செவ்வாய், 17 நவம்பர், 2009

பாலியல் அறமும் பரத்தையரும் பகுதி-3, திருக்குறளில் பரத்தையரும் விலைமகளிரும்

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

திருக்குறளில் பரத்தையரும் விலைமகளிரும்:

திருக்குறள் காமத்துப்பாலில் இடம்பெறும் ஊடல் தொடர்பான அதிகாரங்களில் தலைவிக்கு ஊடல் தோன்ற பரத்தையே காரணமாகிறாள் என்பதைத் திருவள்ளுவர் மிக நுட்பமாகப் பதிவு செய்கிறார்.

நண்ணேன் பரத்த நின் மார்பு (குறள்: 1311)

ஒருத்தியைக் காட்டிய சூடினீர் (குறள்: 1313)

யாரினும் யாரினும் என்று (குறள்: 1314)

யார் உள்ளித் தும்மினீர் என்று (குறள்: 1317)

நுமர் உள்ளல் எம்மை மறைத்திரோ (குறள்: 1318)

பிறர்க்கு நீர் இந்நீரர் ஆகுதிர் (குறள்: 1319)

யார் உள்ளி நோக்கினீர் (குறள்: 1320)


புலவி நுணுக்கம் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள மேலே சான்று காட்டப்பட்டுள்ள அனைத்து குறட்பாக்களிலும் தலைவியின் ஊடலுக்குக் காரணமாகத் தலைவனின் பரத்தமை ஒழுக்கம் பேசப்படுகிறது. இக்குறட்பாக்களில் இடம்பெறும் பரத்தையர் அகப்பாடல்களில் இடம்பெறும் புலனெறி வழக்குப் பரத்தையர்.

திருவள்ளுவர் தம் பொருட்பால் வரைவின் மகளிர் அதிகாரத்தில் கடிந்து சாடும் பரத்தையர்கள் அகப்பொருள் பரத்தையர்கள் அல்லர். அவர்கள் நடைமுறை வாழ்க்கைப் பாத்திரங்களான விலைமகளிர்.

பொருள் விழையும் ஆய்தொடியார் (குறள்: 911)

பண்புஇல் மகளிர் (குறள்: 912)

பொருட்பெண்டிர் (குறள்: 913)

பொதுநலத்தார் (குறள்: 915)

மாய மகளிர் (குறள்: 918)

வரைவுஇலா மாண் இழையார் (குறள்: 919)

இருமனப் பெண்டிர் (குறள்: 920)


பொருட்பெண்டிர், மாய மகளிர், வரைவுஇலா மாண்இழையார், இருமனப் பெண்டிர் முதலான அடை மொழிகளோடும் பிணம், அளறு முதலான வசவுகளோடும் திருவள்ளுவர் குறிப்பிடும் பெண்கள் விலைமகளிரே என்பதில் இருவேறு கருத்திருக்க வாய்ப்பில்லை.

திருக்குறள் காமத்துப்பாலில் ஊடலுக்குக் காரணமாகச் சுட்டும் பரத்தையர், பொருட்பாலில் கடிந்துரைக்கும் பொருட்பெண்டிர் ஆகிய இரண்டு வகையினரையும் பிரித்துணராமல் குழப்பங்களுக்கு ஆட்படுவோர் இரண்டு பிரிவினர்.

1. வரைவின் மகளிர் அதிகாரத்தில் பொருட்பெண்டிரைச் சாடும் குறள் கருத்தை ஒப்புக் கொண்டு, காமத்துப்பாலில் திருவள்ளுவர் பரத்தையர்களைப் பற்றிக் குறிப்பிடவே இல்லை என்று வாதிடுவோர் ஒரு பிரிவினர்.

2. காத்துப்பாலில் இடம்பெறும் பரத்தையர்கள் பற்றிய செய்திகளை ஒப்புக்கொண்டு, பொருட்பால் வரைவின் மகளிர் அதிகாரத்தில் இடம்பெறும் பொருட்பெண்டிர் விலைமகளிர் அல்லர், அவர்கள் ஆண்களால் பொருள் கொடுத்து பெறப்பட்ட பரத்தையர்களே. அவர்கள் பொதுமகளிர் அல்லர். பொருள் கொடுத்த ஆடவனுக்கு மட்டுமே இன்பம் நல்கும் வரைவு - இல் - மகளிர். அதாவது திருமணம் செய்துகொள்ளாத மனைவியர் என்று வாதிடுவோர் சிலர் (சிலம்பு நா.செல்வராசு, வள்ளுவப் பெண்ணியம், பக். 68)

திருக்குறள் காமத்துப்பாலில் ஊடலுக்குக் காரணமாகச் சுட்டும் பரத்தையர், பொருட்பாலில் கடிந்துரைக்கும் பொருட்பெண்டிர் ஆகிய இரண்டு வகையினரையும் பிரித்துணர்ந்து, காமத்துப்பால் பரத்தையர் புலனெறி வழக்கு என்றும் பொருட்பால் பொருட்பெண்டிர் உலகியல் நடைமுறைச் சித்தரிப்பு என்றும் பொருள்கொள்ளுதல் சிக்கலைத் தீர்க்க உதவும்.

பதினெண் கீழ்க்கணக்கில் இடம்பெற்றுள்ள அறநூல்கள் பலவும் திருக்குறளை அடியொட்டியே பொதுமகளிர் குறித்த வசவு மற்றும் சாடல்களைத் தொடர்கின்றன.

ஆமாபோல் நக்கி அவர் கைப்பொருள் கொண்டு
சேமாபோல் குப்புறூஉம் சில்லைக்கண் அன்பினை
ஏமாந்து எமதுஎன்று இருந்தார் பெறுபவே
தாமாம் பலரால் நகை
(நாலடியார்: 38, பொதுமகளிர்: 7)

காட்டுப் பசுபோல் நக்கிச் சுகமளித்துக் கைப்பொருளைக் கவர்ந்து கொள்ளும் கணிகை, எல்லாம் கவர்ந்தபின் காட்டு எருது போலப் பாய்ந்து விலகி பிறரிடம் சென்றுவிடுவாள். அவளது இந்த அற்ப அன்பினை உண்மை என நம்பி ஏமாறுகிறவர்களது வாழ்க்கை பிறரால் நகைக்கக் கூடியதாய் இழிவுறும்

நாலடியாரில் இடம்பெறும் பொதுமகளிர் என்ற அதிகாரம் முழுவதும் விலைமகளிர் குறித்த சாடல்களே. பழமொழி நானூறு, திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஆசாரக்கோவை போன்ற அறநூல்களிலும் இதேநிலைதான்.

கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...