புதன், 4 நவம்பர், 2009

இசைக்கும் கவிதைக்கும் என்ன உறவு?

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

உலகக் கலைகளுக்கெல்லாம் தாய் இசைக்கலையே. புவிக்கோளத்தைச் சூழ்ந்துள்ள வளிமண்டலமே உலக உயிரினங்களுக்கெல்லாம் ஆதாரம் ஆனதுபோல், இந்த இயற்கையின் கொடையாகிய வளிமண்டலமே இசைக்கும் ஆதாரம். இயற்கையின் இசை அலாதியானது பாரதி இதனைப் பதிவு செய்கின்றான்.

கானப் பறவை கலகலெனும் ஓசையிலும்
காற்று மரங்களிடைக் காட்டும் இசையினிலும்
ஆற்று நீரோசை அருவி ஒலியினிலும்
நீலப் பெருங்கடல் எந்நேரமும் தானிசைக்கும்
ஓலத்திடையே உதிக்கும் இசையினிலும்


நெஞ்சைப் பறிகொடுத்ததாகப் பாரதி பாடுவதில் இயற்கைக்கும் இசைக்கும் உள்ள நுட்பமான உறவு சொல்லப்படுகிறது.

இசையும் மொழியும் இணைந்தபோதுதான் கவிதை பிறந்தது. ஓசையை ஓர் ஒழுங்குக்கு உட்படுத்தி அதில் சொற்களை இட்டுநிரப்பி மனிதன் கவிதையைக் கற்றுக்கொண்டான்.

ஆதியில் கவிதை என்பது பாட்டுதான். எழுத்துக்களைப் படைத்துக்கொள்வதற்கு முன்பே மனிதன் பாட்டைப் படைத்துவிட்டான். பாட்டில் இசையே முதன்மை பெற்றது, சொல்லும் பொருளும் அடுத்த இடத்தில்தான். இப்படித் தொடங்கிய பாட்டு, வாய்மொழிக் கவிதையாய் வளர்ந்து ஏட்டில் குடியேறி கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை தனக்கும் இசைக்குமான தொடர்பை விட்டுவிடாமல் பற்றித் தொடர்ந்தது. பின்னர், கவிதை அச்சு ஊடகத்திற்கு இடம் பெயர்ந்தது.

இருபதாம் நூற்றாண்டு, கவிதையை இசையிலிருந்து பிரித்தது. பறக்கக் கற்றுக்கொண்ட குஞ்சுப் பறவைக்கு இனி தாய்ப்பறவையின் துணை தேவையில்லை. இனியும் தாய்ப்பறவை ஊட்டிக் கொண்டிருந்தால் குஞ்சுப்பறவை செயலற்றுப் போகும். கவிதைகளுக்கும் இதே விதிதான். கவிதைகள் வாய்க்கும் செவிக்குமாக ஊடாடும்வரைதான் இசை அல்லது ஓசை ஒழுங்கு தேவைப்பட்டது.

கவிதைகள் அச்சு வாகனமேறி கண்ணுக்கும் கருத்துக்குமாக ஊடாடத் தொடங்கிய பின்னர், கவிதை தன் எல்லாக் கட்டுகளையும் உடைத்துக் கொண்டு, விட்டு விடுதலையாகி நிற்க வேண்டும். இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதைகள் அதைத்தான் செய்தன/செய்கின்றன. நவீன கவிதைகள், புதுக்கவிதைகள், ஹைக்கூ என்ற இத்தகு புதிய வடிவங்களின் வரவுகளுக்குக் காரணங்கள் இவைதாம்.

பாட்டரங்கங்கள் கவிதையைச் செவிக்குப் படைப்பன. அங்கே கவிதை பாட்டாயிருக்க வேண்டும். அதைவிடுத்துத் தமிழின் நவீன கவிதைகளைப் பாட்டரங்கங்களில் வாசிப்பது பாட்டி மஞ்சள் தேய்த்துக் குளித்த கதைதான்.

கவிதைகள் வாய்மொழியில், ஏட்டில், அச்சில் குடியிருந்த தலைமுறைகளைக் கடந்து நான்காவது தலைமுறையாக கணிப்பொறி வழி இணையத்தில் குடியேறத் தொடங்கிவிட்டன. இவை ஊடக மாற்றங்கள். ஒவ்வொரு ஊடக மாற்றத்திற்கும் ஏற்ப, கவிதைகள் தம்மைத் தாமே புதுப்பித்துக் கொள்கின்றன.

1 கருத்து:

முனைவர் இரத்தின.புகழேந்தி சொன்னது…

நன்று நண்பரே. நடவுப்பாடல்தான் சிலப்பதிகார மங்கலவாழ்த்துப்பாடலுக்கு அடிப்படை 'சந்திரரே சூரியரே சாமி பகவானே' என்றபாடல்தான் 'திங்களைப்போற்றுதும்'பாடலுக்கு அடிப்படை எல்லாவற்றுக்கும் அடிப்படை உண்டு என்பதை இளைய தலைமுறை உணர வேண்டும்.

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...