சனி, 27 பிப்ரவரி, 2010

மாமிசம் உண்ணும் பிராமணர்கள்

மாமிசம் உண்ணும் பிராமணர்கள் -
வேதநாயகரும் அவரின் சில தனிப்பாடல்களும் பகுதி-4


முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

மாமிசமுண்ணும் பிராமணர்களைப் பழித்தார்:

வேதநாயகர் காலம், ஆங்கிலக் கல்வியும் அதன்வழி ஐரோப்பிய நாகரீகமும் தமிழ் மக்களின் வாழக்கை முறைகளில் பெரிய அளவில் தாக்கத்தை உண்டாக்கிய காலம். ஐரோப்பிய மோகத்தால் நிலை தடுமாறிய பிராமண இளைஞர்கள் பலர் மாமிசம் உண்ணுதல், மது குடித்தல் போன்ற பழக்கங்களுக்கு ஆளாகி அதுவே நாகரீகம் என மயங்கிய காலம். இந்தச் சூழலில் நீதிநூல் பாடிய வேதநாயகரால் சும்மாயிருக்க முடியுமா? நகைச்சுவையாகப் பாடுவதுபோல் தம் கடும் கண்டனத்தைப் பதிவு செய்கிறார்.

ஆரணவாயினர் மாடாடுகளை
அடித்து அவித்துப்
பாராணஞ் செய்ய பழகிக் கொண்டார்
மதுபானத்திலும்
பூரணராயினர் இன்னவர்க்
கிந்தத் துர்புத்தித் தந்த
காரணங் கண்டயற்கோர்
சிரங்கொய்தனன் கண்ணுதலே.


வேதம் ஓதுகிற வாயால் மாமிசம் உண்பதும் மது குடிப்பதுமாக வாழும் பிராமணர்களுக்கு இந்த துர்புத்தி தந்த பிரம்மனை தண்டிக்கவே சிவன் அவர் தலையில் ஒன்றைக் கொய்து விட்டானாம். இது பரவாயில்லை, இந்தப் பாடலைப் பாருங்கள்.

ஊன் தூக்கி யுண்ணும்
பிராமணர்க்கஞ்சி உமாபதியும்
மான் தூக்கினான் கையில்
வேலவன் தூக்கினான் வாரணத்தை
மீன்தூக்கினான் கொடியாக
உருவிலி மேடமது
தான்தூக்கவே அதிலேறிக்
கொண்டான் அந்த சண்முகனே.


சிவன் ஏன் மானைக் கையில் வைத்துக்கொண்டான் தெரியுமா? முருகன் கோழியை ஏன் தன் கொடியில் பத்திரப் படுத்திக்கொண்டான் தெரியுமா? மன்மதன் ஏன் மீனைத் தன் கொடியில் வைத்துக்கொண்டான் தெரியுமா? முருகன் ஏன் ஆட்டைத் தன் வாகனமாக்கிக் கொண்டான் தெரியுமா? எல்லாம் மாமிசம் உண்ணும் பிராமணர்களிடமிருந்து இவற்றைக் காப்பாற்றத்தான். பாடலில் நகைச்சுவையும் நையாண்டியும் இருந்தாலும் வேதநாயகரின் கண்டிப்பும் அறிவுரையுமே மேலோங்கி இருப்பதை உணர்ந்தால் அவரின் சமூகப்பற்று நமக்கு விளங்கும்.

1 கருத்து:

ஆரூரன் விசுவநாதன் சொன்னது…

அழுத்தமான பதிவு ஐயா....பகிர்வுக்கு நன்றி.

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...