செவ்வாய், 1 மே, 2012

எண்ணப் பறவை சிறகடித்து… கலக்கல் காங்கேயன் நூல் வாழ்த்துரை



முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்,
புதுச்சேரி.

என் இனிய மாணவ நண்பர் காங்கேயனின் “எண்ணப் பறவை சிறகடித்து..” எனும் இக்கட்டுரைத் தொகுப்பு அவரின் முதல்நூல். காங்கேயன் நாடறிந்த நல்ல பேச்சாளர். மேடைகளில் இனிமையாகப் பாடக் கூடியவர். அண்மைக் காலங்களில் மக்களிடையே மிகுந்த செல்வாக்கு பெற்றுவரும் மேடைக்கலையாம் பாட்டு மன்றத்தில் புதுச்சேரியின் புகழை நாடெங்கும் பரப்பி வருபவர். அவரின் பாட்டுமன்றம் இயலும் இசையும் கலந்த ஒரு புதுவகைப் பட்டிமன்றமாய்ப் படித்தவர்கள் முதல் பாமரர்வரை அனைவரையும் ஈர்க்கும் ஓர் அற்புத மேடைக்கலையாய்த் தமிழகத்தை வலம்வருவது பாராட்டுதலுக்குரியது.

மேடைப்பேச்சு தந்த உற்சாகத்தில் எழுத்துலகிலும் அடியெடுத்து வைக்கின்றார் காங்கேயன். பேசுகிற பேச்செல்லாம் காற்றோடுப் போய்விடக் கூடாது என்ற எண்ணத்தில் அவர் எடுத்திருக்கும் முதல் முயற்சியே இந்நூல். இந்நூலைத் தொடர்ந்து பல நல்ல நூல்களைத் தமிழுலகிற்கு அவர் தொடர்ந்து அளிப்பார் என்று நான் நம்புகிறேன்.

சிந்திக்கத் தெரிந்த ஒவ்வொரு மனிதனும் பதிவுசெய்யப்பட வேண்டிய பல பிரதிகளை மனதில் சுமந்து கொண்டேதான் வாழ்ந்து வருகிறான். ஆனால் பலருக்கு அதனை அச்சில் கொண்டுவரும் வாய்ப்பும் சூழலும் அமைவதில்லை. இன்றைய கணிப்பொறி அச்சுமுறையின் வருகை எல்லோருக்கும் நூல் எழுதும், அச்சிடும், வெளியிடும் பணிகளை எளிமைப் படுத்தியிருக்கிறது.

கவிதைகளும் உரைநடைப் புனைகதைகளும் மட்டுமே படைப்புகள் இல்லை. அவற்றுக்கும் அப்பால் கட்டுரைகள் என்ற படைப்பு இலக்கியங்கள் உண்டு. ஆனால் தமிழில் கட்டுரை என்ற இலக்கிய வடிவம் பெரிதும் படைப்பிலக்கிய மரியாதையைப் பெறுவதில்லை. தமிழர்களின் நீண்ட நெடிய கவிதை மரபுகளே அதற்குக் காரணமாய் இருக்கலாம்.

தமிழ்மொழியைப் பொறுத்தவரைக் கிடைக்கின்ற பழந்தமிழ் இலக்கண நூலாம் தொல்காப்பியத்திலேயே உரை என்ற இலக்கியவகை பற்றிய குறிப்பு கிடைக்கின்றது. இறையனார் களவியல் உரை தொடங்கித் தமிழிலக்கிய நெடும்பரப்பு தோறும் எழுதப்பட்ட இலக்கிய, இலக்கண, சமய உரைகள் தமிழின் தற்கால உரைநடைக்குக் கொஞ்சமும் குறைவின்றி ஈடு கொடுக்கின்றன.

ஐரோப்பியர் வருகைக்குப் பின்னர் தமிழகத்திற்குக் கிடைத்திட்ட தாள், மை, அச்சு இயந்திரம், ஆங்கிலக் கல்வி போன்ற வசதி வாய்ப்புகள் தமிழின் உரைநடை வளர்ச்சிக்குப் பெரிதும் ஆக்கமும் ஊக்கமும் அளித்தன. வீரமாமுனிவரின் ‘பரமார்த்த குரு கதை’யே தமிழின் முதல் உரைநடை இலக்கியம் என்பாருண்டு. தமிழின் உரைநடைக்கு அணிசேர்த்த தலைமைப் படைப்பை வழங்கிய பெருமை புதுச்சேரிக்கு உண்டு. ஆனந்தரங்கம் பிள்ளை (1709-1761) அவர்களால் எழுதியளிக்கப் பெற்ற நாட்குறிப்பு இலக்கியம், தொடக்காலத் தமிழ் உரைநடைக்குக் கிடைத்த தனிமகுடம்.

கட்டுரை இலக்கியம், உரைநடை இலக்கிய வடிவங்களில் தனித்தன்மை மிக்கது. ஒரு பொருள் பற்றிச் சிந்தித்தவற்றை ஒழுங்குபடுத்தி எழுதுவதே கட்டுரை என்பர். கட்டுரைகளில் படைப்பிலக்கிய அந்தஸ்தைப் பெறுவதும் தனித்தன்மை மிக்க இலக்கியமாக மதிக்கத் தக்கதுமான கட்டுரைகள் தன்னுணர்ச்சிக் கட்டுரைகளே. ஆங்கிலத்தில் இவ்வகைக் கட்டுரைகள் மிகுதி. நுளளயல என்று குறிப்பிடத்தக்கன இவைகளே. தமிழில் இவ்வகைக் கட்டுரைகள் அதிகமில்லை. அண்மைக் காலமாகத் தமிழிலும் தன்னுணர்ச்சிக்; கட்டுரைகள் எழுதப்படுகின்றன.

நண்பர் காங்கேயனின் “எண்ணப் பறவை சிறகடித்து..” எனும் இந்நூல் இருபத்திரண்டு சிறுசிறு கட்டுரைகளைக் கொண்ட ஒரு கலம்பகக் கட்டுரைத் தொகுப்பு. பல தன்னுணர்ச்சிக் கட்டுரைகள், சில இலக்கியக் கட்டுரைகள் எனக் கலவையாக நூல் அமைக்கப்பட்டுள்ளது. நூலாசிரியர் கலக்கல் காங்கேயன் இந்நூலில் பல்வேறு காலங்களில் தான் சந்தித்த, சிந்தித்த, பேசிய, கேட்ட, விவாதித்த, பல செய்திகளை மற்றும் சம்பங்களைத் தொகுத்தளிக்கின்றார். அரசியல், சமூகம், ஆன்மீகம், இலக்கியம், இயற்கை முதலான பல தளங்களில் செய்திகள் பேசப்படுகின்றன.

வேடிக்கை மனிதர்கள், சான்றோர் பண்புகள் முதலான முதல் எட்டுக் கட்டுரைகளும் தன்னுணர்ச்சிக் கட்டுரைகளாக அமைந்துள்ளன. மரங்கள் மகத்தானவை என்ற ஒன்பதாம் கட்டுரையும் ஐந்து பெரிது ஆறு சிறிது என்ற பதினெட்டாம் கட்டுரையும் ஓரறிவு உயிர்களாம் மரங்கள் குறித்தும் ஐந்தறிவு உயிர்களாம் விலங்குகள் குறித்தும் பேசுகின்றன. குறுந்;தொகை காட்டும் குரங்குகள் காதல் என்ற பத்தாம் கட்டுரையும் சிவபெருமான் தொடங்கிய யுவுஆ சென்டர் என்ற பதினொன்றாம் கட்டுரையும் குறுந்தொகை மற்றும் தேவார இலக்கியங்கள் பற்றியன. பத்தொன்பது மற்றும் இருபது இருபத்தொன்றாம் கட்டுரைகளாக இடம்பெற்றுள்ள கவியரசு கண்ணதாசன், காவியக் கவிஞர் வாலி, கவிப்பேரரசு வைரமுத்து என்ற தலைப்புகளிலான மூன்று கட்டுரைகளும் காங்கேயனின் சிறப்புக் களங்களான திரைப்படப் பாடலாசிரியர்கள் பற்றிப் பேசுகின்றன. இந்த மூன்று கட்டுரைகளையும் நூலின் மிக முக்கியமான கட்டுரைகளாகக் குறிப்பிடலாம். மேலும் எனக்குப் பிடித்த எம்.ஜி.ஆர் என்ற கட்டுரையும் தனித்துக் குறிப்பிடத்தக்கது.

நூலின் பல கட்டுரைகள் அவரின் மேடைப்பேச்சு தொனியிலேயே அமைக்கப் பட்டுள்ளன. அதனால்தான் வெளிப்படையாக மேடைகளில் அவர் வெளிப்படுத்தும் சமூகத்தின் மீதான சாடல்களும் நையாண்டிகளும் உள்ளது உள்ளபடி எத்தகைய புனைவுகளுமற்றுக் கட்டுரைகளில் பதிவாகியுள்ளன. பேசுவதென்பது காற்றில் கரைந்து போகக்கூடியது, ஆனால் எழுத்தில் எழுதிப் பதிப்பிப்பதென்பது கல்வெட்டில் வெட்டப்படுவதற்குச் சமமானது. இது காலத்தால் கரைந்து போகாதது. பேசுவதைவிட எழுதுவதில் அதிக எச்சரிக்கை உணர்ச்சி தேவை. காங்கேயன் இதைப்பற்றி எல்லாம் அதிகம் கவலைப்படாமல் தன் கட்டுரைகளைச் சுதந்திரமாக அமைத்திருப்பது அவரின் கரவற்ற உள்ளத்தின் வெளிப்பாடு என்பதனை நாம் உணர்தல் வேண்டும்.

காங்கேயனை அவரின் கல்லூரி நாட்கள் தொடங்கி நான் அறிவேன். பாடத்திற்கு வெளியேதான் கற்றுக்கொள்ளத் தக்கன மிகுதி என்பதனை அவர் நன்கு உணர்ந்தவர். வகுப்பறைகளுக்கு வெளியேதான் அவரின் தேடல் தொடங்கும். இடைவிடாத தேடலும் தேடலுக்கான முயற்சியும்தான் காங்கேயனின் தனித்தன்மை. இலக்கிய அரங்குகளில், இலக்கியங்களில், இலக்கிய ஆளுமைகளிடம் அவர் காட்டும் ஈடுபாடு அலாதியானது. கடந்த இருபது ஆண்டுகளில் புதுச்சேரியின் அனைத்து இலக்கிய அரங்குகளிலும் அவரின் கவனம் தொடர்ந்து இருந்து வந்துள்ளதை நான் கவனித்திருக்கிறேன். இன்றைக்குத் தமிழக, புதுச்சேரி மேடைகளில் தொடந்து தம் பங்களிப்பைச் செய்துவரும் பரபரப்பான சூழலில் கூட, வாய்ப்புள்ள நாட்களில் புதுச்சேரியின் தமிழிலக்கிய அரங்குகளில் அமைதியான ஒரு பார்வையாளராக இருந்து நிகழ்ச்சிகளைக் கேட்க அவர் தவறியதில்லை. இந்தத் தேடல்தான் காங்கேயனின் வெற்றிக்கான சூத்திரம்.

எண்ணப் பறவைச் சிறகடித்து நூலின் மொழிநடை மிக மிக இலகுவானது. கதை சொல்லும் போக்கிலான அவரின் கட்டுரைகள் மெத்தப் படித்தவர்கள் முதல் சாதாரண வாசகர்கள் வரை அனைவரையும் கவரக் கூடியன. திருவாளர் தென்கச்சி சுவாமிநாதன் எழுத்தின் சாயல் பல கட்டுரைகளில் தென்பட்டாலும் தமக்கென ஒரு தனிபாணியினைக் கொண்டது இந்நூல். ஒவ்வொரு கட்டுரையும் கொஞ்சம் அனுபவம், கொஞ்சம் ஆதங்கம், கொஞ்சம் ஆலோசனை என்ற கட்டமைப்பில் அமைக்கப் பட்டுள்ளது. இடையிடையே வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் தக்க தமிழிலக்கிய மேற்கோள்களும் இனிய திரைப்படப் பாடல் வரிகளும் நகைச்சுவைகளும் குட்டிக்கதைகளும் இணைக்கப்பட்டு வாசகர்கள் அலுப்பின்றி வாசிக்கும் வண்ணம் கட்டுரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

நண்பர் காங்கேயனின் “எண்ணப் பறவை சிறகடித்து.. ..” எனும் இக் கட்டுரைத் தொகுப்பு நூல் ஒரு தனிமனிதத் தன்னுணர்ச்சிக் கட்டுரைகள் என்ற அளவில் சுருங்கிவிடாமல் ஆன்மீகம், அரசியல், சமூகம், இலக்கியம், இயற்கை குறித்த பல்வேறு சிந்தனைகளை உடன்பாட்டு நிலையிலும் எதிர்மறை நிலையிலும் தூண்டி விடுவதோடு, வாசகனை அடுத்த தளத்திற்கு அழைத்துச் செல்லும் படைப்பிலக்கியப் பணியினையும் செய்கிறது. நல்ல சிந்தனைகளை விதைத்திருக்கும் நூலாசிரியருக்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துக்கள்.

முனைவர் நா.இளங்கோ
nagailango@gmail.com








வெள்ளி, 6 ஏப்ரல், 2012

சிங்கப்பூர் தமிழாசிரியர்களுக்கான கருத்தரங்கு -2012

Dr.N.Ilango
Associate Professor
Dept.of Tamil
P.G. Centre,
Govt. of Puducherry
Puducherry-8

2012 பிப்ரவரி 25 ஆம் நாள் சனிக்கிழமை சிங்கப்பூர் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் சிங்கப்பூர் கல்வி அமைச்சகத்தின் பாடத்திட்ட வரைவு மற்றும் மேம்பாட்டுப் பிரிவு சார்பாக நடத்தப்பட்ட தமிழாசிரியர்களுக்கான கருத்தரங்கின்( TL Seminar-2012) சிறப்பு அழைப்பாளராக  (கருத்தரங்கின் மையப்பேருரை நிகழ்த்துநராக) அழைக்கப்பட்டேன்.

அழைப்பிதழ்:
 TL Seminar-2012


 Programme

கருத்தரங்கின் மையப்பேருரை நிகழ்த்துநராக
முனைவர் நா.இளங்கோ
Keynote Address By Dr.N.Ilango


கருத்தரங்கில் நினைவுப் பரிசு வழங்குகிறார்
சிங்கப்பூர் கல்விஅமைச்சக இணை இயக்குநர்


Mr.Lo Chee Lin - Dr.N.Ilango

குறுந்தொகையும் இயற்கையும் - ஆய்வு நோக்கில் குறுந்தொகை -பகுதி-5


முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

குறுந்தொகையும் இயற்கையும்

சங்க இலக்கியங்கள், குறிப்பாகக் குறுந்தொகைப் பாடல்கள் பெரிதும் இயற்கையோடு இயைந்த வாழ்வினையே படம் பிடிக்கின்றன. எந்தவொரு பாடலும் இயற்கையை விட்டு விலகி நிற்பதேயில்லை. குறுந்தொகைப் பாடல்களில் இடம்பெறும் நாடக பாணியிலான பாத்திரங்களின் தனிக்கூற்று இயங்குவதற்கான களமாகவும் மேடையாகவும் பின்னணியாகவும் இயற்கை படைக்கப்பட்டுள்ளது.

பாத்திரக் கூற்று அகப்பாடல்களின் மைய உட்கரு. இதுவே உரிப்பொருள். காலம், இடம் இவற்றின் பின்னணியாய் முதற்பொருள், நிலமும் பொழுதும். பின்னணியில் இடம்பெறும் மனிதர்கள், விலங்குகள், பறவைகள், மரங்கள், செடிகொடிகள், தொழில், இசை முதலான பொருள்கள் அனைத்தும் கருப்பொருள்கள். நாடகபாணித் தனியுரைகளின் கால, இடச் சூழ்நிலைகளை விளங்கிக் கொள்வதற்கும் பின்னணியைப் படம் பிடிப்பதற்கும் உதவும் இயற்கை அகப்பாடல்களில் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.

வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட செவ்விய ஆகுமதி
யார்அஃது அறிந்திசி னோரே சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்குஇவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே
(குறுந். 18)

கபிலரின் இக்குறிஞ்சிப் பாடலில், தோழி தலைவனைத் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துவது உரிப்பொருள். சிறிய கொம்பிலே பெரிய பலாப்பழம் தொங்குவதைப் போல் தலைவியின் சிறிய உயிர் தலைவன் மீது வைத்த பெரிய காமத்தைத் தாங்கிக் கொண்டிருக்கிறது. பழம் பெருக்கப் பெருக்கக் கொம்புக்கு ஆபத்து எதிர்நோக்கியிருப்பதைப் போல், தலைவன் மீது வைத்த எல்லையற்ற அன்பினால் தலைவி உயிருக்கு ஆபத்து நேரலாம். தலைவன் ஊரிலுள்ள பலாமரங்களோ வேலியால் பாதுகாக்கப்பட்டிருக்கிறது, அதேசமயம் அந்தப் பலா மரங்கள் கொம்புக்கு ஆபத்தில்லாத வேர்ப்பலாக்கள். பாதுகாப்பான வேர்ப்பலாக்கள் நிறைந்த சாரலைச் சேர்ந்த தலைவனுக்குக் கொம்புப் பலாவால் கொம்புக்கு ஆபத்து என்பது தெரியுமோ? எனவே தான் செவ்வியை ஆகுமதி என்கிறாள் தோழி.

இந்தக் குறுந்தொகைப் பாடலில் கருப்பொருளால் அமைந்த இயற்கை வருணனையானது கதையின் உட்பொருளை நமக்கு வெளிப்படுத்துவதற்குக் கவிஞன் தனது மனக்காட்சியில் கண்டதற்கு இணையான ஒரு குறியீடாக நிற்கிறது. அதுமட்டுமின்றி மறைகுறிப்பான பிறிது மொழிதலுக்கும் இடமளிக்கிறது. குறுந்தொகையின் எல்லாப் பாடல்களிலும் இயற்கையின் பங்கு அளப்பரியது.

புதுமைப்பித்தன் சிறுகதைகள் -சில குறிப்புகள்

பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி - 8.

புதுமைப்பித்தன்

புதுமைப்பித்தன் தம் படைப்புகள் குறித்து சொன்ன வாசகங்களோடு கட்டுரையைத் தொடங்குவோம்.விமர்சகர்களுக்கு ஒரு வார்த்தை. வேதாந்திகள் கைக்குள் சிக்காத கடவுள் மாதிரிதான் நான் பிறப்பித்து விட்டவைகளும் அவை உங்கள் அளவுகோல்களுக்குள் அடைபடாதிருந்தால் நானும் பொருப்பாளியல்ல, நான் பிறப்பித்து விளையாட விட்டுள்ள ஜீவராசிகளும் பொறுப்பாளியல்ல. உங்கள் அளவுகோல்களைத்தான் என் கதைகளின் அருகில் வைத்து அளந்து பார்த்துக்கொள்ளுகிறீர்கள் என்று உங்களுக்குச் சொல்லிவிட விரும்புகிறேன். (பதி.ஆ. வேங்கடாசலபதி, புதுமைப்பித்தன் கதைகள், ப. 780)என்று புதுமைப்பித்தன் தன்படைப்புகள் குறித்து விமர்சகர்களுக்கு சொன்ன எச்சரிக்கையோடு அவரின் படைப்புகளை அணுகுவது பொருத்தமாயிருக்கும்.

இருபதாம் நூற்றாண்டு சிறுகதை

இருபதாம் நூற்றாண்டு இலக்கிய வரலாற்றில் - சிறுகதை வரலாற்றில் தனக்கென ஒரு தனியிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ள புதுமைப்பித்தனைத் தூய கலை இலக்கியவாதிகளும் சோசலிச யதார்த்தவாதிகளும் ஒருசேரச் சொந்தம் கொண்டாடுவது புதுமை. இதுவே அவர் படைப்புகளின் சூட்சுமம். புதுமைப்பித்தன் எந்தக் கூண்டுகளிலும் சிக்கிக் கொள்ளாதவர். அவர் படைப்புகள் சோசலிசம், பெரியாரியம், காந்தியம், சித்த தத்துவம் எல்லாம் பேசும், அதே சமயம் அவற்றைக் கிண்டலடிக்கவும் செய்யும். சொ.விருத்தாசலம் என்ற இயற்பெயருடைய புதுமைப்பித்தன் வேறு பல புனைபெயர்களிலும் பத்திரிக்கைகளுக்கு எழுதியுள்ளார். சோ.வி., வே.கந்தசாமிக் கவிராயர், ரசமட்டம், கூத்தன், நந்தி, கபாலி, சுக்ராச்சாரி என்பன அவரின் சில புனைபெயர்கள்.

சமூகம் குறித்த எதிர்வினையே அவரின் படைப்புகள்

நூற்றுக்கும் மேற்பட்ட சொந்தச் சிறுகதைகள் படைத்ததோடு மட்டுமின்றி சுமார் நூறு மொழிபெயர்ப்புச் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள், குறுநாவல், திரைப்பட உரையாடல் என்று இலக்கியத்தில் பல துறைகளிலும் தம் படைப்புகளை உருவாக்கியவர் புதுமைப்பித்தன். புதுமைப்பித்தன் தன் கதைகளின் பொதுத்தன்மை நம்பிக்கை வறட்சி என்று சொல்லிக்கொண்டார், அதற்குக் காரணம் அவரின் வாழ்க்கைப் பின்னணி. அவரின் நம்பிக்கை வறட்சி மனிதர்கள் உண்டாக்கிய தர்மங்கள் குறித்ததாயிருந்தது. சாமான்ய மனிதர்களின் நடைமுறை வாழ்க்கையும் அவற்றின் அவலங்களும் அவரின் சிறுகதைகளில் அதிக இடங்களைப் பிடித்தன. சமூகத்தின் மீதான புதுமைப்பித்தனின் கோபமே, அவர் படைப்புகளில் கேலியாக, கிண்டலாக, நையாண்டிகளாக வெளிப்பட்டன. எத்தகைய அறங்களின் மீதும் தமக்கு நம்பிக்கையில்லை என்பதுபோல் அவர் காட்டிய பாசாங்கெல்லாம் சமூகம் குறித்த அவரின் எதிர்வினையே.

சோதனை முயற்சிகள்

புதுமைப்பித்தன் ஆங்கில வழியில் உலகின் பலமொழிப் புனைகதைகளைக் கற்றார். தமிழிலும் உயர்ந்த தரத்தில் சிறுகதைகளைப் படைக்க விரும்பி ஒவ்வொரு சிறுகதையையும் ஒரு சோதனை முயற்சி போல் செய்து பார்த்தார். அதனால்தான் அவர் கதைகள் எதுவும் ஒன்று போல் மற்றொன்று இருப்பதில்லை. தம்முடைய கதைகளை வெறும் சுவாரஸ்யத்திற் காகவோ கருத்துப் பிரச்சாரத்துக்காகவோ அவர் படைக்கவில்லை. புதுமைப்பித்தனின் ஒவ்வொரு கதையும் ஒரு பிரச்சனையைப் பேசும். பாத்திரங்களையோ, பிரச்சினைகளையோ மோதவிட்டுவிட்டுத் தன்னை இனங்காட்டிக் கொள்ளாமல் ஒதுங்கிக் கொள்வார். இது அவர்படைப்பின் பாணி.

புதுமைப் பித்தன் கதைகளின் தனித்தன்மை

ஒரு தமிழ்வாசகன் புதுமைப்பித்தன் எழுத்துக்களுக்குள் எளிதில் நுழைந்து படைப்பை அனுபவிக்க முடிவதற்கு அவரின் விசேடமான கதைசொல்லும் முறையே ஒரு முக்கிய காரணம். தொன்ம வேர்முடிச்சுகளால் காப்பாற்றப் படும் இந்தியமரபு இழையோடும் மொழியும் கதையாடலுமே புதுமைப் பித்தன் கதைகளின் தனித்தன்மை. இந்தியத் தொன்ம இதிகாச மரபுகளும் சைவத் தமிழ் மரபும் கலந்து புதுமைப்பித்தனின் எழுத்துலகை ஆட்சி செய்வது வாசகர் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்தது.

திங்கள், 30 ஜனவரி, 2012

கவிஞர் வேள்பாரியின் "அகம் மலர்ந்த ஆம்பல்கள்" -அணிந்துரை


முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-605 008

இயற்கையின் படைப்பில் மனிதன் ஒரு விந்தை யென்றால் மனிதனின் படைப்பில் கவிதை ஒரு விந்தை. கவிதைகளுக்குத்தான் எத்தனை சுதந்திரம். ஒருமுறை கவிதையைக் கேட்டோ வாசித்தோ நமக்குள் அனுமதித்து விட்டால் அந்தத் கவிதைகள் நம் மனத்துள் புகுந்து செய்யும் சித்துவேலைகள்தான் என்னென்ன?

சித்தர்கள் செய்யும் எண்வகைச் சித்துகளைப்போல் எண்ணிலாச் சித்துகளை நமக்குள் செய்யும் அந்தக் கவிதைகள். உருவைச் சுருக்குவது, பேருரு எடுப்பது, தனக்குள் ஒன்றுமில்லாதது போல் மயக்குவது, தனக்குள்ளே எல்லாம் இருப்பதாகக் காட்டுவது, சுவைஞனிடத்தில் ஆக்கலும் காத்தலும் அழித்தலும் செய்வது என அப்பப்பா! நல்ல கவிதைகள் செய்யும் மாயங்கள் சொல்லிமாளாது. நல்லவேளையாக இன்றைக்கு கவிதை எழுதும் நூற்றுக்கணக்கான கவிஞர்களின் ஆயிரக்கணக்கான கவிதைகளில் நல்ல கவிதைகள் கொஞ்சம் அரிதாயிருப்பதால் நாம் தப்பித்தோம்.

நல்ல கவிதைகள் வாசித்து முடித்தபின் சுவைஞனைத் தூங்க விடுவதில்லை. பனை ஓலைகளில் எழுதிக் கொண்டிருந்த தமிழனுக்கு, ஐரோப்பியர் வருகைக்குப் பின்னர் கையில் கொஞ்சம் தாளும் மையும் கிடைத்தபிறகு எழுத்து ஒரு சுகமான அனுபவமாயிற்று. இகலோக சுகம் தேடிப் பணம்படைத்த மன்னர், வள்ளல்களைப் பாடுவதோ, பரலோக சுகம் நாடிப் பரமனைப் பாடுவதோ இவைதான் கவிஞனின் வேலை என்றிருந்த இடைக்காலக் கவிஞர்களின் குண்டுசட்டிக் குதிரையோட்டம் காலனியாதிக்கச் சூழலில் புதிய எழுதுகருவி, அச்சு, புதிய பாடுபொருள், புதிய மொழிநடை எனப் புதுக்கோலம் கொண்டது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கங்களில். மகாகவி பாரதி இதனைத் தொடங்கிவைத்தான். அவனே தமிழின் நவீன கவிதைக் கலையின் பிதாமகன்.

பாரதி பிடித்த தேர்வடம் பின்னர் பாவேந்தன் கைக்குச் சென்றது. இன்று அந்தத் தேர் ஓடிக்கொண்டிருக்கிறதா? நிலைக்கு வந்துவிட்டதா? இல்லை வழியிலேயே முட்டுக்கட்டையில் முடங்கிக் கிடக்கிறதா? என்று இன்னும் தீர்;ப்பளிக்கப் படாத பட்டிமன்றம் ஒன்று தமிழுலகில் நடந்துகொண்டிருக்கிறது. பாரதி பிடித்த தேர் இன்னும் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது என்ற அணியைச் சேர்ந்தவன் நான். இப்பொழுது என் மனக்கண்ணில் பாரதி பிடித்தத் தேர் வடத்தைப் பலரோடு சேர்ந்து கவிஞர் வேள்பாரியும் பிடித்துக் கொண்டிருப்பது தெரிகிறது.

கவிஞர் வேள்பாரி சிங்கப்பூர்க் கவிதைக் குடும்பத்தில் ஒருவர். என் இனிய நண்பர் முனைவர் இரத்தின வேங்கடேசன் சிங்கப்பூரில் ஏற்பாடு செய்திருந்த பாரதி 126 விழாவில் முதன்முறையாகக் கவிஞர் வேள்பாரியின் கவியரங்கக் கவிதையைக் கேட்டேன். கேட்டேன் என்பதைவிட கேட்டுத் திளைத்தேன். கவியரங்கங்களுக்குப் புகழ்பெற்ற புதுச்சேரியைச் சேர்ந்த எனக்கு அவரின் கவியரங்கக் கவிதையும் அதனை அவர் மேடையில் நிகழ்த்திய விதமும் புதுமையாயிருந்தது.

பாரதி குறித்த தன்னுடைய நீண்ட கவிதையைக் கையில் எந்த தாளோ, குறிப்போ இல்லாமல் சரளமாகப் பொழிந்து கொண்டே இருந்தார். இடையில் பாராட்டுதலுக்காகக் கைதட்டல்கள் பல. கைதட்டலுக்குக் கொஞ்சம் இடம்கொடுத்து மீண்டும் மலையருவி எனக் கவிதையை ஆர்ப்பாட்டமும் துள்ளலும் குளிர்ச்சியுமாக ஓடவிட்டார். அன்று அவருடைய கவிதை அருவியில் குளித்துச் சிலிர்க்காதவர்களே இருக்க முடியாது. தொடர்ந்து பல மேடைகளில் அவரின் கவியரங்கப் பொழிவுகளைக் கேட்டு நான் மகிழ்ந்திருக்கிறேன். இப்பொழுது அவரின் கவியரங்கக் கவிதைகளும், சில தனிக் கவிதைகளும், பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற கவிதைகளும் இணைந்து அகம் மலர்ந்த ஆம்பல்கள் என்ற பெயரில் ஒரு கவிதைத் தொகுப்பாக வெளிவருகிறது. இந்நூல் அவரின் முதல் கவிதைத் தொகுப்பு.

கவிதைத் தொகுப்புகள் பொதுவாக, தமக்கென ஒரு முழுமைபெற்ற வடிவம் அற்றவை. கவிதைகளின் கலப்பு அணிவரிசை அது. எப்பொழுதுமே கலவைகளுக்கு என்று ஒரு தனித்தன்மை உண்டு. கதம்பங்களைப் போல். கதம்பம், பல மலர்களின் கலப்பு. மலர்கள் மட்டுமல்ல மரு, மருக்கொழுந்து என இலை, தழைகளும் கதம்பத்தில் உண்டு. வண்ணங்களோ பலவிதம், குணங்களும் பலவிதம், மலர்களில் வாசனை உள்ளதும் உண்டு, வாசனையற்றதும் உண்டு. கவிதைத் தொகுப்புகளும் அப்படித்தான். எல்லாக் கவிதைகளும் ஒரே தரத்தில், ஒரே நிறையில் இருப்பதில்லை. கவிஞர் வேள்பாரியின் அகம் மலர்ந்த ஆம்பல்கள் தொகுப்பும் இதற்கு விதிவிலக்கல்ல. கவியரங்கங்களில் அவர் பொழியும் கவிதை நிகழ்த்தலின் பரிமாணத்தை அச்சுவடிவத்தில் வரும் அவரின் கவிதைகளில் காணமுடியவில்லை. இரண்டும் வேறுவேறு ஊடாகமாகச் செயல்படுவதே அதற்குக் காரணமாயிருக்கலாம்.

இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள மிகப்பல கவிதைகள் பல கவிதைப் போட்டிகளில் அவருக்குப் பல்வேறு பரிசுகளை ஈட்டித்தந்த கவிதைகள் என்பது குறிப்பிடத்தக்கது. கவிஞர் வேள்பாரி, பொழுது போக்கக் கவிதை எழுதுகிறவர் இல்லை. அவர் ஏன் கவிதை எழுதுகிறார்? எப்பொழுது கவிதை எழுதுகிறார்? என்பதிலேயே அவரின் தனித்தன்மை வெளிப்படுகிறது. இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான கவிதைகள் அவரது மனஅவஸ்தையின் வெளிப்பாடுகளாக இருப்பது கூர்ந்து கவனிக்கத் தக்கது. தனிமனித, சமூக, நாட்டு நிகழ்வுகளின் கோணல்களும் அதற்கான கொதிப்புகளுமே அவர் கவிதைகளின் மையப் பொருளாகின்றன. குறிப்பாக, ஈழத்தில் நடந்துவரும் சிங்களப் பேரினவாதக் கொடுமைகளால் தமிழன் என்பதனையும் மீறி மனிதம் சிதைக்கப்படுவதில் அவருக்குள்ள எல்லையற்ற கோபமும் கொதிப்பும் பல படைப்புகளில் வெளிப்படுகின்றன.

தேகா போட்டியில் பதக்கம் பெற்ற புதுக்கோட்டைச் சாந்திக்காக எழுதும் வாழ்த்துக் கவிதை தொடங்கி சந்திராயன் அனுப்பப்பட்டபோதும், சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதலின் போதும், கும்பகோணத் தீவிபத்தில் பள்ளிக் குழந்தைகளின் கோரப்பலியின் போதும், ஒரிசாவில் விவசாயிகளின் பஞ்சத்தின் போதும், டில்லி குண்டு வெடிப்பின் போதும், அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் போதும் அவர் எழுதியுள்ள கவிதைகளில் உள்@ர், தேச, சர்வதேச அரசியல் நிகழ்வுகள் அலசப்படுவதைக் கூர்ந்து நோக்கும் எவரும் இத்தொகுதியின் மேன்மையினை எளிதில் கண்டுகொள்ள முடியும்.

வேள்பாரியின் கவிதைகளின் நடை மிக மென்மையானது. எதுகை மோனைகளை விட அவர் பெரிதும் நம்புவது இயைபுத் தொடைகளைத்தான். இயைபுத் தொடைகளுக்கும் கவிதையின் ஓசையொழுங்குக்கும் மிகுந்த தொடர்புண்டு. இந்த நுட்பம் தெரிந்து வேள்பாரி தம் கவிதைகளை ஓசைநயத்தோடு படைப்பதில் பெரிதும் வெற்றி பெற்றுள்ளார் என்றே சொல்ல வேண்டும். எளிய இனிய சொற்களால் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தம் படைப்பு எளிதில் சென்று சேரும் வகையில் கவிதை படைப்பது அவரின் தனிஇலாவகம்.
கவிஞரின் அகம் மலர்ந்த ஆம்பல்கள் தொகுப்பில் எல்லா உணர்ச்சிகளும் விரவிக் கிடந்தாலும், இத்தொகுதியில் மிகுதியும் வெளிப்படும் உணர்ச்சி சோக உணர்ச்சியே. பெரும்பாலான கவிதைகளில் மிக மெல்லிய சோகம் இழையோடுவதை எவரும் எளிதில் அவதானிக்க முடியும். தாய்முகம் என்ற அவரின் கவிதையை இங்கே நான் எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.

கற்றைக்குழல் முடித்துக்
காலையிலே விழித்திடுவாள்
சற்றேனும் ஓய்வின்றி
சலசலத்து உழைத்திடுவாள்

கற்றவித்தை எதுவென்றால்
கண்ணீரைச் சொரிந்திடுவாள்
குற்றமற்றத் தாயுள்ளம்
குறையேதும் கண்டதில்லை

நெற்றியிலே நீர்வடிய
நெருப்பூட்டிச் சமைத்தாயே
வெற்றியைக் காணுமுன்னே
வெந்தணலில் வெந்தாயே


வேள்பாரியின் இந்தக் கவிதையைப் படிப்பவர்களுக்குப் பட்டினத்தாரின் தாயை எரியூட்டிய பாடல்கள் நினைவுக்கு வருவது தவிர்க்க முடியாதது. வேள்பாரியின் தாயன்பு மீதான நீங்கா நினைவுச் சிதறல்கள் தொகுப்பின் பல இடங்களிலும் விரவிக் கிடக்கின்றன. தாய்மையைப் போற்றும் கவிஞரின் உள்ளமும் தாயுள்ளம் போன்றதுதான். அதனால்தான் அவரின் எல்லாப் பாடுபொருள்களிலும் அன்பும் ஆழ்ந்த மனிதநேயமும் இழையோடுகின்றன.

இந்தியா அமெரிக்கா கூட்டு அணுசக்தி ஒப்பந்தம் குறித்த வேள்பாரியின் கண்ணோட்டத்தை வெளிப்படுத்தும் அணு என்ற தலைப்பிலான ஒரு கவிதை,

அணு ஒப்பந்தம்
அமெரிக்க நிர்பந்தம்
ஆராய வேண்டிய சம்பந்தம்
செர்பியாவின் உலைக்கழிவு
நாகசாகியில் உயிர்க்கழிவு
போபாலில் நடந்த நிகழ்வு
போதுமடா நம்ம இழவு


அழிவைத் தருவது அணுஉலை
பொழிவைத் தருவது அன்புஉலை

அணுஎன்பது ஆக்க சக்தியா?
அண்டத்தை அழித்திட புதிய யுக்தியா?


கவிதையின் ஒரு சில வரிகளிலேயே கவிஞரின் உள்ளத்தை நீங்கள் அடையாளம் கண்டுவிட முடியும். உலக வல்லரசுகளின் ஆதிக்கச் சக்திகளுக்குத் துணைபோவோர் மட்டுமல்லாமல் அப்பாவியான பொதுமக்களும் கூட இந்த ஒப்பந்தம் ஏதோ இந்தியாவை ஈடேற்ற வந்த அற்புத ஒப்பந்தம் என்று பிதற்றிக் கொண்டிருந்த காலத்தில் கவிஞர் அணுசக்தி ஒப்பந்தத்தின் ஆபத்தையும் அதன்பின்னால் மறைந்திருக்கும் சர்வதேசக் கூட்டுச் சதியையும் அம்பலப்படுத்தும் விதத்தில் எழுதியுள்ள கவிதை அவரின் மனிதநேயத்தை மட்டும் படம் படிக்கவில்லை, மாறாக உலக அரசியல் குறித்த அவரின் தீர்க்கமான பார்வையையும் வெளிப்படுத்துகின்றது.

இனி, போலிச் சாமியார்கள் குறித்த கவிதை ஒன்று,

கருவறையில் காமலீலை
கடவுளர்கள் அங்குஇல்லை
சல்லாப சாமிகளின்
உல்லாச உலகமடா
கல்லாகிப் போனாலும்
கடவுள்கள் பாவமடா!


கவிஞர், இறை நம்பிக்கையாளர் என்றாலும் கடவுளின் பேரால் நடக்கும் கயமைகளையும் பக்தியின் பேரால் நடக்கும் பகட்டுகளையும் அம்பலப் படுத்துவதில் கவிஞர் தமக்குரிய சமூகக் கடமையைச் சரியாகவே செயல்படுத்துகின்றார்.

இப்படி, தொட்ட இடத்திலெல்லாம் கவிஞர் வேள்பாரியின் சமூக அக்கறையும் ஆழ்ந்த மனிதநேயமும் வெளிப்படுவது இத்தொகுதியின் தனிச் சிறப்பு. இந்தியத் தாயகத்திலிருந்து வாழ்தல் வேண்டி சிங்கப்பூர் சென்று பணியாற்றிவரும் கவிஞர் வேள்பாரி தம் அயராத உழைப்பு நெருக்கடிகளுக்கு இடையிலும் இப்படிக் கவிதைப் பணி ஆற்றுகிறார் என்பதுதான் நாம் சிறப்பாக கவனத்தில் கொள்ளவேண்டியது. அவரின் தமிழ்ப்பணியும் சமூகப் பணியும் இடையீடின்றி நடைபெற வேண்டும் என்பதே நம் அவா! தொடர்ந்து நல்ல பல நூல்களைத் தமிழுலகிற்குத் தந்து தமிழுக்கு அணி சேர்ப்பார் என்ற நம்பிக்கை எனக்குண்டு. வாழ்த்துக்களுடன்!

முனைவர் நா.இளங்கோ



"ஊடகங்களின் ஊடாக" -நூல் முன்னுரையின் ஒரு பகுதி


முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8


ஊடகங்கள் அதாவது செய்தித்தாள்கள், இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம், இணையம் முதலான தகவல் தொடர்புச் சாதனங்கள் இல்லாமல் இன்றைய மனித வாழ்க்கை இல்லை. தகவல் தொடர்புச் சாதனங்கள் இல்லாத உலகை நம்மால் கற்பனை செய்து பார்ப்பது கூட இயலாததாகி விட்டது. நாம் இப்போது தொடர்புச் சாதனங்களால் ஆன உலகத்தில் வாழ்கிறோம்.

ஊடகங்கள் நமக்குச் செய்தி மற்றும் தகவல்களைத் தருகின்றன. பொழுது போக்க உதவுகின்றன. அவை அத்தோடு நிறுத்திக் கொள்வதில்லை. நம் வாழ்க்கையை, நம் சிந்தனையை, நம் தேவைகளைத் தீர்மானிக்கும் சக்தியாகவும் விளங்குகின்றன. உலகை எப்படிப் பார்க்க வேண்டும், எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்பனவற்றையும் அவை சொல்கின்றன. உலக நிகழ்வுகளில் எவை எவை முக்கியத்துவம் உடையவை, எவை எவை முக்கியத்துவம் அற்றவை என்பனவற்றை எல்லாம் தீர்மானிக்கும் சக்தியாக ஊடகங்கள் விளங்குகின்றன. நாம் எதைப்பற்றிப் பேச வேண்டும், எதை விட்டுவிட வேண்டும் என்பனவற்றையும் ஊடகங்களே முடிவுசெய்கின்றன.

செய்தி மற்றும் தகவல்களை ஊடக நுகர்வோருக்கு வழங்கிச் சேவை செய்வது தகவல் தொடர்புச் சாதனங்களின் பணி என்பதெல்லாம் பழங்கதை. இன்றைய உலகில் ஊடகங்கள் வழங்கும் செய்திகள் ஒரு தகவல் மட்டுமல்ல. அவை ஓர் உற்பத்திப்பொருள். முதலாளித்துவ உற்பத்திப் பண்டம். அதனை உற்பத்தி செய்யும் பத்திரிக்கை, வானொலி, தொலைக்காட்சி, திரைப்படப் பணியாளர்களாகிய ஊடகவியலாளர்கள் அனைவரும் பண்ட உற்பத்தித் தொழிலாளர்கள்.

ஊடக முதலாளிகள் உற்பத்தி செய்துதரச் சொல்லும் தகவல்களைச் செய்தி என்ற பெயரில் அவர்கள் செய்து தருகிறார்கள். நுகர்வோராகிய நமக்கு எது தேவை என்று தெரிந்து ஊடகங்கள் தகவல்களை உற்பத்தி செய்வதில்லை. நமக்கு எதைத் தரவேண்டும் அல்லது நம்மிடம் எதை விற்க வேண்டும் என்பதையும் இன்றைய ஊடக முதலாளிகளே முடிவு செய்கிறார்கள். பழகப் பழக அதுவே நமது தேவையாகவும் மாறிப்போகிறது. இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது தகவல்கள் உருவாக்கப் படுகின்றன என்பதுதான்.

தொடக்கக் காலங்களில் ஊடகங்களின் பணி சமூகம், சமயம், தேசம் சார்ந்த ஒரு சேவையாக, ஒருவகைப் போராட்ட ஆயுதமாகத்தான் இருந்தது. அறிவித்தலையும், அறிவுறுத்தலையும் மகிழ்வூட்டலையும் மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்த ஊடகங்கள் இன்றைக்கு வணிகம் செய்தல், பொருளீட்டல் என்பதனையே முதன்மை நோக்கமாகக் கொள்ளத் தொடங்கிவிட்டன. ஆக, இன்றைய ஊடகஉலகில் செய்தி என்பது வெறும் தகவல் இல்லை, அது ஒரு உற்பத்திப் பொருள். ஊடகங்களின் தகவல் வழங்கல் வெறும் சேவை மட்டுமல்ல அது ஒரு உலகமய வணிகம். இந்த மாற்றத்தைச் சராசரி வாசகர்களும் பார்வையாளர்களும் உணர்ந்து கொள்ளாத வகையில் நடைமுறைப் படுத்துவதில்தான் ஊடகங்களின் நுண்அரசியல் செயல்படுகின்றது.

அப்பாவி ஊடக நுகர்வோரைப் பொறுத்த வரையில் தகவல் தொடர்புச் சாதனங்கள் உண்மை விளம்பிகள். அவை உண்மையைத் தவிர வேறொன்றையும் பேசுவதில்லை. இன்றைக்கும் பலர் தகவல் தொடர்புச் சாதனங்களில் இடம்பெறும் தகவல்கள் அனைத்தும் உண்மையே என்று நம்புகின்றனர். இன்னும் ஒரு சிலர் தனியார் ஊடகங்கள் வேண்டுமானால் பொய் சொல்லலாம், உண்மையைத் திரித்து வெளியிடலாம் ஆனால், அரசு ஊடகங்கள் அப்படியில்லை, அவை நூற்றுக்கு நூறு உண்மைகளைத்தான் எழுதும், பேசும், காண்பிக்கும் என்று பிடிவாதமாக நம்புகின்றனர். ஆனால் உண்மை அவர்கள் நம்பிக்கைக்கு நேர்மாறானது. ஊடகங்களின் அதிகார அரசியலின் வெற்றி இது. ஊடகங்களின் அதிகார அரசியலை விளங்கிக் கொள்வது இன்றைக்கு மிகமிக அவசியமானது. ஊடக நுகர்வோர் மட்டுமல்ல கல்வி, தொழில் சார்ந்து ஊடகங்களைப் பயில்வோருக்கும் ஊடகங்களின் அதிகார அரசியல் குறித்த விழிப்புணர்வு தேவை.
II
ஊடகவியலுக்கும் எனக்குமான தொடர்பு கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலானது. கடந்த எண்பதுகளில் மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் அஞ்சல் வழியில் தொடங்கிய மக்கள் தொடர்பியல் படிப்பில் சேர்ந்து கற்றது தொடங்கி, புதுவைப் பல்கலைக் கழக இளங்கலை, முதுகலைத் தமிழ் மாணவர்களுக்கு ஊடகவியலைப் பயிற்றுவிக்கும் நோக்கில் பலமுறை பாடத்திட்டங்களை வடிவமைத்தது, தொடர்ந்து தமிழ் மாணவர்களுக்கு அதனைப் பயிற்றுவித்து வருவது என இருபத்தைந்து ஆண்டுகாலத் தொடர்பு. கல்விப் புலத்தில் மட்டுமல்லாமல் இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி, இணையம் எனத் தொடர்ந்து ஊடகத் துறையோடு இயங்கியும், இயக்கியும் வரும் அனுபவமும் எனக்குண்டு. புத்தகங்களில் கற்பதினும் மேலாக வகுப்பறைச் சூழலும் மாணவர்களும் எனக்கு நிறைய போதிப்பதுண்டு. கற்பதும் கற்பிப்பதும், கற்பித்துக் கற்பதும் தானே ஆசிரியப் பணி. அந்தவகையில் நிறைய கற்றிருக்கிறேன், கற்பித்திருக்கிறேன். அந்த அனுபவங்களின் ஒரு சிறிய வெளிப்பாடுதான் ஊடகங்களின் ஊடாக என்ற இந்நூல்.

ஊடகவியல், இதழியல் குறித்துத் தமிழில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் நிறைய நூல்கள் வந்திருக்கின்றன. அவை பெரும்பாலும் பல்கலைக் கழகப் பாடத்திட்டங்களை ஒட்டி, தேவைக்காக உருவாக்கப்பட்டவை. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமாக எழுதப்பட்டவை. ஊடகங்கள் குறித்த புரிதலை மையப்படுத்தித் தமிழில் மிகச் சில நூல்களே வெளிவந்துள்ளன. அவற்றுள் சுரேஷ்பால் அவர்களின் மீடியா உலகம் (1999), கண்ணன் அவர்களின் பிறக்கும் ஒரு புதுஅழகு (2007) இரண்டும் குறிப்பிடத்தக்க நூல்கள். இந்நூலின் ஆக்கத்தில் அவற்றுக்கும் பங்குண்டு.

ஊடகங்களின் ஊடாக என்னும் இந்நூலில் ஆறு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் முதல் கட்டுரை ஊடகங்களின் கதையாடல் குறித்தது. இரண்டாவது கட்டுரை திரைப்படங்களில் இடம்பெறும் காலக்குறியீடுகள் குறித்தது. மூன்றாவது கட்டுரை தமிழ்த் திரைப்படத் துறையின் முதல் பெண்மணி டி.பி.ராஜலட்சுமியின் நாவல் மற்றும் திரைப்படம் குறித்தது. நான்காவது கட்டுரை விளம்பரங்களின் நுண்அரசியல் குறித்தது. ஐந்து மற்றும் ஆறாம் கட்டுரைகள் இணைய வலைப்பதிவுகளின் அதிகார உடைப்பு குறித்தது. கட்டுரைகள் ஒவ்வொன்றும் விமர்சனங்களுக்கு இடமளிக்கக் கூடியன. ஊடகங்களுக்கு இருக்கும் வரவேற்பு, இது போன்ற ஊடகவியல் சார்ந்த ஆய்வு நூல்களுக்கும் இருக்க வேண்டும். ஊடகங்கள் நம் எதிரிகள் இல்லை. அதேசமயத்தில் அவை நண்பர்களும் இல்லை.

நான் கற்ற தமிழ்க்கல்வி என்னை ஒரு இலக்கியவாதியாக மட்டுமே வளர்த்தெடுத்தது. புதுச்சேரி மாநிலக் கலை இலக்கியப் பெருமன்றமும் அதன் தோழர்களும்தான் என் இலக்கியப் பயணத்திற்கான இலக்கினை அடையாளம் காட்டியவர்கள். இலக்கியப் பேராசான் ஜீவா அவர்களின் வழியில், ‘கலையும் இலக்கியமும் மக்களுக்கே’ என்ற தெளிவோடு சமுதாயப் பணிகளில் என்னை ஈடுபடுத்திக் கொள்ள ஆற்றுப்படுத்திய அமைப்பு அதுவே. அதற்கு நன்றி கூறும் வகையில் புதுச்சேரி மாநிலக் கலை இலக்கியப் பெருமன்றத்துக்கு, ஊடகங்களின் ஊடாக என்னும் இந்நூலை அன்புக் காணிக்கையாகப் படைத்துள்ளேன்.

தமிழ்கூறு நல்லுலகம் நல்ல நூல்களைப் போற்றிப் பாராட்டும் என்ற நம்பிக்கையுடன்,

நன்றி!
முனைவர் நா.இளங்கோ

புதுவைத் தமிழ்நெஞ்சனின் "தோழர் வ.சுப்பையா" நூல் அணிந்துரை

முனைவர் நா. இளங்கோ
தமிழ்ப் பேராசிரியர்
புதுச்சேரி-8

தோழர் வ.சுப்பையா அவர்கள் புதுச்சேரி விடுதலைப் போராட்டத் தளபதி. புதுச்சேரி மண்ணின் விடுதலைக்காகவே தம் உடல், பொருள், உழைப்பு, சிந்தனை முழுவதையும் அர்ப்பணித்தவர். இந்தியாவின் விடுதலை வரலாற்றிலும் புதுவையின் விடுதலை வரலாற்றிலும் இரண்டறக் கலந்து நிற்கும் இணையற்ற வீரர். ஆங்கில ஏகாதிபத்யம், பிரஞ்சு ஏகாதிபத்யம் என்ற இரண்டு ஏகாதிபத்யங்களை எதிர்த்துப் போராடி வெற்றி கண்ட ஒரே விடுதலை வீரர் என்ற பெருமைக்குரியவர் தோழர் வ.சுப்பையா அவர்கள்.

தோழர் வ.சுப்பையா அவர்களின் 60 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அரசியல் வாழ்க்கையில் மகாத்மா காந்தி, பண்டித ஜவஹர்லால் நேரு, லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, வி.வி.கிரி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், தந்தைப் பெரியார், சத்தியமூர்த்தி, டாக்டர் இராதாக் கிருஷ்ணன், வினோபாஜி, பெருந்தலைவர் காமராசர், திரு.வி.க., மற்றும் பல தேசிய அரசியல் தலைவர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டு நாட்டுப்பணியும் சமுதாயப் பணியும் ஆற்றியுள்ளார்.

தோழர் வ.சுப்பையா அவர்களின் பன்முகப்பட்ட பணிகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில், குறிப்பாக புதுவையின் விடுதலைப் போருக்கு வித்திட்டு வளர்த்து விடுதலையை முழுமைப்படுத்திப் பெற்றுத்தந்த மிகச் சிறந்த தேசபக்த விடுதலை மறவர். 1934 ஆம் ஆண்டிலேயே சுதந்திரம் என்ற பத்திரிக்கையை உருவாக்கித் தொடர்ந்து நடத்தி முற்போக்கு இதழ்களுக்கெல்லாம் முன்னுதாரணமாகத் திகழ்ந்த சிறந்த பத்திரிக்கையாளர்.

அகில இந்தியத் தொழிற்சங்க காங்கிரஸ் என்ற தேசிய அமைப்பின் திறமை மிக்க தலைவர். இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். சமூகம், பொருளாதாரம், அரசியல், இலக்கியம் ஆகிய துறைகளில் எழுத்தாற்றலும் நாவன்மையும் ஒருங்கே கொண்ட சிந்தனையாளர். அரசியலில் பல பெரும் பொறுப்புகளை ஏற்றுத் திறம்பட நிர்வாகம் செய்த ஆற்றல் மிக்க நிர்வாகி. எல்லாவற்றுக்கும் மேலாக மக்களால் மதித்துப் போற்றப்படும் மக்கள் தலைவர்.
II
தோழர் வ.சுப்பையா அவர்களின் நூற்றாண்டு விழாக்(1911-2011) காலமிது. பொதுவாகத் தலைவர்களின், மிகச்சிறந்த சாதனையாளர்களின் நூற்றாண்டு விழாக்கள் கொண்டாடப்படுவதில் ஒரு சிக்கல் உண்டு. அவர்களின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களுக்குப் பின்னர் அவர்கள் மீண்டும் ஒருமுறை குழி தோண்டிப் புதைக்கப்படுவார்கள். இந்தமுறை இன்னும் கொஞ்சம் ஆழமாகவே அவர்களின் புதைகுழி அமைந்துவிடும். அதாவது நூற்றாண்டு விழாக்கள் அவர்களின் இரண்டாவது மரணமாக அமைந்துவிடும் ஆபத்து தவிர்க்க இயலாமல் நேர்ந்து விடுவதுண்டு. இவ்விபத்து எல்லா நூற்றாண்டு விழா நாயகர்களுக்கும் ஏற்படுவதில்லை. சராசரித் தலைவர்களுக்கும் சராசரிப் படைப்பாளிகளுக்கும்தான் இப்படி நேர்ந்துவிடும் ஆபத்துண்டு.

ஆனால் வாழும் காலத்திலேயே வரலாறாக வாழ்ந்து காலத்தினால் அழிக்கமுடியாத புதிய வரலாற்றைப் படைத்தளிக்கும் மகத்தான தலைவர்களுக்கு இவ்விதி பொருந்துவதில்லை. அவர்களின் நூற்றாண்டு விழாக்கள் அவர்களை மீண்டும் இந்த உலகிற்குப் பெற்றுத் தருகின்றன. மகத்தான தலைவர்கள், நூற்றாண்டு விழாக்களின் போது மீண்டும் பிறக்கிறார்கள். இந்தமுறை அவர்களின் பிறப்பு முதல் பிறப்பைவிட அதிக முக்கியத்துவம் பெற்றதாக அமைந்துவிடுகின்றது. வாழும் காலத்தில் சாதித்ததைவிடப் பல மடங்குச் சாதனைகளை அவர்கள் இந்த இரண்டாம் பிறப்பிலே சாதிப்பார்கள். அண்ணல் காந்தி, அண்ணல் அம்பேத்கர், தந்தைப் பெரியார், மகாகவி பாரதி முதலான சரித்திர நாயகர்களின் நூற்றாண்டு விழாக்கள் என்னுடைய கூற்றுக்குச் சான்று பகரும். மக்கள் தலைவர் வ.சுப்பையா அவர்களின் நூற்றாண்டு விழாவும் இத்தகு சரித்திர நாயகர்களின் நூற்றாண்டு விழாக்களைப் போல மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

எந்த ஒரு மண்ணுக்கும் நேராத, நேரக்கூடாத அவலம் புதுச்சேரிக்கு நேர்ந்து விட்டமை ஒரு வரலாற்றுக் கொடுமை. புதுச்சேரியின் விடுதலைநாள் எது? என்பதை அறியாத மக்கள், தெரிந்தும் தெரியாததுபோல் காட்டிக்கோள்ளும் அரசுகள் இதெல்லாம் புதுச்சேரிக்கு மட்டுமே கிடைத்த சாபக்கேடு. 1954 நவம்பர் 1 ஆம் தேதி புதுச்சேரியின் விடுதலைநாள். இது வரலாற்று உண்மை. ஆனால் புதுச்சேரி அரசும் மக்களும் கொண்டாடும் நாளோ! ஆகஸ்டு 16. இந்த வரலாற்றுப் பிழையின் பின்னால் ஒளிந்துகிடக்கும் நாடகங்கள் எத்தனை எத்தனையோ! தோழர் வ.சுப்பையா அவர்களின் நூற்றாண்டு விழாக்களின் பின்விளைவாக இந்தக் கபட நாடகங்கள் முடிவுக்கு வரவேண்டும்! வரும்! ஆதனைச் செய்து முடிப்பதில்தான் நூற்றாண்டு விழாக்களின் முழுமையே அடங்கியுள்ளது.

III
புதுவைத் தமிழ்நெஞ்சன் புதுச்சேரியின் ஆற்றல் மிக்க இளைஞர். பன்முகப்பட்ட ஆளுமைகளைக் கொண்டவர். அன்பும் தோழமையும் கொண்டு அனைவரிடமும் பழகும் பண்பாளர். கவிதை, உரைநடை இரண்டு வடிவங்களையும் அழுத்தமாகக் கையாளக் கூடியவர். எழுத்து, பேச்சு என்பதோடு நின்றுவிடாமல் செயலிலும் முற்போக்காளர். பேராட்ட குணம் அவரின் அடிப்படைப் பண்பு. எதையும் வெளிப்படப் பேசி விமர்சிக்கக் கூடிய துணிச்சல் மிக்கவர். அதனால் வரும் பகைமையைக் கண்டு அஞ்சாதவர். இனவுணர்வாளர். மொழி, இன, நிலக் காப்புப் போராட்டங்களில் முன்வரிசையில் நிற்பவர்.

தோழர் புதுவைத் தமிழ்நெஞ்சன் மக்கள் தலைவர் வ.சுப்பையா அவர்களின் நூற்றாண்டைக் கொண்டாடும் விதத்தில் உருவாக்கியுள்ள ஓர் உயரிய படைப்பே தோழர் வ.சுப்பையா என்ற இக்கவிதை நூல். அடிப்படையில் மக்கள் தலைவரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளின் பதிவாக உருவாகியுள்ள இக்கவிதை நூலில் பொதுவுடைமை மற்றும் செங்கொடிகளின் மேன்மையும் தோழர் கருணாசோதியின் பெருமைகளும் இடையிடையே பேசப்படுகின்றன.

மக்கள் தலைவரின் வாழ்க்கையைப் பேசும் நூலின் இடையிடையே அவரோடு தொடர்புடைய இயக்கம் மற்றும் இயக்கத் தோழர்கள் குறித்துப் பேசுவது நூலுக்கு ஒரு புதிய பரிமாணத்தைத் தருகின்றது. தோழர் வ.சுப்பையாவின் புதுச்சேரி விடுதலைப் போராட்ட வாழ்க்கையில் உடன் பணியாற்றும் வாய்ப்பு பெற்ற நூலாசிரியரின் தந்தை சீனுவாசனார் குறித்த வரலாற்றுப் பதிவுகளையும் நூலாசிரியர் தமிழ்நெஞ்சனுக்கும் மக்கள் தலைவருக்குமான சந்திப்புகள் குறித்த பதிவுகளையும் ஆசிரியர் நூலில் இடம்பெறச் செய்திருப்பது காலத்தின் தேவையறிந்த நல்லபணி.

சீனுவாசன் திருமணமே
சீர்திருத்த முதல்மணமாம் சண்முகாபுரத்தில்
சீனுவாசன் சுப்பையாவின்
சிந்தனைக்கு ஏற்றமுள்ள உண்மைத் தோழர்
பாவேந்தர் வந்திருந்து
பாராட்டிச் சென்றுவிட்டார் ஊரில் உள்ளோர்
நாவேந்தித் திருமணத்தை
நல்லபடி பேசுகின்றார்.. .. புரட்சியாக
சாவேந்தா சுப்பையா
சரியாக வந்திருந்து வாழ்த்திச் சென்றார்.


தம் தந்தையாரின் திருமணம் அந்த நாளிலேயே சீர்திருத்தத் திருமணமாக நடைபெற்றதையும் மக்கள் தலைவர், பாவேந்தர் முதலானவர்கள் வந்திருந்து வாழ்த்துக் கூறியமையும் மிக அழகாகப் பதிவுசெய்கிறார் நூலாசிரியர்.

மார்க்சியமே வாழும் வழி, பொதுவுடைமை, செங்கொடி ஏந்தடா! முதலான தலைப்புகளில் மார்க்சியம் குறித்தும், பொதுவுடைமை இயக்கம் குறித்தும், செங்கொடியின் பெருமை குறித்தும் நூலில் விரிவாகப் பேசும் தமிழ்நெஞ்சன் இந்திய இடதுசாரி இயக்கங்கள் குறித்த தமது விமர்சனப் பார்வையையும் நூலில் அழுத்தமாகப் பதிவுசெய்கின்றார்.

பொதுவுரிமை இல்லாமல்
பொதுவுடைமை அமையாது
இதுவரையில் மார்க்சியர்கள்
இதையறிதல் கிடையாது
சாதிக்குக் காப்பளிக்கும்
சட்டத்தை மீறாமல்
சமவுரிமை வந்திடுமா?
சமவுடைமை அமைந்திடுமா?
ஒப்போலை வழியாக
ஒழியாது சாதிமதம்
இப்போதே புரட்சியினைச்
செய்யாமல் விடிவேது


வருணாசிரம வல்லடி மிக்க இந்தியச் சமூக அவல நிலைமைகளைக் கணக்கில் கொள்ளாமல் இங்கே மார்க்சியம் பேசப்படுவதில் தமக்கு உடன்பாடில்லை என்பதனையும் பாராளுமன்ற சனநாயக வழியில் சமவுடைமை சாத்தியமில்லை, புரட்சி ஒன்றே வழி என்பதனையும் நூலாசிரியர் தெளிவுபடுத்தியிருப்பது அவரின் அரசியல் தெளிவை வெளிப்படுத்துகின்றது.

மக்கள் தலைவர் வ.சுப்பையாவின் போர்ப்படையின் இளைய தளபதியாக வீறுடன் செயல்பட்டுப் புதுச்சேரியின் விடிவெள்ளி என்ற நம்பிக்கையூட்டிய தோழர் கருணாசோதி குறித்த தமிழ்நெஞ்சனின் கவிதைகள் உண்மையில் நல்ல வரலாற்றுப் பதிவுகள்.

கருணா சோதி ஒளியில் தானே
காரிருள் இங்கே ஓடியது –அவன்
வருகை தந்த வழியில்தானே
இளைஞர் கூட்டம் கூடியது
பொதுமை உலகைப் படைக்க விரும்பி
புரட்சிப் படையை அமைத்திட்டான் - நம்
புதுவை மண்ணில் பூத்த செம்மல்
புரட்சி இளைஞனாய் வாழ்ந்திட்டான்


தோழர் கருணா சோதியின் எதிர்பாரா மறைவு (படுகொலை) புதுச்சேரியின் பொதுவுடைமை இயக்க அரசியல் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய பின்னடைவு என்பதனையும் ஆசிரியர் குறிப்பிடத் தவறவில்லை.

மக்கள் தலைவரின் வரலாறு இன்றைய இளந்தலைமுறை யினருக்குச் சொல்லப்பட வேண்டும் என்ற நோக்கில் அவரின் போராட்ட வாழ்க்கையின் முக்கியப் பக்கங்களைக் கவிதை வடிவில் வடித்துக்காட்டும் இந்நூல், பலவகை மரபுப் பாவடிவங்களில் அமைந்துள்ளமை இதன் தனிச்சிறப்பு. திட்டமிட்ட வகையில் வாழ்க்கை வரலாறாக இந்நூலினை அமைக்காமல் தலைவரின் வாழ்க்கைப் பதிவுகள் சிதறிக் கிடக்கும் போக்கில் நூல் அமைந்துள்ளதால் போதிய மனநிறைவு கிடைக்கவில்லை என்பது ஒரு குறை என்றாலும் ஒவ்வொரு கவிதையும் தன்னளவில் ஒரு முழுமையைப் பெற்றிருப்பதனால் அந்தக் குறையும் பெரிதாகத் தோன்றவில்லை.

மக்கள் தலைவர் வ.சுப்பையாவின் நூற்றாண்டை ஒட்டித் தமிழிலும் ஆங்கிலம் முதலான பிற மொழிகளிலும் நிறைய நூல்கள் வந்திருக்க வேண்டும். தனித்தன்மை மிக்க அவரின் சுதந்திரப் போராட்ட வாழ்க்கை பரவலாகப் புதுவை மட்டுமின்றி தமிழகத்திற்கும், தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுமைக்குமே சொல்லப்பட்டிருக்க வேண்டும். தேன்னிந்தியாவில் இடதுசாரி இயக்கம் தோன்றவும் பரவவும் தக்க துணையாய் இருந்து களத்தில் நின்று பணியாற்றிச் சொல்லவொண்ணா வேதனை களையும் சோதனைகளையும் எதிர்கொண்டு சாதித்துக்காட்டிய ஓர் ஒப்பற்ற தலைவர் தோழர் வ.சுப்பையா அவர்கள். அவரின் பேராட்ட வாழ்க்கை இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாது. ஏன் தெரியாது? என்றால் சொல்லப்படவில்லை. சொல்ல விரும்பவில்லை.

இந்திய விடுதலையைப் போலவே புதுச்சேரியின் விடுதலையும் ஒரு குறிப்பிட்ட தேசிய இயக்கத்திற்குத்தான் சொந்தமானது என்று புனையப்பட்ட புனைவுகளையே உண்மையென்று நம்பிக்கொண்டிருப்பவர்கள் நாம். ஆனால் வரலாற்றின் பக்கங்கள் பொய்பேசுவதில்லை. தோழர் சுப்பையாவின் விடுதலைப் போராட்டப் பங்களிப்பு யாராலும் மறுக்கப்படவோ, மறைக்கப்படவோ முடியாதது. தோழர் தமிழ்நெஞ்சன் இந்நூலின் வழியாகத் தம் வரலாற்றுக் கடமையைச் செவ்வனே ஆற்றியுள்ளார். புதுச்சேரியின் இடதுசாரி இயக்கம் குறித்த சரியான புரிதல்களோடும் வரலாற்றுணர்வோடும் எழுதப் பட்டிருக்கும் இக் கவிதைநூல் உரிய காலத்தில் வெளிவருகின்றது. தமிழுலகம் இதனை ஏற்றுப் போற்றும் என்பதில் ஐயமில்லை.






புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...