வியாழன், 17 செப்டம்பர், 2009

சனியன் பெட்டி - மலையருவி

சனியன் பெட்டி

முனைவர் நா.இளங்கோ


மிகுந்த தயக்கத்தோடே... அந்த வீட்டை நெருங்கினேன். கேட்டைத் திறந்து அழைப்பு மணியைத் தேடினேன். சற்று உள்ளடங்கியிருந்தது. அழுத்தினேன். அழைப்பு மணிச்சத்தம் உள்ளே கேட்டதா? ஏன்பதை யூகிக்க முடியவில்லை. சில நிமிடக் காத்திருப்புக்குப் பின் யாரும் வராததால் உள்கேட்டைத் திறந்துகொண்டு தயங்கித் தயங்கி உள்ளே எட்டிப் பார்த்தேன்.

ஹாலில் சிலர் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. சன்னமான அழுகையொலியை மட்டும் கேட்க முடிந்தது. என்னுடைய வருகையைக் கவனித்தது போல் சிலர் லேசாக அசைந்து கொடுத்தார்கள். ஆனால் அவர்கள் முகங்கள் இருளடைந்ததைப் போல் இருந்ததால் முகத்தில் அவர்கள் என்ன உணர்ச்சியை வெளிப்படுத்தியிருப்பார்கள் என்று எனக்குச் சரியாக விளங்கவில்லை.

யாருடைய வார்த்தைக்கும் காத்திராமல் ஹாலின் ஓரத்தில் இருந்த நாற்காலியில் பவ்வியமாக உட்கார்ந்தேன். நான் நாற்காலியை இழுக்கும் ஓசைகூட அந்தச் சூழலுக்கு இடையூறாக இருக்கலாம் என்ற பயத்தில் மிக மெதுவாக நாற்காலியை இழுத்து உட்காரும் ஓசைகூட கேட்காத வகையில் மென்மையாக உட்கார்ந்தேன்.

ஹாலின் ஒரு மூலையில் அது இருந்தது.

சுற்றும் முற்றும் பார்த்தேன். இப்பொழுது எல்லோர் முகங்களையும் தெளிவாகப் பார்க்க முடிந்தது. ஒருவர் முகம் பேயறைந்ததைப் போலிருந்தது. முற்றொருவர் இலேசாக அழுதுகொண்டிருந்தார். மற்றொருத்தி கண்ணீரை வெளிப்படுத்தாமல் சேலைத் தலைப்பால் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டாள். மற்றும் ஒருவர் பொங்கிவரும் அழுகையைத் தவிர்ப்பதற்காக முகத்தை மேல்நோக்கி உயர்த்தி அப்படியும் இப்படியுமாக முகத்தால் ஒரு அரைவட்டமடித்தார்.

மூலையிலிருந்து இரண்டு பெண்கள் தேம்பித் தேம்பி அழும் ஓசை அந்த அறை முழுவதும் வியாபித்து ஒரு இருக்கமான சூழலை உண்டாக்கியிருந்தது. எனக்கு அழுகை வரவில்லை. இப்படி ஒரு கல் நெஞ்சா நமக்கு. இத்தனைபேரின் சோகத்தில் பங்கெடுக்க முடியவில்லையே என்று ஒரு கணம் சிந்தித்தேன். ஒரு நொடியில் அந்த சிந்தனை மறைந்து லேசான சிரிப்பு தோன்றியது. ஏங்கே அந்தச் சிரிப்பு வெளிப்படையாகப் பிறருக்குத் தெரிந்துவிடுமோ? என்ற பயத்தில் சட்டென்று முகத்தை இருக்கமாக்கிக் கொண்டேன்.

நீண்ட நேர அழுகை மற்றும் சோகத்திற்குப் பின்னர் அங்கே ஒரு மயான அமைதி நிலவியது. உறைந்துபோன முகங்களுக்கு மீண்டும் உயிர்வந்ததைப் போலிருந்தது. லேசான அமைதியும் அதைத் தொடர்ந்து சலசலப்புமானது அந்த அறை. இப்பொழுது எல்லோரும் என்னைக் கவனிக்க ஆரம்பித்தார்கள்.

அப்போழுது ஒருகுரல் ‘சரி சரி முடிஞ்சது, அடுத்து நியூஸ் போடப்போறான் டிவிய நிறுத்துங்கப்பா’.

கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...