சனி, 5 ஜூலை, 2008

சமகாலத் தமிழிலக்கியப் படைப்புகளில்

சமகாலத் தமிழிலக்கியப் படைப்புகளில்
புதுச்சேரியின் பங்களிப்பு

முனைவர் நா.இளங்கோ
இணைப்பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8.

இருபதாம் நு}ற்றாண்டுத் தமிழ்க் கவிதைகளில் புதுச்சேரியின் பங்களிப்பு

சங்க இலக்கியங்களைத் தவிர்த்து, கடந்த 19ஆம் நூற்றாண்டுவரை தமிழ்க் கவிதைகளின் நோக்கம் பெரிதும் தனிமனிதத் தேவைகளை ஒட்டியதாகவே அமைந்திருந்தது. இவ்வுலகில் வாழும் வகைநாடி அரசர்களையோ வள்ளல்களையோ புரவலர்களைகளையோ பாடிப் புகழ்ந்து பொருள் நாடினர் புலவர் பலர். சிலரோ மேலுலகப் பேறு வேண்டிக் கடவுள்களைப் பராவுவதில் காலம் கழித்தனர். இன்னும் சிலரோ தாசியின் மஞ்சத்தில் தமிழ்க்கவிதைகளை அமரவைத்து வேடிக்கை பார்த்தனர். 'கூளப்ப நாயக்கன் காதல்" போன்ற காதல் இலக்கியங்கள் இதற்குச் சான்று. பொதுவில் கவிதை சமூக மேம்பாட்டிற்கானதாய் இல்லாமல் தனிமனித மேம்பாட்டிற்கானதாகவே இருந்தது. சிற்றிலக்கியங்கள் இதன் உச்சகட்டம்.

ஐரோப்பியர்/ ஆங்கிலக் கல்வி வருகைக்கு முன்னர்வரை தமிழில் உரைநடைகளுக்குரிய பணிகளையும் கவிதை என்ற பெயரால் அழைக்கப்படும் செய்யுள்களே செய்துவந்தன. கடிதங்கள், சோதிட நு}ல்கள், மருத்துவ நு}ல்கள், கணிதக் குறிப்புகள் அனைத்தும் செய்யுள் வடிவிலேயே அமைந்தன. ஆங்கிலக் கல்விதான் உரைநடை, கவிதை இவைகளுக்கு இடையேயான பணிகளைப் பிரித்தது. இருபதாம் நு}ற்றாண்டில்தான் தமிழில், கவிதைகள் கவிதைகளுக்கான வேலையையும் உரைநடை உரைநடைகளுக்கான வேலையையும் செய்யத் தொடங்கின.

20ஆம் நூற்றாண்டுக் கவிதையுகம் பாரதியிலிருந்து தொடங்குகிறது. மரபின் அனைத்து வளங்களையும் தனதாக்கிக்கொண்டு அதுவரை தமிழ்க் கவிதை தொடாத சிகரங்களை நோக்கிப் பாரதியின் கவிதை பயணித்தது. பாரதி கவிதைகளுக்கான ஊற்றுக் கண்களாக 19 ஆம் நூற்றாண்டின் வள்ளலார், மாயூரம் வேதநாயகர், கோபாலகிருஷ்ண பாரதியார், பேராசிரியர் சுந்தரம் பிள்ளை முதலானவர்களின் கவிதைகள் திகழ்ந்தன. 1905ஆம் ஆண்டு வங்கப் பிரிவினையை ஒட்டி இந்தியாவெங்கும் ஏற்பட்ட அரசியல் விழிப்புணர்வோடு பாரதியின் கவிதையுகம் தொடங்குகின்றது. 1908 இல் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி காரணமாகப் புதுவைக்குப் புலம் பெயர்ந்த பாரதி, 1908 முதல் 1918 வரை புதுவையில் வாழ்ந்த காலத்தில்தான் மகாகவியாய் ஏற்றம் பெற்றான். பாரதியின் புதுவை வாழ்க்கை தத்துவ ரீதியாகப் பல புதிய கதவுகளை அவனுள் திறந்து வைத்தது. தன்னுடைய அறிவினுக்குப் புலப்படல் இன்றித் தேய மீது எவரோ சொல்லும் சொல்லினைச் செம்மையென்று மனத்திடைக் கொள்ளும் தீய பக்தி இல்லாத பாரதி, தம் படைப்புக்களின் மையப்பொருளாக மானுடத்தை வைத்தான். மானுட மேன்மைக்குத் தன் கவிதைகளைப் பயன்படுத்தினான். குறிப்பிட்ட ஜாதி, மதம், மொழி, இனம் என்றில்லாமல் மனிதகுலம் முழுமைக்குமாகத் தேடினான். இந்தத் தேடல்தான் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதைகளின் மூலவேர்.

ஆக 20ஆம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை புதுவையில் இருந்துதான் தொடங்கியது. பாரதிக்குப் பிறகுதான் தமிழகக் கவிஞர்கள் பாரதி காட்டிய புதுநெறியில் தளர்நடை போடத் தொடங்கினார்கள். பாரதி காட்டிய புதுநெறியில், தேசீயம், தமிழுணர்வு, சமுதாயச் சீர்திருத்தச் சிந்தனைகள், சமத்துவம் முதலான புதிய பாடுபொருள்கள் தமிழ்க் கவிதைகளுக்குக் கிடைத்தன.
தமிழ்க் கவிதைகளைப் பொருத்தமட்டில் இருபதாம் நு}ற்றாண்டு என்ற காலப்பரப்பைத் தோராயமாக நான்கு கால் கால் நு}ற்றாண்டுகளாகப் பகுத்துக்கொள்ளலாம்.

முதல் கால் நூற்றாண்டு 1925 வரை பாரதி காலம்,
இரண்டாம் கால் நூற்றாண்டு 1950 வரை பாரதிதாசன் காலம்,
மூன்றாம் கால் நூற்றாண்டு 1975 வரை பாரதிதாசன் பரம்பரையினர் காலம்,
நான்காம் கால் நூற்றாண்டு 2000 நவீன கவிதைகளுக்கான காலம்.
பாரதி தமிழ்க் கவிதையுலகிற்குத் தந்த தேசீயம், தமிழுணர்வு, சமுதாயச் சீர்திருத்தச் சிந்தனைகள், சமத்துவம் ஆகிய புதிய பாடுபொருள்களே இருபதாம் நூற்றாண்டு முழுமைக்கும் தமிழ்க்கவிதைகளுக்கான பாடுபொருள்களாக இருந்தன.

பாடலில் பழமுறை பழநடை என்பதோர்
காடு முழுவதும் கண்டபின்
கடைசியாய்
சுப்பிரமணிய பாரதி தோன்றியென்
பாட்டுக்குப் புதுமுறை புதுநடை
காட்டினார்

என்று பாரதிதாசனே குறிப்பிட்டவாறு, பாரதியிடமிருந்து தம் கவிதைப் பயணத்தைத் தொடங்கிய பாரதிதாசன் தொடக்கத்தில் பாரதி கவிதைகளின் நகல்களாகவே தம் கவிதைகளை அமைத்துக் கொண்டார். 1928 ஆம் ஆண்டு முதல் தந்தைப் பெரியாரிடமும் அவரின் சுயமரியாதை இயக்கத்துடனும் தம்மைத் தீவிரமாகப் பிணைத்துக்கொண்டு தன்னை, முழு நாத்திகன் என்று அறிவித்துக்கொண்டது முதல் பாரதிதாசனின் கவிதைகள் புதிய தளத்தில் வீறுநடை போடத் தொடங்கின. பாரதியின் தேசியத்துக்கு மாற்றாக தீவிரத் தமிழ்த் தேசியம், பாரதியின் ஆன்மீகத்துக்கு மாற்றாக கடவுள் மறுப்பு, சமய எதிர்ப்பு, ஆரிய எதிர்ப்பு எனப் புதிய புதிய பாடுபொருள்களுடன் தமிழ்க்கவிதை உலகம் தம்மிலிருந்து தொடங்கும்படியாகத் தம் கவிதை ஆளுமையால் புதுப்பாதை சமைத்தார். இந்தப் புதிய பாதையும் புதுவையிலிருந்துதான் போடப்பட்டது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதையில் பாரதியும் பாரதிதாசனும் சாதித்தவற்றுக்கு இணையாகக் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர்கள் ஒருவரும் இல்லை. இந்நு}ற்றாண்டின் தமிழ்க் கவிஞர்களைப் பாரதி பரம்பரை (வெ.இராமலிங்கம் பிள்ளை, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, ச.து.சு. யோகியார், திருலோக சீத்தாராம், அ.சீனுவாச ராகவன், கா.மு.ஷெரீப், கொத்தமங்கலம் சுப்பு, பெ.தூரன், எஸ்.டி. சுந்தரம்), பாரதிதாசன் பரம்பரை (வாணிதாசன், புதுவைச் சிவம், முடியரசன், கண்ணதாசன், புலவர் குழந்தை, பெருஞ்சித்திரனார், பொன்னடியான், சுரதா, முருகு சுந்தரம், தமிழன்பன், நா.காமராசன்) என்ற இருபிரிவுகளுக்குள்ளேயே அடக்கிவிட முடியும். கவிஞர் தமிழ்ஒளி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், ப.ஜீவானந்தம், திருமூர்த்தி, கம்பதாசன் முதலான கவிஞர்கள் பாரதிதாசன் பரம்பரையில் தனிப்பாதை சமைத்துக் கொண்ட பொதுவுடைமைக் கவிஞர்களாவர்.
பாரதியின் தேசியக் கவிதைப் பரம்பரை, பாரதிதாசனின் தமிழ்த் தேசியக் கவிதைப் பரம்பரை, தமிழ்ஒளியின் பொதுவுடைமைக் கவிதைப் பரம்பரை என்ற தமிழ்க் கவிதையின் மூன்று முக்கிய கவிதைப் பரம்பரைகளும் புதுவையில் இருந்துதான் தொடங்கின, வளர்ந்தன, செழித்தன.

1975க்குப் பிறகு தமிழகத்தில் மரபுக் கவிதைகளுக்கு மரியாதை இல்லை. வீச்சும் குறைந்துவிட்டது. திராவிட இயக்கம் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தபிறகு அதுவரை மரபுக் கவிதைகளின் உள்ளடக்கமாயிருந்த தமிழ்த் தேசீயம் குறித்த பாடுபொருள்கள் நமத்துப் போய்விட்டன. புதிய முற்போக்குச் சிந்தனைகளுக்கு மரபுக் கவிதைகளின் வடிவம் பொருந்திவராது என்று கவிஞர்கள் நினைக்கத் தொடங்கியதன் விளைவு சிறந்த மரபிலக்கியக் கவிஞர்கள் புதுக்கவிதைகளைக் கையில் எடுக்கத் தொடங்கினார்கள். வானம்பாடி இயக்கம் இப்படி உருவானதுதான். இவர்களில் பலரும் பாரதி, பாரதிதாசன் கவிதை மரபுகளை உள்ளடக்கத்தில் உள்வாங்கிக் கொண்டு கூடுதலாக மார்க்சீய வெளிச்சத்தில் புதுக்கவிதை படைக்க வந்தவர்கள். புவியரசு, சிற்பி, நா.காமராசன், மீரா, தமிழன்பன், அப்துல் ரகுமான், மு.மேத்தா முதலான கவிஞர்களை இந்த வரிசையில் நாம் அடையாளம் காணமுடியும்.

புதுச்சேரியைப் பொருத்தமட்டில் பாரதிதாசன் பரம்பரைதான் இருபதாம் நூற்றாண்டின் இறுதிவரையிலும் தொடர்ந்தது. ஏன் இன்றும் கூடத் தொடர்கிறது. பாரதிதாசனின் தமிழ்த் தேசியம், பகுத்தறிவு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, சீர்திருத்தம், சமத்துவ நாட்டம் முதலான உள்ளடக்கங்களோடு தமிழ்ஒளியின் ஒடுக்கப்பட்டவர்கள் குரலாகக் கவிதையைப் படைக்கும் மார்க்சீயக் கவிதைப்பாணியும் கலந்து தமிழ்க் கவிதைகளைப் படைக்கும் போக்கு புதுச்சேரிக் கவிதைகளின் ஃகவிஞர்களின் தனித்தன்மை என்று கூறலாம். இவ்வகைக் கவிதைகள் சிறந்த மரபுக் கவிதைகளாகத் தொடர்வது புதுச்சேரியின் தனிச்சிறப்பு.

இவ்வகையில் குறிப்பிடத்தக்க புதுவையின் மரபுக் கவிஞர்கள் என்று அரிமதி தென்னகன், ஆதிகேசவன், இலக்கியன், உசேன், கல்லாடன், சங்கரய்யா, செவ்வேள், ம.இலெ. தங்கப்பா, திருமுருகன், வெ.நாரா முதலானவர்களைக் குறிப்பிடலாம். (பட்டியல் முழுமையானதன்று).
புதுக்கவிதைகளைப் பொருத்தமட்டில் தொடக்கத்தில் புதுச்சேரியில் அதிக வரவேற்பில்லை. பாவேந்தர் வழி வந்த மரபுக் கவிதை வடிவங்களின் செல்வாக்கே இதற்குக் காரணம். ஆனாலும் இருபதாம் நு}ற்றாண்டின் எண்பதுகளில் புதுக்கவிதை வடிவங்கள் மெல்ல மெல்லப் புதுவையில் செல்வாக்கு பெறத் தொடங்கின. புதுவையின் புதுக்கவிதை முன்னோடிகளாகப் பிரபஞ்ச கவி, வில்லியனு}ர் பழனி, பஞ்சு, தேவமைந்தன், மலையருவி, புதுவை அமலன், எ.மு. ராஜன் முதலானவர்களைக் குறிப்பிடலாம். ஹைக்கூக்களின் வருகைக்குப் பின்னர் புதுவைப் புதுக்கவிஞர்கள் பெருகினர். இருபதாம் நூற்றாண்டுப் புதுவைப் புதுக்கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் என்று புதுவை இளவேனில், சீனு. தமிழ்மணி, தமிழ்நெஞ்சன், அரிமதி தென்னகன், செந்தமிழினியன், பாரதிவாணர் சிவா முதலானவர்களைக் குறிப்பிடலாம் (பட்டியல் முழுமையானதன்று). புதுச்சேரியின் நவீனக் கவிதை இயக்கம் பிரேம் - ரமேஷ் கவிதைகளில் தொடங்குகிறது. இவர்களின் கவிதைப்பாணி தமிழில் புதுமையானது. தருமு. சிவராமின் பாணியில் தொடங்கும் இவர்களின் தமிழ்க்கவிதை புதிய தடத்தில் பயணித்து முன்னோடிக் கவிதைகளாகத் திகழ்கின்றன.

இருபத்தொன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புதுவைக் கவிதைகளின்/ கவிஞர்களின் வளர்ச்சி அபரிமிதமாயிருக்கிறது, வீக்கமோ என்று சந்தேகப்படும் அளவிற்கு!. நண்பர்கள் தோட்டம், கவிதை வானில், புதுவை எழுத்தாளர் கழகம் போன்ற இலக்கிய அமைப்புகள் நடத்திய, நடத்தும் திங்கள் பாட்டரங்கங்களே புதுவையில் கவிஞர்கள் பெருக்கத்திற்குக் காரணம். கவிதை ஜனநாயகப் படுத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியதே. கடந்த நூற்றாண்டில் தமிழ்க் கவிதைகளுக்கான புதிய பாதைகள் சமைத்த பெருமைக்குரிய புதுச்சேரி மண் இந்த நூற்றாண்டிலும் சாதிக்க வேண்டும். அதுவே நம் விருப்பம்.
கவிதைகள் மானுட மேன்மைக்கே!

1 கருத்து:

inioru சொன்னது…

மாற்று அரசியல் என்பது அதிகார ஆசைகளின் சொல்லாடல் புனைவுகளாகிவிட்ட இத்தருணத்தில் ஒளிவுமறைவற்ற, மனக்கூச்சங்களற்ற ஒருதிறந்த பட்டவர்த்தமான உண்மையை நோக்கிய மாற்று அரசியலுக்கான உரையாடல்வெளியை உருவாக்குவதே எமது நோக்கம்.
http://inioru.com

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...