புதன், 13 மே, 2020

ஊடக விளம்பரங்களும் நுகர்வுப் பண்பாடும்


முனைவர் நா.இளங்கோ
தமிழ்ப் பேராசிரியர்
புதுச்சேரி-8


நுகர்வுப் பண்பாடு என்பது மேலும் மேலும் கூடுதலான அளவில் பொருள் மற்றும் சேவைகளை நுகர்வதை மிகுவிக்கச் செய்யும் பொருளாதாரம் சார்ந்த ஒரு வாழ்வியல்  முறைமை ஆகும். ஒரு நாட்டின் பொருளாதார நலன் அந்நாட்டு மக்களின் நுகர்வுப் பண்பாட்டை நம்பியே உள்ளது என்ற கருத்தாக்கம் சந்தைப் பொருளாதாரத்தின் தாரக மந்திரமாகும்.
நுகர்வுப் பண்பாடு, தேவைக்கும் /தேவைக்கு அதிகமாகவும் பொருள் மற்றும் சேவைகளை நுகர்வதை நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பு, தொழில் உற்பத்தித் துறை, சேவை மையத் தொழில் வாய்ப்புகள், விளம்பரங்கள், ஊடகங்கள் இவற்றின் ஊடாகச் சாத்தியப்படுத்துகின்றன. தொழில் புரட்சிக்குப் பிந்தைய உற்பத்திப் பெருக்கத்திற்கும் பெரு முதலாளித்துவ சமூகக் கட்டமைப்பின் ஆக்கத்திற்கும் நுகர்வுப் பண்பாடே உந்துசக்தியாக விளங்குகின்றது.
தனிமனித மதிப்பீடுகள் தொடங்கி சமூகத்தில் மனிதர்களின் அல்து குடும்பத்தின் அடையாளம் எனப் பல தளங்களில் நுகர்வுப் பண்பாடு தன் வீச்சினை வெளிப்படுத்தி நிற்கின்றது. ஒருவரின் வெற்றியும் மகிழ்ச்சியும் அவர் எவ்வளவு பொருட்களை வாங்கிக் குவிக்கிறார் எவ்வளவு சேவைகளை நுகர்கிறார் என் மதிப்பீட்டில் பெரிதும் தங்கி இருக்கின்றன. ஒருவரின் அடையாளம் அவர் இல்லத்தில் நிறைந்து கிடக்கும் பிரிட்ஜ், வாஷிங் மெஷின், தொலைக்காட்சிப் பெட்டி, ஹோம் தியேட்டர், குளிர்சாதனப் பெட்டி, கார், மோட்டார் சைக்கிள், கணினி, செல்போன் முதலான நுகர்பொருட்களிலும் சுற்றுலா, அயல்நாட்டுப் பயணம் முதலான விடுமுறைக் கொண்டாட்டங்களிலும் காதுகுத்து, மஞ்சள் நீர், திருமணம், வளைகாப்பு முதலான இல்லத்தின் விழா ஆடம்பரங்களிலுமே பெரிதும் தங்கி இருக்கிறது என நாம் நம்புகிறோம். இவை அனைத்துமே பொருள் மற்றும் சேவை நுகர்வோடு தொடர்புடையன என்பதனை நாம் கருத்தில் கொள்ளுதல் வேண்டும். இத்தகைய நுகர்வுப் பண்பாடே சமூகத்தின் முதன்மைப் பண்பாடாக மாறியிருக்கிறது.
நுகர்வுப் பண்பாடு பொதுவாக ஒரு சமூகத்தின் கூட்டு உற்பத்தித் திறனையும் தனிமனிதர்களின் உற்பத்தி மற்றும் பணித் திறன்களையும் தேவையற்றனவாக மாற்றி இல்லங்களை நுகர்வு முனையங்களாக மாற்றுகிறது. இல்லம் சார்ந்த சமையல், தைத்தல், துணி துவைத்தல், விளையாட்டுக்கள், குழந்தை வளர்ப்பு, கல்வி, வீட்டுத் தோட்டம், கைத்தொழில்கள், வீட்டு மருத்துவம் போன்றவை கொஞ்சம் கொஞ்சமாகக் காலாவதியாகி வழக்கொழிந்து போவதும் எதையும் எப்பொழுதும் பொருளாயினும் சேவையாயினும் விலைகொடுத்து வாங்கிவிட முடியும் என்ற மனப்பாங்கு மேலோங்குவதும் இதன் வெளிப்பாடே ஆகும். மேலும் விலைகொடுத்து வெளியில் இருந்து எதையும் வாங்கிக் கொள்வது இலகுவானதாகவும் நேரச் சேமிப்பாகவும் கருதப்படுகின்றது.
நுகர்வுப் பண்பாடும் மத்தியதர வர்க்கமும்:
பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியுள்ள ஏழை, எளிய மக்களின் வாழ்வியல் தேவைகள் மிக எளிமையானவை. உணவு, உடை, இருப்பிடம், உடல்நலம் மற்றும் எளிமையான பொழுதுபோக்கு சார்ந்த அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்து கொள்வதிலேயே அவர்கள் முழுநிறைவு அடைந்து விடுகின்றனர். பெரும்பாலும் உள்ளூரில் தயாராகிக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே அவர்கள் தமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கின்றனர்.
பொருளாதார நிலையில் மிக வளவான வாழ்க்கை வாழும் உயர்குடி மக்களின் நிலைமை வேறு. அவர்கள் தங்கள் தேவைகளின் அடிப்படையில் பொருட்கள் மற்றும் சேவைகளை நுகர்வதற்குப் பதிலாக விருப்பம் அல்லது ஆசையின் அடிப்படையில் பொருட்களை வாங்கிக் குவிக்க முற்படுகிறார்கள். இதில் சமூக அந்தஸ்து முதன்மை இடத்தைப் பிடிக்கின்றது.
பொருளாதார நிலையில் இடைத்தரத்தில் உள்ள மத்தியதரக் குடும்பங்களின் நிலைதான் மிகவும் சிக்கலானது. தேவைகளுக்கும் ஆசைக்கும் இடையில் உழல்பவர்கள் இவர்கள். இவர்களின் ஆசைகள் திடீர் ஆசைகளாக மட்டுமல்லாமல் நீண்டநாள் ஆசைகளாகவும் தொடர்கின்றன. வருவாய் – சேமிப்பு – தேவை - பொருள் நுகர்வு என்ற இயல்பான வரிசையில் இவர்களின் நுகர்வு வாழ்க்கை அமையும்வரை சிக்கல்கள் ஏதுமில்லை. மாறாக வருவாய் – நீண்டநாள் ஆசை – கடன் – தவணைமுறை – பொருள் நுகர்வு என இன்றைய மத்திரதரக் குடும்பங்களின் நுகர்வு வாழ்க்கை முன்பின்னாக நெளிந்து கிடக்கின்றது. பொருட்களை வாங்கிக் குவிப்பதின் பின்னணியில் தனிமனித அல்லது குடும்பத்தின் மகிழ்ச்சி என்பதனைக் காட்டிலும் தம்மைச் சுற்றியுள்ளவர்களின் மத்தியில் தமது அந்தஸ்தை நிலைநாட்டும் ஒருவகைப் பதட்டமே இவர்களிடம் மேலோங்கியுள்ளது. குறிப்பிட்ட பொருளைப் வாங்காமல் போனால் மற்றவர் முன்னால் எங்கே நாம் தரம் தாழ்ந்துபோய் விடுவோமோ என்ற தாழ்வுணர்ச்சியே பொருட்களை வாங்கு! வாங்கு! எப்படியாவது வாங்கு! கடன் பட்டாவது வாங்கு எனத் தூண்டுகிறது.
ஊடகங்களும் விளம்பரங்களும்:
இன்றைய உலகம் ஊடக உலகம். இந்த ஊடக உலகின் மிகப் பெரிய பலமும் பலஹீனமும் விளம்பரங்கள்தாம். குறிப்பாக அச்சு ஊடகங்களும் மின் ஊடகங்களும் விளம்பரங்கள் இல்லையென்றால் இயங்கவே முடியாது என்று சொல்லுமளவிற்கு விளம்பரங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஒருவகையில் இந்த ஊடகங்களின் வாழ்வாதாரமே விளம்பரங்களை நம்பித்தான் உள்ளன. பொருளாதார ரீதியில் விளம்பரங்களைச் சார்ந்தே ஊடகங்கள் இயங்க வேண்டிய கட்டாயத்திலிருப்பதால் ஊடகங்கங்களால் விளம்பரங்கள் உயிர்வாழும் நிலைமை தலைகீழாகி விளம்பரங்களால் ஊடகங்கள் உயிர்வாழ்கின்றன. விளம்பரங்களின் இந்த அதீத பலத்திற்கு ஆதாரம் விளம்பரங்களால் திட்டமிட்டு உருவாக்கப்படும் நுகர்வுப் பண்பாடே.. தம்மால் உருவாக்கப்படும் நுகர்வுப் பண்பாட்டால் கொழுக்கும் இவ்விளம்பரங்கள் தமக்கு இடமளிக்கும் ஊடகங்களையும் தின்று கொழுத்து அசுர வளர்ச்சி பெற்றுவருகின்றன.
ஊடகங்கள் பணக்கார மேட்டுக்குடி மக்களின் ஆடம்பரப் பொருட்களை, இன்றைய வாழ்வின் அத்தியாவசியத் தேவையாக விளம்பரப்படுத்தி அப்பொருட்களை வாங்குமாறு உழைக்கும் எளிய மக்களைத் தூண்டுகிறது. இதன் மூலம் பொருட்களுக்கான செயற்கையானத் தேவையை உலகமயம் தானே வலிந்து உருவாக்குகின்றது. அது மட்டுமல்லாமல் நாட்டு எல்லைகளைக் கடந்து ஆதிக்கம் செலுத்தும் பெரும் நிதி மூலதனத்துடன் இயங்கும் பன்னாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்கள் தான் உலகத்தரமானவை என்றும் அந்தந்த மண்ணில் அம்மண்ணின் மக்களே தங்களின் பாரம்பரிய முறைகளைக் கையாண்டு தயாரிக்கும் பொருட்கள் தரமற்றவை என்றும் உலகமயம் தானே உருவாக்கி வைத்திருக்கிற சில தர நிர்ணய அமைப்புகளைக் கொண்டு பரப்புரையும் மேற்கொள்கிறது. மக்களிடம் பொருட்கள் வாங்க வேண்டும் என்ற நுகர்வு வெறியைக் கட்டமைக்கும் ஊடகங்கள் பணமே உலகம், பணம் இருந்தால் உலகத்தில் எதையும் வாங்கலாம் என்ற நுகர்வுப் பண்பாட்டு உளநிலையில் மக்களை மனங்களைக் கட்டமைக்கிறது.
ஊடகம், விளம்பரம், நுகர்வோர்:
ஊடகங்கள் செயல்படப் பணம் தேவை. மாறிவரும் இன்றைய ஊடகத் தொழில்நுட்ப வளர்ச்சிச் சூழலில் ஊடகங்கள் மிகச்சிறப்பாகச் செயல்பட்டுப் போட்டிகளைச் சமாளித்து வாசகர்கள்/ நேயர்கள்/ பார்வையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமென்றால் பணம் தேவை. ஊடகங்கள் தயாரிப்புச் செலவைச் சமாளித்து அதனை நுகர்வோர் மேல் திணிக்காமல் நிலைத்து இயங்க வேண்டுமென்றால் பணம் தேவை. இந்நிலையில் ஊடகங்கள் நம்பியிருப்பதும் சார்ந்திருப்பதும் விளம்பரங்களைத்தாம். இந்த விளம்பரங்களை ஊடகங்களுக்கு வழங்குபவை பன்னாட்டு, உள்நாட்டுத் தொழில் நிறுவனங்களே. எனவே திட்டமிட்டோ திட்டமிடாமலோ இந்தத் தொழில் நிறுவனங்கள் ஊடகங்களின் மீது ஆதிக்கம் செலுத்துவது தவிர்க்க முடியாததாகிறது. விளைவு, தொழில் நிறுவனங்களின் அதாவது வெளிநாட்டு, உள்நாட்டு, பன்னாட்டுத் தொழிலதிபர்களின் நலம் நாடுவதே ஊடகங்களின் பணியாகிறது. தொழிலதிபர்களின் நலன், பொருள் உற்;பத்திவிற்பனைஇலாபம் - கொள்ளை என்ற நுகர்வுப் பண்பாட்டுப் பெருக்கத்தில் உள்ளது. ஊடக விளம்பரங்கள் இந்த மகத்தான பணியைத்தான் மிகநுட்பமாகச் செயல்படுத்துகின்றன. இத்தகு நுகர்வோர் பண்பாட்டுக்கான இலக்கு உயர்மத்தியத் தர வகுப்பினர்களே. இவர்களே ஊடகங்களின் பெரும்பான்மை வாசகர்கள்/ பார்வையாளர்கள். மிக எளிதில் வாழ்க்கை மதிப்பீடுகளை மாற்றிக் கொள்ளும் நெகிழ்ச்சிப் போக்காளர்களும் இவர்களே. உயர்மத்தியத் தர வகுப்பினர்களை நம்பித்தான் ஊடகம், விளம்பரம், நுகர்வோர் பண்பாடு, பொருளுற்பத்தி, விற்பனை, இலாபம், பணப் புழக்கம், முதலாளிகளின் நலன் என்ற சுழற்சிச் சக்கரம் சுழன்று கொண்டிருக்கின்றது.
நுகர்வுப் பண்பாடு:
பொருள்களை வாங்கிக் குவிக்க வேண்டும் என்ற பெருவிருப்பே நுகர்வுப் பண்பாட்டின் அடையாளம். நமக்கு எது எது தேவை? எவையெவை தேவையில்லை என்ற தெளிவில்லாமல், விளம்பரம் செய்யப்படும் அனைத்துமே நமக்குத் தேவை என்று எண்ணும் ஆசை மனம். இன்றைக்கு உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் அனைத்துப் பொருட்களுமே மக்களின் தேவை கருதி உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக நினைப்பது சரியல்ல. மாறாக உற்பத்தி செய்யப்பட்டு அங்காடிக்கு வந்துள்ள பொருட்களின் அடிப்படையிலேயே நம்முடைய தேவைகள் நிர்ணயிக்கப்படுகின்றன என்பதுதான் உண்மை. சான்றாக, சுத்திகரிக்கப்பட்ட பாதுகாப்பான குடிநீர் என்ற அறிமுகத்தோடு பாட்டிலில் அடைத்து ஒரு லிட்டர் 15 ரூபாய் வரை விற்கப்படும் மினரல் வாட்டர். இன்று மினரல் வாட்டர் குடிப்பதே பாதுகாப்பானது, ஆரோக்கியமானது என்பதே பொது நியதி ஆக்கப்பட்டு விட்டது. பாட்டிலில் அடைத்து விற்கப்படும் மினரல் வாட்டர் பாதுகாப்பானதா? ஆரோக்கியமானதா? என்றால் இல்லை என்பதுதான் மிகப்பெரிய சோகம். அது ஒரு புறமிருக்கட்டும். மினரல் வாட்டர் பாட்டில்கள் மக்களின் தேவை கருதி உருவாக்கப்பட்டதா? அல்லது உற்பத்தியாகி விற்பனைக்கு வந்தபிறகு நம்முடைய தேவை நிர்ணயிக்க அல்லது நிர்பந்திக்கப்பட்டதா? என்று பார்த்தால் உற்பத்தி, விற்பனை, விளம்பரம் என்ற தொடர்ச்சியிலேயே அவை நம்மீது திணிக்கப்பட்டது என்பதுதான் உண்மை. நுகர்வோர் மனதில் தூய்மை, சுகாதாரம், ஆரோக்கியம் என்று கட்டப்பட்ட புனைவுகள் நுகர்வுப் பண்பாட்டின் பண்பு.
நுகர்வுப் பண்பாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருளின் தரத்தைவிட அதன் வடிவமைப்பு, பேக்கிங், மிகுத்துச் சொல்லப்படும் வாக்குறுதிகள், விளம்பரப்படுத்தும் பிரபலம் இவைகளே முக்கியத்துவம் பெறுகின்றன. கிரிக்கெட் வீரர்களும் சினிமா நடிகர் நடிகைகளும் தோன்றி விளம்பரம் செய்யும் பொருள்கள் அதிகம் விற்பனைகின்றன. தரமான பொருள்களுக்குத்தான் அவர்கள் விளம்பரம் செய்வார்கள் என்பதா உண்மை? எந்த நிறுவனம் அதிகக் கோடிகளைக் கூலியாகத் தருகிறதோ அந்த நிறுவனப் பொருள்களைத் தானே அவர்கள் விளம்பரம் செய்வர். இதை நாம் தெரிந்திருந்தும் உணராமலிருக்கிறோமே அதுதான் நுகர்வுப் பண்பாட்டின் பண்பு.
சந்தையில் அறிமுகமாகும் புதிய பொருள் எது? எது வாங்கினால் எது இலவசம்? எந்தப் பொருளுக்கு எவ்வளவு தள்ளுபடி? முதலான நுகர்வுப் பண்பாட்டுத் தகவல்களை ஊடகங்கள் நம்மீது வாரி இறைக்கின்றன. அந்தத் தகவல்களைச் சுமந்து கொண்டுதான் ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் உலகைப் பார்க்கிறார்கள். புதிதாகச் சந்தையில் அறிமுகமாகும் பொருள்கள், முன்பே அறிமுகமான பொருள்களுக்கான புதிய மாடல்கள், மேம்படுத்தப்பட்டதாக வாக்குறுதியளிக்கப் பட்ட பழைய பொருள்கள் போன்றவை விளம்பரப் படுத்தப்படும்போது நுகர்வோரிடத்தில் ஒருவகைப் பதற்றம் தொற்றிக் கொள்கிறது. புதியதை வாங்கும்வரை சமூக அந்தஸ்தில் பிறருக்குப் பின்தங்கி விட்டோமோ என்ற குற்ற உணர்ச்சிக்கு நுகர்வோர் ஆளாகிவிடுகின்றனர். பொருள்களை வாங்கும் ஆசையிருந்தும் வாங்க வசதியில்லாதவர்கள் ஒருவிதமான தாழ்வுணர்ச்சிக்கு ஆளாகிறார்கள். தேவை, ஆசை இரண்டும் சமனற்ற முரணிலேயே வாழ்க்கையைப் நிறுத்திவைக்கிறது நுகர்வுக் கலாச்சாரம். உண்மையில் விளம்பரங்கள் முன்னிறுத்தும் மகிழ்ச்சியான குடும்பம் என்பது ஒரு கற்பனையே.
விளம்பரங்கள் நுகர்வோரிடம் எதை விற்கின்றன?
நாம் தினம் காலையில் ஏதோ ஒரு பிரஷ்ஷால் ஏதோ ஒரு பற்பசை கொண்டு பல் துலக்குகிறோம். ஏன்? எங்கே போயின நம் பல் குச்சிகள்! குளிக்கும்போது தலையைச் சுத்தம் செய்ய ஏதோ ஒரு ஷாம்புவைக் கொண்டு குளிக்கிறோம். ஏன்? எங்கே போயிற்று நம் சீகைக்காய்!. தாகமாயிருக்கிறதா? ஏதோ ஒரு பன்னாட்டு நிறுவனக் குளிர்பானத்தைக் குடிக்கிறோம். ஏன்? எங்கே போயிற்று நம் நீராகாரமும், இளநீரும்! இப்படியே காப்பி, டீ, பூஸ்ட் இன்னும் எத்தனை எத்தனையோ! இவையெல்லாம் நம் வாழ்வின் அங்கங்கள் ஆயினமை எப்படி?
ஒரு குறிப்பிட்ட பற்பசையைப் பயன்படுத்தச் சொல்லி விளம்பரப் படுத்தியது விளம்பரம். ஆனால் நமது மரபான பல்துலக்கும் பழக்கத்திலிருந்து நம்மைப் பற்பசைகளுக்கும் பிரஷ்களுக்கும் மாற்றிய மனோநிலையை விற்பனை செய்தவை விளம்பரங்கள். குறிப்பிட்ட ஷாம்புவை விளம்பரப்படுத்தியது விளம்பரம். ஆனால் ஏதேனும் ஒரு ஷாம்பு போட்டுத்தான் தலைக்குக் குளிக்க வேண்டும் என்ற மனநிலையை விற்பனை செய்தவை விளம்பரங்கள். அதேபோல் ஒரு குறிப்பிட்ட டீ யைக் குடிக்கச் சொல்லி விளம்பரப்படுத்தியது விளம்பரம். ஆனால் டீயோ, காப்பியோ ஏதோ ஒன்றைக் குடித்தே தீரவேண்டுமென்ற மனநிலையை விற்பனை செய்தவை விளம்பரங்கள்.
உடல் நலமில்லாத ஒருவரைப் பார்க்கச் செல்லும் பலர் ஹார்லிக்ஸ் வாங்கிச் செல்கின்றனர். ஹார்லிக்ஸ் வாங்கிச் செல்லும்படி பிறரால் அறிவுறுத்தப்படுகின்றனர். நோயாளிக்குப் பிறர் ஹார்லிக்ஸ் குடிக்க ஆலோசனை கூறுகிறார்கள். இதெல்லாம் எப்படிச் சாத்தியமாயிற்று? இனிப்பு கலந்த சோளமாவு, ஊட்டச் சத்துமிக்க பானமானது எப்படி? விளம்பரம் செய்த விந்தை இது. ஆழ்மனம் வரை ஊடுருவிச் சென்று அரியாசனமிட்டு அமர்ந்துகொண்டன விளம்பரங்கள் விற்பனை செய்த கருத்தாக்கங்கள்
நுகர்வோருக்கு விளம்பரங்கள் தரும் இலவசம்:
விளம்பரங்களின் முழுமையான அரசியல் அது செய்யும் விளம்பரங்களில் இல்லை. மாறாக விளம்பரங்கள் விற்பனை செய்யும் நுகர்வோர் பண்பாட்டு மனோநிலையில்தான் உள்ளது. இந்தியா ஒரு விவசாய நாடு. இந்திய மக்கள் தொகையில் 70 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் விவசாயத்தையே நம்பியுள்ளனர். இந்நாட்டில் வறுமைக் கோட்டிற்கும் கீழே வாழும் மக்கள் 30 விழுக்காட்டிற்கும் மேல். இந்தியர்களில் பலருக்கு மூன்றுவேளை உணவு என்பதே பெருங்கனவு. அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதாரம், இருப்பிடம், உணவு, உடை போன்றவைகள் இன்னும் இந்தியர்களுக்கு முழுமையாகக் கிடைத்து விடவில்லை. 130 கோடி மக்கள் தொகையுள்ள இந்தியத் திருநாட்டின் யதார்த்த நிலைமை இப்படியிருக்க, நம் ஊடக விளம்பரங்கள் சித்தரித்துக் காட்டும் வாழ்க்கை உண்மையில் யாருடைய வாழ்க்கை?
விளம்பரங்கள் உருவாக்கும் கனவு வாழ்க்கையும் மேற்கத்திய கருத்தாக்கங்களும், போலியான மதிப்பீடுகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இத்தகு புதிய கருத்தாக்கங்களும் மதிப்பீடுகளும் நுகர்வோராகிய நம் மனதில் ஆழப்பதிந்து பல்வேறு உளச் சிக்கல்களுக்கும் வாழ்க்கைச் சிக்கல்களுக்கும் நம்மை ஆளாக்குகின்றன. இந்தப் புதிய கருத்தாக்கங்களும் மதிப்பீடுகளும்தாம் விளம்பரங்கள் நமக்கு இலவசமாய் வழங்கியவை.
இந்த இலவசங்களில் முக்கியமானவை பாலியில் சார்ந்த மதிப்பீடுகள். அழகு, கவர்ச்சி குறித்த புதிய சித்தாந்தங்கள். சிவப்பாயிருப்பதும், ஸ்லிம் என்ற மெல்லிய தேகமும், நீண்ட அடர்த்;தியான பட்டுப்போன்ற கூந்தலுமே அழகு. தமிழகத்தில் சிவப்பழகுக் கிரீமைத் தெரிந்துகொள்ளாதவர் அபூர்வம். இந்த அழகுகள் எல்லாம் ஓரிரு நாட்களில் ஒரு பாக்கெட் கிரீம், ஷாம்பு போன்றவைகளால் சாத்தியமாகும் என நம்பவைக்கின்றன விளம்பரங்கள். இத்தகு விளம்பரங்கள் பொருளை மட்டும் விற்கவில்லை. அழகு குறித்த புதிய சித்தாந்தங்களையும் விற்கின்றன. முழுக்க முழுக்க உடலுழைப்பு சார்ந்த, அழுக்கும் வியர்வையும் கொண்ட உண்மையான இந்தியக் கிராமியப் பெண்களுக்கும் இவ்வகை விளம்பரங்களுக்கும் உள்ள முரணை உணர்ந்தால் விளம்பரங்களின் அரசியல் புரியும்.
ஆண்களின் சாதனையே பெண்களை வசீகரிப்பதில்தான் உள்ளது என்பதாக விளம்பரங்கள் சித்தரிக்கின்றன. குறிப்பிட்ட ஷேவிங் கிரீம், ஜட்டி, வாசனை திரவியங்கள், பற்பசை போன்றவற்றைப் பயன்படுத்தும் ஆடவர்களைப் பெண்கள் மொய்த்துக் கொள்வார்கள், விரும்புவார்கள், உடன்படுவார்கள் என்பதாக விளம்பரங்கள் சொல்கின்றன. ஆண்களின் பார்வையில் உருவாக்கப்படும் இவ்வகை விளம்பரங்கள் பெண்களைக் கொச்சைப் படுத்துவதோடு பாலியல் ஈர்ப்பு குறித்த பிழையான மதிப்பீடுகளையும் நம்மிடம் திணிக்கின்றன.
விளம்பரங்கள் பாலியல் ரீதியில் எவ்வளவுதான் புதிய கருத்தாக்கங்களோடும் மேற்கத்திய மதிப்பீடுகளோடும் படைக்கப்பட்டாலும் பெண் குறித்த நமது பழைய சித்தாந்தங்களை விளம்பரங்கள் ஒருபோதும் மாற்றிக் கொண்டதில்லை. நமது விளம்பரங்களில் பெண்கள் எப்போதும் துணிதுவைத்து, சமைத்து, குழந்தைகளைப் பராமரித்து, நாப்கின் தேர்ந்தெடுத்து, அலங்கரித்துக் கொண்டு, கணவன் மெச்ச வாழ்கிறார்கள். ஆணாதிக்கச் சமூகத்தின் பார்வையில் பெண் ஒரு அழகுப்பதுமை, சுகம் தரும் கவர்ச்சிப் பொருள் மற்றொரு கோணத்தில் சேவை செய்யும் அடிமை, பணிப்பெண் என்பதாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது. புதிய விளம்பரங்களும் பழைய சித்தாந்தங்களை மீறாமல் கட்டிக் காப்பாற்றுகின்றன.
முடிப்பாக:
130 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியநாடு பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளுக்குக் கிடைத்த மிகப்பெரிய சந்தை. முயற்சி செய்தால் இந்தியர்களிடம் எதையும் விற்கலாம் என்பதைப் பொருள் உற்பத்தியாளர்களும் விற்பனையாளர்களும் கண்டுகொண்டார்கள். இல்லையென்றால் அதிகத் தூசு, புழுதிக்கு வாய்ப்பில்லாத குளிர் நாடுகளில் மட்டுமே செல்லுபடியாகும் வாக்குவம் கிளீனர்களை இந்தியா போன்ற அதிகத் தூசு, புழுதி மண்டிய வெப்பமண்டல நாட்டில் விற்க முடியுமா? முடிகிறதே! உங்க வீட்டில் டேபிள் மேட் இல்லையா? உடனே இந்த்த் தொலைபேசி எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுங்க என்று கேட்டு கேட்டு எதையும் விற்கமுடிகிறதே! ஆமேசான் காடுகளில் கிடைக்கும் அரியவகை மூலிகை எது என்று சொல்லாமலே முடி வளர்க்கும் தைலத்தை எவ்வளவு விலைக்கு வேண்டுமானாலும் விற்க முடிகிறதே! சக்திவாய்ந்த விளம்பரத்தின் மூலம் இந்திய நுகர்வோரிடம் எதையும் விற்க முடியும் என்பதுதானே இதன் பொருள்.
விளம்பரங்கள் நமக்கு எதிரிகள் இல்லை. இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாட்டில் விளம்பர வருவாய் மட்டும் இல்லையென்றால் ஊடகங்கள் இத்தனை மலிவாக நமக்குக் கிடைக்க வழியில்லை. பத்திரிக்கைகள் 1 ரூபாய், 2 ரூபாய்க்குக் கிடைப்பதும், 24 மணி நேரமும் தொடர்ந்து பல பண்பலை வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டு ரசிப்பதும் 100 ரூபாய் செலவில் 100க்கும் மேற்பட்ட தொலைக்காட்சிச் சேனல்களைக் கண்டு களிப்பதும் விளம்பரங்களால் மட்டுமே சாத்தியமாயிருப்பது உண்மை. சந்தையில் வந்து குவியும் பொருட்களைத் தெரிந்து கொள்ளவும் தேர்ந்தெடுக்கவும் விளம்பரங்களே நமக்கு உற்றதுணை. என்றாலும் விளம்பரங்களிடத்தில் நாம் எப்பொழுதும் விழிப்பாயிருக்க வேண்டும். பொருட்களைப் போலவே வாழ்க்கையையும் வாங்கிவிடலாம் என்று நுகர்வோரிடம் விளம்பரங்கள் சொல்லாமல் சொல்கின்றன. நம் வாழ்க்கை நமக்கானது, அதை ஒருபோதும் விலைகொடுத்து வாங்கமுடியாது.
nagailango@gmail.com

தொல்காப்பியத்தில் நாட்டுப்புற இலக்கியப் பதிவுகள்


முனைவர் நா.இளங்கோ
தமிழ்ப் பேராசிரியர்
தாகூர் அரசு கலை அறிவியல் கல்லூரி
புதுச்சேரி -8



பாணர் மரபிலிருந்து விடுபட்டுப் பாடல் என்பது பிரக்ஞை பூர்வமான ஒரு புலமைத் தொழிற் பாடாகக் கருதப்படும் நிலையிலேயே தொல்காப்பியம் தோன்றியுள்ளது. -கார்த்திகேசு சிவத்தம்பி

பண்ணத்தி இது தொல்காப்பியம் சுட்டும் இலக்கிய வடிவங்களுள் ஒன்று. பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் என்னும் ஏழு வடிவங்களையும் யாப்பின் வழியது என்றுரைத்த தொல்காப்பியர் தொடர்ந்து நான்கு நூற்பாக்களில் பண்ணத்தி எனும் வடிவத்தை விளக்குகின்றார்.
பாட்டிடைக் கலந்த பொருள வாகிப்
பாட்டின் இயல பண்ணத் திய்யே                                              (செய்யுளியல் -173)
அதுவே தானும் பிசியொடு மானும்.                                    (செய்யுளியல் -174)
அடிநிமிர் கிளவி யீரா றாகும்.                     
அடியிகந்து வரினும் கடிவரை யின்றே                              (செய்யுளியல் -175)
175 ஆம் நூற்பாவின் முதலடியினை ஒரு நூற்பாவாகவும் இரண்டாமடியினை மற்றொரு நூற்பாவாகவும் கொள்வர் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும்.
பொதுநிலையில் செய்யுட்களைப் பற்றிச் சொல்லி வரும் தொல்காப்பியர், செய்யுளியலில் அடிவரையறை யில்லாத செய்யுட்கள் இன்னவை என்று கூறுமிடத்து,           
பாட்டு, உரை, நூலே, வாய்மொழி, பிசியே,
அங்கதம், முதுசொல், அவ் ஏழ் நிலத்தும்,
வண் புகழ் மூவர் தண் பொழில் வரைப்பின்
நாற் பெயர் எல்லை அகத்தவர் வழங்கும்
யாப்பின் வழியது என்மனார் புலவர்”.                                    (செய்யுளியல் -75)

எழுநிலத்து எழுந்த செய்யுள் தெரியின
அடிவரை இல்லன ஆறென மொழிப                                    (செய்யுளியல் -157)
என்கிறார்;. “அகமும் புறமுமாகிய எழுநிலத்தும் தோன்றிய செய்யுளை ஆராயின் அடிவரை யின்றி வரும் இலக்கணத்தன ஆறாம் என்றவாறுஎன்பது பேராசிரியர் உரை.

தொடர்ந்து அடிவரையறை யுள்ள செய்யுட்களின் இலக்கணத்தை விரித்துக் கூறிவந்த தொல்காப்பியர், பின்னர் அடிவரையறை இல்லாத இலக்கிய வகைகள் இன்னவை என்று பட்டியலிடும் பொழுது ஆறென மொழிப என்கிறார்.
                                அவைதாம்
                                நூலி னான, உரையி னான,
                                நொடியொடு புணர்ந்த பிசியி னான,
                                ஏது நுதலிய முதுமொழி யான,
                                மறைமொழி கிளந்த மந்திரத் தான,
கூற்றிடை வைத்த குறிப்பி னான                                           (செய்யுளியல் -158)
இந் நூற்பாவில் நூல், உரை, பிசி, முதுமொழி, மந்திரம், குறிப்பு மொழி என்னும் ஆறு இலக்கிய வகைகள் சொல்லப்படுகின்றன. நூல் என்பது இலக்கணம்;, அது புலவரால் படைக்கப்படுவது. உரை என்பது உரைநடை. பிசி என்பது விடுகதை அல்லது புதிர். முதுமொழி என்பது பழமொழி. மந்திரம் என்பது தமிழிலே வழங்கிய மந்திரம் நூல். குறிப்பு மொழி என்பது குறிப்பால் பொருளை உணர்த்தும் வகை.

இப்படி முன்னோர்; வகுத்த இலக்கிய வகைகளை விரித்துக் கூறிய பிறகு தொல்காப்பியர் புதிதாகப் பண்ணத்தி என்ற இலக்கியத்தைக் குறிப்பிடுகின்றார். அடிவரையறை யில்லாத இலக்கிய வகைகளை விளக்கிக் கூறிவிட்டுப் பண்ணத்தியைக் கூறுவதனால் இதுவும் அடிவரையறை யில்லாதது என்று கொள்ள வேண்டும். அன்றியும், வழக்கு மொழியாக நிலவும் இலக்கிய வகைகளின் பின் சொல்வதனால், இப் பண்ணத்தியையும் ஒரு வகை வாய்மொழி இலக்கியமாகக் கருத வாய்ப்புள்ளது.
பாட்டிடைக் கலந்த பொருள வாகிப்
பாட்டின் இயல பண்ணத் திய்யே                                              (செய்யுளியல் -173)
பழம் பாட்டினூடு கலந்த பொருளே தனக்குப் பொருளாகப் பாட்டும் உரையும் போலச் செய்யப்படுவன பண்ணத்தி

மெய் வழக்கல்லாத புற வழக்கினைப் பண்ணத்தி என்ப, இஃது எழுதும்  பயிற்சியில்லாத புறவுறுப்புப் பொருள்களைப் பண்ணத்தி யென்ப வென்பது. அவையாவன: நாடகச் செய்யளாகிய பாட்டு மடையும் வஞ்சிப் பாட்டும், மோதிரப் பாட்டும் கடகண்டும் முதலாயின. அவற்றை மேலதே போலப் பாட்டென் னாராயினர், நோக்கு முதலாயின உறுப்பு இன்மையின்  என்பது.  அவை வல்லார் வாய்க் கேட்டுணர்க
என்று பண்ணத்திக்கு உரை வரைந்துள்ளார் பேராசிரியர். மெய் வழக்கல்லாத புற வழக்கினைப் பண்ணத்தி என்ப என்று தமிழ்நாட்டில் இருந்த ஒரு வழக்கைப் பேராசிரியர் குறிக்கிறார். பேராசிரியர் குறிப்பிடும் மெய்வழக்கு, புறவழக்கு முதலான சொற்களின் பொருள் இன்னது என்று திட்ட வட்டமாகத் தெரியவில்லை எழுதும் பயிற்சியில்லாத  புறவுறுப்புப் பொருள்கள் என்ற கூடுதல் விளக்கம், எழுதும் செய்யுளாக்க முறைமைக்கு முந்தைய வாய்மொழி மரபினைச் சுட்டுவதாகக் கொள்ளலாம்.

         பிறகு பண்ணத்திக்கு உதாரணம் கூறும்போது, நாடகச் செய்யுளாகிய பாட்டுமடை, வஞ்சிப் பாட்டு, மோதிரப் பாட்டு, கடகண்டு என்பவற்றைச் சொல்கிறார். கூத்தில் இடையிடையே பாடும் பாட்டையே நாடகச் செய்யுளாகிய பாட்டுமடை என்று குறிக்கிறார். வஞ்சிப் பாட்டு என்பது ஓடப் பாட்டு;, இன்றும் மலையாளத்தில் ஓடப் பாட்டை வஞ்சிப் பாட்டு என்று வழங்குகிறார்கள். மோதிரப் பாட்டு, கடகண்டு என்பவை அக்காலத்தில் வாய் மொழியாக வழங்கியவை போலும். நாடகச் செய்யுளாகிய பாட்டுமடை பாட்டும் உரையும் கலந்து அமைவன என்பதால் பாட்டு என்று சொல்லாமல் பாட்டின் இயல என்று தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளதாக அவர் கருதியிருக்க வேண்டும். க.வெள்ளை வாரணார் தம் தொல்காப்பியச் செய்யுளியல் உரைவளப்பதிப்பில் பண்ணத்தி என்பது, எழுத்து வடிவம் பெறாது நாட்டில் பொதுமக்களிடையே வழங்கும் நாடகச் செய்யுள் வகையெனப் பேராசிரியர் தரும் விளக்கம் கூர்ந்துணரத் தகுவதாகும் என்பார்.

         புலவர்களின் பாட்டிலே வரும் பொருள் இந்தப் பண்ணத்தியிலும் வரும்;. ஆனால் அதில் வருவது போலப் புலமைத் தொழிற்பாடு இருக்காது. அதனால், பாட்டிடைக் கலந்த பொருளவாகி என்று இலக்கணம் கூறினார். இதுவும் ஓசையாலும் தாளத்தாலும் பாட்டென்றே சொல்லத்தக்கது, ஆனால் பாட்டைப்போல வரையறை செய்ய முடியாதது. அதனால், பாட்டின் இயல என்றார். இந்த இரண்டு விளக்கங்களையும் நோக்க, புலவரால் செய்யப்படும் பாடல் வகையினின்றும் மாறுபட்ட வாய்மொழித் தன்மை வாய்ந்த ஓர் இலக்கிய வகையைப் பண்ணத்தி என்ற சொல் குறித்ததாகக் கொள்ள முடியும். பண்ணத்தி என்ற சொல்லுக்குப் பண்ணை விரும்புவது என்று பொருள். பண்ணமைந்த பாடல் என்று சொல்லாமல் பண்ணத்தி என்றதனால் இவ்விலக்கிய வகை இசைப்பாடல் வகையிலிருந்து வேறுபட்டது என்பதனை விளங்கிக் கொள்ள முடியும்.

1. பாட்டிடைக் கலந்த பொருளை உடையது
2. பாட்டின் இயல்பினைக் கொண்டது
3. பண்ணை விரும்புவது
இந்த மூன்று தன்மைகளையும் பண்ணத்தி என்ற பெயரும், பாட்டிடைக் கலந்த பொருள என்ற இலக்கணமும், பாட்டின் இயல என்பதும் புலப்படுத்துகின்றன.

                                இந்த இலக்கணங்களாலும், வாய் மொழியாக வழங்குவனவற்றோடு சார்த்திச் சொன்னமையாலும் பண்ணத்தியென்பது புலவர் இலக்கியங்களிலிருந்து வேறுபட்டது என்று கொள்ளலாம். தொல்காப்பியர் காலத்தில் வழக்கிலிருந்த அல்லது மெல்ல வழக்கொழிந்து வந்த, தவிர்க்கமுடியாத ஓர் இலக்கிய வடிவத்தையே பண்ணத்தி என்னும் சொல்லினால் அவர் அடையாளப் படுத்தியிருக்கக் கூடும்.
பாட்டிடைக் கலந்த பொருள வாகிப்
பாட்டின் இயல பண்ணத் திய்யே                                              (செய்யுளியல் -173)
அதுவே தானும் பிசியொடு மானும்.                                    (செய்யுளியல் -174)
அடிநிமிர் கிளவி யீரா றாகும்.                     
அடியிகந்து வரினும் கடிவரை யின்றே                              (செய்யுளியல் -175)
பாட்டினிடைக் கலந்த பொருளை உடைத்தாகிப் பாட்டின் இயல்பை உடையது பண்ணத்தி.
பிசியோடு ஒத்த அளவினை உடையது.
நாற்சீரடியில் மிக்குவரும் பன்னிரண்டு அடிகளைக் கொண்டது. 
பன்னிரண்டு அடிகளுக்கு மேல் மிக்கு வருபனவும் கொள்ளப்படும்.
மேலே சுட்டப்பட்ட நூற்பாக்களை விளக்குவதில் இளம்பூரணரும் பேராசிரியரும் வேறுபடுகின்றனர். இந்த நூற்பாக்களுக்குரிய நச்சினார்க்கினியர் உரை கிடைக்கவில்லை.

இளம்பூரணர், பண்ணைத் தோற்றுவித்தலால் பண்ணத்தி எனக் காரணப்பெயர் கொண்டதாக விளக்குகின்றார். தாழிசை, துறை, விருத்தம் ஆகிய பாவினங்கள் இசைநலம் கொண்டவை யாதலால் அவற்றையே பண்ணத்தி எனச் சுட்டுகிறார். இத்துடன் இசைத்தமிழைச் சார்ந்த சிற்றிசையையும், பேரிசையையும் பண்ணத்தியைச் சார்ந்தவைகளாக இனம் காண்கிறார். இளம்பூரணரின் பார்வையில் தொல்காப்பியர் காலப் பண்ணத்தியே பின்னர் பாவினங்களாக விரிவடைந்தது. பண்ணத்தியெனினும் பாவினமெனினு மொக்கும்.” (இளம்). பண்ணத்தியையும் பாவினத்தையும் ஒரு பொருளைக் குறிக்கும் இரு சொற்களாக அவர் இனம் கண்டார்.
அதுவே தானும் பிசியொடு மானும்
என்ற நூற்பாவிற்குப் பண்ணத்தி பிசி போல இரண்டடியால் வரும் என்று இளம்பூரணரும் பண்ணத்தி பிசி போல் செவிலிக்குரியதாகும் என்று பேராசிரியரும் விளக்கமளிக்கின்றனர்.
அடிநிமிர் கிளவி ஈரா றாகும்
அடியிகந்து வரினுங் கடிவரை யின்றே.
இந்நூற்பாவிற்கு உரை வரையும் இளம்பூரணர் அடிநிமிர் கிளவி ஈராறு என்பதனைப் பாவினங்களாகப் பட்டியலிடுகிறார்.

நாற்சீர் கொண்ட தடியெனப் படுமே (செய்யுளியல்-41) யென்றமையான் அடியென்பது நாற்சீரான் வருவதென்று கொள்க. நாற்சீரடியின் மிக்குவரும் பாட்டுப் பன்னிரண்டும் அவ்வழி அவ்வடியின் வேறுபட்டு வருவனவுங் கொள்ளப்படும் என்றவாறு. இதனாற் சொல்லியது இருசீரடி முதலிய எல்லா வடிகளானும் மூன்றடிச் சிறுமையாக ஏறிவரும் பாவினம் என்றவாறாம்.

பன்னிரண்டாவன ஆசிரியம் வஞ்சி வெண்பா கலியெனச் சொல்லப்பட்ட நான்கு பாவினோடுந் தாழிசை துறை விருத்தமென்னு மூன்றினத்தையும் உறழப் பன்னிரண்டாம். அவற்றுள், தாழிசையாவது: ஆசிரியத்தாழிசை, வஞ்சித்தாழிசை, வெண்டாழிசை, கலித்தாழிசை என நான்காம். துறையாவது: ஆசிரியத்துறை, வஞ்சித்துறை, வெண்டுறை, கலித்துறை என நான்காம். விருத்தமாவது: ஆசிரியவிருத்தம், வஞ்சி விருத்தம், வெளிவிருத்தம், கலிவிருத்தம் என நான்காம்.
தொல்காப்பியத்தின் மற்றொரு உரையாசிரியரான பேராசிரியர்,

அப்பண்ணத்தியின் அடிப் பெருக்கம் கிளக்கும்கால் பன்னிரண்டாம். ஆகும் என்பதனாற் சிறுபான்மை அப்பன்னிரண்டடியின் ஏறியும் வரப்பெறும் என்பது. ஈராறாகும் என்றதனால் இது நெடுவெண் பாட்டாகி வருமெனவும் அதுபோல் ஆறடியின் இழிந்து வாராதெனவும் கொள்க.

அது முழுதும் அடியாகிவராது இடையிடை ஒரோவடி பெற்று அல்லுழியெல்லாம் பரந்துபட்டு வரவும் பெறும். அவை முற்காலத்துள்ளார் செய்யுளுட் காணாமையில் காட்டாமாயினாம். இக்காலத்து உள்ளனவேற் கண்டுகொள்க. இலக்கணம் உண்மையின் இலக்கியம் காணாமாயினும் அமையுமென்பது.என்று உரையெழுதுகின்றார்.

பழம்பாட்டினோடு கலந்த பொருளைத் தனக்கும் பொருளாகக் கொண்டு வருவது பண்ணத்தி எனப் பொருள் கொண்டார். பாட்டினையும், உரையினையும் போல் பண்ணத்தி படைக்கப்பெறும் என்பது பேராசிரியர் கருத்து. பாட்டின் கூறும், உரையின் கூறும் பண்ணத்தியில் கலந்திருக்கும். நாடகச் செய்யுளாகிய பாட்டும், வஞ்சிப்பாட்டும், மோதிரப்பாட்டும், கடகண்டும் பண்ணத்திக்கு எடுத்துக்காட்டுகள் என்கின்றார். கடகண்டு தவிர ஏனையவை வாய்மொழி வடிவங்கள். பேராசிரியரின் உரைவிளக்க அடிப்படையில் சிலப்பதிகாரக் குன்றக்குரவையில் இடம்பெறும் பாட்டு மடைகள் பண்ணத்தியாதல் வேண்டும். பாட்டு, நோக்கு போன்ற உறுப்புகளின் துணைகொண்டு பொருள் உணர்த்துவது. பண்ணத்தியோ வெளிப்படை யாகவே பொருள் உணர்த்துவது. அவை வல்லார்வாய்க் கேட்டுணர்கஎன்றும் அவை முற்காலத்துள்ளார் செய்யுளுட் காணாமையில் காட்டாமாயினாம். இக்காலத்து உள்ளனவேற் கண்டுகொள்க. இலக்கணம் உண்மையின் இலக்கியம் காணாமாயினும் அமையுமென்பதுஎன்றும் பேராசிரியர் பண்ணத்தி இலக்கியத்திற்கு உரிய எடுத்துக்காட்டுகளைக் காட்ட இயலாமல் தவிப்பதிலிருந்து உரையாசிரியர்கள் காலத்தே பண்ணத்தி என்ற இலக்கியவகை முற்றிலும் வழக்கொழிந்த நிலையில் இருந்துள்ளமையை உணரமுடிகின்றது.

தொல்காப்பியத்திற்கு ஆராய்ச்சி உரை வரைந்த ச.பாலசுந்தரனார்,
இசைத்தமிழ் மரபில் தோன்றி இயற்றமிழ்ப் பகுதியாக வழங்கும் பண்ணத்தி என்னும் பாவகை என்றும் இப்பாவகையாவது கழனி உழவர் பாட்டும் மழைப்பாட்டும், வெள்ளப்பாட்டும், ஏர்ப்பாட்டும், நடவுப்பாட்டும், நெற்களப்பாட்டும், கிணைப்பொருநர் பாடும் போர்க்களப்பாட்டும், வெற்றிப்பாட்டும், கட்டும் கழங்கும் காண்பார் பாடும் பாட்டும் போலவனவாகும். நாட்டுப்பாடல் என இக்காலத்து வழங்கும் பாடல்கள் இப்பண்ணத்தி வழி வந்தவைகளே. பள்ளு முதலாய சிற்றிலக்கியங்கள் இதன்வழித் தோன்றியவை எனலாம் என்று விளக்குவர்.

தொல்காப்பியர் குறிப்பிடும் பண்ணத்தி என்பது நாட்டுப்புறப் பாடல்களைச் சுட்டுவதாக, கி.வா.ஜகந்நாதன், நா.வானமாமலை முதலியோர் குறிப்பிடுகின்றனர். இதனை மறுத்து, புலன் என்பதுதான் நாட்டுப்புறப் பாடல்களைக் குறிப்பதாக ஆறு. அழகப்பன் தம் ஆய்வேடு ஒன்றில் குறிப்பிடுகின்றார். மேற்சொன்ன இரண்டு கருத்துக் களையும் ஒருங்கிணைத்து நாட்டுப்புறப் பாடல்களுள் இசைப் பாடல்கள் பண்ணத்தி என்றும் இசை குறைந்த பாடல்கள் புலன் என்றும் சு. சண்முகசுந்தரம் விளக்குகின்றார். பெரும்பாலும் இக்கருத்தினை ஒட்டியே தமிழ் ஆய்வுலகம் தொல்காப்பியர் குறிப்பிடும் நாட்டுப்புறப் பாடல் இலக்கியம் பண்ணத்தியே என்பதனைத் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகின்றது.

பிசி (விடுகதை):-
மரபு வகை நாட்டார் வழக்காறுகளுள் நிலைத்த தொடர் அமைப்புடையது விடுகதையாகும். தமிழகத்தின் பல்வேறு பகுதி மக்களால் பிதிர், புதிர், வெடி என்ற பல்வேறு பெயரிட்டு வழங்கப்பட்டுவருகின்றது. நெல்லை மாவட்டத்தார் விடுகதையை அழிப்பாங்கதை என்று கூறுவார்கள். அதாவது விடுப்போரின் விடுகதைக்கு, கேட்போரின் மறுபதில் என்பதே அதன் பொருள். பிதிர், புதிர், வினோத வார்த்தை, எழுத்துக்கூட்டு, விகடப்பா, ஒளிவடிவ புதிர், சொற்புதிர், நொடிவினா, விடுகதை எனப் பலபெயர் இட்டு வழங்கும் விடுகதையைத் தொல்காப்பியர்,

ஒப்பொடு புணர்ந்த உவமத்தானும்
தோன்றுவ கிளர்ந்த துணிவினானும்
என்றிரு வகைத்தே பிசிவகை நிலையே                           (தொல்.செய்-169)
தொல்காப்பியர் குறிப்பிடும் பிசி என்பது விடுகதையே என்பதை அறிய உரையாசிரியர்களான இளம்பூரணரும், பேராசிரியரும் தரும் விடுகதைச் சான்றுகள் மூலம் தெளியலாம்.
(இளம்) அச்சுப் போல பூப்பூக்கும்
அமலே யன்ன காய்காய்க்கும் - பூசனிக்கொடி
(பேரா) பிறை கவ்வி மலை நடக்கும் - அது யானை
மேற்கண்டவாறு தொல்காப்பியர் குறிப்பிடும் பிசி என்பதற்கு உரையாசிரியர்கள் தரும் சான்றுகள் கொண்டு பிசி என்பது விடுகதையே என்றும், இது தமிழர் வாழ்வில் பொழுதுபோக்கிற்காகவும், அறிவுத்திறனைச் சோதிப்பதற்காகவும் போடப்பட்டு வந்தன என்றும் கூறலாம்.

பொய்மொழி (நாட்டுப்புறக் கதை):-
பண்டைய மக்களிடையே கதைசொல்லும் ஆர்வமும், கதைகேட்கும் ஆர்வமும் இருந்தன என்பதைத் தொல்காப்பியரது இலக்கணம் கூறுகின்றன. இதனைப்,
பொருளோடு புணராப் பொய்ம் மொழியானும்
பொருளோடு புணர்ந்த நகைமொழியானும்                     (தொல்.செய்-166)
என்ற நூற்பாவால் அறியலாம்.
இந்நூற்பாவிற்கு உரை கண்ட பேராசிரியர் ஒரு சிறுகதையைக் கூறி விளக்கம் தந்துள்ளார். யானையும், குருவியும் தம்முள் நட்புக்கொண்டு இன்ன இன்ன இடத்திற்குப் போய் இன்னவாறு செய்தன என்று ஒருவன் புனைந்துரைக்கும் வகையெல்லாம் அதன்பால் அடங்குவன என்பார். இதனைப் பார்க்கும் போது தொல்காப்பியர் காலத்திற்கு முன்பு வழக்கில் வந்த கதைகள் தொல்காப்பியத்திலும் வந்துள்ளமையை அறிய முடிகின்றது.

முதுமொழி (பழமொழி):-
உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களிடையே பழமொழிகள் வழங்கப்பட்டு வருகின்றன. நாகரீகம் வாய்ந்த மக்களிடமும், நாகரீகத்தில் பின்தங்கிய இனக்குழு மக்களிடமும் சுருங்கிய வடிவு கொண்ட, உருவகப் பண்புடைய அறிவுக் கூர்மையான பழமொழிகள் காணப்படுகின்றன. அத்தகைய பழமொழிகள் தொல்காப்பியத்திலும் பிரதிபலித்துள்ளன. இதனை உணர்த்த வந்த தொல்காப்பியர் முதுமொழி என்ற சொல்லால் குறிப்பிடுவார். இதனை,
நுண்மையும் சுருக்கமும் ஒளியும் உடைமையும்
மென்மையும் என்றிவை விளங்கத் தோன்றிக்
குறித்தப் பொருளை முடித்தற்கு வரூஉம்
ஏதுநுதலிய முதுமொழி.
என்ற நூற்பாவால் அறியலாம்.

கூறியதாய்ச் சுருங்கி, விழுமியதா எளிதாகி இயற்றப்பட்டுக் குறித்தப் பொருளொன்றனை முடித்தற்கு வருமாயின் அங்ஙனம் வந்ததனைப் பொருண் முடித்தற்குக் காரணமாகிய பொருளினைக் கருதுவது முதுமொழி என்று இந்நூற்பாவிற்கு பேராசிரியர் உரை எழுதுவார். நூற்பாவில் சுருக்கமும் நுண்மையும், ஒளியுடைமையும், மென்மையும், குறித்தப்பொருளை அழுத்தமாய் விளக்குவதற்கும், ஒரு சூழலில் காரணங்காட்டுவதற்கும் இப்பழமொழிகள் இன்றியமையாததாகின்றன. இதனால் பழமொழிகள் வழங்கக்கூடிய சமுதாயச் சூழலைத் தொல்காப்பியர் சுட்டியுள்ளார் எனலாம்.

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...