வியாழன், 31 ஜனவரி, 2008

தமிழில் மீண்டும் ஒரு காஞ்சி இலக்கியம்

தமிழில் மீண்டும் ஒரு காஞ்சி இலக்கியம்

முனைவர் நா.இளங்கோ
இணைப்பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8.

கவிதை… தமிழில் கவிதைகளுக்குப் பஞ்சமே இல்லை. கடந்த இருபத்தைந்து நூற்றாண்டுகளுக்கு முந்தைய கவிதை தொடங்கி நேற்றைய.. இன்றைய கவிதைகள் வரை பல்லாயிரம் தமிழ்க் கவிதைகளைப் பார்த்து.. படித்து.. பழகி விட்டோம். இன்னும் பிடிபடாத ஒரு வி~யம். கவிதை செய்யும் கலை. கவிஞர்களுக்கு உள்ளேயிருந்து கவிதை பிறக்கிறது. மற்றவர்களுக்கு? எழுத்தும் சொல்லும் அடம் பிடிக்கின்றன, கவிதையாக மாட்டேன் போ.. என்று!. பிறவிக் கவிஞர்கள் என்று கேள்விப்பட்டிருப்போம். அதென்ன பிறவிக் கவிஞன்? கருவிலே திருவுடையான். அப்படியெல்லாம் யாரும் பிறப்பதில்லை. கவிஞர்கள் கவிஞர்களாகப் பிறப்பதில்லை. அவர்கள் கவிஞர்களாகிறார்கள் அல்லது ஆக்கப்படுகிறார்கள். நல்ல கவிதை எழுதுவது என்பது செய்நேர்த்தி. ஷசித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் என்று ஒளவையார் சொன்னதைப் போல், கவிதை பழகுவதால் வருவது. பழகுவது என்றால் எழுதிப் பழகுவது மாத்திரமில்லை. மனத்தால் பழகுவது.. பழக்குவது. அதனால்தான், ஷஉள்ளத்து உள்ளது கவிதை என்று கவிமணி சொன்னார். கவிதை எழுதப் படிப்பறிவு கட்டாயத் தேவையில்லை. இதற்கு நாட்டுப்புறக் கவிதைகளே சாட்சி.சங்க இலக்கியங்கள் தொடங்கி இன்றைய ஹைக்கூ வரை தமிழ்க் கவிதைகளின் பயணம் நெடியது. உள்ளடக்கங்கள், வடிவங்கள், உத்திகள் இவைகளில் தமிழ்க் கவிதைகள் சந்தித்த மாற்றங்கள் எத்தனை எத்தனையோ? ஆனாலும் மாற்றங்களின் ஊடாக இழையோடும் ஒருவகை மரபுத் தொடர்ச்சி தமிழ்க் கவிதைகளுக்கு உண்டு. இந்த மரபுத் தொடர்ச்சிதான் தமிழ்க் கவிதைகளின் ஜீவ சக்தி. உள்ளார்ந்த ஆற்றல். இந்த ஜீவ சக்தியற்ற படைப்புகள் குறைப் பிரசவங்கள், சவங்கள்.
***
புதிய வேதாந்தம் என்ற தமது முந்தைய படைப்பின் மூலம் தமிழ் இலக்கிய உலகிற்கிற்கு அறிமுகமான வழக்குரைஞர் இரா. சந்திரசேகரன் அவர்களின் நான்காவது படைப்பு, ஷகற்பனை மனிதர்கள் என்ற தலைப்பிலான இந்தக் கவிதை நூல். மேற்கத்திய கவிமரபை ஒட்டி நெடுந்தொடர்க் கவிதையால் இந்த நூலைப் படைத்துள்ளார் இரா. சந்திரசேகரன். ஒரு தத்துவ ஞானியைப்போல், சித்தனைப்போல், பக்தனைப்போல் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் கவிஞர் இவர். வாழ்க்கை குறித்த தீவிர விசாரணைகளோடு வெளிவந்துள்ள இந்தப் படைப்பு தமிழ்க் கவிதை உலகில் தனக்கென ஒரு தனியிடம் பெறத்தக்கது. பிரபஞ்சத்திற்கும் மனிதனுக்குமான உறவை உள்வாங்கி உருவான இக்கவிதைகளில் அமைந்துள்ள படிமங்களும் குறியீடுகளும் மிகப்பல. இயற்கையை முன்னிலைப்படுத்தி மனித இருப்பைக் கேள்விக்கு உள்ளாக்கும் சந்திரசேகரனின் கவிதைகளில் ஒலிக்கும் குரல்கள் வித்தியாசமானவை. தமிழில் எங்கோ? எப்போதோ? கேட்ட தொல்காப்பியர் காலத்துக் காஞ்சித்திணையின் குரலை மீண்டும் கற்பனை மனிதர்களில் உரக்கக் கேட்கிறோம்.

பாங்கருஞ் சிறப்பின் பல்லாற் றானும்
நில்லா உலகம் புல்லிய நெறித்தே (தொல். புறத். 23)

தொல்காப்பியர் தம் புறத்திணையியலில் வரையறுக்கும் காஞ்சித்திணை என்பது நிலையாமை குறித்த விழிப்புணர்ச்சி. மன்னா உலகத்தில் மன்னுதல் குறித்த விசாரணை. இளமை, யாக்கை, செல்வம் இவைகளின் நிலையாமைகளை உணர்ந்து மனிதன் தம் வாழ்வை தகவமைத்துக் கொள்ளும் முயற்சி.ஷஷமனிதர்களும் மாமேதைகளும் ஞானிகளும் சித்தர்களும் அறிஞர்களும் கவிஞர்களும் ஆன்மீகவாதிகளும் மன்னர்களும் மந்திரவாதிகளும் ஆற்றின் மணற்பரப்பும் ஆனந்த நீரோடைகளும் ஆறும் கடலும் பாலைவனத்தில் ப+க்கும் அரிய ப+க்களும் உயிராய் உறவாடிய உறவுகளும் ஆடித் தேடிய அருளும் ஆன்மீகமும் தேடிக் கொணர்ந்த பொருளும் எங்கே? என்று கவிஞர் எழுப்பும் கேள்விக்கணை, மதுரைக்காஞ்சியில்

திரையிடு மணலினும் பலரே
உரை செல மலர்தலை உலகம்
ஆண்டு கழிந்தோரே (ம.காஞ்சி- 236-237)

என்று காஞ்சித்திணைப் பொருளுணர்த்திய மாங்குடி மருதனாரின் சாகா வரிகளை நினைவூட்டுகின்றது. தமிழிலக்கிய நெடும்பரப்பில் மதுரைக்காஞ்சிக்குப் பிறகு நிலையாமை குறித்த நெடுங்கவிதை இரா.சந்திரசேகரனின் கற்பனை மனிதர்கள்தான் என்பது இந்நூலின் தனிச்சிறப்பு.

• நேற்று நிலைத்த கோபுரம்
இன்று மண்ணாய்
அரண்மனையும் அந்தப்புரமும்
தெருமுனையில் சிறுகுடியாய்
இயற்கையின் இயல்பு..
வந்தவை செல்லத்தான்
முடிவு நோக்கிய முன்னுரை

• விதியோடும் மதியோடும் திரிந்தாலும்
புவிமடியில் ஓர்நாள்
மணமற்ற மலராய் உயிரற்ற உடலாய்
உடைந்த நீர்க்குழியாய்

• எல்லாம் இறுதியான பின்பு
நீயம் நானும் மக்களும் நாடும்
மனம் புரிந்து மாண்டு
இறுதியில் வெறுமையாக
மண்ணோடு மண்ணாய்..

• மரணமும் ஜனனமும்
புவி கொடுக்கும் அதிசயங்கள்
எல்லோரும் செல்ல
வழிகாலம் முடிந்தபின் ஆன்மா பிரியுமுன்
நன்றிசொல் பூமிக்கு
இயற்கை அன்னைக்கு

• எத்தனைக் காலங்கள்
எத்தனை மனிதர்கள்,
சாத்திரங்கள் சந்ததிகள்
காலத்தால் கரைந்தவர்கள்
நேற்றுப் பூத்து
இன்று அறுவடையான காளான்கள்

இப்படி, கற்பனை மனிதர்களில் தொட்ட இடமெல்லாம் மனிதர்களின் பிறப்பு, இருப்பு, இறப்பு குறித்த விசாரணைகளைப் பதிவு செய்கிறார் கவிஞர் இரா.சந்திரசேகரன்.

கற்பனை மனிதர்களின் மற்றுமொரு தனிச்சிறப்பு மனித வாழ்க்கை குறித்த மகத்தான நம்பிக்கை. நிலையாமை குறித்த பதிவுகளால் வாழ்க்கையை எதிர்மறையாய்ப் புரிந்துகொள்ளும் நம்பிக்கை வறட்சியாளர் அல்ல கவிஞர் இரா.சந்திரசேகரன். மானுடத்தின் மேன்மையை, மானுடம் வெல்லும் என்ற உறுதிப்பாட்டை நூலின் பல இடங்களிலும் பதிவுசெய்து கவிஞனுக்குரிய சமூக அக்கறையை வெளிப்படுத்துவதிலும் தனித்தன்மையோடு திகழ்கிறார் கவிஞர்.

• மாந்தன் எழவேண்டும்
ஏழ்மை களைய ஏடு பிடிக்க
அன்பு சிறந்து அமைதி தேட
அப்புறம் ஆள

• புவி படைத்தாய்ப் புதுமையாய்
புதுத் தென்றல் தேடு!
புயலாய் மாறு!
நிலவைப் பிடி! விண்மீன் தேடு

• அழுது புலம்பலால்ஆறு நிறைவதில்லை
மாரி பொழிதல் வேண்டும்
நாம் நினைத்தால் வாழ்வோம்

• இன்று பூத்துநாளை உதிராதே
இறந்து மடியுமுன்
உன் முகவரியை விட்டுச்செல்

கவிஞரின் பெருவிருப்புகளை நூலின் எல்லாப் பக்கங்களிலும் அடையாளம் காணமுடிகிறது. உலகில் அன்பு சிறக்க வேண்டும், அமைதி நிலைக்க வேண்டும், ஏழ்மை களையப்பட வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி மாந்தன் எழவேண்டும். மாந்த இனத்தின் எழுச்சியால் தொடமுடியாத சிகரங்களையும் நாம் தொட்டுவிட முடியும் என்ற கவிஞரின் நம்பிக்கை நமக்குத் தெம்பூட்டுகிறது. வாழ்க்கை நிலையில்லாததுதான் இன்று பூத்து நாளை உதிர்ந்து விடுவதுதான் என்றாலும் நிலையில்லாத இந்த வாழ்க்கையின் முடிவில் உன் அடையாளத்தை இந்த உலகத்தில் பதிவுசெய்து விடு என்று கவிஞர் சந்திரசேகரன் எழுதிச்செல்லும் வரிகள்

மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம்புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே

என்ற தமிழர் மரபை அழுத்தமாகப் பதிவு செய்கின்றது.

கற்பனை மனிதர்கள் நூலின் மற்றுமொரு சிறப்பு கவிதையில் விரவிக் கிடக்கும் மனிதநேயப் பதிவுகள்.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்,

என்ற வள்ளலாரின் வழியில்

காக்கைக் குருவி எங்கள் சாதி

என்ற மகாகவி பாரதியின் அடிச்சுவட்டில் சந்திரசேகரனும் உயிர் இரக்கத்தை உயிர் மூச்சாகக் கொண்டு கவிதை படைக்கின்றார்.

கிளிக்குஞ்சும் மணிப்புறாவும்
பொன்வண்டும் மரங்கொத்தியும்
பசியால் ஆரவாரம் செய்தபோது
மனம் வலித்தது.

பறவைகளின் பசிக்குரல் கேட்டு மனம் நோகும் கவிஞரின் உயிர் இரக்கம் நம் உயிரையும் உருக்குகின்றது.

***

கவிஞர்களில் நமக்கு அதிகம் பரிச்சயமானவர்கள் இரண்டு வகை. ஒருவகையினர் தம் படிப்பறிவால் கவிதை படைப்பவர்கள். மற்றொரு வகையினர் தம் பட்டறிவால் கவிதை படைப்பவர்கள். நமக்கு அதிக பரிச்சயமில்லாத மூன்றாவது வகைக் கவிஞர்களும் உண்டு. அவர்கள் படிப்பறிவு, பட்டறிவோடு உள்ளுணர்வாலும் கவிதை படைப்பவர்கள். கவிஞர் இரா.சந்திரசேகரன் இந்த மூன்றாவது வகையைச் சேர்ந்த கவிஞர். இவர் உள்ளுணர்வால் கவிதை படைப்பவர். இவரின் உள்ளுணர்வு பல சமயங்களில் கவிதையின் சொற்களில் சிக்குவதில்லை. அந்தத் தருணங்களில் அவரின் உள்ளுணர்வோடு நாம் ஒத்துப்போக முடிவதில்லை. விளைவு? கவிதை நமக்குக் கண்ணாம்பூச்சி காட்டுகிறது. நான் இந்தக் கற்பனை மனிதர்களோடு கண்ணாம்பூச்சி ஆடிய நேரங்கள் அதிகம். கண்ணாம்பூச்சி ஆடிக் களைத்து சோர்ந்து போன நேரங்களில், கவிதை என் காதோரம் வந்து சொன்ன இரகசியங்களைத்தான் உங்களோடு பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அன்பான உலகம், சமத்துவம் நிலைக்கட்டும்
அன்பு குறையும்போது அறம் குறையும்
நீதி மாண்டுவிடும்
உலகு வாழவேண்டும்

அன்பு, சமத்துவம் இரண்டால் உலகு வாழும். வாழ வேண்டும் என்று விரும்புகிற கவிஞர் இரா.சந்திரசேகரனின் கவிதைப் பயணம் தொடரவேண்டும். அவரின் கவிதையால் மண் பயனுற வேண்டும். வாழ்த்துக்கள்!.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

அன்பு, சமத்துவம் இரண்டால் உலகு வாழும்.
வாழ வேண்டும் என்று விரும்புகிற
கவிஞர் இரா.சந்திரசேகரனின்
கவிதைப் பயணம் தொடர
மகாசக்தி அருளட்டும்!.


அறத்தின் உணர்வே அன்பாகும்.

அறத்தினை எங்கும் விதைத்திட்டால்
அன்பு எங்கும் உயிர்த்திடும்.

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...