புதன், 31 டிசம்பர், 2008

அறஇலக்கியச் சமுதாயம் - அணிந்துரை

அறஇலக்கியச் சமுதாயம் - சு.உஷா
அணிந்துரை


முனைவர் நா.இளங்கோ
இணைப்பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8.

சங்க காலத்திற்குப் பின்னரச்; சங்கம் மருவிய காலம் என்று பரவலாக அறியப்படும் காலம் சமணசமயச் செல்வாக்கு மிக்கிருந்த காலமாகும். பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பெரிதும் இந்தக் காலப் பகுதியில் பாடப்பட்டனவே. தொல்காப்பியர் இவ்வகை அறநூல்களை எண்வகை வனப்புகளில் ஒன்றான அம்மை என்பதாக வரையறை செய்கின்றார்.

சின்மென் மொழியால் தாய பனுவலோடு
அம்மை தானே அடிநிமிர்பின்றே (தொல்.செய்யுளியல். 235)
இந்நு}ற்பாவிற்கு உரை எழுதும்பொழுது பேராசிரியர் தாய பனுவல் என்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என உணர்க என்று விளக்கமளிப்பார். நச்சினார்க்கினியரின் உரை விளக்கமும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அம்மை என்னும் வனப்பமைந்த இலக்கியங்களே என்பதை உறுதி செய்கின்றது. தொல்காப்பியம் மற்றும் உரையாசிரியர்களின் விளக்கங்கள் இவைகளை ஏற்றுப் பிற்கால இலக்கண நூலார்,
அடிநிமிர் பில்லாச் செய்யுட் தொகுதி
அறம் பொருள் இன்பம் அடுக்கி யவ்வகைத்
திறம்பட வுரைப்பது கீழ்க்கணக் காகும் (பன்னிரு பாட்டியல் 542)
என்று இலக்கணம் வகுத்தனர்.

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவைகளைப் பதினெண் மேல்கணக்கு என்றும் நாலடி நான்மணி நானாற்பது.. .. முதலான பதினெட்டு நூல்களைப் பதினெண் கீழ்க்கணக்கு என்றும் குறிப்பிடும் மரபு இலக்கிய வரலாற்றில் உண்டு.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் குறித்து விரிவான ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். சங்க கால வாழ்க்கையில் போற்றப்பட்ட விழுமியங்கள் பல கீழ்க்கணக்கு நூல்களில் கண்டிக்கப்படுகின்றன. கால வரிசையில் சங்க இலக்கியங்களுக்கு அடுத்ததாக, சங்கம் மருவிய கால இலக்கியங்கள் என்று அடையாளப் படுத்தப்படும் கீழ்க்கணக்கு நூல்கள் இடம்பெற்றிருந்தாலும் பாடுபொருள், வடிவம், உணர்த்துமுறை, உத்தி என்று பலநிலைகளிலும் அவை மாறுபடுகின்றன. இவ்வகை மாற்றங்கள் இயல்பான மாற்றங்களாகத் தெரியவில்லை. பெரிய அளவிலான சமூக மாற்றம் நிகழ்ந்திருக்கின்றது. இத்தகு சமூக மாற்றம் ஒரு பெரிய அரசியல் மற்றும் அதிகார மாற்றத்தின் விளைவாக ஏற்பட்டிருக்க வேண்டும். அரசியல் / இலக்கிய வரலாறுகள் போகிற போக்கில் இருண்ட காலம் என்று வருணித்துவிட்டு நிறைவடைந்துவிடுகின்றன. அவை போதா! முழுமையான ஆய்வுகள் நிகழ்த்தப்பட வேண்டும். இந்த முழுமையான ஆய்வுகளை நோக்கிய பயணத்தில் ஒரு முன்னோடியாக இந்நு}ல் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

II

சிங்கப்பூர் தமிழாசிரியை சு.உஷா எங்கள் புதுவை, தாகூர் கலைக்கல்லூரி மற்றும் புதுவைப் பல்கலைக் கழகங்களில் முதுகலை மற்றும் இளமுனைவர் பாடம் பயின்றவர். கற்றல், ஆய்வு இரண்டிலும் மிகச்சிறந்த ஈடுபாடு கொண்டவர். சிங்கப்பூர் மாணவர்களிடம் மிகச்சிறந்த ஆசிரியை என்ற நற்பெயர் பெற்றுள்ள இந்நூலாசிரியர், படிக்கும் காலங்களில் ஆசிரியப் பெருமக்களால் மிகச் சிறந்த மாணவர் என்ற பாராட்டுதலைப் பெற்றவர். நூலாசிரியர் சு.உஷா அரிதின் முயன்று ஆய்ந்து வெளியிட்டிருக்கும் அறஇலக்கியச் சமுதாயம் என்ற இந்நூல் தமிழாய்வு உலகிற்குத் தக்கதோர் புதிய வரவு. விளக்கவியல் முறையில் நான்மணிக்கடிகை என்ற கீழ்க்கணக்கின் ஓர் அறநூலை விரிவாக அறிமுகம் செய்யும் நோக்கில் அவர் இந்நூலைப் படைத்துள்ளார்.
“நான்மணிக் கடிகை காலச் சமுதாயம் இத்தகையது என்பதையும், சமுதாய மாற்றங்கள் நிகழ்ந்த சூழலையும் வெளிக்கொணர வேண்டும் என்ற விருப்பம் இவ்வாய்வினை மேற்கொள்ளக் காரணமாக அமைந்தது.”
என்று இந்நூலை எழுதியதற்கான நோக்கத்தினைத் தெளிவாகப் பதிவுசெய்கின்றார் நு}லாசிரியர் சு.உஷா

அறஇலக்கியச் சமுதாயம் என்ற இந்நூல் மூன்று பகுதிகளாக அமைக்கப்பட்டுள்ளது. முதல்பகுதி முன்னுரை, இரண்டாம் பகுதி அற இலக்கியம் காட்டும் சமுதாயம், மூன்றாம் பகுதி தமிழ்- சீனம் அற இலக்கிய ஒப்பீடு என்பன அவை.

முதல்பகுதி, முன்னுரையில் நான்மணிக்கடிகை குறித்த விரிவான ஆய்வு அறிமுகம் இடம்பெறுகின்றது. இதில் நூலாசிரியர் விளம்பிநாகனார் அறிமுகம், அவரின் காலம், சமயம் குறித்த செய்திகளும் நான்மணிக்கடிகை நூலின் சிறப்புகளும் நு}லின் பதிப்பு வரலாறும் இடம்பெற்றுள்ளன.

இரண்டாம் பகுதி, அற இலக்கியம் காட்டும் சமுதாயம் என்ற இயலில் நான்மணிக் கடிகையில் இடம்பெற்றுள்ள சமுதாயம் குறித்த செய்திகள் விரிவாகப் பேசப்படுகின்றன. குறிப்பாக குடும்பம், சாதிப் பிரிவுகள், தொழில்கள், உணவுமுறை, வழிபாடு, பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், பொருளாதார நிலை, நட்பு, அறக்கருத்துக்கள், கல்வி, அரசியல் முதலான தலைப்புகளில் நு}லின் நு}ற்று ஆறு பாடல் தரும் செய்திகளும் முறையாக வகைப்படுத்தப்பட்டு விளக்கப்பட்டுள்ளன. இவ்வியலை ஒருமுறை வாசிப்போரும் நான்மணிக் கடிகை நூல் செய்யுட்களை முழுதாக வாசித்த நிறைவை அடைவர்.

மூன்றாம் பகுதி, தமிழ்- சீனம் அற இலக்கிய ஒப்பீடு என்ற இயல் நான்மணிக் கடிகை என்ற தமிழ் அற இலக்கியத்தினைச் சீன அற இலக்கியமான கன்பூசியசின் சிந்தனைகள் என்ற நு}லுடன் ஒப்பிட்டு ஆராயும் போக்கில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வியலில் அறக்கருத்துக்கள், ஓழுக்கம், கீழ்மக்கள், ஆட்சிமுறை, நட்பு முதலான தலைப்புகளில் தமிழ்- சீன அறக்கருத்துக்கள் ஒப்பிடப்படுகின்றன.

தமிழ் ஆய்வாளர்களுக்குச் சங்க இலக்கியங்களின் மீதுள்ள ஈடுபாடும் ஈர்ப்பும் சங்கம் மருவியகால இலக்கியங்கள் மீது இருப்பதில்லை. இப்பொதுப் போக்கிலிருந்து மாறுபட்டு ஆய்வாளர் சு.உஷா அவர்கள் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான நானமணிக்கடிகை குறித்த ஆய்வினை நிகழ்த்தியிருப்பதே சிறப்பிற்குரியதாகும். நூலின் மொழிநடை தனித்துக் குறிப்பிடத் தக்கதொன்றாகும். எளிய இனிய மொழிநடையில் இவ்ஆய்வுநூல் அமைந்திருக்கின்றது. ஆய்வாளர்கள் மட்டுமின்றிப் பொதுமக்களும் பள்ளி மாணவர்களும் கூட மயக்கமின்றி இந்நூலைப் படித்துச் சுவைக்கத்தக்க விதத்தில் இந்நூல் எழுதப்பட்டிருக்கின்றது. நடையின் இந்த எளிமையும் இனிமையும் இந்நூல் பாடநூலாகப் பரிந்துரைக்கத் தகுதியானது என்பதைச் சொல்லாமல் சொல்லுகின்றது.

நூலின் பின்னிணைப்பாக நான்மணிக் கடிகை பொருளடைவு, சொற்பொருள் விளக்கம் இரண்டினையும் நூலாசிரியர் இணைத்துள்ளார். நூலில் மிகுபயன் விளைவிக்கும் பகுதியாக இப்பின்னிணைப்பினைக் குறிப்பிடலாம். நான்மணிக் கடிகையின் நு}ற்று ஆறு பாடல்களிலும் இடம்பெற்றுள்ள நூற்பொருளை அதாவது நூலின் உள்ளடக்கங்களை முறைப்படத் திரட்டி அகரவரிசைப் படுத்தித் தந்துள்ள நூலாசிரியரின் உழைப்பை எத்துணைப் பாராட்டினாலும் தகும். இப்பொருளடைவு நான்மணிக் கடிகையைக் கற்க விரும்புவார்க்கும் ஆய்வாளர்களுக்கும் மிகுந்த பயனளிக்கக்கூடியது. அடுத்து இடம்பெற்றுள்ள சொற்பொருள் விளக்கம் நூலாசிரியரின் அகராதியியல் புலமையை அடையாளம் காட்டக்கூடியதாய் அமைந்து சிறக்கின்றது.

சுவடிநூல் பதிப்புக் காலங்களில் உ.வே.சா போன்ற தகுதி வாய்ந்த பதிப்பாசிரியர்களால் பின்பின்பற்றப்பட்ட இவ்வகை அடைவுகள் தயாரித்து நூலின் பின்னிணைப்பாக இணைக்கும் போக்கு அண்மைக் காலங்களில் பெரிதும் வழக்கொழிந்து விட்டது. ஆய்வாளர் சு.உஷா அவர்கள் இத்தகு பழைய மரபினை மீண்டும் நடைமுறைப்படுத்தி நூலினை ஆக்கியுள்ள முறை பெரிதும் பயனிளிக்கக் கூடியது. நூலாசிரியர் சு.உஷா அவர்கள் முதல்முயற்சி இந்நூல். அவர் மேலும் நல்ல ஆக்கங்களைத் தமிழுலகிற்குத் தந்து தமிழுக்குத் தக்க பணியாற்ற வேண்டும் என்பதே என் விழைவு.

முனைவர் நா.இளங்கோ
புதுவை

கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...