திங்கள், 29 ஆகஸ்ட், 2011

பழந்தமிழர் தாய்த்தெய்வ வழிபாடு - கொற்றவை -பகுதி-2

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

பழந்தமிழர் கொற்றவை வழிபாடு:

பழந்தமிழர் தாய்த்தய்வ வழிபாட்டில் மிக இன்றியமையாத இடம், கொற்றவை வழிபாட்டிற்கு உண்டு. பழந்தமிழர் வழிபட்ட பல்வேறு பெண்தெய்வங்கள் பற்றிய குறிப்புகள் சங்க அகப்புற இலக்கியங்களில் ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்றன. அத்தகு குறிப்புகளைத் திரட்டி ஒருங்கு வைத்து ஆய்கையில் சங்க இலக்கியங்களில் இடம்பெறும் பெண்தெய்வங்கள் கன்னித் தெய்வங்கள், தாய்த் தெய்வங்கள் என இருவேறு நிலைகளில் குறிப்பிடப்பட்டாலும் அவை தாய்த் தெய்வங்களே. பி.எல்.சாமி அவர்களின் கூற்று இக்கருத்துக்கு துணை நிற்பதாகும். “தாய்த் தெய்வத்தைத் தாயாகவும் கன்னியாகவும் உருவகப்படுத்திக் கூறுவது மிகப்பழங்காலத்திலிருந்தே மரபாக உள்ளது. அவளை எல்லோரையும் பெற்ற தாயாகக் கருதுவதும் அழியாக் கன்னியாகக் கருதுவதும் சுமேரியா, எகிப்து, அசீரியா, இந்தியா ஆகிய நாடுகளின் பழைய நாகரிகங்களில் காணப்படுகின்றது.” (பி.எல்.சாமி, தமிழ் இலக்கியத்தில் தாய்த்தெய்வ வழிபாடு, ப.34) ஆக சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் கடல்கெழு செல்வியும் (அகம். 370) கானமர் செல்வியும் (அகம். 345) தாய்த் தெய்வங்களே.

சங்க இலக்கியங்களில் இடம்பெறும் தாய்த் தெய்வங்கள் பற்றிய குறிப்புகள், அத்தெய்வம் காட்டை இருப்பிடமாகக் கொண்டவள் என்ற பொருளிலேயே கையாளப் பட்டுள்ளன. பதிற்றுப்பத்தில் இடம்பெறும் அயிரை என்ற தெய்வம் மலையை இருப்பிடமாகக் கொண்டது. கடல்கெழு செல்வியைத் தவிர பிற இடங்களிலெல்லாம் காடு, மலை, மலைச்சாரல், மலைச்சுனை சார்ந்தே தாய்த் தெய்வங்கள் பழந்தமிழ் இலக்கியங்களில் பதிவாகியுள்ளன.

அயிரையும் கொற்றவையும்:

சங்க இலக்கியங்களில் சேரர் இலக்கியம் என்ற பெருமைபெற்ற பதிற்றுப்பத்தில் மூன்று பாடல்கள் அயிரை என்ற தெய்வம் பற்றிப் பேசுகின்றன (பதிற்றுப்பத்து: 79, 88, 90) இரண்டு பாடல்கள் அயிரை மலையைக் குறிப்பிடுகின்றன. (பதிற்றுப்பத்து: 21, 70) சேரர்களின் அயிரை மலையில் உறையும் தெய்வம் அயிரை என்றழைக்கப்பட்டது.

நிறம்படு குருதி புறம்படின் அல்லது,
மடைஎதிர் கொள்ளா அஞ்சுவரு மரபின்
கடவுள் அயிரையின் நிலைஇ,
கேடு இலவாக, பெரும! நின் புகழே!
-(பதிற்றுப்பத்து. 79)

.. .. குருதி
விதிர்த்த குவவுச் சோற்றுக் குன்றோடு
உருகெழு மரபின் அயிரை பரைஇ,
-(பதிற்றுப்பத்து. 88)

உருகெழு மரபின் அயிரை பரவியும், -(பதிற்றுப்பத்து. 90)

பதிற்றுப்பத்தின் இம்மூன்று பாடல்களிலும் இடம்பெறும் அயிரை வழிபாட்டைக் கொற்றவை வழிபாடு என்றே பழைய உரைக்குறிப்பை ஒட்டி உரையாசிரியர் ஒளவை துரைசாமிப் பிள்ளை எழுதுகின்றார்.

தும்பை சூடிப் பொருதலில் அமைந்த மெய்யிடத்தே யுண்டாகிய அசைவு பற்றிப் பிறந்த ஓய்ச்சலுடன்; மார்பிற்பட்ட புண்ணிடத்தொழுகும் குருதியாற் புறத்தே தெளிக்கப்பட்டாலன்றிக் கொடுக்கப்படும் படைச்சலை (பலியை) யேற்றுக் கொள்ளாத அச்சம் பொருந்திய முறைமை யினையுடைய கொற்றவை வீற்றிருக்கின்ற அயிரை மலைபோல நின் புகழ்களும் நிலைபெற்றுக் கெடாது விளங்குவனவாக (ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை, பதிற்றுப்பத்து உரை)

பழைய உரைக் குறிப்பைக் கொண்டு அயிரையைக் கொற்றவை என்று ஒளவை அவர்கள் எழுதும் உரையின் பொருத்தம் ஆய்வுக்குரியது. அயிரையைப் பெண் தெய்வமாக/ தாய்த்தெய்வமாகக் கொள்வது ஓரளவு பொருந்தக்கூடியதே. ஆனால் கொற்றவை என்று வலிந்து பொருள்கொள்வதால் தாய்வழிச் சமூகத்தின் வழிபடு தெய்வமான கொற்றவை, நிலவுடைமைச் சமூகமாகவும் பேரரசுச் சமூகமாகவும் மாறிவிட்ட சேர மன்னர்கள் காலத்திலும் அதேநிலையில் வழிபடப்பட்டது என்று பொருள் கொள்ளப்படும். கொற்றவையோடு தொடர்பு படுத்தக் கூடிய எந்தவிதக் குறிப்புமற்று கடவுள் அயிரை என்றும் உருகெழு மரபின் அயிரை என்றும் சொல்லப்பட்டதன் பின்னணி கவனிக்கத்தக்கது. ஆகவே, அயிரையைத் தனித் தெய்வமாகக் கொள்ளாமல் அயிரை என்ற நெடுவரையே சேரர்களின் வழிபடு தெய்வமாய் தொழப்பட்டிருக்கலாமோ என எண்ணத் தோன்றுகிறது.

கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...