வெள்ளி, 27 மார்ச், 2009

ஒளவை சு.துரைசாமி பிள்ளை பதிப்புகள் (சங்க இலக்கியம்) பகுதி-1

ஒளவை சு.துரைசாமி பிள்ளை பதிப்புகள் (சங்க இலக்கியம்) பகுதி-1

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
தமிழ்த்துறை
கா.மா.பட்ட மேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8.

நூலுக்கு நூலருமை காட்டுவதில் நுண்ணறிஞன்
மேலுக்குச் சொல்லவில்லை வேர்ப்பலாத் - தோலுக்குள்
உள்ள சுளைகொடுக்கும் உண்மை உழைப்பாளன்
அள்ளக் குறையாத ஆறு

என்று பாவேந்தர் பாரதிதாசனால் பாராட்டப்பட்ட ஒளவை சு.துரைசாமி அவர்கள் இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழறிஞர்களில் ஒருவர். மிகச் சாதாரண அரசுப் பணியில் தம் வாழ்க்கையைத் தொடங்கி தம் இடையறாத முயற்சியாலும் தளராத தன்னம்பிக்கையாலும் தமிழாசிரியர், கல்லூரிப் பேராசிரியர், பல்கலைக் கழகப் பேராசிரியர் எனத் தம்மை உயர்த்திக் கொண்டதோடு மட்டுமில்லாமல் தமிழின் உயர்வுக்கும் தளராது உழைத்தவர். உரைவேந்தர் என்று தமிழ்கூறு நல்லுலகத்தினரால் பாராட்டப்படும் தனிச்சிறப்பிற்கு உரியவர்.

ஒளவை சு.துரைசாமி வாழ்க்கைக் குறிப்பு:

ஒளவை சு.துரைசாமி பிள்ளை அவர்கள் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்துள்ள ஒளவையார் குப்பம் என்ற ஊரில் பிறந்தவர் (05.09.1902). இவர்தம் பெற்றோர் சுந்தரம் பிள்ளை-சந்திரமதி அம்மையார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் துரைசாமி. ஒளவையார் குப்பம் என்ற ஊர்ப்பெயரின் அடையாளமே சு.துரைசாமி பெயருக்கு முன்னொட்டாக அமைந்து ஒளவை சு. துரைசாமி என்று வழங்கலாயிற்று. உள்ளுரில் தொடக்கக் கல்வியைக் கற்ற ஒளவை, திண்டிவனத்தில் இருந்த அமெரிக்க ஆர்க்காடு உயர்நிலைப் பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பு வரை பயின்றார். பின்னர் வேலூர் ஊரிசு கல்லூரியில் இடைநிலை (இண்டர்மீடியட்) வகுப்பில் சேர்ந்து பயின்றார். கல்லூரிக் கல்வியைத் தொடர இயலாமல் உடல்நலத் தூய்மைக் கண்காணிப்பாளர் (Sanitary Inspector) பணியில் அமர்ந்தார். அப்பணி அவருக்கு நிறைவளிக்காதலால் தமிழ்ப் பணிக்கு ஆயத்தமானார். ஒளவை சு.துரைசாமியின் குடும்பம் தமிழில் ஈடுபாடு உடைய குடும்பம். எனவே உரைவேந்தருக்குத் தமிழில் நல்ல ஈடுபாடு இருந்தது. உயர்நிலைப் பள்ளியில் பயின்றபோது தமிழாசிரியர் சீர்காழி கோவிந்தசாமி ரெட்டியார் அவர்கள் ஒளவைக்குத் தமிழறிவு ஊட்டினார். அவரிடம் இருந்த சூளாமணி, ஐங்குறுநூற்றுக் கையெழுத்துப் படி மற்றும் ஏட்டுப்பிரதிகளை உரைவேந்தர் ஆராயும் திறன் பெற்றிருந்தார்.

தமிழ் ஆர்வம் கொண்ட ஒளவை சு.துரைசாமி அவர்கள் முறையாகத் தமிழ் கற்று தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிய விரும்பினார். அதனால் தாம் புரிந்த அலுவலை விடுத்துத் தம் 22 ஆம் அகவையில் தஞ்சையை அடுத்த கரந்தைப் புலவர் கல்லூரி அடைந்தார். கரந்தைப் புலவர் கல்லூரியின் தலைவர் உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள் நம் ஒளவை துரைசாமியின் ஆற்றலறிந்து தமிழ்ச்சங்கப் பள்ளியில் தமிழாசிரியர் பணி தந்தார். கரந்தைக் கல்லூரியில் பணிபுரிந்த கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை, நா.மு. வேங்கடசாமி நாட்டார் ஆகியோரின் தமிழ்ப் புலமை ஒளவைக்கு உரம் சேர்த்தது. 1925 முதல் 1928 வரை கரந்தையில் ஒளவை சு.துரைசாமி தங்கியிருந்தார். அறிஞர் பெருமக்களுடன் உரையாடித் தமிழறிவு பெற்றார். 1930 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் வித்துவான் தேர்வு எழுதி வெற்றிபெற்றார். ஒளவை சு.துரைசாமி அவர்களுக்கு இல்லறத் துணையாக வாய்த்தவர் கோட்டுப்பாக்கம் (காவேரிப் பாக்கம்) உலோகாம்பாள் ஆவார்.

ஒளவை சு. துரைசாமி அவர்கள் தமிழ்மொழியில் நல்ல புலமை அமையப் பெற்றதுடன் ஆங்கிலத்திலும் நல்ல புலமையுடையவர். வடமொழியும் அறிந்தவர். உயர்நிலைப் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் எனப் பல நிலைகளில் பணிபுரிந்து மிகச்சிறந்த மாணவர்கள் பலரை உருவாக்கியவர். ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கியவர். கல்வெட்டு, ஓலைச்சுவடிகள், செப்பேடுகளை ஆராய்ந்து தமிழ் இலக்கணம், இலக்கியம், வரலாறு, சைவசித்தாந்தம் உள்ளிட்ட துறைகளில் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கியவர்.

கரந்தையை விட்டு வெளியேறிய உரைவேந்தர் அவர்கள் 1929 முதல் 1941 வரை வடார்க்காடு மாவட்டத்தில் மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்தார். காவிரிப்பாக்கம், காரை, திருவத்திபுரம் (செய்யாறு), போளூர், செங்கம் உள்ளிட்ட ஊர்களில் பணிபுரிந்துள்ளார். இந்தி எதிர்ப்பு உள்ளிட்ட கொள்கைகளில் ஈடுபாடுகொண்டு விளங்கியதால் அக்கால ஆட்சியாளர்களால் அடிக்கடி ஒளவை பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று அறியமுடிகிறது. உரைவேந்தர் பள்ளியில் பணியாற்றினாலும் தமிழ்ப்பொழில் இதழில் தொடர்ந்து கட்டுரை எழுதியுள்ளார். செந்தமிழ், செந்தமிழ்ச்செல்வி உள்ளிட்ட இதழ்களிலும் பின்னாளில் எழுதினார்.

ஒளவை சு. துரைசாமி அவர்கள் தமக்கு உரிய ஆராய்ச்சிப் பணிக்கு ஏற்ற பணி வாய்ப்பு அமையாதா? என ஏங்கிய நிலையில் 1942 இல் திருப்பதி திருவேங்கடவன் கீழ்த்திசைக் கல்லூரியில் ஆராய்ச்சியாளர் பணி கிடைத்தது. அங்குப் பணிபுரிந்த வடமொழி, பாலிமொழி அறிஞர்களின் தொடர்பால் அம்மொழி இலக்கியங்கள், வரலாறு, தத்துவம் முதலான புதிய துறைகள் ஒளவைக்கு அறிமுகம் ஆயின.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கற்று வல்ல அறிஞர்களைப் பணியிலமர்த்திய 1942 ஆம் ஆண்டளவில் ஒளவை சு. துரைசாமி அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆராய்ச்சித் துறையில் பணியில் அமர்ந்தார். சைவ சமய இலக்கிய வரலாறு, ஞானாமிர்தம் முதலான அரிய நூல்கள் இவர் வழியாக வெளிவந்தன. எட்டாண்டுகள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணியில் இருந்தார். அதுபொழுது பணிபுரிந்த தி.வை.சதாசிவப் பண்டாரத்தார், க.வெள்ளைவாரணனார் உள்ளிட்ட அறிஞர்களுடன் பழகி மகிழ்ந்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தபொழுது புறநானூறு உள்ளிட்ட நூல்களுக்கு உரை எழுதினார். மதுரை தியாகராசர் கல்லூரியின் உரிமையாளர் கருமுத்து. தியாகராச செட்டியார் அவர்களின் விருப்பத்திற்கு இணங்கி உரைவேந்தர் அவர்கள் மதுரை தியாகராசர் கல்லூரியில் 1951, சூலைத் திங்களில் பணியில் இணைந்தார். ஒளவை சு. துரைசாமி அவர்கள் பேராசிரியர் பணிபுரிந்ததுடன் பல்வேறு இலக்கிய மேடைகளில் தம் கருத்துகளை நயம்பட எடுத்துரைக்கும் ஆற்றல் பெற்றவர்.

ஒளவை சு. துரைசாமி அவர்களுக்குக் கல்வெட்டில் நல்ல பயற்சியும் புலமையும் இருந்ததால் தாம் எழுதிய சங்க இலக்கிய உரைகளுக்குச் சான்றாகக் கல்வெட்டுச் சான்றுகளை எடுத்துக்காட்டி விளக்குவதில் வல்லமை பெற்றிருந்தார். மேலும் உ.வே.சாமிநாதர் பதிப்பித்த பிறகு உரைவேந்தரின் உரைநூல்கள் வெளிவந்ததால் உ.வே.சா. அவர்களுக்குக் கிடைக்காத சில படிகளையும் பார்வையிட்டுச் செப்பம் செய்துள்ளார்.

ஒளவை சு.துரைசாமியின் தமிழ்ப் பணிகளைப் பாராட்டும்முகமாக மதுரைத் திருவள்ளுவர் கழகத்தில் மிகப்பெரும் பாராட்டுவிழா அன்னாரின் மணிவிழா ஆண்டில் நிகழ்த்தப் பெற்றது (16.01.1964). இராதா தியாகராசனார் அவர்கள் தம் ஆசிரியரின் சிறப்புகளைப் பலப்படப் புகழ்ந்து "உரைவேந்தர்" என்னும் பட்டம் பொறிக்கப் பெற்ற தங்கப்பதக்கம் ஒன்றைப் பரிசாக வழங்கினார். தமிழ்ப்பணி, சமயப்பணி இரண்டையும் தம்மிரு கண்கள் எனப் போற்றிப் புரந்த நம் ஒளவை சு. துரைசாமி அவர்கள் தமது 79 ஆம் அகவையில், 03-04-1981 ஆம் நாளன்று மதுரையில் தமது இல்லத்தில் இயற்கை எய்தினார். உரைவேந்தரின் திருவருட்பா, ஐங்குறுநூறு, நற்றிணை, பதிற்றுப்பத்து, புறநானூறு உள்ளிட்ட நூல்களின் பேருரைகள் யாவும் அவரின் தமிழ்ப்புகழை என்றும் பேசுவனவாகும்.

ஒளவை துரைசாமிப் பிள்ளை எழுதிய நூல்கள்:

ஒளவை அவர்கள் ஒப்புயர்வற்ற பேராசிரியராகவும் நாவண்மை மிக்க நாவலராகவும் திகழ்ந்தமை மட்டுமின்றி நுழைபுலமிக்க நூலாசிரியராகவும் திகழ்ந்தார். பி.வி.கிரி அவர்கள் தாம் தொகுத்த ‘உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு’ என்னும் சிறு வெளியீட்டில் ஒளவையின் நூல்கள் முப்பத்து நான்கினைப் பட்டியலிட்டுள்ளார். அப்பட்டியலில் இடம்பெற்றுள்ள நூல்கள் அகரவரிசையில் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

01. ஊர்ப்பெயர்-வரலாற்றாராய்ச்சி (அச்சாகவில்லை)
02. ஐங்குறுநூறு உரை
03. ஒளவைத் தமிழ்
04. சிலப்பதிகார ஆராய்ச்சி
05. சிலப்பதிகாரச் சுருக்கம்
06. சிவஞானபோதச் செம்பொருள்
07. சிவஞான போத மூலமும் சிவஞான சுவாமிகள் அருளிய சிற்றுரையும்
08. சீவக சிந்தாமணி ஆராய்ச்சி
09. சீவக சிந்தாமணிச் சுருக்கம்
10. சூளாமணி
11. சைவ இலக்கிய வரலாறு
12. ஞானாமிர்த மூலமும் பழைய உரையும்
13. தமிழ்த் தாமரை
14. தமிழ் நாவலர் சரிதை மூலமும் உரையும்
15. திருமாற்பேற்றுத் திருப்பதிக உரை
16. திருவருட்பா மூலமும் உரையும் (ஒன்பது தொகுதிகள்)
17. திருவோத்தூர் தேவாரத் திருப்பதிகவுரை
18. தெய்வப்புலவர் திருவள்ளுவர்
19. நந்தாவிளக்கு
20. நற்றிணை உரை
21. பதிற்றுப்பத்து உரை
22. பண்டை நாளைச் சேரமன்னர் வரலாறு
23. பரணர்
24. புதுநெறித் தமிழ் இலக்கணம் (2 பகுதிகள்)
25. புறநானூறு மூலமும் உரையும் (2 பகுதிகள்)
26. பெருந்தகைப் பெண்டிர்
27. மணிமேகலை ஆராய்ச்சி
28. மணிமேகலைச் சுருக்கம்
29. மதுரைக்குமரனார்
30. மத்த விலாசம் (மொழிபெயர்ப்பு)
31. மருள்நீக்கியார் நாடகம் (அச்சாகவில்லை)
32. யசோதர காவியம் மூலமும் உரையும்
33. வரலாற்றுக் கட்டுரைகள் (வரலாற்றுக் காட்சிகள்)
34. Introduction to the Study of Thiruvalluvar

இந்தப் பட்டியலைப் பார்க்கும் பொழுது ஒளவை சு.துரைசாமி அவர்களின் எழுத்துப்பணிகள் பதிப்புப்பணி, உரைவிளக்கப்பணி என்பதாக மட்டுமின்றி கட்டுரைத் தொகுப்புகள், இலக்கிய வரலாற்று ஆய்வுகள், தமிழக வரலாற்று ஆய்வுகள், ஊர்ப்பெயர் ஆராய்ச்சி, சைவ சித்தாந்தத் தத்துவ நூல்கள், நாடகங்கள், மொழிபெயர்ப்புகள், ஆங்கில நூல்கள் எனப் பல்துறை சார்ந்த ஆய்வுகளாகவும் படைப்புகளாகவும் நீண்டுள்ளமை உரைவேந்தரின் பல்துறைப் புலமைக்குத் தக்கதோர் சான்றாக விளங்குவதை உணர முடிகின்றது.

சங்க இலக்கியப் பதிப்புகள்:

1851 இல் திருமுருகாற்றுப்படையுடன் தொடங்கப் பெற்ற சங்க இலக்கிய முதற்பதிப்பு முயற்சி 1920 இல் வெளிவந்த அகநானூற்றுப் பதிப்புடன் நிறைவெய்துகிறது. திருமுருகாற்றுப்படை 1851 இல் ஆறுமுக நாவலரால் முதன்முதலில் பதிப்பிக்கப் பெற்றது. இந்நூலே சங்க இலக்கியங்களில் முதன்முதலில் பதிப்பிக்கப் பெற்ற நூல் என்ற செய்தியை ந.விசாலாட்சி, தம் பழந்தமிழ்ப் பதிப்புகள் என்ற நூலில் பதிவு செய்துள்ளார். ஆனால் பெரும்பாலான பதிவுகளில் 1887 இல் சி.வை.தாமோதரம் பிள்ளை பதிப்பித்த கலித்தொகையே முதல் சங்க இலக்கியப் பதிப்பு என்பதாகக் குறிப்பிடப்படுகின்றது.

சங்க இலக்கியங்களின் முதல் பதிப்புப் பணியில் ஈடுபட்டவர்கள் உ.வே.சாமிநாதய்யர், சி.வை.தாமோதரம் பிள்ளை, ஆறுமுக நாவலர், பின்னத்தூர் அ. நாராயணசாமி, சௌரிப் பெருமாள் அரங்கன், ரா.இராகவய்யங்கார் ஆகிய அறுவர் ஆவர். இவர்களுள் உவே.சா. தவிர மற்ற ஐவரும் ஒவ்வொரு முதல்நூல் பதிப்புகளே பதிப்பிக்க, உ.வே.சா.அவர்களோ சங்க இலக்கியங்களில் முதல் பதிப்புகளாக ஐந்து இலக்கியங்களைப் பதிப்பித்துள்ளார் என்பது தனிச்சிறப்பு.

ஏட்டுச் சுவடியிலிருந்து முதன்முதலில் அச்சேறிய சங்க இலக்கியங்களின் முதல் பதிப்பினைப் பதிப்பித்தவர் பெயர், பதிப்பித்த ஆண்டு பற்றிய அட்டவணை கீழே இடம்பெற்றுள்ளது. இதே அட்டவணையில் ஒளவை அவர்கள் பதிப்பித்த சங்க இலக்கியப் பதிப்புகள், பதிப்பித்த ஆண்டு குறித்த தகவல்களும் ஒப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளன.

எண் நூல் பதிப்பாளர் ஆண்டு ஒளவைப் பதிப்பு
1 திருமுருகாற்றுப்படை- உரையுடன் ஆறுமுக நாவலர் 1851
2 கலித்தொகை- உரையுடன் சி.வை.தாமோதரம் பிள்ளை 1887
3 பத்துப்பாட்டு- உரையுடன் உ.வே.சாமிநாதய்யர் 1889
4 புறநானூறு- உரையுடன் உ.வே.சாமிநாதய்யர் 1894 1947, 1951
5 ஐங்குநுறூறு- உரையுடன் உ.வே.சாமிநாதய்யர் 1903 1938, 1957
6 பதிற்றுப் பத்து- உரையுடன் உ.வே.சாமிநாதய்யர் 1904 1951
7 நற்றிணை- உரையுடன் பின்னத்தூர் நாராயணசாமி 1915 1966
8 குறுந்தொகை- உரையுடன் சௌரிப் பெருமாள் அரங்கன் 1915
9 பரிபாடல்- உரையுடன் உ.வே.சாமிநாதய்யர் 1918
10 அகநானூறு ரா.இராகவய்யங்கார் 1920

சங்க இலக்கிய முதன்முதல் பதிப்புகள் பத்து என்றாலும் ஒரே நூலுக்குப் பல பதிப்பாசிரியர், ஒருவரே ஒன்றுக்கு மேற்பட்ட பதிப்புகளை உருவாக்குதல், அதாவது மூலம் மட்டும், மூலமும் உரையும், ஒரு பகுதி மட்டும் எனப் பல்வேறு பதிப்புகளைத் தருவதால் சங்க இலக்கிய முதல் பதிப்புகளின் எண்ணிக்கை 160க்கும் மேற்பட்டதாகிறது. சங்க இலக்கியப் பதிப்புகளைக் கொண்டுவரும் முயற்சியில் 1996 வரை 65க்கும் மேற்பட்ட பதிப்பாசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிகிறது. (தி.மகாலட்சுமி, பதிப்பு வரலாறு, சங்க இலக்கியம், ப.448) சங்க இலக்கியப் பதிப்பாசிரியர் அறுபத்தைந்துக்கும் மேற்பட்டோர் என்றாலும் தனித்தன்மை வாய்ந்த பதிப்பாசிரியராகவும் தகுதிவாய்ந்த உரையாசிரியராகவும் தனியிடம் பெற்றவர் உரைவேந்தர் என்ற அடைமொழிக்குரிய ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை அவர்களே. இவர் ஐங்குறுநூறு மூன்று தொகுதிகள், புறநானூறு இரண்டு தொகுதிகள், பதிற்றுப்பத்து ஒரு தொகுதி, நற்றிணை இரண்டு தொகுதிகள் என்று சங்க இலக்கிய எட்டுத்தொகையின் நான்கு நூல்களுக்கு எட்டுத் தொகுதிகளாகப் பதிப்பும் உரையும் செய்துள்ளார்.

ஒளவையின் சங்க இலக்கியப் பதிப்புகள்:

ஐங்குறு நூறு

ஒளவை சு.துரைசாமி அவர்கள் முதன்முதலில் பதிப்பித்த சங்க இலக்கியம் ஐங்குறு நூறு- அதிலும் மருதத்திணை மட்டுமே. ஐங்குறு நூறு மருதம் மூலமும் விளக்கவுரையும் என்ற பெயரில் 1938 இல் இந்நூல் அச்சாகி வெளிவந்தது. இதனைப் பதிப்பித்தவர் ‘அவ்வைத் தமிழக மாணவர்’ திரு கா.கோவிந்தன் ஆவார். பின்னர் ஒளவையின் ஐங்குறு நூறு விளக்கவுரைப் பதிப்பு அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடாக 1. ஐங்குறு நூறு குறிஞ்சி, பாலை (1957), 2. ஐங்குறு நூறு மருதம், நெய்தல் (1957), 3. ஐங்குறு நூறு முல்லை (1958) என்ற மூன்று தொகுதிகளாகத் தனித்தனியே பதிப்பிக்கப்பெற்றது. 1958 அக்டோபரில் மூன்று தொகுதிகளையும் இணைத்து ஒரே தொகுதியாக ஐங்குறு நூறு மூலமும் விளக்கவுரையும் என்ற தலைப்பில் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வெளியிட்டது.

ஐங்குறு நூறு முழுமைக்குமான விளக்கவுரை எழுத நேர்ந்தமை குறித்து ஒளவை அவர்களே தம் முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
“அக்காலை அருள்திரு தம்பிரான் சுவாமி அவர்கள் நூன்முழுதிற்கும் உரையெழுதுமாறு அருளினார்கள். அதன்பின் தொடக்கத்தில் எனக்குத் தமிழ் கற்பித்த சீர்காழி, உயர்திரு கோவிந்தசாமி ரெட்டியார் அவர்களின் ஏட்டுப்பிரதி யொன்று கிடைத்தது. அதன்கண் அச்சுப் பிரதியில் காணப்படாத திருத்தங்களும் சில பாடல்களுக்குரிய குறிப்புரைகளும் காணப்பட்டன. அவற்றை இப்பொழுது ஆங்காங்கே குறித்துக் காட்டியுள்ளேன்”.

புறநானூறு:

புறநானூறு முதன் முதலில் உ.வே.சா. அவர்களால் 1894 இல் பதிப்பிக்கப் பெற்றது. இந்நூலின் 400 பாடல்களில் முதல் 266 பாடல்களுக்கு பழைய உரை கிடைத்துள்ளது. உ.வே.சா. பழைய உரை கிடைக்காத பாடல்களுக்குக் குறிப்புரை தந்துள்ளார்கள். ஒளவை துரைசாமி அவர்களின் உரை விளக்கத்துடன் கூடிய முதல் இருநூறு செய்யுள்கள் அடங்கிய முதல் தொகுதியை 1947 ஆம் ஆண்டிலும் அடுத்த இருநூறு செய்யுள்கள் கொண்ட இரண்டாம் தொகுதியை 1951 ஆம் ஆண்டிலும் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினர் வெளியிட்டனர். பழைய உரை கிடைக்காத 269 முதல் 400 வரையுள்ள 132 செய்யுள்களுக்கும் உரைவேந்தர் ஒளவை அவர்கள் எழுதிய உரை தனிப்பெருஞ் சிறப்பு பெற்றதாகும்.

உ.வே.சா.வின் புறநானூறு அச்சுப் பிரதியுடன் ஒப்பிட்டு ஆராய்ந்து செப்பம் செய்வதற்கு வாய்ப்பாக அரித்துவார மங்கலம் இராசாளியாரின் விருப்பத்திற்கிணங்க திரு. கிருட்டிணசாமி சேனைநாட்டார் படியெடுத்து வைத்திருந்த புறநானூற்று ஓலைச்சுவடி ஒன்றின் எழுத்துப்படிவம் ஒன்று ஒளவைக்குக் கிடைத்தது. அந்த புறநானூற்று எழுத்துப்படிவமே ஒளவையின் புறநானூற்றுப் பதிப்புக்கு அடிப்படையாய் அமைந்தது. உ.வே.சாவின் அச்சுப்படியையும் சேனைநாட்டாரின் எமுத்துப் படிவத்தையும் ஒப்பிட்டு ஆராய்ந்ததில் முற்பகுதியில் வேறுபாடுகள் அதிகம் காணப்படவில்லை யென்றும் பின்னர் உள்ள 200 பாடல்களில் சில பாடல்களில் அச்சுப்பிரதியில் விடுபட்டிருந்த சில அடிகளும் சிலவற்றில் சில திருத்தங்களும் காணப்பெற்றன என்றும் தம் பதிப்பின் செப்பம் குறித்துக் குறிப்பிடுகின்றார் ஒளவை அவர்கள்.

பதிற்றுப்பத்து:

பதிற்றுப்பத்தினை முதன்முதலாக உ.வே.சா அவர்கள் 1904 இல் பழைய உரையுடன் பதிப்பித்தார்கள். சென்னைப் பல்கலைக் கழக வித்துவான் தேர்வுக்குச் செல்லும் மாணவர்களுக்குப் பதிற்றுப்பத்தினை ஒளவை அவர்கள் பாடஞ்சொல்லும் சமயத்தில் இதற்கொரு விளக்கவுரை இருந்தால் நலமாயிருக்கும் என்றெண்ணி நண்பர்கள் சிலர் வாயிலாகப் பதிற்றுப்பத்து ஏடுகள் இரண்டினைப் பெற்று உ.வே.சாவின் அச்சுப்படியினையும் தமக்குக் கிடைத்த இரண்டு பதிற்றுப்பத்து ஏட்டுப்பிரதிகளையும் ஒப்பிட்டு ஆராய்ந்தார்கள். ஒப்பிட்டு ஆராய்ந்ததில் சில பாடவேறுபாடுகளும் சில பாடங்களில் காணப்பட்ட ஐயங்களுக்குத் தெளிவும் கிடைத்தன என்பார் ஒளவை அவர்கள். ஒளவை உரை எழுதுவதை அறிந்த அவருடைய ஆசிரியர் கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை, பதிற்றுப்பத்துக்குத் தாம் எழுதி வைத்திருந்த உரையையும் ஒளவை துரைசாமிக்குத் தந்துதவினார்.

ஒளவை எழுதிய உரையை நேரில் கண்டு ஊக்கப்படுத்திய அவருடைய மற்றொரு ஆசிரியர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் பதிற்றுப்பத்தின் பதிகங்கங்கள் ஆராய்ச்சிக்கு இடமளிப்பதால் அவற்றுக்கு உரையெழுத வேண்டாமென்றும் தொல்காப்பியப் பொருளதிகார உரையில் இடம்பெறும் ‘எரியன்ன நிறத்தன்’ என்னும் பாடலைக் கடவுள் வாழ்த்துச் செய்யுளாகக் கோத்து உரையெழுதுமாறும் அறிவுறுத்தினார். ஒளவை ஆசிரியரின் வேண்டுகோளை ஏற்று அவ்வாறே தம் பதிற்றுப்பத்து விளக்கவுரை நூலைப் பதிப்பித்தார். ஒளவை சு.துரைசாமியின் இப் பதிற்றுப்பத்து பதிப்பு சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடாக 1951 இல் வெளிவந்தது. பதிகங்களுக்கு ஒளவை உரையெழுதாத காரணத்தால் கல்வெட்டு ஆய்வறிஞர் சதாசிவப் பண்டாரத்தாரால் எழுதப்பெற்ற பதிற்றுப்பத்தும் பதிகங்களும் எனும் தலைப்பிலான ஆய்வுரை ஒன்று நூலில் இணைக்கப் பெற்றுள்ளது.

நற்றிணை:

நற்றிணையை முதன்முதலில் பதிப்பித்தவர் பின்னத்தூர் அ.நாராயணசாமி அய்யர் அவர்கள். ஏட்டுச்சுவடியிலிருந்த இந்நூலின் மூலத்தைத் தாம் எழுதிய உரையுடன் அச்சுக்குக் கொண்டு வந்தவர் அவரே. ஐங்குறு நூறு மருதத்திணைக்கு ஒளவை அவர்கள் எழுதிய விளக்கவுரையைக் கண்ட பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை ஒளவையை நேரில் சந்தித்து அவரின் உரைநலத்தைப் பாராட்டியதோடு அமையாது தம்மிடமிருந்த நற்றிணை ஏட்டுப்பிரதியினை ஒளவைக்குக் காட்டி இந்நூலையும் நீங்கள் ஆராய்ந்து விளக்கவுரையுடன் பதிப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நற்றிணை ஆராய்ச்சிக்குத் துணைசெய்த ஏடுகளாகப் பின்வரும் நான்கு ஏடுகளை ஒளவை தம் நற்றிணைப் பதிப்பு முன்னுரையில் குறித்துள்ளார்கள்.
1. அரசினர் கையெழுத்து நூல் நிலைய ஏடு.
2. மதுரைத் தமிழ்ச் சங்கத்து ஏடு.
3. டொம்மிச்சேரி கருப்பையாத் தேவர் ஏடு.
4. புதுப்பட்டி சிவ.மு. முத்தையா செட்டியார் ஏடு.
மேலும் நற்றிணைக்கு புதியதோர் விளக்கவுரைப் பதிப்பொன்றினைத் தாம் எழுதி வெளியிட நேர்ந்தமைக்கான காரணங்களாக ஒளவை அவர்கள் முன்னுரைப் பகுதியில் குறிப்பிடும் செய்திகள் இன்றியமையாதன.

“இவ்வேடுகளை உடன்வைத்து ஆராய்ந்ததில் சுமார் 1500 க்கு மேற்பட்ட பாடவேறுபாடுகளும், பெயர் தெரியாதிருந்த பல பாட்டுக்களின் ஆசிரியர் பெயர்களும் தெரியவந்தன. சில ஆசிரியர்களின் பெயர்களும் திருத்தமடைந்தன. அவற்றின் உண்மை வடிவு காண்டற்கும் ஆசிரியர் பெயர்களிலும் பாட்டுக்களிலும் காணப்படும் ஊர்களை அறிதற்கும் அரசியலார் வெளியிட்டிருக்கும் கல்வெட்டுத் தொகுதிகளும் ஆண்டறிக்கைகளும் போதிய துணைபுரிந்தன. ஏடுகளை ஒப்பு நோக்கியபோது காணப்பட்ட பாடவேறுபாடுகளால் பாட்டுகட்கு உரையே வேறு எழுதவேண்டிய இன்றியமையாமை பிறந்தது. அதனால் எனது இப்பதிப்பு நற்றிணை மூலத்தோடு விளக்கவுரை பெற்று வெளிவருகிறது.” (ஒளவை, முன்னுரை, நற்றிணை, மு.தொ., ப.ஐஓ-ஓ)

5 கருத்துகள்:

சகோதரன் ஜெகதீஸ்வரன் சொன்னது…

எனக்கு தமிழ்னா ரொம்ப பிடிக்கும்.ஒளவை பாட்டெல்லாம் தளத்திலிருந்து எடுத்து வைச்சுருக்கேன்.இனிமேதான் படிக்கனும்.

அன்புடன்
ஜகதீஸ்வரன்
http://jackpoem.blogspot.com

பெயரில்லா சொன்னது…

I am disappointed with your posts on the great Auvai Duraisami Pillai. Significant portions of your posts appear to have been plagiarized from Dr. Elangovan's earlier blog post at: http://muelangovan.blogspot.com/2008/10/05091902-03041981.html

It is disappointing to see such behavior from an academic.

I think you will block this comment from appearing. But it has been widely noted elsewhere and has been commented on by writers such as Jeyamohan.

-Tamil student

முனைவர் நா.இளங்கோ சொன்னது…

தமிழ் மாணவன் என்ற ஒப்பத்தோடு அநாமதேயமாக ஆங்கிலத்தில் இடப்பட்டுள்ள இப்பின்னூட்டத்திற்கு பதில் எழுதவேண்டாம் என்றுதான் இதுநாள் வரைப் பின்னூட்டமிடவில்லை. பெயரைக் குறிப்பிட விரும்பாத அந்த முகமற்றவருக்கு எதற்கு முகவரி தரவேண்டும் என்ற எண்ணத்தில். இப்போது பின்னூட்டமிடுவதற்கு ஒரு காரணம் உண்டு. இன்று 4-10-2009 புதுவை வலைப்பதிவர் சிறகத்தின் கூட்டம் புதுவையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் நணபர்கள் பலர் மேலே பின்னூட்டத்தில் இடம்பெற்றுள்ள குற்றச்சாட்டை நண்பர் மு.இளங்கோவன் புதுச்சேரி வலைப்பதிவ நண்பர்கள் பலருக்கும் மின்னஞ்சல் மூலமும் நேரிலும் தெரிவித்திருந்தமையை விவாதிக்க நேர்ந்தது. அப்போதுதான் தெரிந்துகொண்டேன் தமிழ் மாணவன் என்ற ஒப்பத்தோடு ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அந்த முகமற்ற பின்னூட்டத்தை எழுதிவர் யார் என்று. இப்போது அந்த பின்னூட்டத்திற்கு விடையளிக்க வேண்டிய பொறுப்பு எனக்குண்டு.

1. முதலில், என்னுடைய கட்டுரை ஒளவை துரைசாமி அவர்களின் சங்க இலக்கியப் பதிப்புகளைப் பற்றிய ஆய்வுக் கட்டுரை. மு.இளங்கோவன் கட்டுரைபோல் சாம்பசிவனார் எழுதிய ஒளவை துரைசாமிப்பிள்ளை என்ற சாகித்ய அகாதமி நூலைச் சுருக்கி எழுதிய பொதுக்கட்டுரை அல்ல.

2. நான் காப்பி அடித்துவிட்டதாக அவர் குறிப்பிடும் பகுதி ஒளவை துரைசாமி அவர்களின் வாழ்க்கை மற்றும் நூல்களின் பட்டியல். மு.இளங்கோவன் கட்டுரையில் இடம்பெற்றுள்ள அந்தப்பகுதிகள் அவரே குறிப்பிட்டுள்ளது போல் சாம்பசிவனார் நூலிலிருந்து எடுக்கப்பட்டவை. அவைகள் ஆய்வு முடிவுகளோ? புதிய விளக்கங்களோ அல்ல. சாம்பசிவனார் அவர்களும் ஒளவையின் நூல்கள் பட்டியலை பி.வி.கிரி அவர்கள் தொகுத்த உரை வேந்தருக்கு ஒரு நூற்றாண்டு என்ற சிறு தொகுப்பு நூலில் இருந்துதான் தந்துள்ளார். அந்தப் பட்டியலைத்தான் மு.இளங்கோவனும் தம் கட்டுரையில் இணைத்துள்ளார். நானும் அந்தப் பட்டியலைத்தான் இணைத்துள்ளேன். ஆனால் நான் எனது கட்டுரையில் அந்த நூல்களின் பட்டியல் பி.வி.கிரி அவர்கள் தொகுத்த உரை வேந்தருக்கு ஒரு நூற்றாண்டு என்ற சிறு தொகுப்பு நூலில் இருந்து தரப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளேன். இதிலே நான் காப்பி அடித்துவிட்டேன் என்ற குற்றச்சாட்டு எங்கிருந்து வந்தது.

3. ஒளவை அவர்களின் வாழ்க்கைக் குறிப்பாக நான் தந்துள்ள பகுதிகள் மு.இளங்கோவன் கட்டுரையிலிருந்து காப்பியடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிடலாம். அதற்கு வாய்ப்புண்டு. ஏனெனில் மு.இளங்கோவனும் நானும் சாம்பசிவனார் எழுதிய ஒரே நூலில் இருந்துதான் எழுதியுள்ளோம்.. அவர் கொஞ்சம் முன்னாலே எழுதிவிட்டார். நான் கொஞ்சம் பின்னாலே எழுதியுள்ளேன்.

4. சரி அதெல்லாம் கிடக்கட்டும். நானும் நண்பர் மு.இளங்கோவனும் ஒரே ஊரில் ஒரே அரசாங்கத்தில் கொஞ்சம் பக்கத்து பக்கத்து கல்லூரிகளில் பணியாற்றுகிறோம். அடிக்கடி நேரிலும் தொலைபேசியிலும் மின்மடலிலும் சந்தித்துக் கொள்ளக் கூடிய வாய்ப்புள்ளவர்கள். இந்தக் குற்றச்சாட்டை ஊரெல்லாம் பரப்புவதற்கு முன்னால், இப்படி அநாமதேயப் பின்னூட்டமெல்லாம் இல்லாமல் நேரிலேயே சொல்லியிருக்கலாம். நானும் பதில் சொல்லியிருப்பேன்.

5. தமிழ் மாணவன் என்ற பெயரில் எழுதப்பட்ட மேலேயுள்ள அநாமதேயப் பின்னூட்டத்தை நான் என்னுடைய வலைப்பதிவில் நேர்மையோடு வெளியிட்ட பிறகும்கூட, இதைவிட மோசமான அநாகரீகமான பின்னூட்டம் ஒன்று இதே தமிழ் மாணவன் என்ற பெயரில் எனக்கு மின்னஞ்சலில் வந்தது. அந்தப் பின்னூட்டமும் யாரிடமிருந்து வந்திருக்கும் என்பது இப்போது விளங்குகிறது.

பின்னூட்டம் என்ற பெயரில் தவறான அவதூறு குற்றச்சாட்டு வருகிறபோது உங்கள் தரப்பு நியாயத்தை நீங்கள் பதிவுசெய்வதுதான் சரியானது என்று புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் தோழர்கள் இன்றைய கூட்டத்தில் சொன்ன ஆலோசனை என்னைச் சரியாக வழி நடத்தியிருக்கிறது. இல்லையென்றால் இத்துணை விரிவாக நான் எழுதியிருக்க வாய்ப்பில்லை.

Srini சொன்னது…

vanakkam sir,

the comments in ur blog is not having date and time stamp,

please check the settings for "Comments" inside the "Settings" option in your blog's dashboard...

coming for the first time in ur blog
its too nice

முனைவர் நா.இளங்கோ சொன்னது…

இனிய தோழருக்கு, தங்கள் ஆலோசனைக்கும் பாராட்டுக்கும் நன்றி! dashboard இல் date time stamp ஐ முன்பே அமைத்துள்ளேன். ஆனால் பதிவின் பின்னூட்டங்களில் தெரியவில்லை. ஏன் என்று புரியவில்லை.

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...