செவ்வாய், 1 ஜூன், 2010

புதுமைப்பித்தனின் அகலிகைத் தொன்மம் -பகுதி 3

அகலிகைத் தொன்மம்

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
பட்ட மேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8

அகலிகைத் தொன்மம்:

வடமொழியில் முதல்காவியம் செய்த வான்மீகியே முதன்முதலில் அகலிகைக் கதைக்கு இலக்கிய உருவம் கொடுத்தார். வான்மீகி சொன்ன கதை இது,மகாமுனி கௌதமரும் அகலிகையும் ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்தனர். அகலிகையின் அழகில் மயங்கிய இந்திரன் அவளை அடையும் நோக்கத்துடன் ஒருநாள் கௌதமன் ஆசிரமத்தில் இல்லாத நேரம் பார்த்து கௌதமனாகி உருமாறி வந்து நாம் இப்போதே கூடுவோம் என்றான். வந்திருப்பது கணவன் இல்லை, தேவேந்திரனே என்பதைத் தெரிந்துகொண்ட அகலிகை, இந்திரனே நம்மைத் தேடிவந்துள்ளானே என்று தன் அழகைப்பற்றி கர்வப்பட்டு அவனுக்கு உடன்பட்டாள்.பிறகு தேவேந்திரனே விரைந்து புறப்படு, அபாயத்திலிருந்து உன்னைக் காத்துக்கொள் என்று எச்சரித்து அனுப்ப, உனக்கு நன்றி என்றுகூறி தேவேந்திரன் புறப்படும் வேளையில் அங்குவந்த கௌதமன் இந்திரன் வேடத்தைக் கண்டு நடந்தவற்றை உணர்ந்துகொண்டார்.மூடனே! என் வேஷத்தைத் தரித்துக்கொண்டு ஆசிரமத்தில்புகுந்து தகாததைச் செய்த நீ ஆண்மை இழக்கக்கடவாய் என்று இந்திரனுக்கு சாபமிட்டார். அகலிகையே! நீ இங்கே நீண்டகாலம் காற்றே உணவாக எந்தவொரு ஆகாரமுமின்றிச் சாம்பல்மேல் படுத்து யார் கண்ணுக்கும் தென்படாமல் மறைந்து வசிப்பாயாக. பலகாலம் கழித்து இங்கு வரப்போகும் இராமன் பாதம் ஆசிரமத்தில் படும்போது உன் பாவம் நீங்கும் என்று அகலிகைக்குச் சாபமிட்டார்.

தமிழில் அகலிகைத் தொன்மம்

தமிழில் முதன்முதலில் அகலிகைத் தொன்மம் இடம்பெற்ற நூல் பரிபாடல். மிகச்சுருக்கமாக அகலிகைக் கதை இந்நூலில் இடம்பெற்றுள்ளது. திருப்பரங்குன்றத்தில் உள்ள ஓவியச் சாலையில் இடம்பெற்றுள்ள பல ஓவியங்களைக் கண்டு வருவோர், இந்த ஓவியத்தைச் சுட்டிக்காட்டி, இந்திரன் ப+சை இவள் அகலிகை இவன் சென்ற கவுதமன் சினனுறக் கல்லுருஒன்றிய படியிதென்று உரை செய்வோரும் (நப்பண்ணனார், பரிபாடல், பா. 19)‘இவ்வுருவம் பூனைவடிவமெய்திய இந்திரனது, இவள் அகலிகை, இவன் கௌதமன், இவன் கோபித்தலால் இவள் கல்லுருவானவாறு இது’ என்று மக்கள் பேசிச்சென்ற காட்சியை வருணிக்கும் பகுதியில் அகலிகைக் கதை இடம்பெற்றுள்ளது. இந்திரன் பெற்ற சாபம் பற்றிய குறிப்பு இப்பகுதியில் இடம்பெறவில்லை, ஆனால் பரிபாடலின் ஒன்பதாம் பாடலில் குன்றம்பூதனார் செவ்வேளின் மனைவி தேவசேனையைக் குறிக்குமிடத்தில் ‘ ஐயிரு நூற்று மெய்ந் நயனத்தவன் மகள்’ என்று குறிப்பிடும் இடத்தில் இந்திரன் ஆயிரம் கண்ணுடையவன் என்று சுட்டப்படுவதால் இந்திரன் சாபம் நினைவுக்கு வருகின்றது.

பரிபாடல் கூறும் வடிவத்திலேயே கம்பர் தம் இராமகாதையில் இக்கதையை விவரித்துள்ளார். கௌதமருடைய சாபத்தைப் பொருத்தவரையில் வான்மீகத்திலிருந்து வேறுபடும் கம்பர் அகலிகையின் பாத்திரப்படைப்பிலும் மிக முக்கியமானதொரு மாற்றத்தைச் செய்கின்றார். தவறிழைத்த அகலிகையைக் கம்பன், ‘நெஞ்சினால் பிழைப்பிலாதாள்’ என்றே விசுவாமித்திரர் வாயிலாகக் குறிப்பிடுகின்றான். அதுமட்டுமின்றி, சாபவிமோசனத்திற்குப் பின் இராமன் கௌதமரை வணங்கி, ‘மாசறு கற்பின் மிக்க அணங்கினை அவன்கை ஈந்து’ தன் பயணத்தைத் தொடர்ந்ததாகவும் குறிப்பிடுகின்றான் கம்பன். கம்பன் செய்த இந்த மாற்றங்களுக்குப் பிறகு அகலிகைத் தொன்மம் வடமொழித் தொன்மத்திலிருந்து தமிழ்த் தொன்மமாக மாற்றம் பெறுகின்றது.

கம்பருக்குப் பின்னர் அகலிகைத் தொன்மத்தை விரிவான வகையில் தனிநூலாக இருநூற்றுத் தொண்ணூற்றைந்து வெண்பாக்களால் உருவாக்கித் தந்தவர் வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார். அவர் செய்த நூல் அகலிகை வெண்பா. இருபதாம் நூற்றாண்டில் அகலிகைத் தொன்மம் மீண்டும் மீண்டும் பலராலும் மறுபடைப்பாக்கம் செய்யப் பெற்றுள்ளது. அப்படைப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் குறிப்பிடத் தக்க படைப்பாக விளங்குகின்றன.

அகலிகைத் தொன்மத்தைக் கையாண்டு அகல்யை, சாப விமோசனம் என்ற இரண்டு சிறுகதைகளைப் படைத்துள்ளார் புதுமைப்பித்தன். அகலிகைத் தொன்மத்தைப் பொறுத்தமட்டில் இருவேறு மரபுகள் காணப்படுகின்றன. ஒன்று வடமொழி அகலிகைத் தொன்ம மரபு, மற்றொன்று தமிழ் அகலிகைத் தொன்ம மரபு. இப்படி இருவேறு மரபுகளாகக் கணக்கில் கொள்ளும் வகையில் இரண்டு மரபுகளும் மாறுபடுகின்றன. வடமொழி அகலிகைத் தொன்மத்தில் வந்திருப்பவன் இந்திரன் என்று தெரிந்தே அவனுடன் கூடுகிறாள் அகலிகை, கல்லாகும் சாபம் அவளுக்கு இல்லை. தமிழ் அகலிகைத் தொன்மத்தில் வந்திருப்பது இந்திரன் என்று அறியாமல் கணவன் என்று நினைத்தே அகலிகை அவனுடன் கூடுகிறாள். மனதால் களங்கமற்றவள் என்று சித்தரிக்கப்படுகிறாள். கௌதமனால் கல்லாகுமாறு சபிக்கப்படுகிறாள். இந்த இருவகை அகலிகைத் தொன்மங்களும் இருபதாம் நூற்றாண்டின் நவீன படைப்பாளிகளுக்கு பயன்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...