ஞாயிறு, 12 டிசம்பர், 2010

கோவைக் கொண்டாட்டம் - அணிந்துரை

தோழர் புதுச்சேரி லெனின் பாரதியின்
கோவைக் கொண்டாட்டம்

அணிந்துரை

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்,
புதுச்சேரி-8


இன்றைய சமூக அரசியல் சூழலில் ஒரு தகவலைப் பதிவு செய்வதிலும் பதிவு செய்யாமல் விடுவதிலும் கூட அரசியல் உண்டு. ஏனென்றால் பதிவுகளே வரலாற்றிற்கான மூலங்கள். எப்பொழுதும் வரலாறுகள் பதிவுகளைக் கொண்டே புனையப்படுகின்றன.
* * *

கோவைக் கொண்டாட்டம் என்ற இந்நூல் தோழர் புதுச்சேரி லெனின் பாரதியின் அரிய உழைப்பால் உருவான ஒரு தொகுப்பு நூலாகும். கடந்த 2010 ஜூன் 23ஆம் தேதி முதல் ஜூன் 27ஆம் தேதி வரை தமிழகத்தின் கோயம்பத்தூரில் நடைபெற்ற முதலாம் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை ஒட்டிய ஒரு சிறிய பதிவே இந்நூல்.

தமிழகத்தை ஆளும் திராவிட முன்னேற்றக் கழக அரசும் அதன் பிதாமகன் கலைஞர் அவர்களும் இம்மாநாட்டை மிகச் சிறப்பாக நடத்திக் காட்டினர் என்பது ஒரு மறுக்க முடியாத உண்மை. பொதுவாக இத்தகு அரசியல் பின்னணி கொண்ட மாநாடுகள் மிகப் பெரிய அளவில் கொண்டாட்டங்களிலும் கேளிக்கைகளிலும் மட்டுமே கவனம் செலுத்தி வேடிக்கை காட்டுவதுதான் வாடிக்கை. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு சற்றே விதிவிலக்கானது. கோவை மாநாட்டிலும் கொண்டாட்டங்கள் உண்டு என்றாலும் அதில் நேரடியான அரசியல் வண்ணங்கள் தலைகாட்டவில்லை என்பது ஓர் ஆறுதல். மாநாட்டின் இன்றியமையாத பகுதியான கல்வியாளர்கள் பங்கேற்ற ஆய்வரங்கப் பகுதிகள் மிகச் சிறப்பாகத் திட்டமிடப்பட்டுச் செம்மையாக நடைபெற்றன என்பது மாநாட்டின் தனிச்சிறப்பு.

தோழர் லெனின் பாரதி மிகச்சிறந்த சமூக சேவகர், பத்திரிக்கையாளர், எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமைகளைக் கொண்டவர். எல்லாவற்றுக்கும் மேலாகச் சமூக அரசியல் மாற்றத்தை விரும்பும் ஓர் இடதுசாரிச் சிந்தனையாளர். உலகத் தமிழர்களின் கவனத்தை ஈர்த்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தோழர் லெனின் பாரதியின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது என்பதற்கான ஓர் அடையாளமே அவரின் கோவைக் கொண்டாட்டம் என்ற இத்தொகுப்பு நூல்.

இந்நூலைத் தாம் தொகுத்து வெளியிட முயன்றதற்கான நோக்கத்தை அவரே நூலின் முன்னுரையில் பின்வருமாறு தெளிவுபடுத்துகின்றார்,

மாநாட்டு நிகழ்வுகளையும் ஆய்வுக் கட்டுரைகளையும் தமிழக அரசு தொகுப்பாக வெளிக்கொணர வேண்டுமென அறிஞர் பெருமக்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஒரு சிறிய படைப்பாவது பதிவாக வேண்டுமே என்ற ஆதங்கத்தில் உருவாக்கப்பட்டதே இந்தச் சிறிய நூல். முடிந்தவரை பேச்சுகளும் தகவல்களும் தொகுக்கப்பட்டுள்ளன. (முன்னுரை)

பதிவுகளுக்கான ஆதாரங்களாக அவர் எடுத்துக்கொண்டன ஹிந்து, தினமலர், தினகரன், தினத்தந்தி, தீக்கதிர் முதலான செய்தித்தாள்களில் இடம்பெற்ற தகவல்களைத்தாம். நமது தினசரிகளிலிருந்து இத்தகு நல்ல தகவல்களைத் திரட்ட முடிந்திருந்திருக்கிறது என்பதே ஒரு வரலாற்று அதிசயம்தான்.

மாநாடு தொடர்பான அவரது பதிவுகளை மூன்றாக வகைப்படுத்தலாம். அவை,
1. மாநாட்டில் நிகழ்த்தப்பட்ட உரைகள்.
2. மாநாட்டுப் பங்கேற்பாளர்களின் கருத்துப் பதிவுகள்.
(குறிப்பாக வெளிநாட்டுப் பேராளர்கள் மற்றும் அறிஞர்களின் கருத்துக்கள்)
3. மாநாட்டோடு ஒட்டிய தகவல் குறிப்புகள்.

மாநாட்டு உரைகளில் தமிழக முதல்வரின் தொடக்கவிழாப் பேருரையும் சீத்தாராம் யெச்சூரி அவர்களின் வாழ்த்துரையும் சிறப்பாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது. குறிப்பாக, யெச்சூரி அவர்களின் உரையில் இடம்பெற்ற செம்மொழி மாநாட்டுக்குப் பிந்தைய பணிகள் பற்றிய கருத்துரை கவனத்தில் கொள்ளத் தக்கதாகும்.

அவை வருமாறு,
தமிழுக்குப் பழமையான மரபு உண்டு. இன்றைக்கும் மிகவும் பொருந்தக் கூடிய பெருமைமிகு இலக்கியங்களைத் தமிழ் தன்னகத்தே கொண்டுள்ளது. இது தவிர ஏட்டில் எழுதப்படாத வாய்மொழி வரலாற்றுச் செல்வங்களையும் அபரிமிதமாகக் கொண்டுள்ள மொழி தமிழ். இத்தகைய நாட்டுப்புற இலக்கியங்களை உடனடியாக ஆவணப்படுத்தி என்றென்றைக்கும் நிலைத்து நிற்கும் தன்மை கொண்டதாக மாற்றிப் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்.

நாட்டுப்புற இசை, நாடகம், கூத்து, நாட்டுப்புறக் கலைகள் அனைத்தும் மதிப்புமிக்க பொக்கி~ங்களாகக் கிராமப்புற மக்கள் மத்தியில் விளங்குகின்றன. இவற்றைப் பாதுக்காக்க வேண்டிய நடவடிக்கைகளை மாநாடு எடுக்குமென்று நான் நம்புகிறேன்.

தேசிய இயக்கம், சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம், கம்யூனிஸ்ட் இயக்கம், தலித் மற்றும் பெண்ணுரிமை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களால் தமிழ்ச் சமூகம் செழுமையடைந்த ஒன்றாகும். இந்த இயக்கங்களின் இலக்கியப் பங்களிப்பு மூலம் தமிழுக்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் ஏற்பட்டுள்ள செல்வாக்கு மற்றும் வளர்ச்சி குறித்து இம்மாநாடு சரியான அறிவியல் கண்ணோட்டத்துடன் முழுமையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். (சீத்தாராம் யெச்சூரி)

இடதுசாரிகள் ஆதரவு பெற்ற அரசால் தமிழ் செம்மொழித் தகுதி பெற்றது என்ற வரலாற்றை யெச்சூரி அவர்கள் தம்பேச்சின் இடையே குறிப்பிட, அதனையே தலைப்பாக்கி அவரது பேச்சைத் தொகுப்பில் இடம்பெறச் செய்திருப்பது லெனின் பாரதியின் படைப்பாற்றலுக்குத் தக்க சான்றாகும்.

தொகுப்பின் இடையிடையே பொருத்தமான படங்களை இடம்பெறச் செய்திருப்பது நூலுக்கு அழகு சேர்ப்பதோடு வரலாற்று ஆதாரங்களாகவும் அமைந்து சிறக்கின்றன. சான்றாக, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி இந்திய அஞ்சல் துறையின் சார்பில் சிறப்பு அஞ்சல் அட்டை வெளியிடப்பட்டது என்ற தகவலோடு மாநாட்டு இலச்சினை பொறிக்கப்பட்ட அந்த அஞ்சல் அட்டையின் படத்தையும் நூலில் இணைத்திருப்பதனைக் குறிப்பிடலாம்.

செம்மொழி மாநாட்டு நிறைவு விழாவில் தமிழக முதல்வர் அவர்கள் முன்மொழிந்த மாநாட்டுத் தீர்மானங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ள பதிவுகளில் மிக மிக இன்றியமையாதனவாகும். வருங்காலத் தலைமுறைக்கும் தமிழின் வருங் காலத்துக்கும் தேவைப்படுவன அவை. மாநாட்டுத் தீர்மானங்களைத் தொடர்ந்து தீர்மானங்களின் செயல்வடிவம் குறித்த சில தகவல்களும் இடம்பெற்றிருப்பது நம்பிக்கையூட்டக் கூடியதாயுள்ளது.

நூலில் இடம்பெற்றுள்ள சில முக்கிய பதிவுகள்:
1. தொடக்கவிழாவில் அணிவகுத்த இனியவை நாற்பது என்று பெயரிடப்பட்ட அலங்கார ஊர்திகள் பற்றிய விபரங்கள்.
2. செம்மொழி மாநாட்டுக் கண்காட்சி அரங்கு குறித்த தகவல்கள்.
3. சமயம் வளர்த்த தமிழ் என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ள கருத்தரங்கச் செய்தித் திரட்டுகள்.
4. ஆய்வரங்கில் விவாதிக்கப்பட்ட பல இன்றியமையாத தகவல்களின் தொகுப்பு.
5. வெளிநாட்டுத் தமிழறிஞர்களின் பேட்டிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில சுவையான தகவல்கள்

தொகுப்பாசிரியர் தோழர் லெனின் பாரதி தம்முடைய குரலை எங்குமே பதிவு செய்யாமல் விட்டிருப்பதும் மாநாட்டுக்கு முன்னும் பின்னுமான அரசியல் குறித்தும் அதற்கான எதிர்வினைகள் குறித்தும் ஏதும் பேசாமல் மௌனம் சாதித்திருப்பதும் இத்தொகுப்பின் பலமா? பலவீனமா? என்கிற விவாதம் இந்நூலில் தொக்கி நிற்கின்றது. பதிவாக வேண்டும் என்ற நூலூசிரியரின் ஆதங்கமே இந்நூலை உருவாக்கக் காரணம் என்பதனால் தொகுப்பு முயற்சி என்ற வகையில் நூலாசிரியர் மிகக் கடுமையாக உழைத்து நூலை உருவாக்கியுள்ளார். தோழர் லெனின் பாரதியின் தமிழார்வமே இத்தகு கடின உழைப்புக்கு உந்துசக்தியாக இருந்துள்ளது. செம்மொழிக்கு அணிசேர்க்கும் வகையில் கோவைக் கொண்டாட்டத்தை உருவாக்கியுள்ள நூலாசிரியரின் பணி பாராட்டுதலுக்குரியது.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

அய்யா,
மிகச்சரியான நூல் தலைப்பு. ஆமாம் கோவையில் நடைபெற்றது செம்மொழியை ஒட்டிய கொண்டாம் தானே..? கோவை கொண்டாட்டம் என்பது கோவையில் அமைந்துள்ள தனியார் பொழுது போக்கு பூங்காவினுள் ஒன்றாகும். பிளாக் தண்டர், கோவை கொண்டாட்டம் - இவ்விரண்டும் கோவையின் theme park கள் ஆகும். எப்படிதான் பெயரை நூலுக்கு பெயரை தெரிவு செய்தீர்களோ..? விளங்கினாற் போல தான்.

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...