திங்கள், 17 செப்டம்பர், 2007

மனிதத் தின்னிகள் (சிறுகதை)

மனிதத் தின்னிகள்

மலையருவி

விரும்பியோ விரும்பாமலோ சில காரியங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் அவை அனிச்சைச் செயல்களைப் போல் ஆகிவிடுகின்றன. காலை சேர விழிப்புக்குப் பின்னர் கண்களும் மனமும் எதையோ தேட ஆரம்பிக்கின்றன. வார்த்தைகளும் படங்களும் காட்சிகளுமாக வீடெங்கும் சிதறிக் கிடக்கின்றன. விழித்தெழுகிற போதெல்லாம் இவைகளின் நடுவிலிருந்துதான் நான் விழிக்கிறேன்.
வீடெங்கும் செய்திக் குப்பைகள். பழைய குப்பைகளை ஒதுக்கி வைத்துவிட்டு புதிய குப்பைகளைத் தேடியது கண்களும் மனமும்.
எப்பொழுதும் போல் அன்றைக்கும் தொலைக்காட்சி முன்பு அமர்ந்து செய்தி கேட்கத் தொடங்கினேன். செய்தி தொடங்கும் முன்பே கண்களை மீறிக்கொண்டு மனம் தேட ஆரம்பித்தது.
செய்தி தொடங்கியது, முக்கியச் செய்திகள் முடிந்து விரிவான செய்திகளை வாசிக்கத் தொடங்கினார் செய்தி வாசிப்பாளர். செய்தி வாசிப்பவரையே கூர்ந்து கவனித்துப் பார்த்தேன். அது ஒரு மனிதமுகம் என்பதே மறந்துபோய், மனிதஉருவில் வடிவமைக்கப்பட்ட இயந்திரமோ என்ற சந்தேகம் என் மனதில் தோன்றியது. முகத்தின் தசைநார்கள் இறுகி உலோகத்தில் வார்த்தெடுத்தது போலிருந்தது அந்த முகம்.
செய்தி வாசிப்பதும் செய்தி தொடர்பான காட்சிகளுமாக நேரம் கடந்து கொண்டே இருந்தது. வழக்கமான அரசியல் செய்திகள், பதட்டம் நிலவுவதாகவும் பரபரப்பு காணப்படுவதாகவும் நீண்டுகொண்டே இருந்தன. நான் பொறுமையிழந்தேன். சே! என்ன எழவு செய்தி இது? சலிப்பூட்டக் கூடியதாகவும் எரிச்சலூட்டக் கூடியதாகவும் இருந்தது அன்றைய காலைநேரச் செய்தி.
கடைசியாகக் கிடைத்த செய்தி என்று ஏதாவது சொல்லக்கூடும் என்று எதிர்பார்த்திருந்தேன். மீண்டும் தலைப்புச் செய்திகள் என்று செய்தி முடிவுக்கு வந்துவிட்டது.
தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு எழுந்து சோம்பல் முரித்துக் கொண்டேன். குப்பைகளுக்கு நடுவில் இருந்தாலும் அன்றைக்கு அன்றைக்கு புதிய குப்பை இல்லையென்றால், மனம் இயக்கமற்று இருப்பதைப் போலாகிவிடுகிறது. காலை தினசரியைத் தேடி எடுத்துப் புரட்டத் தொடங்கினேன். முதலில் வேகவேகமாக நாளிதழின் முதல் பக்கம் தொடங்கி கடைசிப் பக்கம் வரை ஒரு பார்வை பார்த்துவிட்டு, சுவாரஸ்யமின்றி மீண்டும் முதல் பக்கத்திலிருந்து செய்திகளை மேயத் தொடங்கினேன். செய்தித்தாளில் மனம் ஒன்றவில்லை. பெரிய பெரிய எழுத்துக்களில் எட்டுக்காலம் செய்தியிலிருந்து தொடங்கி ஆறு காலம் செய்தி, நாலு காலம் செய்தி, பெட்டிச் செய்தி என்று உள்ளே இறங்கித் தேடினேன். படங்கள், செய்திகள் என்று பக்கம் பக்கமாகச் செய்திகளைக் கொட்டிக் கவிழ்த்துத் தேடிப் பார்த்து விட்டேன்.
ஏன் இன்றைக்கு என்ன ஆயிற்று?
என்ன செய்திகள் இவை?
இரத்தம், கொலை, சாவு, பிணம் எதுவுமில்லாமல் வெறுமையாய் இருந்தன எழுத்துக்கள், வார்த்தைகள், படங்கள்.
வேறு வழியின்றி பழைய குப்பைகளில் மீண்டும் தேடினேன்.
குவியல் குவியலாய்ப் பிணங்கள். படங்களும் எழுத்துக்களும் வார்த்தைகளுமாய்.
மதக்கலவரத்தில் எட்டு பேர் உயிரோடு எரிப்பு
நிவாரண உதவி வாங்கச் சென்ற நாற்பது பேர் உடல் நசுங்கிச் சாவு
கார் குண்டு வெடிப்பு இருபது பேர் உடல் சிதறி மரணம்
இரத்தம், நிணம், பிய்ந்த சதைத் துண்டங்கள்…
கொலை, சாவு, பிணம்…
பிணவாடை மூக்கைத் துளைத்த பின் எழுந்து என் அன்றாட பணிகளைத் தொடங்கினேன்.

1936 ஜூலை 30

1936 ஜூலை 30

முனைவர் நா.இளங்கோ,
தமிழ் இணைப்பேராசிரியர்
புதுச்சேரி-8.

இந்திய விடுதலை இயக்க வரலாற்றில் புதுவை மாநில தேசிய இயக்க வரலாறு தனிப்பட்ட சிறப்பிடம் பெறுகின்றது. வியாபாரிகளாய் வந்து ஆளுநர்களாய் மாறி இந்நாட்டின் வளத்தைச் சூறையாடத் தொடங்கிய அன்னிய ஏகாதிபத்திய நாட்டினரின் இராணுவ பலத்தை 100 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி நாம் வெற்றி கண்டது வரலாறு.இந்திய தேசிய விடுதலை இயக்கத்தின் தலைமையில் கற்றவர்கள், வசதிபடைத்தவர்கள், வணிகர்கள் போன்றவர்கள் முன்னிருந்து செயல்பட்டார்கள். காலப் போக்கில் தொழிலாள வர்க்கம் தேசிய இயக்கத்தில் கலந்து ஒன்றுபட்டது. ஆயின் புதுவை மாநிலத்தில் தொழிலாளி வர்க்கத் தலைமையை ஏற்றுக் கொண்டு உயர்மட்டத்தினர் விடுதலைப் போராட்டங்களில் பங்கெடுத்தார்கள். இதுதான் புதுவை மாநில விடுதலை இயக்க வரலாற்றின் தனிப்பட்ட சிறப்புத்தன்மையாகும். புதுவையில் வரலாற்றுக் காலத்திலிருந்தே பிறநாட்டினர் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். ஒரு சுமுகமான நிலையிலேயே அந்த வணிகத் தொடர்பு நடந்திருக்கின்றது. கி.பி. 60-இல் புதுச்சேரியில் அரிக்கன்மேடு என்னும் பகுதியில் ஒரு முக்கியமான துறைமுகம் இருந்திருக்கிறது. அந்த அரிக்கன்மேடு துறைமுகப் பகுதியை ரோமானியர்கள் 'பொதுக்கே" என்று வழங்கியிருக்கிறார்கள். இந்தப் பகுதியில் ரோமானியர்கள் பயன்படுத்திய மண்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனால் மிகப் பழங்காலம் தொட்டே ரோமனியர்களுக்கும் நமக்கும் இருந்த தொடர்பை அறிய முடிகிறது.

பிரெஞ்சிந்தியா:
பல நூற்றாண்டுகளாக மிக அமைதியான முறையில் பிற நாடுகளுடன் உறவு வைத்திருந்த புதுவையின் அமைதித்தன்மைக்குப் பதினேழாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் அவலம் நேரிடத் தொடங்கியது. கி.பி. 1666-இல் பிரெஞ்சுக்காரர்கள் புதுவையில் டழ சுழலயடந உழஅpயபnநை னந குசயnஉந நn ட'ஐனெந ழசநைவெயடந என்னும் வியாபார நிறுவனத்தை நிலை நாட்டினார்கள். இந்த நிறுவனம் 1666 ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் முதல் தேதி பதினான்காம் லூயி அவர்களால் நிறுவப்பட்டது. பிரெஞ்சு சட்டதிட்டங்கள் ஃபிரான்சுவா மர்ர்தேன் என்பவரால் உருவாக்கப்பட்டன. இவர்தான் நவீன புதுச்சேரி நகரத்தை நிர்மானித்தார்.

பிரான்சின் இரட்டை முகம்:
பிரெஞ்சுக் குடியரசின் மூன்று முக்கியக் கொள்கைகள் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பன ஆகும். ஆனால் பிரெஞ்சிந்தியாவாகிய புதுவையில் மட்டும் அவை மறுக்கப்பட்டன. புதுவை மக்கள் இரண்டாந்தர குடிமக்களாகக் கருதப்பட்டார்கள். எழுத்துரிமை, பேச்சுரிமை, சங்கம் அமைக்கும் உரிமை போன்ற அடிப்படை உரிமைகள் கூடப் புதுவை மக்களுக்கு மறுக்கப்பட்டன. தொழிலாளர் நிலை மிகப் பரிதாபமான நிலையில் இருந்தது.புதுவையில் பிரஞ்சு முதலாளிகளுக்குச் சொந்தமான மூன்று பஞ்சாலைகள் இருந்தன.சவானா மில்- இன்றைய சுதேசி மில்ரோடியர் மில்- இன்றைய ஆங்கிலோ பிரஞ்ச் ஆலை(யுகுவு)கப்ளே மில்- இன்றைய பாரதி மில்

பிரெஞ்சிந்தியாவில் தொழிலாளர்:
தொழிலாளர்கள் முதலாளிகளால் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டார்கள். வேலைக்குப் பாதுகாப்பு இல்லை. விபத்துக்கு உரிய நிவாரணம் இல்லை, பெண்கள் மிக இழிவான நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். தொழிலாளர்களுக்கு ஒருவேளை உணவிற்கும் எட்டாத ஊதியம் தரப்பட்டது. ஓய்வுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை இல்லை. தொழிலாளர்தம் குழந்தைகளுக்கு எவ்விதப் பாதுகாப்பும் கிடையாது. ஆறுவயதுக் குழந்தையும் மில்களில், கல் உடைக்கும் களங்களில், சுமை தூக்குவதில், கட்டிடக் கட்டமைப்புப் பணிகளில் ஒரு சில காசுகளுக்காகப் பன்னிரண்டு மணி நேரம் வேலை செய்ய வேண்டிய மோசமான நிலைமை இருந்தது.இந்த மூன்று ஆலைகளிலும் சுமார் 20,000க்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.புதுவையின் முகத்தை மாற்றி அமைத்ததில் இந்த மூன்று ஆலையின் தொழிலாளர்களுக்கும் மிகப்பெரிய பங்கு உண்டு. இவர்கள் நிகழ்த்திக் காட்டியதுதான் வரலாற்றுச் சிறப்பு மிக்க 1936 ஜூலை30 போராட்டம்.

முதல் போராட்டம்:
1935, பிப்ரவரி 4ம் தேதி சவானா மில் (சுதேசி மில்) தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, பணி நேரக் குறைப்பு முதலிய கோரிக்கைகளை மில் முதலாளிகளாக இருந்த பிரெஞ்சுக்காரர்கள் முன் வைத்தார்கள். நாளொன்றுக்குப் பத்துமணி நேரம் வேலை நிர்ணயம்தினக்கூலி 3 அணாவிலிருந்து 6 அணாவாக உயர்த்துதல்பெண்களுக்கு இரவுப் பொழுது வேலை கூடாது14 வயதுக்குக் கீழ்ப்பட்ட குழந்தைகளை வேலையில் அமர்த்தக்கூடாதுபெண் தொழிலாளர்களுக்குப் பேறு காலத்தில் சம்பளத்துடன் கூடிய ஒருமாத விடுமுறையும், பிள்ளைப் பேற்றிற்காக அரைமாதச் சம்பளமும் வழங்கப்பட வேண்டும்இது பொன்ற கோரிக்கைகளை முன்வைத்துத்தான் சவானா பஞ்சாலைத் தொழிலாளர்கள் 1935 பிப்ரவரி மாதம் 4ம் தேதி தங்களது வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர். சவானா பஞ்சாலை மேலாளராக இருந்த வலோ என்பவர் ஆலையின் கதவை அடைத்துத் தொழிலாளர்ளைப் பட்டினி போட்டால், அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு நிர்வாகத்திற்குப் பணிந்து விடுவார்கள் என்று தப்புக் கணக்குப் போட்டார். கிட்டத்தட்ட 84 நாள்கள் கடந்தன. ஆயினும் தொழிலாளர்களில் எவரும் வேலைக்கு வராதது அவருக்குப் பெருத்த ஏமாற்றமாய் இருந்தது.இந்நிலைகளினால் வலோ நிலைகுன்றிப் போனார். போராட்டத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்பதைத் தவிர வேறு வழி இன்றித் திண்டாடினார். இதனால் போராட்டத் தலைவர்களை அழைத்துப் பேச்சு வார்த்தை நடத்தினார். அதன்படி 1935 ஏப்ரல் 29இல் தொழிலாளர்களின் கோரிக்கைகளை உள்ளடக்கிய உடன்பாடு ஒன்று எட்டப்பட்டது.

முதல் வெற்றி:
புதுச்சேரி வரலாற்றில் முதன்முறையாகத் தொழிலாளர்களின் வேலை நேரம் நாளொன்றுக்கு 10 மணிநேரம் என வரையறுக்கப் பட்டது. தொழிலாளர்களின் கூலி நாளொன்றுக்கு 6 அணா என்றும், பெண் தொழிலாளர்களின் பேறுகாலத்தில் சம்பளத்துடன் கூடிய ஒருமாத விடுமுறை, பிள்ளைப் பேறு செலவிற்காக அரைமாதச் சம்பளம் வழங்குவதெனவும் உடன்பாடு எட்டப்பட்டது. ஒன்றுபட்டு இறுதிவரை உறுதியுடன் நின்று போராடினால் எதனையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை உணர்வை சவானா ஆலைத் தொழிலாளர் போராட்டம் நிரூபித்துக் காட்டியது. இதர ஆலைத் தொழிலாளர்கள் இப்போராட்டத்தினால் ஈர்க்கப்பட்டுத் தெம்பும் நம்பிக்கையும் பெற்றனர்.தொழிலாளர் ஒற்றுமை, போராட்ட உணர்வு ஆகியன வளர்ந்து வரும் சூழ்நிலையைக் கண்ட ரோடியர்,கப்ளே ஆலை நிர்வாகங்களும் சவானா பஞ்சாலையின் நிர்வாகத்தைப் போன்றே வேலைநேர வரையறை, கூலிஉயர்வு முதலியவற்றை அமல்படுத்தின.

தோழர் வ.சுப்பையா:
சவானா ஆலையில் தொடங்கிய தொழிலாளர்களின் முதல் போராட்டத்திற்கு வித்திட்ட முன்னோடி தோழர் வ.சுப்பையா. பின்னாளில் இவர் மானுடம் போற்றும் மக்கள் தலைவர் என்ற நிலைமைக்கு உயர்ந்து நின்றார். மேலும் இப்போராட்டத்திற்கு முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள் திரு.தெப+வா தாவீது, திரு.அமலோர், திரு.பெரியநாயக சாமி, திரு.சுப்பராயலு போன்றவர்கள் ஆவர்.

இரண்டாவது போராட்டம்:
இப்போராட்டத்தில் தோல்வியைச் சந்தித்த மில் முதலாளி பிரெஞ்சு அரசின் ஆதரவுடன் மீண்டும் தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கிப் பழி வாங்கி ஆத்திரமூட்டினான். அதனால், 1935 ஜுலை 25 ஆம் தேதியிலிருந்து அனைத்து மில் தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் இரண்டாவது முறையாக வேலை நிறுத்தத்தில் இறங்கினார்கள். பிரெஞ்சு அரசின் காவல் துறையின் துணையுடன் கருங்காலிகளைத் திரட்டி மில்லை நடத்திட முதலாளிகள் முயன்றனர். இரண்டரை மாத காலம் வேலை நிறுத்தம் நீடித்தது. இறுதியில் மில் முதலாளி தொழிலாளர்களின் தலைவர்களோடு சமரசம் பேசி மில்லை நடத்தினான். பிரெஞ்சுத் தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் மையத்தோடு புதுவைத் தொழிலாளர்கள் தொடர்பு கொண்டு பிரெஞ்சிந்தியாவில் தொழிற்சங்க உரிமை மறுக்கப்பட்டிருந்த அநீதியை எடுத்துக்கூறி சட்ட உரிமைகோரி வாதாடினார்கள். அகில இந்திய தொழிற்சங்கக் காங்கிரசும், தொழிற்சங்க இயக்கத் தலைவர்களான தோழர்கள் வி.வி. கிரி, என்.எம்.ஜோஷி போன்றவர்களும் புதுவைத் தொழிலாளர்களின் உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவு அளித்தனர்.தொழிலாளர்களின; இயக்கம் வலுப்பெற்றதால், புதுவை மாநில மக்களின் இதர பிரிவைச் சார்ந்தவர்களும் தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு ஆதரவாகத் திரண்டார்கள்.

முதல் தொழிலாளர் மாநாடு அரசு தடை:
1935 ஆம் ஆண்டு ஆகஸ்டுமாதம் 10ஆம் நாள் பஞ்சாலைத் தொழிலாளர்கள் முதல் மாநாட்டை நடத்தத் திட்டமிட்டார்கள். பிரெஞ்சு ஏகாதிபத்தியம் அம்மாநாட்டிற்குத் தடை விதித்தது, அதற்குத் தலைமையேற்று நடத்தவிருந்த தோழர்கள் வி.வி.கிரி, எஸ். குருசாமி ஆகிய இருவரையும் புதுவையிலிருந்து வெளியேற்றியது. ஆனால், தொழிலாளர்கள் ஆயிரக்கணக்க்pல் திரண்டு அம்மாநாட்டைப் பிரெஞ்சு இந்திய எல்லையில் இருந்த பெரம்பை கிராமத்தில் நடத்தினார்கள். மாநாட்டுத் தீர்மானங்கள் பிரான்சில் இருந்த தொழிற்சங்கங்களின் தலைமைக்கு அனுப்பப்பட்டது. பிரெஞ்சுத் தொழிலாளி வர்க்கம் புதுவைத் தொழிலாளர்களி;ன் கோரிக்கைகளான தொழிற்சங்க உரிமை, 8 மணி நேர வேலை போன்றவற்றை ஆதரிpத்துப் பிரான்சிலும் குரல் எழூப்பியது.

ஒன்றிணைந்த போராட்டக்குழு:
1936 ஆம் ஆண்டு 3 பஞ்சாலைகளின் தொழிராளர்கள் சங்க உரிமைக்காக ஒன்றிணைந்து போராட இணைப்புக் குழூ அமைத்தனர், ஜுன் மாதத்தில் பொது வேலை நிறுத்தம் நடத்தினார்கள். பிரெஞ்சிந்தியக் கவர்னர் சொலோமியாக் மில்லுக்குள் தங்கி வேலைநிறுத்தம் செய்துவந்த தொழிலாளர் பிரதிநிதிகளை அழைத்துப் பேசினார். தொழிலாளர்களின் போராட்ட இணைப்புக் குழுவின் கோரிக்கைகளில் பிரதானமான தொழிற் சங்க அமைப்பு உரிமை 8மணி நேர வேலை ஆகிய சில தொழிற் சட்டம் சம்மந்தப்பட்ட கோரிக்கைகளைப் பிரெஞ்சு அரசோடு கலந்து ஒரு மாதத் தவணையில் முடிப்;பதாகக்கூறி, உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தைக் கைவிட வேண்டும் என்று தொழிலாளர்களைக் கேட்டுக் கொண்டார். அதன்பேரில் தொழிலாளர்கள் மீண்டும் உற்பத்தியில் இறங்கினார்கள். 30 நாட்கள் கடந்தன. அரசு கொடுத்த வாக்குறுதியின்படி தொழிற்சங்க சட்ட உரிமைச் சட்டம் அமுலாக்கப்படவில்லை.

உள்ளிருப்பு வேலைநிறுத்தம்:
அதனால் 1936 ஜுலை 23 ஆம் தேதியிலிருந்து மூன்று மில்களிலும் உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தைத் தொழிலாளர்கள் மீண்டும் தொடங்கினார்கள். தொழிற்சங்க உரிமைக்கும் 8மணிநேர வேலைக்குமான வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தின் தொடக்கம் இதுதான்.

1936 ஜுலை 30:
1936 ஜுலை 30-ஆம் நாள் காலை பிரெஞ்சு ஆயுதம் தாங்கிய காவல் படை தனக்குப் பின்னே எந்திரத்துப்பாக்கிகள் ஏணிகள் ஏற்றிய இரு லாரிகள் பின் தொடர, புதுவை நகர முக்கிய வீதிகளின் வழியே நடை போட்டுக் காட்டியது. முதலில் பொது மக்களின் நெஞ்சில் பீதியைக் கிளப்பியப்பின் பஞ்சாலை நோக்கிப் போகவேண்டும் என்பது அவர்கள் திட்டம். ஆனால் தொழிலாளர்கள்; பிரெஞ்சு காவல் படையின் ஆயுதங்களையோ, மிருகபலத்தையோ கண்டு எள்ளளவும் அஞ்சவில்லை.முதல் நடவடிக்கையே ரோடியர் பஞ்சாலையின் நுழைவாயிலிலிருந்து தான் தொடங்கியது. ஆலையின் பெரியவாயில் கதவை இறுக அடைத்துத் தொழிலாளர் தொண்டர் படைவீரர்கள் எப்பொழுதும் விழிப்போடு கண்காணித்து வந்தார்கள். ஆயுதப்படை தன் பலத்தையெல்லாம் ஒன்று திரட்டிச் சாலையைச் சமப்படுத்தும் இயந்திரத்தைப் பயன்படுத்தி, ஆலையின் கதவை இடித்துத் தகர்த்து உள்ளே நுழைய முயன்றது. சிறிது நேரத்திற்குப்பின் நுழைந்தும் விட்டது.

ஆயுதப்படை ஆலையில் நுழைந்தது:
அதுவரை அடங்கி ஒடுங்கிக்கிடந்த ஆலை மேலாளர் திரு.மார்ஷ்லேண்டு எனும் வெள்ளைக்காரர் ஆயுதப்படை உள்ளே நுழைந்து விட்டதைக் கண்டு, துணிவு பெற்றுத் தன் கைத்துப்பாக்க்pயை எடுத்துத் தொழிலாளர்களை நேக்கிச் சுட ஆரம்பித்தார். குண்டடிபட்ட ஒரு தொழிலாளி அந்த இடத்திலேயே விழுந்து துடிதுடித்து இறந்தார்.
இதைக் கண்டு ஆவேசமுற்ற போராட்டத் தொழிலாளர்கள் தங்களின் கைகளுக்குக் கிடைத்த ஆயுதங்களைக் கொண்டு ஆயுதப்படை மீது எதிர்த் தாக்குதல் நடத்தினர். இந்நிலையில் ஆயுதப் படையானது சவானா பஞ்சாலைக்குச் சென்று கடலூர் சாலைக்கு எதிரில் தாக்குதலுக்கான ஆயத்த நிலையில் தன்னை நிறுத்திக் கொண்டது.

துப்பாக்கிச் சூடு:
பஞ்சாலை வளாகத்தில் பெரும் கட்டடங்களின் மேல்தளத்தில் ஆயிரக்கணக்கில் நின்று கொண்டிருந்த தொழிலாளர்கள் போராட்ட ஆரவாரம் செய்து கொண்டிருக்க, வெளியில் முக்கிய சாலையில் நின்றிருந்த ஆயுதப்படை எந்திரச் சுழல் துப்பாக்கியால் தொழிலாளர்களை நோக்கிச் சுட்டது. சராமாரியாகப் பொழிந்த துப்பாக்கிக் குண்டுகளுக்கும் அஞ்சாது, உணர்ச்சி ஆவேசமுற்றுத் தொழிலாளார்கள் எதிர்த்;தாக்குதல் நடத்தினர். ஆயினும் துப்பாக்கிச் சூட்டில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
1936 ஜூலை 30-இல் இத்துப்பாக்கிச் சூட்டில் அமலோற்பவநாதன், ராஜமாணிக்கம், கோவிந்தசாமி, ஜெயராமன், சுப்பராயன், சின்னையன், பெருமாள், வீராசாமி, மதுரை, ஏழுமலை, குப்புசாமி, ராஜகோபால் ஆகிய 12 வீர மறவர்கள தங்கள் இன்னுயிரை ஈந்தனர். இதைக் கண்டதும் தொழிலாளர்களிடையே கொதிப்பும், கொந்தளிப்பும் அதிகமாயின. துப்பாக்கிக் குண்டுகள் தம் நெஞ்சைப் பிளந்தாலும் இனி அஞ்சிடோம் எனும் வீர ஆவேசத்தோடு தொழிலாளர்கள் ஆயுதப் படையினை நோக்கி விரைந்தனர். ஆங்காங்கே தங்களின் கைகளுக்குக் கிடைத்த கல,; தடி, இரும்புத்தடி, இரும்புப் பல் சக்கரம் போன்ற ஆயுதங்களை எடுத்து எதிர்த்தாக்குதல் நடத்தினர். தொழிலாளர் அனைவரும் ஒன்று சேர்ந்து எண்ணிக்கையில் குறைவான ஆயுதப்படையினரைத் தாக்கியதால் சிறிது நேரத்திற்கெல்லாம் தொழிலாளர்களின் கை ஓங்கலாயிற்று. ஆயுதப்படை மெல்;ல மெல்லப் பின் வாங்கத் தொடங்கியது.பின் வாங்கிய பிரெஞ்சு ஆயுதப்படை கடலூர்ச்; சாலையும், வில்லியனூர் சாலையும் சந்திக்கும் சந்திப்பு முனையில் நின்று கொண்டு தன் துப்பாக்கியின் கடைசி தோட்டாவரை பயன்படுத்தி, இராஜமாணிக்கம் எனும் போராட்ட மறவனின் உயிரைக் குடித்தது. அந்த மாவீரன் அந்த இடத்திலேயே துடிதுடித்துச் செத்தான்.

தியாகத் திருநாள்:
1936 ஜுலை 30-இல் நெஞ்சில் உரமும், நேர்மைத் திறமும் கொண்டு தொழிற்சங்க உரிமை கோரி பஞ்சாலைத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டமும், அதைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச்சூடும், அதில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்த கொடுமையும் முந்திய பிரெஞ்சு இந்திய வரலாற்றில் செந்நிற எழுத்துக்களால் எழுதப்பட வேண்டிய நிகழ்ச்சியாகும்.இந்நிகழ்ச்சியும், இதில் பிரெஞ்சு மேலாண்மை கட்டவிழ்த்துவிட்ட கொலைவெறித் தாக்குதலும், புதுவையின் அனைத்துத் தரப்பு மக்களின் ஆவேச உணர்ச்சியையும் தட்டி எழூப்பியது. பிரான்சின் வல்லாட்சிக் கொடுமையை எதிர்த்துத் தொடர்ந்து போரிடவும், நல்லதோர் அலசியல் உரிமையை வென்றெடுக்கவும் வேண்டிய உறுதிப்பாட்டைத் தந்தது.

நேருவும், சுப்பையாவும்:
இச்சம்பவம் பண்டித நேரு அவர்களின் இதயத்தை உலுக்கியது இந்த நிகழ்ச்சி குறித்து சுப்பையா அவர்கள் பிரான்சுக்குச் சென்று அங்குள்ள மக்கள் முன்னனிக் கட்சியின் அமைச்சரோடு கலந்து ஆலோசிப்பது நல்லது என்று நேரு கருத்துவைத்தார். அவ்வண்ணமே சுப்பையாவும் நேருவின் அறிமுகக் கடிதத்தோடு பிரான்சு சென்றார்.

வீரமரணம் விளைத்த தொழிலாளர் நலன்:
1937 மார்ச் 6-இல் சுப்பையா பிரான்சு சென்று, பிரெஞ்சு அரசோடு இப்பிரச்சினை குறித்து விவாதித்தார். அதன் விளைவாக 1937 ஏப்ரல் 6-இல் பிரஞ்சிந்தியாவிற்கான தொழிற்சங்கச் சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி தொழிலாளர்களுக்கு 8மணிநேர வேலையும் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையும் வழங்கப்பட்டது. ஆசிய நாடுகளிலேயே 8 மணி நேர வேலை என்பது புதுச்சேரியில் தான் முதன்முதலில் அமுலாக்கப்பட்டது. அத்துடன் தொழிலாளர்களுக்கான கூட்டு ஒப்பந்தம், ஓய்வுக்கால ஊதியம், பெண் ஊழியர்களுக்கும் அவர்களுடைய குழந்தைகளுக்கும் சமூகப் பயன் அளிக்கும் திட்டங்களும் வரையறுக்கப்பட்டன.தொழிலாளர்கள் தங்களுடைய போராட்டம் மற்றும் தியாகத்தின் வாயிலாகத் தங்கள் அரசியல் உரிமைகளைப் பெற முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்தெடுத்த அந்தநாள் 1936 ஜுலை 30, புதுவை பிரஞ்சிந்திய வரலாற்றில் இந்நிகழ்ச்சியை புதுவையின் முதல் சுதந்திரப் போர் என்று குறிப்பிடலாம்.
தொழிலாளர்கள் தொடங்கி வைத்த இப்போராட்டத்தின் தொடர்விளைவே 1954இல் நாம் பெற்ற சுதந்திரம். பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காப்போம்.

சொற்பொழிவுக் கலையின் நுணுக்கங்கள்

சொற்பொழிவுக் கலையின் நுணுக்கங்கள்

முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்,
புதுச்சேரி-605 008

பேச்சுக் கலை:
'பேச்சே வாழ்வின் மூச்சு" என்கிற இன்றையச் சூழலில் பேச்சாற்றல் மிகவும் அவசியமானதாகும். இன்றைய ஆட்சியாளரில் இருந்து புகழின் உச்சியில் உள்ள பலரின் உயர்வுக்கு அடிப்படையே அவர்தம் பேச்சாற்றல்தான் என்பது தெளிவு.திருவள்ளுவரும், கேட்டார் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல் என்று சிறந்த பேச்சிற்கு இலக்கணம் வகுத்துள்ளார்.சொல்லும் கருத்துக்கள் தெளிவாக, அழகான சொற்களில், தர்க்க முறைக்கு மாறுபடாது, அனுபவத்துடன், எடுத்துக்காட்டுக்களோடு, கேட்பவர் உள்ளத்தில் ஊடுருவுமாறு, உணர்ச்சி தோன்ற, சொல்வது உண்மைதான் என்று கேட்பவர் உணரும்படி பேச்சு அமைந்திருக்க வேண்டும். இதுவே சிறந்த பேச்சு.

சிறந்த பேச்சுக்கான இலக்கணங்கள் சில:
சிறந்த சொற்பொழிவாளர்கள் பேசுவதைக் கேட்கும்போது பேச்சென்றால் இதுவல்லவா பேச்சு என்று பாராட்டத் தோன்றுகிறது. அத்தகைய சிறந்த பேச்சாளர்கள் தங்கள் பேச்சின் வெற்றிக்குக் கையாளும் உத்திகள் எவைஎவை என்பதைக் கூர்ந்து கவனித்தால் சிறந்த பேச்சின் இலக்கணங்களைக் கண்டுபிடித்துவிட முடியும்.தலைசிறந்த மேடைப் பேச்சுகள் பலவற்றை ஆழ்ந்து நோக்கி பலகால் பழகிய பழக்கத்தில் கீழ்க்கண்ட இலக்கணங்கள் சிலவற்றைச் சிறந்த பேச்சின் இலக்கணங்களாகப் பட்டியலிடுகின்றேன்.

1.பேச்சின் நோக்கம் தெளிவாக இருக்கவேண்டும். எதைப்பற்றிப் பேசப் போகின்றோம் என்பதில் நமக்கிருக்கும் தெளிவுதான் பேச்சு தெளிவாக அமைய உதவும்.
2.கடுநடையோ, அலங்கார நடையோ, செயற்கையான மொழிநடையோ இல்லாமல் எளிய நடையில் அழகாகவும் இனிமையாகவும் பேசுதல் வேண்டும்.
3.பேச்சின் முதல்பாதி வெற்றி நம் குரல்வளத்தில்தான் உள்ளது. குரல்வளம் சிறந்தால் பேச்சின் நடைநலம் சிறக்கும்.
4.பொருளோடு ஒட்டிய நகைச்சுவையை உணவிற்கு உப்புபோல் அளவாக அமைத்தால் பேச்சின் சுவையும் அழகும் கூடும். வெற்று நகைச்சுவைத் தோரணங்களால் அமையும் பேச்சு பயனற்ற பேச்சாய் முடிந்துவிடும். 5.பேசப்படும் கருத்திற்கு ஏற்ற உணர்ச்சியை வெளிப்படுத்தும் வண்ணம் பேச்சின் வெளிப்பாடு விளங்க வேண்டும். மிகை உணர்ச்சி வெளிப்பாடுகளோ, உணர்ச்சியற்ற பேச்சோ இரண்டுமே தவிர்க்கப்பட வேண்டியவை.
6.மிகையான அபிநயங்கள் பேச்சை வேடிக்கைப் பொருளாக்கிவிடும். தேவையற்ற அங்க அசைவுகள் தவிர்க்கப்பட்டு கம்பீரமாக நின்று பேசுதல் வேண்டும்.
7.உச்சரிப்பில் தெளிவும் பேச்சில் உரிய ஏற்ற இறக்கமும் அமைந்திருத்தல் அவசியம். ஒரே குரலில் சீராகப் பேசுவது பார்வையாளருக்கு விரைவில் சலிப்பை ஏற்படுத்திவிடும்
8.எடுப்பு தொடுப்பு முடிப்பு இம்மூன்று நிலைகளிலும் திட்டமிட்டு பேசுதல் வேண்டும். சிறந்த தொடக்கமும் சிறந்த முடிப்பும் சிறந்த பேச்சுக்கு மணிமகுடங்கள்.
9.பேச எடுத்துக் கொண்ட பொருளை விட்டுவிட்டு சுற்றி வளைத்து பேசுதல் கூடாது. சொல்லும் கருத்தானது பருந்தும் அதன் நிழலும் போலத் தொடர்ந்து வருமாறு சொற்பொழிவாற்ற வேண்டும்.
10.பேசும் மொழியைப் பிழையில்லாமல் உச்சரிக்கப் பழகிக்கொள்ள வேண்டும் பிழையான உச்சரிப்பு பேச்சையும் பேச்சாளரையும் வேடிக்கைப் பொருளாக்கிவிடும். உச்சரிப்புப் பிழையின்மை, மொழியழகு, சொற்குற்றம் இன்மை, சொல்லாட்சித் திறமை ஆகியனவற்றையும் கருத்தில் கொள்ளுதல் வேண்டும்.
11.சிறந்த பேச்சாளராக விரும்புவோர் முதலில் நூல்களோடு பழகக் கற்றுக்கொள்ள வேண்டும். அன்றாடம் நடைபெறுகின்ற நடைமுறை நிகழ்வுகளிலும் அதிகநாட்டம் கொள்ள வேண்டும். குறிப்பாகச் செய்தித்தாள் வாசிப்பது தொலைக்காட்சி பார்ப்பது போன்ற பழக்கங்களால் நடைமுறை உலகம் குறித்த அறிவைப் பெறமுடியும். நிரம்பப் படிக்கவும் புதியன அறிந்து கொள்ளவும் ஆர்வம் காட்டுதல் நலம்பயக்கும்.

பேச்சைத் தொடங்கும் முறை:
சொற்பொழிவு என்பது சொற்பொழிவு செய்யும் நபரின் ஆளுமை வெளிப்பாடாகும். அவரின் சிந்தனை மற்றும் அறிவின் வெளிப்பாடாகவும் சொற்பொழிவே அமைகின்றது. பேச்சாளர் தாம் பேசப்போகும் செய்திகள் குறித்து எத்துணை விழிப்புணர்வோடு இருக்கின்றாரோ அதே அளவு விழிப்புணர்வோடு பேசும் முறையிலும் கவனம் செலுத்துதல் வேண்டும். பேசும் முறை என்கிறபோது பேச்சை எப்படித் தொடங்குவது எப்படி முடிப்பது என்பதும் அதில் முக்கிய இடம்பெறுகின்றது. சிறந்த தொடக்கமும் சிறந்த முடிவுமே சொற்பொழிவுக்கு ஒரு வடிவத்தைக் கொடுக்கின்றது.
1. பேசத் தொடங்கும் முன்னர் பேசப்போகும் அவையைக் கூர்ந்து கவனித்து மதிப்பிடுதல் வேண்டும். யாருக்காகப் பேசப்போகின்றோம்? அவர்களின் கல்வித்தகுதி என்ன? என்பதையும் அவர்களின் சமூகப் பின்னணி குறித்தும் தெரிந்து பேசுவது நல்லது. அவையோரின் தரம் மற்றும் அவையின் சிறப்பைக் கருத்தில் கொண்டு பேச்சை வடிவமைத்துக் கொள்வது பேச்சு சிறக்க துணைபுரியும்.
2. பேச்சாளர் எந்த வரிசையில் பேசப்போகிறார் என்பதையும் பேசவேண்டிய கால அளவு குறித்தும் தெரிந்து கொள்ளவேண்டும்.
3. அவையோரின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் பேச்சின் தொடக்கம் அமைதல் நலம். பொதுவாக, ஏதேனும் ஒரு பாடலைச் சொல்லியோ மேற்கோள் கூறியோ பேச்சைத் தொடங்கலாம்.
4. பேசப்போகும் பொருள் குறித்து நேரடியாகப் பேசத் தொடங்காமல் ஒரு சிறிய முன்னுரையோடு தொடங்கலாம். ஆனால் அதே சமயம் முன்னுரை மிக நீளமாக அமைந்து விடக் கூடாது. அது பேச்சின் தொடக்கத்தையே சலிப்புக்குள்ளாக்கிவிடும்.
5. அவையடக்கம் என்ற பேரில் தன்னைத்தானே மிகவும் தாழ்த்திக் கூறிப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். மிகையான அவையடக்கம் பேச்சாளர் குறித்து அவநம்பிக்கையை உண்டாக்கிவிடும். தன்னைப் பற்றி மிகையாகப் புகழ்ந்துகொள்ளுதலும் கூடாது.
6.எல்லோருக்கும் தெரிந்த பொதுவான செய்திகளைக் கூறாமல் கேட்போர் வியந்து மலைக்கும் வகையில் புதிய செய்திகளைச் சுவைபடக் கூறலாம்.
7.முன் பேசியவரின் கருத்தை மறுக்க வேண்டிய அவசியம் ஏற்படுமானால் மிக நாசுக்காகவும் நாகரீகத்துடனும் பகையுணர்ச்சியைத் தூண்டாத வகையில் மறுப்புக் கருத்தைப் பதிவுசெய்து பேச்சைத் தொடங்கவேண்டும்.
சிறந்த தொடக்கம் அமைந்துவிடுமேயானால் அதுவே பேச்சின் செம்பாதி வெற்றியாக அமைந்துவிடும்.

பேச்சை முடிக்கும் முறை:
பேச்சைத் தொடங்குவதில் எத்துணை கவனம் தேவையோ அதைவிட மிகுந்த கவனம் பேச்சை முடிப்பதில் தேவை. பேச்சை முடிக்கும் முறை சிறப்பாக அமையவில்லை என்றால் நாம் இதுவரைப் பேசிய பேச்சு அனைத்துமே மதிப்பிழந்து போகும். கேட்கத் தூண்டுவது பேச்சின் தொடக்கம் என்றால் கேட்டதின் பயனை உணர்த்துவது பேச்சின் முடிப்பு ஆகும்.
1.பேச்சின் நோக்கம் எதுவோ? பேச்சின் குறிக்கோள் எதுவோ? அதை உணர்த்தும் வகையில் ஓட்டப்பந்தய எல்லையைத் தொடும் வீரனைப்போல் உணர்ச்சி ததும்பப் பேசி முடிக்கலாம்.
2.சிலபேர் பேச்சை முடிக்கும் தருவாயில் சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லிவிட்டேன் இனிமேல் சொல்வதற்கு என்ன இருக்கிறது, கேட்டால் கேளுங்கள் இல்லையென்றால் போங்கள் என்பதுபோல் விரக்தியாகப் பேசி முடிப்பார்கள் இத்தகைய முடிப்பு கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டியதாகும்.
3. பேச்சைத் தொடங்கத் தெரிந்த பலபேருக்குப் பேச்சை முடிக்கத் தெரியாது. ஆகவே, எனவே, நான் என்ன சொல்ல நினைத்தேன் என்றால் என்பது போலத் திரும்பத் திரும்பச் சொன்னதையே சொல்லி முடிக்க முடியாமல் குழம்பக்கூடாது.
4. இதுவரைப் பேசிய செய்திகளையெல்லாம் சுருக்கமாகத் தொகுத்துக் கூறி பேச்சை முடிப்பது மிகுந்த பயனளிக்கக் கூடியதாயிருக்கும்.
5. அவையோர் பேச்சாளரின் பேச்சில் மிகவும் ஈடுபட்டுப் பேச்சைக் கேட்டுக்கொண்டிக்கும் போதே, இன்னும் கொஞ்சநேரம் பேசியிருக்கலாமே அதற்குள் முடித்துவிட்டாரே என்று நினைக்கும் வகையில் பேச்சை முடித்துக்கொள்வது மிகுந்த பாராட்டுதலைப் பெறும்.
6. நிகழ்ச்சியின் நோக்கத்தைச் சிறப்பித்துப் பாராட்டியோ நிகழ்ச்சி அமைப்பாளர்களைப் பாராட்டியோ பேச்சை முடிக்கலாம்.
7. சுவையான பயனுள்ள மேற்கோள்களைக் கூறி பேச்சை முடிப்பதும் ஒருவகை உத்தியாகும். இவ்வகை உத்தி பேச்சின் மையக்கருத்துக்கு வலுவ+ட்டுவதாக அமையும்.உரிய இடத்தில் உரிய நேரத்தில் பேச்சை முடிப்பதில்தான் பேச்சாளர்களின் வெற்றி இரகசியமே அமைந்துள்ளது.

சில சிறப்புக் குறிப்புகள்:
சிறந்த பேச்சாளராக விரும்பும் தொடக்கநிலைப் பேச்சாளர்களுக்குத் தேவையான சில இன்றியமையாத நுணுக்கங்களைப் பார்ப்போம்.
1. தமக்கெனத் தனிபாணி வேண்டும்-பிறரைப்போல் பேச முயலக்கூடாது.
2. பயிற்சியால் அவையச்சத்தை வெல்ல வேண்டும்.
3. சொல்லும் பொருளுக்கேற்ப குரலில் ஏற்ற இறக்கங்கள் வேண்டும்.
4. தலைப்பிற்கேற்பச் செய்திகளைச் சேகரித்துப் பேச்சை தயாரித்துக் கொள்ளவேண்டும்.
5. மனதிலேயே பேசப்போகும் கருத்துக்களை வரிசைப்படுத்தி ஒரு ஒத்திகைப் பார்த்துக் கொள்வது நல்லது.
6. கொள்கையின்றி இடத்துக்குத் தக்கவாறு நேர்மையின்றி பேசுதல் முற்றும் தவறு.
7. நமக்குப் புரியாத எந்தச் செய்தியையும் பிறருக்கு விளக்க முற்படுவது தோல்வியில் முடியும்.
8. உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்.

வெள்ளி, 14 செப்டம்பர், 2007

வீட்டுக்குள் வளர்ந்த விருட்சம்-மலையருவி கவிதை

வீட்டுக்குள் வளர்ந்த விருட்சம்

-மலையருவி

யார் அந்த விதையைப் போட்டார்கள் என்றே தெரியவில்லை?
போயும் போயும்
வீட்டு வரவேற்பரையிலா அதைப்போடுவது....

விதை விழுந்ததை எப்படி கவனிக்காமல் போனோம்
விதை விழுந்ததை மட்டுமா
அது வேர்விட்டு வளர்ந்ததையும் அல்லவா
கவனிக்கத் தவறிவிட்டோம்

தொலைக்காட்சி பெட்டி வரவேற்பரைக்கு வந்த பிறகுதான்
அது நடந்திருக்க வேண்டும்
அநேகமாக கேபிள் ஒயரோடு
அந்த ஆலம் விதை வந்திருக்க வேண்டும்

என்ன அசுர வளர்ச்சி
வந்த சில மாதங்களிலேயே
வேர்விட்டு... விழுதுகளைப் பரப்பி
வரவேற்பரை முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டு
வளர்ந்து செழித்தது ஆலமரம்

வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கோ நண்பர்களுக்கோ
எங்கள் முகம் தெரியாமல்
அவர்கள் முகங்களைக் காட்டாமல்
அது வியாபித்திருக்கிறது

வீட்டுக் குழந்தைகள் விளையாட இடந்தராமல்
குறுக்கும் நெடுக்குமாய்க் கிளைகளைப் பரப்பி
கண்டபடி வளர்ந்து காடாக மண்டிவிட்டது

ஏன் பல சமயங்களில்
நாங்களே ஒருவரை பார்க்க முடியாமல்
பேசிக்கொள்ள முடியாமல்
இடத்தை அடைத்துக் கொண்டு
இருப்பிடத்தை இருட்டாக்கி விட்டது

யார் அந்த விதையைப் போட்டார்கள் என்றே தெரியவில்லை?
போயும் போயும்
வீட்டு வரவேற்பரையிலா அதைப்போடுவது....

வரவேற்பரையும் போதாமல்
சில கிளைகள்
படுக்கைஅறையையும் எட்டிப் பார்த்து
அச்சமூட்டுகின்றன.

ஆலமரத்தின் விழுதுகளுக்கிடையே
வேர் முடிச்சுகளில் சிக்கி
கிளைகளின் ஊடே
இருகிய முகங்களோடு
விழிகள் நிலைகுத்தி
உறைந்து போகிறோம்

விமர்சனம்- மலையருவி கவிதை (நா.இளங்கோ)

விமர்சனம்

நக்கீரன்
பொற்றாமரைக் குளத்தில்
முங்கி எழுந்தான்,
மேனி குளிர்ந்தது

சிவபெருமான்நெற்றிக் கண்ணின்
நெருப்பு மட்டும்
அடிக்கடி
கனவில்லாமலே வந்து போனது

பாண்டிய மன்னன்
அந்தப்புரத்தில்
மகாராணியின் கூந்தல் படுக்கையில்
அயர்ந்திருந்தான்

சங்கப் பலகை
ஈ மொய்த்திருந்தது

தருமியின்
பல்லக்கு பவனி
ஊரில்
புதுப்பேச்சாய் இருந்தது

நக்கிரனோ
காய்ச்சலும் குளிரும்
மாறிமாறி வந்ததால்
படுக்கையில்
நொந்து நூலானான்.

-மலையருவி

ஆறு. செல்வனின் ஆய்த எழுத்து - நூல் மதிப்புரை

புதுவைக்கு மீண்டும் ஒரு தமிழ்ஒளி

ஆறு. செல்வனின் ஆய்த எழுத்து

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

புதுவை மாநகரம் கவிதைப் பாரம்பரியம் மிக்க நகரம். அண்மைக் காலங்களில் அதாவது 2000 க்குப் பிறகு புதுவையில் அதிக அளவில் நூல்கள் வெளியிடப் பெறுவதும் அதிலும் குறிப்பாகக் கவிதை நூல்கள் மிகுதியாக வெளிவருவதும் கண்கூடு. இலக்கியப் படைப்புகளின் பெருக்கம் எப்பொழுதுமே மகிழ்ச்சியளிக்கக் கூடிய ஒன்றுதான். ஆனால் இதில் கவலையளிக்கக் கூடிய விஷயங்கள் சிலவுண்டு. வெளிவரும் நூல்களில் எத்தனை வாசிக்கப்படுகின்றன? வாங்கிப் படிப்பவர்கள் எத்தனை பேர்? நூலகங்களை நம்பி மட்டுமே நூல்கள் வெளியிடப் பெறுகின்றனவா? நூலகங்களில் இத்தகு கதையல்லாத படைப்புகள் எவ்வளவு தூரம் வாசிக்கப்படுகின்றன? வேளியிடப்பட்ட புத்தகங்களால் சமுதாயத்துக்கு ஏற்பட்ட நன்மைகள் என்னென்ன? என்றெல்லாம் விடையில்லாத வினாக்கள் பல தொக்கி நிற்கின்றன.

பாரதி, பாரதிதாசன், வாணிதாசன், தமிழ்ஒளி எனத் தொடர்ந்து நீண்டு செல்லும் புதுவைக் கவிஞர்களின் வரிசையில் கவிஞர் ஆறு.செல்வனும் ஒருவர். அவருக்குக் கவிதை தொழிலல்ல. பாரதிக்குப் பிறகு யாருக்குமே கவிதை தொழிலல்ல. அவர் ஓர் அரசு அதிகாரி. சமூகம் அவரைக் கவிதையெழுத வைத்திருக்கிறது. யாரையுமே சமூகம்தான் இலக்கியம் படைக்கத் தூண்டும். சுயும்புவாக யாரும் எதையும் படைத்து விடுவதில்லை. கவிஞரின் மூன்றாவது படைப்பு ஆயுத எழுத்து. முதலிரண்டு படைப்புகளின் மூலம் நானும் ஒரு கவிஞன்தான் என்பதை அழுத்தமாகப் பதிவுசெய்தவர் ஆறு.செல்வம். இந்த மூன்றாவது படைப்பு அவரின் படைப்பாற்றலை மட்டும் வெளிப்படுத்தவில்லை. மாறாகச் சமூகம் குறித்த அவரின் பார்வை, சமூக அவலங்கள் குறித்த அவரின் கவலை, சமூகத்தின் மீதான படைப்பாளிகளுக்கே உரிய கோபம் இவற்றோடு சமூக மாற்றத்திற்கான அறைகூவலாகவும் அமைந்திருப்பதுதான் இந்த நூலின் தனிச்சிறப்பு.

இந்தக் கவிதை நூலுக்கு ஆயுத எழுத்து ஆசிரியர் பெயரிட்டிருப்பதன் காரணம் நூலிலுள்ள கவிதைகளைப் படிப்பார்க்குத் தெளிவாக விளங்கும்.தமிழால் புகழடைந்தேன் என்ற தலைப்பு தொடங்கி இருபத்தைந்து தலைப்புகளில் தமிழின் சிறப்பு, தொழிலாளர் மேன்மை, சாதி மத எதிர்ப்பு, பகுத்தறிவு முழக்கம், அரசியல் அவலம் பெண்ணுரிமை முதலான பல்வேறு உள்ளடக்கங்களில் கவிதை படைத்துள்ளார் கவிஞர் ஆறு.செல்வம்.

தமிழ்! தமிழ்!
தமிழால் புகழடைந்தேன் என்று தொடங்கி மூன்று தலைப்புகளில் தமிழின் புகழ்பாடும் கவிஞர் ஆறு.செல்வம், செத்து விழுந்த போதும் தமிழேசிதையாய் எரியட்டும்! – என்தேகம் எரிந்த சாம்பல் தமிழ்க்குஉரமாய்க் கரையட்டும்! என்று சம்பிரதாய ப+ர்வமாகத் தம் நூலைத் தொடங்கினாலும், அடுத்து வருகின்ற இருபத்திரண்டு தலைப்புகளிலும் தான் ஓரு சமூக விடுதலைக் கவிஞன் என்பதை வெளிப்படுத்தத் தவறவில்லை. எனவேதான்,

விடுதலை என்பது வேறொன்று மில்லை
உரிமையைப் பெறும்மோகம் - அதை
வேண்டுவ தென்பதும் கெஞ்சுவ தென்பதும்
வேடிக்கைக் கதை யாகும்.

என்று எழுதுகிறார்.

அதிகார வர்க்கத்தின் அழகு:
இந்தியச் சமூகத்தில் சாதியும் வர்க்கமும் இணைந்து இருப்பதே கண்கூடான உண்மை. இதில் உழைக்கும் வர்க்கம் அழுக்கு ஆடையோடும் உழைத்துழைத்து வெயிலால் கருத்த தோலோடும் இருக்கின்றது. உழைப்பை அறியாத அதிகார வர்க்கமோ செவத்த உடலோடும் சலவை செய்த ஆடைகளோடும் உலா வருகின்றது. இந்தச் சமூக அவலத்தைத் தூங்காதே சித்திரமே…! எனும் தலைப்பில் கவிஞர் வருணிக்கும் அழகே தனியழகு,

தோலுநல்லா செவந்திருக்கும்
துணியெல்லாம் வெளுத்திருக்கும்
பாலப்போல மொகமிருக்கும்
பச்சையான சிரிப்பிருக்கும்


தோளுமேல கையிருக்கும்
தோழனைப்போல் பேச்சிருக்கும்
ஏழைரத்தம் குடிச்சிடத்தான்
எப்பொழுதும் நெனைப்பிருக்கும்.

ஏழை ரத்தம் குடிக்கும் அந்த அதிகார ராட்சசர்களின் வருணனையின் முரண் படித்து ரசிக்கத்தக்கது.

தொழிலாளர் புகழ்பாடும் தொகுப்பு:
ஆய்த எழுத்து தொகுப்பில் பல பாடல்கள் உழைக்கும் மக்களின் உயர்வைச் சித்திரிக்கின்றன. அதிலும் குறிப்பாக மே தினத்தைப் பாடும்போது உழைப்பாளிகளின் சிறப்பைப் பாடுகிறார்,

சாலையில் கிடந்திடும் சரித்திரமே!
சாக்கடை மந்திடும் சந்தனமே!
ஆலையில் சிக்கிய பூவினமே!
ஆதிக்கச் சாதிக்குத் தீவனமே!

என்றெல்லாம் ஆதிக்கச் சாதிக்குத் தீவனமான உழைக்கும் மக்களின் விடுதலைப் போருக்கு என் கவிதை பயன்படட்டும் என்று முழக்கமிடுகின்றார்.

காதலைப் பாடாத கவிஞனா?
காதலைப் பாடாத கவிஞர்களே உலகில் இல்லை என்று சொல்லிவிடலாம். ஆறு.செல்வனும் காதலைப் பாடுகின்றார். எப்படி? கணத்தில் மயங்கும் கவர்ச்சியை எல்லாம் காதல் என்று நம்புவதைக் கண்டித்து, காதல் வெறும் பாலினக் கவர்ச்சியால் மட்டும் உருவாகக் கூடாது என்றும் காதலிலும் ஒரு சமூக நீதிக்கான போராட்டம் இருக்க வேண்டுமென்றும் கவிஞர் விரும்புகிறார். அதனால்தான்,

சாதியை உடைத்து மதங்களைப் புதைத்து
சமத்துவமான காதல் செய்வீர்!
சடங்குகள் கடந்து சாத்திரம் துறந்து
பகுத்தறிவான காதல் செய்வீர்!

என்று காதலிலும் புதுமை செய்யத் தூண்டுகிறார்.

விளிம்பு நிலை மக்களின் கவிதை:
கவிஞர் ஆறு.செல்வத்தின் இக்கவிதைத் தொகுப்பு தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கவிதைத் தொகுப்பாய் இருப்பது இந்நூலின் தனிச்சிறப்பாகும். உரிமையைக் கேட்டிட நாள் எதற்கு? என்ற கவிதையில்,

சாதிக்கெல்லாம் இங்கு வேட்டுவைப்போம் - மட
சாத்திரச் சடங்கைப் போட்டுடைப்போம்
ஆதிக்கச் சாதியின் ஆட்டம் அடங்கிட
அடிமையெல்லாம் இங்கு கூட்டுவைப்போம்

என்று பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் கூட்டே ஆதிக்க விலங்கொடிக்கும் என்று அடிமைப்பட்ட மக்களின் கூட்டணியை வேண்டுகின்றார். இது கவிஞரின் தொலைநோக்குப் பார்வையையும் அவரின் அரசியல் தெளிவையும் காட்டுகிறது.

அறிவுக்கு வேலை கொடு, பகுத்தறிவுக்கு வேலை கொடு:
சாதி மத வேறுபாடுகளுக்குக் காரணம் மதம். பகுத்தறிவால் மட்டுமே இந்த இழிநிலைகளிலிருந்து மீளமுடியும் என்று திண்ணமாக நம்பும் கவிஞர் ஆறு.செல்வன், நம்முடைய மடைமையைப் பல கவிதைகளில் சாடிப் பாடுகின்றார். அறிவை இவன் என்னைக்குத்தான் பயன்படுத்துவான்? என்று ஆதங்கத்தோடு ஒரு கவிதையைப் படைத்துப் பகுத்தறிவை ஊட்டும் அற்புதமான பாடல் ஒன்று,

பகலிரவா படிக்காம தூங்கிக் கிடப்பான்
பரீட்சையில வெற்றிபெற தேங்கா ஒடைப்பான்
சுகமிழந்து நோவுவந்தா மருந்து குடிப்பான்
சுகமடைஞ்சா திருப்பதிக்கு மொட்டை யடிப்பான்


கற்சிலையைக் கழுவிவிட பாலும் தேனுமா? – அது
காதுகுளிர கேட்பதற்கு மேள தாளமா?
உச்சிவேளை காலைதோறும் சூடதீபமா? - இங்கு
உணர்ச்சியுள்ள மனுஷன் வாழ்க்கை பாதை ஓரமா?

மக்கள் திருந்தினால் கவிஞர்க்கு வெற்றி!

தேர்தல் பாதை?
மக்களாட்சியின் மகத்துவம் வெளிப்படுவது தேர்தல்களில்தான், ஆனால் அந்தத் தேர்தல் இங்கே எப்படியெல்லாம் கேலிக்கூத்தாகி சந்தி சிரிக்குது என்பதைத் தேர்தல் வருது என்றொரு கவிதையில் பாடுகிறார் கவிஞர் ஆறு.செல்வம்,

கூழ வாங்கிக் குடிக்கிறான் - அவன்
குடிசைக் குள்ள நொழையறான்
ஏழ பாழ எல்லார்கிட்டயும்
இளிச்சி சிரிச்சி கொழையறான்


சேல வேட்டி குடுக்கறான் - அவன்
சிரிச்சி சிரிச்சி மயக்கறான்
வேல முடிஞ்சி ஜெயிச்சிபுட்டா
மேல ஏறி மிதிக்கிறான்

இந்தத் தெளிவு வாக்காளர்களுக்கு வந்துவிட்டால்…பிறகென்ன கவலை.

தலித் மக்களின் விடுதலை:
விடுதலை பெற்று அறுபதாண்டுகள் ஆனபின்னாலும் நாட்டில் சாதிக்கொடுமைகள் ஓயவில்லை சேரி மக்களின் துன்பக் கதைகளில் மாற்றமில்லை என்பதைச் சேரி - கச்சேரி என்றொரு பாடலில் அவலச்சுவை மிகும் படியாக எடுத்துரைக்கின்றார்.

தவிச்சி தவிச்சிப் பச்சப்புள்ள
துடிக்கும் - பசியில் துடிக்கும் - அது
தாவி வந்து தாயின்மார்பைக்
கடிக்கும் - கண்ணீர் வடிக்கும்


சுவைச்சிக் குடிக்க பாலில்லாம
வெடிக்கும் - நெஞ்சு வெடிக்கும் - இந்த
சோகம் எந்த சாமிக்கைய்யா
அடுக்கும் - அய்யா அடுக்கும்.


கட்சிக் காரன் கலவரத்தில்
எரிப்பான் -வூட்ட எரிப்பான் - ஒரு
கணக்கு வச்சி வேட்டிசேல
குடுப்பான் - அவனே குடுப்பான்

இதற்கெல்லாம் என்னதான் தீர்வு? கவிஞரே சொல்கிறார் கேளுங்கள்,

உரிமை கேட்டு ஒண்ணுசேரும்
கோபம் - எங்க கோபம் - அதில்
உலகம் வெந்து சாம்பலாகிப்
போகும் - ஒருநாள் போகும்

கவிஞரின் கவிதைகள் ஒவ்வொன்றும் புலரப்போகும் விடியலுக்கான நம்பிக்கைகளை நம்முள் விதைக்கின்றன. மக்களுக்குக் கவிஞர் சொன்ன கோபம் எப்போது வரும்? உரிமை கேட்டு ஒண்ணு சேரும் ஞானம் எப்போது வரும்? என்ற ஏக்கத்தை ஆயுத எழுத்து தருகின்றது. அன்று கவிஞர் தமிழ்ஒளி எழுப்பிய கேள்விகளோடும் தீர்வுகளோடும் மீண்டும் புதுவைக்கு ஒரு தமிழ்ஒளி. நம்பிக்கையூட்டும் கவிதைத் தொகுப்பு.

மக்கள் கவிஞர் புதுவைத் தமிழ்ஒளி -ஓர் அறிமுகம்

மக்கள் கவிஞர் புதுவைத் தமிழ்ஒளி

முனைவர் நா.இளங்கோ
இணைப்பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8.

கவிஞர் தமிழ்ஒளி:
தமிழனே நான்உலகின் சொந்தக் காரன் தனிமுறையில் நான்உனக்குப் புதிய சொத்து - தமிழ்ஒளி1947 நவம்பர் 15 அன்று கவிஞர் தமிழ்ஒளி வீராயி என்ற காவியத்திற்கு எழுதிய முன்னுரையில் கீழ்க்கண்டவாறு எழுதினார்.

நம் கண்ணெதிரே நம் உடன் பிறந்தான் மாடாக உழைத்து ஓடாகத் தேய்ந்து போகிறான், அவன் குடும்பம் வறுமைப் படுகுழியில் வீழ்ந்து கதறுகிறது. இதைக்கண்டு மனமிரங்காமல் மரத்துப்போன நெஞ்சுடன் உலாவும் மானிடப் பிண்டங்களின் உடலில் சுரீர் சுரீர் என்று தைக்கும்படி எழுதுவதுதான் உண்மை எழுத்தாளனின் கடமையும் நோக்கமும் ஆகும்.
எழுத்தாள நண்பர்களே! கற்பனையுலகைப் படைக்கும் கவிஞர்களே! நான் வீராயி மூலம் விடுக்கும் வேண்டுகோள் இதுதான், மக்களுக்காக மக்கள் உயர மக்கள் காலத்துக் கதைகளை எழுதுங்கள். உலகம் முழுதும் உருவாகிக்கொண்டு வரும் உழைக்கும் இனத்தின் கூட்டு முன்னணிக்கு உங்கள் எழுத்து உறுதுணையாகட்டும். … …”1
இம்முன்னுரையில் கவிஞர் தமிழ்ஒளியின் இலக்கியக் கோட்பாடு எது என்பதை அவரே தௌ;ளத் தெளிவாகக் குறிப்பிடுகின்றார்;. மக்களுக்காக எழுதுங்கள். மக்கள் உயர எழுதுங்கள். உழைக்கும் மக்களின் உயர்வுக்கு எழுதுங்கள் என்பதே அவரின் வேண்டுகோள்.

கவிஞர் தமிழ்ஒளி அறிமுகம்:
(1924-1965)கவிஞர் தமிழ்ஒளி பிறந்த மண் புதுச்சேரி கருவடிக்குப்பத்தைச் சார்ந்த சாமிப்பிள்ளைத் தோட்டம். புதுவைக்குப் புகழ்சேர்க்கும் கவிஞர்கள் வரிசையில் பாரதி, பாரதிதாசனுக்குப் பிறகு பாரதிதாசன் பரம்பரையில் வந்த மக்கள் கவிஞன் தமிழ்ஒளி. கவிஞரின் இயற்பெயர் விஜயரங்கம். பிறந்த நாள்: 21-9-1924. பெற்றோர்;: திரு.சின்னையா நயினார், திருமதி செங்கேணியம்மாள் ஆவர். தாழ்த்தப்பட்ட சாதியின் ஒரு பிரிவான வள்ளுவர் இனத்தைச் சேர்ந்தவர். கவிஞர் விஜயரங்கம் புதுவை கல்வே கல்லூரியில் பயின்ற மாணவர். அங்கேதான் அடிப்படைக் கல்வியும் உயர்நிலைக்கல்வியும் பயின்றார். ஃபிரெஞ்சு மொழியும் கற்றார். பின்னர் முறையாகத் தமிழ் கற்க விரும்பி கரந்தைச் செந்தமிழ்க் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். 1945 முதல் தம் இறுதிக்காலம் நெருங்கும் வரை சென்னையிலேயே வாழ்ந்தார். அவர் அமரரானதும் அடக்கமானதும் புதுவையில். நாள்: 29-3-1965.

தமிழ்ஒளியின் படைப்புகள்:
1944இல் எழுதத் தொடங்கிய தமிழ்ஒளி தம் இறுதிக்காலம் (1965)வரை எழுதிக்கொண்டே இருந்தார்.
படைப்புகள்: எழுதிய ஆண்டு வெளிவந்த ஆண்டுகாவியங்கள்:

1. கவிஞனின் காதல் 1944 1947
2. நிலைபெற்ற சிலை 1945 1947
3. வீராயி 1947 1947
4. மேதின ரோஜா 1952 1952
5. விதியோ? வீணையோ? 1954 1961
6. மாதவி காவியம் 1958 1995
7. கண்ணப்பன் கிளிகள் 1958 1966
8. புத்தர் பிறந்தார் 1958 1966
9. கோசலக்குமரி 1962 1966

தனிக்கவிதைகள்:
1. நீ எந்தக் கட்சியில்? 1948 1948
2. மேதினமே நீ வருக! 1949 1952
3. தமிழ்ஒளியின் கவிதைகள் 1954-64 1966
4. மக்கள் கவிதைகள் 1954-58 1987

குழந்தைப் பாடல்கள்:
1. அந்திநிலா பார்க்கவா! 1948-62 2001

ஆய்வு நூல்கள்:
1. சிலப்பதிகாரம் காவியமா? நாடகமா? 1959 1959
2. திருக்குறளும் கடவுளும் 1959 1959
3. தமிழும் சமஸ்கிருதமும் 1960 1960
4. தமிழர் சமுதாயம் 1961 1962

கதைகள்:
1. சாக்கடைச் சமுதாயம் 1948-49 1952
2. அறிவ+ட்டும் 100 அற்புதக் கதைகள் 1960 1961
3. குருவிப்பட்டி 1954-60 1961
4. உயிரோவியங்கள் 1948-49 1989

குறு நாவல்கள்;:
1. மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் 1952 1952
2. மாமாவின் சாகசம் 1952 1952

வரலாறு:
1. தோழர் ஸ்டாலின் 1952 1952

நாடகங்கள்:
1. கவிஞர் விழா(ஓரங்க நாடகங்கள்) 1947 1947

அச்சில் வெளிவராத மேடை நாடகங்கள்:
1. சிற்பியின் கனவு 1945
2. சேரன் செங்குட்டுவன் 1946
3. தோழர் ஸ்டாலின் ------

(இன்னும் வெளிவராத சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள் சில)

ஆக இருபத்தைந்துக்கும் மேற்பட்ட நூல்களைக் கவிதை, காவியம், கட்டுரை, நாடகம், ஆய்வுகள் எனப் பலதுறைகளிலும் எழுதி வெளியிட்ட மாபெரும் படைப்பாளி கவிஞர் தமிழ்ஒளி. இத்தனைக்கும் அவர் வாழ்ந்த காலங்கள் வெறும் நாற்பதே ஆண்டுகள். நாற்பதாண்டுகளே வாழ்ந்தாலும் காலத்தினால் அழியாத கவிதைகளையும் இலக்கியங்களையும் படைத்துக் கொடுத்திருக்கிறார்.

தமிழ்ஒளியின் பாதை:
கவிஞர் தமிழ்ஒளி பாரதியை ஞானத் தந்தையாகக் கருதினார், பாரதிதாசனை வழிகாட்டியாகக் கொண்டார். அவர்களிருவரும் வகுத்துத் தந்த வழியை மேலும் செம்மைப்படுத்தினார்.1944 இல் எழுதத் தொடங்கிய தமிழ்ஒளி தமிழ், தமிழ்இனம், தமிழர் எழுச்சி, சீர்திருத்தம் என்ற போக்கில் அதாவது தேசிய இனங்களின் உரிமை, தமிழ் ஆட்சிமொழி, சுயமரியாதை, சமத்துவம் என்ற செயல்பாட்டில் தம் படைப்;புப் பணியைத் தொடங்கினார். 1945இல் கவிஞர் மார்க்சீயத் தத்துவத்தை ஆழ்ந்து பயிலத் தொடங்கினார். அதன் விளைவாகவே ‘நிலைபெற்ற சிலை’, ‘வீராயி ’ ஆகிய காவியங்களைப் படைத்தார்.1947இல் இலக்கியப் பேராசான் ஜீவா முன்னிலையில் தமிழ்ஒளியும் குயிலனும் பொதுவுடைமை இயக்கத்தில் இணைந்தனர். 1947 தொடங்கி ஒன்பது ஆண்டுகள் பொதுவுடைமை இயக்கத்தில் உறுப்பினராகவும் கலை இலக்கியத் தளத்தில் புரட்சிப் படைப்பாளராகவும் விளங்கினார் தமிழ்ஒளி. 1953இல் பொதுவுடைமை இயக்கத்திலிருந்து வெளியேறினார். 1953இற்குப் பிறகு புதியபுதிய உள்ளடக்கங்களிலும் உத்திகளிலும் காவியங்கள் படைப்பதில் மிகுந்த ஈடுபாடு காட்டினார். வாழ்வின் கடைசிவரை பிற்போக்கு சக்திகள் தம்மை அண்டாமல் பார்த்துக் கொண்டார்.

தமிழ்ஒளியும் பொதுவுடைமையும்:
1948இல் இந்திய அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி செய்ததாகக் கூறி இந்தியப் பொதுவுடைமைக் கட்சியினைக் காங்கிரஸ் அரசு தடைசெய்தது. தடையின் விளைவாகக் கம்னிய+ஸ்ட் கட்சி அலுவலகம், தொழிற்சங்க அலுவலகங்கள், கட்சிப் பத்திரிக்கை அலுவலகங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டன. தலைவர்கள் பலர் கைதாயினர். வேறு சிலர் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டனர். நாட்டில் நடப்பதைக் கட்சி ஆதரவாளர்கள் அறிந்து கொள்ள இயலாத சூழ்நிலை உருவானது.இந்த இக்கட்டான சூழலில் இந்திய கம்னிய+ஸ்ட் கட்சி நடத்திவந்த ஜனசக்தி தடைசெய்யப்பட்டது. முன்னணி என்ற பெயரில் பொதுவுடைமைச் சார்பு இதழ் ஒன்று புதியதாகத் தொடங்கப்பட்டது. கட்சியின் நம்பிக்கைக்குரிய தோழர் குயிலன் ஆசிரியர் பொறுப்பேற்றார். துணைஆசிரியர் பொறுப்பில் தமிழ்ஒளியும் எஸ்.ஆர்.எஸ்.ராஜனும் செயல்பட்டனர். 1948 அக்டோபர் தொடங்கி 1949 செப்டம்பர் வரை தொடர்ந்து 48 இதழ்கள் வெளிவந்தன. பின்னர் முன்னணி இதழும் தடைசெய்யப்பட்டது.இந்த முன்னணி ஏட்டின் ஒவ்வொரு இதழிலும் கதை, கட்டுரை, கவிதை, நாடகம் ஆகிய பல இலக்கிய வடிவங்களில் தம் முற்போக்குக் கருத்துக்களுக்கு எழுத்து வடிவம் கொடுத்து எழுதி வந்தார் தமிழ்ஒளி. மார்க்சீய தத்துவ ஞானத்தை மக்களுக்கு விளக்குவதற்காகவே ஜனயுகம் என்ற பெயரில் புதிய மாத இதழ் ஒன்றைத் தொடங்கினார் தமிழ்ஒளி. அந்த ஏடு பற்றிய ஒரு விமர்சனம் 4-9-1948இல் முன்னணி ஏடு ஒன்றில் கவிஞர் குயிலன் அவர்களால் எழுதப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதி:“மார்க்சிஸ்ட் தத்துவத்தை விளக்குவதற்கே அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் மாத சஞ்சிகை தமிழில் வெளிவருவது மிகவும் பொருத்தமானது. மகிழ்ச்சி தரும் செய்தி. அவசரத் தேவையைப் ப+ர்த்தி செய்யும் ஆயுதம். சஞ்சிகையின் ஆசிரியர் விஜயரங்கத்தைப் பாராட்டுகிறோம்.”2 என்று தமிழ்ஒளியைப் பாராட்டி எழுதியுள்ளார் தோழர் குயிலன் அவர்கள்.

கவிஞர் தமிழ்ஒளியின் தனித்தன்மைகள்:
தமது கவிதைகளின் உருவமும் உள்ளடக்கமும் சிறப்பாகவும் முற்போக்காகவும் அமைய வேண்டுமென்று விரும்பி எழுதிய கவிஞர் தமிழ்ஒளி, பண்டைய தமிழ் இலக்கியங்களிலும் இன்றைய புதுமை இலக்கியங்களிலும் அளவற்ற ஈடுபாடு கொண்ட இலக்கிய ரசிகர். கம்பரும் திருவள்ளுவரும் இளங்கோவும் மகாகவிபாரதியும்; அவரது குருநாதர்கள்.மனிதாபிமானம், தேசியம், சோஷலிசம் ஆகிய மாபெரும் கொள்கைகளில் பற்றுகொண்டு, தமிழின் பண்டைய - நவீன இலக்கிய மரபுகளில் தோய்ந்து சிந்தனை வளத்தோடும் சந்த நயத்தோடும் செஞ்சொற் கவிதைகளை யாத்தவர் கவிஞர் தமிழ்ஒளி.கவிஞர் தமிழ்ஒளி தமிழ்ச் சமுதாயத்தில் சாதி வேற்றுமையில்லாத ஏற்றத் தாழ்வற்ற சமூக அமைப்பை நிறுவக் கனவு கண்டார். இந்திய நாட்டிலும் உலகம் முழுவதும் எத்திசையில் எது நடந்தாலும் கொடுமைகளை எதிர்ப்பதிலும் நல்லதை வரவேற்பதிலும் ஆர்வம் காட்டினார்.தமிழ்ஒளி இந்தியச் சமுதாயத்தைக் கட்டிப் போட்டிருக்கும் சாதி மதக் கோட்பாடுகளையும் சுரண்டல் கொள்கைகளையும் ஆணிவேரோடு பிடுங்கி எறியும் வல்லமை தொழிலாளி வர்க்கத்துக்கே உண்டு என்பதை உணர்ந்தார். அதனால்தான் தொழிலாளி வர்க்கத்தின் பல்வேறு பிரிவினரையும் வர்க்க அமைப்புகளில் ஒன்று திரட்டும் பணியைத் தம் கவிதைகளில் பாராட்டினார், துணைநின்றார். தொழிலாளர் சங்கங்களையும், துறைமுகத் தொழிலாளி, டிராம்வேத் தொழிலாளி, சலவைத் தொழிலாளி, நகர சுத்தித் தொழிலாளி எனச் சங்கம் வைத்துப் போராடத் தொடங்கிய அனைத்து உழைக்கும் மக்களையும் பாராட்டிக் கவிதை புனைந்தார். சென்னைத் துறைமுகத் தொழிலாளர் சங்கத்தோடு நேரடியாகத் தொடர்பு கொண்டிருந்தார்.உலகத் தொழிலாளர்களின் உரிமைத் தினமான மே தினத்தைப் பற்றி முதல் முதல் தமிழில் பாடிய கவிஞன் தமிழ்ஒளியே ஆவார்.

தமிழ்ஒளி கவிதைகள்:
தமிழ் இலக்கியப் படைப்புலகில் இருபதாம் நூற்றாண்டு மகத்தானது. தேசிய இனம், தேசியம், சர்வ தேசியம் போன்ற கருத்தாக்கங்கள் கால்கொண்ட காலம் அது. இவ்வகைக் கருத்தாக்கங்களை உள்வாங்கிக் கவிதை படைத்த பாரதியே இந்த மரபிற்குச் சொந்தக்காரன். பாரதியின் இத்தகைய பாடுபொருள்களை மிகச்சரியான மார்க்சியத் தத்துவப் பின்புலத்தோடு புரிந்துகொண்டு, பாவேந்தன் பாரதிதாசனின் மறுமலர்ச்சிச் சிந்தனைகளையும் முழுமையாக உள்வாங்கிக்கொண்டு புதுப்பாதை சமைத்த கவிஞன்தான் தமிழ்ஒளி. பாரதியைப் போல் தமிழ்ஒளியும் கவிதையை வாழ்வாகக் கொண்டவர். வாழ்க்கையையும் கவிதையாக மாற்றியவர். தனக்கென்று வேறு வாழ்க்கையை அமைத்துக்கொள்ளாமல் கவிஞனாகவே வாழ்ந்து கவிதையாக நிலைத்திருப்பவர்.பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரையார் தமிழ்ஒளிக் கவிதைகளில் மூன்று வகைகளைக் காணமுடியும் என்று மதிப்பிடுகிறார். முதல்வகைக் கவிதைகள், பாரதி பாரதிதாசன் வழியில் நின்று முற்போக்குக் கருத்துக்களைக் கூறும் கவிதைகள். இரண்டாம்வகைக் கவிதைகள் கற்பனைத் திறனோடும், உவமை முதலிய அணியழகுத் திறன்களோடும் தமிழ்ஒளி புனைந்த கவிதைகள். இதில் அவர் இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்கள் அனைவரையும் விஞ்சிவிட்டார் என்று புகழ்ந்துரைக்கின்றார். மூன்றாம் வகைக் கவிதைகள் இருபதாம் நூற்றாண்டுக்கே புதுமையான கவிதைகள் முத்தமிழ்க் கவிஞன் இளங்கோவின் முழுமைச்சிறப்பை ஒத்த கவிதைகள் என்று கூறி இவ்வகைக் கவிதைகளுக்குச் சான்றாக, கவிஞரின் விதியோ? வீணையோ? என்ற இசை நாடகத்தைக் குறிப்பிடுகின்றார் பன்மொழிப் புலவர்.3

தமிழ்ஒளி கவிதைகளில் மூன்று கட்டங்கள்:
கவிஞர் தமிழ்ஒளியின் கவிதைகளை மூன்று காலக்கட்டங்களாகப் பிரிக்கலாம்.
1. 1944 முதல் 1947 வரையிலான கவிதைகள்.(சீர்திருத்தக் கவிதைகள்)
2. 1947 முதல் 1953 வரையிலான கவிதைகள்.(முற்போக்குக் கவிதைகள்)
3. 1954 முதல் 1965 வரையிலான கவிதைகள்.(பொதுமைக் கவிதைகள்)
இம்மூன்று காலக் கட்டங்களிலும் தமிழ்ஒளியின் கவிதைகளில் சமூகத்தின் ஒடுக்கப்பட்டவர்களுக்கான ஆதரவுக் குரலே ஓங்கி ஒலிக்கின்றது. கவிஞர் தமிழ்ஒளி கேட்கிறார்,

ஏ செந்தமிழா! என்னுடைய சோதரா! நீ யார்பக்கம்? நிகழ்த்திட வேண்டும் கொள்ளை யடித்திடும் கொடியவர் பக்கமா? துன்பமுற்றிடும் தொழிலாளர் பக்கமா? 4 
கவிஞர் எப்பொழுதுமே துன்பமுற்றிடும் தொழிலாளர் பக்கம்தான். இதில் நான் யார் பக்கமும் இல்லை பொதுவான மனிதன் என்று கூறுபவர்கள் ஊமையர், பேடியர், பேதையர் என்று சாடுகிறார் தமிழ்ஒளி.கவிஞரின் கடைசிப் பத்தாண்டுக் கால வாழ்க்கை புதிர் நிறைந்தது, குழப்பமானது என்றெல்லாம் சொல்பவர்கள் உண்டு. இக்காலக் கட்டத்தில் கவிஞர் இரண்டு பெரும் இடர்ப்பாடுகளுக்கு ஆளானார் என்பர். ஒன்று அவரின் காதல் தோல்வி. மற்றது அவரை மரணம்வரை துரத்திச் சென்று வாட்டி வதைத்த காசநோய்.

தமிழ்ஒளியின் சோகமும் நம்பிக்கையும்:
கவிஞர் தமிழ்ஒளி தம் கவிதைகளிலும் குறுங்காவியங்களிலும் சிறுகதைகளிலும் எதார்த்த வாழ்விலுள்ள இன்னல்கள் பலவற்றைப் பரவலாக எடுத்துரைக்கின்றார். ஒடுக்கப்பட்ட மக்களின் சோகமயமான வாழ்க்கைச் சித்திரம் படிப்பவர்கள் நெஞ்சை நெகிழ்விக்கச் செய்யும் வகையில் கவிஞரின் படைப்புகளில் சித்தரிக்கப்பட்டிருக்கும். காவியங்கள் மிகுதியும் துன்பியல் முடிவுகளைக் கொண்டதாகவே பாடப்பட்டிருக்கும். ஆனால் கவிஞர் எதிர்கால வாழ்வின் மீது தளராத நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதை அவர் கவிதைகளின் வழி உணரமுடியும்.
உழுபவனே நிலத்திற்குச் சொந்தக் காரன்
உழைப்பவனே தேசத்தின் உரிமை யாளன்
புழுவைப்போல் கிடந்ததுவும் பிச்சை வாங்கும்
புன்மைநிலை அடைந்ததுவும் வாடைக் காற்றில்
அழுதுதுயர் அடைந்ததுவும் இனிமே லில்லை
அடங்காத வேகமொடும் ஆர்வத் தோடும்எழுந்து வா! 
உழைப்பவரின் போராட் டத்தில் 
இரண்டின்றிக் கலந்துவிட இதுதான் நேரம் 5

எதிர்காலத்தின் மீது எவ்வளவு நம்பிக்கையோடு கவிதை யாத்துள்ளார் என்பதை உணர்தல் வேண்டும்.

செஞ்சேனைகளின் வெற்றி:
தமிழ்க் கவிஞர்களில் சீனப்புரட்சியை வரவேற்று இங்கே புரட்சிக்குரல் எழுப்பிய ஒரே கவிஞன் தமிழ்ஒளியே. உலகில் எங்கெல்லாம் செஞ்சேனைகள் வெற்றி பெறுகின்றனவோ அவற்றை வரவேற்கத் தமிழ்ஒளி தவறுவதே இல்லை. சீனத்து செஞ்சேனைகளின் வெற்றியைப் பல பாடல்களில் புகழ்ந்து பாடுகின்றார்,
சீனம் நமக்கொரு நம்பிக்கை - அதன்
செஞ்சேனை வெற்றிக ளால்
புது ஞானம் பிறக்குது மண்ணிலே - இந்த
ஞானத்தை அன்று விதைத்தது
வானர சாகிய சோவியத் - அது
வாழ்த்தி மகிழுது தாயென ஈனர்கள்
ஓட்டம் பிடிக்கிறார் - நான்கிங்
எல்லை பரிசுத்தம் ஆகுது. 6 
சோவியத் புரட்சியைப் பல பாடல்களில் புகழ்ந்து பாடியிருந்தாலும் சீனப் புரட்சியைப் பாடும்போதும் சோவியத்நாடு தாய்போல் சீனாவை வாழ்த்தி மகிழ்வதாகப் பாடுகின்றார். சீனப் புரட்சி இந்திய ஏழைகளின் கனவுகளில் நம்பிக்கையை ஊட்டுவதாகவும் இந்தியத் தொழிலாள வர்க்கத்தினருக்கு ஊக்கம் அளிப்பதாகவும் இருக்கிறது என்று சீனப்புரட்சி தந்த நம்பிக்கையில் இந்தியப் புரட்சியையும் கனவு காண்கிறார் கவிஞர் தமிழ்ஒளி.

மே தினமே வருக:
உலகு தழுவிய நிலையில் அவர் படைத்த மேதினக் கவிதை ஒரு நீண்ட கவிதை. தமிழிலக்கியத்திற்கு அது ஒரு புதுமை இலக்கியம். இந்திய மொழிகளில் மேதினத்தை வரவேற்று இதுபோன்றதொரு கவிதையை வேறு யாரும் படைத்ததில்லை என்பதே இக்கவிதையின் தனித்தன்மைக்கு ஒரு சிறந்த சாட்சி. உழைப்பாளி வர்க்கத்தின் உரிமைக்குரலாக, போர்ப்பரணியாக ஒலிக்கும் புரட்சிக் கவிதை அது,
கோழிக்கு முன்னெழுந்து கொத்தடிமை போலுழைத்துப்பாடுபட்ட ஏழைமுகம் பார்த்துப் பதைபதைத்துக்கண்ணீர் துடைக்கவந்த காலமே நீ வருக!மண்ணை இரும்பை மரத்தைப் பொருளாக்கிவிண்ணில் மழையிறக்கி மேதினிக்கு நீர்பாய்ச்சிவாழ்க்கைப் பயிரிட்டு வாழ்ந்த தொழிலாளிகையில் விலங்கிட்டுக் காலமெல்லாம் கொள்ளையிட்டபொய்யர் குலம்நடுங்கப் பொங்கி வந்த மேதினமே! 7என்றெல்லாம் சர்வதேசத் தொழிலாளர் உரிமைப் பிரகடனத்தை நினைவ+ட்டும் வகையில் உணர்ச்சி பொங்கக் கவிதை படைக்கின்றார். மேதினத்தின் வலிமையையும் சாதனையையும் நினைவு கூர்கின்றார், கந்தல் மனிதரவர் கையில் அதிகாரம்ஏற்றிவைத்த நின்பெருமை என்னுயிர்க்கும் மேலன்றோபோற்றினேன் வையப் புரட்சியொடு நீ வருக. 8உலகத் தொழிலாளர்கள் உள்ளவரை நிலைத்திருக்கும் கவிதையை காலத்தால் அழிக்க முடியாத கவிதையைத் தந்து காலத்தை வென்று நிற்கிறார் கவிஞர் தமிழ்ஒளி.

கவிதையின் உள்ளடக்கத்தோடு உருவத்திலும் புதுமை:
கவிஞர் தமிழ்ஒளி முற்போக்கான புரட்சிகரமான சிந்தனைகளை வெறும் பரப்புரையாகத் தம் கவிதைகளில் பெய்துவிடவில்லை. கவிதைகளுக்கே உரிய அழகியலோடு தம் கவிதைகளைப் படைக்கின்றார். இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களில் இவர்போல் சந்த நயத்தோடும் உவமை உருவகப் புதுமைகளோடும் சொல்லாட்சிச் சிறப்புகளோடும் புரட்சிக்கவிதைகள் யாத்தவர் இல்லை என்று சொல்லும்படியாகக் கவிஞரின் கவிதைகள் மிளிர்கின்றன. தமிழ்ஒளியின் காவியங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் தனித்தன்மை வாய்ந்த படைப்புகளாக விளங்குகின்றன.“கருத்துக்களைச் சொல்லுவது மட்டுமே கவிதையின் நோக்கமெனில், யாப்புவகைகள் பல இருக்கத் தேவையிராது. கவிதை ஒரு கலை, அந்த உணர்வோடு இலக்கியம் படைக்கும் கவிஞன் தான் விரும்பும் வண்ணம் கவிதையைக் கையாளும் பொருட்டே யாப்பு வகைகள் பல உருவாக்கப்பட்டன.” 9 என்பது கவிஞர் தமிழ்ஒளியின் கருத்தாக இருந்தது. அதனால் ஒவ்வொரு காவியத்திற்கும் ஒவ்வொரு கவிதைக்கும் ஏற்பப் பலப்பல சந்த நடையுடைய கவிதைகளையும் யாப்பு வடிவங்களையும் தேர்ந்தெடுத்தார் தமிழ்ஒளி.

கவிதைகள் நிலைக்கும் கவிஞன் வாழ்வான்:
காலத்தை வெல்லும் கவிதைகள் தந்த கவி தமிழ்ஒளி கவிதை உலகில் வாழ்ந்தபோதும், வாடி வீழ்ந்தபோதும் மறக்கப்பட்டான், மறைக்கப்பட்டான். சாதி செய்த சதி அது.கவிஞர் தமிழ்ஒளியே கூறுவதுபோல்,

‘வஞ்சகக் காலன் வருவதும் போவதும் வாழ்க்கை நியதியடா! –எனில் செஞ்சொற் கவிதைகள் காலனை வென்று சிரிப்பது இயற்கையடா!’10 

என்று ஆறுதல் கொள்ளத் தோன்றுகிறது.கவிஞர் தமிழ்ஒளி புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் காலமானபோது சொன்ன கவிதை வரிகளைத்தான் தமிழ்ஒளி அவர்களின் மரணத்தின் போதும் நினைவு கொள்ள வேண்டியுள்ளது. அந்த வைர வரிகள் இதோ,சென்னையினின்று பிணம் வரும் என்கின்றசெய்தியைச் சிற்சிலர் பேசி நின்றார் - அவர் சொன்னது கேட்டுக் கொதிப்படைந்து, ‘வெறும் சொத்தைகள்’ என்று வழிதொடர்ந்தேன்!உயிரில் உணர்வில் கலந்த கவிஞன் என்உயிரில் உயிர் கொண்டு உலவுகின்றான்! - வெறுந்துயரில் நான் மூழ்கிக் கிடக்கவில்லை, அவன்தொண்டு சிறந்திடத் தொண்டு செய்வேன்!.11கவிஞரின் இந்த வரிகளை நினைவு கொண்டு கவிஞர் தமிழ்ஒளியின் மரணம் தந்த துயரத்தில் நாம் மூழ்கிவிடாமல் நம் உயிரில் உணர்வில் கலந்து நிற்கும் கவிஞர் அவர்களின் தொண்டு சிறந்திடத் தொண்டு செய்வோம்.

அடிக்குறிப்புகள்:

1. கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி காவியங்கள் தொகுதி- ஒன்று, பக். 129-130.
2. சங்கை வேலவன், தமிழ்ஒளியின் கவிப்பயனம், ப.217.
3. கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி கவிதைகள்; தொகுதி.2, பக்.8,9
4. கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி கவிதைகள்; தொகுதி.2, ப.42
5. கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி கவிதைகள்;; தொகுதி.2, ப.37
6. கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி கவிதைகள்;; தொகுதி.2, ப.54
7. கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி கவிதைகள்;; தொகுதி.2, ப.75
8. கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி கவிதைகள்;; தொகுதி.2, ப.75
9. செ.து.சஞ்சீவி, தமிழ்ஒளி, பக்.401
0. கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி கவிதைகள்;; தொகுதி.1, ப.64
11. கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி கவிதைகள்;; தொகுதி.1, ப.102

புதன், 12 செப்டம்பர், 2007

உலகம் உண்ண உண்… புதிய பார்வையில் பாவேந்தர்

உலகம் உண்ண உண்…

முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி - 8.

உலகம் உண்ண உண், உடுக்க உடுப்பாய் என்று உலகு தழுவிய பார்வையால் மானிட சமுத்திரம் நானென்று கூவிய புதுவைக் குயில் பாவேந்தர் பாரதிதாசன் இருபதாம் நூற்றாண்டு தந்த பாவலர்களில் தலைசிறந்தவர். பாவேந்தரின் கவிதை வீச்சு தனித்தன்மை வாய்ந்தது. செம்மாந்த மொழிநடையும் செழுமையுடைய சொல்லழுகும் பொருளழகும் ஒரு சேர இணைந்து அவரின் பாடல்களுக்குத் தனியழகையும் மெருகையும் ஊட்டவல்லன. தமிழ்க் கவிஞர்களில் மட்டுமில்லாது இந்தியக் கவிஞர்களிலும் கூட வேறு எவரோடும் இணைவைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு அவருடைய கவிதைகள் தமிழ், தமிழர் என்று தொடங்கி திராவிடம் பாடி, தேசியம் பாடி, உலகப் பொதுமைபாடி, மானிடத்தின் மகத்துவம் பாடி விசாலப் பார்வையால் விரிந்து விரிந்து செல்லும் இயல்புடையன.

தமிழ், தமிழர், திராவிடம் எனத் தமிழ்த் தேசியம் பாடும் பாவேந்தரின் கவிதைகள் இந்தியையும் வடக்கையும் ஆரியத்தையும் மூர்க்கமாகச் சாடும் இயல்வுடையன என்றாலும் அவர் குறுகிய கண்ணோட்டம் உடையவரல்லர். உலகப் பொது நோக்கமே பாவேந்தரின் உயர்ந்த குறிக்கோள். தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு சம்பாத்யம் இவையுண்டு தானுண்டு என்போன் சின்னதொரு கடுகு போல் உள்ளங்கொண்டோன்... என்று சாடும் கவிஞர், தூயஉள்ளம் அன்புள்ளம் பெரியஉள்ளம் தொல்லுலக மக்கள் எலாம் ஒன்றே என்னும் தாயுள்ளம் தனிலன்றோ இன்பம் என்று விசாலப் பார்வையால் மக்களை விழுங்குகின்றார்.

அறிவை விரிவுசெய்! அகண்டமாக்கு
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!
! உன்னைச் சங்கமமாக்கு!
மானிட சமுத்திரம் நான் என்று கூவு!
பிரிவிலை எங்கும் பேத மில்லை
உலகம் உண்ண உண்! உடுத்த உடுப்பாய்
புகல்வேன், உடைமை மக்களுக்குப் பொது!
புவியை நடத்துப் பொதுவில் நடத்து!

என்று முழங்கும் பாவேந்தருக்கு, உடைமை மக்களுக்குப் பொது என்பதும் புவியைப் பொதுவில் நடத்த வேண்டும் என்பதும்தான் கனவு, இலட்சியம் எல்லாமே.

உலகு தழுவிய மானிடத்தின் மேன்மையே பாவேந்தர் காண விரும்பிய முன்னேற்றம். அதுவும் சமத்துவத்தின் உச்சியில் நிற்கும் மானிடமே ஆற்றல் வாய்ந்தது என்பது அவர்கொள்கை, ஷமானிடம் என்பது குன்று- தனில் வாய்ந்த சமத்துவ உச்சியில் நின்று, மானிடருக்கு இனிதாக.. வாழ்வின் வல்லமை மானிடத் தன்மை என்று தேர் இது கவிஞரின் வாக்கு. மானிடத்தை நேசிக்கும் கவிஞன், மனிதனுக்கு நேர்ந்த அவலங்களைப் பற்றிச் சிந்திக்காமல் இருப்பானா?

பாவேந்தரைப் பொருத்தமட்டில் ஒடுக்கப்பட்ட மக்களின் நலமே மனித சமூகத்தின் நலம். தமிழகத்தில், இந்தியாவில், உலகத்தில் எங்கே வாழும் மனிதனாக இருந்தாலும் எளியோர் துன்புறுதலைக் காணச் சகிக்காதவர் பாவேந்தர். வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிகுவதா? என்று கோபப்படும் கவிஞர், கொலை வாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே என்று அதற்குத் தீர்வு காணவும் புறப்படுகிறார்.

பாவேந்தரின் கவிதை நெடுகிலும் உழைக்கும் மக்களின் அவலம் விரிவாகப் பேசப்படுகிறது. தொழிலாளர், விவசாயி போன்ற உடலுழைப்புப் பணியாளர்களின் துயரமே பாவேந்தரை பெரிதும் வாட்டுகிறது. உழைப்பரின் மேன்மைகளைப் புகழ்ந்தும் உழைக்காதவர்களின் கீழ்மையைச் சாடியும் தம் கவிதைகளைப் படைக்கிறார். நடவுசெய்த தோழர் கூலி நாலணாவை ஏற்பதும் உடல் உழைப்பிலாத செல்வர் உலகை ஆண்டு உலாவலும் கடவுளின் ஏற்பாடு என்றால் அந்தக் கடவுளையே விட்டொழிக்க வேண்டும் என்கிறார். மண்மீதில் உழைப்போர் எல்லாம் வறியராக இருப்பதும் உரிமை கேட்கும் மக்கள் துன்புறுத்தப்படுவதையும் கண்டு வேதனைகொள்கிறார்.

சித்திரச் சோலைகளே, உமைத்திருத்த இப்பாரினிலே முன்னர் எத்தனைத் தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ உங்கள் வேரினிலே என்றும் அக்கால உலகிருட்டைத் தலைகீழாக்கி அழகியதாய் வசதியதாய் செய்து தந்தவர்கள் உழைப்பாளர்களே என்றெல்லாம் உழைப்பின் மேன்மையை, உழைப்பாளரின் மேன்மையை பலபடப் புகழ்ந்து பேசுகின்றார். மானிடத்தின் மகத்துவம் பேசும் கவிஞன், சமத்துவத்தின் தேவையை, உயர்வைப் பேசும் கவிஞன், உழைக்கும் மக்களின் உன்னதத்தைப் பேசும் கவிஞன் என்பதோடு நில்லாமல்,

புதியதோர் உலகம் செய்வோம்-
கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
பொதுவுடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோடு அதை எங்கள் உயிரென்று காப்போம்

என்று புதிய உலகம் அதுவும் பொதுவுடைமை உலகம் அமைக்க விரும்புகிறார் பாவேந்தர். மேலும் உலகப்பன் பாடலில்

ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர்
உதையப்பராகி விட்டால் ஓர் நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
ஒப்பப்பர் ஆய்விடுவர்

என்று வர்க்கப் போராட்டத்தின் தேவையை வெளிப்படையாகவே வலியுறுத்துகின்றார். சமத்துவ சமுதாயம் காண விழையும், வழிகாட்டும் பாடல்கள் பலவற்றைப் பாவேந்தர் பாடியிருந்தாலும் பாவேந்தர் தம்மை ஓர் பொதுவுடைமை இயக்கக் கவிஞராக வெளிப்படுத்திக் கொள்ள விரும்பினாரா? என்பது ஒரு சிக்கலான கேள்வி.

பாரதியின் அறிமுகத்திற்கு முன்பே பாவேந்தர் கவிதைகள் எழுதும் பயிற்சி உடையவராயிருந்தார். ஆனால் அந்தக் கவிதைகள் எல்லாம் தேய்ந்த பாட்டையில் செல்லும் சராசரிக் கவிதைகளாகத்தான் இருந்தன. பாடலில் பழமுறை பழநடை என்பதோர் காடு முழுதும் கண்டபின் கடைசியாய்ச் சுப்பிரமணிய பாரதி தோன்றியென் பாட்டுக்குப் புதுமுறை புதுநடை காட்டினார். என்று பாவேந்தரே பாரதியால் தாம்பெற்ற புதுமுறை புதுநடை பற்றிக் குறிப்பிடுகின்றார்.

பாரதியின் நட்புக்குப் பின்னர் பாரதிதாசன் ஆன கனக.சுப்புரத்தினம் தொடக்கக் காலங்களில் தேச விடுதலைக்குக் காளியை வேண்டுவது, பாரத தேசத்தை வாழ்த்திப் பாடுவது, காந்தி, லஜபதிராயைப் பகழ்ந்து பாடுவது எனப் பாரதியின் சிந்தனைத் தடத்தை ஒட்டியே தம் கவிதைகளை யாத்துக் கொண்டிருந்தார். பாரதி மறைவுக்குப் பின்னர்- 1930 க்குப் பிறகே பாவேந்தர் பாடல்கள் புதிய பரிமாணங்களைப் பெற்றன. தமிழக அரசியலில் சிங்கார வேலரும் தந்தைப் பெரியாரும் ஏற்படுத்திய சமூக விழிப்புணர்வு நெருப்பு பாவேந்தரிடமும் பற்றிக்கொண்டது. இந்தக் காலக் கட்டங்களில் பாரதிதாசன் படைத்த படைப்புக்களில் பொதுவுடைமைச் சிந்தனைகளும் சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களும் பின்னிப் பிணைந்து காணப்பட்டன. பாரதிதாசன் கவிதைகள் முதல் தொகுதி இதற்குத் தக்கதோர் சான்று.

மக்கள் தலைவர் வ.சுப்பையா அவர்கள் வழிகாட்டுதலின் பேரில் புதுவையின் மூன்று பஞ்சாலைத் தொழிலாளர்களும் இணைந்து தொழிலாளர் உரிமைகளுக்காக போராடிய போராட்டமும், அதன் உச்சகட்டமாக 1936 ஜூலை 30 அன்று நடந்த பஞ்சாலைத் தொழிலாளர்கள்- பிரஞ்சு ராணுவம் இடையிலான வீரப்போரும், அன்றைய துப்பாக்கிச் சூட்டில் 12 தொழிலாளர்கள் பலியானதுமான புதுவையின் முதல் சுதந்திரப் போரை,

பார்க்கப் பரிதாபமே மில்லில் பாடுபட்டோர் சேதமே- உளம் 
வேர்க்கும் அநியாயமே மக்கள் வீணில் மாண்ட கோரமே

என்று தொடங்கும் நீண்ட கவிதையாகப் பாவேந்தர் உள்ளம் உருக வடித்துத் தந்துள்ளார்கள். 1940 தொடங்கிப் பாவேந்தர் தம்மை முழுமையான திராவிட இயக்கக் கவிஞராக, தமிழ்த் தேசியம் நாடும் கவிஞராக, தனித் தமிழ்நாடு அல்லது தனித் திராவிடநாடு கோரும் கவிஞராகத் தம்மை அடையாளப் படுத்திக்கொண்டார். ஆனாலும் தாம் சார்ந்த சுயமரியாதை இயக்கம் காண விரும்பும் சமுதாயமாக அவர் சமத்துவச் சமுதாயத்தைக் காட்டத் தவறியதே இல்லை.

பாவேந்தர் பாடல்கள் வழி ஊற்றம் பெற்ற திராவிட இயக்கத்தினர் அனைவரும் பொதுவுடைமைச் சமூகமே, திராவிட இயக்கத்தின் குறிக்கோள் என்பதாக உணர்ந்தார்கள். ஆனால் திராவிட இயக்கத் தலைவர்கள் அப்படிப்பட்ட திட்டம் எதனையும் முன்மொழியவேயில்லை. சாதி வேறுபாடுகளுக்குக் காரணமாயிருந்த ஆரிய பௌராணிகக் கருத்துக்களே வர்க்க வேறுபாடுகளுக்கும் காரணம் என்ற தொனியிலேயே பாவேந்தர் வர்க்கமுரண் பற்றி சிக்கல்களை வெளிப்படுத்தினார்.

1960 வரை பாவேந்தர், திராவிடத் திருநாடு அமையும் என்ற கனவிலேயே எல்லா இயக்க உள்முரண்களோடும் தம் பாட்டுப்பயணத்தைத் தொடர்ந்தார். இடையில் புதுவையின் முதல் தேர்தல் 1955 ஆம் ஆண்டு நடந்தது. கம்ய+னிஸ்ட் கட்சியின் தலைமையில் அமைந்த மக்கள் முன்னணியின் சார்பில் பாரதிதாசன் காசுக்கடைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். மக்கள் தலைவர் சுப்பையாவும் பாரதிதாசனும் இணைந்து நின்று தேர்தல் களத்தில் பணியாற்றினர். மக்கள் முன்னணி எதிர்க்கட்சியாகப் பணியாற்றிய அந்தச் சபையில் வ.சுப்பையா எதிர்க்கட்சித் தலைவர், பாவேந்தர் எதிர்க்கட்சித் துணைத் தலைவர். புதுவையில் ஓர் பல்கலைக் கழகம் ஏற்படுத்த வேண்டும், அதற்கு பாரதியார் பெயர் சூட்டப்பட வேண்டும் என்ற மக்கள் முன்னணியின் தீர்மானத்தை முன்மொழிந்து பாவேந்தர் பேசினார். சபை இத்தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியது.

தனித் திராவிட நாடு பிரிவினைக் கோரிக்கையும் இந்தி எதிர்ப்பும் பாவேந்தரின் பாடல்களில் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருந்த நேரத்திலும் பாவேந்தர் உலக நடப்புகளை ஊன்றிப் பார்த்து அவ்வப்போது தம் எதிர்வினைகளைப் பாடல்களில் பதிவுசெய்யத் தவறியதில்லை. ரஷ்ய நாடு வான்வெளி ஆய்வுகளில் ஈடுபட்டு நிலவுக்கு ராக்கட் ஏவத் திட்டமிடுவதை, ஒரு ரஷ்யத் தொழிலாளி விமர்சிப்பதாகக் கவிதை எழுதினார். ஏவுகணை ஒன்றை இயற்றுதற்குச் செலவிடும் பெருந்தொகை இருந்தால் உலவும் ஏழை மக்களுக்கு உதவுமே இது அத்தொழிலாளியின் குமுறல்.

வியட்நாம் மீது அமெரிக்கா ஏகாதிபத்தியத் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கும் போது , வியட்நாம் மக்களின் வீரம் அமெரிக்காவின் இடுப்பை ஒடித்துப் போடும் என்று அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்தார் நம் பாவேந்தர். அமெரிக்காவைச் சாடும் அதே வரிகளில் இந்திய எல்லையில் கால் நீட்ட நினைக்கும் சீனாவுக்கும் ஒரு குட்டு வைக்கிறார்.குமுறுகிறார், கோணல் மன அமெரிக்காவே!குடியரசின் பேராலே அடிமை கொள்ளல்இமயத்தின் எல்லையிலே காலை நீட்டும்சீனரைப்போல் இழிவெதற்கு? படைவிலக்கு.. .. ..ஈன்றவரும் வெறுக்கும் வண்ணம், வியத்நாம் வீரம்இடுப்பொடித்துப் போடும் உனை எச்சரிக்கை.இபபடி, உலகு தழுவிய பொது நோக்கு என்பதைப் பேச்சோடு நிறுத்திக் கொள்ளாமல். சரியான விமர்சனங்களையும் கண்டனங்களையும் எச்சரிக்கைகளையும் பதிவு செய்து மானிட சமுத்திரம் நான் என்பதை நிறுவுகிறார்.

1960க்குப் பிறகு பாவேந்தர் நேரடி அரசியலிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகத் தொடங்குகிறார். இந்தக் காலக்கட்டங்களில் பழைய சிலப்பதிகாரம் மணிமேகலைக் காப்பியங்களைக் கண்ணகி புரட்சிக் காப்பியம் என்ற பெயரிலும் மணிமேகலை வெண்பா என்ற பெயரிலும் மறு ஆக்கம் செய்கின்றார். அரசியலில் இருந்து ஒதுங்கும் முயற்சியே இவ்வகை மறு ஆக்கங்கள். திரைப்படம் எடுக்கும் முயற்சியில் முழுதாக ஈடுபட்டுத் தோல்வியடைகின்றார். அரசியலை முற்ற முழுதாக வெறுக்கத் தொடங்குகின்றார்.

இந்நாள் இருக்கும் கட்சிகள் தாமும்கட்சித் தலைவர் என்று கழறும் ஆட்கள் தாமும் அறங்கொல் பவரே!தமிழ கத்தின் தலைவர் என்பர்தமிழைச் சாக டிக்கப் பின்னிடார்,தமிழ்க்கொலை பார்க்கத் தாளம் போடுவர்பொழுது விடிந்து போழுது போனால்காசு பறிப்பதே கடனாய்க் கொள்வர்!என்று தாம் அரசியலில் இருந்து விலகுவதற்கான காரணத்தையும் கசப்போடு வெளிப்படுத்துகின்றார் பாவேந்தர். பாவேந்தர் குற்றம் சாட்டும் கட்சிகள் எவை? தலைவர்கள் எவர்? என்பனவெல்லாம் வரலாறு அறியும்.

இத்தகு சூழலில் பாவேந்தரும், தி.மு.க.வும் வேறு வேறு காரணங்களுக்காக திராவிடத் தனிநாடு முழக்கத்தைக் கைவிடுகின்றனர். 1962 மே மாதம் பம்பாயில் நடைபெற்ற பன்மொழிக் கவியரங்கில் தமிழகத்தின் சார்பில் கலந்துகொண்ட பாவேந்தர் இந்திய தேசியத்தை ஏற்றுக் கவிதை வழங்குகின்றார். இமயச் சாரலில் ஒருவன் இருமினான் குமரிவாழ்வான் மருந்து கொண்டோடினான் என்ற அடிகள் இக்கவியரங்கில் ஒலித்தவைதாம். 1963 ஆம் ஆண்டு நவம்பர் 3 இல் நடைபெற்ற தி.மு.க. செயற்குழு திராவிட நாடு தனிநாடு கோஷத்தைக் கைவிடுவதாக அறிவிக்கின்றது.

பாவேந்தரைப் பொருத்தவரையில் 1960 முதல் 64 வரையிலான (பாவேந்தரின் கடைசி காலங்கள்) ஆண்டுகள் பலவகையிலும் அவருக்கு நெருக்கடியான காலம். பாவேந்தரின் திரைப்பட முயற்சியின் தோல்வி, திராவிட இயக்கங்களுடனான மோதல் போக்கு, பொதுவுடைமை இயக்கத்தினருடனான பிணக்கு என பாவேந்தர் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளானார். இந்தச் சூழலில் பாவேந்தர் எழுதிய பொதுவுடைமைக்குப் பகைவனா? நான், என்ற கவிதை அதிக முக்கியத்துவம் பெருகின்றது.பொது வுடைமைக்குப் பகைவனா? நான்?பொதுவுடைமைக் காரர் எனக்குப் பகைவரா?இல்லவே இல்லை, இரண்டும் சரியில்லை.

பாரதி பாட்டில் பற்றிய பொதுவுடைமைத் தீ
என்றன் பாட்டு நெய்யால் வளர்ந்துகொழுந்துவிட்
டெரிந்து தொழிலாள ரிடத்தும்உழைப்பாள ரிடத்தும்
உணர்வில் உணர்ச்சியில்மலர்ந்து
படர்ந்ததை மறுப்பவர் யாரோ?
சிங்கார வேலர் முதல் சீவா வரையில்
அங்காந் திடுவர் என் பாட்டினுக்கே
சுப்பையாவின் தொடர்பும் தோழமையும்
எஸ்.ஆர்.சுப்பிர மணியம் இணைப்பும் பிணைப்பும்
எப்பொழுதும் எனை லெனினால் ஸ்டாலினால்
புதுமை கொணர்ந்த பொதுமை நாட்டை
மதுத் தமிழாலே மடுக்கும் என்பாட்டு

பொதுவுடைமைக்கும் தமக்கும் உள்ள ஆழமான பிணைப்பை வெளிப்படுத்தும் இந்தக் கவிதை ஒரு வரலாற்று ஆவணம். இந்தப் பாடலின் பின்பகுதியில் பொதுவுடைமை இயக்கத்தினர் மீது சில பல குற்றச்சாட்டுகளை பாவேந்தர் அள்ளி வீசுகிறார். கவிஞரின் கோபக்கனலில் வந்து வீழ்ந்த வார்த்தைகள் அவை. சிங்கார வேலர், ஜீவா, சுப்பையா இவர்கள் மீது பாவேந்தர் எந்த அளவிற்கு மதிப்பு வைத்திருந்தார் என்பதையும், என் இயக்கம் பொதுவுடைமை இயக்கம்தான் என்பதை எத்துணை அழுத்தமானக் கவிஞர் பதிவுசெய்கிறார் என்பதும் கூர்ந்து கவனிக்கத்தக்கது.

1963 ஜனவரி 18 ஜீவா மறைவுக்கு பாவேந்தர் வடித்த கவிதையே அவரின் கடைசிக் கவிதை என்ற ஜீவபாரதி அவர்களின் கூற்றும் இங்கே நினைத்துப் பார்க்கத்தக்கது. தம் உலகு தழுவிய பார்வையால் மானிடத்தின் மகத்துவத்தைப் பாடி சமத்துவ சமுதாயம் காணத் துடித்த பாவேந்தர் எந்தச் சூழலிலும் விட்டுக் கொடுக்காத ஒரே தத்துவம் மார்க்சீயமே என்பதில் ஏதும் ஐயமில்லை.

பருத்திக்காடும் வெடித்த பஞ்சும்- நூல் மதிப்புரை

பருத்திக்காடும் வெடித்த பஞ்சும்

முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி.

உரைநடை எங்கே கவிதையாக உருவெடுக்கிறது என்பது ஒரு படைப்பு ரகசியம். ஒரு முழுக்கவிதையில் ஒரே ஒரு சொல்லில் கவிதை உட்கார்ந்து கொண்டு கண்ணாம்பூச்சி விளையாடும். அந்தச் சொல்லைக் கண்டுபிடித்து விளையாட்டைத் தொடர்வது அத்துணை எளிய செயலாய் இருப்பதில்லை. பல சமயங்களில் அப்படி ஒரு சொல்லும் கிடைக்காமலேயே முழு கவிதையும் நம்மை ஏமாற்றிவிடுவதுண்டு. கவிதை என்று சொல்லிவிட்டால் நம்பித்தானே ஆகவேண்டும் என்ற பழக்கத்தால் ஏமாற்றங்களைப் பல சமயத்தில் நாம் வெளிப்படுத்துவதில்லை.

"பருத்திக் காடு" புதுவை யுகபாரதியின் புதிய ஹைக்கூ கவிதைத் தொகுப்பு. இந்நூல் அவரின் மூன்றாவது ஹைக்கூ கவிதைத் தொகுப்பு. ஹைக்கூ, ஜப்பானில் பிறந்து வளர்ந்த கதையெல்லாம் நாம் நிறைய பேசியாகிவிட்டது. தமிழில் ஹைக்கூ வந்தது பழங்கதையாகி விட்டது. தமிழில் ஹைக்கூ புதிய முகங்களோடு புதிய குணங்களோடு புதுப்பிறவி எடுத்தாகிவிட்டது. பிறகு ஏன் ப+ர்வஜென்மக் கதைகளெல்லாம்? தமிழில் ஹைக்கூ எழுதக் கற்றுக் கொள்வதென்பது ஷவெந்நீர் வைக்க கற்றுக் கொள்வதைவிட எளிய காரியமாகிவிட்டது. இந்த எளிமை இந்தக் கவிதை வடிவத்திற்கு ஒரு ஜனநாயகத் தன்மையைக் கொடுத்துள்ளது என்பதால் மகிழ்ச்சியே.

கவிதை எல்லோருக்குமானது, ஒவ்வொருவர் மனதிலும் கவிதை இருக்கிறது, அதை வடித்தெடுப்பவன் கவிஞனாகிறான். இதுவரை உலகத்தில் எழுதப்பட்ட கவிதைகளை விட எழுதப்படாமல் ஒவ்வொருவர் மனதிலும் பிறந்து தவழ்ந்து வெளிவராமல் செத்துப்போன கவிதைகள் ஏராளம். அவற்றில் உலகின் தலைசிறந்த கவிதைகள் ஏராளமிருக்கலாம். இனி ஒரு கவிதையையும் சாகவிடமாட்டோம் என்ற நம்பிக்கை துளிர்விட ஆரம்பித்திருக்கிறது.

தமிழில் வெளிவந்துள்ள நூற்றுக்கணக்கான ஹைக்கூ நூல்களில் பருத்திக்காடு ஒரு புதுமைப்படைப்பு. ஏனெனில் இந்நூல் அந்தாதி யாப்பில் புதுவையிலிருந்து வெளிவரும் முதல் ஹைக்கூ தொகுப்பு. அதிலும் முதல் பன்னிரண்டு ஹைக்கூ பாடல்கள் அ முதல் ஒள வரை வரிசைப் படுத்தப்பட்ட உயிர் எழுத்துக்களில் தொடங்குகின்றன. வாழ்க்கை ஒரு சுழலும் வட்டம், இதில் மேல் கீழ், அந்தம் ஆதி (தொடக்கம் முடிவு ) என்பதெல்லாம் ஒரு கற்பிதம். ஒரு கவிதையின் முடிவு அடுத்த கவிதையின் தொடக்கமாயிருப்பது சுழலும் வட்டத்தை ஞாபகப்படுத்துகின்றது.

பருத்திக்காடு:நிலவுக் குழந்தை:
இந்நூல் தமிழ், இயற்கை, சமூகம், அரசியல் என்று இன்றைக்குப் பரவலாகப் பாடுபொருளாகும் அத்துணை செய்திகளையும் பாடுகிறது, சாடுகிறது. கவிஞனுக்குத்தான் இந்த வசதியிருக்கிறது எதையும் சாடலாம், பாடலாம்.சோற்றுப் பருக்கைகள் நிலவுக் குழந்தை சிந்துகிறது விண்மீன்கள் இயற்கையைப் பாடாத கவிஞன் ஏது? புதுவை யுகபாரதியின் பார்வையில்
விண்மீன்கள்
நிலவுக் குழந்தை சிந்திய
சோற்றுப் பருக்கைகள்.

இயற்கையைக் காட்சிப் படிமமாக்குவதில் கவிஞர் வெற்றி பெற்றுள்ளார். ஷகுறுகுறு நடந்து சிறுகை நீட்டி இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும் நம்மை இன்ப மயக்கத்தில் ஆழ்த்தும் மழலைச் செல்வங்கள் என்றானே புறநானூற்றுப் புலவன், அந்தப் புலவன் மகிழ்ந்த மகிழ்ச்சியை அப்படியே உள்வாங்கி வடித்த கவிதை இது.

அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள்
சிறு கை அளாவிய கூழ் (குறள்-64)

என்ற குறள் கூறும் சிறுகை அளாவிய கூழை நினைவு படுத்தும் கவிஞரின் கற்பனையில் விண்மீன்கள் சோற்றுப் பருக்கைகளாகவும் நிலவு குழந்தையாகவும் நம் மனக்கண் முன் காட்சிகளாக விரிகின்றன.

கல்மரக்காடுகள்: 

ஒரு சொல்லில் கவிதை உயிர் வாழ்ந்துவிடும் என்ற இலக்கணத்திற்கு இலக்கியமாய் இந்நூலில் காணப்படும் ஒரு சொற்சேர்க்கை, ஷகல்மரக்காடுகள். மரக்காடுகள் நமக்குத் தெரியும், இதென்ன கல்மரக்காடுகள்?. மரங்களுக்கு உயிர் உண்டு, உயிருள்ள மரங்கள் கார்பன்-டை-ஆக்ஸைடை சுவாசித்து ஆக்ஸிஸனை வெளியிட்டு மனித உயிர்க்குலங்களையே காக்கின்றன. இந்தக் கல்மரக்காடுகள் உயிரற்றவை, உயிருள்ள மரங்களின் அழிவில் பிறந்து உயிர்க்குலங்களை அழிக்கப் பிறந்தவை. கல் சூ மரம் என்ற சமனற்ற எதிர்நிலைக் கருத்துக்களை இணைத்து கவிதை படைக்கின்றார் கவிஞர் யுகபாரதி.

விற்பனை அதிகரிப்பு
விளைச்சல் நிலங்களில்
கல்மரக்காடுகள்

கல்மரக்காடுகள்
கண்ணீர் சொரிகின்றன..
மழை வேண்டி

இந்த இரண்டு கவிதைகளிலும் இடம்பெறும் கல்மரக்காடுகள் என்ற சொற்சேர்க்கை. விளைச்சல் நிலங்களில்- கல்மரக்காடுகளை உருவாக்கும் கயமையைச் சாடும் கோபமும், மழைவேண்டி கல்மரக்காடுகள் கண்ணீர் சொரியும் இளிவரலும் இவ்விரு கவிதைகளில் இரண்டு வேறுவேறு மெய்ப்பாடுகளைத் தோற்றுவிக்கின்றன.

சமகால அரசியல் விமர்சனம்: ஒவ்வொரு மனிதனுக்கும் கடமைகள் பல உள்ளன. தனிமனிதக் கடமைகள், சமுதாயக்கடமைகள், நாட்டுக்கான கடமைகள் என அவை விரிந்து செல்லும். சராசரி மனிதனுக்குள்ள கடமையை விட படைப்பாளிக்குக் கூடுதல் கடமைகள் உண்டு. தான் வாழும் காலத்தைக் கூர்ந்து கவனித்து நடக்கும் அவலங்களுக்கு எதிர்வினை புரியும் கடமை அது. அப்படிப் பட்டவன்தான் படைப்பாளி, மற்றவன் எழுத்தால் வயிறு வளர்ப்பவன். கவிஞர் புதுவை யுகபாரதி தாம் வாழும் காலத்தை விமர்சனக் கண்ணோட்டத்தோடு கூர்ந்து பார்க்கிறார். உரிய எதிர்வினையை எழுத்தில் வடிக்கிறார். அச்சமற்று நெஞ்சுறுதியோடு அவர் வைக்கும் அரசியல் விமர்சனங்கள் இந்த நூலின் தனிச் சிறப்பு.

தமிழ்நாடு தலைகுனிகிறது
சாய்பாபாவுடன்
கலைஞர்?

இலவச அரிசி
உழைப்புக்கு...
வாய்க்கரிசி

இந்த இரண்டு கவிதைகளில் முன்னது தமிழக அரசியலை உணர்வு ப+ர்வமாக விமர்சிக்கிறது, பின்னது புதுவை அரசியலை அறிவு பூர்வமாக விமர்சிக்கிறது. கவிஞன் தான் வாழும் நிலத்தில் காலூன்றிக் கொண்டு உலகம் முழுவதும் ஏன்? பிரபஞ்சம் முழுவதும் சிறகடித்துப் பறக்கும் விந்தையானவன். மின்னொளி கொடுத்துக் கண்ணொளி பறிப்பு சிறப்புப் பொருளியல் மண்டலம்இன்றைக்கு இநதியாவின் பற்றியெரியும் பிரச்சனை, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பது தொடர்பானது. மேற்கு வங்கத்தில் நந்தி கிராமத்தில் நடந்த துப்பாக்கிச் சூடும் அப்பாவிப் பொதுமக்கள் செத்து மடிந்ததும் இந்தியாவின் பல பகுதிகளிலும் இதே சிக்கல் வெடித்துக் கிளம்புவதும் அன்றாடச் செய்திகள். சிறப்புப் பொருளாதார மண்டலம் யாருக்கு நன்மை செய்யும்? யாரை பலி வாங்கும்? என்ற கேள்விகளுக்கெல்லாம் சுருக்கமாக, சுருக்கென்று தைப்பது போல் விடையளிக்கிறார் புதுவை யுகபாரதி.

மின்னொளி கொடுத்துக் கண்ணொளி பறிப்பு. வாழ்வாதாரங்களைப் பறித்துக் கொண்டு மண்ணின் மக்களை நாடோடிகளாக்கிய பின் எது கிடைத்து என்ன பயன்? கண்ணொளி போன பின் மின்னொளி இருந்தென்ன? இருண்டென்ன? இந்தக் கவிதை ஏற்படுத்தும் தாக்கம் மிகப்பெரிது. கவிஞர் யுகபாரதியின் பருத்திக்காடு நம்மை நோக்கி எழுப்பும் கேள்விகள் ஏராளம். சில கவிதைகள் விடை சொல்கின்றன. சில கவிதைகள் மௌன சாட்சியாய் நிற்கின்றன. சில ஹைக்கூக்கள் நம்மை கவிதைவரை அழைத்துச் செல்லவில்லை என்றாலும் அதனால் பெரிய குறையொன்றுமில்லை. ஒரு படைப்பாளியின் எல்லாப் படைப்புகளுமே அசாதாரணமாயிருக்க வேண்டும் என்று நினைப்பது பேராசை. நல்ல தனித் தமிழில் படைக்கப் பட்டிருக்கும் பருத்திக்காடு கவிஞரின் மற்றுமோர் வெற்றிப்படைப்பு.யுகபாரதியின் ஒரு கவிதையோடு நிறைவு செய்கிறேன்.

உணர்வு வயப்படுங்கள்
பிறகு சிந்திக்கலாம்
ஊர் பிழைக்கும்..

நூல் மதிப்புரை - பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ.


மொழியும் அதிகாரமும்

முனைவர்.எல். இராமமூர்த்தி

முனைவர் எல். இராமமூர்த்தி அவர்களின் ஷமொழியும் அதிகாரமும் என்ற இந்நூல் தமிழ்மொழி வளர்ச்சி பற்றிய சிந்தனைகளை உள்ளடக்கிய ஆய்வு நூலாகும். மொழியியல் வல்லுநரான இராமமூர்த்தி தமிழ்மொழியின் ஆட்சி, வளர்ச்சி குறித்த உண்மையான அக்கறையோடு இந்நூலைப் படைத்திருக்கின்றார். சமுதாய மொழியியல், மொழித் திட்டமிடுதல், மொழி வளர்ச்சி போன்ற பயனாக்க மொழியியல் துறைகளில் கல்வி, ஆய்வு இருநிலைகளிலும் தொடர்ந்து பணியாற்றிவரும் இந்நூலாசிரியர் தம் ஆழ்ந்த அனுபவங்களின் பிழிவாக இந்நூற் கட்டுரைகளை உருவாக்கியுள்ளார்.மொழியின் வாழ்வும் வரலாறும் சமுதாயத்தோடும் அதன் அன்றாட இயக்கத்தோடும் பின்னிப் பிணைந்தவை. ஒரு மொழியின் வளர்ச்சிக்கு அந்த மொழியின் வளம் மட்டுமில்லாமல் அந்த மொழி பேசும் இனத்தின் ஆட்சியும் அதிகாரமும் பெருந்துணை புரிகின்றன. அதிகாரம் படைத்த இனத்தின் /தேசத்தின் மொழி காலப்போக்கில் தேசிய, உலக மொழி அந்தஸ்தைப் பெறுகின்றன. அதிகாரமற்ற தேசிய இனங்களின் மொழிகள் எத்துணை வளம் மிக்கதாயினும் தேக்கமடைகின்றன. இத்தகு புரிதல்களோடு மொழியியல் நோக்கில் மொழியின் அதிகாரம், அதிகார மொழி குறித்த பல்வேறு விவாதங்களை இந்நூல் முன்வைக்கிறது.ஷஷதமிழின் பண்டைய இலக்கியப் பெருமிதங்களும் எல்லாம் தமிழில் முடியும் என்ற சொல்லாடல்களும் மட்டும் தமிழ்க்கல்வி வளர்ச்சிக்கு உதவாது. பொருளாதார மேம்பாட்டை நோக்கிய தமிழ்க்கல்வி, அதை உருவாக்கக் கூடிய அரசியலே இதனைச் சாத்தியப்படுத்தும். மொழி பெயர்ப்புகளும், அகராதி உருவாக்கப் பணிகளும், தமிழ்க் கல்விக்கான கருவிநூல்கள் தயாரித்தலுமே தமிழை அதிகார மொழியாக்க உதவும். என்றும்,ஷஷநவீன சூழலில் தமிழ் அதிகார மொழியாவதற்கு அடிப்படையாக அமைவது தமிழ்க் கல்வி ஃதமிழ்வழிக் கல்வி மட்டுமே. இங்கே தமிழ்க்கல்வி என்பது ஆரம்பப் பாடம் முதல் ஆராய்ச்சி வரை அனைத்துத் துறைகளிலும் தமிழைப் பயன்படுத்துவது என்பதாகக் கொள்ள வேண்டும். என்றும் தமிழை அதிகார மொழியாக்குவதற்கு உரிய பல்வேறு வழிமுறைகளை இந்நூலின் பல இடங்களிலும் சுட்டிக்காட்டும் நூலாசிரியர் ஆட்சித் தமிழ், கணினித் தமிழ் என்ற இரண்டு முக்கிய துறைகளில் ஏற்படும் மொழிப் புதுமையாக்கத்தால் தமிழ் சந்திக்கும் சிக்கல்களையும் கருத்தியல் நோக்கில் விரிவாக ஆராய்கின்றார்.
மொழியும் அதிகாரமும் என்ற முதல் இயல் மொழியில் அதிகாரம் செயல்படும் விதத்தை விளக்கி அதிகார மொழி, மொழி அதிகாரம், அதிகார மொழியாக்கம் என்ற மூன்று பகுதிகளாக விரிந்து செல்கிறது. மொழி வளர்ச்சியில் மொழி உணர்ச்சி முக்கிய பங்கு ஆற்றுவதால் இரண்டாம் இயல் ஷதமிழ் உணர்வும் தமிழ் வளர்ச்சியும் என்ற தலைப்பில் அமைக்கப்பட்டுள்ளது.மொழியின் திட்டமிட்ட வளர்ச்சி என்பது மொழியின் பயன்பாட்டுத் தேவைக்கு ஏற்பச் செய்யப்படுவதால் அதைச் சமூகவியலார் நவீனமயமாக்கம் அல்லது புதுமையாக்கம் என்று அழைப்பார்கள். எனவே மூன்றாவது இயல் ஷதமிழும் நவீனப்படுத்தமும் என்று அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக நவீனமயமாக்கம் என்பது ஒருவித அதிகாரப் பரவலாக்கம்தான். அந்த அதிகாரப் பரவலாக்கத்தின் ஒரு கூறு மொழித் தூய்மையாக்கம் எனவே நான்காவது இயலாகத் ஷதமிழ்த் தூய்மையாக்கம் அமைக்கப்பட்டுள்ளது.மொழி வளர்ச்சியில் புதுமையாக்கமும் தூய்மையாக்கமும் முரண்நிலையில் செயல்படுவன. ஆயினும் புதுமையாக்கத்திற்குக் கடிவாளம் போலத் தூய்மையாக்கம் செயல்படும். எனவே ஐந்தாவது இயல் ஷதமிழ் வளர்ச்சி: தூய்மை -புதுமையாக்கம் -அதிகாரம் என அமைக்கப்பட்டுள்ளது. புதுமையாக்கத்திற்குப் பின் தேவைப்படுவது தரப்படுத்துதல் எனவே அடுத்த ஆறாவது இயல் ஷதமிழும் தரமொழிக் கோட்பாடும். என்ற தலைப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வியல் தர மொழியின் பண்புகள், செயல்கள் அகியவற்றைக் கோட்பாட்டு நிலையில் முதலில் விளக்கித் தமிழின் தனித்தன்மையைச் சுட்டிக்காட்டி ஆட்சித் தமிழ், அறிவியல் தமிழ், தகவல் தொடர்புத் தமிழ் அகிய துறைகளில் காணப்படும் பிரச்சனைகளையும் விளக்குகிறது. ஷதமிழ் வளர்ச்சியும் கணினியும் என்ற ஏழாவது இயலும் ஷதமிழ் கற்றலும் கணினியின் பல்லூடகமும் என்ற எட்டாவது இயலும் கணினி, மல்டிமீடியா ஊடகங்களில் தமிழின் பயன்பாடு மற்றும் தமிழைக் கையாளுவதில் உள்ள சிக்கல்கள் குறித்துப் பேசுகின்றன. நூலின் இறுதி இயலாம் ஒன்பதாம் இயல் ஷதமிழ் வளர்ச்சியும் முரண்பாடுகளும் என்ற தலைப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வியல் தமிழ்வளர்ச்சியில் காணப்படும் ஒட்டுமொத்த கருத்தியல் முரண்பாடுகளைத் தொகுத்தும் வகுத்தும் விவாதிக்கின்றது. தமிழ் வளர்ச்சிக்கு முரண்களே அரண்களாக இருந்து துணைபுரிகின்றன என்ற ஆசிரியரின் முடிபு அவரின் தமிழ்ப்பற்றை வெளிப்படுத்துகின்றது.
மொழியும் அதிகாரமும் என்ற இந்நூலைக் குறித்து நூலின் ஆசிரியர் முனைவர் எல்.இராமமூர்த்தி அவர்கள் தம் முன்னுரையில்,இந்நூல் மொழி வளர்ச்சிக்கான அடிப்படைக் கோட்பாடுகளையும், மொழி உணர்வு, சமூகக் கருத்தியல்கள், அக்கருத்தியல்களினால் மொழியில் ஏற்படும் மாற்றங்கள், மொழியின் தன்மைகள் ஆகியவற்றை விளக்குகிறது. இவை பற்றிய புரிதல்கள்தான் தமிழ்க் கல்விஃ தமிழ்வழிக் கல்விக்கான வளர்ச்சியைத் தடையின்றிச் செயல்படுத்த உதவும். என்கிறார். தமிழ்வழிக் கல்வியே ஆசிரியரின் இலட்சியமாய் இருப்பதை இந்த மேற்கோளால் நாம் உணரமுடியும்.மொழிகுறித்த சரியான புரிதல்களோடு எழுதப்பட்டிருக்கும் இந்நூல் தமிழ், செம்மொழியாக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தத் தருணத்தில் வெளிவந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு. இந்நூலில் ஆசிரியர், புறநிலையில் நின்று கருத்துக்களை விவாதிக்கும் முறையும் மொழிநடையும் அறிவியல் ப+ர்வமானவை. உணர்ச்சி ப+ர்வமான கருத்துக்களை அறிவு ப+ர்வமாக விவாதிக்கும் நூல் என்று செ.வை.சண்முகம் தம் அணிந்துரையில் இந்நூல் பற்றிக் குறிப்பிட்டிருப்பது சாலப் பொருத்தமே.

பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ.

பிஜி தமிழர்கள் கற்கத் தவறிய பாடங்களும்

பிஜி தமிழர்கள் கற்கத் தவறிய பாடங்களும்
உலகத் தமிழர்கள் கற்க வேண்டிய பாடங்களும்

முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி - 8.

தமிழர்களின் புலப்பெயர்வு கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகாலப் பழமை வாய்ந்தது. தொடக்கக் காலங்களில் தமிழர்களின் புலப்பெயர்வுகள் பெரிதும் தற்காலிகப் பெயர்வுகளாகவே இருந்தன. பண்டமாற்று, வணிகம் மற்றும் பொருளீட்டல் தொடர்பாக உலகின் பல பகுதிகளுக்கும் நிலவழி மற்றும் நீர்வழியாகத் தமிழர்கள் புலம்பெயர்ந்து செல்லும் வழக்கம் தொன்றுதொட்டு நிலவிவந்தது. முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை என்ற தொல்காப்பிய நூற்பா தமிழர்களின் கடல்பயணம் பற்றிய அரிய குறிப்பு. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பது தமிழர்களின் வாய்மொழி. கடல்பயணம் செய்யும் கலையில் தமிழர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பதற்கு மொழிவழிச் சான்றுகள் பலஉள. ஆழி, ஆர்கலி, முந்நீர், வாரிதி, வாரணம், பவ்வம், பரவை, புணரி, கடல் என்று கடலைக் குறிப்பதற்குப் பல சொற்களும் கப்பல், கலம், கட்டுமரம், நாவாய், படகு, பரிசில், புணை, தோணி, திமில், அம்பி, வங்கம், மிதவை என்று நீரில் செல்லும் ஊர்திகளைப் பற்றிய பல சொற்களும் தமிழில் உள்ளன. காலந்தோறும் அயல்நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த தமிழர்களை இருவகையாகப் பிரிக்கலாம். பதினெட்டு அல்லது பத்தொன்பதாம் நூற்றாண்டுகளுக்கு முன் புலம்பெயர்ந்தவர்கள் முதல் பிரிவினர். பத்தொன்பதாம் நூற்றாண்டுக்குப் பின் புலம் பெயர்ந்தவர்கள் இரண்டாம் பிரிவினர். முதல் பிரிவினர் பெரும்பான்மை வியாபாரத்தின் பொருட்டும் சிறுபான்மை தமிழ் மன்னர்களின் படையெடுப்பு காரணமாகவும் இடம்பெயர்ந்தனர். இரண்டாம் பிரிவினர் சிறுபான்மை வியாபாரத்தின் பொருட்டும் பெரும்பான்மை ஒப்பந்தக் கூலித் தொழிலாளர்களாகவும் இடம் பெயர்ந்தனர். 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் தேயிலை, ரப்பர், கரும்புத் தோட்டங்களில் கூலிவேலை செய்வதற்காகப் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இடைத்தரகர்களால் அழைத்துச் செல்லப்பட்டவர்களே புலம்பெயர் தமிழர்களில் மிகுதி. மலையக இலங்கை, மலேசியா, பர்மா, இந்தோனேசியா, தென் ஆப்பிரிக்கா, பிஜித் தீவு, மொரீசியஸ், ரீயூனியன் முதலான நாடுகளில் தற்போது வசிக்கும் தமிழர்களில் பெரும்பகுதியினர் தோட்டத் தொழிலாளர்களின் வம்சாவழியினரே. புலம்பெயர்ந்த தமிழர்கள் வசிக்கும் நாடுகள் பலவற்றில் தமிழும் தமிழ்ப்பண்பாடும் பெருமளவில் மங்கிமறைந்து வருகின்றன. இத்தகு இக்கட்டில் தமிழும் தமிழ்ப் பண்பாடும் சிக்கித் தவிக்கும் நாடுகளில் பிஜித் தீவு முதன்மையானது.

பிஜித் தீவு:
தென்மத்திய பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது பிஜிநாடு. விதி லெவு, வனுவா லெவு எனும் இரு முக்கியத் தீவுகள் உட்பட 840 தீவுகள் அடங்கியது இந்நாடு. பிஜித் தீவு 1874 இல் பிரிட்டனின் ஆதிக்கத்திற்கு உட்பட்டது. கிட்டத்தட்ட நூறாண்டுகாலம் பிரிட்டி~; காலனியாய் இருந்த பிஜி 1970 இல் சுதந்திரம் பெற்றது. இந்நாட்டின் தற்போதய மக்கள் தொகை சுமார் 9 இலட்சம். இதில் பிஜிக்கள் 51 சதவீதமும் இந்தியர்கள் 44 சதவீதமும் மற்றையோர் 5 சதவீதமும் உள்ளனர். இந்நாட்டின் தலைநகர் சுவா. பிஜித் தீவில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் என்பார் மறவன் புலவு க.சச்சிதானந்தன். ஆனால்; சுமார் 7 ஆயிரம் பேர் மட்டுமே தங்கள் தாய்மொழி தமிழ் என்று பதிவு செய்திருப்பதாக வுயஅடையெவழைn.ழசப இணையதளம் தெரிவிக்கின்றது. பிஜியின் அதிகாரபூர்வ அரசாங்க இணைய தளத்தில் வுயஅடை என்ற சொல்லே இடம்பெறவில்லை. 1874 இல் ஆங்கிலக் காலணி நாடாகியது பிஜி. இத்தீவுக் கூட்டங்களின் கரும்புத் தோட்டங்களில் பணியாற்றவே 1879 முதல் இந்தியக் கூலித் தொழிலாளர்கள் தொழில் முறைக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் ( ஐனெநவெரசந ளலளவநஅ ழச வாந ளழ உயடடநன புசைஅவை ளலளவநஅ) மூலம் கொண்டு செல்லப்பட்டனர். ஆள் பிடித்துக் கொணரும் ஷஅர்காதிஸி என்ற கங்காணிகள் மூலம் 1879 – 1916 ஆம் ஆண்டுகளுக்கிடையே 87 கப்பல்களில் 65 ஆயிரம் இந்தியத் தொழிலாளர்கள் பிஜித் தீவுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். 5 ஆண்களுக்கு 1 பெண் வீதம் கூலியாட்களில் ஆண், பெண் எண்ணிக்கை இருந்தது. இந்தியத் தொழிலாளர்கள் 65 ஆயிரம் பேரில் 13 ஆயிரம் பெண்கள் அடைந்த கொடுமைகளைத்தான் பாரதி ஷகரும்புத் தோட்டத்திலே என்ற பாடலின் வழி எடுத்துரைத்தான். 1879 க்கும் 1916க்கும் இடையில் பிஜியில் இந்தியர்களும் தமிழர்களும் பட்ட கொடுமைகளுக்கு அளவேயில்லை. மகாத்மா காந்தியின் நண்பர் சி.எப்.ஆண்டுரூஸ் முயற்சியின் பேரில் 1917 ஆம் ஆண்டில் பிஜியில் கொத்தடிமைச் சட்டம் ஒழிக்கப்பட்டது.

பிஜியில் தமிழ்க் கல்வி:
தமிழர்கள் பிஜி சென்ற இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியக் குழந்தைகள் படிப்பதற்கு இத்தீவில் பள்ளிக்கூட வசதிகள் கிடையாது. சுவாமி மனோகரானந்த மகராஜ் பிஜிக்கு வந்து ஆரிய சமாஜத்தைத் தோற்றுவித்தபோது சமயப்பணியோடு கல்விப்பணியும் செய்யப்பட்டது. தொடக்கக் காலங்களில் இந்தியே இப்பள்ளிகளில் கற்பிக்கப்பட்டது. தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழர்களே தத்தம் சொந்தப் பொறுப்பில் தமிழ் சொல்லித் தந்தார்கள். பிஜித்தீவில் உள்ள பள்ளிகளில் தென்இந்திய மொழிகள் கற்றுத்தரப்பட வேண்டும் என பிஜிக் கல்விக் கமி~ன் முன் கிரு~;ணசாமி, மச்சோநாயர், கிரு~;ணாரெட்டி, எம்.என்.நாயுடு, அரங்கசாமி முதலியவர்கள் எடுத்துரைத்தார்கள். இதன் தொடர்ச்சியாகக் கமி~னிடம் எம்.என்.நாயுடு எழுத்து மூலமாய் முறையீடு செய்தார். பிறகு 1929 இல் கமி~னின் பரிந்துரையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு தமிழ், தெலுங்கு, குஜராத்தி முதலிய மொழிகளையும் இந்தி, ஆங்கிலம் மொழிக்கல்வியுடன் இணைத்துக் கற்பிக்க ஆவணசெய்தது.1926 ஜனவரியில் பிஜியில் இந்தியர்களால் தொடங்கப்பட்ட தென்னிந்திய சன்மார்க்க ஐக்கிய சங்கம் பிஜி மக்களிடம் கல்விப் பணி ஆற்றுவதை முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தது. 1921 தொடங்கி பல தனிப்பட்ட தமிழர்களின் பெருமுயற்சியால் மெல்ல மெல்லப் பரவிய தமிழ்வழிக் கல்வி 1930 க்குப் பிறகு தளர்வுற்றது. 1937 ஆம் ஆண்டு இராமகிரு~;ண மடத்தைச் சேர்ந்த ஸ்வாமி அவிசாநந்தர் பிஜித் தீவிற்கு வந்தார். அவிசாநந்தரின் இடையறாத பிரச்சாரத்தால் பிஜித் தமிழர்கள் தமிழை இரண்டாம் மொழியாகக் கற்க வாய்ப்பேற்பட்டது.சுவாமி அவிசாநந்தர், தென்இந்திய சன்மார்க்க ஐக்கிய சங்கத்தினர் முயற்சியால் 1937 இல் மாத்ய+ஸ் கல்வி அறிக்கை வெளியிடப்பட்டது. இவ்வறிக்கையின் படி இந்திக்காரர்கள் அல்லாதவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் பள்ளிகளில் ஆங்கிலம் கல்விமொழியாக இருக்கவேண்டும். இரண்டாம் மொழிக்கல்வி எந்த இந்திய மொழியிலும் இருக்கலாம். அரசாங்கம் மாத்ய+ஸ் கல்வி அறிக்கையை ஏற்றுக்கொண்டதோடு அல்லாமல் எல்லா இந்தியக் குழந்தைகளுக்கும் அவர்களுடைய தாய்மொழிக் கல்வி கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும் எனும் சட்டத்தையும் (ழுசனiயெnஉந ழே. 48 ழக 1937) வெளியிட்டது.1946 செப்டம்பர் 8 ஆம் தேதி தென்இந்திய சன்மார்க்க ஐக்கிய சங்கத்தினர் நிறைவேற்றிய தீர்மானங்களும் ஓராண்டுக்குப் பிறகு அரசு அத்தீர்மானத்திற்கு அளித்த பதிலும் பிஜி தமிழ்க்கல்வி வரலாற்றில் முக்கியமானது.தென்இந்திய சன்மார்க்க ஐக்கிய சங்கத்தினரின் தீர்மானங்கள் (8-9-1946),
அ) தாய்பாi~களிலும் பரீட்சை நடத்த வெண்டும். அத்துடன் உபாத்தியாயர் ட்ரெய்னிங்கில் தாய்பாi~யில் பரீட்சைக்கு இடந்தர வேண்டும்.
ஆ) தென்னிந்திய உபாத்தியாயர்களுக்குச் சங்கம் நடத்தும் தாய்பாi~ பரீட்சைக்கு கிராண்ட கொடுக்க வேண்டும்.
இ) தாய்பாi~களைப் பரிசோதிக்க சர்க்கார் அதிகாரிகளை அனுப்பாவிட்டால் சங்கம் அனுப்ப சர்க்கார் அனுமதி கொடுக்க வேண்டும்.இத்தீர்மானங்களுக்கு அரசு, ஷ வாலிபர்கள் தாய்பாi~ வேண்டாம் என்கிறார்கள் ஒரு சில கிழவர்களோ வேண்டுமென்கிறார்கள் என்று பதிலளித்தது. அரசின் இந்த பதிலில் இரண்டு உண்மைகள் உள்ளன. ஒன்று, பிஜிக்குச் சென்ற முதல் தலைமுறையினர் தாய்மொழிக் கல்விஃ தமிழ்க் கல்வியை வேண்டுகிறார்கள். இரண்டாவது, அடுத்த தலைமுறையாகிய புதிய தலைமுறையினர் அதாவது வாலிபர்கள் தாய்மொழிக் கல்விஃ தமிழ்க் கல்வியை வேண்டாமென்கிறார்கள். பிஜி அரசின் கூற்றில் உண்மையிருந்தாலும் இப்பிரச்சனையைத் தீர்க்க அரசு முன்வரவில்லை.1940 தொடங்கி 1950 க்குள் பிஜித் தீவில் தமிழ்க்கல்வி பெருமளவில் நலியத் தொடங்கியது.

தமிழ்க்கல்வியின் நலிவுக்குக் காரணங்கள்:
1940 ஆம் ஆண்டில் பிஜி அரசு தென்இந்திய சன்மார்க்க ஐக்கிய சங்கம் நடத்தும் பள்ளியின் ஆசிரியர்களை அரசுப் பணியாளர்களாக ஏற்றுக்கொண்டது. தமிழ்த் தொண்டு அரசுப் பணியான பிறகு பல்வேறு புறக் காரணங்களால் ஆசிரியர்களின் ஊக்கம் குறைந்தது. அரசின் கல்வி அமைச்சகம் தமிழ்க்கல்வியை ஊக்குவிக்கவில்லை. வட இந்தியர்களின் மொழியான இந்தி மொழியும் இந்திமொழிக் கல்வியும் இக்காலக் கட்டங்களில் பெரிதும் செல்வாக்கு பெற்றன. வட இந்தியர்களைப் பார்த்துத் தாழ்வு மனப்பான்மை கொண்டனர் தமிழ் இளைஞர்கள். மொத்தத்தில் இரண்டாம் உலகப்போரின் போது தமிழ்நாட்டுடன் இருந்த தொடர்பை இழந்ததாலும், பிரிட்டி~; அரசு தமிழ்க்கல்விக்குப் போதிய ஆதரவு அளிக்க முன்வராததாலும், தமிழர்களின் தாழ்வு மனப்பான்மையாலும், புதிய வாழ்க்கை நாட்டத்தாலும் வட இந்தியர்களின் இந்தி தீவிரவாத இயக்கத்தின் தாக்கத்தாலும் பிஜியில் தமிழ்க்கல்வி 1950 களுக்குப் பிறகு நலியத் தொடங்கியது.1940 ஆம் ஆண்டளவில் ஒரு இலட்சம் தமிழர்கள் பிஜியில் இருந்தார்கள். இன்று மூன்று மடங்காகி மூன்று இலட்சம் தமிழர்கள் இருக்க வேண்டிய நிலையில் கிடைக்கும் புள்ளி விபரங்கள் நமக்கு ஏமாற்றத்தையே அளிக்கின்றன. 7000 தமிழர்கள் மட்டுமே தங்கள் தாய்மொழி தமிழ் என்று வெளிப்படுத்தியுள்ளார்கள் என்ற யதார்த்த நிலை உலகத் தமிழர்கள் நெஞ்சில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலைக்கான காரணங்கள் சிக்கலானவை. இன்று பிஜியில் வாழும் தமிழர்களில் பெரும்பான்மையோருக்குத் தமிழ் பேசக்கூடத் தெரியாது. அரிதாகத் தமிழ்பேசத் தெரிந்தவர்களுக்கும் தமிழில் எழுதப் படிக்கத் தெரியாது. தமிழின் வரிவடிவம் முழுவதும் வழக்கொழிந்து போயிற்று. தமிழர் என்று சொல்லிக்கொள்ளவும் தமிழில் பேசவும் இளந் தலைமுறையினர் வெட்கப்படுகின்றார்கள். மொழி, இனக் கலப்பு மணங்கள் பிஜி இந்தியர்களிடம் மிகுதி. ஒரே தமிழ்க் குடும்பத்தில் பல்வேறு இந்திய இனக்கலப்பு மணங்கள் நடைபெறுவதால் இத்தமிழ்க் குடும்பங்களில் தமிழ் வழக்கொழிந்து இந்தியே வீட்டுமொழியாகவும் வழக்கு மொழியாகவும் மாறிப்போவதால் தமிழ்க் குடும்பங்களைக் காண்பது அரிதாகிப் போனது. புதிய தலைமுறைத் தமிழர்களின் மொழி இந்தியாகிப் போன அவலமே பிஜியின் நடைமுறை.

பிஜியில் தமிழர் அடையாளங்கள்:
பிஜித் தமிழர்கள் மொழி அடையாளத்தை இழந்தாலும் இன்னும் அவர்களிடம் தமிழர் பண்பாட்டு அடையாளங்கள் ஒட்டிக்கொண்டிருப்பது நமக்கு ஒரு மெல்லிய ஆறுதலை அளிக்கின்றது. வட இந்தியர்களை விடத் தென்னிந்தியர்களுக்கே பிஜியில் அதிக கோயில்கள் இருக்கின்றன. பிள்ளையார், சுப்பிரமணியர், மாரியம்மன், காளியம்மன், பெருமாள் கோயில்கள் பிஜியில் நிறைய உண்டு. தென்னிந்தியர்கள் எந்தக் கோயிலுக்குச் சென்றாலும் பொதுவாக ஷகோவிந்தா! கோவிந்தா! என்றே கோ~ம் எழுப்புவார்கள். இதன் காரணமாகவே பிஜியர்கள் தென்னிந்தியர்களை ஷகோவிந்தா! கோவிந்தா! என்று விளிக்கும் பழக்கம் வந்தது. தமிழர்களின் தனிப்பெரும் தெய்வமாம் முருகன் வழிபாடு பிஜியில் புகழ்பெற்றது. பிஜி- நாடியில் உள்ள ஸ்ரீ சிவ சுப்பிரமணியர் ஆலயம் புகழ்பெற்றது.இன்றும் பிஜித் தீவில் ஏறக்குறைய நாற்பது கோயில்களில் தீமிதித் திருவிழா நடைபெறுகிறது. இதுதவிர ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை, தமிழ் வருடப்பிறப்பு, பங்குனி உத்திரம், கார்த்திகை, தைப்ப+சம், புரட்டாசி சனி விரதம் முதலான தமிழ்ப் பண்டிகைகளும் கொண்டாடப்படுகின்றன.கோயில் திருவிழாக்களை ஒட்டி பிஜித் தமிழர்கள் தெருக்கூத்து, கரகமாடல், காவடியாட்டம் முதலான தமிழ் ஆட்டக் கலைகளிலும் உடுக்கு, மேளம் முதலான தமிழிசைக் கருவி இசைகளைக் கேட்பதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆலயங்களை ஒட்டிய நடைமுறைகளிலும் சடங்கு மற்றும் வழிபாடுகளிலும் தமிழ் மரபுகள் பெருமளவில் பேணப்பட்டு வருவது ஆறுதலான செய்தியாகும்தமிழ்நாட்டிலுள்ள தமிழர்களைப் போலவே பிஜித் தமிழர்களும் கடவுளர் பெயர்களைத் தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டுகிறார்கள். முருகன், வேலாயுதம், சுப்பையா, சண்முகம், கந்தசாமி, நாராயணன், கோவிந்தன், முனிசாமி, இராமசாமி போன்ற ஆண் பெயர்களும் வள்ளி, பார்வதி, கண்ணம்மா, ராதா, கன்னியம்மா, பாஞ்சாலி, சீதம்மா, குப்பம்மா, மீனாட்சி போன்ற பெண் பெயர்களும் தமிழர் பெயரிடும் மரபை நமக்கு நினைவ+ட்டுவன. அண்மைக் காலமாக இம்மரபு மாற்றமடைந்து வருகின்றது.பிஜியில் பல தமிழர்கள் தங்கள் பெயருடன் சாதிப்பெயரை இணைத்துக் கொள்கிறார்கள். உதாரணமாக, முத்துசாமி கவுண்டர், முனிசாமி நாயக்கர், சண்முகம் முதலியார், கோவிந்தன் ரெட்டி. சாதிப் பெயரை ஆண்கள் மட்டுமில்லாமல் பிஜித் தமிழ்ப் பெண்களும் தங்கள் பெயரோடு இணைத்துக் கொள்கிறார்கள். உதாரணமாக, முனியம்மாள் கவுண்டர், லட்சுமி ரெட்டி, சீதா நாயுடு, பார்வதி பிள்ளை. சாதிப் பெயர்களைத் தங்கள் பெயர்களோடு இணைத்துக் கொண்டாலும் பிஜித் தமிழர்களிடத்தே சாதி வேறுபாடுகள் கிடையாது. திருமணங்கள் சாதி அடிப்படையில் நடத்தப்படுவதில்லை. பலருக்குத் தங்கள் பெயரோடு இணைந்திருப்பது சாதிப் பெயர்கள் என்பதே தெரியாது. சமீப காலங்களில் பிள்ளை என்று இணைத்துக் கொள்வதில் ஈடுபாடு காட்டுகிறார்கள் சாதிப் படிநிலைகள் பற்றிய கவனங்கள் தலையெடுக்க ஆரம்பித்துள்ளன. மொழியை இழந்தாலும், தமிழர் பண்பாட்டுச் சுவடுகளை தம் வாழ்வின் அடையாளங்களாகப் பெற்றிருக்கும் பிஜித் தமிழர்களுக்கு அவர்கள் தமிழர் என்பதை நினைவுறுத்த வேண்டிய வரலாற்றுத் தேவை உள்ளது.

பிஜியில் தமிழை- தமிழர்களை மீட்டெடுப்போம்:
பிஜித் தமிழர்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழர் அடையாளங்களை இழந்து வருவதை மீட்டெடுக்கும் வகைளில் 1985 ஆண்டு தமிழ் பாதுகாப்புக் குழுத் தலைவர் அப்பாப் பிள்ளை, அரசு ஆதரவு தமிழ் ஆலோசகர் எம்.ஆர்.பாலகணபதி, தென்இந்திய சன்மார்க்க ஐக்கிய சங்கத் தலைவர் என்.கே.நாயுடு போன்றவர்களின் அரிய முயற்சிகளால் பிஜியில் தமிழ்க்கல்வி மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.பிஜித் தமிழர்களின் தமிழ்க்கல்விக்குத் தடையாய் இருக்கும் புறக்காரணங்களில் முக்கியமானவை ஆசிரியர்கள் பற்றாக்குறையும் பிஜி சூழலுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட பாடநூல்கள் இல்லாமையுமே. இன்று பிஜித் தமிழர்கள் எம்.ஆர்.பி. குருசாமி அறிமுகப்படுத்திய ரோமன் தமிழ் எழுத்து முறையிலேயே தமிழ் கற்கிறார்கள். ஆங்கில எழுத்துக்களைப் பயன்படுத்தி தமிழைக் கற்பிக்கும் முறையே ரோமன் தமிழ் எழுத்து முறையாகும். இத்தகு ரோமன் தமிழ்த்திட்டம் அடிப்படையில்தான் பிஜியில் தமிழ்ப்பாட நூல்கள் தயாரிக்கப்படுகின்றன. பிஜியில் தமிழ்க்கல்வி மெல்ல மெல்லப் பரவி வருகின்றது.பிஜித் தமிழர்கள் கற்கத் தவறிய பாடங்கள்:புலம்பெயர் தமிழர்களில் தமிழ்மொழியைஃ தமிழ்ப்பண்பாட்டை இழந்து நிற்பவர்கள் பிஜித் தமிழர்கள் மட்டுமல்லர், தென் ஆப்பிரிக்கா, மொரீசியஸ், ரிய+னியன் தமிழர்களின் நிலையும் இதுவேதான். தமிழ் எழுதப் படிக்கத் தெரியாத, தமிழ் பேசத் தெரியாத தமிழர்கள்தான் மேற்கூறிய நாடுகளிலும் பெரும்பான்மையாக உள்ளனர். உலகம் முழுதும் புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் தமிழர்கள் அனைவரும் கவலையோடு நினைத்துப் பார்க்க வேண்டிய செய்தி இது. பிஜித் தமிழர்கள் கற்கத் தவறிய பாடங்களை உலகத் தமிழர்கள் கற்க வேண்டிய தருணம் இது.பிஜித் தீவுக்குப் புலம்பெயர்ந்த இந்தியர்கள் அனைவரும் தொடக்ககாலம் முதலே இந்தியர்கள், இந்தி மொழி பேசும் மக்கள் என்று அடையாளப் படுத்தப்பட்டார்களே தவிர அவர்களில் தமிழர்கள் தனித்து அடையாளப் படுத்தப்படவில்லை. வடஇந்தியர் ஆதிக்கம் மிகுந்த சூழல்களிலும் இந்தி மொழி பேசாத அனைத்துத் தென்னிந்தியர்களின் நலன்கள் முன்னிறுத்தப்பட்டன. தென்னிந்தியர் நலம் நாடும் அமைப்புகள் தோற்றம் பெற்றன. தமிழர் நலம் நாடும் தனி அமைப்புகளோ தலைவர்களோ இல்லாதது பிஜித் தமிழர்களுக்கு ஏற்பட்ட மிகப் பெரிய இழப்பு. இந்தி பேசும் வட இந்தியர்களைப் பார்த்துத் தாழ்வு மனப்பான்மை கொள்ளும் தமிழ் இளைஞர்களுக்குத் தமிழ்மொழியின் தொன்மையும் இலக்கிய இலக்கண வளங்களும் தமிழ்ப்பண்பாட்டின் பெருமையும் போதிக்கப்படவேயில்லை. ஐயாயிரம் ஆண்டு காலத் தமிழிலக்கியத் தொன்மை மற்றும் வளத்திற்கு முன்னால் வடஇந்திய மொழிகள் ஈடுகொடுக்க முடியாது என்ற உண்மை உரைக்கப் படவேயில்லை. மொழியை இழப்பது உயிரை இழப்பதை விடக் கொடுமையானது என்ற மெய்ம்மை உணர்த்தப் படவேயில்லை. மணஉறவு என்பதின் பேரால் இனக்கலப்பு நேர்ந்த போதிலெல்லாம் தம்மொழியை விட்டுக் கொடுப்பவனாகத் தமிழன் மட்டுமே இருந்தான். இந்நிலை மாற்றத்தக்கது. தவிர்க்க இயலாச் சூழலில் தமிழர்கள் பிறமொழி ஃ பிறஇன மணஉறவு கொள்ளும் தருணங்களில் மிக விழிப்பாய் இருந்து தம் துணையையும் வீட்டில் தமிழே பேசுமாறு ஆற்றுப்படுத்துதல் நல்;லது. இத்தகு நுட்பமான மொழி அரசியல் இன்றைய அவசியத்தேவை என்பதைத் உலகத் தமிழர்கள் உணர்தல் வேண்டும். பிஜித் தமிழர்களைப் போல் இல்லாமல் புலம்பெயர்ந்து வாழும் அனைத்துத் தமிழர்களும் வீட்டில், மனைவி மக்களிடத்தில், தமிழ் நண்பர்களிடத்தில் தவறாது தமிழிலேயே உரையாட வேண்டும். பிஜித் தமிழர்கள் கற்கத் தவறிய இந்தப் பாடங்களை உலகத் தமிழர்கள் இனியாவது கற்றே தீரவேண்டிய காலத்தின் கட்டாயத்திற்கு நாம் ஆட்பட்டுள்ளோம். தமிழகத் தமிழர்களுக்கும் இந்தப் பாடங்கள் தேவைப்படும் நாள் மிக அண்மையில் உள்ளதுபோல் தெரிகிறது. விழித்தெழுவோம்! உலகை வெல்வோம்!!

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...