புதன், 5 டிசம்பர், 2007

''திரும்பினார் திருவள்ளுவர்…" -நாடகம் குறித்த சில பதிவுகள்

''திரும்பினார் திருவள்ளுவர்…"
நாடகம் குறித்த சில பதிவுகள்

முனைவர் நா.இளங்கோ
இணைப்பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்,
புதுச்சேரி-8.

புதுச்சேரி இலக்கியப் பொழில் இலக்கிய மன்றம் தொடங்கப்பட்டு 2007 டிசம்பர் திங்களுடன் இரண்டாண்டுகள் நிறைவு பெறுகின்றன. பதினாறு இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தி முடித்திருக்கின்ற இலக்கியப் பொழில் தம் இரண்டாண்டு காலப் பயணத்தைத் திரும்பிப் பார்க்கும் வகையில் ஒரு மலர் வெளியிடயிருப்பது நல்ல முயற்சி. ஒரு மொழியின் வளர்ச்சிக்குப் பயன்படும் பல்வேறு நடவடிக்கைகளில் இலக்கிய அமைப்புகள் முகாமையானவை. சங்க காலம் தொடங்கித் தமிழின்- தமிழிலக்கியத்தின் பல்வேறு வளர்ச்சிகளுக்கு அவ்வக்கால இலக்கிய அமைப்புகள் பேருதவி புரிந்திருக்கின்றன. அந்த வரிசையில் புதுவையின் இலக்கியப் பொழில், இலக்கியம் சார்ந்த நிகழ்ச்சிகளில் மட்டும் கவனம் செலுத்தாமல் இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழிலும் கவனம் செலுத்தி வருவது பாராட்டத்தக்கதாகும்.

இலக்கியப் பொழில் இலக்கிய மன்றத்தின் 14 ஆவது நிகழ்ச்சி (29-6-2007), புதுச்சேரி, மீட்பர் அன்னை இல்லத்தில் "இசை, நாடகம்"அரங்காக அமைக்கப்பட்டிருந்தது. இசை அரங்கில் பேராசிரியர் சீ. தருமு நல்ல தமிழிசைப் பாடல்களை இசைத்து, பார்வையாளர்களை இசைவித்து, தம் இசைத்திறனால் நல்ல இசையைப் பெற்றார்.

இசை அரங்கிற்கு அடுத்தபடியாக நாடக அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. ஷகானல்வரிக் கலைக்குழுவின் சார்பில் நாடகம் நடத்தப்பட்டது. நாடகத்தின் தலைப்பு: திரும்பினார் திருவள்ளுவர் (கற்பனை நாடகம்). நாடகத்தின் கதை, உரையாடலை முனைவர் சிவ.இளங்கோ படைக்க, நாடகத்தை இயக்கியவர் முனைவர் அ.கனகராசு. இலக்கியப் பொழிலுக்காக முன்பே ஒளவையார் என்றவொரு வெற்றிகரமான வரலாற்று நாடகத்தை எழுதி, இயக்கி புதுவை மக்களிடத்தில் மிகுந்த புகழ் பெற்றிருப்பவர் அ.கனகராசு. அவரின் இயக்கத்தில் இலக்கியப் பொழிலில் மீண்டும் ஒரு நாடகம் என்பதால் புதுவை இலக்கிய அன்பர்களிடத்தில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. திருவள்ளுவர் மீதும் திருக்குறள் மீதும் தமிழர்களுக்கு இருக்கும் பெருமதிப்பு நாடகம் பற்றிய ஆர்வத்தை அனைவரிடமும் மிகுவித்ததில் வியப்பேதும் இல்லை.

நிகழ்ச்சியின் தொடக்கமாக வரவேற்புரை ஆற்றிய இலக்கியப் பொழிலின் நிறுவனர் திரு.பெ.பராங்குசம் தம் உரையை வரவேற்புரையாக மட்டும் அமைத்துக் கொள்ளாமல் நிகழ்ச்சியின் நோக்கவுரை என்ற பொருளிலும் உரையாற்றினார். பெ.பராங்குசம் அவர்கள் உரையின் மையப்பொருளாக அமைந்தது தமிழ் உணர்ச்சி, தமிழ் வளர்ச்சி, தமிழ் ஆட்சி குறித்த தீவிர சிந்தனைகள். தமிழ்ப்பற்று என்ற பெயரில் தமிழின் புகழ்பாடி உளங்களிக்கும் தமிழன்பர்களின் மத்தியில் அவரின் பேச்சு ஒருவகையில் ஆக்கப+ர்வமான அணுகுமுறைகளுடன் கூடிய திறனாய்வாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. வரவேற்புரை மற்றும் நோக்கவுரையின் இத்தகு கருத்துரை முதலில் மற்றொன்று விரித்தலைப் போல் தோன்றினாலும், திருவள்ளுவர் திரும்பினார் நாடகத்தைப் பார்த்த பிறகுதான் நிகழ்ச்சியின் மையப்பொருளே இதுதான் என்பது விளங்கியது.

திருவள்ளுவர் திரும்பினார் நாடகம் அடிப்படையில் ஒரு கற்பனை நாடகம். கற்பனை நாடக உத்தியைப் பின்பற்றிச் சமகால நிகழ்வுகளை விமர்சிக்கும் பரவலான ஒரு நாடக பாணியில் இந்நாடகம் படைக்கப்பட்டிருந்தது. கலைத்தன்மையில் நாடகம் பெரிய முயற்சிகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என்றாலும் கருத்து வலிமையால் மிகுந்த முக்கியத்துவம் பெற்றது.

நான்கு காட்சிகளாக அமைக்கப்பட்டிருந்த இந்நாடகத்தில், உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவப் பெருந்தகை 2000 ஆண்டுகளுக்குப் பின்னர் உலகைக் காணும் பெருவிருப்போடு புதுச்சேரி வருகிறார். தமிழன் வாழும் புதுவையில் ஃ தமிழகத்தில் தமிழுக்கு இடமில்லாத அவலத்தைக் காணும் திருவள்ளுவர் மீண்டும் கற்சிலையாகிறார். இதுதான் நாடகத்தின் சுருக்கம். நாடகத்தில் முக்கிய பாத்திரங்களில் திருவள்ளுவராகச் சீனு.வேணுகோபால், வளவன் என்ற தமிழன்பராக நட.இராமமூர்த்தி, தமிழ்ச்செல்வன் என்ற அரசியல்வாதியாக முனைவர் உரு.அசோகன், அரசுச் செயலராக முனைவர் சிவ.இளங்கோ ஆகியோர் பாத்திரமேற்று நடித்திருந்தனர். நாடகம் என்பது உரையாடலால் மட்டும் இயங்குவதில்லை. பாத்திரங்களின் உடல்மொழிதான் உரையாடல்களுக்கே உயிர் கொடுக்கின்றது. அந்த வகையில் அரசியல்வாதி பாத்திரமேற்ற உரு.அசோகனும் அரசுச் செயலர் பாத்திரமேற்ற சிவ.இளங்கோவும் சிறப்பான பங்களிப்பை நாடகத்திற்கு வழங்கியிருந்தனர். அதிலும் குறிப்பாக உரு.அசோகனின் நடிப்பு தனிப்படப் பாராட்டத்தக்கது. சீனு. வேணுகோபாலும், நட.இராமமூர்த்தியும் உரையாடலால் நாடகத்திற்கு உயிரூட்டினர்.

திருவள்ளுவர் திரும்பினார் நாடகம் மிகுந்த முக்கியத்துவம் பெறுவதற்கு அடிப்படைக் காரணம் அதன் நிகழ்த்துமுறை மட்டுமல்ல, நாடகப் பிரதியின் சமகால விமர்சனங்களே ஆகும். அரசியல்வாதி – தமிழன்பர் உரையாடலாக அமைந்த பின்வரும் பகுதி பிரதியின் வலிமைக்கு ஒரு சான்று.

வளவன் (தமிழன்பர்): ஆமாமாம்! இவங்களுக்கு இதுக்கெல்லாம் ஏது நேரம்? இவுரு புள்ள சந்தனம் கடத்தறான், மருமகன் சாராயம் கடத்தறான், இவுரு லாட்ஜ் நடத்தராரு. அப்புறம் மக்கள் பணிக்கெல்லாம் எப்படிங்க நேரம் கிடைக்கும்.

தமிழ்ச்செல்வன் (அரசியல்வாதி): யோவ்! சும்மா நிறுத்துங்கையா! உங்க யோக்யதையெல்லாம் எங்களுக்குத் தெரியாதா? நாலு வரி எழுதத் தெரியாதவனெல்லாம் ஏதாவது ரெண்டு, மூணு கவியரங்கத்துல வந்து உக்கார வேண்டியது. அப்புறம் கவிஞர்ன்னு போட்டுக்கினு தனியா ஒரு சங்கம் ஆரம்பிக்கறது. அப்புறம் ஒரு பொஸ்தவம் போட்டு, எங்களைக் கூப்பிட்டுப் பொன்னாடை போர்த்தி போட்டோ எடுத்துக்கறது. அப்புறம் அதைக்காட்டி விருது கொடு, எம்.எல்.ஏ. பதவி குடுன்னு தொந்தரவு கொடுக்கறது.

திருவள்ளுவர்: (பலமாகச் சிரிக்கிறார்) ஹா…ஹா…ஹா…

திருவள்ளுவர் பலமாகச் சிரிக்கிறார் என்று தமிழன்பர்- அரசியல்வாதி உரையாடலுக்கு ஒரு முத்தாய்ப்பு வைக்கும் நாடக ஆசிரியரின் பகடி மிகவும் ரசிக்கத்தக்கது. திருவள்ளுவர் காலம், நூல் அரங்கேற்றம், சங்கப்பலகை முதலான தொன்மங்களுக்குள் ஊடாடும் வகையில் சமகாலப் படைப்பாளிகளும் படைப்புகளும் விமர்சனங்களுக்கு உள்ளாகும் நுட்பமான பகுதி இது.

இன்றைய அரசியல்வாதிகள் குறித்த அவலங்கள் நாடகத்தின் இரண்டாம் காட்சியில் விவரிக்கப்படுகின்றதென்றால், நாடகத்தின் மூன்றாவது காட்சி ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றான நிர்வாகத்துறை குறித்த அவலங்களை விவரிக்கின்றது. இக்காட்சியில் மாநிலத்தின் அரசுச் செயலர், அவரின் கீழ் இயங்கும் நிர்வாகத்துறை அதிகாரிகள் அனைவருமே அம்மாநிலத்தின் தாய்மொழி வளர்ச்சி, ஆட்சி, அதிகாரம் குறித்த எத்தகைய விழிப்புணர்வும் அற்றவர்களாய் வயிறுவளர்க்கும் ஊதியமே குறிக்கோளாய்க் கொண்டு வாழும் இழிநிலை அம்பலப்படுத்தப்படுகிறது. செயலரின் உதவியாளராய் வரும் அரசு அதிகாரியின் வாய்மொழியே இதனை உறுதிப்படுத்துகிறது.

உதவியாளர்: அய்யோ! அய்யோ! தமிழ் தமிழ்ன்னு இப்படி ஏன்தான் உயிரை வாங்குறானுவளோ தெரியலை. வந்தமா, சம்பளம் வாங்கனமான்னு இல்லாம, கையெழுத்தைத் தமிழ்ல போடு, தமிழ்ல எழுது, தமிழ்ல படின்னு ஒரே ரோதனை இவங்களோட. நான்கூடத்தான் தமிழன். இப்ப இன்னா தமிழ்ல படிச்சனா? இல்ல எம்புள்ளங்களுக்குத்தான் தமிழ்ல பேர் வச்சனா? இல்ல அதுங்களைத் தமிழ்ல படிக்க வச்சனா? இல்ல தமிழ்லதான் கையெழுத்துப் போட்டு சம்பளம் வாங்கறனா?....

அரசு அதிகாரி சலித்துக்கொள்ள, நாடக ஆசிரியன் இப்படிப்பட்ட அதிகாரிகள் குறித்தான தமது விமர்சனத்தை அசரீரி குரலில் முன்மொழிகிறார்,

அசரீரி: நீ சூடு, சொரணை இல்லாதவன்!
நீ தன்மானம் இல்லாதவன்!
நீ தமிழன் இல்லை!
நீ தமிழன் இல்லவே இல்லை!
நீ தமிழை நேசிக்காத முட்டாள்!
நீ தமிழுக்குத் துரோகம் செய்யும் அயோக்கியன்!
நீ தமிழ் உணர்வில்லாத காட்டுமிராண்டி!

தமிழ் உணர்வற்ற தமிழர்கள் மீதான கடுமையானத் தாக்குதலாக சிவ.இளங்கோ இந்நாடகப் பிரதியை உருவாக்கித் தமிழுக்குக் காலத்தினால் செய்த பேருதவியாக வழங்கியிருக்கிறார்.

திருவள்ளுவர் ஒரு பார்வையாளரைப் போல வந்து இடையிடையே தம் புலம்பலை வெளிப்படுத்தி இறுதியில் மீண்டும் கற்சிலையாவது ஒரு உத்தியாக மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. திருவள்ளுவரின் பின்வரும் புலம்பல் இதனை மெய்ப்பிக்கும்,

திருவள்ளுவர்: அய்யகோ! என்ன நாடு இது. மொழிப்பற்றில்லை. இனவரலாறு தெரியவில்லை. ஆட்சியாளர்களுக்கோ அதிகாரத்தை நிலை நிறுத்திக் கொள்வதொன்றே குறி! எப்படி இருந்தாலும் சகித்துக் கொண்டு வாழ்வது என்ற நிலையில் மக்கள்! இப்படிப் பட்டவர்களுக்காகவா சங்கப் புலவர்கள் பல்லறங்களையும் தமிழில்பாடி அவற்றை ஓலைச்சுவடிகளில் பதித்தும் வைத்தார்கள். …. ….. மரத்துப்போன உணர்வுகள்! கல்லாகிவிட்ட நெஞ்சங்கள்! தமிழ் மக்களின் இன்றைய தமிழ் உணர்வுகள் எப்படி ஆகிவிட்டதென்று கல்லான என்னைப் பார்த்தாவது இம்மக்கள் உணர்ந்து கொள்ளட்டும்.

நாடகம் முடிந்தவுடன் பார்வையாளர்களின் நெஞ்சமும் கல்லாகிப் போனதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியதில் நாடகம் முழுவெற்றி பெற்றுவிட்டது. நாடகத்தை இயக்கிய முனைவர் அ.கனகராசு தம்மை வெளிப்படுத்திக் கொள்ளாமல் நாடகத்தைப் பிரதியின் போக்கிலேயே இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரி இலக்கியப் பொழில் இலக்கிய மன்றத்தின் தமிழ்ப்பணி வரலாற்றில் நிலைத்து நிற்கக்கூடியது. திரு. பெ.பராங்குசம்- பூங்கொடி பராங்குசம் இணையர்களின் தமிழ்ப்பணி வாழ்க! வளர்க!!.

பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ

கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...