திங்கள், 31 மே, 2010

புதுமைப்பித்தனின் அகலிகைத் தொன்மம் -பகுதி-2

தொன்மவியல்

பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி - 8.

தொன்மம்:

இலக்கியவியல், உளவியல், மானிடவியல், சமூகவியல், மதஒப்பியல், நாட்டுப்புறவியல் போன்ற பல துறைகளில் தொன்மம் சொல் பயன்படுத்தப்படுகிறது. திறனாய்வுத்துறையின் முன்னோடி நார்த்ராப் பிரையின் தொன்மம் குறித்த விளக்கங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. தொன்மம் கடவுளர்களையோ கடவுளையொத்த மனிதர்களையோ பாத்திரங்களாகக் கொண்ட கதையென்றும் அது வரலாற்றுக் காலத்திற்கு அப்பாற்பட்டதென்றும் இயற்கையிழந்த நிகழ்ச்சிகளைக் கொண்டதாகவும் அமைந்திருக்கும் என்றும் கூறுவார். தொன்மங்கள் அதிக சிரத்தையோடு எடுத்துக்கொள்ளப்பட வேண்டியவை, உண்மையிவேயே நிகழ்ந்ததாக நம்பப்படுபவை. எல்லா இலக்கிய வகைகளும் தொன்மத்திலிருந்தே தோற்றமுற்றன என்பது அவர் கருத்து.
( பா.மருதநாயகம், தொன்மத் திறனாய்வு, ப-ள். 12-13)

இலக்கியப் படைப்பிற்கான அடிக்கருத்துக்கள் எல்லாமும் தொன்மங்களிலிருந்தே தோற்றம் பெற்றன என்று நார்த்தராப் பிரையின் கருதுவார். பெரும்பாலும் தொன்மங்கள் மனிதன், விலங்கு, தாவரம் ஆகியவற்றின் தோற்றம் பற்றியும் மனிதன் எவ்வாறு இப்பொழுது உள்ள நிலைக்கு, அதாவது இறப்பு, பால்உணர்வு, பலவகையான சமூகக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றிற்கு ஆட்பட்டவனாக வந்து சேர்ந்தான் என்பன பற்றியும் விளக்குகின்றன. விகோ எனும் அறிஞர் தமது புதிய விஞ்ஞானம் எனும் நூலில் நுண்ணிய சிந்தனைகள் தொன்மக் கருத்துக்களிலிருந்தே வெளிப்படுகின்றன என்றும் கவிதைக்கு இதுவே அடிப்படை என்றும் மனிதன் கற்கவேண்டிய முதல் விஞ்ஞானம் தொன்மமே என்றும் சுட்டிக் காட்டினார். அவர் கருத்தில் தொன்மங்கள் என்பவை உண்மையான நிகழ்ச்சிகள் அல்லது வரலாற்று நிகழ்ச்சிகளின் கற்பனை வடிவங்கள் ஆகும். ( பா.மருதநாயகம், தொன்மத் திறனாய்வு, ப. 7)

தொன்மங்களை உருவாக்கியவர் யார்? என்ற கேள்விக்கு உளவியல் அறிஞர் யுங் தரும் விளக்கம் ஆழமானது, மனித இனம் முழுவதற்கும் பொதுவான அடிமனக்கூறு ஒன்று உண்டென்றும் அதிலிருந்தே தொன்மங்கள் வெளிப்படுகின்றன என்றும் யுங் கருதினார். எனவேதான் பலநாட்டுப் பல இனமக்களிடமும் காணப்படும் தொன்மங்களில் வியத்தகு ஒற்றுமைகளைக் காணமுடிகிறது என்று அவர் விளக்கமளித்தார். ‘புராணங்களிலும் இதிகாசங்களிலும் வெளிப்படுவது ஒரு குறிப்பிட்ட தனிநபரின் தனிச்சிந்தனை அல்ல, மக்களின் கூட்டுச்சிந்தனையே ஆகும்’ என்று மாக்சிம் கார்க்கியும் தொன்மங்களை விளக்கியுள்ளார்.

ஆரம்பக் காலத்து மனிதம், தான் எதிர்கொண்ட இயற்கையைத் தன் காலத்திய அறிவினால் புரிந்து கொள்ள முயன்ற முயற்சியின் வெளிப்பாடே இத்தொன்மங்களாகும். மனித மனத்தின் கற்பனை ஆற்றலையும் வாழ்க்கை அனுபவத்தின் மூலம் வெடித்த முதல் கலை அமைப்பையும் இத்தொன்மங்கள் வெளிப்படுத்தி நின்றன. பின்னால் வர்க்க சமுதாயம் உருவான போது இந்தத் தொன்மங்களில் இருந்துதான் மதக் கடவுள்களுக்கான கதைகள் மாற்றி உருவாக்கம் செய்யப்பட்டன. (க.பஞ்சாங்கம், தொன்மத் திறனாய்வு, ப.ள். 114-115)

தொன்மங்கள் இறுகிய பாறைகள் அல்ல. உயிர்த் துடிப்புள்ளவை, சமூகம், காலத்துத் தேவைகளுக்கேற்ப தொன்மங்களைப் பயன்படுத்திக் கொள்கிறது. சமூகம் மட்டுமல்ல சமூகத்தின் ஒவ்வொரு அங்கமும் அவரவர்களின் கருத்துலகிற்கு ஏற்பத் தொன்மங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றன. இந்தியச் சூழலில் ஆரிய திராவிட அரசியல் நிலைப்பாடுகளுக்கு இத்தொன்மங்களே களங்களாயின. ஊடகங்கள் இந்துத்துவ பெருமரபைத் தூக்கிப் பிடிக்க இத்தொன்மங்களைப் பயன்படுத்துகின்றன. படைப்பாளிகளும் தொன்மங்களையே படைப்பின் அடிக்கருத்துக்களாகவும் பரப்புரைகளாகவும் உத்திகளாகவும் அமைத்து வெற்றி பெறுகின்றார்கள். எனவேதான் ரெனிவெல்லாக், ‘உலகப் புகழ்பெற்ற படைப்புகள் எல்லாம், புதிதாகக் கதையை உருவாக்கிப் படைக்கப்பட்டவைகளை விட, பழைய தொன்மங்களின் மேல் மறுபடைப்புச் செய்யப் பட்டவைகளாகவே இருக்கின்றன’ என்கிறார். (க.பஞ்சாங்கம், தொன்மத் திறனாய்வு, ப. 118)

உலக இலக்கியப் பயிற்சி மிக்க புதுமைப்பித்தனும் தொன்மமரபுகளை மறுஆக்கம் செய்யும் படைப்பு உத்தியைத் தம் சிறுகதைகள் பலவற்றில் கையாண்டு வெற்றி பெற்றுள்ளார். புதுமைப்பித்தன், இந்தியத் தொன்மங்களில் பரந்த வீச்சுடைய இராமாயணக் கதையை விகடக்கதையாக்கிப் பகடி பண்ணுகிறார். இராமாயணக் கதையைத் தலைகீழாக்கி விகடம் பண்ணுவதற்குப் பாரதியைத்தான் முன்னோடி எனச் சொல்ல வேண்டும். நிஜமான ராமாயணக் கதை என்று அவரே கிண்டலாகக் குறிப்பிடும் அவருடைய குதிரைக் கொம்பு என்ற கதையில் இராவணன் கதைத் தலைவன், இராம- லக்குமணர் எதிரிகள், மூத்தவன் பரதனுக்குப் பட்டம் கட்டக்கூடாது, தனக்கே கட்டவேண்டும் என்று இராமன் லக்குவணோடு சேர்ந்து கலகம் பண்ணுகிறான். இதனால் நாட்டைவிட்டுத் துரத்தப்படுகிறான். போகும்போது இராமன் சீதையைத் தூக்கிச் செல்ல, தொடர்ந்து சென்று இராவணன் சீதையை மீட்கிறான். முடிவில் இராம- லக்குமணர்கள் திருந்துகிறார்கள்! புதுமைப்பித்தனின் நாரத ராமாயணம், இராஜாஜியின் பச்சாதாபம் கதைகளுக்குப் பாரதியின் குதிரைக்கொம்பு முன்னோடியாகக் காணப்படுகிறது. (ராஜ் கௌதமன், புதுமைப்பித்தன் எனும் பிரம்மராட்சஸ், ப.20)இப்படித் தொன்மக் கதைமரபுகளை நவீன உத்தியால் கேலிச் சித்திரங்களாக்கிப் பகடி பண்ணுவது மேலை இலக்கிய படைப்பாக்க உத்திகளிலிருந்து பெறப்பட்டது.

காலந்தோறும் தொன்மங்கள் மறுபடைப்பாக்கம் பெறுவது எல்லா மொழி இலக்கியங்களிலும் வழக்கமானதுதான் என்றாலும் புதுமைப்பித்தன் போன்றவர்கள் தொன்ம மரபுக் கதைகளைத் தம் படைப்பாக்கத்திற்குப் பயன்படுத்தும்போது புதிய மதிப்பீடுகளை அத்தொன்மங்களில் இடம்பெறச் செய்வதோடு புதிய விமர்சனங்களையும் அதனுள் பொதித்து வைக்கின்றார்கள். புதுமைப்பித்தன் தம் எழுத்துக்கள் முழுவதிலும் இந்தியத் தொன்ம இதிகாச மரபுகளையும் சைவத் தமிழ் தொன்மமரபுகளையும் ஊடுபாவாகக் கையாளுகிறார். நூற்றுக்கும் மேற்பட்ட அவருடைய படைப்புகளில் மறுஆக்கம் செய்யப்பெற்ற தொன்மங்கள் பல என்றாலும் எல்லை கருதி இராமாயணம், மகாபாரதம் என்ற இரண்டு இதிகாசங்களிலும் இடம்பெறும் அகலிகைத் தொன்மமரபைப் புதுமைப்பித்தன் எவ்வாறு கையாண்டுள்ளார் என்பதை இக்கட்டுரை ஆய்கிறது.

புதுமைப்பித்தனின் அகலிகைத் தொன்மம் -பகுதி-1

யார் இந்த புதுமைப்பித்தன்?

பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி - 8.

புதுமைப்பித்தன் தம் படைப்புகள் குறித்து சொன்ன வாசகங்களோடு கட்டுரையைத் தொடங்குவோம்.விமர்சகர்களுக்கு ஒரு வார்த்தை. வேதாந்திகள் கைக்குள் சிக்காத கடவுள் மாதிரிதான் நான் பிறப்பித்து விட்டவைகளும் அவை உங்கள் அளவுகோல்களுக்குள் அடைபடாதிருந்தால் நானும் பொருப்பாளியல்ல, நான் பிறப்பித்து விளையாட விட்டுள்ள ஜீவராசிகளும் பொறுப்பாளியல்ல. உங்கள் அளவுகோல்களைத்தான் என் கதைகளின் அருகில் வைத்து அளந்து பார்த்துக்கொள்ளுகிறீர்கள் என்று உங்களுக்குச் சொல்லிவிட விரும்புகிறேன். (பதி.ஆ. வேங்கடாசலபதி, புதுமைப்பித்தன் கதைகள், ப. 780)என்று புதுமைப்பித்தன் தன்படைப்புகள் குறித்து விமர்சகர்களுக்கு சொன்ன எச்சரிக்கையோடு அவரின் படைப்புகளை அணுகுவது பொருத்தமாயிருக்கும்.

இருபதாம் நூற்றாண்டு இலக்கிய வரலாற்றில் - சிறுகதை வரலாற்றில் தனக்கென ஒரு தனியிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ள புதுமைப்பித்தனைத் தூய கலை இலக்கியவாதிகளும் சோசலிச யதார்த்தவாதிகளும் ஒருசேரச் சொந்தம் கொண்டாடுவது புதுமை. இதுவே அவர் படைப்புகளின் சூட்சுமம். புதுமைப்பித்தன் எந்தக் கூண்டுகளிலும் சிக்கிக் கொள்ளாதவர். அவர் படைப்புகள் சோசலிசம், பெரியாரியம், காந்தியம், சித்த தத்துவம் எல்லாம் பேசும், அதே சமயம் அவற்றைக் கிண்டலடிக்கவும் செய்யும்.

சொ.விருத்தாசலம் என்ற இயற்பெயருடைய புதுமைப்பித்தன் வேறு பல புனைபெயர்களிலும் பத்திரிக்கைகளுக்கு எழுதியுள்ளார். சோ.வி., வே.கந்தசாமிக் கவிராயர், ரசமட்டம், கூத்தன், நந்தி, கபாலி, சுக்ராச்சாரி என்பன அவரின் சில புனைபெயர்கள். நூற்றுக்கும் மேற்பட்ட சொந்தச் சிறுகதைகள் படைத்ததோடு மட்டுமின்றி சுமார் நூறு மொழிபெயர்ப்புச் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள், குறுநாவல், திரைப்பட உரையாடல் என்று இலக்கியத்தில் பல துறைகளிலும் தம் படைப்புகளை உருவாக்கியவர் புதுமைப்பித்தன்.

புதுமைப்பித்தன் தன் கதைகளின் பொதுத்தன்மை நம்பிக்கை வறட்சி என்று சொல்லிக்கொண்டார், அதற்குக் காரணம் அவரின் வாழ்க்கைப் பின்னணி. அவரின் நம்பிக்கை வறட்சி மனிதர்கள் உண்டாக்கிய தர்மங்கள் குறித்ததாயிருந்தது. சாமான்ய மனிதர்களின் நடைமுறை வாழ்க்கையும் அவற்றின் அவலங்களும் அவரின் சிறுகதைகளில் அதிக இடங்களைப் பிடித்தன. சமூகத்தின் மீதான புதுமைப்பித்தனின் கோபமே, அவர் படைப்புகளில் கேலியாக, கிண்டலாக, நையாண்டிகளாக வெளிப்பட்டன. எத்தகைய அறங்களின் மீதும் தமக்கு நம்பிக்கையில்லை என்பதுபோல் அவர் காட்டிய பாசாங்கெல்லாம் சமூகம் குறித்த அவரின் எதிர்வினையே.

புதுமைப்பித்தன் ஆங்கில வழியில் உலகின் பலமொழிப் புனைகதைகளைக் கற்றார். தமிழிலும் உயர்ந்த தரத்தில் சிறுகதைகளைப் படைக்க விரும்பி ஒவ்வொரு சிறுகதையையும் ஒரு சோதனை முயற்சி போல் செய்து பார்த்தார். அதனால்தான் அவர் கதைகள் எதுவும் ஒன்று போல் மற்றொன்று இருப்பதில்லை. தம்முடைய கதைகளை வெறும் சுவாரஸ்யத்திற் காகவோ கருத்துப் பிரச்சாரத்துக்காகவோ அவர் படைக்கவில்லை. புதுமைப்பித்தனின் ஒவ்வொரு கதையும் ஒரு பிரச்சனையைப் பேசும். பாத்திரங்களையோ, பிரச்சினைகளையோ மோதவிட்டுவிட்டுத் தன்னை இனங்காட்டிக் கொள்ளாமல் ஒதுங்கிக் கொள்வார். இது அவர்படைப்பின் பாணி.

ஒரு தமிழ்வாசகன் புதுமைப்பித்தன் எழுத்துக்களுக்குள் எளிதில் நுழைந்து படைப்பை அனுபவிக்க முடிவதற்கு அவரின் விசேடமான கதைசொல்லும் முறையே ஒரு முக்கிய காரணம். தொன்ம வேர்முடிச்சுகளால் காப்பாற்றப் படும் இந்தியமரபு இழையோடும் மொழியும் கதையாடலுமே புதுமைப் பித்தன் கதைகளின் தனித்தன்மை. இந்தியத் தொன்ம இதிகாச மரபுகளும் சைவத் தமிழ் மரபும் கலந்து புதுமைப்பித்தனின் எழுத்துலகை ஆட்சி செய்வது வாசகர் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்தது.

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...