புதன், 2 செப்டம்பர், 2009

தமிழின் முதல் பொதுவுடைமை இதழ் ‘சுதந்திரம்’ ஓர் அறிமுகம் (1934)-பகுதி-2

தமிழின் முதல் பொதுவுடைமை இதழ் ‘சுதந்திரம்’ ஓர் அறிமுகம் (1934)-பகுதி-2

பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி -8.

சுதந்திரமும் பொதுவுடைமையும்:

மகாத்மா காந்தியடிகள் 1933 இல் அரிசன சேவா சங்கத்தை ஏற்படுத்தினார். அரிசன சேவா சங்கத்தில் முழு ஈடுபாட்டோடு பணியாற்றிய வ.சுப்பையா அவர்கள் 1934 பிப்ரவரி 17 இல் மிகுந்த இன்னல்களுக்கிடையே மகாத்மாவைப் புதுவைக்கு அழைத்து வந்தார். பிறகு அரசியல் ரீதியாக எவ்வாறு செயல்பட்டார் என்பதைப் பின்வரும் பகுதியில் சுப்பையாவே குறிப்பிடுகின்றார்.
அரிசன மக்களோடு எனக்கிருந்த நெருக்கத்தின் காரணமாகப் பஞ்சாலைத் தொழிலாளர்களின் இயக்கத்தோடு எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. அதன்பின் அரசியலிலும் நேரடியாக ஈடுபட நேர்ந்தது. அரசியல் இயக்கத்தில் தீவிரமாகச் செயல்பட்ட நான், 1934 ஜூனில் சுதந்திரம் எனும் பத்திரிக்கையைத் தொடங்கினேன். அது இன்றுவரை தொழிலாளர் வர்க்கத்தின் நலனுக்காக ஏந்தப்பட்ட போர்க்கொடியாகச் செயல்பட்டு வருகிறது.

தோழர் அமீர் அய்தர்கான் என்பவர்தான் தமிழகத்தில் பொதுவடைமை இயக்கத்தைத் தோற்றுவிக்கத் தூண்டுகோலாய் இருந்தவர். 1934 ஜூலையில் அவரோடு எனக்குப் பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பழக்கத்தின் காரணமாகப் பொதுவுடைமைக் கட்சியோடு நெருக்கமும் ஏற்பட்டது. அந்தக் கட்சியின் தொடர்பு காரணமாகத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஒரு புதிய உத்வேகம் கிடைத்தது. (சுதந்திரம் பொன்விழா மலர்-3, ப.40)
தோழர் வ.சுப்பையா அவர்கள் பொதுவுடைமை இயக்கத்தோடு தமக்குத் தொடர்பு ஏற்படுவதற்கு முன்பே சுதந்திரம் இதழைத் தொடங்கியுள்ளார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

மக்கள் தலைவர் வ.சுப்பையா அவர்களின் சமதர்ம சிந்தனை:

தோழர் அமீர் அய்தர்கான் அவர்களைச் சந்தித்த பிறகே சுப்பையா அவர்களுக்குப் பொதுவுடைமை இயக்கத் தொடர்பு ஏற்பட்டது என்று அவரே குறிப்பிட்டிருந்தாலும், இயல்பாகவே வ.சுப்பையா அவர்களுக்குப் பொதுவுடைமைச் சிந்தனையும் அது குறித்த தெளிவான அரசியல் அரசியல் அறிவும் இருந்திருக்கின்றது என்பதைச் சுதந்திரம் இதழின் முதல் இதழிலிருந்தே தெரிந்துகொள்ள முடிகின்றது.

தொழிலாளிகளின் திண்டாட்டம் முதலாளிகளின் கொண்டாட்டம் என்ற தலைப்பில் சுதந்திரம் முதல் இதழில் அவர் எழுதியுள்ள கட்டுரையில், தனியொருவனுக்கு உணவிலை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதி பாடல் அடிகளோடு கட்டுரையைத் தொடங்குகின்றார். மேலும், “இன்றைக்கு உலகத்தில் வறுமையும் அறியாமையும் ஒழிய வேண்டுமானால் முதலாளிகளின் ஆதிக்கத்தை அறவே களைந்தெறிய வேண்டும்.” என்றும் “ஏழை மக்களின் உழைப்பினால் ஏற்பட்ட பலன் முழுமையும் ஒருவன் கொள்ளைகொண்டு போகிறான். உழைப்பாளியோ அரை வயிற்றுக் கஞ்சிக்கும் வழியில்லாமல் அவதிப்படுகிறான்” என்றும் சுப்பையா அவர்கள் வேதனைப்படுகிறார். இதற்குக் காரணம் யாது? என்று சிந்திக்கும் வ.சுப்பையா அவர்கள் முதலாளித்துவ சமூக அமைப்பே இதற்குக் காரணம் என்று முடிவு கட்டுகிறார்,

முதலாளிகள் அனுபவிக்கும் ஆடம்பர வாழ்க்கை ஏழைத் தொழிலாளியின் அரிய உழைப்பினால் ஏற்பட்டதன்றோ? இதை முதலாளி மட்டுமே அனுபவிக்கின்றான். இது என்ன அக்கிரமம்? இத்தகைய சமூக அமைப்பினால் உலகத்தின் பெரும் பகுதியான ஏழைத் தொழிலாளிகளின் துயரம் என்னே? (சுதந்திரம், மாலை:1-மலர்:1, ப.22)
என்பதோடு தீர்வு என்ன என்பதையும் அவரே அக்கட்டுரையில் குறிப்பிடுகின்றார்,
நமது சமூகத்திலிருக்கும் இத்தகைய முதலாளிகளின் ஆதிக்கத்தை வேருடன் களைந்தெறிந்து, சமதர்ம லட்சியத்தை நிரந்தரமாக நாட்டவேண்டும். அதற்குத் தொழிலாளர்களே முனைந்து வேலை செய்ய வேண்டும்.தொழிலாளிகளிடையே தக்க முயற்சி வேண்டும், தைரியம் வேண்டும்.

மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ?

(சுதந்திரம், மாலை:1-மலர்:1, ப.23)

மக்கள் தலைவர் சுப்பையா அவர்களின் மேலே குறிப்பிட்ட கட்டுரையை முழுவதுமாகக் கவனத்தில் கொண்டால் சுதந்திரம் இதழ் தொடங்கும் போதே ஆசிரியருக்கு சமதர்ம சிந்தனையும் பொதுவுடைமை குறித்த அரசியல் தெளிவும் இருந்துள்ளமை புலனாகிறது.

லெனினும் ரஷ்யப் புரட்சியும்:

சுப்பையா அவர்கள் 1934 ஜூலையில் தோழர் கே.பாஷ்யம் முன்முயற்சியின் பேரில் சென்னையில் அமீர் அய்தர்கானைச் சந்திந்துத் தம்மைப் பொதுவுடைமை இயக்கத்தில் இணைத்துக்கொண்டது மட்டுமில்லாமல், தமிழகம், ஆந்திரா, புதுவைப் பகுதிகளில் இயக்கத்தைக் கட்டுவது குறித்தும் திட்டமிட்டார்கள். தோழர் சுந்தரய்யாவும் அப்போது உடனிருந்தார். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு சுப்பையா அவர்கள் பொதுவுடைமை இயக்க நூல்களைத் தீவிரமாகப் படிக்கத் தொடங்கியதோடு இந்தியாவின் தலைசிறந்த பொதுவுடைமை இயக்கத் தலைவராகவும் ஆனார். பொதுவுடைமை இயக்கம், தத்துவம், இயக்க வரலாறு போன்றவற்றை முறையாகப் பயிலத் தொடங்கியவுடன் அவ்விஷயங்களைத் தம் இதழான சுதந்திரத்திலும் தொடர்ந்து எழுதத் தொடங்கினார். சுதந்திரம் ஐந்தாம் இதழில் லெனினும் ரஷ்யப் புரட்சியும் என்ற தலைப்பில் வரலாற்றுத் தொடர் ஒன்றை வ.சு அவர்கள் எழுதியுள்ளார்கள்.

பொதுவுடைமை என்பது மக்களுக்கு இயற்கையாகச் சொந்தமான உரிமைகளுக்காகப் போராடும் இயக்கமாகும். கொடுமையான அக்கிரமமான சமூகப் பொருளாதார அமைப்பை மாற்றி, உலகத்திலுள்ள மக்கள் அனைவரும் உயர்வு தாழ்வின்றி உணவுபெற்று சமவுரிமை பெற்று இன்பமாக உய்வதற்கான பொதுவுடைமை என்ற சீரிய திட்டத்தை அமைக்க வேண்டுமென்று அரும்பாடுபட்டார் ரஷ்ய தேசத்துப் பெரியார் லெனின். (சுதந்திரம், மாலை:1-மலர்:5, ப-ள்.5,6)
என்று பொவுடைமை குறித்தும் ரஷ்யத் தலைவர் லெனின் குறித்தும் தமிழில் தம் சுதந்திரம் இதழில் எழுதினார் வ.சுப்பையா.

முடிப்பாக:

இதுவரை குறிப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தமிழின் முதல் பொதுவுடைமை இதழ், இதழியல் வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவது போல் !935 இல் வெளிவந்த புது உலகமும் இல்லை, 1937 இல் வெளிவந்த ஜனசக்தியும் இல்லை, 1934 இல் வெளிவந்த சுதந்திரம் இதழே என்று துணிந்து முடிபு கூறலாம்.

1934 இல் சுதந்திரம் இதழை வெளியிடும் போது தோழர் வ.சுப்பையா அவர்களுக்குப் பொதுவுடைமைக் குறித்த அரசியல் தெளிவு இருந்தமையும் அக்கருத்துக்கள் சுதந்திரம் இதழில் வெளிவந்துள்ளமையும் இக்கட்டுரையால் நிறுவப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...