வெள்ளி, 12 பிப்ரவரி, 2010

தமிழரின் பண்பாட்டு மதிப்பீடுகள் பகுதி-௧ - மானம்:

தமிழரின் பண்பாட்டு மதிப்பீடுகள் - மானம்

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

மானம்:

மானம் என்ற சொல் இன்றைய வழக்கில் பேசப்படும் பொருளுக்கும் திருக்குறள் சங்க இலக்கியக் காலங்களில் வழங்கப்பட்ட பொருளுக்கும் வேறுபாடு உண்டு. இன்றைக்கு மானம் என்பது வெட்கம், நாணம் என்ற பொருளில் வழங்கப்படுகிறது.மானக்குறைவு ஏற்படுவதை அவமானம் என்ற சொல்லாலும் மானஉணர்ச்சி உடையவனை மானஸ்தன், மானி என்றும் குறிப்பிடுகின்றார்கள். ரோஷக்காரன், கோபப்படும் இயல்புடையன் என்ற பொருளிலும் இச்சொல் பயன்படுத்தப் படுகின்றது. மேலும் தன்மானம் என்ற சொல்வழக்கும் மானம் என்ற பொருளில் வழங்கப்படுகிறது.

திருவள்ளுவர் மானம் என்ற பண்பை நற்குடிப் பிறப்பின் பண்பாகக் கருதுகின்றார் என்று அதிகார வரிசைமுறையை வைத்துப் பரிமேலழகரும் மணக்குடவரும் குறிப்பிடுகின்றனர். மானம் என்ற பண்பாவது எஞ்ஞான்றும் தம்நிலையில் தாழாமையும் தெய்வத்தால் தாழ்வு வந்துழி உயிர் வாழாமையும் ஆம் என்பது பரிமேலழகர் தரும் விளக்கம்.

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர் -குறள். 954


என்று குடிமை என்ற அதிகாரத்தில் சொன்ன பண்பின் விரிவாகவே மானம் என்ற அதிகாரத்தைப் படைக்கிறார் திருவள்ளுவர். மானம் அதிகாரத்தில் வரும் 1, 2, 5 ஆம் திருக்குறள்கள் மேலே குறிப்பிட்ட திருக்குறளை(954) ஒத்ததாகவே படைக்கப்பட்டுள்ளன. மானஉணர்ச்சிக்குக் கேடு வருமேயானால் உயிரை விடுவதே மேலானது என்று அதிகாரத்தில் வரும் பிற குறட்பாக்கள் தெரிவிக்கின்றன.

தலையின் இழிந்த மயிர்அனையர் மாந்தர்
நிலையின் இழிந்த கடை -குறள். 964


மருந்தோமற் றூன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து -குறள். 968


மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின் -குறள். 969


மேலும் மானம் உடையவர் தம்மை மதியாதார் பின்சென்று வாழ்வதை விட உயிரை விடுவதே மேலானது என்றும் கூறுகின்றார்.

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று -குறள். 967


மானம் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறும் கருத்துக்களைத் தொகுத்துப் பார்த்தால், மானம் என்பது தமக்குப் பிறர் செய்யும் மானக்கேட்டை எண்ணி அவர்மேல் கோபப்படுவதோ அவரைத் தூற்றுவதோ மானஉணர்ச்சி என்று எங்கும் எப்பொழுதும் குறிப்பிடப் படவில்லை. தன் தவறு பற்றித் தன் நெஞ்சமே வருத்த அதனால் உண்டாகும் உணர்ச்சியே சிறந்த மானமாகும்.

மானம் உடையவர் தன்னலம் குறைந்தவராக விளங்க வேண்டுமே அல்லாமல் தன்னலம் கருதிப் பிறர்மேல் சினமும் பகையும் கொள்ளல் கூடாது. ஆதலால் அந்தத் தன்னல உணர்ச்சியை மானம் என்று கூறுவது பொருந்தாது.

இன்னும் ஆராய்ந்தால் மானம் என்பது தன்குடி தன்நாடு முதலியவற்றின் பெருமையையும் உலக வாழ்க்கைக்கு அடிப்படையான உயர்ந்த கொள்கைகளின் பெருமையையும் காக்கப் பயன்படுவதே அல்லாமல் தன்னல அடிப்படை கொண்ட தன்பழி, தன்புகழ், தன்ஆக்கம், தன்கேடு என்பனவற்றைப் பொருளாகக் கொள்வது அன்று.

மானம் உடையவர்கள் உயிர் வாழ்க்கையின் அடிப்படை கெடுவதாக இருந்தாலும், உயிர் நீங்குவதாக இருந்தாலும், உயர்ந்த நெறியிலிருந்து பிறழ மாட்டார்கள். உயர்ந்த கொள்கைகளை இழக்கும் நிலை வந்தால் அந்தக் கொள்கைகளை வாழவைத்துத் தம் உயிரை விட்டுவிடுவார்கள். இத்தகைய உணர்ச்சிக்கே மானம் என்பது பெயர்.

கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...