சனி, 29 ஆகஸ்ட், 2009

மானுடவியல் நோக்கில் காதாசப்தசதி - பகுதி-1

மானுடவியல் நோக்கில் காதாசப்தசதி பகுதி-1

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
பட்ட மேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8

காதாசப்தசதி அறிமுகம்:

காதாசப்தசதி, அய்தராபாத்திற்குத் தென்மேற்கே இருந்த குந்தள நாட்டைக் கி.மு.230 முதல் கி.பி.130வரை ஆண்ட சாதவாகன மரபைச் சேர்ந்த முப்பது மன்னர்களில் பதினேழாமவனான ஹாளன் என்பவனால் தொகுப்பிக்கப் பெற்ற பிராகிருத மொழி நூலாகும்.

இந்நூலில் எழுநூறு பாடல்கள் தொகுக்கப்பட்டன. காதா என்பது நூல் எழுதப்பட்ட வடமொழி யாப்பின் பெயர். இது முதலடி 12 மாத்திரையும், இரண்டாம் அடி 18 மாத்திரையும். மூன்றாம் அடி 12 மாத்திரையும், நான்காம் அடி 15 மாத்திரையும், அமையப் பாடப்பட்டதாகும். காதா யாப்பினால் எழுதப்பட்ட எழுநூறு பாடல்களைக் கொண்டது என்ற பொருள்பட காதாசப்தசதி என இந்நூல் பெயர் பெற்றது.

காதசாப்தசதி எழுந்த நிலம்:

சப்தசதிப் பாடல்களில் விந்தியமலை (பா.160) குறிக்கப்படுகின்றது. கோதாவரி (பா.11) நுருமதை (பா.62) முதலிய ஆறுகளும் குறிப்பிடப்படுகின்றன. கடல் பற்றிய குறிப்பு இல்லை. சாதவாகன மன்னர்களின் குந்தள அரசு பிராகிருதத்தைப் பேச்சு மொழியாகக் கொண்டிருந்தது. இன்றைய மகாராட்டிரமும் ஆந்திரமும் இணைந்த பகுதிகளே சாதவாகனர்களின் ஆட்சிப் பரப்பாக இருந்தன.

காலம்

காதாசப்தசதி கி.மு. முதல் நூற்றாண்டில் ஹாளனால் தொகுப்பிக்கப்ட்டிருக்க வேண்டுமென நம்பப்படுகிறது. ஹாளனின் அவைக்களப் புலவர்கள் பலர் முயன்று திரட்டித் தொகுத்த தொகுப்பே சப்தசதி யாதலால், சப்தசதிப் பாடல்கள் முழுவதும் ஒரே கால கட்டத்தில் எழுதப் பெற்றவை என்று கொள்ள வாய்ப்பில்லை. எழுநூறுபாடல்களில் 348 பாடல்களுக்கு மட்டுமே , ஆசியரியர் பெயர் பற்றிய குறிக்கப்பட்டுள்ளது. பிற பாடல்களில் ஆசிரியர் பற்றிய குறிப்பு இல்லை என்ற செய்தி இப்பாடல்கள் ஒரே சமயத்தில் பாடப்பட்டவை அல்ல என்ற கருத்தை உறுதிப்படுத்தும். ஆளனின் காலத்திற்கு முன் சில நூற்றாண்டுகள் பழமையுடைய பாடல்கள் கூடத் திரட்டித் தொகுக்கப் பெற்றிருக்கலாம்.

சப்தசதிப் பாடல்கள் பெரிதும் சங்க அகப்பாடல்களை ஒத்திருப்பதால் சற்றேறக் குறைய கடைச்சங்க கலத்தை ஒட்டிய காலப்பகுதியில்தான் ஆந்திர நாட்டில் இந்த அகப்பாடல்கள் தொகுக்கப் பெற்றிருக்கவேண்டும்.

காலம் பற்றிய ஆய்வில் ஏற்படும் சிக்கல்:

காதாசப்தசதிப் பாடல்களில் இடம்பெறும் உள்ளடக்க ஆய்வு சப்தசதிப் பாடல்களின் காலத்தைத் தமிழ் அகப்பாடல்களின் காலத்திற்குப் பின்னே அழைத்துச் செல்கின்றன. தமழிலக்கிய வரலாற்றில் சங்க அகப்பாடல்களுக்குப் பிந்திய இலக்கியங்களான கலித்தொகை, பரிபாடல்களின் காலத்தை ஒட்டியதாகவம், அவற்றின் உள்ளடக்கங்களை ஒட்டியதாகவம் சப்தசதிப் பாடல்கள் அமைந்துள்ளன. சான்றாகச் சூரிய வழிபாடு (பா.129) மந்திரங்கள் ஓதி வழிபடுதல் (பா.1), ஆகிய வழிபாட்டுச் செய்திகளம் ஊழ் (பா.116) மேலுலகம், (பா.58) மறுபிறப்பு (பா.290) பாவபுண்ணியம் (பா.49) அதிர்ஷ்டம் (பா.166) முதலான நம்பிக்கைகள் பற்றிய குறிப்புகளும் தேவர்கள் பாற்கடலைக் கடைந்த செய்தி (பா.65) தேவர்கள் கண்ணிமையாமல் இருப்பர் என்ற செய்திபோன்ற தேவர்களைப் பற்றிய குறிப்புகளும் வீமனால் உதையுண்ட துரியோதனன் பற்றிய பாரதக் கதைக் குறிப்பும் (பா.245) இராம லக்குவர் ஓவியம் பற்றிய குறிப்பும்(பா.380) திருமால் குறளனாக (வாமனனாக) வந்த கதைக் குறிப்பும் (பா.378) சப்தசதிப் பாடல்களில் இடம் பெற்றுள்ளன. மேற்கூறிய புராண இதிகாசக் குறிப்புகள் சப்தசதிப் பாடல்களின் காலத்தைத் தமிழ்ச்சங்க அகப்பாடல்களுக்குப் பிற்பட்டதாகக் காட்டுகின்றன.

காதசப்தசதியும் காதலும்:

சப்தசதியில் இருவகைக் காதலும் குறிக்கப் பெறுகின்றன. தமிழ் அகப்பாடல்களைப் போல் குறிக்கோள் நிலைக் காதல்களை மட்டும் சுட்டுவதாக அமையாமல் நடைமுறையில் காதலுக்குள்ள மதிப்பும் நிலை பேறும் பேசப்படுகின்றன.

குறிக்கோள் நிலைக் காதலுக்குப் பின்வரும் பாடலைச் சான்றாகக் காட்டலாம். காதலியைத் தவிர வேறு எந்தப் பெண் வந்தாலும் தலை கவிழ்ந்தவாறு பேசுகிறான் அவன். காதலனைத் தவிர வேறு யாரையும் கண்ணெடுத்தும் பார்க்க மாட்டேன் என்கிறாள் அவள்.

இவர்கள் இருவரின் கண்களும் எல்லாவற்றையும்
காணுமாறு நிமிர வேண்டுமானால்
இவர்கள் இருவரைத் தவிர வேறு ஆடவர் பெண்டிர்
எவரும்
இவ்வூரிரல் ஏன், இவ்வுலகில் இருத்தலாகாது (பா.151)


என்ற நிலையில் காதல் பேசப்படுகிறது. ஆனால் நடைமுறையில் காதலின் உண்மையான நிலை என்ன என்பதை,

காதலனே!
நீ உன் காதலியைக்
காணாமலிருந்து விட்டால்
நெருங்கிய உயிர்க் காதலும்
மறக்கப்பட்டு விடும்


கையில் ஏந்திய நீர் கைவிரல் சந்துகளின் வழியெ ஒழுகிப் போவது போலக் கால இடைவெளி காதலை விழுங்கி வரண்டு விடச்செய்கிறது (பா.173) என்கிறார் பகுரன்.
மாந்தர்கள் குணங்களால் கவரப்படாமல் எடுத்த எடுப்பிலேயே காதல் கவர்ச்சிக்கு இறையாகி விடுகிறார்கள். (பா.287) என்று வருத்தப்படுகிறார் ஒரு கவிஞர். இத்தகைய காதலின் நடைமுறைத் தன்மையைச் சுட்டிக் காட்டும் பாடல்கள் காதாசப்தசதியின் தனிச்சிறப்பு.

3 கருத்துகள்:

எழிலரசன் சொன்னது…

அய்யா , உங்கள் ஆய்வு கட்டுரை தொடர வாழ்துகள்

முனைவர் நா.இளங்கோ சொன்னது…

நன்றி! எழிலரசன். தொடர்ந்து உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். வாழ்த்துக்கள்

முனைவர் நா.இளங்கோ சொன்னது…

நன்றி! எழிலரசன். தொடர்ந்து கருத்துக்களை எழுதுங்கள். வாழ்த்துக்கள்

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...