சனி, 1 ஜூன், 2019

நம் மூதாதையர்களின் முகவரி தேடி - ஒன்று

நம் மூதாதையர்களின் முகவரி தேடி  -1

முனைவர் நா.இளங்கோ

தமிழ்ப் பேராசிரியர்
புதுச்சேரி-605008

 10-12-2016 சனிக்கிழமை, புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம், சிங்கப்பூர் முனைவர் இரத்தின.வேங்கடேசனின் "விடுதலைப் போராட்ட வீரர் இரத்தினவேலு - வேங்கடேசன் அறக்கட்டளை"யின் ஆதரவில் ஒரு வரலாற்றுச் சிற்றுலாவிற்கு ஏற்பாடு செய்திருந்தது.
நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் பக்தவச்சல பாரதி, முனைவர் இரவிசங்கர், முனைவர் இரா.சம்பத் இவர்களுடன் நெறியாளராக முனைவர் நா.இளங்கோ மற்றும் வழிநடத்தும் முனைவர் இரத்தின.வேங்கடேசன், தமிழ்மாலை வேங்கடேசன்
டன் பேராசிரியர் அரங்க.முருகையன், பேராசிரியர் கே.பழனிவேலு மற்றும் ஆய்வு மாணவர்கள் நாற்பது பேர் புடைசூழச் சிற்றுலா புறப்பட்டோம். உடன் விழுப்புரம் எழுத்தாளர் கோ.செங்குட்டுவன் ஆற்றுப்படுத்துநராக...
சிற்றுலா சென்ற இடங்கள் 

கீழ்வாலை, பனைமலை, மண்டகப்பட்டு, திருநாதர் குன்று, சிங்கவரம்..

முனைவர் நா.இளங்கோ - பேராசிரியர்களுடன்

ஆய்வாளர்கள் - பேராசிரியர்கள்

ஆய்வாளர்கள்

நம் மூதாதையர்களின் முகவரி தேடி 

கீழ்வாலை
கீழ்வாலை: விழுப்புரம் திருவண்ணாமலை சாலையில் கண்டாச்சிபுரம் அருகே உள்ள சிற்றூர் கீழ்வாலை. நெடுஞ்சாலையை ஒட்டித் தெற்கே அரை கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள பாறைகளும், சிறுகுன்றுகளும், மலைக்குகைகளும் கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றின் மிச்ச சொச்சங்களுடன் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன.
கீழ்வாலையின் அந்தப் பாறைகளில் பழங்கற்கால மனிதர்கள் வரைந்துள்ள சிவப்புநிற ஓவியங்கள் பல காணப்படுகின்றன. இத்தகு பாறை ஓவியங்கள் பெருங்கற்கால ஓவியங்கள் என்று அழைக்கப் படுகின்றன. அப்பாறையில் இடம்பெற்றுள்ள சில குறியீடுகள் சிந்து சமவெளிக் குறியீடுகளை ஒத்துள்ளன என்பது கூடுதல் சிறப்பு.
கீழ்வாலையின் பாறைகளில் இடம்பெற்றிருந்த நூற்றுக்கணக்கான ஓவியங்கள், குறியீடுகள் இவற்றில் காலவெள்ளத்தில் அழிந்தவை போக எஞ்சியிக்கும் ஓவியங்கள் வெகுசிலவே.
இப்பொழுதும் மிக அழகாகக் காட்சியளிக்கும் ஓர் ஓவியம் நம்கண்ணையும் கருத்தையும் கவரத்தக்க வகையில் தீட்டப்பட்டிருக்கிறது. அவ்வோவியத்தில் குதிரை போன்றதோர் விலங்கின் மீது ஒருவன் அமர்ந்திருக்க அவ்விலங்கைப் பிணித்துள்ள கயிற்றினைப் பிடித்துக்கொண்டு ஒரு பெண் முன்னே செல்வது போன்றும் எதிரில் ஒரு மனிதன் எதிர்ப்படுவது போன்றும் அமைந்துள்ளது அவ்வோவியம். மனிதர்களின் முகங்கள் பறவைகளின் அலகுகளோடு தீட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அதே பாறையின் ஒருபுறத்தில் ஐந்து குறியீடுகள் வரிசையாக வரையப்பட்டுள்ளன. அந்த ஐந்து குறியீடுகளும் சிந்துசமவெளி அகழ்வாய்வில் கிடைத்துள்ள எழுத்துக் குறியீடுகளை ஒத்துள்ளன.
எழுத்துக் குறியீடுகளும் ஓவியங்களும் தீட்டப்பட்டுள்ள குன்றுக்கு அருகே அவ்வோவியங்களைத் தீட்டிய ஆதிமனிதர்கள் வாழ்ந்த குகை ஒன்றும் உள்ளது. அந்தக் குகையில் கிட்டத்தட்ட முப்பது அல்லது நாற்பதுபேர் வசித்திருக்கக்கூடும் என்று ஊகிக்க முடிகிறது. ஆதி மனிதர்களின் இந்தக் குகையை ஒட்டி நீர்ச்சுனை ஒன்று உள்ளது. எத்தகைய வறட்சியிலும் வற்றாத இந்தச் சுனைநீரை அந்த ஆதிமனிதர்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும். இந்தக் குகையும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளும் அரிய வரலாற்றுப் புதையல்களாகும்.
பாறைகளின் அருகே பேராசிரியர்களும் ஆய்வாளர்களும் குழுவாக அமர்ந்து கலந்துரையாடிய வேளையில் முனைவர் நா.இளங்கோவும் எழுத்தாளர் கோ.செங்குட்டுவனும் இக்கீழ்வாலை ஓவியங்களின் வரலாற்றுச் சிறப்பினை ஆய்வாளர்களுக்கு விளக்கியுரைத்தனர்.

முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா.இளங்கோ - வரலாறு 

கீழ்வாலை ஓவியம்

இரத்தின.வேங்கடேசன் - முனைவர் நா.இளங்கோ

நம் மூதாதையர்களின் முகவரி தேடி 
பனைமலை
பனைமலை: பல்லவ அரச வம்சத்தைச் சேர்ந்த இரண்டாம் நரசிம்மன் என்ற ராஜசிம்மன் ( 700-728 CE ) கலை அம்சத்தில் உருவான பனைமலை தாளகிரீஸ்வரர் ஆலயம் கடினமான சிவப்புக் கருங்கல்லால் ஆனதாகும் விழுப்புரம் வழியாக செஞ்சி செல்லும் சாலையில் (அனந்தபுரம் வழி) 20 கி.மீ தொலைவில் பனைமலை அமைந்திருக்கிறது.
பனைமலைக் கோவில் ஓவியம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. கோயிலின் வடக்குச் சிற்றாலயத்தில் இவ்வோவியம் இடம்பெற்றுள்ளது மகுடம் தரித்தத் தலைக்கு மேல் வண்ணக் குடை, ஒரு கால் தரையில் ஊன்றியிருக்க மற்றொரு காலை மடித்துத் தலையை சாய்த்து, அழகிய அணிகலன்களுடன் காட்சித் தருகிறாள் உமையம்மை. (இவ்வோவியம் பல்லவனின் அரசியாகிய அரங்கபதாகை என்போரும் உண்டு)
எதிர்ச் சுவரில் சிவபெருமானின் சம்ஹார தாண்டவம். அதனை இரசிக்கும் பார்வதி. சிவனின் சம்ஹார தாண்டவ ஓவியம் முற்றிலும் சிதைந்துவிட்ட நிலையில், பார்வதி தேவியின் ஓவியம் மட்டும் ஓரளவு நின்றிருக்கிறது.
பனைமலை ஓவியம், தென்னிந்திய ஓவியக் கலை மரபில் அஜந்தா எல்லோராவுக்கு அடுத்த நிலையில் இருப்பது. தமிழகத்தில் எஞ்சி நிற்கும் பல்லவ ஓவியம். இலங்கை சிகிரியா மலைக் குன்றில் உள்ள ஓவியங்களுடன் ஒப்பிடக் கூடியது.
மேலும் மகிஷ சம்ஹாரத்திற்க்குப் பின் சாந்தமான வடிவில் நிற்கும் மகிஷாசுரமர்த்தனி சிற்பம் ஒன்று பனைமலையின் இடப்பக்க பாதையில் ஒரு சிறிய குகையில் அமைந்திருக்கிறது. காண்பதற்கரிய இச்சிற்பம் கண்ணையும் கருத்தையும் கவரத்தக்கது.

பனைமலை - பல்லவர் ஓவியம்


பனைமலல - கொற்றவை

பனைமலை

கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...