வெள்ளி, 28 ஜனவரி, 2011

தென்மொழி இதழல்ல இயக்கம் - பெருஞ்சித்திரனாரின் தென்மொழி இயக்கம் -பகுதி-2

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

பாவலரேறுவும் தென்மொழியும்:

தென்மொழி 1963 ஆம் ஆண்டில் மீண்டும் முழுவேகத்தோடு வெளிவரத் தொடங்கிய காலம்தொட்டே பாவலரேறு அவர்கள் தென்மொழியையும் தென்மொழி அன்பர்களையும், மொழியையும் நாட்டையும் ஆளாமல் துஞ்சுவதில்லை என்ற இதழின் நோக்கத்திற்கு ஆற்றுப்படுத்தும் முயல்வில் இதழினை இயக்கமாக்கும் பணியில் முனைப்பு காட்டி வந்தார்கள். அறிவுக் கொளுத்தல்களும் உணர்வூட்டல்களும் மட்டும் போதா, அவை செயற்பாடு எய்தவேண்டுமெனில் ஓர் இயக்கம் இன்றியமையாதது என்னும் நிலையில் இதழின் முதலாண்டிலேயே தென்மொழி இயக்கம் குறித்த ஓர் அறிவிப்பினை இதழில் வெளியிட்டார்கள்.

“மொழி, இலக்கிய, இன, வரலாற்றுப் பாதுகாப்பிற்காக மட்டுமின்றி, மக்கள் வாழ்வியற் கூறுபாடுகளை ஆங்காங்கு அறிந்து துணைநிற்கவும், அவர்தாம் அல்வழிச் செல்லுங்கால் நல்வழிப்படுத்தவும், செவ்வழிப் போவார்க்கு அவ்வழி உதவவும் குல, சமய, அரசுச் சார்பின்றி ஒரு தனித்தமிழ்க் கழகம் வேண்டுவதாயிற்று. இதன் கொள்கைகளை ஒருவாறு வகுத்துரைப்போமாயின், தமிழ்க் குலமும், தமிழர் சமயமும், தமிழ் அரசும் நிறுவுகின்ற முயல்வே ஆம் எனக்கொள்க. இத்தகைய உயர்தனிச் செம்பொருட் கழகமே, நாம் நிறுவப் புகும் தென்மொழிக் கழகம்.”

தென்மொழிக் கழகத்தின் நோக்கங்களாக ஐயா அவர்கள் வரையறுத்துள்ள தமிழ்க் குலமும், தமிழர் சமயமும், தமிழ் அரசும் நிறுவுதல் என்ற மூன்று முதன்மைத் திட்டங்களும்தான் பாவலரேறு தமிழுலகிற்கு வகுத்தளித்த சமூக அரசியல் கோட்பாடு என்று வரையறுப்பது சாலப் பொருந்தும். பிற தமிழ் இயக்கங்களிலிருந்தும், திராவிட இயக்கங்களிலிருந்தும் ஐயாவின் தென்மொழி இயக்கம் வேறுபடும் மையப்புள்ளி இதுவே. இம்மையப் புள்ளியிலிருந்தே இருபதாம் நூற்றாண்டுத் தமிழகத்தின் சமூக, அரசியல் இயக்கங்களை ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் பார்க்க இயலும்.

1916, தமிழகத்தின் சமூக, அரசியல் வரலாற்றில் முகாமையான பாத்திரம் வகித்த இரண்டு இயக்கங்கள் தோற்றம் பெற்ற ஆண்டு. முதல் இயக்கம், மறைமலையடிகளாரின் தனித்தமிழ் இயக்கம், இரண்டாவது இயக்கம், நீதிக் கட்சி என்றழைக்கப்பட்ட தென்னிந்திய நல உரிமைச்சங்கம். இந்த இரண்டு இயக்கங்களுமே தமிழ்த் தேசியக் கருத்தாக்கங்களுக்குப் பேருதவி புரிந்தவை. தனித்தமிழ் இயக்கம் மொழித்துறையில் வடமொழியின் ஆதிக்கத்தை எதிர்த்தும், தென்னிந்திய நலஉரிமைச் சங்கம். சமூகத்துறையில் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை எதிர்த்தும் தொடங்கப்பட்ட இயக்கங்கள். பாவலரேறுவின் தென்மொழி இயக்கம் மொழித்துறை, சமூகத்துறை ஆகிய இரண்டு நிலைகளிலும் வடவர்களின், பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய இயக்கம்.

மறைமலையடிகளாரின் தனித்தமிழ் இயக்கமோ வேளாளச் சார்பும் சைவ சமயச் சார்பும் உடையது. பாவலரேறு ஐயாவின் தென்மொழி இயக்கமோ தமிழ்க் குலம், தமிழர் சமயம் எனச் சாதி, மத வேறுபாடுகளற்ற பொதுமையை வேண்டிப் போராடிய இயக்கம்.
நீதிக்கட்சி மற்றும் அதன் தொடர்ச்சியில் உருவான பெரியாரின் திராவிட இயக்கங்கள் போன்றவற்றிற்குச் சாதி, மத வேறுபாடுகளற்ற பொதுமை என்ற சிந்தனை யிருந்தது என்றாலும் தமிழ் அரசு நிறுவுதல் என்ற நோக்கம் அவற்றுக்கில்லை. தமிழ்மொழி, தமிழினம், தமிழ்நிலம் என்ற நிலையிலிருந்து மாறுபட்டுத் திராவிடம் என்ற கற்பனைக் கருத்தாக்கத்தால் இந்த வகை இயக்கங்களுக்குத் தமிழ்த் தேசிய ஓர்மை ஏற்படவில்லை. ஐயாவின் தென்மொழி இயக்கமோ தனித்தமிழ்நாடு ஒன்றே அனைத்துச் சிக்கலகளுக்குமான ஒரே தீர்வு என்ற கொள்கையில் உறுதிப்பாட்டுடன் இருந்தது.

“தமிழினம் தலைதூக்கவும் தமிழ்நாடு தன்னிறைவுறவும் தமிழ்மொழி தூய்மையுறவும் வேண்டும். இதற்குத் தடையாக இருப்பது பார்ப்பனியமும் இந்து மதமும். இவற்றுக்கு அடிப்படையாக இருப்பது இந்திய ஒருமைப்பாடு. எனவே நமது தலையாய அரசியல் பணி இதனைச் சிதைப்பதே. தமிழக விடுதலையே நமது மூச்சு என்பது அவரது அரசியல் தருக்கம். தமிழின விடுதலையின் மூன்று பெரும் எதிரிகளாக அவர் இந்து மதத்தையும், பார்ப்பனியத்தையும், இந்திய ஒற்றுமையையும் குறிப்பிடுவது ஆழ்ந்து சிந்திக்கற்பாலது. பிற தனித்தமிழ் இயக்கத்தினரிடமிருந்தும், பிற தனிநாட்டு இயக்கத்தினரிடமிருந்தும் பெருஞ்சித்திரனார் வேறுபட்டு நிற்கும் மிக முகாமையான புள்ளி இது.” (அ.மார்க்சு, பாவலரேறு பெருஞ்சித்தினார் வாழ்க்கைக் குறிப்புகள், ப.173-74)
மேலே இடம்பெற்றுள்ள மேற்கோளில் மார்க்சு அவர்கள் பெருஞ்சித்திரனார் வேறுபட்டு நிற்கும் புள்ளி என்று குறிப்பிடும் பகுதிதான் தென்மொழி இயக்கத்தின் தனித்தன்மை வாய்ந்த பகுதி.

2 கருத்துகள்:

Mugundan | முகுந்தன் சொன்னது…

பாவலரேறு அவர்களின் ஒப்பற்ற
தமிழ்ப்பணி இன்று அடையாளம் இல்லாமல் மறக்கடிக்கப்படுகிறது.

பாவலரேறு தமிழுக்கும், தமிழின உயர்வுக்கும்,விடிவுக்கும்
பாடுபற்ற போராளி.அவரின் சீரிய பணிகளை இன்றைய
இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

பாவலரேறு பற்றி பதிவிட்டது மகிழ்ச்சி.

Ashok சொன்னது…

உங்கள் தமிழ் தொண்டு வளரட்டும்!
நன்றி!நன்றி!!நன்றி!!!

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...