வெள்ளி, 15 அக்டோபர், 2021

தொல்லியல் பயணம் - திருநாதர் குன்று (செஞ்சி)

 

தொல்லியல் பயணம் - செஞ்சி (18-09-2021) 

திருநாதர் குன்று - சிலைகளும் குகையும்


திருநாதர் குன்று:




விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஊரின் வடக்கே மூன்று கி.மீ. தொலைவில் திருநாதர் குன்று என்றழைக்கப்படும் சிறிய மலைக் குன்று உள்ளது. இதனைச் சிறுகடம்பூர் மலையென்றும் அழைப்பர். இக்குன்று தமிழ் மற்றும் தமிழக வரலாற்றில் முக்கிய இடம் பெற்றுள்ளது. இம்மலையின் உச்சியில் உள்ள பெரிய கற்பாறையில் சமண சமயத்தின் இருபத்து நான்கு தீர்த்தங்கரர்களின் திருமேனிகள் செதுக்கப்பட்டுள்ளன. அவை அமர்ந்த நிலையில், இருவரிசையில் அமைக்கப்பட்டு, கழுகுமலையில் உள்ள சமணச் சிற்பங்கள் போலுள்ளன. ஒவ்வொரு தீர்த்தங்கரரின் தலையின் மேற்பகுதியில் முக்குடை காணப்படுகிறது. இரு சாமரங்கள் குறுக்காகப் பிணைந்த நிலையில் வடிக்கப்பட்டுள்ளன. இவை கி.பி ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று கருதப்படுகிறது.

இக்குன்றின் வட திசையில் அருகதேவரின் சிற்பமும், குன்றின் மீது செல்லும் வழியில் உடைந்த நிலையில் அருகதேவரின் அமர்ந்துள்ள சிலையும் காணப்படுகின்றது.

குன்றின் உச்சியில் சமணத் துறவிகள் வசித்த பாறைக் குகை ஒன்றும் உள்ளது. சுமார் இருபது பேர் தங்கக்கூடிய வகையில் இயற்கையாக அமைந்துள்ள இக்குகையில் சமண முனிவர்கள் தங்கி உண்ணாநோன்பு இருந்து உயிர் துறந்திருக்கலாம். அதற்கான கல்வெட்டுச் சான்றுகளும் (கி.பி. 5 அல்லது 6ஆம் நூற்றாண்டு) அங்கேயே கிடைக்கின்றன.


திருநாதர் குன்று - கல்வெட்டுகள்

மூன்று கல்வெட்டுகள்





இக்குன்றின் மேற்குப் பகுதியில் சமதளப் பாறையில் காணப்படும் நிசீதிகைக் கல்வெட்டுகள் (உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தவர்கள் தொடர்பானவை) கல்வெட்டுகள் தமிழ்மொழி மற்றும் சமய சமூக வரலாற்றில் மிகமிக முக்கியமானதாகும். பிற்காலத் தமிழி - பிராமி வரிவடிவில் இருந்து தமிழ் வட்டெழுத்தாக, வளர்ந்த, மாறுதல் அடைகிற காலக்கட்டத்தைச் சேர்ந்த கல்வெட்டாக இக்வெட்டுகளைக் குறிப்பிடமுடியும். சிறப்பாக, ‘ஐ’ எனும் தமிழ் எழுத்து திருநாதர்குன்று கல்வெட்டில்தான் முதன்முதலில் காணக் கிடைக்கின்றது.

முதல் கல்வெட்டு வாசகம்

******************************

ஐம்பத்தேழன

சனந்நோற்ற

சந்திரநந்திஆ

சிரிகர் நிசீதிகை

இக்கல்வெட்டு, சந்திரநந்தி ஆசிரியர் எனும் சமணத்துறவி ஐம்பத்தேழு நாட்கள் உண்ணா நோன்பிருந்து வீடுபேறு பெற்றார் என்ற செய்தியைத் தெரிவிக்கின்றது.

இரண்டாம் கல்வெட்டு வாசகம்

******************************

முப்பதுநாளன சநோற்ற

இளைய படாரர் நிசிதிகை

இக் கல்வெட்டு, இளைய பட்டாரகர் எனும் சமணத்துறவி முப்பது நாட்கள் உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தார் என்ற செய்தியைத் தெரிவிக்கின்றது.

மூன்றாம் கல்வெட்டு

**************************

திருநாதர் குன்றின் உச்சிக்குச் செல்லும் பாதையின் இடப்புறம் இரண்டாக உடைக்கப்பட்ட நிலையில் மகாவீரர் சிற்பம் ஒன்று காணப்படுகிறது. உடைந்த சிற்பத்தின் பக்கவாட்டில் ஒரு கல்வெட்டு உள்ளது. சிதைந்த நிலையில் உள்ள இக்கல்வெட்டு கி.பி. 9 அல்லது 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம். திருநாதர் குன்றில் விளக்கெரிப்பதற்குத் தேவையான நெய் தயாரிக்க நானூறு ஆடுகள் வழங்கப்பட்ட செய்தியை இக்கல்வெட்டு பதிவு செய்துள்ளது.

 

கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...