வெள்ளி, 14 செப்டம்பர், 2007

மக்கள் கவிஞர் புதுவைத் தமிழ்ஒளி -ஓர் அறிமுகம்

மக்கள் கவிஞர் புதுவைத் தமிழ்ஒளி

முனைவர் நா.இளங்கோ
இணைப்பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8.

கவிஞர் தமிழ்ஒளி:
தமிழனே நான்உலகின் சொந்தக் காரன் தனிமுறையில் நான்உனக்குப் புதிய சொத்து - தமிழ்ஒளி1947 நவம்பர் 15 அன்று கவிஞர் தமிழ்ஒளி வீராயி என்ற காவியத்திற்கு எழுதிய முன்னுரையில் கீழ்க்கண்டவாறு எழுதினார்.

நம் கண்ணெதிரே நம் உடன் பிறந்தான் மாடாக உழைத்து ஓடாகத் தேய்ந்து போகிறான், அவன் குடும்பம் வறுமைப் படுகுழியில் வீழ்ந்து கதறுகிறது. இதைக்கண்டு மனமிரங்காமல் மரத்துப்போன நெஞ்சுடன் உலாவும் மானிடப் பிண்டங்களின் உடலில் சுரீர் சுரீர் என்று தைக்கும்படி எழுதுவதுதான் உண்மை எழுத்தாளனின் கடமையும் நோக்கமும் ஆகும்.
எழுத்தாள நண்பர்களே! கற்பனையுலகைப் படைக்கும் கவிஞர்களே! நான் வீராயி மூலம் விடுக்கும் வேண்டுகோள் இதுதான், மக்களுக்காக மக்கள் உயர மக்கள் காலத்துக் கதைகளை எழுதுங்கள். உலகம் முழுதும் உருவாகிக்கொண்டு வரும் உழைக்கும் இனத்தின் கூட்டு முன்னணிக்கு உங்கள் எழுத்து உறுதுணையாகட்டும். … …”1
இம்முன்னுரையில் கவிஞர் தமிழ்ஒளியின் இலக்கியக் கோட்பாடு எது என்பதை அவரே தௌ;ளத் தெளிவாகக் குறிப்பிடுகின்றார்;. மக்களுக்காக எழுதுங்கள். மக்கள் உயர எழுதுங்கள். உழைக்கும் மக்களின் உயர்வுக்கு எழுதுங்கள் என்பதே அவரின் வேண்டுகோள்.

கவிஞர் தமிழ்ஒளி அறிமுகம்:
(1924-1965)கவிஞர் தமிழ்ஒளி பிறந்த மண் புதுச்சேரி கருவடிக்குப்பத்தைச் சார்ந்த சாமிப்பிள்ளைத் தோட்டம். புதுவைக்குப் புகழ்சேர்க்கும் கவிஞர்கள் வரிசையில் பாரதி, பாரதிதாசனுக்குப் பிறகு பாரதிதாசன் பரம்பரையில் வந்த மக்கள் கவிஞன் தமிழ்ஒளி. கவிஞரின் இயற்பெயர் விஜயரங்கம். பிறந்த நாள்: 21-9-1924. பெற்றோர்;: திரு.சின்னையா நயினார், திருமதி செங்கேணியம்மாள் ஆவர். தாழ்த்தப்பட்ட சாதியின் ஒரு பிரிவான வள்ளுவர் இனத்தைச் சேர்ந்தவர். கவிஞர் விஜயரங்கம் புதுவை கல்வே கல்லூரியில் பயின்ற மாணவர். அங்கேதான் அடிப்படைக் கல்வியும் உயர்நிலைக்கல்வியும் பயின்றார். ஃபிரெஞ்சு மொழியும் கற்றார். பின்னர் முறையாகத் தமிழ் கற்க விரும்பி கரந்தைச் செந்தமிழ்க் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். 1945 முதல் தம் இறுதிக்காலம் நெருங்கும் வரை சென்னையிலேயே வாழ்ந்தார். அவர் அமரரானதும் அடக்கமானதும் புதுவையில். நாள்: 29-3-1965.

தமிழ்ஒளியின் படைப்புகள்:
1944இல் எழுதத் தொடங்கிய தமிழ்ஒளி தம் இறுதிக்காலம் (1965)வரை எழுதிக்கொண்டே இருந்தார்.
படைப்புகள்: எழுதிய ஆண்டு வெளிவந்த ஆண்டுகாவியங்கள்:

1. கவிஞனின் காதல் 1944 1947
2. நிலைபெற்ற சிலை 1945 1947
3. வீராயி 1947 1947
4. மேதின ரோஜா 1952 1952
5. விதியோ? வீணையோ? 1954 1961
6. மாதவி காவியம் 1958 1995
7. கண்ணப்பன் கிளிகள் 1958 1966
8. புத்தர் பிறந்தார் 1958 1966
9. கோசலக்குமரி 1962 1966

தனிக்கவிதைகள்:
1. நீ எந்தக் கட்சியில்? 1948 1948
2. மேதினமே நீ வருக! 1949 1952
3. தமிழ்ஒளியின் கவிதைகள் 1954-64 1966
4. மக்கள் கவிதைகள் 1954-58 1987

குழந்தைப் பாடல்கள்:
1. அந்திநிலா பார்க்கவா! 1948-62 2001

ஆய்வு நூல்கள்:
1. சிலப்பதிகாரம் காவியமா? நாடகமா? 1959 1959
2. திருக்குறளும் கடவுளும் 1959 1959
3. தமிழும் சமஸ்கிருதமும் 1960 1960
4. தமிழர் சமுதாயம் 1961 1962

கதைகள்:
1. சாக்கடைச் சமுதாயம் 1948-49 1952
2. அறிவ+ட்டும் 100 அற்புதக் கதைகள் 1960 1961
3. குருவிப்பட்டி 1954-60 1961
4. உயிரோவியங்கள் 1948-49 1989

குறு நாவல்கள்;:
1. மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் 1952 1952
2. மாமாவின் சாகசம் 1952 1952

வரலாறு:
1. தோழர் ஸ்டாலின் 1952 1952

நாடகங்கள்:
1. கவிஞர் விழா(ஓரங்க நாடகங்கள்) 1947 1947

அச்சில் வெளிவராத மேடை நாடகங்கள்:
1. சிற்பியின் கனவு 1945
2. சேரன் செங்குட்டுவன் 1946
3. தோழர் ஸ்டாலின் ------

(இன்னும் வெளிவராத சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள் சில)

ஆக இருபத்தைந்துக்கும் மேற்பட்ட நூல்களைக் கவிதை, காவியம், கட்டுரை, நாடகம், ஆய்வுகள் எனப் பலதுறைகளிலும் எழுதி வெளியிட்ட மாபெரும் படைப்பாளி கவிஞர் தமிழ்ஒளி. இத்தனைக்கும் அவர் வாழ்ந்த காலங்கள் வெறும் நாற்பதே ஆண்டுகள். நாற்பதாண்டுகளே வாழ்ந்தாலும் காலத்தினால் அழியாத கவிதைகளையும் இலக்கியங்களையும் படைத்துக் கொடுத்திருக்கிறார்.

தமிழ்ஒளியின் பாதை:
கவிஞர் தமிழ்ஒளி பாரதியை ஞானத் தந்தையாகக் கருதினார், பாரதிதாசனை வழிகாட்டியாகக் கொண்டார். அவர்களிருவரும் வகுத்துத் தந்த வழியை மேலும் செம்மைப்படுத்தினார்.1944 இல் எழுதத் தொடங்கிய தமிழ்ஒளி தமிழ், தமிழ்இனம், தமிழர் எழுச்சி, சீர்திருத்தம் என்ற போக்கில் அதாவது தேசிய இனங்களின் உரிமை, தமிழ் ஆட்சிமொழி, சுயமரியாதை, சமத்துவம் என்ற செயல்பாட்டில் தம் படைப்;புப் பணியைத் தொடங்கினார். 1945இல் கவிஞர் மார்க்சீயத் தத்துவத்தை ஆழ்ந்து பயிலத் தொடங்கினார். அதன் விளைவாகவே ‘நிலைபெற்ற சிலை’, ‘வீராயி ’ ஆகிய காவியங்களைப் படைத்தார்.1947இல் இலக்கியப் பேராசான் ஜீவா முன்னிலையில் தமிழ்ஒளியும் குயிலனும் பொதுவுடைமை இயக்கத்தில் இணைந்தனர். 1947 தொடங்கி ஒன்பது ஆண்டுகள் பொதுவுடைமை இயக்கத்தில் உறுப்பினராகவும் கலை இலக்கியத் தளத்தில் புரட்சிப் படைப்பாளராகவும் விளங்கினார் தமிழ்ஒளி. 1953இல் பொதுவுடைமை இயக்கத்திலிருந்து வெளியேறினார். 1953இற்குப் பிறகு புதியபுதிய உள்ளடக்கங்களிலும் உத்திகளிலும் காவியங்கள் படைப்பதில் மிகுந்த ஈடுபாடு காட்டினார். வாழ்வின் கடைசிவரை பிற்போக்கு சக்திகள் தம்மை அண்டாமல் பார்த்துக் கொண்டார்.

தமிழ்ஒளியும் பொதுவுடைமையும்:
1948இல் இந்திய அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி செய்ததாகக் கூறி இந்தியப் பொதுவுடைமைக் கட்சியினைக் காங்கிரஸ் அரசு தடைசெய்தது. தடையின் விளைவாகக் கம்னிய+ஸ்ட் கட்சி அலுவலகம், தொழிற்சங்க அலுவலகங்கள், கட்சிப் பத்திரிக்கை அலுவலகங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டன. தலைவர்கள் பலர் கைதாயினர். வேறு சிலர் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டனர். நாட்டில் நடப்பதைக் கட்சி ஆதரவாளர்கள் அறிந்து கொள்ள இயலாத சூழ்நிலை உருவானது.இந்த இக்கட்டான சூழலில் இந்திய கம்னிய+ஸ்ட் கட்சி நடத்திவந்த ஜனசக்தி தடைசெய்யப்பட்டது. முன்னணி என்ற பெயரில் பொதுவுடைமைச் சார்பு இதழ் ஒன்று புதியதாகத் தொடங்கப்பட்டது. கட்சியின் நம்பிக்கைக்குரிய தோழர் குயிலன் ஆசிரியர் பொறுப்பேற்றார். துணைஆசிரியர் பொறுப்பில் தமிழ்ஒளியும் எஸ்.ஆர்.எஸ்.ராஜனும் செயல்பட்டனர். 1948 அக்டோபர் தொடங்கி 1949 செப்டம்பர் வரை தொடர்ந்து 48 இதழ்கள் வெளிவந்தன. பின்னர் முன்னணி இதழும் தடைசெய்யப்பட்டது.இந்த முன்னணி ஏட்டின் ஒவ்வொரு இதழிலும் கதை, கட்டுரை, கவிதை, நாடகம் ஆகிய பல இலக்கிய வடிவங்களில் தம் முற்போக்குக் கருத்துக்களுக்கு எழுத்து வடிவம் கொடுத்து எழுதி வந்தார் தமிழ்ஒளி. மார்க்சீய தத்துவ ஞானத்தை மக்களுக்கு விளக்குவதற்காகவே ஜனயுகம் என்ற பெயரில் புதிய மாத இதழ் ஒன்றைத் தொடங்கினார் தமிழ்ஒளி. அந்த ஏடு பற்றிய ஒரு விமர்சனம் 4-9-1948இல் முன்னணி ஏடு ஒன்றில் கவிஞர் குயிலன் அவர்களால் எழுதப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதி:“மார்க்சிஸ்ட் தத்துவத்தை விளக்குவதற்கே அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் மாத சஞ்சிகை தமிழில் வெளிவருவது மிகவும் பொருத்தமானது. மகிழ்ச்சி தரும் செய்தி. அவசரத் தேவையைப் ப+ர்த்தி செய்யும் ஆயுதம். சஞ்சிகையின் ஆசிரியர் விஜயரங்கத்தைப் பாராட்டுகிறோம்.”2 என்று தமிழ்ஒளியைப் பாராட்டி எழுதியுள்ளார் தோழர் குயிலன் அவர்கள்.

கவிஞர் தமிழ்ஒளியின் தனித்தன்மைகள்:
தமது கவிதைகளின் உருவமும் உள்ளடக்கமும் சிறப்பாகவும் முற்போக்காகவும் அமைய வேண்டுமென்று விரும்பி எழுதிய கவிஞர் தமிழ்ஒளி, பண்டைய தமிழ் இலக்கியங்களிலும் இன்றைய புதுமை இலக்கியங்களிலும் அளவற்ற ஈடுபாடு கொண்ட இலக்கிய ரசிகர். கம்பரும் திருவள்ளுவரும் இளங்கோவும் மகாகவிபாரதியும்; அவரது குருநாதர்கள்.மனிதாபிமானம், தேசியம், சோஷலிசம் ஆகிய மாபெரும் கொள்கைகளில் பற்றுகொண்டு, தமிழின் பண்டைய - நவீன இலக்கிய மரபுகளில் தோய்ந்து சிந்தனை வளத்தோடும் சந்த நயத்தோடும் செஞ்சொற் கவிதைகளை யாத்தவர் கவிஞர் தமிழ்ஒளி.கவிஞர் தமிழ்ஒளி தமிழ்ச் சமுதாயத்தில் சாதி வேற்றுமையில்லாத ஏற்றத் தாழ்வற்ற சமூக அமைப்பை நிறுவக் கனவு கண்டார். இந்திய நாட்டிலும் உலகம் முழுவதும் எத்திசையில் எது நடந்தாலும் கொடுமைகளை எதிர்ப்பதிலும் நல்லதை வரவேற்பதிலும் ஆர்வம் காட்டினார்.தமிழ்ஒளி இந்தியச் சமுதாயத்தைக் கட்டிப் போட்டிருக்கும் சாதி மதக் கோட்பாடுகளையும் சுரண்டல் கொள்கைகளையும் ஆணிவேரோடு பிடுங்கி எறியும் வல்லமை தொழிலாளி வர்க்கத்துக்கே உண்டு என்பதை உணர்ந்தார். அதனால்தான் தொழிலாளி வர்க்கத்தின் பல்வேறு பிரிவினரையும் வர்க்க அமைப்புகளில் ஒன்று திரட்டும் பணியைத் தம் கவிதைகளில் பாராட்டினார், துணைநின்றார். தொழிலாளர் சங்கங்களையும், துறைமுகத் தொழிலாளி, டிராம்வேத் தொழிலாளி, சலவைத் தொழிலாளி, நகர சுத்தித் தொழிலாளி எனச் சங்கம் வைத்துப் போராடத் தொடங்கிய அனைத்து உழைக்கும் மக்களையும் பாராட்டிக் கவிதை புனைந்தார். சென்னைத் துறைமுகத் தொழிலாளர் சங்கத்தோடு நேரடியாகத் தொடர்பு கொண்டிருந்தார்.உலகத் தொழிலாளர்களின் உரிமைத் தினமான மே தினத்தைப் பற்றி முதல் முதல் தமிழில் பாடிய கவிஞன் தமிழ்ஒளியே ஆவார்.

தமிழ்ஒளி கவிதைகள்:
தமிழ் இலக்கியப் படைப்புலகில் இருபதாம் நூற்றாண்டு மகத்தானது. தேசிய இனம், தேசியம், சர்வ தேசியம் போன்ற கருத்தாக்கங்கள் கால்கொண்ட காலம் அது. இவ்வகைக் கருத்தாக்கங்களை உள்வாங்கிக் கவிதை படைத்த பாரதியே இந்த மரபிற்குச் சொந்தக்காரன். பாரதியின் இத்தகைய பாடுபொருள்களை மிகச்சரியான மார்க்சியத் தத்துவப் பின்புலத்தோடு புரிந்துகொண்டு, பாவேந்தன் பாரதிதாசனின் மறுமலர்ச்சிச் சிந்தனைகளையும் முழுமையாக உள்வாங்கிக்கொண்டு புதுப்பாதை சமைத்த கவிஞன்தான் தமிழ்ஒளி. பாரதியைப் போல் தமிழ்ஒளியும் கவிதையை வாழ்வாகக் கொண்டவர். வாழ்க்கையையும் கவிதையாக மாற்றியவர். தனக்கென்று வேறு வாழ்க்கையை அமைத்துக்கொள்ளாமல் கவிஞனாகவே வாழ்ந்து கவிதையாக நிலைத்திருப்பவர்.பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரையார் தமிழ்ஒளிக் கவிதைகளில் மூன்று வகைகளைக் காணமுடியும் என்று மதிப்பிடுகிறார். முதல்வகைக் கவிதைகள், பாரதி பாரதிதாசன் வழியில் நின்று முற்போக்குக் கருத்துக்களைக் கூறும் கவிதைகள். இரண்டாம்வகைக் கவிதைகள் கற்பனைத் திறனோடும், உவமை முதலிய அணியழகுத் திறன்களோடும் தமிழ்ஒளி புனைந்த கவிதைகள். இதில் அவர் இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்கள் அனைவரையும் விஞ்சிவிட்டார் என்று புகழ்ந்துரைக்கின்றார். மூன்றாம் வகைக் கவிதைகள் இருபதாம் நூற்றாண்டுக்கே புதுமையான கவிதைகள் முத்தமிழ்க் கவிஞன் இளங்கோவின் முழுமைச்சிறப்பை ஒத்த கவிதைகள் என்று கூறி இவ்வகைக் கவிதைகளுக்குச் சான்றாக, கவிஞரின் விதியோ? வீணையோ? என்ற இசை நாடகத்தைக் குறிப்பிடுகின்றார் பன்மொழிப் புலவர்.3

தமிழ்ஒளி கவிதைகளில் மூன்று கட்டங்கள்:
கவிஞர் தமிழ்ஒளியின் கவிதைகளை மூன்று காலக்கட்டங்களாகப் பிரிக்கலாம்.
1. 1944 முதல் 1947 வரையிலான கவிதைகள்.(சீர்திருத்தக் கவிதைகள்)
2. 1947 முதல் 1953 வரையிலான கவிதைகள்.(முற்போக்குக் கவிதைகள்)
3. 1954 முதல் 1965 வரையிலான கவிதைகள்.(பொதுமைக் கவிதைகள்)
இம்மூன்று காலக் கட்டங்களிலும் தமிழ்ஒளியின் கவிதைகளில் சமூகத்தின் ஒடுக்கப்பட்டவர்களுக்கான ஆதரவுக் குரலே ஓங்கி ஒலிக்கின்றது. கவிஞர் தமிழ்ஒளி கேட்கிறார்,

ஏ செந்தமிழா! என்னுடைய சோதரா! நீ யார்பக்கம்? நிகழ்த்திட வேண்டும் கொள்ளை யடித்திடும் கொடியவர் பக்கமா? துன்பமுற்றிடும் தொழிலாளர் பக்கமா? 4 
கவிஞர் எப்பொழுதுமே துன்பமுற்றிடும் தொழிலாளர் பக்கம்தான். இதில் நான் யார் பக்கமும் இல்லை பொதுவான மனிதன் என்று கூறுபவர்கள் ஊமையர், பேடியர், பேதையர் என்று சாடுகிறார் தமிழ்ஒளி.கவிஞரின் கடைசிப் பத்தாண்டுக் கால வாழ்க்கை புதிர் நிறைந்தது, குழப்பமானது என்றெல்லாம் சொல்பவர்கள் உண்டு. இக்காலக் கட்டத்தில் கவிஞர் இரண்டு பெரும் இடர்ப்பாடுகளுக்கு ஆளானார் என்பர். ஒன்று அவரின் காதல் தோல்வி. மற்றது அவரை மரணம்வரை துரத்திச் சென்று வாட்டி வதைத்த காசநோய்.

தமிழ்ஒளியின் சோகமும் நம்பிக்கையும்:
கவிஞர் தமிழ்ஒளி தம் கவிதைகளிலும் குறுங்காவியங்களிலும் சிறுகதைகளிலும் எதார்த்த வாழ்விலுள்ள இன்னல்கள் பலவற்றைப் பரவலாக எடுத்துரைக்கின்றார். ஒடுக்கப்பட்ட மக்களின் சோகமயமான வாழ்க்கைச் சித்திரம் படிப்பவர்கள் நெஞ்சை நெகிழ்விக்கச் செய்யும் வகையில் கவிஞரின் படைப்புகளில் சித்தரிக்கப்பட்டிருக்கும். காவியங்கள் மிகுதியும் துன்பியல் முடிவுகளைக் கொண்டதாகவே பாடப்பட்டிருக்கும். ஆனால் கவிஞர் எதிர்கால வாழ்வின் மீது தளராத நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதை அவர் கவிதைகளின் வழி உணரமுடியும்.
உழுபவனே நிலத்திற்குச் சொந்தக் காரன்
உழைப்பவனே தேசத்தின் உரிமை யாளன்
புழுவைப்போல் கிடந்ததுவும் பிச்சை வாங்கும்
புன்மைநிலை அடைந்ததுவும் வாடைக் காற்றில்
அழுதுதுயர் அடைந்ததுவும் இனிமே லில்லை
அடங்காத வேகமொடும் ஆர்வத் தோடும்எழுந்து வா! 
உழைப்பவரின் போராட் டத்தில் 
இரண்டின்றிக் கலந்துவிட இதுதான் நேரம் 5

எதிர்காலத்தின் மீது எவ்வளவு நம்பிக்கையோடு கவிதை யாத்துள்ளார் என்பதை உணர்தல் வேண்டும்.

செஞ்சேனைகளின் வெற்றி:
தமிழ்க் கவிஞர்களில் சீனப்புரட்சியை வரவேற்று இங்கே புரட்சிக்குரல் எழுப்பிய ஒரே கவிஞன் தமிழ்ஒளியே. உலகில் எங்கெல்லாம் செஞ்சேனைகள் வெற்றி பெறுகின்றனவோ அவற்றை வரவேற்கத் தமிழ்ஒளி தவறுவதே இல்லை. சீனத்து செஞ்சேனைகளின் வெற்றியைப் பல பாடல்களில் புகழ்ந்து பாடுகின்றார்,
சீனம் நமக்கொரு நம்பிக்கை - அதன்
செஞ்சேனை வெற்றிக ளால்
புது ஞானம் பிறக்குது மண்ணிலே - இந்த
ஞானத்தை அன்று விதைத்தது
வானர சாகிய சோவியத் - அது
வாழ்த்தி மகிழுது தாயென ஈனர்கள்
ஓட்டம் பிடிக்கிறார் - நான்கிங்
எல்லை பரிசுத்தம் ஆகுது. 6 
சோவியத் புரட்சியைப் பல பாடல்களில் புகழ்ந்து பாடியிருந்தாலும் சீனப் புரட்சியைப் பாடும்போதும் சோவியத்நாடு தாய்போல் சீனாவை வாழ்த்தி மகிழ்வதாகப் பாடுகின்றார். சீனப் புரட்சி இந்திய ஏழைகளின் கனவுகளில் நம்பிக்கையை ஊட்டுவதாகவும் இந்தியத் தொழிலாள வர்க்கத்தினருக்கு ஊக்கம் அளிப்பதாகவும் இருக்கிறது என்று சீனப்புரட்சி தந்த நம்பிக்கையில் இந்தியப் புரட்சியையும் கனவு காண்கிறார் கவிஞர் தமிழ்ஒளி.

மே தினமே வருக:
உலகு தழுவிய நிலையில் அவர் படைத்த மேதினக் கவிதை ஒரு நீண்ட கவிதை. தமிழிலக்கியத்திற்கு அது ஒரு புதுமை இலக்கியம். இந்திய மொழிகளில் மேதினத்தை வரவேற்று இதுபோன்றதொரு கவிதையை வேறு யாரும் படைத்ததில்லை என்பதே இக்கவிதையின் தனித்தன்மைக்கு ஒரு சிறந்த சாட்சி. உழைப்பாளி வர்க்கத்தின் உரிமைக்குரலாக, போர்ப்பரணியாக ஒலிக்கும் புரட்சிக் கவிதை அது,
கோழிக்கு முன்னெழுந்து கொத்தடிமை போலுழைத்துப்பாடுபட்ட ஏழைமுகம் பார்த்துப் பதைபதைத்துக்கண்ணீர் துடைக்கவந்த காலமே நீ வருக!மண்ணை இரும்பை மரத்தைப் பொருளாக்கிவிண்ணில் மழையிறக்கி மேதினிக்கு நீர்பாய்ச்சிவாழ்க்கைப் பயிரிட்டு வாழ்ந்த தொழிலாளிகையில் விலங்கிட்டுக் காலமெல்லாம் கொள்ளையிட்டபொய்யர் குலம்நடுங்கப் பொங்கி வந்த மேதினமே! 7என்றெல்லாம் சர்வதேசத் தொழிலாளர் உரிமைப் பிரகடனத்தை நினைவ+ட்டும் வகையில் உணர்ச்சி பொங்கக் கவிதை படைக்கின்றார். மேதினத்தின் வலிமையையும் சாதனையையும் நினைவு கூர்கின்றார், கந்தல் மனிதரவர் கையில் அதிகாரம்ஏற்றிவைத்த நின்பெருமை என்னுயிர்க்கும் மேலன்றோபோற்றினேன் வையப் புரட்சியொடு நீ வருக. 8உலகத் தொழிலாளர்கள் உள்ளவரை நிலைத்திருக்கும் கவிதையை காலத்தால் அழிக்க முடியாத கவிதையைத் தந்து காலத்தை வென்று நிற்கிறார் கவிஞர் தமிழ்ஒளி.

கவிதையின் உள்ளடக்கத்தோடு உருவத்திலும் புதுமை:
கவிஞர் தமிழ்ஒளி முற்போக்கான புரட்சிகரமான சிந்தனைகளை வெறும் பரப்புரையாகத் தம் கவிதைகளில் பெய்துவிடவில்லை. கவிதைகளுக்கே உரிய அழகியலோடு தம் கவிதைகளைப் படைக்கின்றார். இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களில் இவர்போல் சந்த நயத்தோடும் உவமை உருவகப் புதுமைகளோடும் சொல்லாட்சிச் சிறப்புகளோடும் புரட்சிக்கவிதைகள் யாத்தவர் இல்லை என்று சொல்லும்படியாகக் கவிஞரின் கவிதைகள் மிளிர்கின்றன. தமிழ்ஒளியின் காவியங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் தனித்தன்மை வாய்ந்த படைப்புகளாக விளங்குகின்றன.“கருத்துக்களைச் சொல்லுவது மட்டுமே கவிதையின் நோக்கமெனில், யாப்புவகைகள் பல இருக்கத் தேவையிராது. கவிதை ஒரு கலை, அந்த உணர்வோடு இலக்கியம் படைக்கும் கவிஞன் தான் விரும்பும் வண்ணம் கவிதையைக் கையாளும் பொருட்டே யாப்பு வகைகள் பல உருவாக்கப்பட்டன.” 9 என்பது கவிஞர் தமிழ்ஒளியின் கருத்தாக இருந்தது. அதனால் ஒவ்வொரு காவியத்திற்கும் ஒவ்வொரு கவிதைக்கும் ஏற்பப் பலப்பல சந்த நடையுடைய கவிதைகளையும் யாப்பு வடிவங்களையும் தேர்ந்தெடுத்தார் தமிழ்ஒளி.

கவிதைகள் நிலைக்கும் கவிஞன் வாழ்வான்:
காலத்தை வெல்லும் கவிதைகள் தந்த கவி தமிழ்ஒளி கவிதை உலகில் வாழ்ந்தபோதும், வாடி வீழ்ந்தபோதும் மறக்கப்பட்டான், மறைக்கப்பட்டான். சாதி செய்த சதி அது.கவிஞர் தமிழ்ஒளியே கூறுவதுபோல்,

‘வஞ்சகக் காலன் வருவதும் போவதும் வாழ்க்கை நியதியடா! –எனில் செஞ்சொற் கவிதைகள் காலனை வென்று சிரிப்பது இயற்கையடா!’10 

என்று ஆறுதல் கொள்ளத் தோன்றுகிறது.கவிஞர் தமிழ்ஒளி புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் காலமானபோது சொன்ன கவிதை வரிகளைத்தான் தமிழ்ஒளி அவர்களின் மரணத்தின் போதும் நினைவு கொள்ள வேண்டியுள்ளது. அந்த வைர வரிகள் இதோ,சென்னையினின்று பிணம் வரும் என்கின்றசெய்தியைச் சிற்சிலர் பேசி நின்றார் - அவர் சொன்னது கேட்டுக் கொதிப்படைந்து, ‘வெறும் சொத்தைகள்’ என்று வழிதொடர்ந்தேன்!உயிரில் உணர்வில் கலந்த கவிஞன் என்உயிரில் உயிர் கொண்டு உலவுகின்றான்! - வெறுந்துயரில் நான் மூழ்கிக் கிடக்கவில்லை, அவன்தொண்டு சிறந்திடத் தொண்டு செய்வேன்!.11கவிஞரின் இந்த வரிகளை நினைவு கொண்டு கவிஞர் தமிழ்ஒளியின் மரணம் தந்த துயரத்தில் நாம் மூழ்கிவிடாமல் நம் உயிரில் உணர்வில் கலந்து நிற்கும் கவிஞர் அவர்களின் தொண்டு சிறந்திடத் தொண்டு செய்வோம்.

அடிக்குறிப்புகள்:

1. கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி காவியங்கள் தொகுதி- ஒன்று, பக். 129-130.
2. சங்கை வேலவன், தமிழ்ஒளியின் கவிப்பயனம், ப.217.
3. கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி கவிதைகள்; தொகுதி.2, பக்.8,9
4. கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி கவிதைகள்; தொகுதி.2, ப.42
5. கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி கவிதைகள்;; தொகுதி.2, ப.37
6. கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி கவிதைகள்;; தொகுதி.2, ப.54
7. கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி கவிதைகள்;; தொகுதி.2, ப.75
8. கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி கவிதைகள்;; தொகுதி.2, ப.75
9. செ.து.சஞ்சீவி, தமிழ்ஒளி, பக்.401
0. கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி கவிதைகள்;; தொகுதி.1, ப.64
11. கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி கவிதைகள்;; தொகுதி.1, ப.102

கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...