வியாழன், 24 செப்டம்பர், 2009

சிங்கப்பூர் பாரதி விழாவில் இலக்கியச் செம்மல் விருது





சிங்கப்பூர் பாரதி இலக்கிய விழாவில்
பேராசிரியர் நா.இளங்கோவுக்கு இலக்கியச் செம்மல் விருது.


சிங்கப்பூர் இலக்கிய ஆர்வலர்கள் ஒருங்கிணைந்து நடத்திய மகாகவி பாரதி விழா 11-09-2009 ஞாயிறன்று சிங்கப்பூர் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய மாநாட்டரங்கில் உரையரங்கம், கவியரங்கம், வழக்காடுமன்றம், சிறப்புப் பேருரை, விருது வழங்கல், ஆடல்- பாடல் அரங்கம் எனப் பல்சுவை அங்கங்களோடு முத்தமிழ் விழாவாகக் கோலாகலமாக நடைபெற்றது.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக ஆசிய இயல் துறைத்தலைவர் முனைவர் சுப. திண்ணப்பன் தலைமையில் புதுவைச் சமுதாயக் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் அரங்க மு.முருகையன் “நாட்டுப்புறப் பாடல்களே பாரதியின் பாடலுக்கு ஆதாரம்” என்ற பொருளில் உரையாற்றி விழாவைத் தொடங்கிவைத்தார். தொடக்க விழாவைத் தொடர்ந்து ‘பாரதியை நினைப்போம்’ என்ற தலைப்பில் உரையரங்கமும் ‘யாதுமாகி நின்றாய் பாரதி’ என்ற தலைப்பில் கவியரங்கமும் நடைபெற்றன.

நிறைவு அரங்கமாக மூத்த பத்திரிக்கையாளர் சொற்சித்தர் வே. புருஷோத்தமன் தலைமையில் பேராசிரியர் முனைவர் நா.இளங்கோவின் நிறைவுப் பேருரையும் “மகாகவி பாரதியின் கனவுகள் இன்றளவும் நனவாகவில்லை” என்ற தலைப்பில் வழக்காடு மன்றமும் நடைபெற்றன. புதுவைக் காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையப் பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ வழக்காடு மன்ற நடுவராகப் பொறுப்பேற்றார். பாரதியின் கனவுகள் நனவாகவில்லை என ஸ்டாலின் போஸ் வழக்குத் தொடுக்க முனைவர் இரத்தின வேங்கடேசன் வழக்கை மறுத்து எதிர் வழக்காடினார்.

விருதளிப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் பேராசிரியர் முனைவர் நா. இளங்கோவிற்கு அவரின் இருபத்தைந்து ஆண்டுகால இலக்கியப் பணியினைப் பாராட்டிச் சிங்கப்பூர் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் இலக்கியச் செம்மல் என்ற விருது வழங்கிச் சிறப்பித்தனர். சொற்சித்தர் வே.புருஷோத்தமன் இலக்கிய ஆர்வலர்கள் சார்பில் சிறப்பு விருந்தினருக்குப் பொன்னாடைப் போர்த்தி விருது வழங்கி கௌரவித்தர். கவிஞர் இறை.மதியழகன் நிறைவுப் பேருரைஞரை அறிமுகம் செய்துவைத்தார். நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்து நடத்திய முனைவர் இரத்தின. வேங்கடேசன் நன்றி கூறினார்.

1 கருத்து:

முகவை மைந்தன் சொன்னது…

வாழ்த்துகள், அய்யா. நிகழ்ச்சி பற்றி முன்பே பதிவிட்டிருந்தும் அறிந்திருக்க வில்லை. வாய்ப்பைத் தவற விட்ட வருத்தம் இருக்கிறது.

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...