ஞாயிறு, 24 ஜூலை, 2011

சீறாவில் உமறுப்புலவர் காட்டும் புதுமை உலா -பகுதி-1


முனைவர் நா.இளங்கோ
தமிழ்ப் பேராசிரியர்
காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம்
புதுச்சேரி- 605008

தமிழில் எழுதப்பட்ட தலைச்சிறந்த இசுலாமிய இலக்கியம் சீறாப் புராணம் ஆகும். இந்நூல் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு தமிழ் இலக்கிய மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காப்பியம். இதனை இயற்றியவர் 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப்புலவர் (கி.பி.1642-1703) ஆவார். இவர் பிறந்த ஊர் கீழக்கரை. சீறா என்பது சீறத் என்னும் அரபுச் சொல்லின் தமிழ் வடிவம். சீறத் என்னும் அரபிச் சொல்லிற்கு வரலாறு என்பது பொருள். புராணம் என்பது பழமையான வரலாறு எனப் பொருள்படும். திருநபி அவர்களின் வரலாற்றைக் கூறும் புராணம் என்பது இதன் பொருள். இக்காப்பியம் மூன்று காண்டங்களைக் கொண்டது. அவை: 1).விலாதத்துக் காண்டம், 2).நுபுவ்வத்துக் காண்டம், 3).ஹிஜ்ரத்துக் காண்டம் என்பவை ஆகும். விலாதத்துக் காண்டம் என்பது நபிகள் நாயகம் அவர்களின் பிறப்பு முதல் திருமணம் வரையிலான வாழ்க்கை நிகழ்ச்சிகளை விவரிக்கும் பகுதியாகும். நுபுவ்வத்துக் காண்டம் நபிப்பட்டம் அருளப்பட்டதில் இருந்து மக்கமாநகரில் நபிகள் நாயகம் வாழ்ந்த காலம்வரை நடந்த வரலாற்றினைக் கூறுவதாகும். ஹிஜ்ரத் காண்டம் என்பது மக்கமா நகரிலிருந்து மதீனா நகருக்கு நபிகள் நாயகம் புறப்பட்டுச் சென்றது முதல் அவர்களின் மதீனாநகர் வாழ்க்கையைக் கூறுவதாகும். சீறாப்புராணத்தில் மொத்தம் 92 படலங்கள் உள்ளன. நூலின் மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை 5,228. 18 ஆம் நூற்றாண்டில் இந்நூலை ஏடுதேடிப் பதிப்பித்து வெளியிட்டவர் புலவர் நாயகம் செய்கு அப்துல் காதிறு நயினார் லெப்பை ஆலிம் புலவர் (N~கனாப் புலவர்)ஆவார்.

உலா இலக்கியம்: உலா என்பது பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் என்னும் எழுவகைப் பருவ மகளிரும் கண்டு காதல் கொள்ளும் வண்ணம் தலைவன் ஒருவன் வீதியில் பவனி வந்தான் என்று பாடுவதாகும். இது கலிவெண்பாவால் பாடப்படும். தொல்காப்பியர் தம் பொருளதிகாரப் புறத்திணையியலில் உலாவிற்கு இலக்கணம் கூறுகின்றார்.

ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப
வழக்கொடு சிவணிய வகைமையான     (தொல். பொருள். புறம். 25)


    உலா இலக்கியம் பற்றிய குறிப்பு, தொல்காப்பியப் பொருளதிகாரப் புறத்திணையியலிலேயே இடம்பெற்றாலும் முதன்முதலில் முத்தொள்ளாயிரம் நூலில்தான் உலா பாடுபொருளாவதைப் பார்க்கின்றோம். அதன்பின்னர் உலா இலக்கியத்தின் வளர்ச்சியைக் காப்பிய இலக்கியங்களில் காணமுடிகின்றது. காப்பியங்களில் அவற்றின் தலைவர்கள் உலாவரும் காட்சிகளை அழகுற அமைத்துப் பாடுதல் மரபு. மணம்புரிதல், வெற்றிபெறுதல் முதலிய காலங்களில் அத் தலைவர்கள் உலாவரும் செய்தி பெருங்கதை, சீவக சிந்தாமணி, கம்ப ராமாயணம் முதலான தமிழ்க் காப்பியங்களில் கூறப்பட்டுள்ளது.

சீறாப்புராணத்தில் நபிகள் நாயகத்தின் உலா:
தமிழிலக்கிய நெடும்பரப்பில் 13 ஆம் நூற்றாண்டு தொடங்கி 16 ஆம் நூற்றாண்டு முடிய நான்கு நூற்றாண்டுகள் தமிழில் பெருங்காப்பியங்கள் ஒன்றும் படைக்கப்படவில்லை. நான்கு நூற்றாண்டுகளாகத் தமிழிலக்கியம் காணாத பெருங்காப்பிய மரபுத் தொடச்சியை மீண்டும் தொடங்கிவைத்த பெருமை உமறுப் புலவருக்கு உண்டு. பதினேழாம் நூற்றாண்டில் அவர் பாடிய சீறாப்புராணம் எனும் பெருங்காப்பியமே மீண்டும் தமிழில் பெருங்காப்பியங்கள் தோன்றப் பாதையமைத்துத் தந்தது. உமறுப்புலவர், தமிழிலக்கியக் காப்பிய மரபுகள் முழுவதையும் உள்வாங்கித் தமிழிலக்கிய மரபுக்குச் சிதைவு ஏற்படாவண்ணம் தம் காப்பியத்தைப் படைத்த அதே சமயம் இசுலாமிய இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வரலாற்றைத் தமிழில் காப்பிய வடிவில் அமைக்கும் முயற்சியில் இசுலாமிய மரபுகளையும் பொன்னேபோல் போற்றித் தம் காப்பிய முயற்சியில் முழுமைகண்டார் என்பது பெரிதும் பாராட்டத்தக்கது.

காப்பிய நாயகர்கள் தங்களின் திருமணம் மற்றும் வெற்றிவிழா காலங்களில் உலா வருவதாகப் பாடும் தமிழ்க் காப்பிய மரபினை ஒட்டி, சீறாப்புராணக் காப்பிய நாயகராம் நபிகள் நாயகம் சல்லல்லாகு அலைகிவசல்லம் அவர்கள் தம் திருமண நிகழ்ச்சியின்போது உலா போந்ததாகப் படைக்கின்றார் உமறுப்புலவர்.
நபி பெருமானார் மணக்கோலம் பூண்டு, குதிரை மீதேறி பவனி புறப்படும் பொழுது எளியவர்களுக்குப் பொன்னும் மணியும் ஆடைகளும் வழங்குகின்றார். (தானமென ஏற்பவர்க்குப் பொன்மணி தூசெடுத் தருளி). அப்பொழுது தண்ணுமை, முருடு, துந்துபி, சிறுபறை, சல்லரி, பதலை, திண்டிமம், பேரிகை, முரசு, மத்தளம் முதலான இசைக்கருவிகள் முழங்குகின்றன.
குதிரையின் மீது முழுமதியெனத் திருமுகம் விளங்கித் தோன்ற நபிகள் நாயகம் அவர்கள் மணமகனாக நகர்வலம் வருகின்ற காட்சியைப் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் என்னும் எழுவகைப் பருவப் பெண்களும் வீதிகள் தோறும் கூடிநின்று கண்டு களிக்கின்றனர்.

செழுமுகிற் கவிகையஞ் செம்மல் வீதிவாய்
வழுவறு பவனியின் வருகின் றாரென
வெழுவகைப் பேதை பேரிளம்பெண் ஈறதாய்க்
குழுவுடன் றிசைதிசை நிறைந்து கூடினர்.      (மணம்புரி படலம்- 51)

வழக்கமாகத் தமிழ்க் காப்பியங்களிலும் உலா நூல்களிலும் தலைவன் உலா வருவதைக் காணும் பெண்கள் தன்நிலை மறந்து, தலைவன் மீது கொண்ட காதல் மிகுவதால் காமவயப்பட்டுப் புலம்புவதாக இலக்கியம் செய்வது வழக்கம். அதிலும் குறிப்பாக முன்னர் குறிப்பிட்ட எழுபருவ மகளிரும், அதாவது ஐந்துவயது சிறுமி தொடங்கி ஐம்பது வயது பேரிளம்பெண் ஈறாகப் பெண்கள் எல்லோரும் உலாப்போகும் தலைவன்மேல் காதல்கொண்டு காமுற்றுப் புலம்புவதாகப் பாடுவது தமிழ்ச் சிற்றிலக்கிய மரபு. உமறுப்புலவர் நபி பெருமானாரின் உலாக் காட்சிகளை அப்படிப் படைத்துக் காட்டாமல் மாற்றம் செய்து பண்பார்ந்த நிலையில் விவரிக்கின்றார். எழுபருவப் பெண்களும் நபிகளாரின்  உலாவினைக் காண நிறைந்து கூடினர் என்று மட்டுமே குறிப்பிடும் உமறுப்புலவர் அவர்கள் காதல் வயப்பட்டதாகக் குறிப்பிடவில்லை. அந்தவகையில் தமிழ்மரபு கருதி எழுபருவப் பெண்களையும் உலாக் காண அழைத்துவரும் காப்பிய ஆசிரியர் மரபில் தேவைப்படும் மாற்றமாக அவர்களைப் பார்வையாளர்களாக மட்டுமே நிறுத்துகின்றார். உலாக்காணும் பெண்களின் பேச்சு கூட நாம் வழக்கமாகக் கேட்கும் பேச்சாக இல்லாமல் புதிய பேச்சாக புதுமையான பேச்சாக அமைகின்றது.
ஆமீனா காணாத அரிய காட்சி:
    உலகத்தவர் மகிழ்ந்து காணும் நபிகள் நாயகம் சல்லல்லாகு அலைகி வசல்லம் அவர்களின் இந்த மணக்கோல உலாக் காட்சியை அவரின் தாயார் ஆமீனா உயிரோடிருந்து காணும் பேறு பெறாமல் போய்விட்டாளே, என்று பவனி காணும் மகளிர் வேதனையை வெளிப்படுத்துவதாக உமறுப்புலவர் பாடுகின்றார்.
கண்ணகன் ஞால மெல்லாம் களிப்புறும் அரிய காட்சி
அண்ணல்தன் மனத்தின் கோலம் ஆமீனா வென்னும் அந்தப்
பெண்ணிருந்து இனிது காணப் பெற்றிலள் காணும் என்பார்     (மணம். 57)
இப்பாடலில், ஆமீனா என்னும் அந்தப் பெண்ணிருந்து இனிது காணப் பெற்றிலள் என்று வரும் பகுதியைக் கூர்ந்து நோக்கினால் இப்படிப் பேசும் பெண்கள் நபிகளாரின் தாயார் ஆமீனாவின் ஒத்த அல்லது மூத்த வயதுடைய பெண்கள் என்பது புலப்படும். ஆக, மூத்த வயதுடைய பெண்கள் நபிகளாரின் உலாவைக் காணுங்கால் அவரின் தாயாரை நினைவு கூர்கிறார்கள்.
கதீஜா செய்த தவப்பேறு:
குடை நீழலில் வேகநடையுடைய குதிரை மீதமர்ந்து உலாவரும் முகம்மதுவின் அழகே உலகத்திலுள்ள அழகுகளிலெல்லாம் மேலான அழகு என வியக்கும் பெண்கள் இத்தகு பேரழகுடைய முகம்மதுவை மணாளனாகப் பெற்றது கதீசாவின் தவப்பேறே என்றும் அவரைப்போல் பேறு பெற்றவர்கள் இம் மண்ணுலகில் வேறு எவரும் இல்லை யென்றும் வியந்து பாராட்டு கின்றார்கள்.
கடுநடைப் புரவி மேலாய்க் கவிகைமா நிழற்ற வந்த
வடிவுறை முகம்ம தின்றன் வனப்பலால் வனப்பு மில்லைக்
கொடியிடைக் கதீசா வென்னுங் கொம்புசெய் தவப்பே றாகப்
பிடிநடை யவரிற் பேறு பெற்றவ ரில்லை என்பார்.        (மணம். 58)
இந்தப் பாடலில் தவப்பேறாக, பேறு பெற்றவரில்லை என்று பேசும் பெண்களின் பேச்சு வெறும் உதட்டளவிலான பேச்சோ, வெற்று ஆரவாரப் பேச்சோ இல்லை. இந்த வார்த்தைகள் அவர்களின் உள்ளத்தின் ஆழத்திலிருந்து மனநிறைவோடு வெளிப்படுகின்ற பாராட்டுரைகளாகும். ஏனெனில் கதீசா முகம்மதுவைப் பெற்றது அவள் செய்த தவத்தின் பயன் என்பதும் இதைவிட வேறு பெரும்பேறு ஒன்றும் உலகத்தில் இருக்கமுடியாது என்பதும் அவர்களின் தீர்க்கமான முடிவு. இப்பேச்சில் பொறாமை உணர்ச்சி ஒருசிறிதும் இல்லை என்பது வெளிப்படை.
மேலும், உலா காணும் பெண்கள் ஒரு முடிவுக்கு வருகின்றார்கள். கதீசா, தாம்  செய்த தவத்தின் பயனாய் முகம்மதுவை அடையப்பெற்றார். நமக்கு நபிகளாரை அடையும் பேறு கிடைக்கவில்லை என்றாலும் அவரின் வீதியுலாவினைக் காணும் பேறு கிடைத்ததே அதுவே நமக்குப் பெறும்பேறு. நபிகளாரின் சிறப்பு பொருந்திய இப்பவனியை தினந்தோறும் தம் வீதியில் கண்டு மகிழும் வாய்ப்பை வேண்டி நாமும் அரிய தவத்தைச் செய்குவோம் என்று உறுதி ஏற்கின்றார்கள் பவனி காணும் பெண்கள். தினந்தொறும் பவனி காணச் செய்தவம் செய்வோம் என்பார் (மணம். 60) அது மட்டுமல்லாமல் நபிகளாரைச் சுமந்து வீதியுலா அழைத்துச் செல்லும் குதிரையை நோக்கி உலாக் காணும் பெண்கள் மிக்க அன்போடு ஒரு கோரிக்கை வைக்கிறார்கள். நபிகளாரின் பூரண அழகைக் கண்டு மகிழ்வதற்கு ஏதுவாகக் குதிரையே, மெல்லமெல்லச் செல்வாயாக என்பது அவர்களின் வேண்டுகோள். பரியை நோக்கிப் பாரிடைப் பையப்பையச் செல்லெனப் பரிவில் சொல்வார். (மணம். 62) என்ற சீறாப்புராணத்தின் இப்பகுதியைப் பயில்வோர்க்கு முத்தொள்ளாயிக் கைக்கிளைத் தலைவி பாண்டிய மன்னனின் குதிரையைப் பார்த்து ஊரகத்து மெல்ல நடவாயோ என்று வேண்டுகோள் வைத்த பகுதி நினைவுக்கு வராமல் போகாது. அப்பகுதி பின்வருமாறு,
ஊரகத்து மெல்ல நடவாயோ- கூர்வேல்
மதிவெங் களியானை மாறன் தன் மார்பங்
கதவங்கொண் டியாமுந் தொழ.             (முத்தொள்ளாயிரம்: 74)
நபிகளாரின் உலாக் காட்சியினை வருணிக்கும் உமறுப்புலவர் முததொள்ளாயிர இலக்கிய மரபுகளை உள்வாங்கியே அப்பகுதியை அமைத்துள்ளார் என்பது கண்கூடு.

வியாழன், 21 ஜூலை, 2011

சீறாவில் உமறுப்புலவர் காட்டும் புதுமை உலா -பகுதி-2


முனைவர் நா.இளங்கோ
தமிழ்ப் பேராசிரியர்
காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம்
புதுச்சேரி- 605008

கிளி விடு தூது:
நபிகள் நாயகத்தின் மேனிஎழிலைக் கண்டு பசலை பூத்து நிற்கின்ற பெண்களின் பேச்சிலும் கூடக் காதல் வெளிப்படுகின்றதே அன்றிக் காமம் வெளிப்படவில்லை.

திருத்தகு பவனி நோக்குஞ் சேயிழை யொருத்தி காதல்
வருத்தமுற் றிருந்து பஞ்ச வனக்கிளி கையில் ஏந்திக்
கரத்தினைப் பொருத்தச் செய்த காளைபால் ஏகி என்றன்
உரத்தினைப் பொருந்தச் சொல்லென் றோதும்வாய் ஒழிகிலாளே
(மணம். 65)

நபிகளாரின் திருத்தமான பவனியைக் கூர்ந்து பார்த்த பெண்ணொருத்தி, அண்ணலார்மேல் கொண்ட காதலால் தமக்கேற்பட்ட வருத்தம் தீர, அவர் என்னைத்  தழுவிக் கொள்ள வேண்டும் என்ற செய்தியைச் சென்று சொல்லுவாயாக என்று தம் கையில் உள்ள பஞ்சவர்ணக் கிளியிடம் தூதுச் செய்தியினை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டேயிருக்கிறாள். ஏன் அவள் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருக்கிறாள் என்றால் கிளி அவள் பேச்சைக்கேட்டுத் தூது செய்தியினைச் சொல்ல உடனே புறப்பட்டுப் போகவில்லை, அது அவள் கையிலேயே இருக்கின்றது. தாதி தூதோ தீது தத்தைத் தூதோதாது என்ற செய்தி அறியாமல் அப்பெண் வாய்ஒழியாமல் புலம்பிக் கொண்டே இருக்கிறாள் என்ற பகடி தோன்றப் புலவர் படைத்துள்ள இக்காட்சி நயம்மிக்கது. இன்னும் சிந்தித்துப் பார்த்தால், பெருமைமிகு கதீசாவினைத் தழுவப்போகும் அண்ணலாரிடம் போய் பவனிகாணும் பெண்ணொருத்தியின் மார்பைத் தழுவுக என்ற தூதுச் செய்தியைச் சொல்ல விரும்பாமல்தான் அப்பஞ்சவனக் கிளி அமைதியாய் இருந்திருக்குமோ என்று எண்ணவும் தோன்றுகிறது. காப்பியத்தின் போக்கில் உலா என்ற சிற்றிலக்கிய மரபினைப் புகுத்திப்பாடும் சிறு வாய்ப்பினைப் பயன்படுத்தி ஒரு கிளி விடு தூதினையும் இடையில் கையாண்டுள்ள உமறுப்புலவரின் இலக்கிய உத்தி தனிச்சிறப்புடையது.
தன்னை மறந்தாள் தன்நாமம் கெட்டாள்:
    அண்ணலாரின் பவனியைக் கண்ட பெண்ணொருத்தி தன் நினைவையெல்லாம் முகம்மது உலாப்போகும் வழியிலேயே போகவிட்டுவிட்டுத் தன்னை மறந்து நிற்கின்றாள். உமறுப்புலவர் சித்தரிக்கும் அப்பெண்ணின் நிலையைப் பார்ப்போம்.

    கனமுகில் அனைய கூந்தல் காரிகை ஒருத்தி உள்ள
நினைவெலாம் குரிசில் தோன்று நெறியிடை எதிரில் போக்கி
இனமெங்கே ஆய மெங்கே எவ்விடத்து ஏகின் றேன்என்
மனமெங்கே யான்தான் எங்கே எனநின்று மறுகு கின்றாள். 
(மணம். 68)

அப்பர் சுவாமிகளின் கைக்கிளைத் தலைவி ஒருத்தி சிவனைக் குறித்த செய்திகள் ஒவ்வொன்றையும் கேட்கக் கேட்க எப்படித் தன்னை மறந்தாளோ (தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே -தேவாரம்) அப்படியே, அண்ணலார் பவனி கண்ட பெண்ணும் தன்கைக்கிளைக் காதலால் உள்ளம், நினைவு இரண்டையும் அவர் பின்னால் போக்கிவிட்டு, பவனி தன்னைக் கடந்து போனதுகூடத் தெரியாமல் தனித்துநின்று, என்னோடு இங்கே குழுமியிருந்த பெண்கள் கூட்டமெங்கே? என்னுடன் வந்த தோழியர் ஆயமெங்கே? நான் எங்கே இருக்கிறேன்? என்றெல்லாம் புலம்பித் திகைத்து நிற்கிறாள். அதுமட்டுமா, என் மனம்எங்கே? நான்தான் எங்கே? என்று அடுத்து அவள் கேட்கும் கேள்விகள்தாம் அவலத்தின் உச்சம். நபிகளாரின் பவனியில் அவள் தன் மனத்தையும் தொலைத்துவிட்டாள், தன்னையும் தொலைத்துவிட்டாள். முத்தொள்ளாயிரம் முதலான தமிழிலக்கியங்கள் மிகுத்துப் பேசும் பெண்பாற் கைக்கிளைப் பாடல் மரபை உள்வாங்கித் தக்க இடத்தில் அம்மரபினைக் கையாண்டுத் தமிழின் இலக்கிய மரபுத் தொடர்ச்சியைத் தம் காப்பியத்துள் வைத்துக் காப்பாற்றும் உமறுப்புலவரின் புலமைநலம் பாராட்டத்தக்கதாகும்.

சுவன மடந்தையர் அண்ணலார் உலாகண்டு மயங்கினர்:
    உமறுப்புலவர் தமிழ்க்காப்பிய மற்றும் சிற்றிலக்கிய மரபுகளைப் பின்பற்றி அண்ணலாரின் திருமண உலாக் காட்சியை அமைக்கின்றார் என்றாலும் அதிலும் ஒரு புதுமை காண்கின்றார். மண்ணுலக மடந்தையர் பவனி கண்டு கைக்கிளைக் காதல் கொண்டதுபோல் விண்ணுலக சுவன மங்கையர்களும் நபிகளாரின் பவனிகண்டு மயங்கி நிற்பதாகப் புலவர் படைத்துக் காட்டுகின்றார்.

மன்னர் மன்னர் முகம்மது தம்பெயர்
சொன்ன போதில் சுவன மடந்தையர்
முன்னி ருந்த வடிவினும் மும்மடங்கு
என்ன லாகி இருங்களிப் பேறினார்.
            (மணம். 80)

முகம்மது திருமணக் கோலத்தில் பவனிவருகிறார் பாருங்கள் என்று அமரர்கள் சொன்னதைக் கேட்ட விண்ணுலக மங்கையர், முகம்மது என்னும் திருநாமம் காதில் விழுந்த அந்தத் தருணத்திலேயே தம்முடைய முந்தைய அழகைவிட மும்மடங்கு அழகுபெற்றுப் பொலிந்ததோடு பெருமகிழ்வும் எய்தினார்கள் என்கிறார் உமறுப்புலவர். மண்ணுலகப் பெண்கள் உலாகண்ட காட்சியினை வருணித்தது போலவே விண்ணுலக மங்கையர் உலாகண்ட காட்சியினையும் விரிவாக விவரித்துக் காட்டுகின்றார் புலவர். அவர்களும் அண்ணலார் மீது கைக்கிளைக் காதல் கொள்கின்றனர். பாட்டுடைத் தலைவனின் பேரழகில் பெண்கள் மயங்கி ஒருதலைக் காதல் கொள்ளுவதாகப் பாடும் மரபிற்கேற்ப விண்ணுலகப் பெண்களும் அண்ணலார் மீது ஒருதலைக் காதல் கொள்கின்றனர். தமிழின் பிற உலா இலக்கியப் பெண்களுக்கு வருகின்ற காமமயக்கம் போல் விண்ணுலகப் பெண்களுக்கும் காமமயக்கம் மிகுகின்றது. அவர்கள் நிலைமையினை வருணிக்கும் சீறாப்புராணப் பகுதி இதோ,

ஏந்து கொங்கை அணியிழப்பார் சிலர்
கூந்தல் சோரக் குழைந்து நிற்பார் சிலர்
காந்தி மேனி கரிந்திடுவார் சிலர்
மாந்தி ஆசை மயக்குறுவார் சிலர்.   
        (மணம். 100)

காதல் அளவுகடந்து காமமானதால் அவர்களின் ஒளிவீசம் மேனி கரிந்து போகிறதாம், காதல் மயக்கத்தில் ஆடை அணிகலன்களை இழக்கிறார்களாம் இப்படி உமறுப்புலவர் சுவனலோகப் பெண்களை வருணிக்கும் இடத்தில்தான் தமிழின் உலா இலக்கியப் பெண்களைக் காணமுடிகிறது. ஆக, இருவேறு நிலைகளில் மண்ணுலக மங்கையர், விண்ணுலக மங்கையர் எனத் தனித்தனியே பிரித்து அண்ணலாரின் உலாக் காட்சியினை விவரிக்கும் உமறுப் புலவரின் படைப்பாக்க உத்தி வியப்பளிக்கக் கூடியது.
இவ்வாறு உமறுப்புலவர் தம் சீறாப்புராணத்தில் அண்ணல் நபிகளாரின் மணக்கோல உலாவினை வழக்கான தமிழ் உலா நூற்களின் நிலையில் படைத்துக் காட்டாமல் மரபினை மாற்றம் செய்து இருவேறு நிலைகளில் உலா காணும் மகளிர் உள்ளத்து உணர்வுகளைச் சிறப்புற எடுத்துக்காட்டிப் பண்பார்ந்த இசுலாமிய நெறியைத் தாம் படைக்கும் இலக்கியத்துள்ளும் பொன்னேபோல் போற்றியுள்ள திறம் சீறாப்புராணத்தின் தனிச் சிறப்பாகும். 

திங்கள், 18 ஏப்ரல், 2011

சித்தர் சிவவாக்கியர் பாடல்களில் சமூக மீறல்களின் எதிர்க்குரல் - பகுதி -1

சித்தர் சிவவாக்கியர் பாடல்களில் சமூக மீறல்களின் எதிர்க்குரல்


முனைவர் நா. இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்,
கா.மா.பட்டமேற்படிப்பு மையம்,
புதுச்சேரி-8


தமிழ் இலக்கிய வரலாற்றில் சித்தர்களின் காலம் என்பது சிக்கலான ஒரு விவாதக் கருத்தாகவே இருந்து வருகின்றது. திருமந்திரத்தில் சித்தன் என்ற சொல் காணப்படுவதால், திருமந்திரக் காலமாகிய கி.பி ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னரே சித்தர் மரபு தமிழகத்தில் இருந்திருக்க வேண்டும். திருமூலரே தமிழகத்தின் முதல்சித்தர் என்னும் கருத்து ஆய்வுலகில் வலுப்பெற்றிருக்கிறது. ஆனால் பிற்காலச் சித்தர்களுடைய பாடல்களே இன்று நமக்குக் கிடைத்திருக்கின்றன. பழைய நிகண்டுகள் எவற்றிலும் சித்தர் என்ற சொல் காணப்படாததால் நிகண்டுக் காலமான கி.பி. பதின்மூன்று அல்லது பதினான்காம் நூற்றாண்டுகட்குப் பிறகே தமிழ்ச் சித்தர்கள் தோன்றியிருக்க வேண்டும் எனச் சில அறிஞர்கள் கருதுகின்றனர்.

தமிழ்ச் சித்தர்களில் சிவவாக்கியர், பட்டினத்தார், பத்திரகிரியார் போன்றோர் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் என்றும் அகப்பேய், அழுகணி, இடைக்காடு, கடுவெளி, குதம்பை மற்றும் பாம்பாட்டிச் சித்தர்கள் 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் என்றும் மற்றவர்கள் 16, 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் என்றும் தம் தமிழ் இலக்கிய வரலாறு நூற்றாண்டு வரிசை நூற்களில் வரையறுக்கின்றார் மு.அருணாசலம். திருமூலர் காலத்திற்கும், தமிழ்ச் சித்தர் இலக்கியக் காலத்திற்கும் இடையே ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுக் கால இடைவெளி தென்படுகிறது.

சித்தர்கள் யோகம், மருத்துவம், சோதிடம் போன்ற பலதுறைகளிலும் நூல் செய்துள்ளார்கள். இவர்களில் யோகம் பற்றி நூல் செய்த சித்தர்களே காலத்தால் முற்பட்டவர்கள்;. இவ்வகைச் சித்தர் பாடல்களில் யோகம் குறித்த செய்திகளோடு சமயச் சடங்குகள், உருவ வழிபாடு, சாதிப்பிரிவினை போன்றவற்றிற்கு எதிரான கருத்துக்களும் இடம்பெற்றிருக்கும். சித்தர் பாடல்களில் கவித்துவம் நிறைந்த இலக்கியத் தகுதி பெறுவன இவ்வகைச் சித்தர் பாடல்களே. எனவே சித்தர் பாடல்களில் யோகச் சித்தர் பாடல்களே சித்தர் இலக்கியம் எனும் சிறப்பினைப் பெறுகின்றன.

யோக இலக்கியம் படைத்த சித்தர்களுள் ஒளவையார், சிவவாக்கியர், பட்டினத்தார், பாம்பாட்டிச் சித்தர், கடுவெளிச் சித்தர், இடைக்காட்டுச் சித்தர், அகப்பேய்ச் சித்தர், குதம்பைச் சித்தர், அழுகணிச் சித்தர் ஆகியோர் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்களாவர். (ச.மாடசாமி, பாம்பாட்டிச் சித்தர், ப.7) சமயங்களின் ஆதிக்கத்தில் இருந்தும் சமயச் சடங்குகளின் பிடியில் இருந்தும் மக்களை விடுவிக்கும் பொருட்டு கி.பி. 14, 15 ஆம் நூற்றாண்டுகளில் முகிழ்த்த சித்தர் நெறியே சமூக மீறல்களுக்கான எதிர்க்குரலை அழுத்தமாகப் பதிவு செய்த பெருமைபெற்றது.

சித்தர் பாடல் பதிப்புகள்:

சித்தர்களின் யோக, ஞானப் பாடல்களின் தொகுப்பு பெரிய ஞானக்கோவை, சித்தர் ஞானக்கோவை, சித்தர் பாடல்கள் போன்ற தலைப்புகளில் பல பதிப்புகள் வெளிவந்துள்ளன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பதிப்பிக்கப் பெற்ற வா. சரவண முத்துப் பிள்ளை பதிப்பே முதல் பதிப்பாயிருக்கலாம். ஞானவான்களுக்கு உபயோகமாகும் பொருட்டு சில ஏட்டுப் பிரதிகளிலிருந்தும் அச்சுப் பிரதிகளிலிருந்தும் 44 அரிய நூல்களைச் சேகரித்துத் தொகுக்கப்பெற்றது என்ற குறிப்போடு பெரிய ஞானக்கோவை என்ற இந்நூல் பதிப்பிக்கப்பட்டுள்ளது. வா.சரவண முத்துப்பிள்ளைப் பதிப்பு, வித்யாதர நாகர அச்சுக்கூடப் பதிப்பு, இரத்தின நாயக்கர் அண்டு சன்ஸ் பதிப்பு, எம்.ஆர். அப்பாத்துரைப் பதிப்பு ஆகியன பாடல் தொகுப்பில் ஏறத்தாழ ஒத்திருக்கின்றன. இப்பதிப்புகளில் 34 சித்தர்களின் 44 நூல்கள் மூன்று பாகங்களாகத் தரப்பட்டுள்ளன.

வா.சரவண முத்துப் பிள்ளைப் பதிப்பை அடியொற்றிப் பிற பதிப்புகள் மிகச்சில மாற்றங்களோடு வெளியிடப் பட்டுள்ளன. சரவண முத்துப் பிள்ளைப் பதிப்பில் இடம்பெற்றுள்ள பாடல்கள் சில ஏட்டுப் பிரதிகளிலிருந்தும் அச்சுப் பிரதிகளிலிருந்தும் திரட்டப்பட்டன என்று குறிப்பிடப் பட்டிருந்தாலும் நூலின் முகவுரைப்பாடல், பாடல்கள் திரட்டப்பட்ட விதம்குறித்து வேறு தகவலைத் தெரிவிக்கின்றது. முகவுரைப்பாடலின் அப்பகுதி வருமாறு,

ஆவலோடு இவருரைத்த ஞானம் யாவும்
அவனியுள மனுக்களெலாம் அறிய வென்றே
பாவலரை நாவலரை பண்டி தோரை
பற்பலவாம் பெரியோரைப் பணிந்து கேட்டு
மாவிதமாய்ப் பிழையின்றி திருத்தம் செய்து
மாசறவே அச்சியற்றி மகிழ்ந்த வாறே.


‘பாவலரை நாவலரை பண்டி தோரை பற்பலவாம் பெரியோரைப் பணிந்து கேட்டு’ என்ற முகவுரைப் பகுதி, பாடல்கள் வாய்மொழியாகக் கேட்டுப் பதிப்பிக்கப் பெற்றன என்று தெரிவிக்கின்றது.

மு.அருணாசலம், தமிழிலக்கிய வரலாறு 14 ஆம் நூற்றாண்டு நூலில் சித்தர் பாடல் பதிப்புகள் பற்றிக் குறிப்பிடும் போது சித்தர் ஞானக்கோவை ஆதாரபூர்வமான ஒரு நூலாகக் கொள்ளத்தக்க தன்று என்றும் தொகுப்பில் இடம்பெறும் பாடல்கள் அனைத்தும் சித்தர் இலக்கியங்களாகா என்றும் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பலர் சித்தர்கள் அல்லர் என்றும் இத்தொகுப்பின் காலம் கி.பி. 1875 -1900 என்று கருத வேண்டும் என்றும் மதிப்பிட்டுள்ளார்.
சித்தர் பாடல்களின் நம்பகத்தன்மை குறித்துப் பலரும் ஐயம் எழுப்பியுள்ள நிலையில் இத்தொகுப்புகளுக்கு ஆதாரமாயிருக்கக் கூடும் என்பதான ஓலைச்சுவடிகள் ஏதும் இதுவரை எங்கும் கிடைக்கப் பெறவில்லை என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஓலைச்சுவடிகளோ முந்தைய பதிப்புகளோ அற்ற நிலையில் சித்தர்பாடல் தொகுப்புகள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எவ்வாறு பதிப்பிக்கப் பெற்றன? என்பது ஓர் அவிழ்க்க முடியாத புதிராகவே உள்ளது.

எதிர்க்குரல்களைக் கொண்ட சித்தர் பாடல்களின் உள்ளடக்க வீரியம் காரணமாகச் சித்தர் இலக்கியங்கள் சனாதனக் காப்பாளர்களால் பேணப்படாமல் போயிருக்கலாம் அல்லது அழிக்கப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்க முடிகின்றது. சைவர்கள், சிவவாக்கியர்;, பட்டினத்தார் பாடல்களைத் தேடிப்பிடித்து எரித்திருக்கிறார்கள் (Kamil V. Zvelebil, The Poets of the Powers. P. 10-20) என்ற செய்தியை வரலாற்று ஆதாரத்துடன் அயலகத் தமிழறிஞர் கமில் சுவலபிள் குறிப்பிடுகின்றார் என்று ச.மாடசாமி அவர்கள் தரும் அதிர்ச்சித் தகவல் (ச.மாடசாமி, பாம்பாட்டிச் சித்தர், ப.11) இக்கருத்தை உறுதிசெய்கின்றது. ஐரோப்பிய, இங்கிலாந்து ஆவணக் காப்பகங்களில் தேடினால் ஒருக்கால் சித்தர்பாடல் ஓலைச்சுவடிகள் கிடைக்கலாம்.

தமிழகத்தில் நாட்டுப்புறப் பாடல் தொகுப்பில் ஈடுபடும் கள ஆய்வாளர்களுக்குப் பல சமயங்களில் நாட்டுப்புறப் பாடல்களோடு இணைந்து சித்தர் பாடல்களும் கிடைப்பது வழக்கம். அண்மைக்காலம் வரையிலும் சித்தர் பாடல்கள் வாய்மொழி இலக்கியமாக நாட்டுப்புற மக்களால் பாடப்பட்டு வருவது கண்கூடு. பொருளுணர்ந்தோ, உணராமலோ நாட்டுப்புற மக்களால் வாய்மொழி மரபில் காப்பாற்றப்பட்டு வந்த சித்தர் பாடல்களே இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் அச்சுவடிவம் பெற்றன என்று முடிவு செய்வதில் பிழையில்லை. சித்தர் பாடல்களின் சிந்து, நொண்டிச் சிந்து, கும்மி, ஆனந்தக் கும்மி, கண்ணி முதலான வடிவங்கள் இதற்குத் துணை புரிந்திருக்கின்றன. சனாதனிகளின் எதிர்ப்புகளைக் கருத்தில் கொண்டே சித்தர்கள் வாய்மொழி மரபில் நின்று நிலைக்கத் தக்கதாக இத்தகு நாட்டுப்புறச் சந்த மெட்டுகளைக் கையாண்டிருப்பார்கள்.

சித்தர் சிவவாக்கியர்:

இதுவரை வெளிவந்துள்ள அனைத்துச் சித்தர் பாடல் தொகுப்புகளிலும் தவறாமல் இடம்பெறும் சித்தர் சிவவாக்கியர் ஆவார். கி.பி. ஆறாம் நூற்றாண்டில் தோன்றிய திருமூலருக்குப் பின்னர் சற்றேறக் குறைய 800 ஆண்டுக்கால இடைவெளியில் சித்தர் சிவவாக்கியர் தோன்றுகின்றார். சரவண முத்துப் பிள்ளை அவர்களின் பெரிய ஞானக் கோவை பதிப்பின் முகவுரைப் பாடல் சித்தர்களின் பட்டியலைப் பாடல்வடிவில் தரும்போது,

திட்டமுள ஆரியநில் லாது நோக்கச்
செய்தசிவ வாக்கியந்தான் நூலே ஆதி
பட்டினத்தார் பாடலொடு புலம்பல் ஞானம்
பத்திரகிரி அருட்புலம்பல் பாம்பாட் டீசர் .. ..


என்று பட்டியலைத் தொடருகின்றது. சிவவாக்கியந்தான் நூலே ஆதி என்ற குறிப்பைக் கொண்டு, கி.பி. 14 ஆம் நூற்றாண்டளவில் தோற்றம் பெற்ற தமிழ்ச் சித்தர் மரபு சிவவாக்கியரிலிருந்தே தொடங்குகின்றது எனலாம். சிவவாக்கியர், பூமியில் பிறக்கையில் சிவ என்று சொல்லிக்கொண்டு விழுந்தபடியால் இவருக்கு இப்பெயர் இடப்பட்டது என்று அபிதான சிந்தாமணி பெயர்க்காரணத்தைக் குறிப்பிடுகின்றது. அது பொருந்துமாறில்லை. சிவவாக்கியம் என்ற நூலைச் செய்தவர் என்ற காரணம் பற்றி அவர் சிவவாக்கியர் என்றழைக்கப் பட்டார் எனக்கொள்வதே பொருத்தமுடையதாகும். தாம் இயற்றிய நூலின் பெயரை அவரே தம் காப்புச் செய்யுளில் சிவவாக்கியம் எனப் பதிவு செய்கின்றார்.

அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்
ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்
சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம்
(சிவ.வா. காப்பு)

என்பது அக்காப்புச் செய்யுள். சிவவாக்கியரின் வாழ்க்கைக் குறிப்புகளாக அபிதான சிந்தாமணி, சாம்பசிவம் பிள்ளையின் மூலிகை அகராதி, தமிழ்ப் புலவர் அகராதி, பாவலர் சரித்திர தீபகம் முதலான நூல்களின் வழி நமக்குக் கிடைக்கும் தகவல்கள் எதுவும் வரலாற்றுத் தகவல்களாக இல்லாமல் பௌரானிகத் தன்மைகளோடு உள்ளன. சிவவாக்கியரும் திருமழிசை ஆழ்வாரும் ஒருவரே என்று ‘குரு பரம்பரை பிரபாவம் பன்னீராயிரம்’ குறிப்பிடுகின்றது. மொத்தத்தில் சிவவாக்கியர் வாழ்க்கை குறித்து ஆதாரபூர்வமான தகவல்கள் ஒன்றுகூடக் கிடைக்கப்பெறவில்லை.

சிவவாக்கியம் நூலின் அகச் சான்றுகளைக் கொண்டு அவரைச் சைவர் என்றும் வைணவர் என்றும் தனித்தனியே சொல்லுவாருண்டு. சிவவாக்கியர் சமயச் சிமிழ்களுக்குள் அடைபடாத சமரச யோகி என்பதே உண்மைநிலை. சிவவாக்கியர் காலத்தை வரையறை செய்யும் மு.அருணாசலம் அகப் புறச் சான்றுகளின் துணைக்கொண்டு சிவவாக்கியர் வாழ்ந்த காலம் 14 ஆம் நூற்றாண்டின் இறுதி, 15 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் என்று முடிவு செய்கின்றார். தமிழக வரலாற்றில் சிவவாக்கியர் வாழ்ந்த இந்தக் காலப்பகுதியே, தமிழகம் சமய, சமூக அரசியல் சூழல்களில் பல புதிய மாற்றங்களை எதிர்கொண்ட காலமாகும்.

சிவவாக்கியர் காலம்:

தமிழ்ச் சித்தர்களில் சிவவாக்கியர் பலநிலைகளில் தனித்தன்மை வாய்ந்தவர். நிறுவன மயமாக்கப்பட்ட சமயத்தை, சமயச் சடங்காசாரங்களை முழுமூச்சோடு எதிர்ப்பதில் அவர் முனைந்து நின்றார். அவர் காலத்தில் புனிதத்தன்மை வாய்ந்தது என்று கருதப்பட்ட அனைத்து அம்சங்களையும் அவர் துச்சமென நிராகரித்தார். தமது கண்டனங்களில் மென்மையான அணுகுமுறையை அவர் வேண்டுமென்றே தவிர்த்தார். கறாரான தமது விமர்சனங்களால் பார்ப்பனக் கருத்தாக்கங்களை மட்டுமின்றி பார்ப்பனர்களையும் நேரடியாகத் தாக்கினார். இத்தகு கூர்மையான விமர்சன எதிர்க்குரலைப் பதிவுசெய்வதில் சிவவாக்கியருக்குத் தூண்டுகோலாய் அமைந்த சமூகச்சூழல் குறித்து விவாதிப்பது இங்கு அவசியமாகிறது.

பிற்காலப் பாண்டிய மன்னர்களின் பங்காளிச் சண்டையால் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டிலேயே தமிழகத்துக்கு அழைத்து வரப்பட்ட இசுலாம், சிவவாக்கியர் காலத்தில் தமிழகத்தில் நன்கு அறிமுகமாயிருந்தது. நிறுவன மயமாகிப் போன சமயங்களின் பேரால் நிகழ்ந்துவரும் சமூகக் கொடுமைகளின் உக்கிரமே சிவவாக்கியரின் உரத்த எதிர்க் குரலுக்கு அடிப்படை என்றாலும் இசுலாத்தின் வருகை தந்த விழிப்புணர்வும் இப்புதிய போக்கிற்குப் பங்காற்றியிருக்கிறது.

சித்தர் சிவவாக்கியர் பாடல்களில் சமூக மீறல்களின் எதிர்க்குரல் - பகுதி -2

சிவவாக்கியரின் எதிர்க்குரல்

முனைவர் நா. இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்,
கா.மா.பட்டமேற்படிப்பு மையம்,
புதுச்சேரி-8

சிவவாக்கியரின் எதிர்க்குரல்:
சிவவாக்கியர் எதிர்க்குரலின் மையப் புள்ளியாக இருப்பது வைதீக எதிர்ப்பே. இந்தியத் தத்துவ மரபில் வைதீக எதிர்ப்பு என்பது வைதீகத்தோடே உடன்பிறந்தது. வைதீகம், வைதீக எதிர்ப்பு என்ற இருமைகளைக் கொண்டே இந்தியத் தத்துவம் இயங்குகின்றது என்றால் மிகையில்லை. சிவவாக்கியர் வேதங்கள், மந்திரங்கள், யாகசாலை அனைத்தையும் கேள்விக்குட்படுத்தி, இவையாவும் பயனற்றவை என்று ஒதுக்கித் தள்ளுகிறார்.

சாமம் நாலுவேதமும் சகல சாத்திரங்களும்
சேமமாக ஓதினும் சிவனை நீர் அறிகிலீர்
(சி.வா. 311)

இட்டகுண்டம் ஏதடா? இருக்கு வேதம் ஏதடா?
சுட்டமண் கலத்திலே சுற்றுநூல்கள் ஏதடா?
முட்டிநின்ற தூணிலே முளைத்தெழுந்த சோதியைப்
பற்றிநின்றது ஏதடா பட்டநாத பட்டரே.
(சி.வா. 312)

இப்படிப் பல பாடல்களில் வேதத்தையும் வேதமோதும் பிராமணர்களையும் சாடுகின்ற சிவவாக்கியர் வேள்விக் குண்டத்தையும் அதற்கு ஆதாரமான ரிக்வேதத்தையும் மண்கலத்தில் நூலைச்சுற்றி பூரணகும்பம் என்று ஆராதிக்கும் கலத்தையும் கேலிசெய்து இத்தகு வேத வேள்விமுறைகள் பயனற்றவை என்கிறார். சேமமாக ஓதினும் என்பதிலுள்ள N~மம் என்பது பார்ப்பனர்களின் பேச்சு மொழிச்சொல். சிவவாக்கியர் பகடிக்காக இச்சொல்லைப் பயன்படுத்துகின்றார்.

வேதங்கள் மட்டுமல்ல இறைவழிபாடு என்ற பெயரில் நிகழ்த்தப்படும் பூசை மற்றும் மந்திர உச்சாடனங்களும் சிவவாக்கியரின் கண்டனத்துக்குள்ளாகின்றன.

நட்டகல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றிவந்து முணமுணென்று சொல்லுமந்திரம் ஏதடா?
நட்டகல்லும் பேசுமோ! நாதன்உள் இருக்கையில்!
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
(சி.வா. 494)

இப்பாடலில் வடமொழி அர்ச்சனையை முணுமுணு வென்று சொல்லும் மந்திரம் என்று அவர் இகழ்ந்துரைப்பது குறிப்பிடத்தக்கது. சிவவாக்கியரைப் பொறுத்தமட்டில் இறைவழிபாடு, பூசனை மற்றும் பக்தி மார்க்கங்கள் மட்டுமல்ல மூர்த்தங்கள் என மதிக்கப்படும் இறை உருவங்களும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகின்றன. இறை உருக்களை நட்டகல் என்றும் உற்சவ மூர்த்திகளைச் செம்பு என்றும் அவர் குறிப்பிடுகின்றார். ஆலய வழிபாட்டுக்கு முதன்மை தரும் சைவ, வைணவ மதங்களைச் சாடும் போக்கில் கோயில்கள், குளங்கள், திருவிழாக்கள், தேரோட்டங்கள் அனைத்தும் பயனற்ற வெற்று ஆரவாரங்களே, இறையனுபவம் இவைகளில் இல்லை என வன்மையாகச் சாடுகின்றார்.

ஊரிலுள்ள மனிதர்காள் ஒருமனதாய்க் கூடியே
தேரிலே வடத்தைவிட்டு செம்பைவைத்து இழுக்கிறீர்
ஆரினாலும் அறியொணாத ஆதிசித்த நாதரை
போரிலான மனிதர்பண்ணும் புரளிபாரும் பாருமே.
(சி.வா. 242)


கோயிலாவது ஏதடா? குளங்களாவது ஏதடா?
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே!
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே!
ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே.
(சி.வா. 34)

ஊரே கூடி நடத்தும் தேர்த் திருவிழாவை மனிதர் பண்ணும் புரளி என்று ஒதுக்கித் தள்ளும் சிவவாக்கியரின் துணிச்சல் உண்மையிலேயே வியப்புக்குரியது.

வைதீகத்தை எதிர்ப்பதென்பது உண்மையில் பார்ப்பனீயத்தை, ஆரியத்தை எதிர்ப்பதே ஆகும். பார்ப்பனீயக் கருத்தாக்கங்களை எதிர்க்கும் சிவவாக்கியர் அத்தோடு நிறுத்தாமல் நேரடியாகப் பார்ப்பனர்களையே விசாரணைக்கு உட்படுத்துகின்றார். பார்ப்பனர்களின் தோற்றம், பூணூல், அனுஷ்டானங்கள் எனப்படும் வாழ்க்கை முறைகள் அனைத்துமே சிவவாக்கியரால் கேலிக்குள்ளாக்கப்படுகின்றன.

பிறந்தபோது கோவணம் இலங்குநூல் குடுமியும்
பிறந்ததுடன் பிறந்ததோ, பிறங்குநூல் சடங்கெலாம்
மறந்தநாலு வேதமும் மனத்துளே உதித்ததோ?
நிலம்பிளந்து வான்இடிந்து நின்றதுஎன்ன வல்லீரே?
(சி.வா. 192)

இப்பாடலில் பார்ப்பனர்களின் பூணூல், குடுமியைச் சிவவாக்கியர் கேலி செய்வதென்பது அவர் வாழ்ந்த (இன்றைக்கும் தொடரும்) சனாதனச் சமூகத்தில் எத்தகைய சிக்கலான செயல் என்பதை நாம் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். நிலம் பிளந்து வான்இடிந்து நின்றது என்ன? என்ற அவரின் வினாவில் வெளிப்படும், ஆகாயத்துக்கும் பூமிக்குமாக உயர்ந்து நிற்கும் பார்ப்பனர் என்ற வருணனை, சிவவாக்கியரின் நயமான நையாண்டிக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

மீன்இறைச்சி தின்றதில்லை அன்றும்இன்றும் வேதியர்
மீன்இருக்கும் நீரலோ மூழ்வதும் குடிப்பதும்
மான்இறைச்சி தின்றதில்லை அன்றும்இன்றும் வேதியர்,
மான்உரித்த தோலலோ மார்புநூல் அணிவதும்.
(சி.வா. 157)

அசைவ உணவு உண்ணும் பிற வருணத்தாரை விட, சைவ உணவு உண்ணும் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று இறுமாந்து திரியும் பார்ப்பனர்களின் உணவு முறையையே கேள்விக்கு உள்ளாக்குகின்றார் சிவவாக்கியர். மீன்கள் வாழும் நீரைக் குடிப்பதும் குளிப்பதும் மான்தோல் அணிவதும் எந்தவகையில் சைவத்தில் சேரும் என்பது அவரின் வினா. இந்த சைவ உணவுப் பிரச்சனையில் பார்ப்பனர்களை மட்டுமல்ல சைவ வேளாளர்களையும் கிண்டல் செய்கிறார் சிவவாக்கியர். உடம்பை வளர்க்க நீங்கள் குடிக்கும் பால் உதிரம் அல்லவா? அது எப்படிச் சைவமாயிற்று, சைவ மூடர்களே! என்று கேள்விக்கணை தொடுக்கிறார்.

உதிரமான பால்குடித்து ஒக்கநீர் வளர்ந்ததும்
இதரமாய் இருந்ததுஒன்று இரண்டுபட்டது என்னலாம்
மதிரமாக விட்டதேது மாங்கிசப்புலால் அதென்?
சதிரமாய் வளர்ந்ததேது சைவரான மூடரே?
(சி.வா. 148)

சிவவாக்கியர் காலத்து ஆதிக்கச் சாதியரான பார்ப்பனர் மற்றும் சைவ வேளாளர்களை கேலியும் கிண்டலும் செய்யும் துணிச்சலுக்குப் பக்க பலமாய் அவர் அமைத்துக் கொண்ட தர்க்கம், வருணாசிரம தர்மம் என்ற ஆரிய சூழ்ச்சியின் அடிப்படையையே தகர்க்கும் சாதி எதிர்ப்பே. பிறப்பால் அனைவரும் ஒன்றே. உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பேதம் எங்கே இருக்கிறது? மனிதர்களின் எலும்பு, தோல், சதைகளில் எங்கேனும் தாழ்ந்த சாதி உயர்ந்தசாதி என்ற அடையாளம் இருக்கின்றதா? பறைச்சியோடு நுகரும் உடலின்பம் பார்ப்பனத்தியோடு நுகரும் உடலின்பம் இரண்டும் வேறு வேறா? என்று உரத்துக் குரலெழுப்பும் சிவவாக்கியரின் குரல் காலத்தைக் கடந்து எல்லா நூற்றாண்டுகளுக்கும் எதிரொலிக்கும் ஆவேசக் குரலாகும்.

பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா?
இறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ?
பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ?
பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாரும் உம்முளே!
(சி.வா. 39)

தமிழ்ச் சமூகத்தைத் தொழுநோய் போல் பீடித்திருக்கும் சாதி அமைப்பைத் தகர்த்தெறியக் கூடிய எதிர்க்குரலை அழுத்தமாகத் தம் சிவவாக்கியத்தில் பதிவு செய்யும் சிவவாக்கியரின் குரல், பின்னர் அகப்பேய்ச் சித்தர், கடுவெளிச் சித்தர், பாம்பாட்டிச் சித்தர் முதலான சித்தர்களின் குரல்களாகத் தொடர்ந்து ஒலிக்கின்றது. வருணாசிரம எதிர்ப்பில் சித்தர்களிடம் இருபதாம் நூற்றாண்டுக்குரிய சமுதாய விழிப்புணர்வைக் காணும் கலாநிதி க.கைலாசபதி சித்தர்களைக் கிளர்ச்சியாளர் என்றழைக்கின்றார். (ஒப்பியல் இலக்கியம், ப.189)

அவர் தம் எதிர்க்குரலை சாதீய எதிர்ப்போடு நிறுத்தாமல் அதன் ஆணிவேராயிருக்கின்ற சமய நிறுவனங்கள், பார்ப்பனீயம், வைதீகம் இவற்றை வேரறுக்கும் வகையில் கோயில் வழிபாட்டை அடியோடு வெறுத்தார், புனிதங்களை விசாரணைக்கு உட்படுத்தினார், எச்சில், தீட்டு இவைகள் குறித்த சமூக மதிப்பீடுகளை நோக்கி எதிர்க்கேள்வி கேட்டார்.

ஓதுகின்ற வேதம்எச்சில் உள்ளமந்திரங்கள் எச்சில்;
போதகங்க ளானஎச்சில் பூதலங்கள் ஏழும்எச்சில்;
மாதிருந்த விந்துஎச்சில் மதியும் எச்சில் ஒளியும்எச்சில்;
ஏதில்எச்சில் இல்லதில்லை இல்லைஇல்லை இல்லையே!
(சி.வா. 41)

ஐயிரண்டு திங்களாய் அடங்கிநின்ற தூமைதான்;
கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டும் ஆகியே
மெய்திரண்டு சத்தமாய் விளங்கிரச கந்தமும்
துய்யகாயம் ஆனதும் சொல்லுகின்ற தூமையே.
(சி.வா. 205)

மேலே காட்டப்பட்ட இரண்டு பாடல்களும் எச்சில், தீட்டு எனப்படும் தூமை குறித்து எழுப்பும் எதிர்கேள்விகளின் நியாயத்தைக் கூர்ந்து கவனித்தல் வேண்டும். இப்படிச் சிவவாக்கியரின் பல பாடல்கள் நாசூக்கற்ற வெளிப்படையான வார்த்தைகளால் ஒழுக்கவாதிகளை அதிர்ச்சியடைய வைக்கின்றன.

சித்தர் சிவவாக்கியர் பாடல்களில் சமூக மீறல்களின் எதிர்க்குரல் - பகுதி 3

சமூக மீறலும் எதிர்க்குரலும்

முனைவர் நா. இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்,
கா.மா.பட்டமேற்படிப்பு மையம்,
புதுச்சேரி-8

சமூக மீறலும் எதிர்க்குரலும்:

சித்தர் இலக்கியக் காலப்பகுதி என்று அடையாளம் காணப்படும் 14 முதல் 16 ஆம் நூற்றாண்டுக் காலங்களில் தமிழ்ச் சமூகத்தில் நிறுவனமயப் படுத்தப்பட்டு போன சமயமும் ஆலயங்களும் பார்ப்பன மேலாதிக்கத்தின் பிடியில் இருந்தன. மன்னர்கள் தொடர்ந்து கோயில்களுக்கும் மடங்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் நிலங்களைத் தானமளித்து வந்தனர். பெரும்பான்மையான நிலங்கள் பார்ப்பனர்களிடமும் உயர்சாதி இந்துக்களான வேளாளர்களிடமுமே குவிந்திருந்தன. பார்ப்பனர்கள் வைதீகத்தின் பேரால் சமூகத்தை வருணங்களாகப் பிளவுபடுத்தி பலவீனப்படுத்தி வைத்திருந்தனர். ஆட்சியாளர்களால் வடக்கிலிருந்தும் ஆந்திர, கர்நாடகப் பகுதிகளிலிருந்தும் பார்ப்பனர்கள் தமிழகத்துக்குக் கொண்டு வரப்பட்டு குடியமர்த்தப்பட்டதோடு இறையிலி நிலங்களும் வழங்கப்பட்டன. பார்ப்பனர்கள் சமயம், சமூகம், அரசியல், பொருள்நிலை அனைத்திலும் உயர்ந்த இடத்தைப் பெற்றிருந்தனர். அடுத்த நிலையில் வேளாளர்கள் இருந்தனர். பிற்படுத்தப்பட்ட சூத்திரர்களும் பஞ்சமர்களும் சொல்லொணாக் கொடுமைகளுக்கு ஆளாயினர்.

இத்தகு நெருக்கடியான சூழலில் தமிழகத்தில் இசுலாமும் கிருத்துவமும் நுழைந்தன. இசுலாத்தின் நுழைவு வைதீகக் காப்பாளர்களுக்கு உவப்பைத் தரவில்லை. மீண்டும் வைதீகத்தையும் வருணாசிரமத்தையும் தூக்கி நிறுத்தும் முயற்சியின் உச்சக் கட்டத்தில்தான் வைதீகம் மற்றும் வருணாசிரம எதிர்ப்பு ஆயுதங்களுடன் களத்தில் இறங்கினர் தமிழ்ச் சித்தர்கள். சிவவாக்கியரின் வருகை இத்தகு சமூக மீறலோடுதான் தொடங்குகின்றது. சித்தர்களின் ஆன்மீகப் பயணம் திருமூலர், ஒளவையார் போன்றவர்களின் வழியில் யோகமார்க்கத்தோடு தொடங்கினாலும் சித்தர்களின் சமூகப் பயணம் புத்தம் புதிய தளத்தில் கொஞ்சம் சமண, பௌத்த மிச்ச சொச்சங்களோடு வீறுநடை போட்டது.

தமிழகத்தின் இத்தகு நெருக்கடியான சூழல் வைதீகத்திற்கும் சனாதன தர்மத்திற்கும் எதிராகக் குரலெழுப்பும் துணிவைச் சித்தர்களுக்கு மட்டுமில்லாமல் வேறு சிலருக்கும் தந்திருக்கின்றது. சாதீயத்தையும் தீண்டாமையையும் வன்மையாக விமர்சித்து எழுதப்பட்ட கபிலரகவல் மற்றும் சாதியத்தினால், தீண்டாமையினால் கொடுமையாகப் பாதிக்கப்பட்ட உத்திரநல்லூர் நங்கை என்ற பெண்பாற் புலவர் எழுதிய பாய்ச்சலூர்ப் பதிகம் முதலான சாதி எதிர்ப்பு இலக்கியங்கள் தோற்றம் பெற்றது இக்காலத்தில்தான். இரண்டு நூல்களுமே வெளிப்படையான பார்ப்பன எதிர்ப்பைத் தர்க்கங்களோடு பதிவு செய்கின்றன.

ஊருடன் பார்ப்பார் கூடி உயர்ந்ததோர் சாலை கட்டி
நீரிலே மூழ்கி வந்து நெருப்பினில் நெய்யைத் தூவி
கார்வயல் தவளைபோல கலங்கிய உங்கள் வேதம்
பாரைவிட்டு அகன்றதேனோ? பாய்ச்சலூர் கிராமத்தாரே


சந்தனம் அகிலும் வேம்பும் தனித்தனி வாசம் வீசும்
அந்தணர் தீயில் வீழ்ந்தால் அதன் மணம் வேறதாமோ?
செந்தலைப் புலையன் வீழ்ந்தால் தீமணம் வேறதாமோ?
பந்தமும் தீயும் வேறோ பாய்ச்சலூர் கிராமத்தாரே
(பாய்ச்சலூர்ப் பதிகம்)

கபிலரகவல், பாய்ச்சலூர்ப் பதிகம் முதலான இலக்கியங்களில் வெளிப்படும் குரலின் முழுமை பெற்ற வடிவமே சித்தர்களின் குரல் என்று கொள்வதில் பிழையில்லை.
சாதியமைப்புக்கு எதிரான சித்தர்களின் கண்டனக் குரல்கள் ஒரு சமூகச் சீர்திருத்தக் குரலாக மட்டும் ஒலிக்கவில்லை. மாறாகச் சாதீய, சனாதன ஒடுக்கு முறைகளுக்கு ஆளான தாழ்த்தப்பட்ட சமூகத்தின் புரட்சிகர எதிர்விளைவாகவே நினைக்கத் தோன்றுகிறது.

சிவவாக்கியர் பாடல்களில் இந்த அடையாளங்கள் இன்னும் அழுத்தமாகவே வெளிப்படுகின்றன. “பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா? இறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ?” என்ற சிவவாக்கியரின் குரலில் வெளிப்படும் ஆவேசம், சாதீய ஒடுக்குதலில் பீறிட்டுக் கிளம்பும் தலித்திய எதிர்க்குரலன்றி வேறென்ன?.

அதேபோல் பார்ப்பனர்களின் சாதீய அடையாளத் தோற்றம் குறித்து “பிறந்தபோது கோவணம் இலங்குநூல் குடுமியும் பிறந்ததுடன் பிறந்ததோ” என்று வினா எழுப்பும் பகுதியில் பார்ப்பனர்களின் கோவணம், குடுமி, பூணூல் முதலான அவர்களின் புனித அடையாளங்களை விசாரணைக்குட்படுத்துவது நேரடியான எதிர்த் தாக்குதலாக அமைந்துள்ளமை வெளிப்படை. சிவவாக்கியரின் கவிதைகளில் வெளிப்படும் புனைவற்ற வெளிப்படையான மொழி அதாவது உயர்சாதினரால் நாசூக்கற்றதாகக் கருதப்படும் தலித்தியச் சொல்லாடல்கள் இக்கருத்தை மேலும் உறுதிப்படுத்தும்.

சித்தர்; சிவவாக்கியர் பாடல்களில் வெளிப்படும் சமூகமீறல்களின் எதிர்க்குரலில் வெடித்துக் கிளம்புவது ஆதிக்கச் சாதிகளுக்கெதிரான ஒரு தலித்தியப் புரட்சிக்குரலே என்று கருத வாய்ப்புள்ளது.


துணைநின்ற நூல்கள்:
1. அருணன், தமிழரின் தத்துவ மரபு-இரண்டாம் தொகுதி, 2008
2. மு.அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு-14 ஆம் நூற்றாண்டு,
3. க.கைலாசபதி, ஒப்பியல் இலக்கியம், 1978
4. வா. சரவண முத்துப்பிள்ளை, பெரிய ஞானக்கோவை, (ஆ.இ)
5. க.நாராயணன், சித்தர் சிவவாக்கியர், 2003
6. ச.மாடசாமி, பாம்பாட்டிச் சித்தர், 1980

வெள்ளி, 28 ஜனவரி, 2011

தென்மொழி இதழல்ல இயக்கம் - பெருஞ்சித்திரனாரின் தென்மொழி இயக்கம் -பகுதி-2

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

பாவலரேறுவும் தென்மொழியும்:

தென்மொழி 1963 ஆம் ஆண்டில் மீண்டும் முழுவேகத்தோடு வெளிவரத் தொடங்கிய காலம்தொட்டே பாவலரேறு அவர்கள் தென்மொழியையும் தென்மொழி அன்பர்களையும், மொழியையும் நாட்டையும் ஆளாமல் துஞ்சுவதில்லை என்ற இதழின் நோக்கத்திற்கு ஆற்றுப்படுத்தும் முயல்வில் இதழினை இயக்கமாக்கும் பணியில் முனைப்பு காட்டி வந்தார்கள். அறிவுக் கொளுத்தல்களும் உணர்வூட்டல்களும் மட்டும் போதா, அவை செயற்பாடு எய்தவேண்டுமெனில் ஓர் இயக்கம் இன்றியமையாதது என்னும் நிலையில் இதழின் முதலாண்டிலேயே தென்மொழி இயக்கம் குறித்த ஓர் அறிவிப்பினை இதழில் வெளியிட்டார்கள்.

“மொழி, இலக்கிய, இன, வரலாற்றுப் பாதுகாப்பிற்காக மட்டுமின்றி, மக்கள் வாழ்வியற் கூறுபாடுகளை ஆங்காங்கு அறிந்து துணைநிற்கவும், அவர்தாம் அல்வழிச் செல்லுங்கால் நல்வழிப்படுத்தவும், செவ்வழிப் போவார்க்கு அவ்வழி உதவவும் குல, சமய, அரசுச் சார்பின்றி ஒரு தனித்தமிழ்க் கழகம் வேண்டுவதாயிற்று. இதன் கொள்கைகளை ஒருவாறு வகுத்துரைப்போமாயின், தமிழ்க் குலமும், தமிழர் சமயமும், தமிழ் அரசும் நிறுவுகின்ற முயல்வே ஆம் எனக்கொள்க. இத்தகைய உயர்தனிச் செம்பொருட் கழகமே, நாம் நிறுவப் புகும் தென்மொழிக் கழகம்.”

தென்மொழிக் கழகத்தின் நோக்கங்களாக ஐயா அவர்கள் வரையறுத்துள்ள தமிழ்க் குலமும், தமிழர் சமயமும், தமிழ் அரசும் நிறுவுதல் என்ற மூன்று முதன்மைத் திட்டங்களும்தான் பாவலரேறு தமிழுலகிற்கு வகுத்தளித்த சமூக அரசியல் கோட்பாடு என்று வரையறுப்பது சாலப் பொருந்தும். பிற தமிழ் இயக்கங்களிலிருந்தும், திராவிட இயக்கங்களிலிருந்தும் ஐயாவின் தென்மொழி இயக்கம் வேறுபடும் மையப்புள்ளி இதுவே. இம்மையப் புள்ளியிலிருந்தே இருபதாம் நூற்றாண்டுத் தமிழகத்தின் சமூக, அரசியல் இயக்கங்களை ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் பார்க்க இயலும்.

1916, தமிழகத்தின் சமூக, அரசியல் வரலாற்றில் முகாமையான பாத்திரம் வகித்த இரண்டு இயக்கங்கள் தோற்றம் பெற்ற ஆண்டு. முதல் இயக்கம், மறைமலையடிகளாரின் தனித்தமிழ் இயக்கம், இரண்டாவது இயக்கம், நீதிக் கட்சி என்றழைக்கப்பட்ட தென்னிந்திய நல உரிமைச்சங்கம். இந்த இரண்டு இயக்கங்களுமே தமிழ்த் தேசியக் கருத்தாக்கங்களுக்குப் பேருதவி புரிந்தவை. தனித்தமிழ் இயக்கம் மொழித்துறையில் வடமொழியின் ஆதிக்கத்தை எதிர்த்தும், தென்னிந்திய நலஉரிமைச் சங்கம். சமூகத்துறையில் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை எதிர்த்தும் தொடங்கப்பட்ட இயக்கங்கள். பாவலரேறுவின் தென்மொழி இயக்கம் மொழித்துறை, சமூகத்துறை ஆகிய இரண்டு நிலைகளிலும் வடவர்களின், பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய இயக்கம்.

மறைமலையடிகளாரின் தனித்தமிழ் இயக்கமோ வேளாளச் சார்பும் சைவ சமயச் சார்பும் உடையது. பாவலரேறு ஐயாவின் தென்மொழி இயக்கமோ தமிழ்க் குலம், தமிழர் சமயம் எனச் சாதி, மத வேறுபாடுகளற்ற பொதுமையை வேண்டிப் போராடிய இயக்கம்.
நீதிக்கட்சி மற்றும் அதன் தொடர்ச்சியில் உருவான பெரியாரின் திராவிட இயக்கங்கள் போன்றவற்றிற்குச் சாதி, மத வேறுபாடுகளற்ற பொதுமை என்ற சிந்தனை யிருந்தது என்றாலும் தமிழ் அரசு நிறுவுதல் என்ற நோக்கம் அவற்றுக்கில்லை. தமிழ்மொழி, தமிழினம், தமிழ்நிலம் என்ற நிலையிலிருந்து மாறுபட்டுத் திராவிடம் என்ற கற்பனைக் கருத்தாக்கத்தால் இந்த வகை இயக்கங்களுக்குத் தமிழ்த் தேசிய ஓர்மை ஏற்படவில்லை. ஐயாவின் தென்மொழி இயக்கமோ தனித்தமிழ்நாடு ஒன்றே அனைத்துச் சிக்கலகளுக்குமான ஒரே தீர்வு என்ற கொள்கையில் உறுதிப்பாட்டுடன் இருந்தது.

“தமிழினம் தலைதூக்கவும் தமிழ்நாடு தன்னிறைவுறவும் தமிழ்மொழி தூய்மையுறவும் வேண்டும். இதற்குத் தடையாக இருப்பது பார்ப்பனியமும் இந்து மதமும். இவற்றுக்கு அடிப்படையாக இருப்பது இந்திய ஒருமைப்பாடு. எனவே நமது தலையாய அரசியல் பணி இதனைச் சிதைப்பதே. தமிழக விடுதலையே நமது மூச்சு என்பது அவரது அரசியல் தருக்கம். தமிழின விடுதலையின் மூன்று பெரும் எதிரிகளாக அவர் இந்து மதத்தையும், பார்ப்பனியத்தையும், இந்திய ஒற்றுமையையும் குறிப்பிடுவது ஆழ்ந்து சிந்திக்கற்பாலது. பிற தனித்தமிழ் இயக்கத்தினரிடமிருந்தும், பிற தனிநாட்டு இயக்கத்தினரிடமிருந்தும் பெருஞ்சித்திரனார் வேறுபட்டு நிற்கும் மிக முகாமையான புள்ளி இது.” (அ.மார்க்சு, பாவலரேறு பெருஞ்சித்தினார் வாழ்க்கைக் குறிப்புகள், ப.173-74)
மேலே இடம்பெற்றுள்ள மேற்கோளில் மார்க்சு அவர்கள் பெருஞ்சித்திரனார் வேறுபட்டு நிற்கும் புள்ளி என்று குறிப்பிடும் பகுதிதான் தென்மொழி இயக்கத்தின் தனித்தன்மை வாய்ந்த பகுதி.

ஞாயிறு, 23 ஜனவரி, 2011

பெருஞ்சித்திரனாரின் தென்மொழி இயக்கம்

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

தென்மொழி இயக்கம்:

பெருஞ்சித்திரனாரின் தமிழ் இயக்க மற்றும் அரசியல் பணியில் பெரும் பங்காற்றியது அவரின் தென்மொழி இதழே. இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தமிழன்பர்களின் போர்வாளாக இவ்விதழ் விளங்கியது. முதல் இதழ் 1-8-1959 இல் வெளியானது. இதழின் குறிக்கோள் முழக்கமாகப் பின்வரும் பாடல் ஒவ்வொரு இதழிலும் இடம்பெறுவது வழக்கம்.

கெஞ்சுவதில்லை பிறர்பால்! அவர்செய் கேட்டினுக்கும்
அஞ்சுவதில்லை! மொழியையும் நாட்டையும் ஆளாமல்
துஞ்சுவதில்லை! எனவே தமிழர் தோளெழுந்தால்
எஞ்சுவதில்லை! புவியில் எவரும் எதிர் நின்றே!


தென்மொழி இதழ் தன் குறிக்கோளில் ஒருபோதும் பின்வாங்கியதும் இல்லை, சமரசம் செய்து கொண்டதுமில்லை. தென்மொழி ஓர் இதழன்று, ஓர் இயக்கம் என்று பாவலரேறு அவர்களே குறிப்பிட்டதற்கேற்ப இதழின் கட்டுரைகளில் பாடல்களில் எப்பொழுதும் தமிழுணர்வு கொழுந்து விட்டெரியும்.

1960 களின் தொடக்கத்தில் தென்மொழி முழுவீச்சில் செயல்படத் தொடங்கிய காலத்தில் தமிழின உணர்வுடைய ஒவ்வொரு தமிழனும் தென்மொழியை வாசிப்பதில் செம்மாப்பு எய்திய நிலை இருந்தது. தமிழுணர்வின் அடையாளச் சின்னமாகத் தென்மொழி அக்காலங்களில் விளங்கியது. பாவாணர், பாவலரேறு ஆகியோரின் படைப்புகள் தனித்தமிழ் உணர்வை ஊட்டியதோடு நில்லாமல் மொழி, இன, நில மீட்சிக்கான எழுச்சியை விதைப்பனவாகவும் விளங்கின. 1965 இல் தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய இந்தி எதிர்ப்பு மொழிப்போர் நடைபெற்றது. இம்மொழிப் போருக்கான உந்துசக்தியாக இருந்து செயலாற்றிய பெருமை தென்மொழிக்கு உண்டு.

தென்மொழியின் மைய நோக்கம் தமிழ்நாட்டு விடுதலையே என்பதனை அதன் ஒவ்வொரு இதழும் நினைவூட்டிக் கொண்டே இருக்கும். தென்மொழி இரண்டாமாண்டின் முதல் இதழில் தென்மொழியின் இம்மைய நோக்கத்தை வலியுறுத்தி ஐயா எழுதிய ஆசிரிய உரையின் ஒருபகுதி பின் வருமாறு,

நாட்டு விடுதலை நோக்கி நாம் வைத்த வலக்காலை எக்காரணம் பற்றியும் பின்னிழுக்க மாட்டோம். தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் ஏதம் படுப்பாரை என்னவழி முயன்றேனும் சேதப்படுத்துவோம். இஃது உறுதி! பனிமலை அன்ன உறுதி! அரசினுக்கும் ஆளுமைக்கும் அஞ்சி, நம் முரசம் என்றும் தன் முழக்கை நிறுத்தாது. வாழ்க்கைக்கும் இன்பத்துக்கும் கெஞ்சி நாம் என்றும் நம் குரலில் குழைவைக் காட்டோம்! உயிர்மேல் நமக்கு உவப்பில்லை! செல்வ நிலைக்கு நாம் என்றும் அங்காந்ததில்லை! நாம் பிறந்த நாட்டுக்கும் மொழிக்கும் நமக்கிருக்கும் உடலும் உழைப்பும் செலவிடப்பெறும்.! ..இவற்றுக்கெல்லாம் படைக்கருவியாகத் தொடங்கியதே, தென்மொழி (சுவடி:2, ஓலை:1, ஆசிரிய உரை)

ஆசிரிய உரையில் ஐயா குறிப்பிட்டது போல் தென்மொழி கடைசிவரை தமிழ்நாட்டு விடுதலைக்கான போர்ப்படையாக விளங்கியது என்பதனையும் உயிர்மேல் நமக்கு உவப்பில்லை! செல்வ நிலைக்கு நாம் என்றும் அங்காந்ததில்லை! என்ற வரிகளுக்கு உண்மையாக ஐயாவின் முழுவாழ்க்கையும் அப்பழுக்கற்றதாக விளங்கியது என்பதனையும் காலம் மெய்ப்பித்தது.

தென்மொழி இயக்கத்துக்கு மூன்று நோக்கங்கள் உண்டு. தூய தமிழ் வளர்ச்சி, தமிழின அடிமை நீக்க முயற்சி, தமிழக விடுதலை என்பார் பாவலரேறு. இந்த மூன்று நோக்கங்களும் தமிழக விடுதலை என்ற ஒற்றை இலக்கில் மையம் கொண்டுள்ளன என்பதைத் தருக்க முறையில் விளக்கிச் சொல்லும் ஐயாவின் அரசியல் தெளிவு நம்மை வியப்பிலாழ்த்துகிறது.

இந்தியா ஒன்றாக இருக்கும்வரை இந்துமதம் இருக்கும். இந்துமதம் இருக்கும்வரை தமிழர்களும் இந்துவாகவே இருக்க வேண்டும். தமிழர்கள் இந்துவாக இருக்கும்வரை மதப்பூசல்களும் குலக் கொடுமைகளும் அவர்களை விட்டு விலகவே முடியாது. மதப் பூசல்களும் குலக் கொடுமைகளும் அவர்களை விட்டு விலகாதவரை ஆரியப் பார்ப்பனரின் வஞ்சகத்திலிருந்தும் மேலாளுமையிலிருந்தும் தமிழன் மீளவே முடியாது. அத்தகைய பார்ப்பனியப் பிடிப்புகளிலிருந்து தமிழன் மீளாதவரை தமிழ்மொழி தூய்மையுறாது. தமிழினம் தலைதூக்காது, தமிழ்நாடு தன்னிறைவு அடைய முடியாது எனவே இந்து மதத்தினின்றும் மதப் பூசல்களினின்றும் ஆரியப் பார்ப்பனியதினின்றும் விடுபட வேண்டுமானால் நாம் இந்திய அரசியல் பிடிப்பினின்றும் விடுபட்டேயாகல் வேண்டும். ஆகவே தமிழக விடுதலைதான் நம் முழுமூச்சு, நோக்கம், கொள்கை, முயற்சி என்று தமிழர் ஒவ்வொருவரும் உணர்தல் வேண்டும்.
(பாவலரேறு பெருஞ்சித்திரனார் நினைவு மலர், ப.105)

தமிழகத்தில் கடந்த இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றிய தனித் தமிழியக்கம், திராவிட இயக்கம் முதலான இயக்கங்கள் மொழித் தூய்மையையும் ஆரிய மேலாதிக்க எதிர்ப்பையும் இருவேறு முரண்பட்ட நிலைகளில் சிந்தித்து மயங்கிக் கிடந்த சூழலில் பாவலரேறுவின் தென்மொழி இயக்கம் இந்த இரண்டு முரண்பட்ட இயக்கச் சிந்தனைகளையும் ஒன்றாக இணைத்துத் தமிழக விடுதலையால் அவை முழுமைபெறும் என்பதனை மெய்ப்பித்துக் காட்டியது. தமிழக விடுதலைதான் நம் முழுமூச்சு, நோக்கம், கொள்கை, முயற்சி என்று எழுதியது பேசியதோடு மட்டும் நில்லாமல் எள்ளளவும் தம் கொள்கையிலிருந்து பிறழாமல் அடக்குமுறைகள் எத்தகு கொடியதாக இருந்தபோதும் தனியனாக நெடுவழி நடந்தவர் ஐயா அவர்கள். அவரின் போராட்ட வாழ்க்கையில் இறுதி மூச்சுவரை கொடுஞ்சிறைக்கும் அஞ்சாமல் தொடர்ந்து செயலாற்றிய காரணத்தால் சிறைவாழ்க்கை அவருக்குப் பூந்தோட்டமாயிற்று.

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...