புதன், 17 அக்டோபர், 2007

அகஇலக்கிய மரபுகளும் நாட்டுப்புறக் காதல் பாடல்களும்

அகஇலக்கிய மரபுகளும் நாட்டுப்புறக் காதல் பாடல்களும்

முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி.

அகம்:

மனிதன் உள்ளிட்ட எந்தவகை உயிரினத்திற்கும் உள்ள உயிர்க்கடமை இனப்பெருக்கத்தில் ஈடுபடலே. உயிரினங்கள் உண்பதும் உயிர்வாழ்வதும் இந்தவொரு பணிக்காகவே. இனப்பெருக்கத்திற்காகவே பாலினஈர்ப்பும் இன்பநாட்டமும் இயல்பாக எல்லா உயிரினங்களிடமும் அமைந்துள்ளன. தொல்காப்பியர் இதனை,எல்லா உயிர்க்கும் இன்பம் என்பதுதான் அமர்ந்து வரூஉம் மேவற்று ஆகும் (தொல். பொருள். பொரு. 27.)என்கிறார். இன்பநாட்டம் உல்லா உயிரினங்களுக்கும் உரிய இயல்பூக்கம் என்று இலக்கணம் வகுக்கிறார் தொல்காப்பியர். இந்த இயல்பூக்கத்திற்கான ஒருவகை வெளிப்பாடே அகம். ஆணும் பெண்ணும் கூடிக்கலக்கும் பாலியல் தேவைக்கான அழகியல் வெளிப்பாட்டு வடிவமே அகப்பாடல்கள். இத்தகு அகப்பாடல்கள் இலக்கிய ஆக்கம் பெற வடிவமைத்துக் கொள்ளப்பெற்றவைகளே அகப்பொருள் மரபுகள்.நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம் (தொல். பொருள். அகத். 56.)என்ற நூற்பாவில் புலனெறி வழக்கம் என்று இத்தகு மரபுகளைக் குறிப்பிடுவார் தொல்காப்பியர்.

அகத்திணை மரபுகள்:

தமிழ் இலக்கியத்தில் நீண்ட நெடிய அகப்பாடல் மரபுத்தொடர்ச்சி உண்டு. ஆயினும் அகப்பாடல் மரபுகளைக் கட்டமைப்பதில் சங்கஅகப்பாடல்களுக்கும் தொல்காப்பியத்திற்கும் மிகப்பெரிய பங்களிப்புண்டு. ஆயினும் தொல்காப்பியம் வரையறுக்கும் சிலமரபுகள் சங்க இலக்கிங்களில் பொருந்திவரவில்லை. சங்க இலக்கியங்கள் முழுமைக்குமான பொதுவான அகத்திணை மரபுகள் என்று திட்டமாக வரையறுக்க இயலவில்லை. சங்க இலக்கியங்களிலேயே பல்வேறு மரபுகளும் மரபு மீறல்களும் காணப்படுகின்றன.
காதலின் தொடக்கம்:மனிதர்களில் ஆணோ! பெண்ணோ! விரும்பிய நேரத்தில் விரும்பியவாறு இணைவிழைச்சுக்கு வாய்ப்பிருந்தவரைக் காதலை உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இந்த வாய்ப்பு பல காரணங்களால் மறுக்கப்படும் போதுதான் மனிதன் காதலை முதன்முதலில் உணர்ந்திருப்பான். இங்கே காதல் என்பது பாலுறவுத் தேவையை ஒட்டிய வெளிப்பாடே ஆகும். இந்தக் காதல் பல்வேறு மேல்பூச்சுகளோடு கூடி புனிதப்படுத்தப்பட்டது ஆணாதிக்க தனியுடைமைக் காலங்களில்தான்.

காதல் கோட்பாடு:

தனியுடைமைச் சமுதாயம் தோன்றுகிற போதுதான் ஒருதார மணத்திற்குத் தேவை ஏற்படுகின்றது. தன்னுடைய உடைமையை நேராகத் தன்வாரிசே பெற பெண் ஒருதாரமணத்தைக் (ஒருகணவ மணம்) கைக்கொள்ள வேண்டியதாகிறது. ஆனால் ஆணுக்கு அத்தகைய தேவை இல்லை. இத்தகு சூழ்நிலையில்தான் ஒருதார மணக் கோட்பாட்டைக்(பெண்களுக்கு மட்டும்) கட்டிக்காப்பதற்காகக் காதலும் கற்பும் கோட்பாடுகளாக உருவாயின.
காதல் கோட்பாடும் நடைமுறையும்:தனியுடைமை, ஆணாதிக்கம் இவைகளைக் கட்டிக் காக்க உருவாக்கப'பட்ட காதல் கோட்பாடு காலந்தோறும் இலக்கியவாதிகளாலும் ஆண்களாலும் ஆணாதிக்கத் தாக்குதலுக்கு உள்ளான பெண்களாலும் மிக உயரியதாகவே கருதப்பட்டும் கற்பிக்கப்பட்டும் வந்தது. சங்க அகப்பாடல்களும் திட்டமிட்ட முறையில் காதலை அகமாக்கி வளர்த்தன. ஆனால் நடைமுறையோ சமுதாயத்தில் பொருளாதார, சாதீய முரண்பாடுகளையும் மீறிய முறையில் காதல் உருவாக வாய்ப்பளித்தது.காதல் கோட்பாட்டின் நோக்கமும் நடைமுறை வாழ்க்கை நிலையும் முரண்படுகின்ற காரணத்தால்தான் மக்கள் இலக்கியக் காதலுக்குத் தரும் மதிப்பை நடைமுறைக் காதலுக்குத் தருவதில்லை.

நாட்டுப்புறக் காதல் பாடல்கள் தோன்றக் காரணம்:

பருவமடைந்த பெண்ணிற்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளும் காதலர்களுக்கு இருக்கும் தடையும் சமுதாய முரண்பாடுகளுமே நாட்டுப்புறங்களில் காதல்பாடல்கள் தோன்ற வாய்ப்பளித்தன.தொழிற்களங்களில் தொழில்புரியும் ஆண் பெண்களிடையே இயல்பாக எழும் காதல் உணர்ச்சி சாதி பொருள்நிலை இவற்றால் தடைசெய்யப்படும்போது நிறைவேறாத காதலின் பக்கவாட்டுக் கால்வாயாகக் காதல்பாடல்கள் தோன்றுகின்றன என்கிறார் நா.வானமாமலை.

காதல்பாடல்களும் அக இலக்கிய மரபுகளும்:

தனியுடைமையும் நிலவுடைமையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற சிந்தனையை ஒட்டியே அக இலக்கியங்கள் உருவாயின. எனவேதான் அடியோரும் வினைவலரும் அன்பின் ஐந்திணைக்கு உரியர் அல்லர் என்றும் அவர்கள் அகப்புற ஒழுக்கங்களாகிய கைக்கிளை பெருந்தினைக்கே உரியர் என்றும் மரபமைக்கப்பட்டது. அடியோருக்கும் வினைவலருக்கும் மணஉரிமை வாரிசுரிமை சொத்துரிமை முதலான உரிமைகள் மறுக்கப்பட்டன.ஆனால் நாட்டுப்புறக் காதல்பாடல்களில் அடியோரும் வினைவலருமாகிய உழைக்கும் மக்களே (வயற்களத் தொழிலாளர்கள், வண்டியோட்டி, தோட்டத் தொழிலாளி, படகோட்டி முதலான அடித்தள மக்களே) தலைமக்களாக அமைந்தனர். அகப்பாடல்களுக்குரிய எவ்வகைக் கட்டுப்பாடுகளும் இன்றி வெற்றியோ தோல்வியோ, சரியோ தவறோ, முறையோ பிசகோ எதனையும் வெளிப்படையாக வெளிப்படுத்தின நாட்டுப்புறக் காதல்பாடல்கள்.நாட்டுப்புறக் காதல் பாடல்கள் சங்க அகஇலக்கியங்களைப் போல் அல்லாமல் காதலன் காதலி கணவன் மனைவி கூற்றாகவும் ஊரார் அலர்மொழிப் பாடல்களாகவுமே அமைந்துள்ளன. அகப் பொருளில் இன்றியமையா இடம்பெறும் தோழியை நாட்டுப்புறக் காதல்பாடல்களில் காணமுடியவில்லை.இவ்வகைக் காதல் பாடல்கள் பொருண்மை அடிப்படையில் ஒரே வகையாக அமைந்தாலும் நிகழ்த்தலின் அடிப்படையில் மூன்று வகைப்படுகின்றன.
1. காதல் உறவுடைய ஆணும் பெண்ணும் காதல் பொருண்மையில் பாடுவன.
2. காதலர் அல்லாதோர் தொழில் செய்யும்போதோ பொழுது போக்கிற்காகவோ பாடுவன.
3. தொழில் களத்திலோ பிற இடங்களிலோ காதல் நோக்கமின்றி ஆனால் காதல் உணர்வில் பாடுவன.என்பன அவை.

காதல்பாடல்களின் வகைப்பாடு:

நாட்டுப்புறக் காதல் பாடல்கள் அவற்றின் பொருள் அடிப்படையில் பின்வருமாறு வகைப்படுத்தப் பெறுகின்றன.
1. வருணனைப் பாடல்கள் (தலைவன் தலைவி வருணனை)
2. குறியிடம் கூறல், தூது பற்றிய பாடல்கள்.
3. திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தும் பாடல்கள்.
4. அலர், இற்செறிப்புப் பாடல்கள்.
5. பிரிவுத்துயர் பாடல்கள்.
6. வேசி உறவைப்பழிக்கும் பாடல்கள்.
7. கெடுத்துவிட்டு ஏமாற்றுபவனை ஏசும் பாடல்கள்.
என ஏழாக வகைப்படுத்தலாம்.
அகப்பாடல்களின் ஊற்று நாட்டுப்புறப்பாடல்களே!நமக்குக் கிடைக்கும் மிகப்பழைய அகப்பாடல்கள் சங்க இலக்கிய அகப்பாடல்களே ஆகும். அவற்றிற்குரிய மரபுகள் தொல்காப்பியத்துள் விளக்கப் பெற்றுள்ளன.சங்கப்பாடல்கள் யாவும் கிரேக்க வீரயுகப் பாக்களைப் போல் வாய்மொழி இலக்கிமாகவே இருந்திருக்கலாம் என்று தாம் ஊகிப்பதாக ஜே. ஆ. மார் 1958-ஆம் ஆண்டு இலண்டன் பல்கலைக் கழகத்தில் நிகழ்த்திய ஆய்வுரையைத் தொடர்ந்து டாக்டர் க. கைலாசபதி சங்க இலக்கியங்கள் வாய்மொழி இலக்கியங்களே என ஆராய்ந்து அறுதியிட்டுக் கூறினார். ''வீரநிலைக் காலத்தில் எழுந்த இலக்கியங்கள் வாய்மொழிப் பாடல் இலக்கியங்களாகவே இருந்திருக்கின்றன"". (கதிர். மகாதேவன், ஒப்பிலக்கிய நோக்கில் சங்க காலம், ப. 231.) என்ற கைலாசபதியின் கூற்றால், ஒப்பியல் அறிவு கொண்டு ஆராயும்போது வீரநிலைக் காலத்தில் எழுந்த சங்க இலக்கியங்களும் வாய்மொழி இலக்கியங்களாகவே இருந்திருக்கலாம் என்ற கருத்து உறுதிப்படுகின்றது.

காதல் பாடல்கள் அகப்பாடல்களான வரலாறு:

சங்க அகப்பாடல்களுக்கும் காதல் பாடல்களுக்கும் உள்ள உறவை நிரூபித்து நிலைநாட்ட தொல்காப்பிய அகத்திணையியல் நூற்பா ஒன்றனை நாம் சான்று காட்ட வேண்டியுள்ளது. இந்நூற்பா அகப்பொருள் மரபைச் சுட்டுவதாக விளங்கிக்கொள்வதோடு வேறுஒரு சிறப்புப் பொருளும் இந்நூற்பாவில் பொதிந்துள்ளது,

நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்
கலியே பரிபாட்டுயென ஆயிரு பாங்கினும்
உரியதாகும் என்மனார் புலவர் (தொல். பொருள். அகத். 56.)

இந்நூற்பாவிற்கு வழக்கமாக வழங்கிவரும் பொருள் புனைவியலும் உண்மையும் கலந்த நூல்நெறியாகிய அகப்பாடல்கள் கலிப்பா பரிபாடல் என்ற இருவகை யாப்பாலும் பாடப்படும் என்பதாகும்.இந்நூற்பாவில் வரும் 'புலநெறி" என்ற சொல்லுக்குப் பொருள் கொள்ளுமிடத்து, தொல்காப்பியர் எண்வகை வனப்பினுள் ஒன்றாகக் கூறிய 'புலன்" என்னும் வனப்பிற்குரிய விளக்கத்தைப் பொருத்திப் பார்த்து,நாடக வழக்கு-உரையாடல், உலகியல் வழக்கு-பாமர மக்கள் மொழி, பாடல் சான்ற-இசை கலந்து நிறைந்த, புலன்நெறி வழக்கு-சேரிமொழி இலக்கியம் எனப் புதுப் பொருள் கண்டு '' உரையாடலாகவும் பாமர மக்கள் மொழியும் கொண்ட இசை கலந்து நிறைந்த சேரிமொழி இலக்கியம் கலிப்பாலும் பரிபாட்டாலும் எழுதப்பெறும்"' என இந்நூற்பாவை விளக்கலாம்''கலித்தொகை பரிபாடல் பாக்கள் நாடகப் பாங்கினவாயும் இசைப் பாங்கினவாயும் இருத்தல் அவை பாமர மக்களுடன் நெருங்கியவை என்பதைக் காட்டும்"" எனப்புதிய ஒளியினை அந்நூற்பாவில் ஏற்றுகிறார் க.ப. அறவாணன்.( க.ப.அறவாணன், அற்றை நாள் காதலும் வீரமும், பக். 193-200)மேலே சொல்லப்பட்ட விளக்கம் காதல் பாடல்களுக்கும் அகப்பாடல்களுக்கும் உள்ள உறவை வெளிப்படுத்தி நிற்பதை உணரலாம்.

காதல் பாடல்களா? தொழில் பாடல்களா?

பாடுவோரை அடிப்படையாகக்கொண்டு, ''காதல் பாடல்களை இருவகையாகப் பிரிக்கலாம். ஒன்று காதலர்களே பாடுவது, மற்றொன்று காதல் சுவையை எண்ணி மகிழ்ச்சிக்காகக் காதலர் அல்லாதார் பாடுவது"" என்று வகைப்படுத்த முடியும். காதலர் அல்லாதார் இன்பச்சுவை கருதிக் காதல் பொருண்மை அமைந்த பாடல்களைப் பாடுதல் இயல்பே. உலக இலக்கியங்களில் பொதுவான நோக்கில் காதல் பற்றிப் பாடாத இலக்கியங்களே இல்லை என்று சொல்லலாம். அவ்வகைக் காதல் பாடல்களைப் புனைவியலாகக் கொள்ளவேண்டுமெ ஒழிய, காதலரே நேரில் சந்தித்துப் பாடும் களநிலைப் பாடல்களாகக் கருதுவது பொருத்தமானதாகத் தோன்றவில்லை.

காதல் பாடல்கள் பாடப்படுவது ஏன்?

நாட்டுப்புற மக்கள் தங்களுடைய வாழ்நாளின் பெரும்பகுதியை உடலுழைப்பிலேயே செலவழிக்க வேண்டியுள்ளது. வெயிலின் கொடுமையும் வேலையின் கடுமையும் சேர்வதால் ஏற்படுகின்ற களைப்பைப் போக்குவதன் பொருட்டு அவர்கள் பாடத்தொடங்குகின்றனர். பாடக்கூடிய திறன் படைத்த தொழிலாளர்களை வெலைக்கமர்த்தும் பழக்கமும் உண்டு என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. தொழிற்களத்தில் அவர்கள் பாடக்கூடிய பாடல்கள் குறிப்பிட்ட தொழில் பற்றியும். தொழில் தொடர்பான கருவிகள் பற்றியும், உழைக்கும் திறன் அளித்து வாழச்செய்வதாகக் கருதப்படும் தெய்வங்களின் பெருமை பற்றியும் கூறுவதோடு அமைந்து விடலாம். ஆயின் அவை மட்டுமே இறுகிக் கிடக்கும் மனத்தில் நெகிழ்ச்சியினை ஊட்டுவனவாய் அமையா. வாட்டமுற்ற நிலையினின்று ஊக்கம் பெறுவதற்குக் கற்பனையில் வளரும் காதல் பொருண்மை தேவைப்படுகின்றது.

காதல் பாடல்களின் நோக்கம்:

நாட்டுப்புற மக்களின் அடிப்படைத் தொழில் உழவு. ஏர் உழுதல் தொடங்கி, போர் அடித்து விளைச்சல் முதலாளி வீடு சேரும்வரை ஆண்களும் பெண்களும் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் தொழில் உழவுத்தொழில். அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பைப் பெறும் அவர்கள், உழைப்பினால் ஏற்படும் சோர்வுக்கு மாற்றாக மட்டுமின்றி, காதல் வயப்பட்டவர்கள் தங்களுக்குள் சாடைமாடையாகப் பேசிக் கொள்வதற்கும் காதல் பொருண்மை அமைந்த பாடல்களைப் பாடிக்கொள்கின்றனர். அப்பாடல்கள் அவர்களிடையே அடுத்த சந்திப்பினை ஏற்படுத்திக் கொள்ளப் பயன்படுகின்றன. ''குறியிடம் கூறும் பாடல்கள் பாவனை அடிப்படையில் அமைந்தபோதிலும் உண்மையிலேயே தொழிற்களத்தில் உடன் வேலை செய்யும் பெண்களுடன் உரையாடும் பாணியில் அவை அமைந்திருக்கின்றன என்பதும், இரவு வேளைகளில் அவர்கள் தனிமையில் சந்திக்க இப்பாடல்கள் வழிகாட்டுகின்றன என்பதும் குறிப்பிடற்பாலன"". (இ.பாலசுந்தரம், ஈழத்து நாட்டார் பாடல்கள், ப.263.)காதலர்களே பாடுவதுபோலத் தனியாகப் பாடல்கள் ஏதும் இல்லை என்றே கூறலாம். தொழில் செய்யும்போது சாடைமாடையாகக் காதலைக் குழைத்துப் பாடுகின்றனர். இக்காதல் பாடல்களில் காதலர் சந்திப்பதும், காதலை வெளிப்படுத்துவதும், நலம் பாராட்டுவதும், கேலி செய்வதும், பரிசளிப்பதும், உறுதி மொழிதலும், தூது விடுவதும் மணம் வேண்டுவதும், வீட்டுக் காவல் வைப்பதும், பிரிவதும், கூடுவதும், ஊடுவதும், காதலை மறப்பதும், காதலில் தோல்வி அடைவதும் பாடுபொருள்களாக அமைகின்றன.

தொழில் பாடல்களில் காதல் பாடல்:

காதலர்கள் தாங்கள் தனிமையில் சந்தித்துக் கொள்ளும்போது பாடிக் கொள்வதில்லை என்ற உண்மை பெறப்பட்டாலுங்கூட அவர்களுக்குள் தொடர்பினை ஏற்படுத்திக்கொள்வதற்குக் காதல் பொருண்மை நிறைந்த தொழிற்களப் பாடல்கள் பயன்படுகின்றன என்பதை மறுக்க முடியாது. இத்தகைய பயன்பாட்டைக் கருதி காதல்சுவை உடைய தொழில்பாடல்களைக் காதல்பாடல்கள் எனக் குறிப்பிட வேண்டியுள்ளது.

காதல் பாடல்களா? அகப்பாடல்களா?
பெயர் கூறும் மரபு:

'' நாட்டுப்பாடல்களில்தான் காதல் பாட்டுகளில் பெயரின்றி அமையும் மரபுண்டு"" என்று தமிழண்ணல் தம்முடைய சங்க இலக்கிய ஒப்பீடு என்னும் நூலில் கூறுகிறார். மேலும் அவர், நாட்டுப்பாடல்களின் மரபையொட்டி, அகத்திணைப் பாடல்கள் சுட்டி ஒருவர் பெயர் கொள்ளாமல் தலைவன், தலைவி, தோழி எனப் பொதுப்படவே அமைகின்றன என்றும் குறிப்பிடுகின்றார். அகத்திணை இலக்கியத்தின் சிறப்புக்கூறு என விதந்தோதப்படும் பெயர் சுட்டா மரபு, நாட்டுப்புறக் காதல் பாடல்களிலிருந்து பெறப்பட்டது என்பது ஆய்விற்குரியது.

நாட்டுப்பாடலில் பெயர் சுட்டியும் வரும் மரபு:

'' நாட்டுப்புறப் பாடல்களில்தான் பெயர் சுட்டா மரபு காக்கப்பட்டு வந்தது"" என்று தமிழண்ணல் கூறியிருக்க,

''கொத்து மல்லித் தோட்டத்திலே
குளிக்கப் போயி நிக்கையிலே
அத்தை மகன் முத்துசசாமி
அத்தெரிந்தான் பிச்சிச் சரம்""

என்று காதலி தன் காதலன் பெயரைச் சுட்டி உரைப்பதை மேற்காட்டிய பாடலில் காணமுடிகிறது. இதேபோல் இன்னும் சுப்பையா, காளிமுத்து என்பன போன்றபெயர்களைச் சுட்டி வருகின்ற பாடல்களும் உள்ளன. இப்பாடல்களும் தமிழண்ணல் அவர்கள் கருத்தும் முரணாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பெயர் சுட்டலில் பிற்கால மரபு:

சங்க காலத்திற்குப் பிறகு சங்கம் மருவிய காலத்திலும் அதற்குப் பின்னும் தோன்றிய காப்பிய இலக்கியங்களில் கோவலன்-கண்ணகி, சீவகன்-தத்தை எனப்பெயர் சுட்டிய கதை மாந்தர்களின் காதல் நிகழ்ச்சிகளைக் காணமுடிகிறது. இவற்றை அகப்பாடல்கள் என்ற நிலையிலிருந்து தள்ளிவிட முடியுமா? அன்றியும் நாட்டுப்புறப் பாடல்கள் வாய்வழிப் பரவும் தன்மையுடையனவாய் இருப்பதால் பாடுபவன் தன்னுடைய விருப்பத்திற்கேற்ப. கூடியிருந்து கேட்போரின் உற்சாகத்தை மிகுதிப்படுத்த அவர்களுடைய ஊரின் பெயரை அல்லது அவர்களில் குறிப்பிடத்தக்கவர் பெயரைத் தான் பாடும் பாடலில் சேர்த்துப் பாடுவது இயல்பு. இந்தக் காரணத்தினாலும் நாட்டுப்புறக் காதல் பாடல்களில் பெயர்சுட்டும் மரபு தோன்றியிருக்கலாம்.

நாட்டுப்புறக் காதல்:

நாட்டுப்புறப் பாடல்கள் கூறும் காதலர் மணஉறவுமுறை உடையவர்களாய்க் காணப்படுகின்றனர். பாலதாணைக் காதலை நாட்டுப்புறப் பாடல்கள் காட்டவில்லை. ஆனால் கட்டாய மணம் செய்வதை விதி என்று கூறுகிறது நாட்டுப்புறப் பாடல். சங்க இலக்கியங்கள் கூறும் நலம் புனைந்துரைத்தல், குறியிடம் கூறல், அலர், இற்செறிப்பு முதலாயின இங்கும் உண்டு. ஆயின் வெறியாடல் பற்றிய செய்தி நாட்டுப்புறப் பாடல்களில் காணப்பெறவில்லை.நாட்டுப்புறக் காதல் பாடல்களில் காதல் தோல்வி பற்றிய செய்திகளே மிகுதியும் காணப்படுகின்றன. கைக்கிளை, பெருந்திணையாகிய பொருந்தாமணம் ஆகியவற்றையும் நாட்டுப்புறப் பாடல்கள் கூறுகின்றன.திருமணத்திற்குப் பிறகு கணவன் பரத்தையரோடு பழகுதல், முதல் மனைவி இருக்க இரண்டாம் மணம் புரிந்துகொள்ளுதல் முதலான செய்திகளையும் நாட்டுப்புறக் காதல் பாடல்களில் காணமுடிகிறது. காவல், ஓதல் காரணமாகக் கணவன் பிரிந்து செல்லுதலைச் சில பாடல்கள் கூறுகின்றன.செந்நெறி இலக்கியங்களுக்கும் நாட்டுப்புறப் பாடல்களுக்கும் உள்ள வேறுபாடுகளில் குறிப்பிட்டுச்சொல்லத்தக்கது, இரண்டிலும் புனைவுகள் உண்டு, ஆனால் இன்னதைப் பாடவேண்டும் இன்னதை விலக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு நாட்டுப்புறப் பாடல்களுக்கு இல்லை.'' ஏட்டிலக்கியங்கள் கல்வியறிவு பெற்ற தனி மனிதர்களால் படைக்கப்படுகின்றன. பெரும்பாலும் அத்தனி மனிதர்கள் ஆட்சியாளர்களையும், செல்வந்தர்களையும் சார்ந்தே வாழ்க்கை நடத்துவர். எனவே அவர்களால் படைக்கப்படும் இலக்கியங்கள் அவர்கள் சார்ந்திருக்கும் சமுதாயத்தின் வாழ்க்கை முறைகளையும் இலட்சியங்களையுமே பிரதிபலிக்கும்"' (ஆறு.இராமநாதன், நாட்டுப்புறப் பாடல்கள் காட்டும் தமிழர் வாழ்வியல், ப. 3.)''நாட்டுப்புறப்பாடல்கள் முதன்முதலில் யாரோ ஒரு தனிமனிதனால் படைக்கப் பட்டாலுங்கூட உடனே அவை ஒரு சமுதாயத்திற்குப் பொதுமையாக்கப் படுகின்றன. அச்சமுதாயத்தைச் சேர்ந்த பல்வேறு மக்களின் எண்ண ஓட்டங்கள் அங்கே சங்கமிக்கின்றன"".(ஆறு.இராமநாதன், நாட்டுப்புறப் பாடல்கள் காட்டும் தமிழர் வாழ்வியல், ப. 17.) இவ்விரு மேற்கோள்களிலிருந்தும் ஏட்டிலக்கியங்களின் இலட்சிய நோக்கையும் நாட்டுப்புறப் பாடல்களின் மக்கள் நோக்கையும் நாம் புரிந்து கொள்ளமுடியும்.

காதல்பாடல்களில் இணைவிழைச்சுப் பொருண்மை:

தொழில் புரிவோர் தாங்கள் பாடும் நேரங்களில் உரிமையாளர் அருகிருந்தால் பாடுபொருளில் வரம்பு மீறாமல் பாடுவதும் ஆண்கள் தனித்துத் தொழில் புரியும் போதும் இரவுநேர வண்டிப் பயணத்தின் போதும் சூழ்ந்து பாடல்பாடும் நேரங்களின் போதும் இணைவிழைச்சுப் பொருண்மை அமையப் பாடல்களைப் பாடுகின்றனர். (க. கிருட்டினசாமி, கொங்கு நாட்டுப்புறப் பாடல்கள், தொகுதி-2, பக். 135-136)'''வண்டி ஓட்டிச்செல்வோர் இரவு நேரங்களில் உறக்கத்தைத் தவிர்ப்பதற்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் காதல் கவிகளைப் பாடுவர்.இப்பாடல்கள் பாவனை ரீதியில் பாடப்படுவதுடன் இவற்றில் இணைவிழைச்சுத் தன்மையை அதிகமாகச் சேர்த்துக் கொள்கின்றனர். வண்டி பயணப்பாதை பெண்கள் சஞ்சாரமற்றதாகவும் இரவு வேளையாகவும் இருப்பதனால் அவர்களது பாடல்களில் இணைவிழைச்சுத் தன்மை அதிகமாகக் கலந்துவிடுகிறது. (இ.பாலசுந்தரம், ஈழத்து நாட்டார் பாடல்கள், ப.192 )

காட்டோரம் கொட்டாயாம்
கவண்டன் மகள் குப்பாயாம்
குப்பாயி பாடு
கொட்டாய கேட்டுப்பாரு
(கோபெநா, பாலைமலைப் பாடல்கள், ப.91)

போன்ற பாடல்களை மேலே குறிப்பிட்ட இணைவிழைச்சுத் தன்மை அமைந்த பாடல்கள் என்பதற்குச் சான்றாகக் கொள்ளலாம்.

காதல் பாடல்கள் பாவனைப் பாடல்களா?

''உண்மையான உணர்ச்சியின் காரணமாகத்தான் காதல் பாடல்கள் தோன்றுகின்றன என்று நான் கருதுகின்றேன்"' என்று ஈழத்து நாட்டார் பாடல்கள் நூலுக்கு அணிந்துரை வழங்குகையில் நா.வானமாமலை கூறுகிறார். மேலும் அவரே காதல் புரிந்துதான் காதல் பாடல்கள் பாடப்படவேண்டும் என்பதில்லை என்றும் குறிப்பிடுகிறார். (ஈழத்து நாட்டார் பாடல்கள், முன்னுரை, ப.ஏஐ)'' முன்பு காதல் வாழ்க்கைப் பிண்ணனியில் பாடப்பட்ட பாடல்கள் வாய்மொழி மரபில் பரம்பரை பரம்பரையாக வழங்கி வந்துள்ளன என்பதும், தேவைக்கும் பாடுவோருக்கும், கேட்போருக்கும் ஏற்ப இவை தொழிற்களப் பாடல்களாகவும் பாடப்படும் நிலையடைந்தன"" என்று காதல் பாடல்களின் களநிலை மாற்றம் மற்றும் தற்போதயநிலை இவைகள் பற்றிய கருத்தைத் தெரிவிக்கின்றார் இ.பாலசுந்தரம் (இ.பாலசுந்தரம், ஈழத்து நாட்டார் பாடல்கள், ப.191)

காதல் பாடல்கள் கூத்துப்பாடல்களா?

காதல் பாடல்களின் தொடக்கத்தைப் பற்றிய வேறொரு கருத்தைக் குறிப்பிடுதல் இங்கு தேவையாகிறது. நாட்டுப்புறக் காதல்பாடல்கள் முதலில் கூத்துப் பாடல்களிடையே கட்டியங்காரனால் பாடப்பட்டிருந';;தன என்று தன் ஆய்வுக்கட்டுரை ஒன்றில் பொன். கோவிந்தசாமி நிறுவியுள்ளார். (பொன்.கோவிந்தசாமி, தமிழ் நாட்டுப்புறவியல் ஆய்வுக் கட்டுரைகள், ப.7 )கூத்து நடக்கும் சமயத்தில் மக்கள் சோர்வுற்றுத் தூங்கத் தொடங்கும் போது அவர்களுக்குப் புத்துணர்ச்சி ஊட்டி மறுபடியும் அவர்கள் உற்சாகமாகக் கூத்து நிகழ்ச்சியில் கவனம் செலுத்த கட்டியங்காரனால் சுவையோடு இட்டுக்கட்டிப் பாடப்பட்ட காதல் பாடல்கள்தான் பின்னர் தொழிற்களங்களில் தொழிலாளர் சோர்வு நீக்கும் பயன்பாடுடையனவாய் ஆயின என்று கொள்ளவும் இடமுண்டு. தொடக்க காலத்தில் காதல் பாடல்கள் காதலர்களால் பாடப்பட்டன, பிறகு சமுதாயச் சூழலுக்கு ஏற்ப அப்பாடல்களின் களநிலை மாறின என்ற இ.பாலசுந்தரம் அவர்களின் கருத்தை ஏற்றுக்கொள்வதானால், சமுதாயத்தில் காதலிப்பவர்கள் எல்லோரும்
கவிஞர்களாக இருக்க வாய்ப்புண்டா? காதலர்கள் தங்களுக்குள் பாடிக்கொண்ட காதல் பாடல்களைக் கேட்டவர்கள் யார்? எப்படிப் பரவியது? என்ற வினாக்களுக்கெல்லாம் விடைதேட வேண்டியிருக்கும்.காதலர்கள் சந்தித்துக் கொள்கிற போதெல்லாம் காதல் பாடல்களைக் கலந்து கனிந்து பாடுவதில்லை. சிலர் தங்கள் உள்ளத்து உணர்ச்சிகளை எழுதத்தெரிந்த ஒருவரிடம் கூறி எழுதுவித்து ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்கின்றனர்.காதலர்கள் சந்தித்துக் காதல் பாடல்களைப் பாடிக்கொள்ளுதல் என்பது இயல்பான நிகழ்வு இல்லை என்பதாலும், கூத்துப் பாடல்களில் இவை பாடப்பட்டு வந்தன என்ற கருத்திலும் உண்மையுண்டு என்பதனாலும், தொழிற்களங்களில் இவ்வகைப் பாடல்கள் சோர்வு நீக்கும் மருந்தாகப் பயன் படுதலானும் நாட்டுப்புறக் காதல் பாடல்களைப் பாவனைப் பாடல்களாகவே கொள்ளவேண்டும்.

காதல் பாடல்களைப் பாடுவோர்:

தொழிற்களங்களில்தான் மிகுதியும் காதல் பாடல்கள் பாடப்படுகின்றன. உழவுத் தொழிலின் போதும் சுண்ணாம்பு இடித்தல், மீன்பிடித்தல் முதலான தொழில் நேரங்களிலும் காதல்பாடல்கள் பாடப்படுகின்றன. குழுவாக இருக்கும்போது அவர்களுள் வயது முதிர்ந்தவரோ அல்லது நன்றாகப் பாடக்கூடிய திறன்பெற்றவரோ முதலில் பாடத் தொடங்குவர், மற்றவர் பின்தொடர்ந்து பாடுவர். ஏற்றம் இறைத்தல், ஏர்உழுதல் முதலான நேரங்களில் குழுவினர் இருக்க மாட்டார்கள். ஏற்றம் இறைக்கும் போது மேலே உள்ளவன் பாடத்தொடங்க கீழே உள்ளவன் பாடலைத் தொடர்வான். ஏர் உழும்போது முன்னேர் கட்டுபவன் பாடலைத் தொடங்க பின்னே வருபவர்கள் தொடர்ந்து பாடுவார்கள்.சில தொழில்கள் ஆண்கள் மட்டுமே செய்யக்கூடியதாய் இருக்கும், சில தொழில்கள் பெண்கள் மட்டுமே செய்யக்கூடியதாயிருக்கும் சில தொழில்களை இருவருமே சேர்ந்து செய்யக்கூடும். எனவே தொழிலை அடிப்படையாக வைத்து ஆண்கள் மட்டும் பாடும் பாடல்கள், பெண்கள் மட்டும் பாடும் பாடல்கள், இருவரும்சேர்ந்து பாடும் பாடல்கள் எனப் பாடுவோர் அடிப்படையில் தொழில்சார் காதல்பாடல்களை மூவகைப்படுத்தலாம்.உழவுத் தொழிலில் ஏற்றம் இறைத்தல், ஏர் உழுதல் ஆகிய வேலைகளை ஆண்கள் மட்டுமே செய்வர், எனவே அவ்வேளைகளில் ஆண்கள் மட்டுமே பாடக்கூடியவராய் இருப்பர். நாற்று நடுதல், களையெடுத்தல் போன்ற வேலைகளைப் பெண்கள் மட்டுமே செய்வர், அப்போது பெண்கள் மட்டுமே பாடக்கூடியவராய் இருப்பர். அறுவடை, போர்அடித்தல் ஆகிய நேரங்களில் இருவருமே சேர்ந்து வேலையில் ஈடுபட வேண்டியிருப்பதால் அத்தருணங்களில் ஆணும் பெண்ணும் சேர்ந்து பாடுகின்றனர். ஆண்கள் பாடுவதாயினும் பெண்கள் பாடுவதாயினும் சரி அத்தருணங்களில் அருகிருந்து கேட்போராக எதிர்பாலாரும் இருப்பதுண்டு.

காதல் பாடல்களும் தெம்மாங்கு வடிவமும்:

நாட்டுப்புறக் காதல் பாடல்கள் பெரும்பாலும் தெம்மாங்குப் பாடல்களாகவே அமைவதுண்டு. காதல் பாடல்களை நாட்டுப்புறத் தெம்மாங்கு என்றே குறிப்பிடலாம். தெம்மாங்குப் பாடலின் வடிவத்தை வரையறுப்பது காதல் பாடல்களுக்கான வடிவ வரையறையாகவே அமையும்.நாட்டுப்புறப் பாடல் வகைகளுள் ஒன்று தெம்மாங்கு. தேன் போன்று இனிக்கும் பாடல் என்பதால் தேன்பாங்கு என்று கூறுவர். தென்பகுதியில் வாழும் மக்களால் பெரும்பாலும் பாடப்பெறுகிற காரணத்தால் தென்பாங்கு என்றும் அழைக்கப்பட்டது. தேன்பாங்கு- தென்பாங்கு- தெம்மாங்கு என வழங்கியிருக்கலாம்.தெம்மாங்கிற்கு ஒரேஒரு மெட்டுதான் உண்டு. ஆனாலும் அதைப் பல்வேறு தாளங்களில் மாற்றிப் பாடுவதுண்டு என்கிறார் கி.வா.ஜ. (கி.வா. ஜகந்நாதன், மலையருவி, ப. 32.) வண்டி ஓட்டும்போதும் வயல்வேலைகளின் போதும் பாடப்படும் பாடல் தெம்மாங்காய் அமைவதுண்டு. இவ்வகைப் பாடல்களை ஒருவரே பாடுவதும், இருவர் எதிரெதிர் வாதம் புரியப் பாடுவதும் என இருவகை மரபில் பாடுவதுண்டு.தெம்மாங்குப் பாடலின் உட்பொருன் பெரும்பாலும் காதலாகவே இருப்பதால் காதல்பாட்டு என்றே இதனைக் கூறலாம். (குருவிக்கரம்பை சண்முகம், தெம்மாங்கு, ப. 124 )

தொகுப்புரை:

Ö தமிழ் இலக்கியத்தில் நீண்ட நெடிய அகப்பாடலல் மரபுத் தொடர்ச்சி உண்டு.
Ö சங்க இலக்கியங்களிலேயே பல்வேறு மரபுகளும் மரபு மீறல்களும் காணப்படுகின்றன.
Ö ஒருதாரமணக் கோட்பாட்டைக் கட்டிக் காப்பாற்றவே காதலும் கற்பும் கோட்பாடுகளாக உருவாயின.
Ö மக்கள், இலக்கியக் காதலுக்குத் தரும் மதிப்பை நடைமுறைக் காதலுக்குத் தருவதில்லை.
Ö காதலுக்கு இருக்கும் சமுதாயத் தடைகளே காதல் பாடல்கள் தோன்றக் காரணம்
Ö தனியுடைமையும், நிலவுடைமையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற சிந்தனையை ஒட்டியே அக இலக்கியங்கள் உருவாயின.
Ö நாட்டுப்புறக் காதல்பாடல்களில் அடித்தள மக்களே தலைமக்களாக அமைந்தனர்.
Ö காதல் பாடல்கள் நிகழ்த்தலின் அடிப்படையில் மூன்றாகப் பகுக்கப்படும்.
Ö சங்க அகப்பாடல்களுக்கு அடிப்படை வாய்மொழி இலக்கியங்களே.
Ö புலநெறி வழக்கு எனத் தொல்காப்பியர் குறிப்பிடுவது சேரிமொழி இலக்கியமே.
Ö தொழிற்களத்தில் பாடப்படும் காதல் பொருண்மை அமைந்த பாடல்களே காதல்பாடல்கள் எனப்படும்.
Ö நாட்டுப்புறக் காதல்பாடல்களில் பெயர் சுட்டிவரும் மரபு உண்டு.
Ö நாட்டுப்புறக் காதல் பாடல்களில் காதல் தோல்வி பற்றிய செய்திகளே மிகுதியும் காணப்படுகின்றன.
Ö கைக்கிளை, பெருந்திணையாகிய பொருந்தாமணம் ஆகியவற்றையும் நாட்டுப்புறப் பாடல்கள் கூறுகின்றன.
Ö நாட்டுப்புறக் காதல் பாடல்களில் இன்னதைப் பாடவேண்டும் இன்னதை விலக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை.
Ö காதல் பாடல்களில் இணைவிழைச்சுப் பொருண்மை அமைவதுண்டு.
Ö நாட்டுப்புறக் காதல்பாடல்கள் கட்டியங்காரனால் கூத்துப் பாடல்களிடையே பாடப்பட்டிருக்கலாம்.
Ö நாட்டுப்புறக் காதல் பாடல்களைப் பாவனைப் பாடல்களாகவே கொள்ளவேண்டும்.
Ö நாட்டுப்புறக் காதல் பாடல்களை ஆண்கள் பாடுவது, பெண்கள் பாடுவது, இருவரும் சேர்ந்து பாடுவது என மூவகைப்படுத்தலாம்.
Ö நாட்டுப்புறக் காதல் பாடல்கள் பெரும்பாலும் தெம்மாங்குப் பாடல்களாகவே இருக்கும்.
@@@@@@@@

கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...