திங்கள், 30 ஜனவரி, 2012

புதுவைத் தமிழ்நெஞ்சனின் "தோழர் வ.சுப்பையா" நூல் அணிந்துரை

முனைவர் நா. இளங்கோ
தமிழ்ப் பேராசிரியர்
புதுச்சேரி-8

தோழர் வ.சுப்பையா அவர்கள் புதுச்சேரி விடுதலைப் போராட்டத் தளபதி. புதுச்சேரி மண்ணின் விடுதலைக்காகவே தம் உடல், பொருள், உழைப்பு, சிந்தனை முழுவதையும் அர்ப்பணித்தவர். இந்தியாவின் விடுதலை வரலாற்றிலும் புதுவையின் விடுதலை வரலாற்றிலும் இரண்டறக் கலந்து நிற்கும் இணையற்ற வீரர். ஆங்கில ஏகாதிபத்யம், பிரஞ்சு ஏகாதிபத்யம் என்ற இரண்டு ஏகாதிபத்யங்களை எதிர்த்துப் போராடி வெற்றி கண்ட ஒரே விடுதலை வீரர் என்ற பெருமைக்குரியவர் தோழர் வ.சுப்பையா அவர்கள்.

தோழர் வ.சுப்பையா அவர்களின் 60 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அரசியல் வாழ்க்கையில் மகாத்மா காந்தி, பண்டித ஜவஹர்லால் நேரு, லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, வி.வி.கிரி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், தந்தைப் பெரியார், சத்தியமூர்த்தி, டாக்டர் இராதாக் கிருஷ்ணன், வினோபாஜி, பெருந்தலைவர் காமராசர், திரு.வி.க., மற்றும் பல தேசிய அரசியல் தலைவர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டு நாட்டுப்பணியும் சமுதாயப் பணியும் ஆற்றியுள்ளார்.

தோழர் வ.சுப்பையா அவர்களின் பன்முகப்பட்ட பணிகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில், குறிப்பாக புதுவையின் விடுதலைப் போருக்கு வித்திட்டு வளர்த்து விடுதலையை முழுமைப்படுத்திப் பெற்றுத்தந்த மிகச் சிறந்த தேசபக்த விடுதலை மறவர். 1934 ஆம் ஆண்டிலேயே சுதந்திரம் என்ற பத்திரிக்கையை உருவாக்கித் தொடர்ந்து நடத்தி முற்போக்கு இதழ்களுக்கெல்லாம் முன்னுதாரணமாகத் திகழ்ந்த சிறந்த பத்திரிக்கையாளர்.

அகில இந்தியத் தொழிற்சங்க காங்கிரஸ் என்ற தேசிய அமைப்பின் திறமை மிக்க தலைவர். இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். சமூகம், பொருளாதாரம், அரசியல், இலக்கியம் ஆகிய துறைகளில் எழுத்தாற்றலும் நாவன்மையும் ஒருங்கே கொண்ட சிந்தனையாளர். அரசியலில் பல பெரும் பொறுப்புகளை ஏற்றுத் திறம்பட நிர்வாகம் செய்த ஆற்றல் மிக்க நிர்வாகி. எல்லாவற்றுக்கும் மேலாக மக்களால் மதித்துப் போற்றப்படும் மக்கள் தலைவர்.
II
தோழர் வ.சுப்பையா அவர்களின் நூற்றாண்டு விழாக்(1911-2011) காலமிது. பொதுவாகத் தலைவர்களின், மிகச்சிறந்த சாதனையாளர்களின் நூற்றாண்டு விழாக்கள் கொண்டாடப்படுவதில் ஒரு சிக்கல் உண்டு. அவர்களின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களுக்குப் பின்னர் அவர்கள் மீண்டும் ஒருமுறை குழி தோண்டிப் புதைக்கப்படுவார்கள். இந்தமுறை இன்னும் கொஞ்சம் ஆழமாகவே அவர்களின் புதைகுழி அமைந்துவிடும். அதாவது நூற்றாண்டு விழாக்கள் அவர்களின் இரண்டாவது மரணமாக அமைந்துவிடும் ஆபத்து தவிர்க்க இயலாமல் நேர்ந்து விடுவதுண்டு. இவ்விபத்து எல்லா நூற்றாண்டு விழா நாயகர்களுக்கும் ஏற்படுவதில்லை. சராசரித் தலைவர்களுக்கும் சராசரிப் படைப்பாளிகளுக்கும்தான் இப்படி நேர்ந்துவிடும் ஆபத்துண்டு.

ஆனால் வாழும் காலத்திலேயே வரலாறாக வாழ்ந்து காலத்தினால் அழிக்கமுடியாத புதிய வரலாற்றைப் படைத்தளிக்கும் மகத்தான தலைவர்களுக்கு இவ்விதி பொருந்துவதில்லை. அவர்களின் நூற்றாண்டு விழாக்கள் அவர்களை மீண்டும் இந்த உலகிற்குப் பெற்றுத் தருகின்றன. மகத்தான தலைவர்கள், நூற்றாண்டு விழாக்களின் போது மீண்டும் பிறக்கிறார்கள். இந்தமுறை அவர்களின் பிறப்பு முதல் பிறப்பைவிட அதிக முக்கியத்துவம் பெற்றதாக அமைந்துவிடுகின்றது. வாழும் காலத்தில் சாதித்ததைவிடப் பல மடங்குச் சாதனைகளை அவர்கள் இந்த இரண்டாம் பிறப்பிலே சாதிப்பார்கள். அண்ணல் காந்தி, அண்ணல் அம்பேத்கர், தந்தைப் பெரியார், மகாகவி பாரதி முதலான சரித்திர நாயகர்களின் நூற்றாண்டு விழாக்கள் என்னுடைய கூற்றுக்குச் சான்று பகரும். மக்கள் தலைவர் வ.சுப்பையா அவர்களின் நூற்றாண்டு விழாவும் இத்தகு சரித்திர நாயகர்களின் நூற்றாண்டு விழாக்களைப் போல மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

எந்த ஒரு மண்ணுக்கும் நேராத, நேரக்கூடாத அவலம் புதுச்சேரிக்கு நேர்ந்து விட்டமை ஒரு வரலாற்றுக் கொடுமை. புதுச்சேரியின் விடுதலைநாள் எது? என்பதை அறியாத மக்கள், தெரிந்தும் தெரியாததுபோல் காட்டிக்கோள்ளும் அரசுகள் இதெல்லாம் புதுச்சேரிக்கு மட்டுமே கிடைத்த சாபக்கேடு. 1954 நவம்பர் 1 ஆம் தேதி புதுச்சேரியின் விடுதலைநாள். இது வரலாற்று உண்மை. ஆனால் புதுச்சேரி அரசும் மக்களும் கொண்டாடும் நாளோ! ஆகஸ்டு 16. இந்த வரலாற்றுப் பிழையின் பின்னால் ஒளிந்துகிடக்கும் நாடகங்கள் எத்தனை எத்தனையோ! தோழர் வ.சுப்பையா அவர்களின் நூற்றாண்டு விழாக்களின் பின்விளைவாக இந்தக் கபட நாடகங்கள் முடிவுக்கு வரவேண்டும்! வரும்! ஆதனைச் செய்து முடிப்பதில்தான் நூற்றாண்டு விழாக்களின் முழுமையே அடங்கியுள்ளது.

III
புதுவைத் தமிழ்நெஞ்சன் புதுச்சேரியின் ஆற்றல் மிக்க இளைஞர். பன்முகப்பட்ட ஆளுமைகளைக் கொண்டவர். அன்பும் தோழமையும் கொண்டு அனைவரிடமும் பழகும் பண்பாளர். கவிதை, உரைநடை இரண்டு வடிவங்களையும் அழுத்தமாகக் கையாளக் கூடியவர். எழுத்து, பேச்சு என்பதோடு நின்றுவிடாமல் செயலிலும் முற்போக்காளர். பேராட்ட குணம் அவரின் அடிப்படைப் பண்பு. எதையும் வெளிப்படப் பேசி விமர்சிக்கக் கூடிய துணிச்சல் மிக்கவர். அதனால் வரும் பகைமையைக் கண்டு அஞ்சாதவர். இனவுணர்வாளர். மொழி, இன, நிலக் காப்புப் போராட்டங்களில் முன்வரிசையில் நிற்பவர்.

தோழர் புதுவைத் தமிழ்நெஞ்சன் மக்கள் தலைவர் வ.சுப்பையா அவர்களின் நூற்றாண்டைக் கொண்டாடும் விதத்தில் உருவாக்கியுள்ள ஓர் உயரிய படைப்பே தோழர் வ.சுப்பையா என்ற இக்கவிதை நூல். அடிப்படையில் மக்கள் தலைவரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளின் பதிவாக உருவாகியுள்ள இக்கவிதை நூலில் பொதுவுடைமை மற்றும் செங்கொடிகளின் மேன்மையும் தோழர் கருணாசோதியின் பெருமைகளும் இடையிடையே பேசப்படுகின்றன.

மக்கள் தலைவரின் வாழ்க்கையைப் பேசும் நூலின் இடையிடையே அவரோடு தொடர்புடைய இயக்கம் மற்றும் இயக்கத் தோழர்கள் குறித்துப் பேசுவது நூலுக்கு ஒரு புதிய பரிமாணத்தைத் தருகின்றது. தோழர் வ.சுப்பையாவின் புதுச்சேரி விடுதலைப் போராட்ட வாழ்க்கையில் உடன் பணியாற்றும் வாய்ப்பு பெற்ற நூலாசிரியரின் தந்தை சீனுவாசனார் குறித்த வரலாற்றுப் பதிவுகளையும் நூலாசிரியர் தமிழ்நெஞ்சனுக்கும் மக்கள் தலைவருக்குமான சந்திப்புகள் குறித்த பதிவுகளையும் ஆசிரியர் நூலில் இடம்பெறச் செய்திருப்பது காலத்தின் தேவையறிந்த நல்லபணி.

சீனுவாசன் திருமணமே
சீர்திருத்த முதல்மணமாம் சண்முகாபுரத்தில்
சீனுவாசன் சுப்பையாவின்
சிந்தனைக்கு ஏற்றமுள்ள உண்மைத் தோழர்
பாவேந்தர் வந்திருந்து
பாராட்டிச் சென்றுவிட்டார் ஊரில் உள்ளோர்
நாவேந்தித் திருமணத்தை
நல்லபடி பேசுகின்றார்.. .. புரட்சியாக
சாவேந்தா சுப்பையா
சரியாக வந்திருந்து வாழ்த்திச் சென்றார்.


தம் தந்தையாரின் திருமணம் அந்த நாளிலேயே சீர்திருத்தத் திருமணமாக நடைபெற்றதையும் மக்கள் தலைவர், பாவேந்தர் முதலானவர்கள் வந்திருந்து வாழ்த்துக் கூறியமையும் மிக அழகாகப் பதிவுசெய்கிறார் நூலாசிரியர்.

மார்க்சியமே வாழும் வழி, பொதுவுடைமை, செங்கொடி ஏந்தடா! முதலான தலைப்புகளில் மார்க்சியம் குறித்தும், பொதுவுடைமை இயக்கம் குறித்தும், செங்கொடியின் பெருமை குறித்தும் நூலில் விரிவாகப் பேசும் தமிழ்நெஞ்சன் இந்திய இடதுசாரி இயக்கங்கள் குறித்த தமது விமர்சனப் பார்வையையும் நூலில் அழுத்தமாகப் பதிவுசெய்கின்றார்.

பொதுவுரிமை இல்லாமல்
பொதுவுடைமை அமையாது
இதுவரையில் மார்க்சியர்கள்
இதையறிதல் கிடையாது
சாதிக்குக் காப்பளிக்கும்
சட்டத்தை மீறாமல்
சமவுரிமை வந்திடுமா?
சமவுடைமை அமைந்திடுமா?
ஒப்போலை வழியாக
ஒழியாது சாதிமதம்
இப்போதே புரட்சியினைச்
செய்யாமல் விடிவேது


வருணாசிரம வல்லடி மிக்க இந்தியச் சமூக அவல நிலைமைகளைக் கணக்கில் கொள்ளாமல் இங்கே மார்க்சியம் பேசப்படுவதில் தமக்கு உடன்பாடில்லை என்பதனையும் பாராளுமன்ற சனநாயக வழியில் சமவுடைமை சாத்தியமில்லை, புரட்சி ஒன்றே வழி என்பதனையும் நூலாசிரியர் தெளிவுபடுத்தியிருப்பது அவரின் அரசியல் தெளிவை வெளிப்படுத்துகின்றது.

மக்கள் தலைவர் வ.சுப்பையாவின் போர்ப்படையின் இளைய தளபதியாக வீறுடன் செயல்பட்டுப் புதுச்சேரியின் விடிவெள்ளி என்ற நம்பிக்கையூட்டிய தோழர் கருணாசோதி குறித்த தமிழ்நெஞ்சனின் கவிதைகள் உண்மையில் நல்ல வரலாற்றுப் பதிவுகள்.

கருணா சோதி ஒளியில் தானே
காரிருள் இங்கே ஓடியது –அவன்
வருகை தந்த வழியில்தானே
இளைஞர் கூட்டம் கூடியது
பொதுமை உலகைப் படைக்க விரும்பி
புரட்சிப் படையை அமைத்திட்டான் - நம்
புதுவை மண்ணில் பூத்த செம்மல்
புரட்சி இளைஞனாய் வாழ்ந்திட்டான்


தோழர் கருணா சோதியின் எதிர்பாரா மறைவு (படுகொலை) புதுச்சேரியின் பொதுவுடைமை இயக்க அரசியல் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய பின்னடைவு என்பதனையும் ஆசிரியர் குறிப்பிடத் தவறவில்லை.

மக்கள் தலைவரின் வரலாறு இன்றைய இளந்தலைமுறை யினருக்குச் சொல்லப்பட வேண்டும் என்ற நோக்கில் அவரின் போராட்ட வாழ்க்கையின் முக்கியப் பக்கங்களைக் கவிதை வடிவில் வடித்துக்காட்டும் இந்நூல், பலவகை மரபுப் பாவடிவங்களில் அமைந்துள்ளமை இதன் தனிச்சிறப்பு. திட்டமிட்ட வகையில் வாழ்க்கை வரலாறாக இந்நூலினை அமைக்காமல் தலைவரின் வாழ்க்கைப் பதிவுகள் சிதறிக் கிடக்கும் போக்கில் நூல் அமைந்துள்ளதால் போதிய மனநிறைவு கிடைக்கவில்லை என்பது ஒரு குறை என்றாலும் ஒவ்வொரு கவிதையும் தன்னளவில் ஒரு முழுமையைப் பெற்றிருப்பதனால் அந்தக் குறையும் பெரிதாகத் தோன்றவில்லை.

மக்கள் தலைவர் வ.சுப்பையாவின் நூற்றாண்டை ஒட்டித் தமிழிலும் ஆங்கிலம் முதலான பிற மொழிகளிலும் நிறைய நூல்கள் வந்திருக்க வேண்டும். தனித்தன்மை மிக்க அவரின் சுதந்திரப் போராட்ட வாழ்க்கை பரவலாகப் புதுவை மட்டுமின்றி தமிழகத்திற்கும், தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுமைக்குமே சொல்லப்பட்டிருக்க வேண்டும். தேன்னிந்தியாவில் இடதுசாரி இயக்கம் தோன்றவும் பரவவும் தக்க துணையாய் இருந்து களத்தில் நின்று பணியாற்றிச் சொல்லவொண்ணா வேதனை களையும் சோதனைகளையும் எதிர்கொண்டு சாதித்துக்காட்டிய ஓர் ஒப்பற்ற தலைவர் தோழர் வ.சுப்பையா அவர்கள். அவரின் பேராட்ட வாழ்க்கை இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாது. ஏன் தெரியாது? என்றால் சொல்லப்படவில்லை. சொல்ல விரும்பவில்லை.

இந்திய விடுதலையைப் போலவே புதுச்சேரியின் விடுதலையும் ஒரு குறிப்பிட்ட தேசிய இயக்கத்திற்குத்தான் சொந்தமானது என்று புனையப்பட்ட புனைவுகளையே உண்மையென்று நம்பிக்கொண்டிருப்பவர்கள் நாம். ஆனால் வரலாற்றின் பக்கங்கள் பொய்பேசுவதில்லை. தோழர் சுப்பையாவின் விடுதலைப் போராட்டப் பங்களிப்பு யாராலும் மறுக்கப்படவோ, மறைக்கப்படவோ முடியாதது. தோழர் தமிழ்நெஞ்சன் இந்நூலின் வழியாகத் தம் வரலாற்றுக் கடமையைச் செவ்வனே ஆற்றியுள்ளார். புதுச்சேரியின் இடதுசாரி இயக்கம் குறித்த சரியான புரிதல்களோடும் வரலாற்றுணர்வோடும் எழுதப் பட்டிருக்கும் இக் கவிதைநூல் உரிய காலத்தில் வெளிவருகின்றது. தமிழுலகம் இதனை ஏற்றுப் போற்றும் என்பதில் ஐயமில்லை.






கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...