செவ்வாய், 17 நவம்பர், 2009

பாலியல் அறமும் பரத்தையரும் - பகுதி 4 -கற்பு ஒரு கற்பிதம்

முனைவர் நா.இளங்கோ
இணைப்பேராசிரியர்,
புதுச்சேரி-8

கற்பு ஒரு கற்பிதம் :

சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்ற அல்லது அக இலக்கிய மரபுகள் குறிப்பிடுகின்ற காதல், கற்பு, ஒருதாரமணம் இவைகள் எல்லாமே பழைய தாய்வழிச் சமூகம் மாறித் தந்தைவழிச் சமூகம் உருவானபோது உடைமைச் சமூகத்தால் உருவாக்கப்பட்ட கோட்பாடுகளே. தந்தைவழிச் சமூகத்தின் போது உருவான தனியுடைமைச் சமூகத்தில்தான் சொத்துரிமையைப் பாதுகாக்க ஒருதாரமணம் தேவைப்பட்டது.

தந்தைவழிச் சமூகத்தில் தன்னுடைய உடைமையை நேரடியாகத் தன் வாரிசே பெற பெண் ஒருதாரமணத்தைக் கைக்கொள்ள வேண்டியதாயிற்று. (இங்கே ஒருதாரமணம் என்று குறிப்பிடப்படுவது உண்மையில் ஒருகணவமணமே) ஏனெனில் ஒருபெண் ஒருவனோடு மட்டுமே உறவு உடையவளாக இருந்தால் மட்டுமே தந்தைவழிச் சமூகம் நிலைக்கமுடியும். இத்தகைய சூழ்நிலையில்தான் ஒருதாரமணக் கோட்பாட்டைக் கட்டிக்காப்பதற்காகக் (பெண்களுக்கு மட்டும்) காதலும் கற்பும் கோட்பாடுகளாக ஆக்கம் பெற்றன.

எல்லாக் காலங்களிலும் காதலும் கற்பும் பெண்களுக்கு வலியுறுத்தப் பட்டனவே அல்லாமல் ஆண்களுக்கு அவை வலியுறுத்தப்படவில்லை. பெண்களுக்குக் காதலும் கற்பும் ஒருதாரமணமும் வலியுறுத்தப்பட்ட அதே சமூகத்தில்தான் ஆண்களுக்குப் பரத்தையர் ஒழுக்கம் கற்பிக்கப்பட்டது.

தனியுடைமை, ஆணாதிக்கம் இவைகளைக் கட்டிக்காக்கவே காதல், கற்புக் கோட்பாடுகள் காலந்தோறும் மக்களாலும் இலக்கியவாதிகளாலும் மிக உயரியதாகவும் புனிதமானதாகவும் கருதப்பட்டும் கற்பிக்கப்பட்டும் வந்தன. கற்பு ஒரு கற்பிதம். அதன் நோக்கமும் தேவையும் பெண்ணடிமையே. காதல் புனிதமானது என்று பெண்ணை நம்பச்செய்த ஆண்கள் காதலை ஒருபோதும் புனிதமாகக் கருதவில்லை.

குலமகள் - பரத்தை:

ஆடவரே உயிர் என்று போற்றி ஒழுகும் பெண்கள் கற்பிற் சிறந்தவர்களாகப் போற்றப்பட்டனர். அவர்களின் ‘செயிர்தீர் கற்பு கடவுள் கற்பு’ என்பது ஆடவனுக்கு உடலாலும் உள்ளத்தாலும் உண்மையாய் இருத்தல் என்று கற்பிக்கப்பட்டது.

கற்புடைய பெண்களின் மேன்மைக்காக எதிர்நிலையில் பரத்தையர்கள் பற்றிய புலனெறி வழக்கு (இற்பரத்தை, காமக்கிழத்தி, காதற்பரத்தை, சேரிப்பரத்தை எனப் பலநிலைகளில்) உருவாக்கப்பட்டது. கற்பைப் போற்றிக் காக்கும் தலைவியின் பெருமையை மிகுவிக்கவே அல்லது வலிமைப்படுத்தவே பரத்தையர்கள், பரத்தையர் ஒழுக்கம், ஊடல், ஊடல் தணிக்கும் வாயில்கள் படைத்துக் கொள்ளப்பட்டன. மருதத்திணையின் முழுநேர வேலையே பரத்தையர் காரணமான ஊடலும் ஊடல் நிமித்தங்களுமாயின.

பரத்தையர்களே சங்க காலத்தில் இல்லையா? இவை முழுக்க முழுக்கக் கற்பிதங்களா? என்றால், பரத்தையர்களே கற்பனை என்று பொருள் கொள்ளத் தேவையில்லை. பரத்தமை ஒழுக்கம் பற்றிய புலனெறி வழக்குகள், மருத உரிப்பொருள் தொடர்பான செய்திகள் இவைகளே கற்பிதங்கள்.

“நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்”


என்பார் தொல்காப்பியர். அகப்பொருளின் புலனெறி வழக்குகள் புனைவியல் தன்மையோடு எதார்த்தத்திலிருந்து புனைந்து கொள்ளப்பட்டவையே. இவை உள்ளதும், இல்லதும் ஆகிய இரண்டின் கூட்டால் உண்டான புனைவு. பரத்தையர்கள் குறித்த சங்க இலக்கியப் பதிவுகள் அனைத்தும் நாடக வழக்கும் உலகியல் வழக்கும் கலந்த புலனெறி வழக்கே என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

பாலியல் அறமும் விலைமகளும்:

நமது பொதுச்சிந்தனையில், சமூக ஒழுங்கைக் கட்டிக்காக்க, சமுதாயம் கெட்டுப் போய்விடாமல் பாதுகாக்க அறங்கள் தோற்றுவிக்கப்பட்டன என்ற கருத்து பதிந்துள்ளது. உண்மையில் அறங்கள் அதிகாரத்தைக் கட்டுபவை. ஆதிக்க சக்திகளின் நலன்களைப் பாதுகாப்பவை.

“அறங்கள் வெற்று விதிகள் அல்ல. இவை, மேலாதிக்க சமூக ஒழுங்கை அல்லது நடப்பில் நிலவுகின்ற ஆதிக்க -ஆட்பட்ட உறவுகளைச் சாசுவதமாக்குகின்றன. ஒரு சாராரின் நலனே ஒட்டுமொத்தச் சமூக நலன் என்று அறங்கள் நியாயப் படுத்தவல்லவை. இவ்வாறு இவை நியாயப் படுத்துவதன் மூலமாக, நடப்பிலுள்ள சமூக ஒழுங்கும், உறவுகளும் இயல்பானவை, மாறாதவை, மாற்றக் கூடாதவை என்று ஆக்குகின்றன. அறங்கள் இயற்கைச் சட்டம் என்கிற அரணைப் பெறுகின்றன. நடப்பவற்றைக் கேள்விக்கு அப்பாற் பட்டவையாக, இதிலே கேட்பதற்கு என்ன இருக்கிறது என்பதாக அறங்கள் ஆக்குகின்றன.”
என்பார் ராஜ் கௌதமன். (தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும், பக். 8-9)

அறங்கள் ஆதிக்க சக்திகளின் நலன் காப்பவை எனும்போது உடைமைச் சமூகத்தில் ஆதிக்கச் சக்தியாய் விளங்கும் ஆண்களின் நலன் பேணுவதும், ஒடுக்கப்படும் பெண்களுக்கு எதிரான கருத்தியல் வன்முறையாகவும் அவை விளங்குகின்றன. விலைமகளிர் குறித்த அறச்சொல்லாடல்களும் பெண்களுக்கு எதிரான கருத்தியல் வன்முறையே என்பதை அறநூல்கள் திரும்பத் திரும்பப் பதிவு செய்கின்றன.

பெண்களின் பாலியல் வேட்கையைக் கற்பு என்ற சங்கிலியால் பிணைத்துவிட்டு ஆண்கள் பாலியல் சுதந்திரத்தோடு கட்டுப்பாடற்று இயங்கும் சமூகத்தில் பொதுமகள் தவிர்க்க முடியாத பாத்திரமாகிறாள். இப்பொதுமகள் குறித்த வசவுகளாக மதுரைக்காஞ்சியில் கேட்ட அதேகுரல்தான் திருக்குறளிலும் நாலடியாரிலும் பழமொழி நானூற்றிலும் திரிகடுகத்திலும் ஆசாரக் கோவையிலும் மீண்டும் மீண்டும் ஒலிக்கிறது.

கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...