திங்கள், 29 ஆகஸ்ட், 2011

பழந்தமிழர் தாய்த்தெய்வ வழிபாடு -கொற்றவை - பகுதி-5



முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

சங்க இலக்கியங்களில் கொற்றவை –பல தளங்களில்:

சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள கொற்றவை குறித்த பதிவுகளை முன்பே கண்டோம். திருமுருகாற்றுப்படையில் முருகன் யாருடைய மகன் என்பதனைக் குறிப்பிடும் போது நக்கீரர் குறிப்பிடும் மூன்று தொடர்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தன. அவர் கையாளும் பழையோள், கொற்றவை, மலைமகள் என்ற மூன்று பெயர்களும் மூன்று வௌ;வேறு பழந்தமிழ்ச் சமூக அடையாளங்களைக் கொண்டதாகும்.

மலைமகள் மகனே! மாற்றோர் கூற்றே!
வெற்றி வெல்போர்க் கொற்றவைச் சிறுவ!
இழையணி சிறப்பின் பழையோள் குழவி!
-(திரு.முரு. 257-259)

புதைபொருள் ஆய்வின்போது தோண்டப்படும் குழியில் அடுக்குகள் பல காணப்படும். ஒவ்வொரு அடுக்கும் ஒவ்வொரு காலப்பகுதியின் அடையாளமாகும்.. முதல் அடுக்கு அண்மைக் காலத்ததாகவும் அடுத்தடுத்த அடுக்குகள் காலப்பழமை உடையனவாகவும் இருக்கும். கடைசி அடுக்கு மிகப்பழங் காலத்தாக இருக்கும். இது புதைபொருளாய்வுக் குழியின் நிலை. திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் குறிப்பிடும் மேலே குறிப்பிட்டப் பட்டுள்ள மூன்று தொடர்களும் ஒரு புதைபொருளாய்வுக் குழியின் அமைப்பில் மேலிருந்து கீழாகக் காலப் பழமையை நோக்கிச் செல்கின்றது.
இவ்வரிசையில் கடைசியாக இடம்பெறும் பழையோள் பழந்தமிழர் தொல்குடிச் சமூகத் தாய்த்தெய்வமாகும். அடுத்து இடம்பெற்றுள்ள கொற்றவை வேட்டை மற்றும் மேய்ச்சல் சமூகத் தாய்த்தெய்வமாகும். அடுத்து இடம்பெற்றுள்ள மலைமகள் நிலவுடைமைச் சமூக வைதீகக் கலப்புத் தாய்த் தெய்வமாகும். ஆக, சங்க இலக்கியத்திலேயே கொற்றவை வழிபாட்டின் வைதீகக் கலப்பும் முருகனின் தாய் என்று ஆண்தெய்வத்தோடு தொடர்புபடுத்தித் தாய்த் தெய்வத்தைப் பின்னுக்குத் தள்ளிய தந்தைத் தலைமைச் சமூக நிலையையும் காணமுடிகிறது. ஆயினும் கொற்றவைச் சிறுவ! என்று தாயை முன்னிறுத்தி மகன் அடையாளப்படுத்தப் படுவதால் தாய்வழிச் சமூகத்தின் மிச்ச சொச்சங்களும் இப்பகுதியில் இடம்பெற்றுள்ளன.

திருமுருகாற்றுப் படைக்கு முந்தைய பெரும்பாணாற்றுப்படையிலேயே சூரனைக் கொன்ற முருகனைப் பெற்ற வயிற்றினையும், பேய்களாடும் துணங்கைக் கூத்தையும் அழகையும் உடைய பெண்தெய்வம் என்னும் பொருள்படும் “கடுஞ்சூர் கொன்ற பைம்பூட் சேஎய் பயந்தமா மோட்டுத் துணங்கைஅம் செல்வி” என்னும் குறிப்பு இடம் பெற்றுள்ளது. இக்குறிப்பில் இடம்பெறும் சேய் பயந்த செல்வி கொற்றவையே.
இப்படிச் சங்க இலக்கியங்களில் முருகனோடு தொடர்புபடுத்தி அவன்தாய் எனக் கொற்றவை அடையாளம் காட்டப்படும் நிலையேயன்றி சிவனோடு கொற்றவையைத் தொடர்புபடுத்தும் அடையாளங்களும் இடம்பெற்றுள்ளன. பரிபாடலில் இடம்பெறும் அப்பகுதி பின்வருமாறு,

நெற்றி விழியா நிறைத்திலக மிட்டாளே
கொற்றவைக் கோலங் கொண்டோர் பெண்
(பரிபாடல், 11 : 99-100)

இப்பாடலடிகளில் கொற்றவைக் கோலம் கொண்ட பெண் ஒருத்தி நெற்றிக்கண்ணாகத் திலகமிட்டுக்கொண்ட குறிப்பு இடம்பெற்றுள்ளது. சிவனின் நெற்றிக்கண் இங்குக் கொற்றவைக்கு உரியதாய்க் காட்டப்பட்டுள்ளது.

1. சங்க இலக்கியம் குறிப்பிடும் வெற்றி வெல்போர்க் கொற்றவையைத்தான் வேட்டுவரியின் எயினர்கள் வணங்கிய கொற்றவை வழிபாடு குறிப்பிடுகின்றது.
2. சங்க இலக்கியம் குறிப்பிடும் பழையோள் என்ற தொல் தாய்த்தெய்வத்தைத் தான் வேட்டுவவரி அணங்கு, ஐயை முதலான பெயர்களில் குறிப்பிடுகின்றது.
3. சங்க இலக்கியம் குறிப்பிடும் மலைமகளைத்தான் வேட்டுவரியின் கொற்றவைக் கோலத்தில் நாம் காண்கிறோம். பழந்தமிழகத்தில் நிகழ்ந்த ஆரிய வைதீகக் கலப்பின் காரணமாக வடவர்களின் பெருந்தெய்வக் கோட்பாட்டுக்குள் கொற்றவையை இணைத்துத் துர்க்கையாகவும் சிவனின் மனைவியாகவும் திருமாலின் தங்கையாகவும், உமையாகவும் மாற்றிய சமயப் பண்பாட்டுக் கலப்பின் அடையாளமே இம்மாற்றம்.
ஆக, சிலப்பதிகாரம் குறிப்பிடும் கொற்றவை வழிபாடு குறித்த அனைத்துத் தகவல்களும் சங்க இலக்கியங்களிலேயே அடையாளம் காட்டப்பட்டுள்ளன.

நிறைவாக:
சங்க இலக்கியங்களில் பதிவாகியுள்ள சூர், அணங்கு முதலான வருத்தம் மற்றும் அச்சத்தைத் தரும் இயற்கை இகந்த ஆற்றல்களைக் குறித்த நம்பிக்கைகளே பல்வகை வழிபாட்டுச் சடங்குகளாகப் பரிணாமம் பெற்றன. பழந்தமிழ் மக்களின் தாய்த்தெய்வ வழிபாட்டின் தொடக்கத்தை இத்தகு சூர், அணங்கு முதலான இயற்கை இகந்த ஆற்றல்களிலிருந்தே நாம் இனங்காண முடியும்.

காடுகிழாள், காடுகிழவோள், கானமர் செல்வி எனப் பழந்தமிழர்களின் தாய்த்தெய்வம் அழைக்கப்பட்டாள். இனக்குழு மக்களின் வேட்டையில் வெற்றி தருபவளாக இவள் இருந்தாள். காடுகிழாள் உணவு சேகரிக்கும் காலத்தில் பயிர்த்தொழிற் தெய்வம். வேட்டையாடும் காலத்தில் வெற்றி தரும் தெய்வம். கொற்றவையின் தொடக்கநிலை இது. இவளே குறிஞ்சிநிலத் தாய்த் தெய்வம்.

இத்தாய்த் தெய்வமே பின்னர்க் கொற்றவை எனும் தெய்வமாக வளர்ச்சி பெறுகிறது. முல்லை நிலத்தில் மேய்ச்சல் வாழ்க்கையும் வன்புலப் பயிர்த்தொழிலும் ஆரம்பமானபோது மாடுகள் செல்வமாயின. மாடுகளைக் கவர்வது முல்லை நிலப் போராகியது. வெட்சிக்குப் புறனாகக் கொற்றவை நிலையைத் தொல்காப்பியர் கூறுகிறார். முல்லை நிலக்காலத்தின் நிலை இது.

முல்லையும் குறிஞ்சியும் திரிந்து பாலையான போது பாலைநிலத்திற்குரிய தாய்த்தெய்வமானாள் கொற்றவை. வேடர்களின், எயினர்களின், ஆறலைக்கள்வர்களின் வழிபடு தெய்வமான கொற்றவையே பிற்கால இக்கியங்களில் பெரிதும் இடம்பெற்றாள்.

மருத, நெய்தல்நில நிலவுடைமைச் சமூகத்தில் பேரரசுகளின் காலங்களில் ஆரிய வைதீக மரபுகள் தமிழகத்துக்குள் நுழைகின்றன. முருகன் கொற்றவையின் சிறுவனானான். (திருமுருகாற்றுப் படை) கொற்றவை சிவனின் மனைவியானாள் (பரிபாடல்). தொடர்ந்து காளி துர்க்கை போன்ற தெய்வங்கள் தமிழகத்துக்கு அறிமுகமாகின்றன. தமிழரின் போருக்குரிய தெய்வமான கொற்றவையும் ஆரியரின் போருக்குரிய தெய்வமான காளியும் ஒன்றாக இணைக்கப்படுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...