கல்! நில்! வெல்! என்ற இந்த நூலும் பல்வேறு பாராட்டுகளையும் பரிசுகளையும் பெறுவது திண்ணம்.
II
கல்! நில்! வெல்! என்ற இந்த நூலில் இடம் பெற்றுள்ள கவிதைகள் அனைத்தும் சிந்தடி நான்காய் அமைந்த வஞ்சித் விருத்தம் (சிந்தடி நான்காய் வருவன வஞ்சி / யெஞ்சா விருத்தம் என்மனார் புலவர் -யாப்பருங்கலம்) யாப்பை ஒத்து அமைந்துள்ளமையும் அடிதோறும் இயைபுத் தொடை அமைய பாடப்பட்டிருப்பதும் ஒரு புதுமை எனலாம். இதோ ஒரு சான்று,

கசடற எதையும் கல்
கற்ற வழியில் நில்
அறிவுப் பாதையில் செல்
எதையும் அறிவால் வெல்.


சிறார் பாடல்கள் என்ற இலக்கிய வகையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். சிறார்களுக்காகப் பாடப்படும் பாடல்கள் அவை. பாவலர் தமிழ்மொழியின் சிறார் பாடல்கள் ஒரு புத்திலக்கியம். ஏனென்றால் பாடல்களை எழுதியவரும் சிறாரே. பாடலுக்கான வாசகர்களும் சிறார்களே.
நாட்டுப்புறப் பாடல் வகைகளில் சிறார் பாடல்கள் என்று ஒருவகை உண்டு. நாட்டுப்புறச் சிறுவர்கள் தம் ஆயத்தோடு விளையாடும் காலங்களில் இவ்வகைப் பாடல்களைப் பாடுவர். நாட்டுப்புறச் சிறுவர் பாடல்களில் விளையாட்டுப் பாடல்கள், நகைச்சுவைப் பாடல்கள், கேலிப் பாடல்கள், சொற்பயிற்சிப் பாடல்கள், எழுத்துப் பயிற்சிப் பாடல்கள் முதலான பல்வகைப் பாடல்களும் இடம்பெறும்.

உனக்கும் எனக்கும் போட்டி
கதை சொல்லடி பாட்டி
தமுக்கு அடிப்பவன் தோட்டி
கையிலே பிடிப்பது ஈட்டி
(நாட்டுப்புறச் சிறுவர் பாடல்)

அதோ பாரு காக்கா
கடையில விக்குது சீக்கா
பொண்ணு போறா சோக்கா
எழுந்து போடா மூக்கா
(நாட்டுப்புறச் சிறுவர் பாடல்)

மேலே சான்று காட்டப்பட்டுள்ள நாட்டுப்புறச் சிறுவர் பாடல் மரபை அடியொற்றி இயைபுத் தொடையமைந்த முச்சீரடிகள் நான்கு கொண்ட பாடல் வடிவத்தைப் பாவலர் தமிழ்மொழி கையாண்டிருப்பது தமிழ்க்கவிதை உலகில் ஒரு புதுமையான பாராட்டத்தக்க முயற்சியே.

பாவலர் தமிழ்மொழி தமிழ்வழிக் கல்வி கற்று வருபவர். அதனால் தாய்மொழியிலேயே சிந்திக்கவும் எழுதவுமான வாய்ப்பு அவருக்கு முழுமையாகக் கிடைத்துள்ளது. தாய்மொழி வழியாக அல்லாமல் ஆதிக்க மொழியில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இத்தகு வாய்ப்புகள் அமைவதில்லை. உயர்நிலைக் கல்வியைக்கூட இன்னும் முடிக்காத அவருக்கு இருக்கும் தமிழ்மொழியின் சொல்வளம் வியக்கத்தக்கதாய் உள்ளது. தமிழில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் கூட இத்தகு சொல்வளம் பெற்றிருப்பார்களா? என்பது அய்யமே. தமிழ்மொழியில் இடம்பெறும் சொற்களில் சற்றேறக்குறைய ஒன்றுபோல் ஒலிக்கக்கூடிய ண – ன, ல – ள, ர – ற வேறுபாடுடைய சொற்களைத் தேர்ந்தெடுத்து அதன் பொருள் விளக்கமுறுமாறு இயைபுத் தொடையமைய எளிய இனிய நடையில் கவிதை யாத்துள்ள பாவலர் தமிழ்மொழியின் முயற்சி பலபடப் பாராட்டத்தக்கது. நூலின் இறுதியில் கவிதைகளில் பயின்றுவந்துள்ள சொற்களின் ‘சொற்பொருள் அகரவரிசை’யை இணைத்துள்ளமை மிகுந்த பயனளிக்கக்கூடியது.

ஒருவகைப் புல்லே தினை
ஒழுக்கம் இடம்பொருள் திணை

கரும்பின் கட்டி வெல்லம்
நீரின் பெருக்கு வெள்ளம்

கடலின் பெயரோ பரவை
பறக்கும் உயிர்கள் பறவை


தமிழில் பிழையின்றி எழுத விரும்பும் மாணவர்கள் கட்டாயம் இந்தக் கவிதை நு}லை வாசித்துப் பயிற்சி செய்துகொள்வது நல்லது.

கடலில் தோன்றும் அலை
சிலந்தி பின்னும் வலை
ஓவியம் என்பது கலை
சிற்பி வடிப்பது சிலை


கவிதை விளையாட்டு போல் இயைபுத் தொடை அமைய நல்ல ஓசை நயத்தோடு படைக்கப்பட்டிருக்கும் பாவலர் தமிழ்மொழி இவ்வகைக் கவிதைகள் மொழித்திறன் வளர்க்கும் கருவியாக அமைந்திருப்பது “கல்! நில்! வெல்!” என்ற இத்தொகுதிக்குக் கூடுதல் பயனையும் மதிப்பையும் அளிக்கின்றன.

எதையும் செய்வாய் ஆய்வு
உடலுக்குத் தேவை ஓய்வு
பைசா கோபுரம் சாய்வு
வேலையில் வேண்டும் தோய்வு


“எதையும் செய்வாய் ஆய்வு” என்றும் “வேலையில் வேண்டும் தோய்வு” என்றும் சிறார்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் பயன்படும் நல்ல பல செய்திகளையும் தம் கவிதைத் தொகுதி வழி வழங்கியிருக்கும் பாவலர் கு.அ.தமிழ்மொழி மேலும் பல நல்ல படைப்பாக்கங்களைத் தமிழுக்குத் தந்து சிறப்புற வேண்டும். அதற்கான அடையாளங்கள் அவர் படைப்பில் மிளிர்கின்றன.
வாழ்க! வளர்க!!
15-8-2008 நா.இளங்கோ

பொறியின்மை யார்க்கும் பழியன்று -திருக்குறள் பேச்சுப் போட்டி

திருக்குறள் பேச்சுப் போட்டி


தலைப்பு: பொறியின்மை யார்க்கும் பழியன்று

முனைவர் நா.இளங்கோ
இணைப்பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8.


அவையோர்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள்! இன்று நான் பேச எடுத்துக்கொண்ட தலைப்பு “பொறியின்மை யார்க்கும் பழியன்று” என்பதாகும். இச்சொற்றொடர் திருக்குறள் பொருட்பாலில் ஆள்வினையுடைமை என்ற அதிகாரத்தில் இடம்பெறும் அரிய குறளின் ஓர் பகுதியாகும். திருக்குறளின் பெருமையினை நான் சொல்லித்தான் இந்த உலகம் அறிந்துகொள்ள வேண்டுமென்பதில்லை.

எல்லாப் பொருளும் இதன்பால் உள இதன்பால்
இல்லாத எப்பொருளும் இல்லையால்

என்று மதுரைத் தமிழ்நாகனாராலும்,

உள்ளுதொறும் உள்ளுதொறும் உள்ளம் உருக்குமே
வள்ளுவர் வாய்மொழி மாண்பு

என்று மாங்குடி மருதனாராலும் போற்றிப் புகழப்படும் மாண்புடைய நூல் திருக்குறளாகும். எக்காலத்தும் உலகப் பொதுமறை என்று உலக மக்களால் கொண்டாடப்படும் சிறப்பு வாய்ந்த நூல் திருக்குறளாகும்.
இச்சொற்றொடர் அமைந்த அந்த அரிய திருக்குறளை முழுதுமாக உங்களுக்கு நான் சொல்லிக்காட்ட விரும்புகின்றேன்.

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி


இத்திருக்குறளின் சுருங்கிய பொருளாவது, ‘புத்திகூர்மை இல்லாதிருப்பது யார்க்கும் குற்றமன்று. ஆனால் புத்திகூர்மை இருந்தும் அறிய வேண்டியதை அறிந்தும் முயற்சி இல்லாதிருப்பது குற்றமாகும்’ என்பதே. அதாவது ஆள்வினையுடைமை என்ற அதிகாரமே முயற்சியின் அருமை பெருமைகளை எடுத்துரைப்பதுதான். “முயற்சி திருவினையாக்கும்”, “தெய்வத்தான் ஆகாதுஎனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்” என்றெல்லாம் முயற்சியை வலியுறுத்தும் திருவள்ளுவர் இந்தக்குறளில் முயற்சி இன்மை என்பது பழிக்குரிய செயல் என்பதோடு நிறுத்தாமல், வேறு ஒரு புதிய செய்தி ஒன்றையும் பதிவு செய்கின்றார். அதுதான் பொறியின்மை யார்க்கும் பழியன்று என்பதாகும். நான் மேலே சொன்ன விளக்கம் நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை அவர்கள் சொன்ன விளக்கமாகும்.

அதாவது பொறியின்மை என்றால் அறிவின்மை, பொறி என்பதற்கு அறிவு என்று அவர் பொருள் கொள்ளுகிறார்.
“நூலில் பரித்தஉரை யெல்லாம் பரிமேலழகன் தெரித்த உரையாமோ தெளி” என்ற என்ற புகழ்மொழியால் திருக்குறள் உரைகளிலேயே தலைசிறந்த உரை என்று போற்றப்படும் பரிமேலழகர் உரையில் பொறியின்மை என்பதற்குச் சொல்லப்படும் விளக்கத்தையும் நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பொறியின்மை என்றால் பயனைத் தருவதாய விதியில்லாமை. அதாவது பரிமேலழகரைப் பொறுத்தமட்டில் இக்குறளில் வரும் பொறி என்ற சொல்லுக்கு பயனைத் தருவதாய விதி, ஆகூழ் என்பதே பொருளாகும். ஆக இந்தக் குறளின் உண்மைப் பொருளை நாம் விளங்கிக் கொள்ள நமக்குத் தடையாக இருக்கும் சொல் பொறி என்பதாகும்.

பொறி என்ற சொல்லுக்கு அகராதி தரும் விளக்கம் என்னவென்று பார்ப்போம். தமிழின் மிகப்புகழ்பெற்ற நா.கதிரைவேற்பிள்ளையின் தமிழ் மொழி அகராதி தரும் விளக்கம் பொறி: அடையாளம், அறிவு, இயந்திரம், செல்வம், தீப்பொறி, புலப்பொறி, புள்ளி முதலானவைகளாகும்.

பொறி என்ற சொல்லுக்கு நிறைய பொருள் விளக்கங்கள் இருப்பதால் திருக்குறள் உரையாசிரியர்கள் ஒவ்வொருவரும் அவரவர்கள் கருத்துக்கு ஏற்ப விளக்கம் கூறுகின்றார்கள். இதில் தவறொன்றும் இல்லை. ஆனால் எக்காலத்துக்கும் எவ்விடத்தவர்க்கும் எச்சூழலுக்கும் பொருந்தும் விளக்கம் தந்து திருக்குறளை விளங்கிக் கொள்வதுதான் சரியான தாயிருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.

திருக்குறளுக்கு உரை எழுதிய பழைய உரைகாரர்கள் பத்து பேரில் பரிதியார் என்று ஒரு உரையாசிரியர் இருந்தார். அவர் இந்தத் திருக்குறளில் இடம்பெறும் பொறியின்மை என்பதற்கு தரும் விளக்கம் மிகப்பொருத்தமாய் இருப்பது வியப்பிற்குரியது. பொறி என்ற சொல்லுக்குப் பரிதியார் புலன் என்று பொருள் கொள்ளுகிறார். திருவள்ளுவரே வேறு இடங்களில் பொறி என்ற சொல்லைப் புலன்கள் என்ற பொருளில் கையாளுகின்றார். பொறிவாயில் ஐந்தவித்தான் (குறள்:6) கோளில் பொறியில் குணமிலவே (குறள்:9) இந்த இரண்டு திருக்குறள்களிலும் பொறி என்ற சொல் ஐம்பொறிகள் என்ற பொருளிலேயே திருவள்ளுவரால் வழங்கப்படுகின்றன. ஆக பொறியின்மை யார்க்கும் பழியன்று என்றால் ஐம்புலன்களில் அதாவது கண், காது, மூக்கு, நாக்கு, உடல் ஆகிய புலன்களில் ஏற்படும் குறை ஒருவருக்கு குற்றமாகாது என்பதாகும்.

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி


மேலே சொல்லப்பட்ட அந்த முழுக்குறளுக்குமான பொருத்தமான பொருள் எது? என்றால் “உறுப்புக் குறைபாடு ஒருவருக்கு குற்றமாகாது முயற்சி இல்லாமையே குற்றமாகும்” என்பதாகும்.

இன்றைய சூழலில் இத்திருக்குறள் எவ்வளவு பொருத்தமானதாய் இருக்கிறது என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். ஊனமுற்றோர் நலம் குறித்து மிகப்பெரிய அளவில் விழிப்புணர்ச்சி ஏற்பட்டிருக்கும் இந்தக் காலத்துக்கு ஏற்ற சிந்தனையைத் திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிச் சென்றுள்ள திறத்தைப் பார்க்கும்போது வியக்காமல் இருக்கமுடியாது. பிறப்பிலேயோ அல்லது விபத்து முதலான செயற்கையிலேயோ ஒருவருக்கு ஊனம் அமைந்து விடுவதென்பது ஒரு பெரிய பழியன்று. முயற்சி இல்லாமல் இருப்பதுதான் பழி என்று சொல்லும் இக்குறள் ஊனமுற்றவர்களுக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையை ஊட்டக்கூடியதாயிருப்பது வெளிப்படை. பொருத்தம் நோக்கி ஒரு திரைப்படப் பாடலை இதனோடு ஒப்பிட்டுப் பார்க்க விரும்புகின்றேன்.

ஊனம் ஊனம் ஊனமிங்கே ஊனம் யாருங்கோ
உடம்பிலுள்ள குறைகளெல்லாம் ஊனமில்லிங்கோ
உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்ல
உள்ளம் ஊனப்பட்டா உடம்பிருந்தும் பயனில்லே


முன்னே நாம் குறிப்பிட்ட திருக்குறளுக்கு முழுதுமாக ஒத்துப் போகக்கூடிய இத்திரைப்படப் பாடலுக்கு ஆதாரமே ‘பொறியின்மை யார்க்கும் பழியன்று’ என்ற திருக்குறள்தான்.

ஊனமுற்றோர் என்ற சொல்லுக்கு மாற்றாக அண்மைக் காலமாக ஒரு புதிய சொல் வழங்கி வருகின்றது. அது என்ன சொல் தெரியுமா? “மாற்றுத் திறனுடையோர்” என்பதுதான் அந்தச் சொல். மாற்றுத் திறனுடையோர் என்ற இப்புதிய சொல்லின் பொருளைக் கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள். ஒரு புலன் செயலற்ற நிலையிலும் மற்றவர்கள் போல் வாழ, வாழ்ந்து காட்ட, வாழ்ந்து சாதித்துக் காட்ட அவர்களுக்குச் செயலற்ற புலன்களுக்கு மாற்றாகப் பிற புலன்கள் மிகுந்த திறனுடையதாயிருக்கும். இன்னும் இதனை எளிமையாக ஒரு சான்று வழியாகத் தெளிவுபடுத்த விரும்புகின்றேன். பார்வைப் புலன் இழந்த ஒருவருக்கு கேட்கும் புலனும் நுகரும் புலனும், தொடு புலனும் மிகவும் கூர்மையானதாயிருக்கும். இப்போது யோசித்துப் பாருங்கள். அவர்கள் மாற்றுத் திறன் உடையோர்கள் தானே!

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி


என்ற திருக்குறளும் இதே செய்தியைத்தான் குறிப்பிடுகின்றது.
பொறியின்மை யார்க்கும் பழியன்று: ஒரு புலனில் ஏற்பட்டுள்ள குறையினால் ஒன்றும் குற்றமில்லை.

அறிவறிந்து: ஒரு புலனில் ஏற்பட்ட குறையை சமன் செய்ய இயற்கை பிற புலன்களுக்குக் கூடுதல் திறனைத் தந்துள்ளது, எனவே அத்தகைய கூடுதல் அறிவால் அறிய வேண்டியதை அறிந்தும்

ஆள்வினை இன்மை பழி: முயற்சி செய்யாமல் இருப்பது குற்றம்.

நடைமுறை வாழ்க்கையில் நாம் எத்தனையோ மாற்றுத் திறனுடைய (ஊனமுற்ற) மனிதர்களைச் சந்திக்கின்றோம். அவர்களில் பலர் பொறியின்மையை ஒரு குறையாகக் கருதாமல் அறிவறிந்து முயற்சியால் நாளும் சாதித்துக் கொண்டே இருக்கிறார்கள். சான்றுகள் பல உண்டு என்றாலும் காலத்தின் அருமை கருதி ஒருவரைக் குறிப்பிடுகின்றேன். சுதாசந்திரன், ஒரு விபத்தில் காலை இழந்தவர். சாதிக்க வேண்டும் என்ற மனத்திட்பத்தோடு தொடர்ந்த முயற்சியின் விளைவாக செயற்கைக் கால்களோடு நடனம் ஆடினார். மயூரி என்ற திரைப்படத்தில் ஒரு நாட்டியப் பேரொளியாகத் தோன்றி தன் மிகச்சிறந்த நடனத் திறமையால் அன்று முழு இந்தியாவின் ஏன்? உலகத்தின் கவனத்தையே ஈர்த்தவர். இன்றும் தமிழ், இந்தி முதலான பல மொழி தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து சாதனை செய்து கொண்டிருக்கின்றார்.

பொறியின்மை யார்க்கும் பழியன்று என்ற தலைப்பில் பேச எனக்கு வாய்ப்பளித்ததன் காரணமாக நானும் என்னைப் போன்றவர்களும் ஊனமுற்றோர் குறித்த விழிப்புணர்வு பெறுவதற்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் என் நன்றியை உரித்தாக்கி விடைபெறுகிறேன். வணக்கம்.

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...