செவ்வாய், 17 நவம்பர், 2009

பாலியல் அறமும் பரத்தையரும் பகுதி-1, சங்க இலக்கியக் காட்சிகள்

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
பட்டமேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8

சங்க இலக்கியக் காட்சிகள்

சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு காட்சி வருணனைகளோடு இக்கட்டுரையைத் தொடங்குகின்றேன்.

காட்சி ஒன்று : மதுரைக் காஞ்சி

மாங்குடி மருதனார் மதுரைக் காஞ்சி பாடலில் மதுரை நகரை வருணிக்கும்போது நகர வீதிகளில் வலம்வரும் விலைமாதர்களை வருணிக்கும் பகுதி.

நுண்பூண் ஆகம் வடுக்கொள முயங்கி
மாயப் பொய்பல கூட்டிக் கவவுக்கரந்து
சேயரும் நணியரும் நலன்நயந்து வந்த
இளம்பல் செல்வர் வளம்தப வாங்கி
நுண்தாது உண்டு வறும்பூத் துறக்கும்
மென்சிறை வண்டினம் மாணப் புணர்ந்தோர்
நெஞ்சு ஏமாப்ப இன்துயில் துறந்து
பழம்தேர் வாழ்க்கைப் பறவை போல
(மதுரைக் காஞ்சி 569 -576)

மதுரை நகர வீதிகளில் கைவீசி நடந்துவரும் விலைமாதர்கள், பிற நாட்டினின்றும் தங்கள் ஊரிலிருந்தும் வந்த இளைய செல்வர்களை வஞ்சனை நிறைந்த பொய்ம்மொழிகளினாலே கூட்டிக்கொண்டு சென்று அணைகின்றனர். அவர்களுடைய செல்வத்தையெல்லாம் வாங்கிக்கொள்ளும் வரையில் அன்புடையார் போல் நடிக்கின்றனர். தேனை உண்டு பின் வண்டு மலர்களைத் துறப்பது போல இவர்களும் தங்களை விரும்பி வந்தவர்களது செல்வத்தை வாங்கியபின் அவர்களைக் கைவிட்டு விடுகிறார்கள். பழமுள்ள மலர்களைத் தேடிச்செல்லும் பறவைபோல வாழ்கிறார்கள்.

காட்சி இரண்டு : பரிபாடல்

நல்லந்துவனார் பாடிய பரிபாடல் 20 ஆம் பாடலில் இடம்பெற்றுள்ள பரத்தைக்கும் தலைவியின் ஆயத்தாருக்குமான உரையாடலின் ஒரு பகுதி.
தலைவன் தலைவியரோடு வையை ஆற்றில் புனலாட வந்த தோழியர், தலைவியிடமிருந்து காணாமல் போனதாகக் கருதப்பட்ட வளையும் ஆரமும் கூட்டத்திலிருந்த பரத்தையொருத்தி அணிந்திருத்தலைக் கண்டனர். அதனால் இப்பரத்தை நம்தலைவியின் மாற்றாள் என எண்ணினர். தலைவன் நாணினான். இதனை அறிந்த பரத்தை மகளிர் கூட்டத்தில் புகுந்து மறைந்தாள். தோழியர் அவளைப் பின்தொடர்ந்தனர். அதுகண்ட பரத்தை என்னை ஏன் பின்தொடர்கின்றீர்? என்று சினந்தாள். அப்போது தோழியர் பரத்தைக்குக் கூறும் மறுமொழி,
.......... ......... அமர் காமம்
மாயப்பொய் கூட்டி மயக்கும் விலைக்கணிகை
பெண்மைப் பொதுமைப் பிணையிலி ஐம்புலத்தைத்
துற்றுவ துற்றும் துணைஇதழ் வாய்த்தொட்டி

முற்றா நறுநறா மொய்புனல் அட்டிக்
காரிகை நீர்ஏர் வயல் காமக்களி நாஞ்சில்
மூரி தவிர முடுக்கு முதுசாடி

மடமதர் உண்கண் கயிறாக வைத்துத்
தடமென் தோள் தொட்டுத் தகைத்து மடவிரலால்
இட்டார்க்கு யாழ்ஆர்த்தும் பாணியில் எம்இழையைத்
தொட்டு ஆர்த்தும் இன்பத்துறைப் பொதுவி
-(20, 48-58)

இந்த வசைமொழிகளின் பொருள்,
''காமத்தைப் பொய்யோடு கலந்து விற்கும் கணிகையே! பொதுமகளே! காமுகப் பன்றிகள் நுகரும் தொட்டியே! வனப்பாகிய வயலில் கள்ளாகிய நீரைவிட்டுக் காமமாகிய கலப்பையாலே எம்முடைய எருது உழுகின்ற பழைய சாலே! பொருள் வழங்குவோரைக் கண்ணாகிய கயிற்றாலே தோளாகிய தறியில் கட்டி காமவின்பம் மிகும்பொருட்டு இசையினையும் எம்பால் களவுகொண்ட அணிகளை அணிந்துகொண்ட அவ்வழகையும் ஊட்டுகின்ற பொதுமகளே!"" என்பதாகும்.

மேலே காட்டப்பட்ட இரண்டு காட்சிகளும் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளவை. முதல் காட்சி புறப்பாடல் காட்சி, இரண்டாம் காட்சி அகப்பாடல் காட்சி. தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் இரண்டுமே இலக்கண வகையாலும் இலக்கிய வகையாலும் பரத்தையர் குறித்த பல்வேறு தகவல்களைப் பதிவு செய்துள்ளன. தொல்காப்பியர் காமக்கிழத்தி, பரத்தை இரண்டு சொற்களைக் கையாண்டுள்ளார்.

சங்க இலக்கியங்களில் பரத்தை என்ற சொல் பயின்று வந்தாலும் காமக்கிழத்தி, காதல் பரத்தை, சேரிப் பரத்தை, நயப்புப் பரத்தை, இல் பரத்தை முதலான பெயர்கள் சங்க இலக்கியப் பாடல்களுக்கு தொகுப்பாளர் அல்லது உரையாசிரியர்களால் இடப்பெற்றுள்ள துறைக் குறிப்புகளிலேயே இடம்பெற்றுள்ளன. மூல நூலில் இத்தகு ஆட்சிகள் இல்லை. திணை, துறை வகுத்தோர் காலத்து வழக்காறுகளே இப்பெயர்களால் சுட்டப்படுகின்றன.

2 கருத்துகள்:

nagai சொன்னது…

அருமை .....சங்க கால பழக்கம் அறிய எனக்கு ஆர்வம் உண்டு கூட்டியொ அல்லது குறைத்தோ இல்லாமல் உள்ளது உள்ளபடி....அப்படியே சாப்பிடுவேன்!

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

நல்ல செய்தி முனைவர் ஐயா அவர்களே. மிகவும் கவர்ந்தது.

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...