ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

பழந்தமிழனின் பாறை ஓவியங்கள் - கீழ்வாலை - சிற்றுலா (26-01-2013)

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

விழுப்புரம் திருவண்ணாமலை சாலையில் கண்டாச்சிபுரம் அருகே உள்ள சிற்றூர் கீழ்வாலை. நெடுஞ்சாலையை ஒட்டித் தெற்கே அரை கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள பாறைகளும், சிறுகுன்றுகளும், மலைக்குகைகளும் கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றின் மிச்ச சொச்சங்களுடன் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன.


கீழ்வாலையின் அந்தப் பாறைகளில் பழங்கற்கால மனிதர்கள் வரைந்துள்ள சிவப்புநிற ஓவியங்கள் பல காணப்படுகின்றன. இத்தகு பாறை ஓவியங்கள் பெருங்கற்கால ஓவியங்கள் என்று அழைக்கப்  படுகின்றன. அப்பாறையில் இடம்பெற்றுள்ள சில குறியீடுகள் சிந்து சமவெளிக் குறியீடுகளை ஒத்துள்ளன என்பது கூடுதல் சிறப்பு.



கீழ்வாலையின் பாறைகளில் இடம்பெற்றிருந்த நூற்றுக்கணக்கான ஓவியங்கள், குறியீடுகள் இவற்றில் காலவெள்ளத்தில் அழிந்தவை போக எஞ்சியிக்கும் ஓவியங்கள் வெகுசிலவே. கடந்த இருபதாண்டுகளுக்கு முன் நான் பார்த்தபோது தெளிவாகத் தெரிந்த ஓவியங்கள் பலவும் இப்போது மங்கி அழிவின் விளிம்பில் இருக்கின்றன.



இப்பொழுதும் மிக அழகாகக் காட்சியளிக்கும் ஓர் ஓவியம் நம்கண்ணையும் கருத்தையும் கவரத்தக்க வகையில் தீட்டப்பட்டிருக்கிறது. அவ்வோவியத்தில் குதிரை போன்றதோர் விலங்கின் மீது ஒருவன் அமர்ந்திருக்க அவ்விலங்கைப் பிணித்துள்ள கயிற்றினைப் பிடித்துக்கொண்டு ஒரு பெண் முன்னே செல்வது போன்றும் எதிரில் ஒரு மனிதன் எதிர்ப்படுவது போன்றும் அமைந்துள்ளது அவ்வோவியம். மனிதர்களின் முகங்கள் பறவைகளின் அலகுகளோடு தீட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.



அதே பாறையின் ஒருபுறத்தில் ஐந்து குறியீடுகள் வரிசையாக வரையப்பட்டுள்ளன. அந்த ஐந்து குறியீடுகளும் சிந்துசமவெளி அகழ்வாய்வில் கிடைத்துள்ள எழுத்துக் குறியீடுகளை ஒத்துள்ளன.
எழுத்துக் குறியீடுகளும் ஓவியங்களும் தீட்டப்பட்டுள்ள குன்றுக்கு அருகே அவ்வோவியங்களைத் தீட்டிய ஆதிமனிதர்கள் வாழ்ந்த குகை ஒன்றும் உள்ளது. அந்தக் குகையில் கிட்டத்தட்ட முப்பது அல்லது நாற்பதுபேர் வசித்திருக்கக்கூடும் என்று ஊகிக்க முடிகிறது. ஆதி மனிதர்களின் இந்தக் குகையை ஒட்டி நீர்ச்சுனை ஒன்று உள்ளது. எத்தகைய வறட்சியிலும் வற்றாத இந்தச் சுனைநீரை அந்த ஆதிமனிதர்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும். இந்தக் குகையும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளும் அரிய வரலாற்றுப் புதையல்களாகும்.





இத்தகு அரிய வரலாற்றுச் சிறப்புமிக்க கீழ்வாலைப் பாறை ஓவியங்கள் இன்று கவனிப்பாரற்று எத்தகைய பராமரிப்பும் இல்லாமல் சிதைந்து சீரழிந்து வருவது வேதனையளிக்கக் கூடிய செய்தியாகும். கீழ்வாலையின் பாறைக் குன்றுகள் தற்போது வெடிவைத்துத் தகர்க்கப்பட்டுக் கருங்கல் ஜல்லிகளாக உருமாறிக் கொண்டிருக்கின்றன. இன்னும் கொஞ்சநாளில் கீழ்வாலையின் வரலாற்றுப் பொக்கிஷங்கள் இருந்த சுவடே தெரியாமல் அழிந்துபோகக் கூடிய ஆபத்து இருக்கிறது.




சில நூறாண்டுக் காலச் சின்னங்களைக் கூட அரிய வரலாற்றுப் பெட்டகங்களாகப் போற்றிப் பராமரித்துக் காட்சிப் பொருளாக்கிப் பெருமைபேசும் மேற்கத்திய நாடுகளிடமிருந்து நாம் கற்கத் தவறிய பாடம் இது.

2 கருத்துகள்:

கவியாழி சொன்னது…

தெரிந்துகொள்ள வேண்டிய நல்ல பகிரவு

முனைவர் நா.இளங்கோ சொன்னது…

நன்றி

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...