திங்கள், 31 மே, 2010

புதுமைப்பித்தனின் அகலிகைத் தொன்மம் -பகுதி-1

யார் இந்த புதுமைப்பித்தன்?

பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி - 8.

புதுமைப்பித்தன் தம் படைப்புகள் குறித்து சொன்ன வாசகங்களோடு கட்டுரையைத் தொடங்குவோம்.விமர்சகர்களுக்கு ஒரு வார்த்தை. வேதாந்திகள் கைக்குள் சிக்காத கடவுள் மாதிரிதான் நான் பிறப்பித்து விட்டவைகளும் அவை உங்கள் அளவுகோல்களுக்குள் அடைபடாதிருந்தால் நானும் பொருப்பாளியல்ல, நான் பிறப்பித்து விளையாட விட்டுள்ள ஜீவராசிகளும் பொறுப்பாளியல்ல. உங்கள் அளவுகோல்களைத்தான் என் கதைகளின் அருகில் வைத்து அளந்து பார்த்துக்கொள்ளுகிறீர்கள் என்று உங்களுக்குச் சொல்லிவிட விரும்புகிறேன். (பதி.ஆ. வேங்கடாசலபதி, புதுமைப்பித்தன் கதைகள், ப. 780)என்று புதுமைப்பித்தன் தன்படைப்புகள் குறித்து விமர்சகர்களுக்கு சொன்ன எச்சரிக்கையோடு அவரின் படைப்புகளை அணுகுவது பொருத்தமாயிருக்கும்.

இருபதாம் நூற்றாண்டு இலக்கிய வரலாற்றில் - சிறுகதை வரலாற்றில் தனக்கென ஒரு தனியிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ள புதுமைப்பித்தனைத் தூய கலை இலக்கியவாதிகளும் சோசலிச யதார்த்தவாதிகளும் ஒருசேரச் சொந்தம் கொண்டாடுவது புதுமை. இதுவே அவர் படைப்புகளின் சூட்சுமம். புதுமைப்பித்தன் எந்தக் கூண்டுகளிலும் சிக்கிக் கொள்ளாதவர். அவர் படைப்புகள் சோசலிசம், பெரியாரியம், காந்தியம், சித்த தத்துவம் எல்லாம் பேசும், அதே சமயம் அவற்றைக் கிண்டலடிக்கவும் செய்யும்.

சொ.விருத்தாசலம் என்ற இயற்பெயருடைய புதுமைப்பித்தன் வேறு பல புனைபெயர்களிலும் பத்திரிக்கைகளுக்கு எழுதியுள்ளார். சோ.வி., வே.கந்தசாமிக் கவிராயர், ரசமட்டம், கூத்தன், நந்தி, கபாலி, சுக்ராச்சாரி என்பன அவரின் சில புனைபெயர்கள். நூற்றுக்கும் மேற்பட்ட சொந்தச் சிறுகதைகள் படைத்ததோடு மட்டுமின்றி சுமார் நூறு மொழிபெயர்ப்புச் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள், குறுநாவல், திரைப்பட உரையாடல் என்று இலக்கியத்தில் பல துறைகளிலும் தம் படைப்புகளை உருவாக்கியவர் புதுமைப்பித்தன்.

புதுமைப்பித்தன் தன் கதைகளின் பொதுத்தன்மை நம்பிக்கை வறட்சி என்று சொல்லிக்கொண்டார், அதற்குக் காரணம் அவரின் வாழ்க்கைப் பின்னணி. அவரின் நம்பிக்கை வறட்சி மனிதர்கள் உண்டாக்கிய தர்மங்கள் குறித்ததாயிருந்தது. சாமான்ய மனிதர்களின் நடைமுறை வாழ்க்கையும் அவற்றின் அவலங்களும் அவரின் சிறுகதைகளில் அதிக இடங்களைப் பிடித்தன. சமூகத்தின் மீதான புதுமைப்பித்தனின் கோபமே, அவர் படைப்புகளில் கேலியாக, கிண்டலாக, நையாண்டிகளாக வெளிப்பட்டன. எத்தகைய அறங்களின் மீதும் தமக்கு நம்பிக்கையில்லை என்பதுபோல் அவர் காட்டிய பாசாங்கெல்லாம் சமூகம் குறித்த அவரின் எதிர்வினையே.

புதுமைப்பித்தன் ஆங்கில வழியில் உலகின் பலமொழிப் புனைகதைகளைக் கற்றார். தமிழிலும் உயர்ந்த தரத்தில் சிறுகதைகளைப் படைக்க விரும்பி ஒவ்வொரு சிறுகதையையும் ஒரு சோதனை முயற்சி போல் செய்து பார்த்தார். அதனால்தான் அவர் கதைகள் எதுவும் ஒன்று போல் மற்றொன்று இருப்பதில்லை. தம்முடைய கதைகளை வெறும் சுவாரஸ்யத்திற் காகவோ கருத்துப் பிரச்சாரத்துக்காகவோ அவர் படைக்கவில்லை. புதுமைப்பித்தனின் ஒவ்வொரு கதையும் ஒரு பிரச்சனையைப் பேசும். பாத்திரங்களையோ, பிரச்சினைகளையோ மோதவிட்டுவிட்டுத் தன்னை இனங்காட்டிக் கொள்ளாமல் ஒதுங்கிக் கொள்வார். இது அவர்படைப்பின் பாணி.

ஒரு தமிழ்வாசகன் புதுமைப்பித்தன் எழுத்துக்களுக்குள் எளிதில் நுழைந்து படைப்பை அனுபவிக்க முடிவதற்கு அவரின் விசேடமான கதைசொல்லும் முறையே ஒரு முக்கிய காரணம். தொன்ம வேர்முடிச்சுகளால் காப்பாற்றப் படும் இந்தியமரபு இழையோடும் மொழியும் கதையாடலுமே புதுமைப் பித்தன் கதைகளின் தனித்தன்மை. இந்தியத் தொன்ம இதிகாச மரபுகளும் சைவத் தமிழ் மரபும் கலந்து புதுமைப்பித்தனின் எழுத்துலகை ஆட்சி செய்வது வாசகர் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்தது.

கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...